Tuesday, December 19, 2006

சொல்லின் செல்வன் அனுமன்



அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான்

ஐம்பூதங்களில் ஒன்றான காற்றின் மகன் அனுமன். ஐம்பூதங்களில் ஒன்றான நீரைத் (கடலைத்) தாவி, ஐந்தில் ஒன்றான விண்ணகமே வழியாக நல்லவர்களான இராம இலக்குவருக்காகச் சென்று, ஐந்தில் ஒன்றான பூமி பெற்ற பெண்ணான சீதையை கண்டு, அயலவர் ஊரான இராவணன் ஊரில் ஐந்தில் ஒன்றான நெருப்பை வைத்தான். அவன் நம்மை காப்பான்.

இன்று (20-Dec-2006) அனுமன் பிறந்த நாள்.

Wednesday, December 06, 2006

தமிழ்மணத்தில் இருந்து விடைபெறுகிறேன்

அன்பு நண்பர்களே,

கடந்த சில மாதங்களாக மனதில் ஓடிக் கொண்டிருந்த இந்த எண்ணத்தை நிறைவேற்றும் காலம் வந்துவிட்டது என்று எண்ணுகிறேன். அதனை அறிவித்துவிட்டு இதோ தமிழ்மணத்தில் இருந்து விலகிக்கொள்கிறேன்.

தமிழ் வலைப்பதிவுகளைப் பற்றி இரண்டு மூன்று வருடங்களாக அறிந்திருந்தாலும் 2005 வருடம் தான் தமிழ்மணத்தைப் பற்றியும் பிளாக்கரைப் பற்றியும் நண்பர் சிவபுராணம் சிவா சொன்னார். அந்த அறிமுகத்தால் தமிழ்ப்பதிவுகள் எழுத வந்து தமிழ்மணத்தால் பல நன்மைகள் பெற்றேன். தமிழ்மணத்தால் பெற்ற நன்மைகளைச் சொல்லி முடியாது. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அதனைப் பற்றி பலமுறை சொல்லியிருக்கிறேன்.

தமிழ்மணத்தின் பழைய நிர்வாகமும் புதிய நிர்வாகமும் உவப்பு வெறுப்பின்றி நடுநிலைமையோடு இந்த வலைதிரட்டும் பணியைச் செவ்வனே செய்து வருகிறார்கள். அவர்கள் தொடர்ந்து இந்தத் தமிழ்ப்பணியைச் செவ்வனே செய்து தமிழை வளர்த்து வரவேண்டும் என்று வாழ்த்துகளுடன் வேண்டிக் கொள்கிறேன்.

அண்மைக்காலமாகத் தமிழ் வலைப்பதிவுலகில் கருத்து மோதல்களில் தொடங்கி அவை தனிமனிதத் தாக்குதல்களாகவும் நக்கல், நகைச்சுவை என்ற பெயரில் எழுதப்படும் தரம் குறைந்த எழுத்துகளாகவும் பரிணாமம் பெற்று வருகிறது. வலையுலகச் சூழல் மிகவும் நச்சூட்டப் பெற்று வருகிறது. இந்தச் சூழலில் இருந்து விடுபட பதிவுகளில் எழுதுவதையே நிறுத்திவிடலாமா என்று சிந்தித்ததில் அதனை விட சிறந்தது இந்த சூழல் எங்கு அதிகம் தென்படுகிறதோ அங்கிருந்து விடுபடுவதே என்று தோன்றியது. அதனால் நான் விரும்பிப்படிக்கும் வலைப்பூக்களைச் சேமித்து வைத்துக் கொள்ளத் தொடங்கினேன். நிறைய பதிவுகளைச் சேர்த்து வைத்தாகிவிட்டது. இன்னும் சில நாட்களில் எல்லாமும் சேர்ந்துவிடும் என்ற சூழலில் நேற்று தனி மனிதத் தாக்குதல் என் வட்டத்திற்குள்ளேயே வந்து இந்த முடிவை இப்போதே செயல்படுத்து என்று பிடித்துத் தள்ளிவிட்டது.

என் வலைப்பூக்களில் இருவகை இருக்கிறது. கூட்டு வலைப்பூக்கள், தனி வலைப்பூக்கள். தனி வலைப்பூக்கள் எல்லாவற்றிலும் தமிழ்மணப்பட்டையை எடுத்துவிட முடிவு செய்திருக்கிறேன். கூட்டு வலைப்பூக்களைப் பற்றி அந்த வலைப்பூ அன்பர்கள் எல்லோரிடமும் பேசி அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதன்படி செய்ய முடிவு செய்திருக்கிறேன். அதனால் சில கூட்டு வலைப்பூக்கள் தமிழ்மணத்தில் இருக்கும். அதன் மூலம் எனது சில பதிவுகளும் தமிழ்மணத்தில் தெரியலாம்.

தமிழ்மணப்பட்டையை நீக்குவது மட்டும் போதாது. நிர்வாகத்திற்கும் தெரியப்படுத்த வேண்டும் என்று சில நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள். விரைவில் நிர்வாகத்திற்கும் தெரியப்படுத்துகிறேன். (இந்த நேரத்தில் ஒரு வேண்டுகோள் - எப்படி தமிழ்மணத்தில் இணைத்துக் கொள்வது என்ற வழிமுறைகள் சொல்லியிருப்பதைப் போன்று, எப்படி தமிழ்மணத்தில் இருந்து விலகிக் கொள்வது என்பதைப் பற்றியும் சொன்னால் இனி மேல் அதனைப் பயன்படுத்த நினைப்பவர்களுக்கு உதவியாக இருக்கும். இந்த வேண்டுகோளை நிர்வாகத்திற்கும் தெரியப்படுத்துகிறேன்).

தமிழ்மணத்தைத் தவிர வேறு எந்த வலைத்திரட்டியிலும் என் பதிவுகளைச் சேர்த்ததில்லை. தேன்கூடு தொடங்கப்பட்ட போது என் வலைப்பூக்களில் சில அங்கே இருப்பதைப் பார்த்தேன். மேல் விவரங்கள் சில அப்போது கொடுத்தேன். ஆனால் அதன்பிறகு தொடங்கப்பட்ட எந்த வலைப்பூவும் தேன்கூட்டில் நான் இணைக்கவில்லை. தமிழ்மணத்தில் மட்டுமே இணைத்தேன். இனிமேலும் நானாக எந்த வலைத்திரட்டியிலும் என் வலைப்பூக்களை இணைக்கப்போவதில்லை. தானாக ஏதாவது வலைத்திரட்டி திரட்டிக் கொண்டால் திரட்டிக் கொள்ளட்டும்.

தமிழ்மணத்தால் பெற்ற நன்மைகள் பலவற்றில் மிகவும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது நண்பர்களும் அவர்களின் வலைப்பூக்களும். தமிழ்மணத்தில் இருந்து விலகும் போது, பெற்ற நன்மைகளை மிகவும் நன்றியோடு நினைத்துப் பார்த்து அன்புடனும் மகிழ்ச்சியுடனும் தமிழ்மணத்திற்கு நன்றி சொல்லி விடைபெறுகிறேன்.

என் பதிவுகளை தொடர்ந்து படிக்கும் நண்பர்கள் அப்படியே தொடர்ந்து படித்து ஊக்குவிக்குமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

Saturday, December 02, 2006

திருமகளும் நம்மையுடையவள்!

நம் நண்பர் இரவிசங்கர் கண்ணபிரான் திருவேங்கடவன் திருப்பள்ளியெழுச்சிக்குப் பொருள் சொல்லிக் கொண்டு வருகிறார். அண்மையில் அவர் இட்ட பதிவில் அடியேன் சில பின்னூட்டங்களை இட்டேன். அப்போது தோன்றிய கருத்துகளை அப்படியே எழுத்தில் இட முயன்றதால் முற்றுப்புள்ளியே இல்லாமல் சில கருத்துகளைச் சொல்லியிருந்தேன். அவற்றை இன்னும் எளிமையாகச் சொன்னால் நன்றாக இருக்கும் என்று நண்பர்கள் சிலர் அறிவுறுத்தியதால் அங்கே சொன்னதை இன்னும் எளிமையாகவும் விளக்கமாகவும் சொல்ல அடியேன் முயல்கிறேன்.

ஸ்ரீ ஸ்வாமினி - திருமகள் நம்மையுடையவள்!

இந்தப் பதிவு கொஞ்சம் வைணவ தத்துவங்களில் செல்லும். அதனால் கொஞ்சம் பொறுமையாகப் படிக்கும் படி நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன். தத்துவங்கள் என்பதால் எல்லோருக்கும் புரியும் படி சொல்வது எளிதாக இருக்காது என்று எண்ணுகிறேன். முடிந்த வரை எளிதாகத் தர முயல்கிறேன். அடியேன் சிறிய ஞானத்தன்.

முதலாளியின் மனைவியும் முதலாளி என்று ஏற்றுக் கொள்வது சில நேரங்களில் ஏற்புடையது. பல நேரங்களில் ஏற்றுக் கொள்ள முடியாதது. நாம் ஒரு வீட்டில் வேலைக்காரராக இருந்தால் அந்த வீட்டில் இருக்கும் எல்லோருமே நமக்கு முதலாளிகளாக இருக்கலாம். ஆனால் அலுவலகத்தில் மேலாண்மையாளராக இருக்கும் ஒருவரது மனைவியும் நம்மிடம் மேலாண்மையாளரைப் போல் நடந்து கொண்டால் நாம் ஏற்றுக் கொள்வோமா? சில மேலாளர்களின் மனைவியர் அப்படித் தான் எண்ணிக் கொள்கின்றனர் என்பது வேறு. ஆனால் நம் கண்ணோட்டத்தில் அது அபத்தமாகத் தோன்றும் இல்லையா? அதைவிடக் கொடுமை சில நேரங்களில் சில மேலாளர்களின் மனைவியர் தங்கள் கணவர்களின் கீழ் வேலை செய்பவர்களின் மனைவியர் தங்களுக்கு அடிமைகள் என்பது போல் நடந்து கொள்வது தான். :-) பலருக்கும் அந்த அனுபவம் இருக்கும் என்று எண்ணுகிறேன். நான் மேலாளர் ஆவதற்கு முன்னாலேயே என் வீட்டம்மாவிடம் அப்படி நடந்து கொள்ளக் கூடாது என்று சொல்லிவிட்டேன். என் நல்வினைப்பயன் என் வீட்டம்மாவும் அந்த மாதிரி எண்ணிக் கொள்பவர் இல்லை. அதனால் என் குழுவில் வேலை செய்பவர்கள் எல்லாம் வீட்டிலும் அலுவலகத்திலும் நண்பர்களாகவும் இருக்கிறார்கள்.

சரி. இதெல்லாம் ஏன் சொல்கிறேன் என்று கேட்கிறீர்களா? இதோ சொல்லிவிட்டேன். வடமொழியில் ஸ்வம் என்றால் சொத்து. ஸ்வாமி என்றால் சொத்தை உடையவன். ஸ்வாமினி என்றால் சொத்தை உடையவள். உயிருள்ளது, உயிரற்றது என்று இந்த உலகிலும் பேரண்டங்களிலும் இருக்கும் எல்லாமே ஸ்வம் என்பதற்குள் அடக்கம். அந்த சொத்துக்களை உடையவன் ஸ்வாமி. அந்த ஸ்வாமி யார் என்ற கேள்விக்கு வடமொழி வேதங்களும் தமிழ் வேதங்களும் மிகத் தெளிவாகச் சொல்லிவிடுகின்றன. எளிமையாக கோதை நாச்சியார் 'நம்மையுடையவன் நாராயணன்' என்றும் 'நாராயணனே நமக்கே பறை தருவான்' என்றும் சொல்லிவிடுகிறார். அதனால் பெருமாள் தான் நம்மைப் பெறும் ஆள்; அவரே எல்லாரையும் விட பெரும் ஆள் என்று மிகத் தெளிவாகச் சொல்லிவிடுகிறார்கள். யார் நம் ஸ்வாமி; நம்மையுடையவர் என்பது ஐயத்திற்கு இடமின்றி தெளிவாகிவிடுகிறது.

சரி. இப்போது சொல்லுங்கள். நம்மையுடையவன் நாராயணன். சரி. அவனது துணைவி - என்றும் அவனை விட்டு நீங்க மாட்டேன் என்று அவனது மார்பில் நிலையாக அமர்ந்தவள் - அவள் நம்மையுடையவளா இல்லையா? மேலாளரின் மனைவியும் நமக்கு மேலாளரா இல்லையா?

அவனைச் சேர்ந்தவர் எல்லாருமே நம்மையுடையவர்கள். 'அவன் அடியார் அடியார் அடியார் அடியார் அடியார் தமக்கு அடியேன்' என்று ஆழ்வார்கள் சொல்லும் போது அவனின் துணைவி நம்மையுடையவளாய் இருப்பதில் என்ன தடை? அப்படித்தானே தோன்றுகிறது. உண்மை தான். ஸ்வாமியின் தர்மபத்னி நமக்கு ஸ்வாமினி.

திருமகள் திருமாலின் துணைவி என்ற முறையில் மட்டுமே நம்மையுடையவளா? எப்படி நாராயணன் அவனின் தனியுரிமையால் நம்மையுடையவனோ அப்படியே பெரிய பிராட்டியாரும் (திருமகளைப் பெரிய பிராட்டி என்பர்) தனது தனியுரிமையாலேயே நம்மையுடையவளா? இந்தக் கேள்விக்கு ஆசாரியர்கள் சொல்லும் பதில் 'ஆமாம்' என்பதே. இருவருமே நம்மையுடையவர்கள். இருவரும் இணைபிரியாதவர்கள். இருவரும் ஒருவருக்கொருவர் இணையானவர்கள். இருவரும் ஒருவருக்கொருவர் ஏற்றவர்கள் - திருமாலுக்கு ஏற்ற துணைவி திருமகள்; திருமகளுக்கு ஏற்ற துணைவன் திருமால். இருவரும் சேர்ந்தே நம்மையுடையவர்கள். திருமகளின்றித் திருமால் என்றுமே இல்லை. அதனால் அவனால் நம்மை அவனுக்கு மட்டுமே உரிமையானவராகக் கொள்ள முடியாது. இருவருக்கும் சொத்து நாம். இப்படி தன் தனியுரிமையாலும் நம்மை உடையவளாக இருப்பவள் மகாலக்ஷ்மி என்பதைச் சொல்லவே தனியாக ஸ்ரீ ஸ்வாமினி என்று சொல்லியிருக்கிறார்கள்.

அப்படி இருவருமே பரம்பொருள்; இருவருமே நம்மையுடையவர்கள் என்றால் இன்னொரு கேள்வி எழுகிறது. பரம்பொருள் ஒன்றே என்பது தான் வேதங்கள் சொல்வது. அதுவே அறிவிற்கும் ஏற்றது. பரம்பொருள் இருவராக இருப்பது சாத்தியமில்லை. 'ஏகம் சத். விப்ரா பஹுதா வதந்தி - உண்மை ஒன்றே. அறிஞர்கள் அதனைப் பலவாறாகப் (புகழ்ந்து) பேசுகிறார்கள்' என்றும் 'ஏகம் அத்விதீயம் - ஒன்று;(தனக்கு இணையாக) இரண்டாவது இல்லாதது' என்றும் வடமொழி வேதங்களும் 'தானோர் தனிவித்து' என்றும் 'ஒருவனே தேவன்' என்று தமிழ்மறைகளும் பேசுவதற்கு ஏற்ப இல்லையே இருவரும் பரம்பொருள் என்பது? இந்தக் கேள்விக்கு ஆசாரியர்கள் சொல்லும் பதில்: எப்படி மலரும் மணமும், சுடரும் ஒளியும் இணைபிரியாமல் இருக்கிறதோ அது போலவே இறைவனும் இறைவியும் இணைபிரியாமல் இருப்பதால் இருவரும் ஒருவரை விட்டு ஒருவர் இருப்பு என்பதே இல்லை; அதனால் இருவரும் ஒரே தத்துவமே. அதனால் ஒன்றே தேவன் என்பதற்கு இருவரும் பரம்பொருள் என்பது ஏற்புடையதே.

பிரணவம், திருமந்திரம், துவயமந்திரம் இவையும் இந்தப் பொருளையே சொல்கின்றன என்று இரவிசங்கரின் பதிவில் பின்னூட்டமாகச் சொல்லியிருந்தேன். அவற்றையும் விரித்தால் மிக விரிவாக இந்தப் பதிவு அமைந்துவிடும். அவற்றைப் பற்றி வேறோரிடத்தில் பேசலாம்.

Wednesday, November 29, 2006

மதுசூதனன் மார்பில் நிலைத்தவளே!

நம் நண்பர் இரவிசங்கர் கண்ணபிரான் திருவேங்கடவன் திருப்பள்ளியெழுச்சிக்குப் பொருள் சொல்லிக் கொண்டு வருகிறார். அண்மையில் அவர் இட்ட பதிவில் அடியேன் சில பின்னூட்டங்களை இட்டேன். அப்போது தோன்றிய கருத்துகளை அப்படியே எழுத்தில் இட முயன்றதால் முற்றுப்புள்ளியே இல்லாமல் சில கருத்துகளைச் சொல்லியிருந்தேன். அவற்றை இன்னும் எளிமையாகச் சொன்னால் நன்றாக இருக்கும் என்று நண்பர்கள் சிலர் அறிவுறுத்தியதால் அங்கே சொன்னதை இன்னும் எளிமையாகவும் விளக்கமாகவும் சொல்ல அடியேன் முயல்கிறேன்.

மதுகைடபாரே வக்ஷோ விஹாரிணி - மதுகைடபர்களை அழித்தவனின் மார்பில் கோயில் கொண்டவளே!

நல்லவைகள் குறைந்து கெட்டவைகள் மேம்படும் போது நல்லவைகளை நிலைநாட்டுவதற்காக நான் மீண்டும் மீண்டும் பிறப்பேன் என்கிறான் கீதாசார்யன் கண்ணன். சொன்ன சொல் தவறாதவன் தானே இறைவன்? எப்போதெல்லாம் அடியவர்களுக்கு துன்பம் நேர்கிறதோ அப்போதெல்லாம் தோன்றுகிறான். அடியவர்களின் துன்பத்திற்கு காரணமானவர்களையும் காரணமானவைகளையும் நீக்கி நல்லதை நிலைநாட்டுகிறான். அப்படி நல்லதை நிலைநாட்டும் நீதிபதி அவன் என்பதைச் சொல்கிறது மதுகைடபர்களை அழித்தவன் என்ற பெயர்.

அவன் அப்பன் என்றாலும் முதலில் நீதிபதி. நன்மையையும் தீமையையும் சீர்தூக்கி எந்த பக்கமும் சாராமல் நீதியை வழங்குபவன். அடியேனோ அளவற்ற குற்றங்கள் செய்தவன். அபராதச் சக்ரவர்த்தி. அப்படிப்பட்டவனை அந்த மதுசூதனன் தள்ளிவிடுவானோ என்ற ஐயம் தோன்றும். அப்போது அவன் மார்பில் அன்னை நித்ய வாசம் செய்கிறாள் என்று சொல்லுவதால் அந்த ஐயம் நீங்கி ஆறுதல் ஏற்படுகிறது.

அன்னை அருகில் இருக்கும் போது அப்பன் நம்மை மன்னிக்கலாம். ஆனால் நான் அவனை நெருங்கும் போது அன்னை பக்கத்தில் இல்லாமல் போய்விட்டால்? அசுரர்களை அழிக்கும் அவன் நம்மிடம் இருக்கும் அசுர குணங்களையும் அழிக்கலாம்; அழிக்க முடியும்; அழிப்பான். ஆனால் அவற்றை இவ்வளவு நாள் நமக்குள் வைத்துக் கொண்டிருந்ததால் சினம் கொண்டு தண்டிப்பானோ? இந்த ஐயமே தேவையில்லை. அன்னை எப்போதும் அவன் மார்பில் இருக்கிறாள். எப்போதும் நகலக் கூடாது என்று அங்கேயே கோயில் கொண்டு இருக்கிறாள். அதனால் எந்தக் கவலையும் இல்லை.

சரி. கோயில் கொள்வதற்கு சுவாமியின் உடலில் வேறு இடமா இல்லை? ஏன் மார்பில் கோயில் கொண்டாள்? கண்ணை மூடிக்கொள்ளுங்கள். இன்று மாலை என்ன என்ன செய்வது என்று கொஞ்சம் சிந்தியுங்கள். எண்ணங்கள் தோன்றுகின்றனவா? அவை எங்கே தோன்றுகின்றன என்று பாருங்கள். எனக்குத் தெரிந்தவரை அவை தலையிலிருந்து தோன்றும். சிலருக்கு புருவ மத்தியில் இருந்து எண்ணங்கள் வருவதாய் தோன்றும். சிலருக்கு பிள்ளையாரைக் கும்பிடும் போது குட்டிக் கொள்வோமே அந்த இடங்களில் (னெற்றிப் பொட்டு?) இருந்து எண்ணங்கள் எழுவதாகத் தோன்றும்.

சரி இப்போது அம்மாவையோ அப்பாவையோ நம் வாழ்க்கைத் துணைவரையோ குழந்தையையோ நினைத்துக் கொள்ளுங்கள். தோன்றும் உணர்வு எங்கே இருந்து கிளம்புகிறது? மார்புகளின் நடுவில் ஏதோ அசைந்தது போல் தோன்றுகிறதா? அங்கே தான் உணர்ச்சிகள் தோன்றுகின்றன.

நாம் செய்த தவறுகளைக் கண்டு நம் மீது சுவாமிக்குச் சினம் வந்தால் அது எங்கிருந்து தோன்றும்? மார்பின் நடுவிலிருந்து தானே?! அது தோன்றும் முன் அதனை மாற்றி நம் மேல் கருணை எழச் செய்ய வேண்டும் என்பதற்காகத் தான் கருணைக்கடல் அன்னை வேங்கடவன் மார்பைத் தேர்ந்தெடுத்து அங்கே கோயில் கொண்டாள்.

இனி மேல் என்னங்க கவலை? அன்னையின் சிபாரிசோடு அப்பனை சரண் புகலாம் வாருங்கள்.

இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே ஆவோம்; உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்று...

என்.எஸ்.கே. பிறந்த நாள் வாழ்த்துகள்

நண்பர்கள் பலரும் ஏற்கனவே அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள் சொல்லிவிட்டார்கள். எல்லோரும் விரும்பும் வண்ணம் அவரின் குண நலன்களும் பழகும் விதமும் இருப்பது எல்லோருக்கும் தெரியும். அவரைப் பற்றித் தவறாகப் பேசியவர்களும் எண்ணியவர்களும் உண்டு. மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்று உணர்ந்த நண்பர்கள் அவரின் கருத்துகளுக்கு எதிர்கருத்துகள் இருந்தாலும் அவரைச் சந்தித்துத் தங்கள் இயல்பான நற்குணத்தைக் காட்டிக் கொண்டனர். ஐயா அவர்களின் பிறந்த நாளைப் பற்றிச் சொன்ன அண்ணன் கோவி.கண்ணன் அவர்களுக்கு மிக்க நன்றி.

கலைவாணர் என்.எஸ்.கே. அவர்களின் பிறந்த நாளான இன்று 'என் எஸ்.கே' அவர்களுக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள் கூறி பெருமகிழ்ச்சியடைகிறேன்.

அவருக்கு அடியேனின் பிறந்த நாள் பரிசு கீழே இருக்கிறது.

Tuesday, November 28, 2006

அம்பிகா தனயா பால கஜானன



அம்பிகா தனயா கஜானனா - அம்பிகை மகனே யானைமுகனே
கஜவதனா கணநாத கஜானன - யானைமுகனே கணங்களின் தலைவனே யானைமுகனே
சாயி கணேசா விநாயகா - சாயி கணேசனே விநாயகனே

த்ரிபுவன பாலக - மூவுலகையும் காப்பவனே
மங்கள தாயக - மங்களங்கள் அருள்பவனே
வித்யா புத்தி சித்தி ப்ரதாயக - கல்வி, அறிவு, செயல்திறம் நிலையாகத் தருபவனே
சாயி கணேசா விநாயகா - சாயி கணேசனே விநாயகனே

மேரே பாபா ஸ்ரீ சத்ய சாயீ!


ஜெய் ராதே! ஜெய் கிருஷ்ண!


ஜெய் ராதே! ஜெய் கிருஷ்ண!

Monday, November 27, 2006

அனைத்துலகிற்கும் தாயே!!

நம் நண்பர் இரவிசங்கர் கண்ணபிரான் திருவேங்கடவன் திருப்பள்ளியெழுச்சிக்குப் பொருள் சொல்லிக் கொண்டு வருகிறார். அண்மையில் அவர் இட்ட பதிவில் அடியேன் சில பின்னூட்டங்களை இட்டேன். அப்போது தோன்றிய கருத்துகளை அப்படியே எழுத்தில் இட முயன்றதால் முற்றுப்புள்ளியே இல்லாமல் சில கருத்துகளைச் சொல்லியிருந்தேன். அவற்றை இன்னும் எளிமையாகச் சொன்னால் நன்றாக இருக்கும் என்று நண்பர்கள் சிலர் அறிவுறுத்தியதால் அங்கே சொன்னதை இன்னும் எளிமையாகவும் விளக்கமாகவும் சொல்ல அடியேன் முயல்கிறேன்.

மாத: ஸமஸ்த ஜகதாம்: எல்லா உலகங்களுக்கும் தாயே!

அம்மா அப்பா இருவரும் கண்கண்ட தெய்வங்கள் என்பது நம் ஆன்றோர் வாக்கு. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்கிறாள் ஒளவைப்பிராட்டி. அம்மா அப்பாவை தெய்வமாக நினைப்பவர்கள் அதே நேரத்தில் தெய்வ தம்பதியரான திரு மாலையும் பார்வதி பரமேஸ்வரரையும் அம்மையப்பராக நினைப்பதும் உண்டு. அப்படி நமக்கு என்றும் நிலைத்த அன்னையாக இருக்கும் திருமகள் நமக்கு மட்டுமே அன்னையன்று; உலக மக்கள் எல்லாருக்கும் அன்னை என்பது இந்த சொற்றொடரைச் சொல்லும் போது தோன்றுகிறது.

அப்படி உலக மக்கள் எல்லோருக்கும் அன்னையான அவள் அடியேனுக்கும் அன்னை என்பதால் உலக மக்கள், மாக்கள் என எல்லாருமே எல்லாமுமே அடியேனின் உடன் பிறந்தவர்கள் என்பதும் இந்தச் சொற்றொடரைச் சொல்லும் போது தோன்றுகிறது.

நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் அல்லது செய்தல் ஓம்புமின் என்று மூத்தோர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அல்லது (கெட்டது) செய்தலே மிக இயற்கையாக அடியேனுக்கு அமைந்திருக்கிறது. அன்னையின் கருணை நல்லது செய்து அவள் மனம் மகிழும் படி செய்யும் பெரியோர்களுக்கு அமைவதும் அவள் அவர்களை அரவணைப்பதும் எளிதாக நடக்கும். அல்லதே செய்து பொழுதைக் கழிக்கும் நீசனான எனக்கு அன்னையின் அருள் அமையுமா என்ற ஐயத்தையும் உலக மக்கள் எல்லோருக்கும் அவள் அன்னை என்ற சொற்றொடர் நீக்குகின்றது. காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு என்று சொல்வார்கள். பசுங்கன்றின் அழுக்குகளை பசு தன் நாக்காலேயே நக்கி சுத்தம் செய்யும். அது போல் எல்லா உலகங்களுக்கும் அன்னையான திருமகள் அடியேனின் அழுக்குகளைக் கண்டு என்னைத் தள்ளாமல் அவள் அருளால் அந்த அழுக்குகளை நீக்கி என்னையும் அரவணைப்பாள் என்ற ஆறுதலும் இந்த சொற்றொடரால் கிடைக்கிறது.

ஜகத் என்ற வடமொழிச் சொல்லுக்குப் போவதும் வருவதுமாக இருப்பது என்று பொருள். ஸமஸ்த ஜகதாம் மாத: என்றதால் போவதும் வருவதுமாக இருக்கும் அசையும் பொருட்கள் அசையாப் பொருட்கள் எல்லாவற்றிற்கும் அன்னை என்பது புரிகிறது. அதே நேரத்தில் ஒரு பொருள் அசைவது, அசையாதது (உயிருள்ளது உயிரில்லாதது, அறிவுள்ளது அறிவில்லாதது போன்ற எதிர்மறைகளும் இதில் அடங்கும்) என்ற பிரிவினைகள் இன்றி எல்லாப் பொருட்களுக்கும் அன்னை திருமகள்; அவற்றிடையே உயர்வு தாழ்வு இல்லை என்ற தெளிவு பிறக்கிறது.

ஜகத் என்னும் சொல் போவதும் வருவதுமாக இருக்கும் நிலையா உலகைக் குறிக்கும் சொல். நேற்றிருந்தார் இன்றில்லை என்னும் பெருமை உடையது இந்த உலகம். இப்படி உலகம் நிலையில்லாதது என்ற அறிவை நினைவுறுத்துகிறது ஜகத் என்னும் சொல். ஆனால் அதே நேரத்தில் அன்னையைப் பற்றிச் சொல்வது இந்த நிலையில்லா உலகில் நிலைத்த சொந்தமாய் இருப்பவள் அன்னையே என்ற தெளிவைத் தருகிறது.

ஸமஸ்த ஜகதாம் என்று எல்லா உலகங்களையும் சொன்னதால் ஈரேழு பதினான்கு உலகங்களும் (மேல் உலகங்களான தெய்வீக உலகங்களும், கீழ் உலகங்களான பாதாள உலகங்களும்) சொல்லப்பட்டன. அதனால் அது சிறந்தது; இது சிறப்பில்லாதது என்ற எந்த வேறுபாடுகளும் இன்றி திருமகள் எல்லா உலகங்களுக்கும் தாய் என்பது சொல்லப்பட்டது.

சொல்லின் செல்வனாம் அனுமன் அன்னை சீதையை அசோக வனத்தில் கண்டபின் சேதியை எதிர்நோக்கிக் காத்திருக்கும் இராமபிரானிடம் வந்து சேதியைச் சொல்லும் போது எடுத்தவுடன் 'கண்டேன்' என்று தொடங்கியதைப் போல் இங்கே தாய் என்ற பொருள் தரும் 'மாத:' என்ற சொல்லில் தொடங்கி சொல்வதால் திருமகள் அடியேனின் நிலைத்த அன்னை என்ற பொருளைச் சுட்டிக் காட்டுகின்றது இந்தச் சொற்றொடர்.

***



அன்னை சீதையைத் தேடி எட்டு திசைகளிலும் சென்ற வானரர்கள் எல்லாம் திரும்பிவிட்டார்கள். தென் திசைக்குச் சென்ற வானரர்களில் சிலர் மட்டுமே இன்னும் வரவில்லை. திரும்பிய வானரர்கள் யாருமே அன்னையைக் காணவில்லை. பறவைகள் அரசரும் சக்ரவர்த்தி தசரதரின் நண்பருமான ஜடாயு சொன்ன குறிப்புகளின் படியும் சுக்ரீவனும் அவன் நண்பர்களும் கண்ட குறிப்புகளின் படியும் அன்னையை எடுத்துச் சென்றவன் அவளைத் தென் திசை நோக்கியே எடுத்துச் சென்றான் என்பதால் தென் திசைக்குச் சென்று இன்னும் திரும்பாத வானரர்கள் நல்ல செய்தியைக் கொண்டு வருவார்கள் என்று இராமபிரான் ஆவலுடன் வானத்தையும் தென் திசையையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டு நாட்களைக் கழித்துக் கொண்டிருக்கிறான்.

திடீரென்று எங்கே பார்த்தாலும் ஒரே பரபரப்பு. தென் திசைக்குச் சென்ற வானரர்கள் திரும்பிவிட்டனர். அவர்களுக்குத் தலைமை ஏற்றுச் சென்ற ஜாம்பவானும் அனுமனும் வருகிறார்கள். அவர்கள் முகத்தில் மகிழ்ச்சிக் குறி தெரிகிறது. ஏற்கனவே பொங்கிப் பிரவாகம் கொண்டு புயல் சின்னங்களை மனத்தில் கொண்டு இருந்த இராகவனும் அந்த மகிழ்ச்சிக் குறியைக் கண்டு மகிழ்ந்து உவகையும் ஆவலும் பிடித்துத் தள்ள திரும்பி வரும் வானரரை எதிர் கொண்டு அழைக்க முந்துகிறான். அந்த நேரத்தில் நாமாக இருந்தால் நாம் எவ்வளவு கஷ்டப்பட்டு கடலைக் கடந்து இலங்கினியைக் கொன்று குறுவுருவம் தரித்து இலங்கையில் புகுந்து என்ன என்னவெல்லாம் செய்து பின்னர் அன்னையைக் கண்டோம் என்று நம்மைப் பற்றியே நாம் பட்ட கஷ்டங்களைப் பற்றியே சொல்லிக் கொண்டிருப்போம். ஆனால் அனுமன் சொல்லின் செல்வன் அல்லவா? அவனுக்குத் தெரியாதா எதனை எப்போது சொல்லவேண்டும் என்று. அதனால் ஐயனை அந்த நிலையில் கண்டதும் அவன் வாயிலிருந்து வந்த முதல் சொற்றொடர் 'கண்டேன் கற்பினுக்கணியை' என்பதே.

ஜானகியைக் கண்டீர்களா என்று எல்லா வானரர்களையும் கேட்டுக் கேட்டு இல்லை என்ற சொல்லையே கேட்டறிந்த ஐயன் 'கண்டேன்' என்ற சொல்லைக் கேட்ட போது எவ்வளவு மகிழ்ந்திருப்பான்? இது வரை மலை போல் வளர்ந்து வந்த துயரங்கள் எல்லாம் ஒரே நொடியில் தகர்ந்து போயிருக்குமே! அப்படி நடக்க வேண்டும் என்பது தான் அனுமனின் ஆவலும். ஒரே சொல்லில் ஐயனின் துயரெல்லாம் தீர்த்துவிட்டான். சீதையைக் கண்டேன் என்று சொன்னாலும் சரியாக இருந்திருக்காது. சீதையை என்ற சொல்லைக் கேட்டவுடன் 'ஐயோ சீதைக்கு என்ன ஆயிற்று?' என்று ஐயன் கலங்க வாய்ப்புண்டு. அதனால் முதலில் கண்டேன் என்று சொன்னான் அனுமன். (அதே போல் மாத: என்று முதலில் சொல்லியிருக்கிறார்கள். அப்புறம் தான் ஸமஸ்த ஜகதாம் என்று சொன்னார்கள்).

அடுத்த கேள்வியாக 'சீதை நலமா?' என்பதற்கும் சுருக்கமாக 'கற்பினுக்கணியை' என்ற சொல்லால் சொல்கிறான் செஞ்சொற்பொற்கொல்லன் அனுமன். அன்னை நலமே என்பதும் அவள் கற்பினுக்கு எந்த இடையூறும் இல்லை என்பதையும் இந்தச் சொல் மிகத் தெளிவாக சொல்லிவிடுகிறது.

அதன் பின்னரே நடந்த எல்லாவற்றையும் ஆற அமர இருந்து பேசித் தெரிந்து கொள்கிறார்கள் அனைவரும்.

***

அடுத்த இரு பின்னூட்டங்களிலும் சொன்னவற்றை அடுத்தப் பதிவுகளில் சொல்கிறேன்.

Wednesday, November 22, 2006

ஸ்வாமியின் 81வது பிறந்த நாள்

சுவாமி என்றும் பாபா என்றும் சாய்ராம் என்றும் பக்தர்களாலும் நல்லெண்ணம் கொண்டவர்களாலும் அழைக்கப்படும் பகவான் சத்ய சாயி பாபாவின் பொற்பாதக் கமலங்களில் அவரின் 81 வது பிறந்த நாளான இன்று அடியேனின் ஆயிரம் கோடி வணக்கங்கள்.




போற்றி போற்றி ஓராயிரம் போற்றி உன்
பொன்னடிகளைப் போற்றி நிற்கின்றேன்.


இருவருடங்களுக்கு முன்பு சென்னைக்கு கிருஷ்ணா நதி நீரைக் கொண்டுவரும் கால்வாயை சுவாமி மேம்படுத்தி நீர்வரத்து ஏற்பாடு செய்ததைக் காட்டும் செய்தித் தொகுப்பு.

Tuesday, November 21, 2006

Friday, November 17, 2006

அருணாசலத்தைப் பசுமையாக்கல்

திருவண்ணாமலையை பசுமையாக்குவதற்கும் திருவண்ணாமலை சுற்றுவட்டாரத்தில் இருக்கும் நீரை நன்னீராக்கவும் ஒரு சிறு முயற்சி செய்யப்படுகிறது. அதனைப் பற்றிய படம் இது.



Tuesday, November 14, 2006

கண்ணன் அல்லால் தெய்வமில்லை!!!

நாலாயிர திவ்விய பிரபந்தம் - முன்னுரை
முனைவர் கண்ணன், கீல், ஜெர்மனி.
(Project Madurai)மதுரை மின் பதிப்புத் திட்டத்திற்காக எழுதியது


--------------------------------------------------------------------------------



1. இந்திய மெய்யியல் - ஒரு கண்ணோட்டம்
2. திருமால் வழிபாட்டின் வரலாற்றுச் சிறப்பு
3. வைணவ சித்தாந்தம்
4. சைவ-வைணவ பேதம் உண்மையா?
5. ஆழ்வார்கள் பெயர்க் காரணம், அவர்களின் சிறப்பு
6. ஆழ்வார்கள் காட்டும் வாழ்வு நெறி
7. பாசுரங்களின் சம காலப் பயன்பாடு




--------------------------------------------------------------------------------


1. இந்திய மெய்யியல் - ஒரு கண்ணோட்டம்

தொன்மையான இந்திய மெய்யியல் வரலாறை அறிந்து கொள்ளும் போது இந்திய உள்ளத்தின் பரிணாம வளர்ச்சியையும் (evolutionary history) புரிந்து கொள்ள முடிகிறது. முடிந்த அளவு, இந்திய மெய்யியல் ஞானிகள் மெய்யியல் புரிதலை (ஞானத்தை) எல்லோரும் சுதந்திரமாக அணுகும் வண்ணம் திறந்த புத்தகம் போல் அமைத்தது மட்டுமல்லாது, இறைவனை அடைவதற்கான வழியில் அளப்பரிய சுதந்திரத்தையும் அள்ளி வழங்கி உள்ளனர். இந்திய மதம் என்றொன்று "இந்து மதமாக" ஸ்தாபனப் படமுடியாமல் இன்றுவரை இருப்பதற்கான அடைப்படைக் காரணி இந்த பரந்த, சுதந்திர மனப்பான்மைதான்.

எப்படி மனிதர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறாக உள்ளோமோ, அதுபோல் நாம் வழிபடும் வழிகளிலும் கிளைகள் இருப்பதை நம் மூதாதையர் புரிந்து அனுமதித்து உள்ளனர். அதன் வெளிப்பாடுதான், இந்தியர்கள் வழிபடும் பல் தேவதை வழிபாடுகள் (இஷ்ட தேவதா நிஷ்டை). எப்படி ஆறுகளின் தோற்றுவாயும், வழியும் வேறு பட்டு இருந்தாலும் இறுதியில் கடல் என்ற ஒன்றில் கலக்கிறதோ அதுபோல் பல்வேறு வழிபாட்டு முறைகளும் இறைமை என்ற ஒன்றில் கலப்பதை அறிந்து, உணர்ந்திருந்தனர் நம் முன்னோர்கள்.

இருபதாம் நூற்றாண்டின் பரிணாமவியல் விதியின் படி வேற்றுமை விரிந்து இருக்கும் போதுதான் உயிர்த் தொடர்ச்சி காலத்தை வெல்கிறது. (variation is the basis of evolution). இந்திய மெய்யியல், இன்றளவும் காலத்தை வென்று நிற்பதற்கு அதன் பல நோக்கு அணுகு முறைதான் காரணம் என அறியலாம்.
2. திருமால் வழிபாட்டின் வரலாற்றுச் சிறப்பு:

இதனால்தான், தொன்மையான தமிழ் இலக்கியங்கள் தமிழ் நில அமைவை (tamil landscape) விளக்கிச் சொல்லும் போது மரம் செடி, கொடிகள் மாறுபடுவது போல் பல்வேறு நில அமைவுகளுக்கு ஏற்றவாறு கடவுளரையும் வெவ்வேறாய் வைத்தன. இதன் உளவியல் சூட்சுமத்தை இருபதாம் நூற்றாண்டு மனோதத்துவியல் உணர்ந்து பாராட்டுகிறது.

ஐந்திணைக் கோட்பாடு என்றழைக்கப் படும் இத்திணை வகுப்பில் முல்லைத் தெய்வமாய் அறிமுகமாகிறான் கண்ணன். முல்லை என்பது காடும், காடு சார்ந்த பகுதியைக் குறிக்கும். மரங்கள் அடர்ந்த நில அமைவுடன் கண்ணன் என்னும் தெய்வம் எவ்வாறு ஒத்துப் போகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டுமெனில், நம்மாழ்வார் இறைவனை எவ்வாறு தனது அனுபூதி நிலையில் உணர்கிறார் என்பதைப் பார்க்க வேண்டும்.

"வேரும் வித்துமின்றித் தானே
தன்னிலை யறியாத் தொன் மிகு பெரு மர"

என்று வியக்கிறார் நம்மாழ்வார்.

இங்கு திருமாலை மரமாக உருவகிக்கிறார். தொன் மரம் என்பதை - கால அளவிற்கு (beyond time) உட்படாதது என்று புரிந்து கொள்ளவேண்டும்; மிகு மரம் என்றால் - வெளி அளவுக்கு (beyond space limitation) உட்படாதது என்றும்; பெரு மரம் என்பதால் - உருவ அளவுகளைக் கடந்தது (immeasurable) என்றும் ஆகிறது.

அதாவது மெய் பொருள் என்பது கால, வெளி, அளவுகளைக் கடந்த ஒன்று என்று சொல்கிறார். தன்னை அண்டியவற்கு தண்ணிழல் தருவது மரம். நல்லவர், கெட்டவர் என்று பேதம் பார்க்காது நிழலும், பழமும் (பரமபதம்) தருவது மரம்.

மரம் என்ற உருவகத்திற்கு ஒரு உருவம் கொடுக்க முயலும் போது மரங்கள் அடர்ந்த காடும், காடு சார்ந்த நிலமும் நினைவுக்கு வருவது தவிற்க இயலாதது. இப்படித்தான் தொல்காப்பிய பாடலும் கண்ணனை முல்லைத் தெய்வமாக உருவகித்து தமிழ் உலகிற்கு அளிக்கிறது.

மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்.....
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே.

கடைச் சங்க நூலான புறநானூற்றில் கடவுள் வாழ்த்துப் பாடும் வழக்கம் இருப்பது அறியக் கிடைக்கிறது. அரி, அரன், அயன் என்னும் முத்தெய்வங்களில் ஒன்றை முதன்மைப் படுத்தி வழிபடும் வழக்கம் இருந்து வந்திருக்கிறது. இங்கு அரி என்பது திருமாலையும், அரன் என்பது சிவனையும், அயன் என்பது பிரம்மாவையும் குறிக்கும். கடைச் சங்கம் நிலைப்படும் முன் இடைச் சங்கமும், அதன் முன் முதல் சங்கமும் இருந்த தொன்மையான இலக்கிய பாரம்பரியம் நமது. இக்கால கட்டத்தில் வேளிர் குல மக்களுடன் கண்ணன் தமிழ் சங்கத்தை நிறுவகித்த பழம் செய்தி ஒன்றும் உள்ளது.

சங்க நூல்களில் மிகவும் பெருமை வாய்ந்ததும், காலத்தை வென்று இன்றளவும் சிறப்புடன் போற்றப் படுவதும் திருக்குறள் ஆகும்.வள்ளுவர் வாழ்ந்த காலத்தில் திருமால் வழிபாடு சீறும், சிறப்புடன் இருந்திருப்பதை பரணர் என்னும் சங்கப் புலவர் இயற்றிய ஒரு குறள் சொல்லும்:

தேவரில் திருமால் எனச்சிறந்த தென்பவே
பாவிற்கு வள்ளுவர் வெண்பா

இதன் பொருள், எவ்வாறு திருமால் என்பவன் வணங்கும் தெய்வங்களில் மிக உயர்ந்தவனாக உள்ளனோ, அதுபோல் தமிழ் வெண்பாக்களில் சிறந்து விளங்குகிறது வள்ளுவரின் குறள் என்பதாகும்.

3. வைணவ சித்தாந்தம்

வைணவ சம்பிரதாயப்படி தத்துவம் மூன்று என்பர். அவை சித்து, அசித்து, ஈசுவரன். சித்து-உயிர்; அசித்து-மக்கள், விலங்கு, இவைகளின் உடம்பு மற்றும் உலகப் பொருட் களுக்கு காரணமான பிரகிருதி. இதை "மூலப்பகுதி" என்பர். ஈசுவரன்-இறைவன். இவை தனித்தனி இயல்புடையவை, என்றும் அழிவில்லாமல் இருப்பவை. எக்காலத்தும் இவை சேர்ந்தே இருக்கும் தன்மையாயின. இவற்றுள் இறைவன் சித்து-அசித்து இவையுள் இயங்கு சக்தியாக (அந்தர்யாமியாக) இருக்கிறான். இது ஒரு "சூக்கும நிலை" யாகும். மூலப்பொருள் விரிவடைந்து விலங்கு, மக்கள் என்று பரிணாமமுறுகிறது. உயிர் தனது புண்ணிய, பாவங்களுக்கேற்ப வெவ்வேறு உடலை (உயிர் நிலையை) அடைகிறது. அதுவே உயிருக்கு பிறப்பாகும். விகாரமடையும் (மாறுதலடையும்) மூலப்பகுதியை "ஸ்தூல நிலை" என்பர். அதாவது பார்த்து, உணர்ந்து, அளந்து பார்க்கக்கூடிய நிலை. இந்நிலைக்கு பின் புலமாயுள்ள உயிருக்கு இத்தகைய விகாரமில்லை. எனினும், அது தான் செய்த பிறவிப் பயனாய் இவ்வுடம்பின் வழி வரும் இன்ப, துன்பங்களைத் துய்க்கிறது.

இவ்வுடம்பினுள்ளும், உயிரினுள்ளும் அந்தர்யாமியாக உள்ள இறைவன், உடம்பின் விகாரங்களையும், உயிரின் இன்ப-துன்பங்களையும் அடைவதில்லை. இறைவன் வினை காரணமின்றி தன் விருப்பினால் இவ்விரண்டினுள்ளும் குடியிருப்பதால் இவ்விரண்டின் தன்மைகளையும் அடைவதில்லை. உயிர் மூலப்பொருளின் விகாரமாகிய உடம்பைக் கொண்டிருத்தல் போல் இறைவன் உடம்பு, உயிர் இவையிரண்டையும் தனது உடம்பாகக் கொண்டுள்ளான். இவ்வாறு, இம்மூன்று தத்துவங்களும் ஒன்றை விட்டொன்று பிரியாமல் எக்காலத்தும், தத்தம் இயல்பை விடாமல் ஒன்று சேர்ந்துள்ளன என்பது திருமாலை வழிபடும் வைணவர்களின் கொள்கையாகும்.

இக்கொள்கையை விளக்க வைணவ துறவிகள் மூன்று கோல்களை ஒன்றாகப் பிணைத்து கையில் வைத்திருப்பர். இதை "முக்கோல்" என்பர். துறவிகள் இவ்வாறு முக்கோல் ஏந்தும் வழக்கம் தொன்று தொட்டு இருந்து வந்திருப்பதை கீழ் கண்ட தொல்காப்பிய செய்யுள் வரிகளால் அறியலாம்:

"நூலே கரகம் முக்கோல் மணையே
ஆயுங் காலை அந்தணர்க் குரிய"

இங்கு அந்தணர் என்பது முற்றும் துறந்த முனிவரைக் குறிக்கிறது.

திருமாலை வேதத்தின் வித்தாக, வேத முதல்வனாகக் காணும் நோக்கு பிற்சங்கப் பாடலான நற்றிணைப் பாடலில் வருகிறது. அது திருமாலை உலகின் காரணப் பொருள் என்றும், அவர் எங்கும் பரந்து நிற்கும் வியாபக நிலை உடையவர் என்றும், ஒவ்வொரு பொருளிலும் கரந்து நிற்கும் அந்தர்யாமி என்றும் சொல்கிறது:


மாநிலஞ் சேவடியாக.....
பசுங்கதிர் மதியமொடு சுடர் கண்ணாக
வியன்ற வெல்லாம் பயின்றகத் தடங்கிய
வேத முதல்வ னென்ப
தீதற விளங்கிய திகிரி யோனே


இச் சங்க வழியில் தோன்றுகின்றனர் ஆழ்வார்கள் என்று பின்னால் அறியப் படும் தமிழ்க் கவிகள். இவர்கள் இயற்றிய கவிதைகளின் தொகுப்பே நாலாயிர திவ்யப் பிரபந்தம் ஆகும்.

வைணவம் என்பது இராமானுசர் ஆரம்பித்து வைத்தது என்பது போன்ற பிழையான கருத்தொன்று தமாழகத்தில் உண்டு. அது திருத்திக் கொள்ள வேண்டியது.

4. சைவ-வைணவ பேதம் உண்மையா?

அரி, அயன், அரன் என்னும் முதல் மூவரில் யாராவது ஒருவரை முதன்மைப் படுத்துவது ஒரு இலக்கிய, மெய்யியல் மரபு. அயன் என்னும் பிரம்மாவை முதன்மைப் படுத்துவது வழக்கொழிந்து போய்விட்டது. ஆயின் சிவனையும், திருமாலையும் முழு முதற் கடவுள் என்று வழி படுவது இன்றளவும் உள்ளது.

"கறுத்த மனமொன்றும் வேண்டா
கண்ணன் அல்லால் தெய்வமில்லை,
இறுப்பதெல்லாம் அவன் மூர்த்தி
யாயவர்க் கேயி றுமினே!"

என்று திருவாய்மொழியில் வருகிறது ஒரு பாசுரம். சடகோபன் அடித்துச் சொல்கிறார் "கண்ணன் அல்லால் தெய்வமில்லை, இறுப்பதெல்லாம் அவன் மூர்த்தி" என்று. இதைப் படித்து விட்டு திருமூலரின் திருமந்திரம் படித்தால் அவரும் இவருக்கு சளைக்காமல்:

சிவனொடுஒக் கும்தெய்வம் தேடினும் இல்லை
அவனொடுஒப் பார் இங்கு யாவரும் இல்லை
புவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும்
தவனச் சடைமுடித் தாமரை யானே.

என்கிறார்.

இதைப் புரிந்து கொள்வதற்கு நுண்ணிய நோக்கும், புத்தி கூர்மையும் வேண்டும். இவர்கள் இருவர் சொல்வதும் சரி. ஏனெனில் கண்ணன் ஒருவர் தெய்வமெனின் கண்ணன்தான் நினைவில் நிற்க வேண்டும். சிவனை முழு முதற் கடவுள் என்று கொள்பவர்க்கு அவனே முற்றும், முதல்வனாய் தெரிய வேண்டும். அதுதான் உண்மையான பக்தி.

இதற்கும் பண்டைய தமிழ் மண்ணின் காதல் மரபுகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. கற்பு என்பது தமிழ் பண்பாட்டின் முக்கிய கூறு. கற்பு என்பது இருபாலருக்கும் பொது. கற்பு என்பது களவியலுக்கு மட்டுமல்ல, மெய்யியலுக்கும் அது பொருந்தும். பக்தி செய்வது, காதலின் உன்னத பரிமாணம். காதலில் கற்பு இருப்பது போல் பக்தியிலும் கற்பை வைத்தனர் நம் முன்னோர். இந்தக் கண்ணோட்டத்துடன் நாம் இவ்வியலக்கியங்களை அணுகினால் முழு முதற் கடவுள் யார் என்ற சண்டையில் இறங்காமல், முழு முதற் கடவுளின் தேவையை உணர்ந்து பக்தி செய்யத் தொடங்குவோம், அது எந்தத் தெய்வமாக இருந்தாலும்! எப்படி அவரவர் கணவர்/மனைவி அவரவருக்கு உயர்வோ அதுபோல்தான் அவரவர் தெய்வமும்.

இந்த சுதந்திரத்தையும் வழங்குகிறது இந்திய மெய்யியல். சுதந்திரம் என்பது தான்தோன்றித் தனமாக நடப்பது அன்று. சுதந்திரம் என்பது பொறுப்பு அறிந்து நடந்து அதன் பயனாய் விளையும் இன்பத்தை அனுபவிப்பது ஆகும். அதே போல் இந்திய மெய் பொருள் தேடலின் இரண்டு முக்கிய வழிகளான சைவம், வைணவம் இவை இரண்டையும் இவ்வாறே காண வேண்டும். எப்படி மக்களாட்சி முறையில் சில நேரங்களில் சுதந்திரம் சரியாக கையாளப் படுவதில்லையோ அதுபோல் தமிழக சமய வரலாற்றில் சைவ-வைணவ பேதம் தலை தூக்கிய காலங்கள் உண்டு. அது இன்றைய இருபதாம் நூற்றாண்டுத் தமிழனுக்கு அவசியமில்லாத ஒன்று.

5. ஆழ்வார்கள் பெயர்க் காரணம், அவர்களின் சிறப்பு

ஆழ்வார்கள் என்ற பெயர் காரணம் மிகவும் சுவையானது. வேதம் என்ற ஆரியச் சொல்லை விட "மறை" என்ற தமிழ்ச் சொல் பொருள் நிறைந்தது. மறைந்து உள்ள பொருளைப் பற்றியது மறை. மறை தேடும் ஞானம் எல்லோருக்கும் வருவதில்லை.

மறைந்து கிடக்கின்ற எல்லாப் பொருள்களையும் ஆழ்ந்து அறியும் தன்மை உடையவர்கள் ஆதலால் ஆழ்வார் எனப்படுவர். பண்டைய உரை ஆசிரியர்கள் ஆழ்வார்களை, "எம்பெருமானுடைய மங்கல குணங்களில் ஆழங்காற்படுபவர்கள்" என்றனர். ஆழங்காற்படும் அறிவாவது, வேதத்தாலும் அளவிட்டறிய முடியாத எம்பெருமானின் எல்லாக் குணங்களையும் அவனருளால் அறிந்து அனுபவிக்கும் ஞானமாகும்.

இத்தகைய ஆழ்ந்த அறிவுடைய ஆழ்வார்கள் செய்வித்ததுதான் தெய்வத் தமிழ் பாசுரங்கள். ஆழ்ந்தறியத்தக்க சொல் நயம், பொருள் நயம் உடைய கவிதைகள் அவை. இவற்றிற்கு பொருள் சொல்ல முற்பட்டதன் விளைவுதான் வைணவ பரம்பரையில் உள்ள சுவை மிகுந்த வியாக்கியானங்கள். வியாக்கியானங்களுக்காக பாசுரங்களா? இல்லை, பாசுரங்களுக்காக வியாக்கியானமா? என்று மயங்கும் அளவில் ஒன்றை ஒன்று சார்ந்து, ஒன்றை ஒன்றும் விஞ்சும் தன்மையாயின.

உதாரணமாக:

தொண்டர் அடிப் பொடி ஆழ்வாரின், "திருமாலை" யில் வரும் பாடலின் பொருளைப் பாருங்கள்:

பச்சை மா மலைபோல் மேனிப்
பவள வாய் கமலச் செங்கண்
அச்சுதா! அமரர் ஏறே!
ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர, யான் போய்
இந்திர லோகம் ஆளும்
அச்சுவை தரினும் வேண்டேன்
அரங்கமா நகர் உளானே!


பசுமையான மரங்கள் சூழ்ந்த வனத்தை உடையவனாகையால் அவனை பச்சை மா மலை போன்ற மேனி என்கிறார். மரம் தண்ணிழல் கொடுத்து காப்பதோடு நிற்பதில்லை. "ஆயர் தம் கொழுந்தே" என்கிறார் ஆழ்வார். கொழுந்து மரத்தின் உச்சியில், தளிர்க்கும் கிளையில் இருப்பது. ஆயர் குலத் தலைவனான கண்ணனை கொழுந்து என்பது சரிதான். கொழுந்து மென்மையானது, மிருதுவானது, பார்க்க அழகுள்ளது - முல்லைத் தலைவனும் அப்படி என்பதும் பொருந்துகிறது. அதற்கும் மேலே, அடி வேரில் புண் என்றால் முதலில் வாடுவது கொழுந்துதான். மெய் பொருளின் காருண்ய கிருபையைக் காட்ட இதற்கு மேல் ஒரு உதாரணம் தர முடியுமா என்று தெரிய வில்லை. அடியார்களின் துன்பம் காண்கையில் முதலில் கண்ணீர் சிந்துபவன் கண்ணன் என்று வெகு அழகாக சொல்லி வைத்தனர் பண்டைத் தமிழர். இப்பாடலையும் முன்பு நம்மாழ்வார் உவமைப் படுத்திய "தொன் மிகு பெரும் மரம்" என்பதையும் சேர்த்து ரசிக்க முடியும்!

திருக்குறளுக்கு எழுந்த உரைகளில் தனிச் சிறப்பு வாய்ந்தது பரிமேல் அழகர் உரையாகும். அதில் இறைமாட்சி அதிகாரத்தில் அதிகாரப் பொருளை விளக்குமிடத்து "திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே என்னும்" என்று பெரியாரும் பணித்தார் என்று சொல்கிறார். பெரும் பாலான இடங்களில் "பிறர் கூறுவர், பிறர் கூறுவர்" என்று சொல்லும் பரிமேல் அழகர் ஆழ்வார் பாசுரத்தை மேற் கோள் காட்டும் போது, "பெரியாரும் பணித்தார்" என்று விநயத்துடன் கூறுவதிலிருந்து ஆழ்வார்களை தமிழகம் மிக உயர்ந்த இடத்தில் வைத்து பெரியார்-பேரறிவினையுடையார் என்று வழங்கி வந்தது என்று தெரிகிறது.

ஆழ்வார்கள் பன்னிருவர் என்றும், பதின்மர் என்றும் வழங்கப் படுவர். தமிழக ஐதீகப்படி இவர்கள் திருமாலின் கருத்துப்படி-அவரது ஆபரணங்களாக இருந்த இவர்கள்-அவதாரம் எடுத்தவர்கள் என்றாகிறது. கவிச்சக்கிரவர்த்தி கம்பனே இவர்களை அவ்வாறுதான் கொள்கிறான் என்பது:

"பாவகத்தால் தன் திருவவதாரம் பதினொன்றென்றி...." (சடகோபர் அந்தாதி)

என்ற வரிகளால் அறியப்படும். இவர்கள், பொய்கையார், பூதத்தார், பேயார், திருமழிசை, மாறன் (நம்மாழ்வார்), மதுரகவி, சேரர் பிரான் (குலசேகரன்), திருமங்கை மன்னன், பட்டர்பிரான் (பெரியாழ்வார்), கோதை நாச்சியார் (ஆண்டாள்), தொண்டர் பாதப் பொடி (தொண்டர் அடிப்பொடி), பாணன் (திருப்பாணாழ்வார்) ஆகியோர் ஆவர்.

இவர்கள் அருளிச் செய்தவை நாலாயிர திவ்யப் பிரபந்தங்கள் ஆகும். கி.பி. 10 நூற்றாண்டில் வாழ்ந்த நாதமுனி இவற்றைத் தொகுத்தார். அத்துடன் கீழ்வரும் 4 பகுதிகளாக வகைப் படுத்தினார்.

1. முதலாயிரம்
2. திருமொழி
3. திருவாய்மொழி
4. இயற்பா

இப்பாசுரங்களின் மொத்த எண்ணிக்கை 3776 ஆகும். இராமானுசர் காலத்தில் வாழ்ந்த திருவரங்கத்து அமுதனார் இயற்றிய இராமானுசர் நூற்றந்தாதியையும் சேர்த்து நாலாயிரம் என்பர். விசிட்டாத்துவைதக் கோட்பாடுகளை நிறுவி, வைணவ சமயத்தினை மக்கள் கூட்டத்திடம் எடுத்துச் சென்று, தம் வாழ்நாள் முழுவதும் வைணவத்திற்காகவே பணி செய்த எம்மெருமானாரின் பணியைப் போற்றுமுகத்தான் 13 நூற்றாண்டில் வாழ்ந்த வேதாந்த தேசிகர் இதனை மற்ற ஆழ்வார் பாசுரங்களுடன் சேர்த்தார்.
ஆழ்வார்களில் மிகுதியான (1296) பாசுரங்களைப் பாடியவர் மாறன், பாராங்குசன், சடகோபன் என்ற பெயர்களில் வழங்கும் நம்மாழ்வார் ஆகும். அடுத்து வருபவர் (1137) திருமங்கை மன்னன் . ஆழ்வார்களில் தலை சிறந்தவராக நம்மாழ்வார் கொண்டாடப் படுகிறார். இருக்கு, யஜூர், அதர்வண, சாம வேதங்களின் பிழிவாகத் திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி ஆகியவற்றை முறையே அருளிச் செய்தார் நம்மாழ்வார். திருவாய்மொழி (தெய்வப் பேச்சு) பகவத் விஷயம் என்று அழைக்கப் படுகிறது. இராமானுசர் தம் முதன்மைச் சீடரான திருக்குருகைப் பிரான் பிள்ளானை திருவாய்மொழிக்கு ஓர் உரை எழுதுமாறு பணித்தார். இதைத் தொடர்ந்து பல உரைகள் இதற்குத் தோன்றின. நம்பிள்ளை உபதேசித்தவற்றை அடிப்படையாகக் கொண்டு வடக்குத் திருவீதிப் பிள்ளை எழுதியருளிய "ஈடு" (முப்பதாயிரப் படி) மிகவும் கொண்டாடப் படும் உரையாகும். வியாக்கியானச் சக்கிரவர்த்தி என்று புகழ் பெற்ற பெரியவாச்சான் பிள்ளை என்பவர் நாலாயிரம் பாசுரங்களுக்கும் உரை எழுதியுள்ளார்.
இராமானுசருக்குப் பின் விசிட்டாத்துவ சிந்தனையாளர்களில் மிகவும் புகழ் பெற்ற வேதாந்த தேசிகன், "வடமொழி, தமிழ் ஆகிய இருமொழி வேதங்களிலும் நன்கு பயிற்சி பெற்றுக் கொள்வது கடினம் என்று ஒரு வைணவர் நினைத்தால் அவர் ஆழ்வார் பாசுரங்களான திராவிட வேதத்தை மட்டும் நன்கு கற்றுத் தோய வேண்டும்" என்று கூறுகிறார். தமிழில் உள்ள ஆழ்வார் பிரபந்தங்களின் தத்துவ உண்மைகள் சிலவற்றை விளக்க (வடமொழியாளர்களும் புரிந்து திளைக்க வேண்டும் என்பதற்காக- "தெள்ளுற்ற தமிழ் அமுதின் சுவை கண்டார், இங்கமரர் சிறப்புக் கண்டார்" என்றபடி) "ஸ்ரீ திராவிடடோப நிஷத்தாத்பர்ய ரத்னாவளி", "ஸ்ரீ திராவிடோபநிஷத் சாரம்", "ஸ்ரீ மதுரகவி ஹிருதயம்", "முனி வாகன போகம்" ஆகிய நூல்களை வடமொழியில் செய்துள்ளார்.
தம்முடைய 1137 பாடல்களுள் ஏராளமான சோதனை முயற்சிகளைக் கவிதை வடிவில் செய்தவர் திருமங்கை மன்னன். அதனாலேயே அவரை "ஆசுகவி", "சித்திரக்கவி", "மதுரக்கவி", "வித்தாரக்கவி" என்பர். அவருடைய நடையில் எளிமையான ஓட்டமும், கவித்துவமும் இருக்கும். அவருடைய சித்திரக்கவிப் புலமையை திருவெழுகூற்றிருக்கை புலப்படுத்தும். அப்பாடல் முழுவதும் ஒரு தேரின் வடிவைப் புலப்படுத்தும். தமிழ் கவிதை மரபில் சோதனை முயற்சிகளைச் செய்தோருள் திருமங்கை மன்னன் முன்னோடிக் கவிஞர் எனலாம்.
பிள்ளைத் தமிழ் என்ற தமிழ்க் கவிதை மரபைத் தோற்றிவித்தவர் விட்டுசித்தர் என்றும், பட்டர்பிரான் என்றும் போற்றப்படும் பெரியாழ்வார் ஆகும். கண்ணனைத் தன் மகனாகப் பாவித்து இவர் செய்வித்த ஈரப் பாசுரங்கள் பிள்ளைத் தமிழுக்கோர் முன்னோடியாக அமைந்தன.
ஆழ்வார்கள் பன்னிருவரில் கோதை நாச்சியார் என்றும், சூடிக் கொடுத்த சுடர் கொடி என்றும் போற்றப்படும் ஆண்டாள் ஒரு பெண் கவி. இவர் செய்வித்த கவிதையில் பெண்மையின் ஏக்கம் முழுவதும் தொனிக்கும் கவிதைகள் ஏராளம். ஆழ்வார்களின் கடைக்குட்டியான இவர் மற்ற ஆழ்வார்களை நினைவு கூர்ந்தும், பரந்தாமனான கண்ணனை துயில் எழுப்பும் வண்ணமும் செய்வித்த "திருப்பாவை" முப்பது பாடல்களும் தமிழ் மரபின் விழுமியச் செழுமைக்கு உச்ச உதாரணமாகத் திகழ்கின்றன. அதனால்தான்:

பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்
வேதம் அனைத்துக்கும் வித்தாகும் கோதைதமிழ்
ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பதும் வம்பு

என்று சொல்லிப் போயினர்!

6. ஆழ்வார்கள் காட்டும் வாழ்வு நெறி

முதல் மூவர் என்றழைக்கப்படும் பொய்கை, பூதத்தார், பேயார் என்பவர்கள் காலத்தால் முந்திய ஆழ்வார்கள். வைதீக மதங்களை புறந்தள்ளிப் பிறந்த சாக்கியம், பெளத்தம், சமணம் போன்ற மதங்களின் ஆள்கையில் தமிழகம் இருந்த காலத்தில் வாழ்வின் குதூகலம் மறக்கப் பட்டு, அறம் என்பது மட்டும் உயர்த்தி பேசப்பட்டு தமிழ் வாழ்வு சோர்வுற்றிருந்த வேளையில் தோன்றுகின்றனர் இம்மூவரும். இவர்கள் வாழ்வு சுவைக்கக் கூடியது, வாழ்வு கன்னல் போல் இனிப்பானது, இறைவன் வாழ்வின் பின்புலமாக அமைந்து வாழ்வுக்கு சுவை தருகிறான் என்று பாடி சங்க வாழ்வியல் மரபை மீட்டுத் தந்தனர்.
பேயாழ்வார் வேங்கடேசப் பெருமான் மீது பாடும் கீழ்காணும் பாசுரம் சைவ-வைணவ ஒற்றுமையின் திலகமாகப் பொற்றப்படுகிறது:

தாழ்சடையும் நீள்முடியும், ஒண்மழுவும் சக்கரமும்,
சூழ்அரவும் பொன்நாணும் தோன்றுமால் - சூழும்
திரண்டுஅருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு
இரண்டுஉருவும் ஒன்றாய் இசைந்து


இவர்கள் காலத்தின் பின் பகுதியில் தோன்றும் திருமழிசைப் பிரான் சித்தர்கள் மரபில் கவிதை யாத்து ஒரு வைணவ சித்தராக பரிமளிக்கிறார்.
திருமங்கை மன்னன் திருவரங்கத்து கோவில் மதில் சுவரைக் கட்டும் காலத்தில் தொண்டர் அடிப்பொடி இருந்தார் என்று குருபரம்பரைக் கதைகள் கூறும். திருமங்கை மன்னன் ஒரு குறுநில மன்னாய் இருந்து திருமால் அருள் பெற்று "குலம் தரும் செல்வந்தந்திடும்" என்று நாராயண மந்திரத்தின் பெருமை பேசும் பாசுரங்களைத் தருகிறார். தொண்டர் அடிப்பொடியோ கண்ணன் கழல் தொழும் அடியார்களுள் சாதி வித்தியாசம் கிடையாது என்று சூழுரைக்கும் பாசுரங்களை அருளிச் செய்கிறார்.

அமரவோ ரங்கமாறும்
வேதமோர் நான்கு மோதி
தமர்களில் தலைவராய
சாதியந்தணர்களேலும்
நுமர்களை பழிப்பாராகில்
நொடிப்ப தோரளவில் ஆங்கே
அவர்கள்தாம் புலையர் போலும்
அரங்கமாநகருளானே!


என்ற பாடலை மேற்கோள் காட்டி, இது திருப்பாணாழ்வாரை சுட்டும் முகமாக தொண்டர் அடிப்பொடி செய்வித்த பாசுரம் என்று மு.ராகவவையங்கார் கருதுகிறார்.
திருப்பாணாழ்வாரின் சரிதமோ, தெய்வ பக்தி செய்வதற்கு சாதி ஒரு தடையில்லை என்று சொல்கிறது. அந்தணர் அவமதித்த பாணரை தோள் மீது சுமந்து தன் சந்நிதிக்கு வருமாறு ஆணையிட்டதோடல்லாமல், அவரை தன்னுள் ஐக்கியப் படுத்தியது அரங்கனின் அன்பு அனைவருக்கும் சமம் என்பதைக் காட்டுகிறது. இவர் செய்வித்த

கொண்டல் வண்ணனைக் கோவலானாய் வெண்ணெய்
உண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானை
அண்டர் கோன் அணி அரங்கன் என் அமுதினைக்
கண்ட கண்கள், மற்றொன்றினைக் காணாவே!


என்ற பாசுரத்தைப் பாடி கண்ணீர் வாராத மனிதர்தாம் உளரோ?
குலசேகரர் சேர மன்னர். இவர் வடமொழியில் "முகுந்த மாலா" என்னும் பக்தி நூலைச் செய்தவர். திருவரங்கத்து எம்பெருமானை வணங்குவதற்காக அவர் மணி மகுடம் துறந்தவர். இராமர் மேல் மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர் செய்வித்திருக்கும் "இராமனின் திருப்பள்ளி எழுச்சி" வெங்கடேச சுப்ரபாதத்திற்கு முன்னோடி.

கம்பமத யானை கழுத்தகத்தின் மேலிருந்து
இன்பமரும் செல்வமு மிவ்வரசும் யான்வேண்டேன்
எம்பெருமா னீச னெழில்வேங் கடமலைமேல்
தம்பகமாய் நிற்கும் தவமுடையே னாவேனே


என்று இவர் பாடிய பாசுரங்கள் பக்தியின் எல்லை நிலமாகக் கருதப் படுகிறது.
மதுர கவியாழ்வார், நம்மாழ்வார் பிறந்து தவமிருக்கும் திருக்குருகூர் திசை தெரிந்த ஔ¢ கண்டு வந்து அவர் சரண் புகுகிறார். நம்மாழ்வார் ஆக்கித்தந்த பாசுரங்கள் அனைத்தையும் உடனிருந்து பதிப்பித்து,

இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான்,
நின்று தன்புக ழேத்த வருளினான்,
குன்ற மாடத் திருக்கு கூர்நம்பி,
என்று மென்னை யிகழ்விலன் காண்மினே.


என்று இறைவனைப் பாடாது தன் குரு சரணத்தை மட்டும் பாடிய மதுரகவியாழ்வார் குரு சரணம் என்பது இறைவனின் சரணத்திற்கு ஒப்பாகும் என்று உலகிற்கு காண்பிக்கிறார்.

7. பாசுரங்களின் சம காலப் பயன்பாடு


இன்றைக்கு சுமார் 1500 வருடங்களுக்கு முன்பு இயற்றிய இப்பனுவல்கள் இன்றளவும் இரசிக்கத் தக்கதாய் இருப்பது என்றுமுள தமிழின் இளமைக்குச் சான்று.
இப்பனுவல்களை உரையின் துணையின்றியே வாசித்துப் புரிந்து கொள்ளுமாறு ஆழ்வார்கள் அமைத்திருப்பது அது காலத்தைக் கடந்து தமிழனுக்கு என்றும் உற்ற துணையாய் இருக்க வேண்டும் என்ற பரந்த உள்ளத்தால் அன்றி வேறில்லை.
எனினும் நம் பூர்வாசிரியர்கள் பல உரைகளை அருளித் தந்துள்ளனர். அவைகள் பெரும்பாலும் ஆரியமும்-தமிழும் கலந்த- அக்காலத்து- மணிப்பிரவாள நடையில் அமைந்துள்ளன. திருவாய் மொழிக்கான அத்தகைய உரையை முழுவதும் தமிழ் படுத்தி சென்னைப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது. உரைவளம் வேண்டுவோருக்கு அதுவொரு விருந்து.
இசையுடன் அமைத்து பாடும் வண்ணமே பாசுரங்கள் அமைந்துள்ளன. நல்ல குரல் வளம் உள்ளவர்கள் பாசுரங்களைப் பாடி "நாத உபாசனை" பண்ணலாம். பாசுரங்களுக்கான பண்கள் சில பதிப்புகளில் காணக் கிடைக்கின்றன.
பாசுரங்கள் "அரையர் சேவை" என்ற கூத்து வடிவிலும் இரசிக்கப் படுகிறது. பொதுவான ஆர்வக் குறைவால் ஒரு சில கோவில்களில் மட்டும் நடைபெறும் இக்கலை வடிவம் விரைவாக மறைந்து வருகிறது. கர்னாடக சங்கீதத்திற்கு வெளிநாட்டுத் தமிழர்கள் ஒரு புதிய தளம் அமைத்துத் தந்தது போல் "அரையர் கூத்திற்கும்" அமைத்துத் தந்தால் பண்டைய தமிழ் மரபொன்று அழிந்து விடாமல் காக்கப் படும்.
உண்ணும் சோறு, பருகுநீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் எம்பெருமான் என்ற உள்ளப் பாங்குடைய ஆழ்வார்கள் காலம் காலமாக இந்திய மனத்திடை உள்ள சாதி உணர்வை தகர்க்க பாடு பட்டுள்ளனர். அவர்கள் வழி வந்த இராமானுச மாமுனி இதை பலவழிகளில் நடை முறைப்படித்தியிருப்பதற்கான சான்றுகள் சரித்திரத்தில் உள்ளன. இக்காரணத்தால் வைணவம் தலித் தோழமையுள்ள இயக்கமாகப் பார்க்கப்படும் ஒரு புதிய கண்ணோட்டம் காணக் கிடைக்கிறது.
ஆழ்வார்கள் பக்தி என்னும் சாதனம் மூலம் எளிதில் பிளவுபடக்கூடிய மனத்தை ஒருங்கிணைத்து, வாழ்விற்கு உயர் நோக்கு கொடுத்து, செம்மைப் படுத்தினர். கூர்ந்து கவனித்தால் ஆழ்வார்களின் சரிதத்தில் பின்னிழை போல் ஒரு இயக்கம் தென்படும். இவ்வியக்கம் விசை பெற்ற போது அது தமிழகம் தாண்டி இந்தியா முழுவதும் பரவியது. கிருஷ்ண சைத்தன்யர், பிரபு பாதா போன்ற வங்கத்து வைணவர்களால் இவ்வியக்கம் கடல் கடந்து மேலை நாடுகளுக்கும் சென்று இன்று கால் ஊன்றியுள்ளது. மீரா, கபீர்தாஸ், பக்த ராமதாசர், பண்டரிநாதர், ஸ்ரீகிருஷ்ணசைதன்யர், ஸ்மார்த்த ராமதாசர் , நரசிம்ம மேத்தா, அண்ணல் காந்தி, மகாகவி பாரதி இவர்கள் ஆழ்வார்களின் வழியில்தான் கிருஷ்ண/ராம பக்தி செய்தனர். ஆழ்வார்களின் அன்பு வழி அகிலத்தையும் அரவணைக்கும் பாங்குடையது.
ஆழ்வார்களின் பக்தி இயக்கத்தின் முக்கியக் கூறு தாய் மொழியில் இறைவனை அணுகுதலாகும். இதை "விதையாக நற்றமிழை வித்தியென் உள்ளத்தை நீ விளைவித்தாய் கற்ற மொழியாகிக் கலந்து" என்ற திருமழிசைப் பிரானின் இனிய பாசுரத்தால் அறியலாம். மெய்யியல் ஞானம் உயர் குலச் சொத்தாக இருந்ததை மாற்றி உயர் வேதத்தை தமிழ் செய்து தமிழ் மறையை எக்குலத்தோர்க்கும் சமம் என்று வைத்தனர் வைணவர்கள். இதையே புரட்சிக் கவி பாரதிதாசன்,

"முத்தியோ சிலரின் சொத்தென இருக்கையில்
இத்தமிழ் நாடுதன் இருந்தவப் பயனாய்
இராமானுசனை ஈன்றதன்றோ?" என்கிறார்.

ஆழ்வார்கள் ஆக்கி வைத்த ஆதி தமிழ் மறுமலர்ச்சியால் இன்றளவும் வைணவத் திருக் கோவில்களில் தமிழ் பாசுரங்களால்தான் தினமும் ஆண்டவனுக்கு ஆர்ச்சனை ஆகிறது. தமிழ் முன் செல்ல பெருமாள் பின் தொடர அதன் பின் ஆரிய வேதத்தை வைத்த பெருமை தமிழகத்தில் வைணவத்திற்கே சாரும்.
காலம் என்பது மனித உடலை சிதைத்துவிடும் உண்மையறிந்து ஆழ்வார்கள் என்றும் அழியா இறைபொருளைப் பற்றி பக்தி சொட்ட பாசுரங்கள் அருளிப் போயினர். இப்பாசுரங்களை அர்த்தம் புரிந்து படிக்கும் காலையில் ஆழ்வார்களின் அருளும், எம்பெருமானின் அருளும் கிட்டுவது வாசிக்க, வாசிக்க புரியத் தொடங்கும்.
இத்தகைய பெருமை வாய்ந்த வைணவத் திருமறைகள் இன்று தகவல் புரட்சியின் அலையில் தவழ்ந்து ஆலிலைக் கண்ணன் போல் உங்கள் கைக்கு வருகின்றன. எத்தனையோ நல்ல உள்ளங்கள் நூற்றாண்டுகளாக காத்து, போற்றி, பாதுகாத்து வைத்த பாசுரங்கள் இன்று உங்களுக்கு இலவசமாக வருகின்றன. காற்றைப் போல், நீரைப் போல், உயிர் மூச்சைப் போல் பிரதிகூலம் பார்க்காது வருகின்றன.
திண்ணன்வீடு முதல்முழுதுமாய்,
எண்ணின்மீதிய னெம்பெருமான்,
மண்ணும்விண்ணுமெல்லா முடனுண்ட, நம்
கண்ணன் கண்ணல்ல தில்லையோர்க்கண்ணே

என்று நம் இதத்தாய் சடகோபன் சொன்னவாறு இதைக் கண்ணே போல் காத்து அனுபவித்து "பத்துடை அடியவர்க்கு எளியவனான" எம்பெருமானின் கருணைக்கு பாத்திரமாகுமாறு உங்களை மதுரை மின் பதிப்புத் திட்டத்தின் சார்பாக அழைப்பதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன்.

ஆழ்வார்க்கு அடியானாகிய

நா.கண்ணன்

Sunday, November 12, 2006

மன்னுபுகழ் கோசலை தன் மணிவயிறு வாய்த்தவனே!

மன்னுபுகழ் கோசலை தன் மணிவயிறு வாய்த்தவனே!
தென்னிலங்கை கோன் முடிகள் சிந்துவித்தாய்! செம்பொன் சேர்
கன்னி நன் மா மதில் புடை சூழ் கணபுரத்தென் கருமணியே!
என்னுடைய இன்னமுதே! இராகவனே! தாலேலோ!

புண்டரிக மலர் அதன் மேல் புவனியெல்லாம் படைத்தவனே!
திண் திறலாள் தாடகை தன் உரம் உருவச் சிலை வளைத்தாய்!
கண்டவர் தம் மனம் வழங்கும் கணபுரத்தென் கருமணியே!
எண் திசையும் ஆளுடையாய்! இராகவனே! தாலேலோ!

கொங்கு மலி கருங்குழலாள் கோசலை தன் குலமதலாய்!
தங்கு பெரும் புகழ்ச் சனகன் திருமருகா! தாசரதீ!
கங்கையிலும் தீர்த்த மலி கணபுரத்தென் கருமணியே!
எங்கள் குலத்தின்னமுதே! இராகவனே! தாலேலோ!

தாமரை மேல் அயன் அவனைப் படைத்தவனே! தசரதன் தன்
மாமதலாய்! மைதிலி தன் மணவாளா! வண்டினங்கள்
காமரங்கள் இசை பாடும் கணபுரத்தென் கருமணியே!
ஏமருவும் சிலை வலவா! இராகவனே! தாலேலோ!

பாராளும் படர் செல்வம் பரத நம்பிக்கே அருளி
ஆரா அன்பு இளையவனோடு அருங்கானம் அடைந்தவனே!
சீராளும் வரை மார்பா! திருக்கண்ணபுரத்தரசே!
தாராளும் நீண்முடி என் தாசரதீ! தாலேலோ!




சுற்றம் எல்லாம் பின் தொடரத் தொல் கானம் அடைந்தவனே!
அற்றவர்கட்கு அருமருந்தே! அயோத்தி நகர்க்கு அதிபதியே!
கற்றவர்கள் தாம் வாழும் கணபுரத்தென் கருமணியே!
சிற்றவை தன் சொல்கொண்ட சீராமா! தாலேலோ!

ஆலின் இலைப் பாலகனாய் அன்றுலகம் உண்டவனே!
வாலியை கொன்று அரசு இளைய வானரத்துக்கு அளித்தவனே!
காலின் மணி கரையலைக்கும் கணபுரத்தென் கருமணியே!
ஆலிநகர்க்கதிபதியே! அயோத்திமனே! தாலேலோ!

மலையதனால் அணை கட்டி மதிளிலங்கை அழித்தவனே!
அலைகடலைக் கடைந்து அமரர்க்கு அமுதருளிச் செய்தவனே!
கலை வலவர் தாம் வாழும் கணபுரத்தென் கருமணியே!
சிலை வலவா! சேவகனே! சீராமா! தாலேலோ!

தளை அவிழும் நறுங்குஞ்சித் தயரதன் தன் குலமதலாய்!
வளையவொரு சிலையதனால் மதிளிலங்கை அழித்தவனே!
களை கழுநீர் மருங்கு அலரும் கணபுரத்தென் கருமணியே!
இளையவர்கட்கு அருளுடையாய்! இராகவனே! தாலேலோ!

தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே!
யாவரும் வந்தடி வணங்க அரங்க நகர் துயின்றவனே!
காவிரி நல் நதி பாயும் கணபுரத்தென் கருமணியே!
ஏவரி செஞ்சிலை வலவா! இராகவனே! தாலேலோ!



கன்னி நன் மா மதிள் புடை சூழ் கணபுரத்தென் காகுத்தன்
தன்னடிமேல் தாலேலோ என்றுரைத்த தமிழ்மாலை
கொல் நவிலும் வேல் வலவன் குடைக்குலசேகரன் சொன்ன
பன்னிய நூல் பத்தும் வல்லார் பாங்காய பத்தர்களே!

குலசேகராழ்வார் திருவடிகளே சரணம்!

***

வடுவூர் வல்வில் இராமன் திருவுருவ தரிசன சௌபாக்கியத்தை எல்லோரும் பெறும் படி அடியேனுக்கு இராகவனின் தரிசனத்தைச் செய்வித்த இரவிசங்கர் கண்ணபிரானுக்கு மிக்க நன்றி.

Wednesday, November 08, 2006

ஆறு காசுக்காகாத அருமையான சூளை

இருவர் மண் சேர்த்திட ஓருவர் பண்ண
ஈரைந்து மாதமாய் வைத்தச் சூளை
அருமையாய் இருப்பினும் அந்த சூளை
அரை காசுக்கு ஆகாதென்று ஆடு பாம்பே!

Wednesday, November 01, 2006

கற்பக மரம் = தமிழ்மணம்

அடர்ந்த காடு. ஒருவன் அந்தக் காட்டு வழியாக நடந்து போகிறான். நடுப்பகல் நேரம் என்பதால் நடந்து நடந்து களைத்துப் போய்விட்டான். சிறிது நேரம் ஓய்வெடுப்போம் என்று ஒரு மரத்தின் கீழே அமர்ந்தான். அந்த மரம் கேட்பதையெல்லாம் கொடுக்கும் கற்பக மரம் என்பது அவனுக்குத் தெரியாது.
'ஆகா. ரொம்பத் தாகமாக இருக்கிறதே. குளிர்ந்த நீர் கிடைத்தால் நன்றாக இருக்குமே' என்று எண்ணினான். எண்ணிய மறுவிநாடி ஒரு குடுவையில் குளிர்ந்த நீர் அவன் அருகில் இருந்தது. வியப்புடன் அதைப் பார்த்து குடுவையை எடுத்து குளிர்ந்த நீரை அருந்தி மகிழ்ந்தான்.

தாகம் ஆறியவுடன் 'பசிக்கிறதே. அறுசுவை உணவு இருந்தால் இந்நேரம் மிக நன்றாக இருக்குமே' என்று எண்ணினான். உடனே அறுசுவை உணவுகள் அங்கே தோன்றின. உண்டு மகிழ்ந்தான்.

'அப்பாடா. வயிறு நிறைய உண்டு ஆயிற்று. ஜிலு ஜிலு எனக் காற்று வீசுகிறதே. இந்த நேரத்தில் ஒரு கட்டில் இங்கே இருந்தால் உறங்கி ஓய்வெடுக்கலாமே' என்று எண்ணினான். கட்டிலும் வந்தது. கட்டிலில் ஏறிப் படுத்தான்.

'நடந்து நடந்து கால்கள் வலிக்கின்றனவே. யாராவது கால் பிடித்துவிட்டால் சுகமாக இருக்கும்' என்று எண்ணினான். ஒரு அழகிய பெண்ணும் வந்து கால்களை பிடித்துவிடத் தொடங்கினாள்.

சுகமாக உறங்கத் தொடங்கியவனுக்குத் திடீரென ஒரு ஐயம் எழுந்தது. 'நாம் படுத்திருக்கும் நேரம் புலி வந்து நம்மை அடித்துப் போட்டுவிட்டால்?'. ஒரு புலியும் வந்தது. அவனைக் கொன்றும் போட்டது.

தமிழ்மணமும் அப்படித்தான் இருக்கிறது. இங்கே சுகங்களும் கிடைக்கின்றன. மற்றவையும் கிடைக்கின்றன. கேட்டது கிடைக்கும் இங்கே. சுகங்களை மட்டும் பெற்று வாழவேண்டும்.

Tuesday, October 31, 2006

சொல்வது ஒன்று புரிவது ஒன்று

அடிப்படையில் மனம் ஒரு ஊகிக்கும் இயந்திரம். புரியாததை ஏற்கனவே தெரிந்ததை வைத்து இட்டு நிரப்புவதை தனது வேலையாக மனம் நினைக்கிறது. அதனால் ஏற்படும் விளைவு 'துணிபுகள்'. இந்தத் துணிபுகள் முக்காலங்களையும் சேர்ந்த பல காரணிகளால் ஆனது - நினைவுகள், நம்பிக்கைகள், தற்போதைய பார்வைகள்/கண்ணோட்டங்கள், எதிர்பார்ப்புகள், உணர்வுகள், சூழ்நிலைகள், ஆசாபாசங்கள், நோக்கங்கள். ஒருவர் சொல்வதைப் புரிந்து கொள்வது என்பது கடினமான வேலை என்று தோன்றுகிறதா? எளிதில் தவறு செய்யக் கூடிய ஒன்று தோன்றுகிறதா? உண்மை.

- அண்மையில் கலந்து கொண்ட 'The Art of Listening' பயிற்சி வகுப்பிலிருந்து.

துணிபுகள் - Assumptions
காரணிகள் - Factors

Monday, October 30, 2006

மாற்றம் எனது மானிடத் தத்துவம்

உண்மையறிந்தவர் நீர் மட்டுமே!
என்னைப் பார்க்கும் போதெல்லாம்
என் அளவுகளை மீண்டும் எடுக்கும்
தையல் காரரே
உண்மையறிந்தவர் நீர் மட்டுமே!

Wednesday, October 25, 2006

கடவுளும் அவள் இடையும்

கடவுளும் அவள் இடையும் ஒன்று
சிலர் உண்டென்பர்
சிலர் இல்லையென்பர்

கல்லூரியில் நுழைந்தவுடன் எழுதியது (1989 - 1990)

Tuesday, October 17, 2006

தீபாவளியை முன்னிட்டு...

இதோ தீபாவளி வந்திருச்சுங்க....நீங்க என்ன பண்ணலாம்ன்னு இருக்கீங்க? வழக்கம் போல புதுத்துணி உடுத்திக்கிட்டு, பலகாரம் தின்னுட்டு, குழந்தைக்குட்டிகளோட பட்டாசு வெடிச்சு கொண்டாடலாம்ன்னு இருக்கீங்களா? நல்லதுங்க. அதுக்குத்தானே பண்டிகைன்னு ஒண்ணு இருக்கு.

அப்படி நாம பண்டிகை கொண்டாட்டத்துல மூழ்கி இருக்கிறப்ப நம்மல சுத்தி ஏழை பாழைங்க யாராவது இருந்தா அவங்களுக்கும் ஏதாவது ஒரு வகையில் உதவி பண்ணப் பாருங்க. உங்க வீட்டுல வேலைக்காரங்க யாராவது இருந்தா அவங்க பசங்க படிக்கிறாங்களான்னு பாத்து அதுக்கு ஏதாவது ஏற்பாடு பண்ண முடியுமான்னு பாருங்க. யாராவது ஒரு ஏழைக்கிழவியோ கிழவனோ நீங்க போற பாதையில இருந்தாங்கன்னா அவங்களுக்கு என்ன உதவி பண்ணலாம்ன்னு பாருங்க.

நாம பண்டிகை கொண்டாடற அதே நேரத்துல நம்மச் சுத்தி இருக்கிறவங்க எல்லாரும் சந்தோசமா இருக்கணும்ன்னு என்னை மாதிரி நீங்களும் ஆசைப்படுவீங்கன்னு தெரியும். ஆனா எல்லாரையும் சந்தோசமா நம்மால வச்சுக்க முடியுமா என்ன? ஏதோ முடிஞ்ச வரைக்கும் நம்மச் சுத்தி இருக்கிறவங்க சந்தோசமா இருக்க ஏதாவது பண்ண முடியுமான்னு பாருங்க.

என்னை மாதிரி வெளிநாட்டில இருக்கிறவங்க நம்ம மக்களுக்கு சேவை செய்ற ஏதோ ஒரு நிறுவனத்துக்கு ஏதாவது நம்மால முடிஞ்சது தீபாவளியை முன்னிட்டு கொடுங்க.

இந்தப் பதிவை தமிழ்மணத்தில இருக்கிறவங்க எல்லாரும் படிச்சு அவங்கவங்க முடிஞ்ச உதவி நம்ம மக்களுக்கு செய்யணும்ன்னு நினைச்சீங்கன்னா + வோட்டு போட்டுட்டுப் போங்க. குறைஞ்சது தீபாவளி முடியற வரைக்குமாவது தமிழ்மணத்துல இந்த பதிவு நிக்கும் இல்லீங்களா?

உங்க கருத்துகளையும் மறக்காம எழுதிட்டுப் போங்க. எந்த எந்த வகையில உதவி பண்ணலாம்ன்னு உங்களுக்குத் தோணுறதை எழுதிட்டுப் போனா உங்களுக்குப் பின்னால இந்த வலைப்பதிவ படிக்கிறவங்களுக்கு உதவியா இருக்கும்.

ரொம்ப நன்றிங்க.

***

இது ஒரு மீள்பதிவு. போன வருடம் இட்ட பதிவையும் அதில் உள்ள பின்னூட்டங்களையும் இங்கே காணலாம். நன்றிகள்.

Monday, October 16, 2006

இது தான் கடவுள்

செய்கின்ற தொழிலே தெய்வமென்பார்
செய்தொழில் கரணங்கள் தெய்வமென்பார்
உய்வழி காட்டும் அவ்வாயுதங்கள்
ஒவ்வொன்றும் உறுதியாய் தெய்வமென்பார்

பாங்காக வருடத்தில் ஒரு நாளேனும்
பகுத்தறிவு கொண்டுஅத் தெய்வம் தன்னை
நீங்காத நற்செல்வம் அருள்வாய் என்று
நிறைவாக ஆயுத பூஜை செய்வார்

காலையில் எழுந்ததுமே கடுங்குளிரில்
களைப்பின்றி செல்வதற்கு உதவும் தெய்வம்
கார் என்ற பெயர் கொண்டு விளங்கும் அதனை
கணப்பொழுதும் மறவாமல் வணங்குகின்றோம்

ஆள்பாதி ஆடையும் பாதியென்றே
அருமையாய் சொன்னார்கள் முன்னோர் அன்று
அதற்கேற்ப ஆடைகளை துவைக்கும் தெய்வம்
அதை வணங்க எனக்கென்ன வெட்கம் வெட்கம்?

பல் போனால் சொல் போச்சு என்பதோர் சொல்
பழங்காலச் சொல்வழக்கு அதை மறவாமல்
பல்தன்னை தினந்தோறும் விளக்கிக் சொல்லை
பலநாளாய் காக்கின்ற தெய்வம் நன்று

பற்றுக பற்றற்றான் பற்றை என்றே
பழந்தமிழர் சொல்லிவைத்தார் பலநாள் முன்பே
பற்றற்றான் பற்றென்றால் என்னவென்றால்
பண்ணவனின் பாதுகைகள் என்று சொன்னார்

பாதுகைகள் பெருமை தனை பாரிலுள்ளோர்
பல்லாண்டு பாடியே வாழ்த்துகின்றார்
பாதுகைகள் பெருமைதன்னை ஆயிரம் பா
பாடியுமே வாழ்த்தியுள்ளார் அறிவீர் நீரே!

காரென்ன வாஷிங் மெஷினுமென்ன
கனஜோராய் டூத் பேஸ்ட் அதுவுமென்ன
கால்தன்னைக் காக்கின்ற காலணியென்ன
காண்கின்றோம் அத்தனையும் தெய்வம் தெய்வம்

மேல் சொன்ன உயிரற்ற பொருட்களுடன்
மேல் நின்ற உயிருள்ள மாந்தர் மாக்கள்
தாள் பரப்பி நிற்கின்ற ஈசன் அவனின்
தகை சார்ந்த வடிவங்கள் என்று கண்டோம்

தூணிலும் இருக்கின்றான் தும்மலிலும் உண்டு
பேணி நின்ற எல்லாவற்றிலும் உண்டு
நாணி நிற்கும் நல்ல பெண் தன்னிலும் உண்டு
நனி நின்ற தலித் அன்பன் தன்னிலும் உண்டு

ஓர் தெய்வம் அவன் எங்கும் நிறைந்து உள்ளான்
ஒருமையுடன் அவன் திருவடி வணங்குகின்றோம்
மாறுபடு கருத்துகளைச் சொல்லும் நண்பர்
மனம் உவக்க என்றுமே சொல்லிச் செல்க!

செருப்புக் கடவுளின் மேல் ஆயிரம் பாடல்கள்

இது ஒரு Impulse பதிவு என்று நீங்கள் நினைக்கலாம். நண்பர் சிவபாலனின் நாத்திகப் பதிவிற்கான எதிர்ப்பதிவு என்றும் நீங்கள் நினைக்கலாம். (அது ஆத்திகம் என்று சொன்னால் நண்பர் கோவித்துக் கொள்வார். அதனால் தெளிவாகச் சொல்லிவிட்டேன் அது நாத்திகப் பதிவு என்று). ஆனால் அவர் 'அட இது கூட கடவுள் தான்' என்று காலணியைக் காட்டியிருந்தார். அதனைக் கண்டவுடன் தோன்றியதே இப்பதிவு. அதனை அங்கேயே பின்னூட்டமாக இட்டிருக்கலாமே என்று கேட்கிறீர்களா? எதற்கு வம்பு? நம் பதிவில் இட்டாலாவது அது நம் கருத்து என்பதில் யாருக்கும் ஐயம் இருக்காது. மற்றவர் பதிவில் நம் கருத்தைச் சொல்லி அவர்கள் அதனை அவர்களின் பதிவினைக் கடத்துவதாக எண்ணிக் கொண்டால்?

இந்தப் பதிவினால் யாருடைய மனமாவது புண்பட்டால் மன்னித்துக் கொள்ளுங்கள். எந்த உ.கு.வும் இந்தப் பதிவில் இல்லை. எல்லாம் நேரடியாகத் தெளிவாகத் தான் சொல்லப் போகிறேன்.

செருப்பைக் கடவுளாகப் பார்த்தார்களா? இப்போதும் அது நடக்கிறதா? செருப்பின் முன்னால் உட்கார்ந்து வணங்குகிறார்களா? இந்தக் கேள்விகளுக்குப் பதில்கள் ஆம்; ஆம்; ஆமாம்.

ஆயிரம் பாடல்கள் பாடியிருக்கிறார்கள் காலணியை ஏத்தி. நண்பர்களே அந்த ஆயிரம் பாடல்களுக்கும் பொருள் உரைக்க வேண்டும் என்ற ஆவல் உண்டு. ஏற்கனவே எடுத்துக் கொண்ட பணிகள் முடிந்தவுடன் அதனைத் தொடங்குகிறேன். இப்போதைக்கு 'New Blog ideas' என்ற வலைப்பூவில் இதனைச் சேர்த்துவிடுகிறேன்.

அந்த ஆயிரம் பாடல்கள் உள்ள நூல் எது என்று சொல்லவில்லை பார்த்தீர்களா? ஹிஹி உங்களுக்குத் தெரியாதா என்ன? நீங்களே சொல்லுங்கள். - இது கட்டாயம் இரவிசங்கர் கண்ணபிரானின் 'புதிரா? புனிதமா?' பதிவினைப் பார்த்துப் போடும் புதிர் இல்லை :-)

Tuesday, October 03, 2006

ஆண்டொன்று போனால்...

ஆண்டொன்று ஆச்சுங்க. 2005ம் ஆண்டு இதே அக்டோபர் மூன்றாம் நாள் தமிழ் வலைப்பதிவுகளில் எழுதத் தொடங்கினேன். இன்றுடன் ஒரு ஆண்டு ஆகிறது. வலைப்பதிவுகள் எழுத ஊக்கம் கொடுத்த நண்பர் சிவபுராணம் சிவராஜாவின் பெயரைச் சொல்லாமல் இந்த மாதிரி பதிவுகள் எழுதியதே இல்லை. :-) அவருக்கு நன்றி.

என் விண்மீன் வாரத்தில் சொன்ன மாதிரி தமிழ்மணம் மட்டும் இல்லையென்றால், அடியேன் எழுதியதைப் படித்து நண்பர்கள் பின்னூட்டங்கள் இடாமல் போயிருந்தால், தொடர்ந்து எழுதியிருப்பேனா என்பது ஐயமே. ஊக்கத்தைத் தொடர்ந்து கொடுக்கும் நண்பர்களுக்கும் தமிழ்மணத்திற்கும் நன்றி.

எழுத வேண்டும் என்று நினைத்த போது என்ன எழுதுவது என்று தெரியவில்லை. இதனை எழுதலாமா, அதனை எழுதலாமா என்று பல விதயங்களைப் பற்றி மனம் அலைபாய்ந்தது. ஆனால் எதற்குத் தமிழ்மணத்தில் வரவேற்பு இருக்கும் என்ற புரிதல் இல்லாததால் மனம் குழம்பியது. அபிராமி அந்தாதிக்குப் பொருள் சொல்கிறேன் என்று பல நாட்களாக (வருடங்களாக) என் வீட்டம்மாவிடமும் ஒரு நெருங்கிய நண்பரிடமும் தொந்தரவு செய்து கொண்டிருந்தேன். இருவரும் என் தொல்லை தாங்காமல் தப்பித்துத் தப்பித்து ஓடிக் கொண்டிருந்தார்கள். :-) அதனால் முதல் பதிவாக அதைத் தொடங்கினேன். நல்ல வரவேற்பு இருந்தது. மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. ஒவ்வொன்றாக ஒவ்வொரு தலைப்பிலும் வலைப்பூ தொடங்கி இப்போது எல்லாவற்றிலும் எழுத நேரமின்றி போயிற்று. :-)

கொஞ்சம் கொஞ்சமாகத் தமிழ்மணம் ஒரு போதையைப் போல் ஆகியது. வலைப்பதிவுகளை விட்டால் உலகில் வேறெதுவும் இல்லாதது போல் தோன்றத் தொடங்கியது. எல்லா நேரங்களிலும் பதிவுகள் இடுவதிலும் படித்தவைகளைப் பற்றியுமே சிந்தனை எல்லாம் இருந்தது. வீடு, வேலை எல்லாம் இரண்டாம் நிலை பெற்றது.

பதிவுகள் தொடங்கிய மூன்றாம் மாதமே தமிழ்மண விண்மீன் வாய்ப்பு கிடைத்தது மிக்க மகிழ்ச்சியைத் தந்தது. அந்த விண்மீன் வாரம் மிக மிக மகிழ்ச்சியாய் சென்றது என்பதில் எந்த வித ஐயமும் இல்லை. நிறைய புது நண்பர்களையும் அந்த வாரம் அடையாளம் காட்டியது.

அந்த ஒரு வாரத்தில் உலகத்தில் உள்ள மற்ற எல்லாமே மறந்து போனது. வீடு, வேலை என்று எல்லா இடங்களிலும் தாறுமாறாய்ப் போனது. பணியிடத்தில் மீண்டும் பழைய நிலை திரும்ப ஏறத்தாழ ஒரு மாதம் ஆனது. வீட்டிலோ அந்த வாரத்தின் தாக்கம் இன்னும் இருக்கிறது. :-) வீட்டில் அந்த வாரம் ஏற்படுத்திய தாக்கம் நிலையானது என்று நினைக்கிறேன். தாக்கம் குறைய மாட்டேன் என்கிறது.

கடந்த இரு மாதங்களாக வலைப்பதிவுகள் இடுவதிலிருந்து விடுமுறை எடுத்துக் கொண்டேன். அப்படி விடுமுறை எடுத்துக் கொள்வதால் வீட்டிலும் வேலையிலும் எவ்வளவு நன்மைகள் ஏற்படுகின்றன எனப் பார்க்க விரும்பினேன். அருமையான நன்மைகளைக் கண்டேன். பதிவுகள் இடாமல் இரண்டு மாதங்கள் இருப்பது கடினமாகத் தான் இருந்தது. மற்றவர் பதிவுகளைப் படிக்கவும் பின்னூட்டங்கள் இடவும் என்னை நானே அனுமதித்துக் கொண்டதால் பரவாயில்லாமல் இருந்தது. கிடைத்த நன்மைகளை அப்படியே தொடர விரும்புவதால் முன்பு போல் நிறைய பதிவுகள் இடுவதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன். பதிவுகள் இடாமலேயே இருப்பது தற்போதைக்கு என்னால் முடியாத ஒன்று. அதனால் வாரத்திற்கு அதிகம் மூன்று பதிவுகள் மட்டுமே என்று ஒரு முடிவில் என்னை நானே இட்டுக் கொள்கிறேன்.

Monday, July 31, 2006

இறைவனின் திருநாமம்

நான் உங்கள் அருகில் வந்து "ஐயோ! தேள்! என்று சத்தம் போட்டால் உடனே அலறிக் குதிக்கிறீர்கள்.

"ரஸகுல்லா" என்று சொன்னால் நாக்கில் நீர் சுரக்கிறது.

"நீர் கழுதை" என்று சொன்னால் கோபப் படுகிறீர்கள் , இரத்தம் கொதிக்கிறது,
கண்கள் சிவந்து விடுகிறது .

இப்படியான சாதாரண சொற்களுக்கே இவ்வளவு சக்தி என்றால், இறைவனது திருநாமத்திற்கு எவ்வளவு சக்தி இருக்க வேண்டும்!

பிரகலாதன் , மீரா போன்றவர்களுக்கு இந்த சக்தி பற்றி தெரியும். இறைவனது பெயர் உள்ளத்தை சுத்தப்படுகிறது. இறைவனை நேருக்கு நேர் கொண்டு வருகிறது.

- சுவாமி சிவானந்தர்

Thursday, July 27, 2006

இன்றோ திருவாடிப்பூரம்!



திருவாடிப்பூரத்துச் செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்தப் பெண்பிள்ளாய் வாழியே
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒரு நூற்று நாற்பத்தி மூன்றுரைத்தாள் வாழியே
உயரரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே
மருவாரும் திருமல்லி வளநாடி வாழியே
வண்புதுவை நகர்க் கோதை மலர்ப்பதங்கள் வாழியே


திருவாடிப்பூரம் ஆகிய இன்றையத் திருநாளில் உலகத்தில் அவதரித்தவள் வாழ்க!
திருப்பாவை முப்பதும் சொன்னவள் வாழ்க!
பெரியாழ்வார் பெருமையுடன் வளர்த்தப் பெண் பிள்ளை வாழ்க!
திருப்பெரும்புதூரில் அவதரித்த இராமானுஜமுனிக்குத் தங்கையானவள் வாழ்க!
ஒரு நூற்று நாற்பத்தி மூன்று பாசுரங்களைப் பாடியவள் வாழ்க!
உயர்வற உயர்நலம் உடைய அரங்கனுக்கு மலர்மாலையை மகிழ்ந்து தான் சூடிக் கொடுத்தவள் வாழ்க!
மணம் கமழும் திருமல்லிநாட்டைச் சேர்ந்தவள் வாழ்க!
புதுவை நகரெனும் வில்லிபுத்தூர் நகர்க் கோதையின் மலர்ப்பதங்கள் வாழ்க வாழ்க!

கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழுமூர்
சோதி மணிமாடம் தோன்றும் ஊர் - நீதிசால்
நல்ல பக்தர் வாழுமூர் நான்மறைகள் ஓதுமூர்
வில்லிபுத்தூர் வேதக் கோனூர்.

கோதை பிறந்த ஊர்
கோவிந்தன் நிலைத்து வாழும் ஊர்
ஒளிவீசும் மணி மாடங்கள் விளங்கும் ஊர்
நீதியில் சிறந்த நல்ல பக்தர்கள் வாழும் ஊர்
நான்மறைகள் என்றும் ஒலிக்கும் ஊர்
அப்படிப்பட்ட வில்லிபுத்தூர் வேதங்களின் தலைவனின் ஊர்

பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்
வேதம் அனைத்திற்கும் வித்தாகும் - கோதைதமிழ்
ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானுடரை
வையம் சுமப்பதும் வம்பு.

பஞ்சமா பாதகங்களைத் தீர்க்கும்
பரமனின் அடிகளைக் காட்டும்
வேதங்கள் அனைத்திற்கும் வித்து ஆகும்
அப்படிப்பட்டக் கோதையின் தமிழ்ப் பாசுரங்கள்
ஐயைந்தும் ஐந்தும் (முப்பதும் - திருப்பாவை)
அறியாத மானுடரை
வையம் சுமப்பது வீண்

அன்னவயல் புதுவை ஆண்டாள் அரங்கற்கு
பன்னு திருப்பாவை பல்பதியம் இன்னிசையால்
பாடிக் கொடுத்தாள் நற்பாமாலை, பூமாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு.

அன்னங்கள் சூழ, அன்னம் விளையும் வயல்கள் கொண்ட புதுவை என்னும் திருவில்லிபுத்தூர்.
ஆங்கு அவதரித்த ஆண்டாள், ஆரா அமுதன் அழகிய திரு அரங்கன் மீது பாடிக் கொடுத்தாள் நல்ல பாமாலை...வாய்க்கு மணம்!
போதாது என்று பூமாலையும் சூடிக்கொடுத்தாள்...மேனிக்கே மணம்!
அந்த மாலைகளை அனைவரும் சொல்லுவோம்.


சூடிக் கொடுத்தச் சுடர்கொடியே தொல்பாவை
பாடி அருளவல்ல பல்வளையாய் - நாடி நீ
வேங்கடவற்கு என்னை விதி என்ற இம்மாற்றம்
நாங்கடவா வண்ணமே நல்கு.

மலர்மாலையை மாலவனுக்குச்
சூடிக் கொடுத்த சுடர்கொடியே!
தொன்மையான பாவை நோன்பிற்காக
திருப்பாவை பாடி அருளிய பலவிதமான வளையல்களை அணிந்தவளே!
'மன்மதனே. நீ மனம் இரங்கி திருவேங்கடவனுக்கே என்னை மணாட்டியாக விதி' என்று நீ கூறிய வார்த்தைகளை நாங்களும் ஏற்று
என்றும் புறந்தொழாமல்
என்றும் படிதாண்டா பத்தினிகளாக
எம்பெருமானையே பற்றி வாழ அருள்வாய்.

இன்றோ திருவாடிப்பூரம் எமக்காக
அன்றோ ஆண்டாள் அவதரித்தாள் - குன்றாத
வாழ்வான வைகுந்த வான்போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திருமகளாராய்.

இன்றல்லவோ திருவாடிப்பூரம்! (இந்தத் திருநாளில்)எம் பொருட்டு அன்றோ ஆண்டாள் அவதரித்தாள்!(எம் மேல் அவள் கருணை எப்படிப்பட்டதெனில்) என்றும் அழியாத பெரும்பேறான வைகுந்த வான்போகத்தை (அடியாரைக் காத்தருளுவதை விட கீழானதென்று) இகழ்ந்து பெரியாழ்வர் திருமகளாராய்!

அடையுங்கள் அடையுங்கள் ஆண்டாள் திருவடி அடையுங்கள் நம் ஆண்டாள் திருவடி அடையுங்கள்!

Wednesday, July 05, 2006

ஸ்வாமியே சரணம் ஐயப்பா!



அன்னதானப் பிரபுவே சரணம் ஐயப்பா!
ஆரியங்காவு ஐயாவே சரணம் ஐயப்பா!
இருமுடிப் பிரியனே சரணம் ஐயப்பா!
ஈசன் திருமகனே சரணம் ஐயப்பா!
உய்வதற்கொரு வழியே சரணம் ஐயப்பா!
ஊழ்வினை அறுப்பவனே சரணம் ஐயப்பா!
எங்கும் நிறைந்தவனே சரணம் ஐயப்பா!
ஏழுலகாள்பவனே சரணம் ஐயப்பா!
ஐயம் நீக்கிடுவாய் சரணம் ஐயப்பா!
ஒன்றாய் நின்றவனே சரணம் ஐயப்பா!
ஓங்காரப் பொருளே சரணம் ஐயப்பா!
ஒளவியம் தனைத் தீர்ப்பாய் சரணம் ஐயப்பா!

அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் என்னைப் போன்ற தமிழ் வலைப்பதிவாளர்கள் எத்தனையோ குற்றங்களைச் செய்து கொண்டிருக்கிறோம். ஒன்றைச் சொல்ல விரும்பி வேறொன்றைச் சொல்கிறோம். உன் கருணையைப் பற்றியே ஐயம் கொள்கிறோம். உன் பாரபட்சம் இல்லாத தன்மையைத் தவறாகப் புரிந்து கொண்டு பேசிக் கொண்டிருக்கிறோம். எத்தனையோ விதங்களில் உன்னை இழித்தும் பழித்தும் பேசுகிறோம். இப்படி நாங்கள் அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் செய்த சகல குற்றங்களையும் மன்னித்துக் காத்து ரக்ஷிக்க வேணும் அருள் தரும் பொன்னு பதினெட்டாம்படி ஐயன் ஐயப்பசாமியே சரணம் ஐயப்பா.

***

ஒளவியம்: பொறாமை, தீவினை

Friday, June 23, 2006

ஆறு வழிகள்

ஆறு பதிவுகள் என்று எல்லோரும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள் இப்போது. முன்பு நாலு பதிவுகள் ஒரு முறை வலம் வந்தது போல் இப்போது ஆறு பதிவுகள் வலம் வருகின்றன. நாலு நாலாவோ ஆறு ஆறாவோ எடுத்து இது எனக்குப் பிடிக்கும் இது எனக்குப் பிடிக்காது என்று சொல்லும் அளவுக்கு மனதில் தெளிவு இருப்பதாகத் தெரியவில்லை. அதனால் நாலு பதிவு போடும் போதும் சரி. இப்போது ஆறு பதிவு போடும் போதும் சரி. பிடித்தது, பிடிக்காதது என்று எழுதாமல் 'ஆறு' என்ற கருப்பொருளில் வரும் ஒன்றினைப்பற்றி எழுதலாம் என்று இருக்கிறேன்.

நாலு பதிவுக்கு சிங். செயகுமாரும் நாமக்கல் சிபியும் என்னை அழைத்தார்கள். இந்த ஆறு விளையாட்டிற்கு வெங்கடரமணியும் இராம்பிரசாத் அண்ணாவும் அழைத்திருக்கிறார்கள். இவர்கள் நால்வருக்கும் நன்றி.

***

உலகில் இறைவனை வழிபட எத்தனையோ வழிகள் இருக்கின்றன. இந்தியத் திருநாட்டில் வடமொழி வேதங்களைப் புறந்தள்ளாத வழிகளும் இருக்கின்றன; வடமொழி வேதங்களைப் பற்றிப் பேசாத வழிகளும் இருக்கின்றன; வடமொழி வேதங்களை முழுவதும் புறந்தள்ளிய வழிகளும் இருக்கின்றன. ஆதிசங்கரரின் காலத்திலும் இப்படியே எத்தனையோ சமயங்கள் இருந்தன இந்தத் திருநாட்டில். சமயங்கள் ஒன்றில் ஒன்று கலப்பதும் புதிதாக ஒன்று உருவாவதும் இருந்த ஒன்று இன்னொன்றில் கலந்து முழுதும் உருத்தெரியாமல் மறைவதும் காலம் காலமாக எல்லா நாட்டிலும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. நம் நாட்டில் ஆதிசங்கரரின் காலத்தில் இருந்த சமயங்களில் வேதங்களை ஏற்றுக் கொண்ட (கவனிக்கவும் வேதங்களை அடிப்படையாகக் கொண்ட என்றோ வேதங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட என்றோ சொல்லவில்லை) சமயங்களை ஆறு வகைக்குள் அடக்கி அந்த வழிபாட்டு முறைகளை சீர்படுத்தி வைத்தார் ஆதி சங்கரர். அந்த ஆறு சமயங்களைப் பற்றியே இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம்.

***

காணபத்யம்:

முழுமுதற்கடவுள் என்று போற்றப்பட்டு எல்லாச் செயல்களையும் தொடங்குவதற்கு முன் வணங்கப்படும் ஆனைமுகன் கணபதியை எல்லாக் கடவுளர்களையும் தம்முள் அடக்கிய பரம்பொருள் என்று வணங்குவது காணபத்யம் என்னும் சமயம்.

கௌமாரம்:

அழகில் சிறந்தவன்; ஆறுமுகங்களைக் கொண்டவன்; முருகன்; குமரன்; கிழவன்; குகன் என்று பலவாறாகப் போற்றப் படும் குமரக்கடவுளை முழுமுதற்கடவுளாகப் போற்றுவது கௌமாரம்.

சௌரம்:

உலகுக்கெல்லாம் ஒளி கொடுத்து உலகச் செயல்கள் எல்லாம் நடக்கச் சக்தியும் கொடுக்கும் கண்கண்ட தெய்வமான சூரியனை முழுமுதற்கடவுளாக, பரம்பொருளாக வணங்குவது சௌரம்

சாக்தம்:

பரம்பொருளை அன்னை வடிவில் சக்தி வடிவில் வணங்குவது சாக்தம்

சைவம்:

பிறப்பிலியான சிவபெருமானைப் பரம்பொருளாக வணங்குவது சைவம்

வைணவம்:

திருமகள் மணாளனை, விஷ்ணுவை முழுமுதற்கடவுளாக வணங்குவது வைஷ்ணவம் என்றும் சொல்லப்படும் வைணவம்.

***

ஆதிசங்கரரின் காலத்தில் இந்த ஆறு சமயங்களுக்கும் வேறுபாடுகள் இருந்தன. அவர் காலத்திலேயே அவை ஒன்றுக்குள் ஒன்றாய் கலக்கத் தொடங்கியிருந்தன. தற்காலத்தில் இந்த ஆறு சமயங்களும் இரு பெரும் சமயங்களாக - சைவம், வைணவம் - உருமாறி நிற்கின்றன.

காணபத்யம், கௌமாரம், சாக்தம் இந்த மூன்றும் சைவத்தில் அடங்கிவிட்டாலும் இந்தியாவில் சில பாகங்களில் அவை இன்றும் சிறப்போடு இருக்கின்றன. காணபத்யம் மஹாராஷ்ட்ரத்திலும் கௌமாரம் தமிழகத்திலும் சாக்தம் வங்காளத்திலும் கேரளத்திலும் இந்த ஆறு சமயங்களிலும் தலைமையிடம் கொள்கின்றன. சௌரம் சைவத்திலும் வைணவத்திலும் கலந்து மறைந்துவிட்டது. சைவத்தில் சிவசூரியனாகவும் வைணவத்தில் சூரியநாராயணனாகவும் சௌரத்தின் சூரியன் உருமாறிவிட்டான். தற்காலத்தில் சூரியனை முழுமுதற்கடவுளாக வணங்குபவர் இந்தியாவில் இல்லாமல் போய்விட்டார்கள். ஆனால் உலக வரலாற்றைப் பார்த்தால் சூரியனை எல்லா நாட்டினரும் வணங்கியிருக்கிறார்கள் என்பது புலனாகும்.

வைணவம் மட்டுமே ஆதிசங்கரரின் காலத்திலிருந்து எந்த சமயத்தையும் எடுத்துக் கொள்ளாமலும் எந்த சமயத்திலும் கலந்துவிடாமலும் இருப்பது போல் தோன்றினாலும் மற்ற சமயங்களில் இருந்தத் தத்துவங்களை வைணவம் ஏற்றுக் கொண்டிருப்பது கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தால் தெளிவாகும்.

***

இந்த ஆறு விளையாட்டில் நானும் ஒரு ஆறு பேரை அழைக்கவேண்டுமே. சிந்தித்துப் பார்த்ததில் கீழே இருக்கும் ஆறுபேரை அழைக்கலாம் என்று தோன்றியது. இந்த ஆறு பேர் தவிர வேறு சிலரையும் அழைக்கலாம் என்று எண்ணிய போது ஏற்கனவே மற்றவர்களல் அழைக்கப் பட்டவர்களைத் தவிர்க்கவேண்டும் என்று தோன்றியது. இந்த ஆறு பேர் இதுவரை இந்த விளையாட்டிற்கு அழைக்கப் படாதவர்கள் என்று எண்ணுகிறேன். அழைக்கப்பட்டிருந்தால் சொல்லுங்கள். அவர்கள் பெயரை எடுத்துவிட்டு வேறு ஒருவர் பெயரை தருகிறேன்.

1. இராகவன்
2. இலவசக் கொத்தனார்
3. சிவமுருகன்
4. சிங். செயகுமார்
5. தருமி ஐயா
6. காஞ்சி பிலிம்ஸ்

Tuesday, June 20, 2006

ஆடி அடங்கும் வாழ்க்கையடா...

மகாகவி பாரதி, புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் என்ற வரிசையில் பாரதிதாசனாரின் இயற்பெயராகிய சுப்புரத்தினம் என்பதனைக் கொண்டு தன்னைச் சுப்புரத்தினதாசன் என்று அழைத்துக் கொண்ட பழம்பெரும் கவிஞர் சுரதா அவர்கள் காலமானார் என்ற செய்தியினை செந்தழல் ரவி அவர்களின் பதிவில் அறிந்து கொண்டேன். மறைந்த கவிஞருக்கு அஞ்சலி செய்யும் முகமாக அவருடைய இரண்டு பாடல்களை இங்கே தருகிறேன்.

திரைப்படம்: நீர்க்குமிழி (1965)
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
இசையமைப்பாளர்: வி குமார்

ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா (ஆடி)

முதலில் நமக்கெல்லாம் தொட்டிலடா - கண்
மூடினால் காலில்லா கட்டிலடா (ஆடி)

பிறந்தோம் என்பதே முகவுரையாம்
பேசினோம் என்பதே தாய்மொழியாம்
மறந்தோம் என்பதே நித்திரையாம்
மரணம் என்பதே முடிவுரையாம் (ஆடி)

சிரிப்பவன் கவலையை மறக்கின்றான்
தீமைகள் செய்பவன் அழுகின்றான்
இருப்போம் என்றே நினைப்பவர் கண்களை
இறந்தவன் அன்றோ திறக்கின்றான் (ஆடி)

வகுப்பான் அது போல் வாழ்வதில்லை
வந்தவர் யாருமே நிலைத்ததில்லை
தொகுப்பார் சிலரதைச் சுவைப்பதில்லை
தொடங்குவார் சிலரதை முடிப்பதில்லை....

***

திரைப்படம்: தை பிறந்தால் வழி பிறக்கும்
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
இசையமைப்பாளர்: கே.வி. மகாதேவன்

அமுதும் தேனும் எதற்கு - நீ
அருகினில் இருக்கையிலே எனக்கு (அமுதும்)

அருவி தரும் குளிர் நீர் அன்பே - இனிமேல்
அதுவும் சுடுநீராகும் நமக்கு (அமுதும்)

நிலவின் நிழலோ உன் வதனம் - புது
நிலைக்கண்ணாடியோ நின் கன்னம்
மலையில் பிறவா மாமணியே - நான்
கொய்யும் கொய்யாக் கனியே வான் (அமுதும்)

விழியாலே காதல் கதை பேசு - மலர்க்
கையாலே சந்தனம் பூசு
தமிழ்மொழி போலே சுவையூட்டும் செந்தேனே
உடல் நான் உயிர் நீ தானே வான் (அமுதும்)


சீர்காழி சிவசிதம்பரம் அவர்களும் இந்தப் பாடலை ஒரு இசைநிகழ்ச்சியில் பாடியிருக்கிறார். சுட்டிகள் தந்து உதவிய வெற்றி, யோகன் ஐயா, எஸ்.கே அனைவருக்கும் மிக்க நன்றி.

Tuesday, June 06, 2006

தி.ரா.ச.வின் அறுபதாம் ஆண்டு நிறைவு


இப்போது தான் தி.ரா.சந்திரசேகரன். அவர்களின் தனிமடல் பார்த்தேன். இன்று (06/06/06) ஐயாவின் அறுபதாம் ஆண்டு நிறைவு. வலைப்பதிவுலகில் அவர் எனக்குத் தொடர்ந்து காட்டும் வழிகாட்டுதலுக்கு அன்புடன் நன்றி கூறி அவருடைய அறுபதாம் ஆண்டு நிறைவான இன்று அவரை வணங்கி ஆசி வேண்டி நிற்கிறேன்.

Saturday, June 03, 2006

200: எம்பெருமான் திருமலையில் ஏதேனும் ஆவேனே!


ஊனேறு செல்வத்து உடற்பிறவி யான் வேண்டேன்
ஆனே(று) ஏழ் வென்றான் அடிமைத் திறம் அல்லால்
கூனேறு சங்கம் இடத்தான் தன் வேங்கடத்து
கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே

நப்பின்னைப் பிராட்டியை மணப்பதற்காக ஏழு எருதுகளை வென்ற கண்ணனின் அடிமையாய் வாழும் நல்வாழ்க்கையை அன்றி வலிமை மிக்க உடலில் அருமையான அழகிய புஜங்களும் மார்புகளும் கொண்ட வீர வாழ்க்கையை நான் வேண்டேன். வளைந்திருக்கும் சங்கினைத் தன் இடக்கரத்தில் ஏந்தியிருக்கும் திருவேங்கடத்தானின் கோனேரித் தீர்த்தத்தில் வாழும் கொக்காய் பிறப்பேனே.



ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ
வான் ஆளும் செல்வமும் மண்ணரசும் யான் வேண்டேன்
தேனார் பூஞ்சோலைத் திருவேங்கடச் சுனையில்
மீனாய்ப் பிறக்கும் விதியுடையேன் ஆவேனே

கொக்காய்ப் பிறப்பேன் என்றேன். ஆனால் கொக்காய்ப் பிறந்தால் ஏதோ ஒரு நேரத்தில் திருவேங்கடத்தை விட்டுப் பறந்து போக வாய்ப்புண்டு. அதனால் கொக்காய் பிறப்பதைக் காட்டிலும் மீனாய்ப் பிறப்பது மேல்.

அளவில்லாத செல்வத்துடன் அரம்பையர்களால் சூழப்பட்டு வானுலகத்தை ஆளும் பெரும் வாய்ப்பையும் மண்ணுலகத்தில் அரசாள்வதையும் நான் வேண்டேன். தேனால் நிரம்பியப் பூக்களைக் கொண்ட சோலைகள் உடைய திருவேங்கடத்தில் இருக்கும் நீர்ச்சுனையில் மீனாய்ப் பிறக்கும் பெரும் வாய்ப்பு உடையவன் ஆவேனே.



பின்னிட்ட சடையானும் பிரமனும் இந்திரனும்
துன்னிட்டுப் புகல் அரிய வைகுந்த நீள்வாசல்
மின்வட்டச் சுடராழி வேங்கடக்கோன் தான் உமிலும்
பொன்வட்டில் பிடித்(து) உடனே புகப் பெறுவேன் ஆவேனே

மீனாய்ப் பிறந்தாலும் வேங்கடவன் அருகாமை கிடைக்காது. அது மட்டுமின்றி என்றாவது அந்த நீர்ச்சுனை வற்றிப் போனால் மீனாய் எடுத்தப் பிறவியும் வீணே போகும்.

பின்னலுடைய சடையணிந்த சிவபெருமானும் பிரமனும் இந்திரனும் விரைந்து உன்னைக் காண்பதற்காக வைகுந்தத் திருவாசலில் குழுமி நிற்கின்றனர். நீ மின்னலைப் போல் சுழலும் வட்ட வடிவு கொண்ட சக்கரத்தைக் கொண்டுள்ளாய். திருவேங்கடத்தலைவா. நீ உன் எச்சிலை உமிழும் போது அதனைத் தாங்குவதற்காக பொன்வட்டிலைப் பிடித்து நின்று என்றும் உன்னுடனே எல்லா இடத்திற்கும் செல்லும் பேறு பெறுவேன் ஆவேனே.



ஒண்பவள வேலை உலவு தண் பாற்கடலுள்
கண் துயிலும் மாயோன் கழலிணைகள் காண்பதற்கு
பண்பகரும் வண்டினங்கள் பண் பாடும் வேங்கடத்து
செண்பகமாய் நிற்கும் திருவுடையேன் ஆவேனே

நீ உமிழும் பொன்வட்டிலைத் தாங்கும் அடிமையாய் இருப்பேன் என்றேன். ஆனால் அதனால் உன் திருமுகத்தைக் காணும் பேறு மட்டுமே கிடைக்கும். திருவடிகள் அல்லவா அடியவர்க்குப் பெரும்பேறு.

அருமையான பவளங்களை அலைகள் கரையினில் தினமும் சேர்க்கும் குளிர்ந்தத் திருப்பாற்கடலில் அறிதுயில் புரியும் மாயவா உன் கழலிணைகள் காண்பதற்கு வழி தெரிந்துவிட்டது. பாடல்களைப் பாடிய படி வண்டுக் கூட்டங்கள் திரியும் திருவேங்கட மலையில் ஒரு செண்பக மரமாய் நிற்கும் பெரும்பேறு உடையேன் ஆவேனே. தினந்தோறும் உன் திருவடிகளுக்கு அர்ச்சனையாய் செண்பக மலர்கள் தந்து எப்போதும் உன் திருவடிகளில் நிலையாக இருப்பேனே.

கம்பமத யானை கழுத்தகத்தின் மேலிருந்து
இன்பமரும் செல்வமும் இவ்வரசும் யான் வேண்டேன்
எம்பெருமான் ஈசன் எழில் வேங்கட மலை மேல்
தம்பகமாய் நிற்கும் தவமுடையேன் ஆவேனே

செண்பக மரமாய் நிற்கும் பேறு பெரும் புண்ணியம் செய்தவர்க்கே கிட்டுமோ என்னவோ? அப்படியென்றால் திருவேங்கட மலை மேல் ஒரு முள்செடியாயாவது பிறக்கும் பேறு பெறுவேன்.

வலிமையும் அழகும் மிகுந்த பட்டத்து யானையின் கழுத்தின் மீதேறி இன்பத்தை நுகரும் செல்வத்தையும் அரசாட்சியையும் நான் வேண்டேன். எனக்கும் இந்த ஈரேழ் உலகங்களுக்கும் தலைவனான திருவேங்கட நாதனின் திருமலை மேல் ஒரு முள்செடியாய் நிற்கும் தவமுடையேன் ஆவேனே.



மின்னனைய நுண்ணிடையார் உருப்பசியும் மேனகையும்
அன்னவர்தம் பாடலொடு ஆடலவை ஆதரியேன்
தென்னவென வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்துள்
அன்னனைய பொற்குடவாம் அருந்தவத்தன் ஆவேனே


முள்செடியாய் நின்றால் எனக்கு மட்டுமே பயன். எம்பெருமானுக்கோ அடியவர்களுக்கோ எந்த பயனும் இல்லை. அதனால் திருவேங்கடமலையில் இருக்கும் பல சிகரங்களுக்குள் ஒரு சிகரமாக நான் நின்றால் இறைவன் இருக்கும் இடம் இது என்று அடியவர்களுக்கு உணர்த்தும் பேறு கிடைக்கும். (சிகரம் என்றால் மலைச் சிகரம் என்றும் கோபுரம் என்றும் பொருள் தரும்).

மின்னலைப் போன்ற நுண்ணிய இடையினை உடைய ஊர்வசியும் மேனகையும் அவர்களைப் போன்றவர்களும் பாடியும் ஆடியும் மகிழ்விக்கும் இன்பங்களை நான் விரும்பேன். அவர்களின் பாடல் ஆடலைவிட இனிமையாக தேனினைப் போல் (தென்ன வென) வண்டுக் கூட்டங்கள் பண்களைப் பாடி ஆடும் திருவேங்கடத்துள் அழகு மிகுந்த பொற்சிகரமாக ஆகும் அரிய தவத்தை உடையவன் ஆவேனே.

வானாளும் மாமதி போல் வெண்குடைக்கீழ் மன்னவர்தம்
கோனாகி வீற்றிருந்து கொண்டாடும் செல்வறியேன்
தேனார் பூஞ்சோலைத் திருவேங்கட மலை மேல்
கானாறாய்ப் பாயும் கருத்துடையேன் ஆவேனே.

மலைச்சிகரமாய் நின்றாலும் யாருக்கும் பயனின்றிப் போகலாம். எத்தனையோ சிகரங்கள் இருக்கின்றன; அதனால் அடியார்களுக்கும் பயனின்றிப் போகலாம். ஆனால் திருவேங்கட மலையில் ஒரு காட்டாறாய் நான் இருந்தால் உன் திருமுழுக்குக்கும் ஆவேன்; அடியார்களின் தாகத்திற்கும் ஆவேன்.

வானத்தில் இருக்கும் விண்மீன்களையெல்லாம் தன் ஒளியால் வென்று வானத்தை ஆளும் முழுமதியைப் போல் வெண்கொற்றக் குடையின் கீழ் அரசாளும் மன்னவர்களை எல்லாம் திறத்தால் வென்று அவர்கள் தலைவனாக வீற்றிருக்கும் பெருமையையும் நான் வேண்டேன். தேன் நிரம்பும் பூக்கள் உடைய சோலைகளைக் கொண்ட திருவேங்கட மலை மேல் ஒரு காட்டாறாய் பாயும் எண்ணத்தைக் கொண்டவன் ஆவேனே.



பிறையேறு சடையானும் பிரமனும் இந்திரனும்
முறையாய பெருவேள்விக் குறை முடிப்பான் மறையானான்
வெறியார் தண் சோலைத் திருவேங்கடமலை மேல்
நெறியாய்க் கிடக்கும் நிலையுடையேன் ஆவேனே

பொற்சிகரமாய் நின்றாலும் உன் கோயிலைச் சுற்றி அடர்ந்த காடுகள் இருப்பதால் அடியார்களால் உன் கோயிலை அடைய முடியாமல் போகலாம். அதனால் அவர்கள் உன் கோயிலை அடையும் வழியாக நான் ஆவேன்.

பிறையினை தன் சடையில் வைத்திருக்கும் சிவபெருமானும் பிரமனும் இந்திரனும் முறையுடன் உன்னை வேண்டிச் செய்யும் பெரும் வேள்விகளுக்கான பயன்களைத் தந்து அவர்களின் குறை தீர்ப்பாய். அவர்கள் முறை என்ன என்று அறியும் வகை சொல்லும் வேதங்களாய் நின்றாய். நறுமணம் கமழும் குளிர்ந்த சோலைகளைக் கொண்ட திருவேங்கட மலை மேல் அடியவர்கள் உன் திருக்கோயிலை அடையும் வழியாகக் கிடக்கும் நன்னிலை உடையவன் ஆவேனே.


செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே

உன் கோயிலுக்கு வரும் வழிகள் பல இருக்கலாம். அதனால் உன்னைக் காண வரும் அடியார்களில் சிலர் நான் வழியாய்க் கிடந்தாலும் என் மேல் வராமல் வேறு வழியாய் உன் கோயிலை அடையலாம். அவர்கள் எல்லோருடைய திருவடிகளும் என் மேல் பட வேண்டும் என்றால் உன் திருக்கோயிலின் படியாய் கிடக்கும் பேறு வேண்டும்.

பற்பல பிறவிகளாய் செய்த ஒன்றுடன் ஒன்று பிணைந்த காட்டுச் செடிகளைப் போல் இருக்கும் என் வலிய வினைக்கூட்டங்களைத் தீர்க்கும் திருமகள் மணாளா. நான் என்றோ செய்த சிறிய நல்வினையை நினைவில் நெடுங்காலம் கொண்டு எனைக் காப்பவனே நெடியவனே. திருவேங்கடவா. உன் கோயிலின் வாசலில் அடியவர்களும் வானவர்களும் அரம்பையர்களும் வந்து உன்னைக் காணுமாறு ஒரு படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே.



உம்பர் உலகாண்டு ஒரு குடைக்கீழ் உருப்பசி தன்
அம்பொற்கலை அல்குல் பெற்றாலும் ஆதரியேன்
செம்பவள வாயான் திருவேங்கடமென்னும்
எம்பெருமான் பொன்மலை மேல் ஏதேனும் ஆவேனே.

நான் ஏன் இப்படி இது ஆவேன்; அது ஆவேன் என்று உன்னை வேண்டிக் கொண்டிருக்கிறேன். அடியவனுக்கு அழகு தன் தலைவன் தன்னை எந்த நிலையில் வைத்தாலும் அதில் மகிழ்ந்திருந்து தலைவனுக்குத் தொண்டு செய்வதே. அதனால் நீ என்னை எந்த நிலையில் வைத்தாலும் அதற்கிணங்க ஏதேனும் ஒன்றாய் திருவேங்கட மலை மேல் நான் ஆவேன்.

தேவர்கள் உலகங்களை ஒரு குடை கீழ் ஆண்டு ஊர்வசியின் அழகிய பொன்னாடைகள் அணிந்த இடையிலிருந்து கிடைக்கும் இன்பத்தைப் பெற்றாலும் அதனை விரும்பேன். சிவந்த செம்மையான் திருப்பவள வாயானின் திருவேங்கடமென்னும் எம்பெருமானுடைய பொன் மலையில் அவன் திருவுள்ளப்படி ஏதேனும் ஆவேனே.


மன்னிய தண் சாரல் வடவேங்கடத்தான் தன்
பொன்னியலும் சேவடிகள் காண்பான் புரிந்திறைஞ்சி
கொன்னவிலும் கூர்வேல் குலசேகரன் சொன்ன
பன்னிய நூல் தமிழ்வல்லார் பாங்காய பத்தர்களே

என்றென்றும் குளிர்ந்த சாரல் வீசும் வடவேங்கடத்தை உடைய எம்பெருமானின் பொன்னைப் போன்ற செவ்விய திருவடிகளைக் காண்பதற்கு இறைஞ்சி எல்லா எதிரிகளையும் வெல்லும் கூரிய வேலினைக் கைக் கொண்ட குலசேகரன் சொன்ன இந்தத் தமிழ்ப்பாடல்களை சொல்லி மனத்தில் வைத்தவர்கள் இறைவனுக்கு மிகவும் நெருக்கமான பக்தர்கள் ஆவார்கள்.

Thursday, May 25, 2006

196: பட்டம் கொடுத்தவரின் ஆராய்ச்சிக்காக

மதுமிதா அக்கா வலைப்பூ நண்பர்கள் எல்லாம் மகிழும்படி பட்டம் எல்லாம் கொடுத்தார்கள். அந்த நன்றிக் கடனைத் தீர்ப்பதற்கு என்ன வழி என்று பார்த்துக் கொண்டிருந்தேன். இப்போது அவர்களே தன்னுடைய ஆராய்ச்சியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தங்கள் வலைப்பூக்களைப் பற்றிய விவரங்களைச் சொல்லுங்கள் என்று கேட்டிருக்கிறார்கள். இரு ஒரு நல்ல வாய்ப்பு என்பதால் (அவருக்கு உதவி செய்ய நல்ல வாய்ப்புன்னு சொல்றேங்க. நம்புங்க) உடனே செயல்படுத்துகிறேன்.

வலைப்பதிவர் பெயர்: குமரன்

வலைப்பூ அறிமுகம் செய்தவர்: நண்பர் சிவபுராணம், கீதம் சங்கீதம் சிவராஜா (சிவா)

ஊர்: பிறந்தது மதுரை. வாழ்வது மினெசோட்டா மாநிலத்தில் ஓர் ஊரில்.

நாடு: அமெரிக்கா.

இது எத்தனையாவது பதிவு: 196 (என் எல்லா வலைப்பூக்களையும் சேர்த்து; சில பதிவுகளை பதிவுகளாகவே எண்ணவில்லை; அவற்றை இந்த எண்ணிக்கையில் சேர்க்கவில்லை)

இப்பதிவின் சுட்டி: http://koodal1.blogspot.com/2006/05/196_25.html

சந்தித்த அனுபவங்கள்: நிறைய. எல்லோருக்கும் கிடைக்கும் அனுபவங்கள் தான். வலை பதிக்கத் தொடங்கிய புதுதில் நிறைய எழுதினேன். தமிழ்மண வார நட்சத்திரமாக ஆக்கப்பட்ட போது அதில் கிடைத்த கவனமும் நல்ல ஊக்கம் தந்தது. ஆனால் அதில் என்னையறியாமல் 'நான்' என்னும் எண்ணம் தலைதூக்குவதை அந்த வார இறுதிக்குள் உணர முடிந்தது. அதனால் வலைப்பதிப்பதில் கொஞ்சம் சுணக்கம் ஏற்பட்டது. பின்னர் பழைய படி வலைப்பதிப்பதில் வேகம் வந்தது; ஆனால் இந்த சுழற்சி அலையலையாக வந்து கொண்டே இருக்கிறது. மற்ற நண்பர்களிடமும் இது நடப்பதைக் கவனித்தேன். இது நான் மேலும் என்னையே கவனிக்க ஒரு வாய்ப்பும் விழிப்பும் தந்தது.

பெற்ற நண்பர்கள்: நிறைய. உலகெங்கும். குழு மனப்பான்மையுடன் இயங்கும் மனிதனின் இயற்கை குணம் இணையத்திலும் வெளிப்படுவதால் நண்பர்களுக்கு இணையான எண்ணிக்கையில் பிடிக்காதவர்களையும் ஏற்படுத்திக் கொள்ள நல்ல வாய்ப்பை இந்த வலைப்பூக்கள் நல்கும். அதனால் கொஞ்சம் விழிப்பாக இருக்க வேண்டும்.

கற்றவை: அதனை அனுபவங்களிலேயே சொல்லிவிட்டேன். ஆனால் கற்றது கைம்மண்ணளவு என்பதை தினந்தோறும் உணர்த்தும் இடம் இந்த இணையம்.

எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: நேரில் முகத்திற்கு முன்னால் சொல்லத் தயங்கும் சில கருத்துகளை (முக்கியமாக நல்ல கருத்துகளை) எழுத்தில் நேரடியாகவோ மறைமுகமாகவோ சொல்ல முடிகிறது.

இனி செய்ய நினைப்பவை: தொடங்கிய பதிவுகளில் எல்லாம் தொடர்ந்து எழுதுவது

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு: ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. மதுமிதாவுக்குத் தெரிந்ததை ஆராய்ச்சியிலும் நூலிலும் பயன்படுத்தலாம்.

இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்: இணையத்தில் வலைப்பதிக்கும் எல்லோரும் தங்கள் சுதந்திரத்தைப் பேணுவதைப் போல் மற்றவர் சுதந்திரத்தையும் பேணவேண்டிய பொறுப்பினை உணர்ந்து செயல்படவேண்டும்.

1.
வலைப்பூ பெயர் : கூடல்
சுட்டி: http://koodal1.blogspot.com/
முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : 05/அக்டோபர்/2005
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: எழுதுவதிலும் பேசுவதிலும் உள்ள ஆர்வம்; தற்போது வாழும் இடத்தில் தமிழில் பேசவோ எழுதவோ வாய்ப்புகள் குறைவு. அதனால் தமிழில் அறிந்ததையும் மனதில் படுபவைகளையும் எழுதுவதற்காக இந்த வலைப்பூவைத் தொடங்கினேன்.

2.
வலைப்பூ பெயர் : அபிராமி பட்டர்
சுட்டி : http://abiramibhattar.blogspot.com/
முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : 03/அக்டோபர்/2005
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதிக்கு சொற்பொருள் விளக்கம் தருவதற்காக.

3.
வலைப்பூ பெயர் : விஷ்ணு சித்தன்
சுட்டி: http://vishnuchitthan.blogspot.com/
முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : 03/அக்டோபர்/2005
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: விஷ்ணு சித்தராகிய பெரியாழ்வாரின் பாசுரங்களுக்கு சொற்பொருள் விளக்கம் தருவதற்காக.

4.
வலைப்பூ பெயர் : மதுரையின் ஜோதி
சுட்டி :http://nadanagopalanayaki.blogspot.com/
முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : 05/அக்டோபர்/2005
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: மதுரையின் ஜோதி என்று போற்றப்படும் நடனகோபால நாயகி சுவாமிகளின் சௌராஷ்ட்ர, தமிழ்ப் பாடல்களுக்கு சொற்பொருள் விளக்கம் தருவதற்காக.

5.
வலைப்பூ பெயர் : பஜ கோவிந்தம்
சுட்டி :http://bgtamil.blogspot.com/
முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : 16/அக்டோபர்/2005
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: வடமொழி நூலான ஆதிசங்கரரின் பஜ கோவிந்தத்திற்கு சொற்பொருள் விளக்கம் தருவதற்காக.

6.
வலைப்பூ பெயர் : திருவாசகம் ஒரடொரியொ
சுட்டி :http://oratariothiruvasagam.blogspot.com/
முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : 17/அக்டோபர்/2005
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: திருவாசகத்தில் சில பாடல்களுக்கு அண்மையில் இசைஞானி இளையராஜா ஒரடொரியொ முறையில் இசையமைத்திருக்கிறார். அந்தப் பாடல்களுக்கு சொற்பொருள் விளக்கம் தருவதற்காக.

7. வலைப்பூ பெயர் : பாட்டுக்கொரு புலவன் பாரதி
சுட்டி :http://nambharathi.blogspot.com/
முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : 02/நவம்பர்/2005
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: பாட்டுக்கொரு புலவன் பாரதியின் பாடல்களுக்கு சொற்பொருள் விளக்கம் சொல்வதற்காக

8.
வலைப்பூ பெயர் : கோதை தமிழ்
சுட்டி :http://godhaitamil.blogspot.com/
முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : 24/நவம்பர்/2005
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: கோதை நாச்சியாராகிய ஆண்டாளின் திருப்பாவை பாடல்களுக்கு சொற்பொருள் விளக்கம் சொல்வதற்காக

9.
வலைப்பூ பெயர் : இந்தியக் கனவு 2020
சுட்டி :http://abtdreamindia2020.blogspot.com/
முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : 08/ஜனவரி/2006
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: இந்தப் பெயரில் தொடங்கப் பட்டுள்ள ஒரு இயக்கத்தை அறிமுகம் செய்வதற்கும் அதன் செயல்பாடுகளைப் பற்றிப் பேசுதற்கும்.

10.
வலைப்பூ பெயர் : சகலகலாவல்லி மாலை
சுட்டி :http://sakalakalavalli.blogspot.com/
முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : 31/டிசம்பர்/2005
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: குமரகுருபரரின் சகலகலாவல்லிமாலைக்கு சொற்பொருள் விளக்கம் தருவதற்காக.

11.
வலைப்பூ பெயர்: படித்ததில் பிடித்தது
சுட்டி: http://patipiti.blogspot.com/
முதல் பதிவு ஆரம்பித்த நாள், வருடம்: 05/பிப்ரவரி/2006
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: இணையத்திலும் வெளியிலும் படித்தவற்றில் பிடித்தவற்றைப் பற்றி எழுத

12.
வலைப்பூ பெயர்: விவேக சிந்தாமணி
சுட்டி: http://vivegasinthamani.blogspot.com/
முதல் பதிவு ஆரம்பித்த நாள், வருடம்: 22/பிப்ரவரி/2006
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: விவேக சிந்தாமணி என்னும் தமிழ் இலக்கியத்திற்குச் சொற்பொருள் விளக்கம் சொல்லுவதற்காக.

13.
வலைப்பூ பெயர்: ஐயன் வள்ளுவனின் இன்பத்துப் பால்
சுட்டி: http://inbame.blogspot.com/
முதல் பதிவு ஆரம்பித்த நாள், வருடம்: 24/பிப்ரவரி/2006
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: திருக்குறளின் இன்பத்துப் பால் குறட்பாக்களுக்குச் சொற்பொருள் விளக்கம் சொல்லுவதற்காக.

14.
வலைப்பூ பெயர்: கோளறு பதிகம்
சுட்டி: http://kolarupathikam.blogspot.com/
முதல் பதிவு ஆரம்பித்த நாள், வருடம்: 27/பிப்ரவரி/2006
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: திருஞான சம்பந்தரின் கோளறு பதிகத்திற்குச் சொற்பொருள் விளக்கம் சொல்லுவதற்காக.

15.
வலைப்பூ பெயர்: கேட்டதில் பிடித்தது
சுட்டி: http://kelpidi.blogspot.com/
முதல் பதிவு ஆரம்பித்த நாள், வருடம்: 09/மார்ச்/2006
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: கேட்ட பாடல்களில் பிடித்தவற்றைப் பாடல் வரிகளுடன் தருவதற்காக.

16.
வலைப்பூ பெயர்: லிங்காஷ்டகம்
சுட்டி: http://lingastakam.blogspot.com/
முதல் பதிவு ஆரம்பித்த நாள், வருடம்: 07/ஏப்ரல்/2006
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: வடமொழி நூலான லிங்காஷ்டகத்திற்குச் சொற்பொருள் விளக்கம் தருவதற்காக.

17.
வலைப்பூ பெயர்: சொல் ஒரு சொல்
சுட்டி: http://solorusol.blogspot.com/
முதல் பதிவு ஆரம்பித்த நாள், வருடம்: 12/ஏப்ரல்/2006
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: தனித் தமிழ் சொற்களையும் பழந்தமிழ் சொற்களையும் அறிமுகம் செய்து புழக்கத்தில் கொண்டுவர ஒரு சிறு முயற்சி.

18.
வலைப்பூ பெயர்: தமிழ் அறிவியல்
சுட்டி: http://tamilariviyal.blogspot.com/
முதல் பதிவு ஆரம்பித்த நாள், வருடம்: 06/மே/2006
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: அறிவியல் கட்டுரைகளைத் தமிழில் எழுதுதற்கும் பிறமொழி அறிவியல் கட்டுரைகளைத் தமிழில் மொழிபெயர்ப்பதற்கும்

19.
வலைப்பூ பெயர்: சின்ன சின்ன கதைகள்
சுட்டி: http://chinnakathai.blogspot.com/
முதல் பதிவு ஆரம்பித்த நாள், வருடம்: 23/மே/2006
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: வலைப்பூவின் தலைப்பு சொல்லுவது போல் சின்னச் சின்னக் கதைகளை எழுதுவதற்காக

20.
வலைப்பூ பெயர்: திருநீற்றுப் பதிகம்
சுட்டி:http://thiruneeru.blogspot.com/
முதல் பதிவு ஆரம்பித்த நாள்: 25/மே/2006
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: திருஞானசம்பந்தரின் திருநீற்றுப் பதிகத்திற்குச் சொற்பொருள் விளக்கம் சொல்வதற்காக

Wednesday, April 26, 2006

175: மதுரை - 3

சரி இன்னைக்காவது நாம மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள்ளப் போகலாம். கீழே இருக்கறப் படம் ஏற்கனவே சொன்ன மாதிரி எனக்கு மின்னஞ்சலில் வந்த புகைப்படம். ஆனா அருமையான படம். இது வடக்காடி வீதியினைக் காட்டும் புகைப்படம்.

புகைப்படத்தைப் பற்றிப் பேசுவதற்கு முன் அன்னை அங்கயற்கண்ணியின் வரலாறு சுருக்கமாக.

மதுரையை ஆண்ட மலயத்துவஜ பாண்டியன் தனக்கு வாரிசு வேண்டுமென்பதற்காக வளர்த்த வேள்வித்தீயில் தோன்றியவள் அன்னை அங்கயற்கண்ணி. உமையன்னையின் அம்சம். அழகிய மீனைப் போன்றக் கண்களைக் கொண்டிருந்ததாலும் மீன் எப்படி தன் கண்பார்வையாலேயே தன் குஞ்சுகளைப் பாதுகாக்கிறதோ அது போல் தன் அடியவர்களைப் பாதுகாப்பவள் என்பதாலும் இவளுக்கு அங்கயற்கண்ணி (அம்+கயல்+கண்ணி - அழகிய மீனைப் போன்ற கண்கள் உடையவள்), மீனாக்ஷி (மீன் + அக்ஷி - அக்ஷம் என்றால் வடமொழியில் கண்) என்ற பெயர்கள் அமைந்தன. பெற்றவர் வைத்தப் பெயர் தடாதகைப் பிராட்டியார்.

அன்னை வேள்வித்தீயிலிருந்து சிறுமியாகத் தோன்றியபோது அவளுக்கு மூன்று கொங்கைகள் இருந்தன. அதனைக் கண்டு பெற்றோரான மலையத்துவசனும் காஞ்சனமாலையும் வருந்த, தகுந்த மணவாளனை இந்தப் பெண் காணும் போது இயற்கைக்கு மாறாக இருக்கும் மூன்றாவது கொங்கை மறையும் என்று வானமகள் சொல் சொன்னது.

அன்னையும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அரச மகளுக்குரிய எல்லாக் கலைகளையும் அரசமகனுக்குரிய கலைகளையும் கற்றுத் தேறினாள். அன்னை தகுந்த வயதுக்கு வருமுன்னரே பாண்டியன் காலமாக அன்னையை மதுரைக்கு அரசியாக முடிசூட்டினர்.

அரசியான பின் அவளும் அரசர்களுக்குரிய முறைப்படி எல்லா திசையிலும் சென்று பகையரசர்களை வென்று வாகை சூட விரும்பி திக்விஜயம் மேற்கொண்டாள். எல்லாத் திசைகளிலும் உள்ள அரசர்களை வென்று வடதிசையில் கயிலைக்குச் சென்று எல்லா சிவகணங்களையும் வெல்கிறாள். அன்னையின் வீரத்தைக் கண்டு சிவபெருமானே போருக்கு எழுந்தருளுகிறார். அன்னையை ஐயன் கண்டதும் அன்னையின் மூன்றாவது கொங்கை மறைகிறது. அதனைக் கண்ட அன்னை இவரே தனக்கு மணாளன் என்று உணர்ந்து பெண்ணரசிக்குரிய நாணத்தால் தலை குனிகிறாள். ஐயன் தான் மதுரைக்கு எழுந்தருளி அவளை மணப்பதாக உறுதி கூறுகிறார். அதன் படி மதுரைக்கு எழுந்தருளி அன்னையை மணந்து சுந்தரப்பாண்டியனாக வேப்பம்பூ மாலை சூடி மதுரை அரசனாக மூடி சூட்டிக் கொள்கிறார். பின்னர் அன்னைக்கும் ஐயனுக்கும் முருகப் பெருமானின் அம்சமாக உக்கிரப் பாண்டியன் தோன்ற அவனுக்குத் தகுந்த வயது வந்ததும் அரசனாக முடிசூட்டி அன்னையும் ஐயனும் மதுரை நகரில் கோயில் கொள்கின்றனர். அது தொடங்கி வாழையடி வாழையாக பாண்டிய அரசர்கள் அன்னை மீனாட்சியின் பிரதிநிதியாக மதுரையை ஆண்டு வந்தனர். அன்னை இன்றும் மதுரை நகருக்கு அரசியாய் விளங்குவதால் மதுரை வாழ் மக்கள் அனைவரும், அவர் சைவரோ வைணவரோ, யாராயிருந்தாலும் அன்னையின் அருளை நாடி நாள்தோறும் அன்னையின் கோயிலுக்கு வந்து சென்ற வண்ணமே இருக்கிறார்கள்.

மதுரையைக் கோயில் மாநகர் என்று கூறுவார்கள். திட்டமிட்டுக் கட்டிய பழைய நகரங்களில் ஒன்று மதுரை. கோயிலை மையமாக வைத்து திருவீதிகள் நான்கு புறமும் அமைந்திருக்கின்றன. கோவிலின் வெளித் திருச்சுற்றாக இருக்கும் ஆடி வீதி, அதனைச் சுற்றி சித்திரை வீதி, ஆவணி மூல வீதி, மாசி வீதி, வெளி வீதி எனத் தெருக்கள் நீள் சதுரமாக கோயிலைச் சுற்றி அமைந்துள்ளன. மதுரையில் மாதந்தோறும் திருவிழாக்கள் நடந்தவண்ணம் இருக்கும். அன்னையும் ஐயனும் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திருவீதியில் வலம் வருவர். எந்த மாதத்தில் எந்த வீதியில் வலம் வருவார்களோ, அந்த வீதிக்கு அந்த மாதத்தின் பெயரை வைத்திருக்கிறார்கள்.



இந்தப் புகைப்படத்தில் இருப்பது வடக்கு ஆடி வீதி. கோயிலுக்குள்ளேயே இருக்கிறது இந்த திருவீதி. இந்தப் படத்தைப் பார்க்கும் போது பல நினைவுகள் பொங்கி வருகின்றன. முதலில் எதிரே தூரத்தில் நான்கு தூண்கள் மட்டும் தெரிகிற திருக்கல்யாண மண்டபம். ஒவ்வொரு வருடமும் சித்திரைத் திருவிழாவில் அன்னைக்கும் அப்பனுக்கும் திருக்கல்யாணம் இந்த மண்டபத்தில் தான் நடக்கிறது. அது மட்டும் அன்றி கோவிலில் நடக்கும் எல்லா வித சொற்பொழிவுகளும், இசை நிகழ்ச்சிகளும் இந்த மண்டபத்தில் தான் நடைபெறும். இந்த மண்டபத்தில் சொற்பொழிவு ஆற்றும் போது தான் வாரியார் சுவாமிகளின் அருளாசியும் பாராட்டுக்களும் அடியேனுக்கு கிடைத்தன. பல முறை அவரின் சொற்பொழிவுகளை இந்த மண்டபத்தில் கேட்டிருக்கிறேன். அது மட்டும் அன்றி மற்ற பலருடைய சொற்பொழிவுகளும் இசைக் கச்சேரிகளும் கேட்டு ரசித்தது இந்த மண்டபத்தில் தான்.

அதற்கடுத்து நினைவிற்கு வருவது திருக்குறள் சபை. வலப்பக்கம் தெரியும் பெரிய கோபுரத்தின் முன்பு ஒரு சின்ன மஞ்சள் நிறக் கட்டடம் தெரிகிறதே. மதில் சுவரை ஒட்டிய கட்டிடம் அன்று. கோபுரத்திற்கு முன் புறம் உள்ளது. இந்த சிறு மண்டபத்தில் திருவள்ளுவர் சிலை இருக்கும். அதற்கு முன் தினந்தோறும் திருக்குறள் சொற்பொழிவு நடைபெறும். கேட்டு இன்புறும் வாய்ப்பு சில முறை கிட்டியுள்ளது.

அடுத்து நினைவிற்கு வருவது இசைத் தூண்கள். இந்தப் படத்தில் அவை தெரியவில்லை. ஆனால் அருமையான தூண்கள் அவை. அந்தத் தூண்களில் வெவ்வேறு இடத்தில் தட்டும் போது வெவ்வேறு இசை வெளிப்படும். இது போன்ற இசைத் தூண்களை திருமாலிருஞ்சோலையான அழகர் கோவிலிலும் நாச்சியார் திருமாளிகையாகிய வில்லிபுத்தூரிலும் கண்டிருக்கிறேன். மதுரையில் வாழும் பலருக்கே தெரியாத வியப்பான விஷயம் இது.

அடுத்து நினைவிற்கு வருவது இந்தப் படத்தில் தெரியும் மரத்தின் கீழ் வீற்றிருக்கும் பிள்ளையார். வாராவாரம் அதிகாலை 5 மணிக்கு இவர் திருமுன்பிருந்து தொடங்கி இறைவன் திருப்பெயர்களைப் பாடிக் கொண்டு கோவிலை வலம் வரும் சாயி பஜன் குழுவினருடன் பலமுறை கோவிலை வலம் வந்தது நினைவிற்கு வருகிறது.

அடுத்து நினைவிற்கு வருவது இடப்புறம் கொஞ்சமே கொஞ்சமாய் தெரியும் பதினாறு கால் மண்டபம். இந்த மண்டபத்தில் தான் முறுக்கு, சுண்டல் போன்றவற்றை விற்கும் சிறு வியாபாரிகள் அமர்ந்திருப்பார்கள். ஒவ்வொரு முறை கோவிலுக்கு வரும் போதும் இவர்களிடம் வாங்கித் தின்ற தின்பண்டங்கள் ஒவ்வொன்றும் தமிழமுதைப் போல் என்றும் நினைவில் தித்திப்பவை. :)

இவை எல்லாவற்றையும் விட இந்தப் படத்தில் எனக்கு மிகவும் பிடித்து அந்த நீல நிற மேகக் கூட்டங்கள் தான். என்ன அருமையான படம் இது. அந்த மேகக் கூட்டங்கள் தான் இந்தப் படத்தின் அழகுக்கு அழகூட்டுகிறது என்று எண்ணுகிறேன். இந்தப் படத்தை எடுத்தவரும் அதனை அனுப்பியவர்களும் நூறாண்டு காலம் நலமாய் வாழட்டும்!

Monday, April 10, 2006

168: பங்குனி உத்திரம் - 3

பிறந்த நாள்... இன்று பிறந்த நாள்... நாம் பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம் மறந்த நாள்....

என்ன திடீரென்று இந்தப் பாடலைப் பாடுகிறேன் என்று கேட்கிறீர்களா? இன்று யாருக்குப் பிறந்த நாள் என்பதை இந்தப் பதிவில் சொல்லியிருக்கிறேன். மெதுவாக முழுமையாக இந்தப் பதிவைப் படித்துப் பாருங்கள். :-)

***

தைப்பூசம், கந்தர் சஷ்டி, திருக்கார்த்திகை, வைகாசி விசாகம் என்பன போல் பங்குனி உத்திரம் என்றாலே அது முருகன் கோவில் திருவிழா நாள் என்று தான் எல்லோருக்கும் உடனே தோன்றுவது. எங்கெல்லாம் முருகன் கோவில் கொண்டுள்ளானோ அங்கெல்லாம் பங்குனி உத்திரம் தவறாமல் கொண்டாடப்படுவதால் பங்குனி உத்திரம் என்றாலே குமரக்கடவுளின் நினைவு தான் நமக்கு வருகிறது. எனக்கும் அப்படித் தான். ஆனால் நாள் செல்லச் செல்ல நம் சமயத்தில் உள்ள மற்ற கடவுளர்களுக்கும் இந்த திருநாளில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதனால் தான் இந்தப் பதிவைத் தொடராக எழுதினேன். எனக்கு உடனே நினைவுக்கு வந்த விஷயங்களை இந்த மூன்று பதிவுகளிலும் எழுதியிருக்கிறேன். இதற்கும் மேலாக பல பெருமைகள் இந்தத் திருநாளுக்கு இருக்கலாம். படிப்பவர்கள் நான் எதையாவது விட்டிருந்தால் தயைசெய்து சொல்லுங்கள்.

***

எந்த காரணத்தினால் பங்குனி உத்திரம் முருகனுக்கு உகந்ததாகக் கொண்டாடப் படுகிறது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் எங்கள் குல தெய்வமான பழனியாண்டி அன்று தான் திருத்தேர் விழா கண்டருள்கிறான். முடிந்த வரை ஒவ்வொரு ஆண்டும் என் பெற்றோர் என் சிறு வயதில் பங்குனி உத்திரத் தேர்த் திருவிழாவிற்காக எங்களை (என்னையும் என் தம்பியையும்) பழனிக்குக் கூட்டிச் சென்றுள்ளனர். அதனால் பழனி தண்டாயுதபாணியின் மேல் எனக்குத் தனியொரு பாசம். இன்றும் ஒவ்வொரு முறை மதுரைக்குச் செல்லும் போது பழனிக்குச் செல்லத் தவறுவதில்லை. ஒவ்வொரு முறையும் அவனைப் பார்க்கும் போது கண் பனி சோரும்.

முருகன் குமரன் குகன் என்று மொழிந்(து)
உருகும் செயல் தன்(து) உணர்(வு) என்(று) அருள்வாய்
பொருபுங்கவரும் புவியும் பரவும்
குருபுங்கவ எண்குண பஞ்சரனே

கூகா என என் கிளை கூடியழப்
போகா வகை பொருள் பேசியவா
நாகாசல வேலவ நாலுகவித்
தியாகா சுரலோக சிகாமணியே

செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்
சும்மா இரு சொல் அற என்றலுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே

இந்தப் பாடல்களின் பொருளினை இராகவன், இராமநாதன் இவர்களின் பதிவில் பாருங்கள்.

***

இப்போது இதுவரை சொன்னதைப் பற்றியத் தொகுப்புரை:

1. திருவரங்கத்தில் திருவரங்கநாதனும் திருவரங்கநாயகியும் சேர்த்திச் சேவை அருளும் நாள்
2. வில்லிபுத்தூரில் ஆண்டாள் நாச்சியாரும் ரெங்கமன்னாரும் மணக்கோலத்தில் காட்சி தரும் நாள்
3. மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் வைகை ஆற்றில் எழுந்தருளும் நாள்
4. ஜனக ராஜ குமாரி ஜானகி இராகவனை மணந்த நாள்
5. நாமக்கல் இலட்சும் நரசிம்மப் பெருமாளும் நாமகிரித் தாயாரும் தேரில் பவனி வரும் நாள்
6. அன்னை திருமகள் பாற்கடலில் இருந்து தோன்றிய நாள்
7. மோகினி சுதனான ஐயன் ஐயப்பன் தோன்றிய நாள்
8. பார்வதி பரமேஸ்வரனை மணந்த நாள்
9. முருகனின் திருவருளால் மதுரை மாநகரில் உங்கள் அன்பிற்கினிய அடியேன் பிறந்த நாள்
10. முருகன் அருள் முன்னிற்க அடியேனின் அன்புத் திருமகள் பிறந்த நாள்

வணங்கி நிற்கிறோம். வாழ்த்துங்கள்.