Saturday, July 24, 2010

கண்ணிழந்தார்க்கு ஒரு கைவிளக்கு...

சீனா ஐயாவின் வழிகாட்டுதலுடன் இன்னொரு நற்செயலை நேற்று (ஜுலை 24) செய்தோம். இரண்டு கண்களும் இருந்தாலே நாமெல்லாம் பல முறை குருடர்களாக இருக்கிறோம். முன்பொரு முறை ஆழிப்பேரலையால் விளைந்த பேரழிவின் போது ஒரு கட்டுரை எழுதினேன். நம்மைச் சுற்றி அவலங்கள் எப்போதும் இருக்கின்றன. ஆனால் அவை நம் கண்களில் படுவதில்லை. எப்போதாவது ஒரு பேரழிவு ஏற்படும் போது மட்டுமே நம் கண்களில் அவை தென்படுகின்றது. அதுவும் நமக்கு எந்த விதத்திலோ தொடர்புடையவர் அவதிப்பட்டால் மட்டுமே நமக்கு அது உறுத்துகிறது. இப்படி கண்ணிருந்தும் குருடாய் நாம் வாழப் பழகிக் கொண்டோம்.

காண்பதற்கு உலகில் எத்தனையோ நல்லவைகள் இருக்கின்றன. ஐந்து புலன்களாலும் கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறிய இந்த உலகத்தில் எத்தனையோ அற்புதங்கள் உண்டு. நாமோ அவற்றை விடுத்து தீயவைகளில் மனத்தைச் செலுத்துவதிலேயே பெரும் காலத்தைப் போக்குகின்றோம்.

இரு கண்களும் நன்றாக அமைந்து நாம் விரும்பியபடி இவ்வுலக இன்பங்களை எல்லாம் கண்டு களிக்க நமக்கு நல்ல வாய்ப்பு அமைந்திருக்கும் போது நாம் அதனைப் பொருட்படுத்துவதில்லை; ஆனால் கண்களில் ஏதேனும் குறை இருப்பதால் நம்மைப் போல் இயல்பான வாழ்க்கை வாழ இயலாதவர்கள் பலர் நுட்பியலின் (டெக்னாலஜி) துணை கொண்டு வாழ்க்கையில் முன்னேற ஒரு வழிவகை செய்கிறது மதுரைக்கு அருகில் அழகர் கோவில் செல்லும் வழியில் இருக்கும் சுந்தரராஜன்பட்டி என்ற ஊரில் இருக்கும் ஒரு நிறுவனம்.



'Indian Association for the blind' என்ற இந்த நிறுவனத்தை நிறுவியவர் திரு. எஸ்.எம்.ஏ. ஜின்னா. நேற்று இந்த நிறுவனத்திற்குச் செல்வதற்கு முன் இவரும் ஒரு கண்பார்வையற்றவர் என்பது தெரியாது. அதனால் அங்கே சென்று இவரை முதலில் பார்க்கும் போது கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. கண்பார்வையில்லாமலேயே இவ்வளவு பெரிய நிறுவனத்தை நிறுவி நடத்தி வருகிறாரே என்ற வியப்பு ஏற்பட்டது. கொஞ்ச நேரம் அவருடன் பேசிக் கொண்டிருந்திருந்தோம்.

அழகர் கோவில் போகும் வழியில் இருப்பதால் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு குடும்பத்தினர் அனைவரும் (நாங்கள் நால்வர், என் மாமியார் மாமனார், என் தம்பி அவர் மனைவி) அழகர் கோவிலுக்குச் சென்றுவிட்டு பின்னர் இங்கே சென்றோம். நாங்கள் சென்று அடையும் சிறிது நேரத்திற்கு முன்னர் சீனா ஐயா, அவர் துணைவியார், திருஞானம் பள்ளியின் தலைமையாசிரியர் சரவணன் மூவரும் அங்கே வந்து காத்திருந்தனர்.

இந்த நிறுவனம் இருபத்தைந்து வருடங்களாக நடந்து வருகின்றது. பலருடைய நன்கொடைகளின் பயனாகச் சிறிது சிறிதாக வளர்ந்து இன்று நல்ல கட்டிடங்களுடன் பார்வைக்குறைவுடையோர் தங்கிப் படித்து முன்னேறும் வகையில் அமைந்திருக்கிறது. நாங்கள் சென்று இறங்கிய போது சில பார்வையற்ற சிறுவர்கள் பார்வையுள்ள சிறுவர்களுடன் பந்து எறிந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். பார்வையற்ற சிறுவர்கள் எப்படி பந்து தங்களிடம் வருவதை அறிந்து அதனைப் பிடித்துப் பின் எறிந்து விளையாடுகிறார்கள் என்று புரியாமல் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தேன். அதனை வாய் விட்டுச் சொல்லவும் செய்தேன். என் அருகில் இருந்த மகள் கொஞ்ச நேரம் அவர்கள் விளையாடுவதைப் பார்த்துவிட்டு, அந்தச் சிறு பந்து ஒலியெழுப்பும் வகையில் அதில் சிறு கற்களை இட்டிருக்கிறார்கள்; அந்த ஒலியின் மூலம் பந்து வரும் திக்கை உணர்ந்து பார்வையற்ற சிறுவர்கள் விளையாடுகிறார்கள் என்று சொன்னாள். கண்ணில்லாததால் இவர்களுக்குக் காது நன்கு செயல்படுகிறது என்றும் சொன்னாள். உண்மை தானே. கண்ணால் நாம் செய்யும் பல செயல்களைக் காதுகளால் கேட்டும், கைகளால் உணர்ந்தும் தான் இவர்கள் செய்கிறார்கள் என்பதைப் பின்னர் இவர்களைப் பற்றி மேலும் கேட்டு அறிந்ததில் உணர்ந்தேன்.



பள்ளியின் நிறுவனருடன் பேசிக் கொண்டிருக்கும் போது அப்பள்ளியில் படித்து நுட்பவியலாகராக இருக்கும் பார்வைக்குறைவுள்ள (பார்வை உண்டு; ஆனால் அது முழு அளவில் இல்லை) ஒரு இளம்பெண் நாங்கள் பள்ளிக்கு வாங்கித் தந்த இரு கைக்கணினிகளுடன் வந்தார். அவற்றை இயக்கி அவை எப்படி பார்வையற்றவர்களுக்குப் பயனாக இருக்கிறது என்று செய்து காண்பித்தார். விசைப்பலகையின் மேல் ப்ரெய்ல் குறிகளை ஒட்டியிருக்கிறார்கள். ஒரு மென்பொருள் திரையில் இருப்பதைப் படித்துக் காட்டுகிறது. இவ்விரண்டின் துணை கொண்டு நாம் என்ன என்ன கணினியில் செய்வோமோ அத்தனையும் பார்வையற்றோரும் பார்வைக்குறையுள்ளோரும் செய்யமுடியும் என்பதைச் செய்து காட்டினார்.

அந்த செயல்முறை விளக்கத்திற்குப் பின்னர் அக்கணினிகளை நாங்கள் வழங்குவது போல் சில புகைப்படங்கள் எடுக்கலாம் என்று நிறுவனர் சொன்னதை ஒட்டி அப்படியே செய்தோம்.




மாணவ மாணவியர் மதிய உணவு உண்ண ஆயத்தமாக இருக்கிறார்கள் என்று சொன்னார்கள். உடனே உணவுண்ணும் அறைக்கு எல்லோரும் சென்றோம். மதுரை அன்பகத்தில் சொல்லி ஆயத்தப்படுத்தியிருந்த ஆட்டுக்கறி பிரியாணி, காய்கறி பிரியாணி, தயிர்சாதம், அவித்த முட்டை, தயிர் வெங்காயம், இருவகை குழம்புகள், உருளைக்கிழங்கு வறுவல் அங்கே காத்திருந்தன.









முன்னூறு மாணவ மாணவியர் அங்கே தங்கிப் படிப்பதாக சீனா ஐயா சொல்லியிருந்ததால் அவர்களுக்கும் அங்கே பணிபுரியும் மற்றவர்களுக்கும் எங்களுக்கும் என்று பதினைந்து படி மட்டன் பிரியாணியும் இரண்டு படி வெஜிடபிள் பிரியாணியும் ஒரு படி தயிர்சாதமும் செய்திருந்தோம். அந்த உணவறையில் அனைவரும் ஒரே நேரத்தில் அமர்ந்து உண்ண இயலாது என்பதால் வயதில் சிறியவர்கள் ஒரு நூறு பேர் மட்டும் வந்து அமர்ந்தார்கள். இறைவணக்கத்தின் பிறகு நான், சரவணன், சேந்தன், தேஜஸ்வினி, சீனா ஐயா ஐவரும் உணவு பரிமாறினோம். அவர்கள் விருப்பப்படி உணவு கிடைத்ததால் மிக்க மகிழ்ச்சியுடன் அவர்கள் உண்டார்கள் என்று உணர்ந்தோம். சிலருக்கு இரண்டாம் முறை கேட்டுப் பரிமாறினோம்.









பின்னர் நாங்கள் அனைவரும் அவர்களுடன் அமர்ந்து உண்டோம். நேரம் இரண்டு மணிக்கு மேல் ஆகிவிட்டதால் அனைவரையும் அந்த அறையில் அமர வைத்துப் பரிமாறினால் வெகு நேரம் ஆகிவிடும்; அதனால் மாணவர்கள் வரிசையில் வர அவர்களுக்கு உணவை அவர்கள் தட்டில் தரலாம்; அவர்கள் அதனை வாங்கிக் கொண்டு வளாகத்தில் அவர்களுக்குப் பிடித்த இடத்தில் அமர்ந்து உண்டு கொள்ளலாம் என்று உணவைப் பரிமாற எங்களுக்கு உதவிய அப்பள்ளியின் ஆசிரியை ஒருவர் சொன்னதால், சரி அப்படியே செய்யுங்கள் என்று சொன்னோம்.

நாங்கள் உணவுண்டு வரும் போது கீழே வரிசையாக மாணவர்களும் முதல் மாடியில் வரிசையாக மாணவியர்களும் வந்து உணவைப் பெற்றுச் சென்று கொண்டிருந்தார்கள். அச்சிறுவர்கள் மிக இயல்பாக நடந்து வந்து உணவைப் பெற்றுச் செல்வதால் அவர்கள் பார்வைக் குறை உடையவர்கள் என்பதே மறந்து போகிறது. தற்செயலாக சில மாணவர்களின் வழியில் நின்று கொண்டு அவர்களுடன் மோதிக் கொண்டேன். சில முறை இப்படி நடந்த பின்னர் தான் அவர்கள் பழக்கத்தால் அப்படி இயல்பாக நடக்கிறார்கள்; அதனால் புதியவரான நாம் தான் அவர்கள் பாதையில் இருந்து விலக வேண்டும்; அவர்கள் நாம் அங்கே இருப்பதை அறியார்கள் என்பது புரிந்தது. அவர்கள் பாதையில் இருந்து விலகி சிறிது தூரத்தில் வந்து நின்று கொண்டோம்.



மற்றவர்கள் படிக்கும் அதே பாடபுத்தகங்களைத் தான் இம்மாணவர்களும் படிக்கிறார்கள் என்று சரவணன் சொன்னார். அப்புத்தகங்களில் இருப்பதை ஒலிப்பதிவு செய்து அதனைக் கேட்டுக் கேட்டு இவர்கள் படிக்கிறார்கள் என்றும் சொன்னார். +2 தேர்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதிப்பெண்கள் பெற்றவர்கள் பலர் இங்கே இருக்கிறார்கள் என்றும் அவர்கள் பெயர்களுடன் மதிப்பெண் பட்டியலை அங்கே ஓரிடத்தில் வைத்திருக்கிறார்கள் என்றும் சொன்னார்.

மெய்யம்மை அம்மா அவர்கள் தேர்வெழுதும் போது அவர்களுக்குத் துணையாகச் சென்று அவர்கள் சொல்லச் சொல்ல எழுதிய அனுபவத்தைப் பற்றி சொன்னார். என் தம்பியும் அப்படி சென்று உதவியது உண்டென்றும் பாடங்களை ஒலிப்பதிவு செய்தும் தந்துள்ளார் என்றும் அழகர்கோவிலில் இப்பள்ளியைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது சொல்லியிருந்தார்.

மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் உணவு பெற்ற பின்னர் கல்லூரி மாணவர்கள் வந்து உணவு பெறத் தொடங்கினார்கள். அருகிலேயே காதக்கிணறு என்ற ஊரில் இருக்கும் தாய் தந்தையர் அற்ற ஆதரவற்ற சிறுவர்கள் வாழ்ந்து படிக்கும் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்று சீனா ஐயாவிடம் சொல்லியிருந்ததால் அவர் அப்பள்ளி ஆசிரியரிடம் சொல்லி ஏற்பாடு செய்திருந்தார். அங்கே செல்ல நேரமாகிவிட்டதால் பார்வையற்றோர் பள்ளி நிர்வாகத்தினரிடம் சொல்லி விடைபெற்றுக் கொண்டோம்.





நல்லாசிரியர் விருது பெற்ற ஒருவர் தன் செலவிலேயே நடத்தும் இந்த ஆதரவற்ற சிறுவர்களின் பள்ளிக்குச் சென்றோம். அங்கே மாணவர்கள் எங்கள் வருகை எதிர்நோக்கி அமர்ந்திருந்தார்கள். சென்று சிறிது நேரம் அவர்களுடன் செலவழித்து பின்னொரு நாள் வருவதாகச் சொல்லி வந்தோம்.

இன்னும் சில உதவிகளை எங்கள் சார்பில் சீனா ஐயா செய்வதற்கு ஏற்றுக் கொண்டிருக்கிறார். அவருடைய பேருதவி மட்டும் இல்லையென்றால் இந்த உதவிகளை எல்லாம் இவ்வளவு குறுகிய காலத்தில் செய்திருக்க இயலாது. உதவி தர முன் வருபவர்களையும் உதவி வேண்டுபவர்களையும் இணைக்கும் இந்த நற்செயலை தனது பொன்னான நேரத்தை எல்லாம் செலவழித்துச் செய்யும் ஐயாவின் மனத்திற்கும் அம்மாவின் மனத்திற்கும் பல்லாயிரம் நன்றிகளைத் தெரிவித்தாலும் போதாது!

Friday, July 23, 2010

உலப்பிலா ஆனந்தம் ஆய தேனினைச் சொரிந்து புறம் புறம் திரிந்த செல்வமே!


பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து நீ பாவியேனுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்தம் ஆய
தேனினைச் சொரிந்து புறம் புறம் திரிந்த செல்வமே! சிவபெருமானே!
யான் உனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்தருளுவது இனியே!


நடைமுறை உலகத்தைப் பார்த்தால் மூன்று விதமான தாய்மார்களைப் பார்க்கலாம். குழந்தை பசியால் அழுதாலும் பால் கொடுக்காதவள் கடைநிலைத் தாய். குழந்தை அழுதவுடன் பால் கொடுப்பவள் இடைநிலைத் தாய். குழந்தை அழுவதற்கு முன்னர் பசி நேரம் என்று அறிந்து நேரா நேரத்திற்குப் பால் தருபவள் தலைநிலைத் தாய். அப்படி காலமறிந்து பால் ஊட்டும் தலைநிலைத் தாயையும் விடச் சிறந்தவன் இறைவன். தலைநிலைத் தாயைவிட மிகவும் பரிந்து வாத்ஸல்யமுடன் உலகத்து உயிர்களையெல்லாம் காப்பவன் தாயுமானவன்.

மானிடத்தாய் உடலை மட்டுமே வளர்க்கும் போது இறைவனோ உடலோடு உள்ளத்தையும் சேர்த்து வளர்ப்பவன். அதனால் ஊனினை உருக்கி உள்ளொளிப் பெருக்குகின்றான். உள்ளொளி பெருகியதால் உள்ளத்தின் உள்ளே என்று அழியாததாகவும் திகட்டாததாகவும் உள்ள இன்பத் தேன் பொழிந்தது.

உள்ளே பொழிந்த தேன் வெளியிலும் பொங்கிப் பரவியது. உள்ளே மட்டும் காக்காமல் வெளியிலும் எத்திசையிலும் இறைவன் இருந்து அடியவரைக் காக்கின்றான். அப்படி என்றும் நீங்காத செல்வமாக இருப்பவன் சிவபெருமான்.

அவன் நம்மைத் தொடர்ந்து எங்கும் நிறைந்திருக்க அவனை நாம் தொடர்ந்து சென்று சிக்கெனப் பிடித்தல் எளிது தானே. உண்மையில் அவன் நம்மைத் தொடர நாம் தான் அவனை உதறுகின்றோம். அதனால் அடிகளார் சிக்கெனப் பிடித்த போது அவனால் எங்கும் எழுந்தருள முடியாது. ஆனால் மறைத்தலும் அவன் தொழிலாதலால் நாம் அவனைப் பிடிக்கும் போது மறைந்துச் செல்வதைப் போல் ஒரு போக்கு காட்டுவான். அப்போது 'நீயும் எனைத் தொடர்ந்தாய். நானும் உனைத் தொடர்ந்தேன். இப்போது எங்கே சென்றீர்?' என்ற கேள்வி எழுந்து உருக்கும். அதுவே இப்பாடலில் வெளிப்பட்டது.

பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து...


பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து நீ பாவியேனுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்தம் ஆய
தேனினைச் சொரிந்து புறம் புறம் திரிந்த செல்வமே! சிவபெருமானே!
யான் உனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்தருளுவது இனியே!


பால் நினைந்து ஊட்டும் - குழந்தைக்குப் பசிக்கும் நேரத்தை அறிந்து பால் ஊட்டுகின்ற


தாயினும் சாலப் பரிந்து - தாயைவிட மிகவும் அன்பு கொண்டு


நீ பாவியேனுடைய - நீ பாவியாகிய என்னுடைய


ஊனினை உருக்கி - உடம்பை உருக்கி

உள்ளொளி பெருக்கி - உள்ளத்தில் அறிவொளி பெருக்கி

உலப்பிலா ஆனந்தம் ஆய தேனினைச் சொரிந்து - அழியாத இன்பமாகியத் தேனினைச் சொரிந்து


புறம் புறம் திரிந்த செல்வமே - எல்லாப் புறங்களிலும் கூட வந்து என்னைக் காக்கும் செல்வமே!


சிவபெருமானே - சிவபிரானே!


யான் உனைத் தொடர்ந்து - நான் உன்னைத் தொடர்ந்து

சிக்கெனப் பிடித்தேன் - உறுதியாகப் பற்றினேன்

எங்கெழுந்தருளுவது இனியே - இனிமேல் நீ எங்கே எழுந்தருளிச் செல்வது?

பசியை காலத்தால் அறிந்து பால் ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து நீ பாவியாகிய என்னுடைய உடம்பை உருக்கி உள்ளத்திலே அறிவொளி பெருக்கி அழியாத ஆனந்தத்தைப் பொழிந்தாய். உள்ளே ஆனந்தத்தைத் தந்ததோடு வெளியே எப்புறத்திலும் நின்று காத்தாய். எனது செல்வமே சிவபெருமானே! நான் உன்னை உறுதியாகப் பற்றினேன்! இனி எங்கே எழுந்தருளுகிறீர்?!

Wednesday, July 21, 2010

மதுரை அரசாளும் மீனாட்சி...

மினியாபொலிஸுக்கும் மதுரைக்கும் உள்ள நேர வேறுபாட்டால் ஏற்பட்ட பகல் இரவு குழப்பம் இன்னும் குழந்தைகளுக்கு தீரவில்லை. மதியம் 3 மணி போல் தூங்கத் தொடங்கினால் 8 மணிக்கு எழுந்து மீண்டும் எங்களுடன் 10 மணிக்குத் தூங்குகிறார்கள். அதனால் அதிகாலை 4 மணிக்கு எல்லாம் எழுந்துவிடுகிறார்கள். நேற்றும் (ஜூலை 20) அப்படியே அதிகாலையிலேயே அனைவரும் எழுந்துவிட ஒரே நேரத்தில் நானும் துணைவியாரும் 'பேசாமல் மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் போய் வந்துவிடலாமா?' என்றோம். உடனே சரி என்று சொல்லி அனைவரும் குளித்துக் கோவிலுக்குச் சென்றோம்.

மதுரையின் அரசியையும் அரசனையும் காணச் செல்கிறோம் என்று தான் மகளிடம் சொன்னேன். முதலில் அவளுக்குப் புரியவில்லை; பின்னர் புரிந்து கொண்டாள். (நல்ல வேளை அஞ்சாநெஞ்சனை அவளுக்குத் தெரியாது. தெரிந்திருந்தால் அவரைத் தான் பார்க்கப் போகிறோம் என்று நினைத்திருப்பாள். :-) )

வீட்டிலிருந்து கோவில் பக்கம் தான் என்பதாலும் அதிகாலை நேரம் தெருவில் கூட்டம் இருக்காது என்பதாலும் நடந்தே சென்றோம். தெருவில் இருந்த குப்பைக்கூளங்களைக் கண்டு மகள் முகத்தைச் சுளித்தாள்; மூக்கைப் பொத்தினாள். மக்கள் தொகைப் பெருக்கத்தால் ஏற்படும் விளைவுகள் இவை என்று அவளுக்குச் சொல்லிக் கொண்டிருந்தேன்.

முன்பு கோவிலுக்கு உள்ளே ஆடி வீதியில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருப்பார்கள். இப்போது கோவிலைச் சுற்றி முழுச்சாலையையும் நடைபாதையைப் போல் தளம் பாவிவிட்டதால் அங்கே வாகனங்கள் எதையும் அனுமதிப்பதில்லை; அங்கேயே நிறைய பேர் நடைப்பயிற்சி செய்கிறார்கள். நாங்கள் சென்ற போதும் நடக்கும் பலரைப் பார்க்க முடிந்தது.




சென்ற வருடம் வந்திருந்த போது மீனாட்சி அம்மன் சன்னிதியில் நிறைய கூட்டம் இருந்ததால் சிறப்புத் தரிசனச் சீட்டை வாங்கி அம்மனைத் தரிசிக்க வேண்டியிருந்தது. இந்த முறை அவ்வளவாகக் கூட்டம் இல்லை. வேண்டும் என்ற அளவிற்கு அன்னையைத் தரிசிக்க முடிந்தது. மகளுக்கு மூன்று வருடங்களுக்கு முன்னர் மெனிஞ்சடிஸ் வந்த போது அவளைக் காப்பாற்றியவள் இந்த மீனாட்சி அன்னை தான் என்று என் மனைவி அவளுக்குச் சொன்னாள். உடனே அவள் 'எனக்குத் தெரியும். அதோ கையில் கிளியும் வைத்திருக்கிறாளே' என்றாள். சேந்தன் தான் ஒரு இடத்தில் நிற்காமல் ஓடிக் கொண்டிருந்தான்.

கூடல் குமரர் சன்னிதிக்கு வந்த போது 'இந்த முருகனை கார்த்திகை தோறும் வணங்கித் தான் நான் ஸ்மார்ட்டாக இருக்கிறேன்' என்று சொன்னவுடன் இரு குழந்தைகளும் விழுந்து விழுந்து கூடல் குமரரை வணங்கினார்கள். 'நானும் இப்ப ஸ்மார்ட்டாயிட்டேன்' என்றான் சேந்தன் உடனே. :-)



பார்க்கும் இடமெல்லாம் கணேசனைக் கண்டு 'கணேசா, கணேசா' என்று அவனுடைய இஷ்ட தெய்வத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டே இருந்தான் சேந்தன். இஷ்ட தெய்வம் என்று சொல்வதை விட அவனுடைய நெருங்கிய தோழன் கணேசன் என்று சொல்லலாம். அப்படிச் சொல்லிக் கொண்டே வந்தவன் முக்குறுணி விநாயகர் முன்பு வந்தவுடன் 'Biiiggg கணேசா. உன்னை மாதிரி இருக்கார் அப்பா' என்று சொல்லி விட்டான். :-)



அப்படியே சுவாமி சன்னிதிக்கு அருகில் வரும் போது கோவில் அருச்சகர் ஒருவர் அப்போது தான் கோவிலுக்கு வந்திருப்பார் போல; ஒவ்வொரு சன்னிதியாகத் தரிசனம் செய்து வந்து கொண்டிருந்தார். அவரைப் பார்த்தவுடன் சேந்தன் சௌராஷ்ட்ரத்தில் 'இவர் சிவாவைப் போலவே இருக்கிறார்' என்று பலமுறை சொன்னான். சிவா சிவா என்று சொன்னது மட்டும் அருச்சகருக்குப் புரிந்தது போலும். அவனைப் பார்த்து புன்னகை செய்து, தலையில் கைவைத்து ஆசி கூறி, அங்கிருந்த ஓவியங்களில் இருந்த சிவபெருமானைக் காட்டினார். அவன் மீண்டும் 'நீ சிவாவைப் போல இருக்கிறாய்' என்று சௌராஷ்ட்ரத்தில் சொன்ன போது எப்படியோ அது அருச்சகருக்குப் புரிந்துவிட்டது. ஆங்கிலத்தில் 'இதற்குப் பெயர் சிவ வேடம். சிவனை வணங்குபவர்கள் எல்லோரும் இப்படித் தான் இருப்பார்கள்' என்று அவனுக்கு விளக்கத் தொடங்கிவிட்டார். சேந்தனுக்கு அதெல்லாம் ஒன்றும் புரியவில்லை. ஆனாலும் கேட்டுக் கொண்டான்.

சுவாமி சன்னிதிக்குள் நுழைந்தால் ஒரு வியப்பு. எப்பொழுதும் அம்மன் சன்னிதியில் கூட்டம் அதிகம் இருக்கும்; சுவாமி சன்னிதியில் கூட்டமே இருக்காது. இன்று என்னடாவென்றால் அங்கே கூட்டம் இல்லை; இங்கே நல்ல கூட்டம். அதனால் 15 ரூ நுழைவுச் சீட்டு வாங்கி அருத்த மண்டபத்திற்குள் சென்று மதுரையின் அரசனைத் தரிசித்தோம். வெளியே பார்த்த அருச்சகர் அங்கே இருந்தார். அருகில் வந்து அன்புடன் சேந்தனுக்குத் திருநீறு இட்டுவிட்டார். அவளுக்கு அது கிடைக்கவில்லை என்று மகளுக்குக் கொஞ்சம் வருத்தம். நீ பெரிய பெண்; அதனால் உனக்கு கையிலேயே திருநீறைக் கொடுத்தார் என்று சொன்னேன்.




சுவாமி சன்னிதியில் இருந்து வெளியே வந்த போது வீரபத்ரருக்கு அபிஷேகம் நடந்து கொண்டிருந்தது; அதனை நிறைய பேர் கீழே அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். 'சாமியைக் குளிப்பாட்டுவதை நானும் பார்க்கணும்' என்று சொல்லி அமர்ந்துவிட்டான் சேந்தன். அவனை எழுப்புவதற்குள் பெரும்பாடு ஆகிவிட்டது. ஐந்து நிமிடம் சென்ற பின்னர் 'அதோ அங்கே காளி தேவி இருக்கிறாள். அவளைப் பார்க்க வேண்டும்' என்று சொன்னவுடன் எழுந்து வந்தான்.

'காளி தேவி ஏன் கோபமாக இருக்கிறாள்' என்று கேட்ட மகளுக்கு சிவனுக்கும் காளிக்கும் நடந்த ஆடல் போட்டியைப் பற்றிச் சொன்னேன். சிவனுக்கு வெட்கமே இல்லை; காளியைப் போல் அவரும் வெட்கப்பட்டுக் கொண்டு காலைத் தூக்காமல் இருந்திருக்க வேண்டும் என்றுசொன்னாள். :-) 'நான் நல்லா பரதநாட்டியம் கத்துக்கிட்டா சிவனைப் போல நானும் காலைத் தூக்கி ஆடுவேன்' என்றும் சொன்னாள். :-) அவளுடைய பெயர் காளியின் பெயர் என்று யாரோ ஒருவர் (வேறு யார்? நான் தான்) அவளிடம் சொன்னதிலிருந்து அவள் காளியின் கட்சி. காளிதேவி என்று சொன்னாலே போதும்; ஓடிச் சென்று பார்ப்பாள். ரொம்பப் பிடிக்கும்.



சேந்தனின் இன்னொரு நெருங்கிய தோழனான அனுமானைப் பார்த்துவிட்டு இன்னொரு முறை அப்பா கணேசரை (அது தான் முக்குறுணி விநாயகர்) பார்த்துவிட்டு பொற்றாமரைக்குளக்கரையில் கொஞ்சம் நேரம் செலவழித்துப் பின்னர் வீட்டிற்கு வந்தோம்.




வீட்டிற்கு வந்தவுடனே சரவணனிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. உடனே கிளம்பி திருஞானம் பள்ளிக்குச் சென்றோம்.

நேற்று (20 July) இரவு தெற்கு கிருஷ்ணன் கோவிலுக்குச் சென்று வந்தோம். நான் அந்தக் கோவிலுக்கு மிக அருகில் இருக்கும் வீட்டில் பிறந்து வளர்ந்தவன்; ஒவ்வொரு நாளும் இரவு 8:30 மணிக்கு என்னை வேறெங்கும் தேட வேண்டாம். அந்தக் கோவிலில் தான் இருப்பேன். நாள்தோறும் அக்கோவிலில் பெருமாள் சீதேவி பூதேவியுடன் திருக்கோவிலுக்குள்ளேயே சுற்றி வரும் புறப்பாடு நடைபெறும். ஒவ்வொரு நாளும் அவருடைய திருவோலக்கத்தில் அமர்ந்து அந்த இன்பத்தில் மகிழ்ந்திருக்கிறேன். நேற்றும் அந்த வாய்ப்பு கிடைத்தது. புறப்பாட்டிற்காக ஆயத்தமாக மூவரும் அமர்ந்திருந்தார்கள். ஆனால் குடும்பமாகச் சென்றதால் எங்கே புறப்பாடு நடக்கும் வரை இருக்க இயலாதோ என்று ஒரு தயக்கம் இருந்தது. ஆனால் கோவில் தலைமை அருச்சகர் என்னை அடையாளம் தெரிந்து கொண்டு 'புறப்பாடு முடியும் வரையில் இருந்துவிட்டுப் போ' என்று சொல்லிவிட்டார். அத்துடன் பெருமாள் (மூலவர்) உடுத்துக் களைந்த பீதகவாடையும் (பரிவட்டம்) மாலையும் தந்தார்.



புறப்பாடு நடந்து பெருமாள் திருவோலக்கம் கண்டருளும் போது 'ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்' என்று மாணவப் பருவத்தில் இங்கே அமர்ந்து தினந்தோறும் வேண்டிக் கொண்டது நினைவிற்கு வந்தது. அப்போதெல்லாம் அடிக்கடி இக்கோவில் நிர்வாகிகளில் ஒருவர் என்னைக் கேட்பார் - 'தினமும் கோவிலுக்கு வருகிறாயே. என்ன வேண்டிக் கொள்வாய்?'. 'ஒன்றும் இல்லை' என்று சொல்வேன். ஆனால் மனத்தில் 'இதே மாதிரி என்றென்றும் உன் திருமுன் அமர்ந்து உனக்கு அடிமை செய்ய வேண்டும் என்று தானே வேண்டிக் கொள்கிறேன்' என்று நினைப்பதுண்டு. நான் வேண்டிக் கொண்டதை அவன் நிறைவேற்றாவிட்டாலும் அவன் நடத்திக் கொள்வதின் படி நாம் நடந்து கொள்வது தானே அவனுக்கு அடிமைசெய்யும் முறை என்று நேற்று எண்ணிக் கொண்டேன்.

புறப்பாடு முடிந்து கோஷ்டியும் நடந்தது. கோஷ்டியில் பிரசாதம் தந்த போது என் மனைவி என்னைப் பார்த்து ஒரு புன்னகை புரிந்தார். எனக்கும் என்ன நினைக்கிறார் என்று புரிந்தது. 'இதற்குத் தானே இங்கே வந்தாய் குமரா?' என்று கேட்டது தெரிந்தது. :-)

பின்னர் அருச்சகருடன் பேசிக் கொண்டிருந்த போது மகள் 'எனக்கு பிரசாதம் ரொம்ப பிடிச்சது. ரொம்ப நல்லா இருந்தது' என்று என்னிடம் சொன்னாள். அதனைக் கேட்ட அருச்சகர் உடனே எங்களை மடப்பள்ளிக்கு அழைத்துச் சென்று 'சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, முறுக்கு, வடை' எல்லாம் தந்தார். வீட்டிற்கு வரும் போது மனைவியார் 'உங்களை பெருமாள் இன்னைக்கு ரொம்ப நல்லா கவனிச்சுக்கிட்டார் போல' என்று சொல்லிச் சிரித்தார்.

(இரு கோவில்களிலும் எடுத்த படங்கள் இருக்கின்றன. ஆனால் பி.எஸ்.என்.எல். கருணை இல்லாததால் வீட்டில் இணையத் தொடர்பு அறுந்துவிட்டது. படங்களை வலையேற்ற முடியவில்லை. இடுகையை எழுதி முடித்துவிட்டதால் இணைய மையத்திற்கு வந்து இடுகையை மட்டும் இப்போது இடுகிறேன். படங்களை பின்னர் இடுகிறேன்...

இதோ வீட்டிலிருந்து அழைப்பு வந்துவிட்டது. இரவிசங்கர் ஆசைபட்டபடி பூரிக்கட்டை பறக்கப் போகிறது போல... :-) :-( )

பாட்டி படித்த பள்ளி!

நேற்று டாக்டர். திருஞானம் துவக்கப்பள்ளியில் மாணவர்களுக்குச் சீருடை வழங்கியதைத் தொடர்ந்து இன்று (ஜூலை 21) காலை மதுரை விளக்குத்தூண் அருகில் இருக்கும் நவபத்கானா தெருவில் இருக்கும் சௌராஷ்ட்ர ஆரம்பப் பள்ளியில் படிக்கும் முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு மாணவ மாணவியர் அனைவருக்கும் (மொத்தம் 91 பேர்) சீருடைகளை வழங்கினோம்.

டீம் என்றொரு குழு அமெரிக்காவில் இருக்கிறது. இதில் அமெரிக்காவில் வசிக்கும் தமிழகத்தார் பலரும் இணைந்து இருக்கிறார்கள். மாதம் பத்து டாலர் என்ற கணக்கில் வருடத்திற்கு நூற்றி இருபது டாலரை ஒவ்வொருவரும் சந்தாவாக இக்குழுவுக்கு அனுப்ப வேண்டும். மாதத்திற்கு ஒரு சிலர் என்று தேர்ந்தெடுத்து ஐநூறு டாலரை அவருக்குக் கொடுத்து அவர் விரும்பும் தமிழகப் பள்ளி ஒன்றிற்கு உதவி செய்ய வைக்கிறார்கள். இக்குழுவில் பல வருடங்களாக உறுப்பினனாக இருக்கிறேன் (எத்தனை வருடங்களாக என்று நினைவில்லை). முன்பொரு முறை என்னைத் தேர்ந்தெடுத்து ஐநூறு டாலர்கள் (ஏறக்குறைய 25,000 ரூபாய்) கொடுத்தார்கள். அப்போது சீனா ஐயா, என் மாமனார் போன்று ஏற்பாடுகளைக் கவனித்துச் செய்ய யாரும் கிடைக்காததால் இன்னொரு டீம் உறுப்பினரான நண்பரிடம் அப்பணத்தைக் கொடுத்து சேலம் அருகில் ஒரு சிற்றூரில் இருக்கும் பள்ளிக்கு தேவையானவற்றை வாங்கிக் கொடுத்தோம். இப்போது இரண்டாவது முறையாக ஜூன் மாதத்தில் தேர்ந்தெடுத்துப் பணத்தை அனுப்பியிருக்கிறார்கள். இந்த முறை என் மாமனார் மதுரையில் இருந்ததால் அவர் மூலம் இரு பள்ளிகளுக்கு உதவி செய்யும் வாய்ப்பு கிட்டியது.

இப்பள்ளியில் படிக்கும் 91 மாணவ மாணவியருக்குச் சீருடையும், தெற்கு வெளிவீதியில் இருக்கும் இன்னொரு சௌராஷ்ட்ர துவக்கப்பள்ளியில் கழிவறையும் டீம் கொடுத்த பணத்தில் வழங்கியிருக்கிறோம்.

இன்றைய நிகழ்ச்சியும் மிக நன்றாக நடைபெற்றது. இப்பள்ளி சௌராஷ்ட்ர பெண்கள் கல்வி அவையினரால் நடத்தப்படுவதால் மேடையில் மகளிருக்கு முதல் மரியாதை. படங்களைப் பார்த்தால் தெரியும். :-)

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் மாணவியர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார்கள். பின்னர் ஒலிப்பேழையில் செம்மொழிப் பாட்டு வைத்தார்கள். அரசு உதவி பெறும் பள்ளிகளில் கலைஞர் எழுதிய இப்பாடலும் தமிழ்த்தாய் வாழ்த்து அளவிற்கு மரியாதை பெறுகிறது என்று நினைத்துக் கொண்டேன்.

இந்தப் பள்ளி என் மாமியார் படித்த பள்ளி என்று சொன்னார்கள். என் அம்மாவும் இங்கே படித்திருக்கலாம். உயிருடன் இருந்திருந்தால் கேட்டிருக்கலாம். பாட்டி படித்த பள்ளி என்பதாலோ என்னவோ இன்று அவளாகவே முன் வந்து சீருடைகளை வழங்கினாள் மகள்.

நேற்று பேசியதையே இன்றும் பேசிவிடலாம் என்று நினைத்தேன். ஆனால் சரியாகப் பேசவில்லை போல. சொதப்பினேன் என்று பின்னர் சொன்னார் வீட்டரசி. ஆனால் குழந்தைகள் நன்கு சிரித்து என்னிடம் பேசினார்கள். அது போதும் எனக்கு. :-)

நிகழ்ச்சி நாட்டுப்பண்ணுடன் இனிதே நிறைவடைந்தது. (ஆமாம். இறுதியில் அனைவருக்கும் பள்ளியின் சார்பில் இனிப்பு வழங்கினார்கள். :-) )

Click here to view these pictures larger

Tuesday, July 20, 2010

மதுரைக்குப் போகலாமா?

என் அப்பாவின் முதலாண்டு நினைவு நாளுக்காக இப்போது மதுரைக்கு வந்திருக்கிறேன். அப்பாவின் மறைவுக்குச் சென்ற ஆண்டு வரும் போது நான் மட்டும் வந்தேன். இந்த முறை மனைவியும் குழந்தைகளும் வந்திருக்கிறார்கள்.

சனிக்கிழமை மினியாபொலிஸிலிருந்து கிளம்பி ஞாயிறு இரவு 11:30 மணிக்குச் சென்னை வந்து சேர்ந்தோம். சென்னையில் பெரியம்மா வீட்டில் தங்கியிருந்த என் பாட்டி (அம்மாவின் அம்மா) அங்கு எங்களுடன் சேர்ந்து கொண்டார். அனைவரும் திங்கள் காலை மதுரை வந்து சேர்ந்தோம்.

DSC00773

அப்பா இருக்கும் வரையில் அவரை சென்னைக்குக் கூட விமானத்தில் அழைத்துச் செல்லவில்லை என்பது சென்ற வருடம் அவர் மறைவுக்குப் பின்னர் தான் உறைத்தது. அதனால் அப்போதே சென்னை செல்ல வேண்டும் என்று சொன்ன பாட்டியை விமானத்தில் அழைத்துச் செல்லலாம் என்று விமானச்சீட்டையும் வாங்கிவிட்டேன். ஆனால் நெருங்கிய உறவினர் ஒருவர் மறைந்ததால் அப்போது அவரால் சென்னைக்கு விமானத்தில் என்னுடன் வர இயலவில்லை. இப்போது கேட்டதில் 'இன்னும் இரண்டு நாட்களில் மதுரைக்குச் செல்லலாம் என்று இருக்கிறேன். நீ அழைத்துப் போனால் வருகிறேன்' என்று சொல்லிவிட்டார். உடனே அவருக்கும் பயணச்சீட்டு வாங்கி விமானத்தில் அழைத்து வந்துவிட்டேன். என் மகிழ்ச்சிக்காக விமானத்தில் வந்ததாக அவர் சொன்னாலும் அவருக்கும் அதில் மிக்க மகிழ்ச்சி தான் என்று நினைக்கிறேன்.

பயணக்களைப்பாற்றுவதில் முதல் நாள் சென்றது. இரண்டாவது நாளான இன்று (20 ஜூலை 2010) மதுரை சந்தைப்பேட்டையில் இருக்கும் Dr. T. திருஞானம் துவக்கப் பள்ளிக்குச் சென்றோம். அங்கே படிக்கும் சிறுவர் சிறுமியர் நூற்றிப் பதினெட்டுப் பேருக்குச் சீருடைகள் தரும் விழா நடைபெற்றது. மூத்த பதிவர் சீனா ஐயாவின் உறுதுணையால் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய முடிந்தது.

DSC00966

ஒரு மாதம் முன்பாக சீனா ஐயாவைத் தொடர்பு கொண்டு இந்த முறை மதுரை வரும் போது இந்த மாதிரி சிறு உதவிகள் செய்ய விரும்புகிறேன் என்று சொன்னவுடன் மிகுந்த ஊக்கத்துடன் பல பள்ளிகள், நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு அனைத்து ஏற்பாடுகளையும் ஐயா செய்யத் தொடங்கினார். இந்தத் துவக்கப்பள்ளியில் ஏழைக்குழந்தையர் நிறைய பேர் படிக்கிறார்கள். அவர்களில் 118 பேரைத் தேர்ந்தெடுத்துச் சீருடைகள் வழங்கலாம் என்றும் அதற்கு எவ்வளவு தொகை ஆகும் என்றும் ஐயா இருவாரங்களுக்கு முன்னர் சொன்னார். செய்யலாம் என்று சொன்னவுடன் உடனே குழந்தைகளின் அளவுகளை எல்லாம் எடுத்து சீருடைகளைத் தைக்கச் சொல்லிவிட்டார். ஜூலை பதினைந்தாம் தேதி பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் விழா இந்தப் பள்ளியில் நடைபெறும் போது ஒரு பத்து மாணவர்களுக்கு மட்டும் சீருடைகள் எங்கள் சார்பில் வழங்கினார். நாங்கள் மதுரைக்கு வந்த பின்னர் இன்று மீதி இருக்கும் நூற்றி எட்டு மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கினோம்.

DSC00808

பத்து மணிக்குப் பள்ளிக்கு வந்து சேருகிறோம் என்று சீனா ஐயாவிடம் சொல்லியிருந்தோம். ஏற்பாடுகளைக் கவனிக்க ஐயாவும் அவரது துணைவியார் மெய்யம்மை அம்மாவும் ஒன்பதரைக்கே பள்ளிக்குச் சென்றுவிட்டனர். அவர்கள் சென்று சேர்ந்ததும் பள்ளித் தலைமையாசிரியர் சரவணன் அவர்கள் தொலைபேசி நாங்கள் வரும் நேரத்தை உறுதி செய்து கொண்டார். மாணவர்களை காக்க வைக்கக் கூடாது என்று எண்ணியிருந்ததால் உடனே கிளம்பி சரியாகப் பத்து மணிக்குப் பள்ளிக்குச் சென்றோம்.

DSC00810

நாங்கள் சென்ற சிறிது நேரத்தில் அனைத்து மாணவர்களையும் கூடத்தில் கூட்டி நிகழ்ச்சியைத் தொடங்கினார்கள். சீனா ஐயாவைப் பேச அழைத்த போது 'நான்கு நாட்கள் முன்னால் தான் நான் பேசினேன். மீண்டும் பேசினால் உங்களுக்குப் போரடிக்கும். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியையும் தமிழாசிரியையும் ஆன என் துணைவியார் பேசுவார்' என்று சொல்லி அமர்ந்துவிட்டார்.

DSC00814

அம்மாவும் குழந்தைகளுக்கு ஏற்றபடியான அறிவுரைகளுடன் அழகாக சில நிமிடங்கள் பேசினார். அவரது தமிழ்ப்பேச்சழகு அதற்குள் பேசி முடித்துவிட்டாரே என்று எண்ணும் படி இருந்தது.

DSC00817

என்னையும் பேச அழைக்க 'எனக்கு எழுதத் தெரியும். பேசத் தெரியாது' (அப்படியா? என்று ஒரு குரல் மனத்தில் அப்போது கேட்டது. அப்புறம் தான் தெரிந்தது அது என் மனைவியின் குரல் என்று. :) ) என்று சொல்லிவிட்டு மாணவர்களுடன் நேரடியாகச் சில வார்த்தைகள் பேசினேன். நான் கேட்கவும் அவர்கள் பதில் சொல்லவும் ஆக சில நிமிடங்கள் சென்றன.

DSC00821

DSC00826

DSC00837

DSC00834

DSC00845

DSC00841

பின்னர் சீருடைகளை வழங்கும் போது சேந்தன் தான் வழங்க வேண்டும் என்று விரும்பியதால் நான்கைந்து மாணவர்களுக்கு மட்டும் நான் வழங்கிவிட்டு மற்றவர்களுக்குச் சேந்தன் வழங்கினான்.

DSC00845

DSC00876

அனைத்து மாணவர்களுக்கும் சீருடைகள் வழங்கிய பிறகு சீனா ஐயா தலைமை மேலாளராகப் பணி புரியும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மூலம் அங்கே படிக்கும் எல்லா மாணவர்களுக்கும் (ஏறக்குறைய ஐநூறு பேர்) குறிப்பேடும் (நோட்டுப் புத்தகம்) எழுதுகோலும் சீனா ஐயாவும் மெய்யம்மை அம்மாவும் வழங்கினார்கள். அப்போது சேந்தனும் அவர்களுக்கு உதவியாக சில மாணவர்களுக்கு அவற்றை வழங்கினான்.

DSC00964

DSC00954

DSC00959


தொடர்புடைய இடுகைகள்: பாட்டி படித்த பள்ளி, கண்ணிழந்தார்க்கு ஒரு கைவிளக்கு...