Tuesday, June 24, 2008

வெண்தாமரைக்கு அன்றி நின்பதம் தாங்க என் வெள்ளை உள்ளத்தண்தாமரைக்குத் தகாது கொலோ?


வெண்தாமரைக்கு அன்றி நின்பதம் தாங்க என் வெள்ளை உள்ளத்
தண்தாமரைக்குத் தகாது கொலோ? சகம் ஏழும் அளித்து
உண்டான் உறங்க ஒழித்தான் பித்தாக உண்டாக்கும் வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகலகலாவல்லியே!

சகலகலாவல்லியே - எல்லாக் கலைகளையும் காத்து அளிப்பவளே! கலைமகளே!

சகம் ஏழும் அளித்து உண்டான் உறங்க - ஏழு உலகங்களையும் காக்கும் தொழில் புரியும் நாராயணன் பிரளயக் காலத்தில் அவற்றைக் காப்பதற்காக அவற்றையெல்லாம் உண்டு தன் வயிற்றில் வைத்துக் காப்பாற்றிப் பின் பாற்கடலில் உறங்கி கொண்டிருக்க

ஒழித்தான் பித்தாக - எல்லாவற்றையும் அழிக்கும் தொழில் புரியும் அண்ணல் சிவபெருமான் பித்தனாய் ஊழித் தாண்டவம் ஆடிக் கொண்டிருக்க

உண்டாக்கும் வண்ணம் கண்டான் - பிரளயத்தின் முடிவில் மீண்டும் உலகங்களையும் உயிர்களையும் உண்டாக்கும் வண்ணம் பார்த்திருக்கும், படைக்கும் தொழில் புரியும் நான்முகனாம் பிரம்ம தேவன்

சுவைகொள் கரும்பே - ஆசையுடன் சுவைக்கும் கரும்பு போன்றவளே!

வெண்தாமரைக்கு அன்றி நின் பதம் தாங்க என் வெள்ளை உள்ளத் தண்தாமரைக்குத் தகாது கொலோ? - நீ வெண்தாமரையில் வீற்றிருக்கிறாய். அதிலேயே இருக்கிறாயே. என் உள்ளமும் வெள்ளை உள்ளம் தானே? அதையும் ஒரு குளிர்ந்த வெண்தாமரை என்றுக் கருதி உன் பாதத்தை அங்கேயும் வைக்கலாகாதா? என் உள்ளத்திற்கு உன் பாதங்களைத் தாங்கும் பாக்கியம் கிடைக்காதா? உனது அருள் எனக்குக் கிடைக்காதா?

***

சகலகலாவல்லிமாலையின் இந்தப் பாடலுக்கு மட்டும் நகைச்சுவையாகச் சொன்ன பொருளை இங்கே காணலாம்.

4 comments:

Kavinaya said...

பாடல் தனியா படிச்சா புரியல; ஆனா நீங்க சொல்லும்போது ரொம்ப எளிமையா, இதுவா நமக்கு புரியலைன்னு தோணுது. விளக்கம் சொல்வதில் குமரனுக்குக் குமரனே நேர்! நன்றி குமரா!

எனக்கென்னவோ இந்த மாதிரி பாடல்களுக்கு நகைச்சுவையா சொல்றது சரிவராதுன்னு தோணுது :( மன்னிக்கணும் குமரா. இது என் கருத்து மட்டுமே.

//வெண்தாமரைக்கு அன்றி நின்பதம் தாங்க என் வெள்ளை உள்ளத்
தண்தாமரைக்குத் தகாது கொலோ? //

உண்மைதானே. வந்தெம் உள்ளத்தை நிரந்தர இருப்பிடமாகக் கொள் அம்மா.

jeevagv said...

//வெண்தாமரைக்கு அன்றி நின் பதம் தாங்க என் வெள்ளை உள்ளத் தண்தாமரைக்குத் தகாது கொலோ? //
இந்த அடிதனை அற்புதமாய் சொல்லி இருக்கிறார். அதுக்கப்புறம் படிச்ச எதுவும் என் சிந்தையில் நுழையலை. உங்கள் விளக்கத்தைப் படித்தபின் தான் அதெல்லாம் அந்தப் பாவில் இருக்குன்னு மண்டையில் இடறியது!

குமரன் (Kumaran) said...

நன்றி கவிநயா அக்கா.

குமரன் (Kumaran) said...

உள்ளத்தைத் தைக்கும் வரி தான் அது ஜீவா. நன்றி. :-)