Wednesday, March 08, 2006

156: ஈழத்தில் இசை வளர்ச்சி

நண்பர் யோக நடராஜன் என் வலைப்பதிவுகளை என்று படிக்கத் தொடங்கினார் என்பது எனக்குச் சரியாக நினைவில்லை. என் நட்சத்திர வாரத்தில் என்று நினைக்கிறேன். அன்று முதல் மின்னஞ்சலிலும் என்னுடன் பேசத் தொடங்கினார். அண்மையில் தான் எழுதி 'உன்னையே நீ அறிவாய் - பத்தாம் ஆண்டு நிறைவு மலரில்' வந்த 'ஈழத்தில் இசை வளர்ச்சியில் நாதஸ்வர தவில் கலைஞர்களின் பங்கு' என்ற தலைப்பில் உள்ள கட்டுரையை பி.டி.எஃப். கோப்பாக அனுப்பியிருந்தார். நல்ல கட்டுரையாக இருந்தது. அவரின் வேண்டுகோளின் படி அந்த கட்டுரையை இங்கு பதிக்கிறேன். படித்துப் பார்த்து உங்கள் கருத்துக்களை பின்னூட்டங்களில் சொல்லுங்கள்.

நண்பர் யோக நடராஜனிடம் அவரைப் பற்றிய மேல் தகவல்களைக் கேட்டிருந்தேன். அவர் தன்னைப் பற்றிச் சொன்னவை:
பெயர்: யோக நடராஜன் (Johanadarajah)
தந்தையார் பெயர்: அருணாசலம்
ஊர்: யாழ்ப்பாணம், இலங்கை.
தற்போது ஃப்ரான்ஸ் நாட்டுக் குடிமகன். 22 வருடமாக பாரீஸ் நகரத்தில் வாசம். திருமணமானவர்.
வயது: 51.
படிப்பு: GCE a/l, + 2 க்கு சமமான படிப்பு.
இலங்கையில் Brown & Companyயில் கணக்கராக வேலை செய்தார். தற்போது கடந்த 18 வருடமாக Baker & McKenzie என்ற பன்னாட்டு சட்ட நிறுவனத்தில் Mail Serviceல் வேலை பார்க்கிறார்.

அவருடைய கட்டுரையை இங்கே பார்க்கலாம்

Sunday, March 05, 2006

154: நாலு பேர் நல்லா இருக்கணும்

உலகத்துல எதுங்க ரொம்ப முக்கியம்ன்னு கேட்டா நாலு பேர் நல்லா இருக்கணும்; அதுக்கு நம்மால முடிஞ்சது செய்யணும்ன்னு நெனைக்கிற நல்ல நெனப்பு தான்னு சொல்லலாங்க. இல்லியா? நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் அல்லது செய்தல் ஓம்புமின் அப்படின்னும் நம்ம முன்னோர்கள் சொல்லிட்டுப் போயிருக்காங்க. நல்லது செய்ய எல்லாருக்கும் வாய்ப்பு கிடைக்கிறதில்ல; அதனால வாய்ப்பு கிடைச்சா நல்லது செய்யுங்க; வாய்ப்பு உருவாக்கிக்க முடிஞ்சா உருவாக்கிக்கிட்டு நல்லது செய்யுங்க; அப்படி முடியலையா, அடுத்தவனுக்கு கெட்டதாவது செய்யாம இருங்கன்னு நறுக்குன்னு சொல்லிவச்சிருக்காங்க. எத்தனை உண்மை அதுல? அதாங்க நான் அடிக்கடி எனக்கு நானே சொல்லிக்கிறது. சரி இப்ப எதுக்கு இத எல்லாம் சொல்றேன்னு கேக்கறீங்களா? ஒன்னுமில்லேங்க. இந்த 'நாலு' சங்கிலியில நாமக்கல் சிபியும், சிங். செயகுமாரும் என் பெயரைச் சொல்லி ரொம்ப நாளாச்சு. நானும் எழுதலாம் எழுதலாம்ன்னு யோசிச்சு யோசிச்சு ஒன்னும் ஓட மாட்டேங்குது. நாம கூப்புடலாம்ன்னு நெனச்சவங்களை எல்லாம் மத்தவங்க கூப்புட்டு அவங்களும் இந்த 'நாலு' பதிவைப் போட்டுட்டாங்க. அதனால இனிமே தாமதிக்க வேணாம்ன்னு இந்தப் பதிவைப் போட்டுட்டேங்க.

நமக்கு புடிச்ச நாலு விஷயத்தைப் பத்தி எழுதணும்ன்னு இதுல ஒரு எழுதாத சட்டம் இருக்கும் போல இருக்கு. எனக்கு எது புடிக்கும் புடிக்காதுன்னு ஒரு தெளிவான கருத்து கிடையாது. ஆத்திகமும் பிடிக்கும். பல நேரங்கள்ல பெரியார் சொன்னதும் படிக்கப் பிடிக்கும். இப்படி சொல்லிக்கிட்டே போகலாம். அதனால புடிச்ச விஷயத்தைப் பத்தி இதுல எழுதாம சும்மா எனக்கு அடுத்து இந்த சங்கிலித் தொடரை யார் எடுத்துக்கிட்டுப் போகணும்ன்னு ஒரு நாலு பேரைச் சுட்டிக் காட்டிட்டு விட்டுடலாம்ன்னு இருக்கேன். எழுதுன சட்டத்தையே நம்ம ஊருல யாரும் மதிக்கிறதில்லை. இது எழுதாத சட்டம் தானே. :-)

நிறைய பேரைக் கூப்பிடணும்ன்னு நெனைச்சேன் - இராகவன், சிவா, இராமநாதன், இலவசக் கொத்தனார், ஜோசஃப் சார், துளசியக்கா,மதுமிதா அக்கா, சிங். செயகுமார், செல்வன், கார்த்திக் ஜெயந்த், சந்தோஷ், இப்படி சொல்லிக்கிட்டே போகலாம். எல்லாரையும் எனக்கு முன்னாடி வேற யாரோ கூப்புட்டுட்டாங்க. ஞானவெட்டியான் ஐயாவைக் கூட கூப்பிடலாம்ன்னு நெனைச்சேன். நான் இந்த விளையாட்டுக்கு வரலை குமரன்னு சொல்லிடுவார்ன்னு அவரைக் கூப்பிடலை. நான் அழைக்கும் நான்கு பேர்

1. ஜீவா (புதிதாய் தமிழ்மணத்திற்கு வந்திருக்கிறார். இரண்டு நல்ல வெண்பாக்களை அவருடைய பதிவில் படித்தேன். அவருக்கு யார் ஆன்மிகச் சூப்பர் ஸ்டார்ன்னு தெரியாது. யாரும் போய் சொல்லாதீர்கள்) :-)

2. வெளிகண்டநாதர் (பாலக்கரை பாலனுக்கு அறிமுகம் தேவையில்லை. அவருடைய அரிதாரம் தொடரை நிறைய பேர் படித்திருப்பீர்கள்)

3. ரங்கநாதன் (நல்ல கவிதைகள் எழுதுவார். அவர் தனது தந்தையார் எழுதிய கதைகளை 'பிதாவின் கதைகள்' என்ற வலைப்பூவில் வலையேற்றியிருந்தார். அருமையான கதைகள். அவற்றைப் படித்த போது தான் அவர் அறிமுகம் ஆனார்.)

4. இராமபிரசாத் (பச்சோந்தி) (அண்மையில் தமிழ்மண நட்சத்திரமாய் இருந்தவர். அதனால் அறிமுகம் தேவையில்லை)

4a. சிவமுருகன் (இவரும் தமிழ்மணத்திற்கு புதியவர். எங்க ஊர்க்காரர். மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலைப் பற்றி வண்ண வண்ண புகைப்படங்களுடன் ஒரு தொடரை எழுதிக் கொண்டு இருக்கிறார்).

அப்பாடா கடமை முடிஞ்சது.

கடமை புரிவார் இன்புறுவார்
என்னும் பண்டை கதை பேணோம்
கடமை அறியோம்; தொழில் அறியோம்
கட்டென்பதனை வெட்டென்போம்
மடமை சிறுமை துன்பம் பொய்
வருத்தம் நோவு மற்றிவை போல்
கடமை நினைவும் தொலைத்திங்கு
களியுற்றென்றும் வாழ்குவமே

இப்படி பாட நானென்ன பாரதியா? :-)