Tuesday, June 29, 2010

இன்பத்துப் பால்: காதற் சிறப்பு உரைத்தல் – 1

தலைவனும் தலைவியும் ஒருவர் மேல் ஒருவர் கொண்ட காதலின் சிறப்பைச் சொல்லும் அதிகாரம் இது. முதல் ஐந்து குறட்பாக்களும் காதலன் கூறுவதாகவும் அடுத்த ஐந்து குறட்பாக்களும் காதலி கூறுவதாகவும் அமைத்திருக்கிறார் வள்ளுவர் பெருமான்.

***

பாலொடு தேன் கலந்தற்றே பணிமொழி
வால் எயிறு ஊறிய நீர்.

இந்த மென்மையாகப் பேசி மனத்திற்கு இனிமை சேர்க்கும் இந்தப் பெண்ணின் வெண்ணிறப் பற்களில் ஊறிய எச்சில் வெறும் சுவையில்லாத நீர் இல்லை; அது பாலும் தேனும் கலந்தது போல் சுவையுடையது.

பாலொடு தேன் கலந்து அற்றே - பாலும் தேனும் கலந்தது போல் உள்ளதே

பணிமொழி - இனிமையும் மென்மையும் கூடிய சொற்களை உடைய பெண்

வால் - வெண்மையான

எயிறு - பற்களில்

ஊறிய நீர்.

இயல்பாக எச்சில் விலக்கத்தக்கது; வெறுக்கத்தக்கது. எச்சில்பண்டத்தை யாரும் உண்ண விரும்ப மாட்டார்கள். ஆனால் காதலர்கள் நடுவில் அதே எச்சிலே அமுதமாக ஆகிவிடுவதைக் காண்கிறோம். சொல்லும் மொழியும் தோன்றும் காலத்திற்கு முன்பிருந்தே இதே நிலை தான் போலும். வள்ளுவர் காலத்திலும் அப்படியே இருந்திருக்கிறது.


காதலியின் வாயில் ஊறிய நீர் வெறும் சுவையில்லாத நீர் இல்லை; அது அவள் வெண்மையான பற்களில் ஊறி ஊறி மிக்கச் சுவை பெற்றது போல் இருக்கிறது காதலனுக்கு.

பால் மட்டும் தனித்து உண்டால் அதில் உள்ள இனிமை குறைவாக இருப்பதால் நிறைய அருந்தத் தோன்றாது. தேன் மட்டும் தனியாக உண்டால் அதன் இனிமை மிகுதியாக இருப்பதால் அதிகம் அருந்த முடியாமல் திகட்டும். ஆனால் பாலும் தேனும் கலந்த போது இரு இனிமைகளும் ஒன்றுடன் ஒன்று கூடி அருந்தக் கூடிய இனிமை பெற்று அருந்த அருந்தத் திகட்டாதத் தித்திப்பைக் கொண்டிருக்கும்.

பாலை மட்டும் இவள் வால் எயிறு ஊறிய நீருக்கு ஒப்பாகக் கூறினாலோ தேனை மட்டும் கூறினாலோ இவள் வாய் அமுதம் உண்ணுவதில் காதலனுக்குச் சலிப்பு ஏற்படலாம் என்ற குறிப்பு கிடைக்கும். இங்கே பாலும் தேனும் கலந்தது போல் இருக்கிறது இவள் வால் எயிறு ஊறிய நீர் என்று சொன்னதால் இவள் வாய் அமுதம் உண்பதில் இவனுக்கு சலிப்பே ஏற்படுவதில்லை; தொடர்ந்து அருந்திக் கொண்டே இருக்க வேண்டும் என்னும் ஆவலைத் தருகின்றது என்ற குறிப்பு கிடைக்கிறது.

***

உடம்பொடு உயிரிடை என்ன மற்று அன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு.

உடம்புக்கும் உயிருக்கும் உள்ள காதல் எப்படிப்பட்டதோ அப்படிப்பட்டது இந்தப் பெண்ணுக்கும் எனக்கும் உள்ள காதல்.

உடம்பொடு உயிர் இடை என்ன - உடம்புக்கும் உயிருக்கும் இடையில் இருக்கும் காதல் எப்படிப்பட்டதோ

அன்ன - அப்படிப்பட்டது

மடந்தையொடு எம்மிடை - கள்ளம் கபடமில்லாத இந்தப் பெண்ணுக்கும் எனக்கும் இடையில் உள்ள

நட்பு - காதல். நள்ளுதல் என்றால் அன்பு கொள்ளுதல். அந்த வகையில் நட்பு என்ற சொல் முதலில் காதலைக் குறித்துப் பின்னர் அதன் நீட்சியாக நண்பர்கள் இடையே ஆன நட்பினையும் குறித்தது. முக நக நட்பது நட்பன்று; நெஞ்சத்து அக நக நட்பதே நட்பு - என்ற குறளில் நட்பு என்பதற்கு காதல் என்ற பொருள் கொண்டால் அந்தக் குறளின் சுவை கூடுவதை உணரலாம்.

இயற்கைப் புணர்ச்சியின் பின்னர் 'இவன் பிரிந்துவிடுவானோ?', 'சென்றால் திரும்பி வருவானோ?' என்று கவலை கொள்கிறாள் காதலி என்பதைக் குறிப்பால் உணர்ந்த காதலன் 'பிரியேன். அப்படிப் பிரிந்து சென்றால் உயிர் தரியேன்' என்று சொல்கிறான் இங்கே.

உயிருக்கும் உடலுக்கும் இடையில் உள்ள நட்பு தொன்று தொட்டு வருவது. தொடக்கம் முதல் பிரியாமல் வருவது. இன்ப துன்பங்களை ஒன்றாக நுகரக்கூடியது. ஒன்று இருப்பதற்கு மற்றொன்று இன்றியமையாததாக இருப்பது. அப்படியே நமது காதலும் பிரியாதது; இன்ப துன்பங்களை ஒன்றாக நுகரக்கூடியது; ஒருவரின்றி மற்றவர் வாழ இயலாதது என்று கூறி தலைமகளின் மனக்குழப்பத்தை நீக்குகிறான் தலைமகன்.

***

கருமணியில் பாவாய் நீ போதாய் யாம் வீழும்
திருநுதற்கு இல்லை இடம்.

என் கண்ணின் கருமணியில் இருக்கும் உருவமே! நீ வெளியே வருவாய். நீ அங்கேயே இருந்தால் நான் விரும்பும் அழகுள்ள நெற்றியை உடைய என் காதலிக்கு இடம் இருக்காது.

கருமணியில் பாவாய் - கண்ணின் கருமணியில் தெரியும் உருவமே!

நீ போதாய் - நீ வெளியே வா!

யாம் வீழும் - நான் விரும்பும்

திருநுதற்கு - அழகிய நுதலை உடைய பெண்ணுக்கு

இல்லை இடம்.

என் கண்ணின் கருமணியைப் போன்றவள் நீ; உன்னைக் காணாமல் என்னால் இருக்க இயலாது என்று தலைவன் தலைவிக்கு உணர்த்துவதைப் போல் கண்ணில் இருக்கும் பாவையிடம் சொல்கிறான்.

***


வாழ்தல் உயிர்க்கு அன்னள் ஆயிழை சாதல்
அதற்கு அன்னள் நீங்கும் இடத்து.

மிகச் சிறப்பான அணிகலன்களை அணிந்த என் காதலி உயிருக்கு வாழ்தல் என்பது எப்படியோ எனக்கு அப்படிப்பட்டவள்; என்னை விட்டு அவள் நீங்கும் போது உயிருக்குச் சாதல் எப்படியோ எனக்கும் அப்படிப்பட்டவள்.

ஆயிழை - ஆய்ந்து செய்யப்பட்ட அணிகலன்களை அணிந்தவள்; ஆய்ந்து தேர்ந்த அரிய பண்புகளை உடையவள்

வாழ்தல் உயிர்க்கு அன்னள் - (கூடுமிடத்து) என் உயிர்க்கு வாழ்தலைப் போன்றவள்

நீங்கும் இடத்துச் சாதல் அதற்கு அன்னள் - பிரியும் போது என் உயிர்க்குச் சாதலைப் போன்றவள்.

அவளுடன் கூடுவதே உயிர் வாழ்தலைப் போன்றும் பிரிவதே சாதலைப் போன்றும் இருக்கிறது என்பதைச் சொல்லி, தான் என்றும் பிரியாமல் கூடியிருப்பேன் என உறுதி கூறுவதைப் போல் சொல்கிறான் அவன்.

வாழ்தலை விட இனியது இல்லை; அது போல் அவளுடன் கூடி இருப்பதை விட இனியது இல்லை. சாதலை விட இன்னாதது இல்லை; அது போல் அவளைப் பிரிவதை விட இன்னாதது இல்லை.

நீங்கும் இடத்து என்பதை மட்டும் சொல்லி கூடும் இடத்து என்பதை வருவித்துக் கொள்வது போல் அமைந்திருக்கிறது இந்தக் குறள். இதனைத் தானே ஏகதேச உருவக அணி என்பார்கள்?!

***

உள்ளுவன் மன் யான் மறப்பின் மறப்பறியேன்
ஒள்ளமர்க் கண்ணாள் குணம்.

மறந்தால் அல்லவோ நான் நினைப்பது? ஒளி பொருந்திப் போர் செய்யும் கண்ணை உடையவளின் அழகையும் குணங்களையும் மறந்து அறியேன்.

உள்ளுவன் மன் யான் மறப்பின் - நினைப்பேன் நான் மறந்தால்

மறப்பு அறியேன் - மறப்பது என்பதை அறியேன்

ஒள்ளமர்க்கண்ணாள் - ஒளி பொருந்திய கண்ணினை உடையவளின்

குணம் - அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, அன்பு, கற்பு, அழகு போன்ற குணங்கள்.

தலைவியும் தலைவனும் இரவிலும் பகலிலும் இயற்கைப் புணர்ச்சியில் திளைக்க அதனை ஒருவாறாக அறிந்த ஊரில் அலர் எழுந்தது. அதனால் தலைவனும் தலைவியும் சில நாட்கள் ஒருவரை ஒருவர் பார்க்கவில்லை. ஒருவாறாக அலர் கொஞ்சம் தணிந்த பின் மீண்டும் வந்த தலைவனிடம் தோழி 'பிரிந்திருந்த போது தலைவியை நீர் நினைத்தீரா?' என்று வினவ அதற்குத் தலைவன் சொன்ன மறுமொழி இது.

மறந்தால் தானே நினைப்பது என்று தற்காலப் பாடலிலும் இந்தக் குறள் பயின்று வந்துள்ளது.

***

தலைவியின் வாய்மொழியான அடுத்த ஐந்து குறட்பாக்களையும் அடுத்த இடுகையில் பார்ப்போம்.

Wednesday, June 23, 2010

சாகும் வரை எதிரியே!

'இப்படி ஒரு தருமசங்கடம் வரும் என்று வெகு நாட்களாகவே தெரியும். சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் பதிமூன்று வருடங்களாகத் தெரியும்.

துரியோதனனின் குணம் தெரிந்தது தானே. பதிமூன்றாம் வருடத்தில் எப்படியாவது சிற்றப்பன் மக்களைத் தேடிக் கண்டுபிடித்து மீண்டும் காட்டுக்கு அனுப்பிவிட வேண்டும்; இல்லையேல் சண்டையிட்டு அவர்களைக் கொல்ல வேண்டும் என்பது தானே அவனது திட்டம்.

குருபிதாமஹர் ஏதாவது செய்து சமாதானம் செய்துவைப்பார் என்று ஓரத்தில் ஒரு நப்பாசை இருந்தது. விதி வாயை மூடி வைத்ததா தானே மூடினாரா தெரியவில்லை. பெரியவர் பேச வேண்டிய நேரங்களில் எல்லாம் பேசாமல் வாய் மூடி மௌனமாக இருந்துவிடுகிறார். செய்தக்க அல்லது செயக் கெடும் செய்தக்க செய்யாமையாலும் கெடும் என்று அவருக்கு யாரும் சொல்லவில்லை போலும். அவருக்கு என்ன தருமசங்கடமோ?


நம் மைத்துனர் என்ன முடிவு செய்தாரோ தெரியவில்லை. நம்மைப் போல் தானே அவரும். அவர் செய்யும் முடிவையே நாமும் பின்பற்றலாமோ? இந்தத் துரோணன் எல்லா நேரங்களிலும் மைத்துனனையே பின்பற்றுகிறான் என்ற கெட்டபெயர் வந்துவிடுமோ?

பச்சைக் குழந்தைக்குப் பால் வாங்கித் தர இயலாமல் துருபதனிடம் அவமானப்பட்டு கிருபர் கையைத் தானே எதிர்பார்த்து வந்தேன். வந்த இடத்தில் நல்ல வேளை கிருபரைப் பார்ப்பதற்கு முன்னரே இளவரசர்களின் பந்து கிணற்றில் விழுந்து என்னைக் காப்பாற்றியது. இளவரசர்கள் மூலம் செய்தி அறிந்து குருபிதாமஹரே நம்மை அழைத்து அவர்களுக்கு ஆசிரியர் ஆக்கினார். கிருபரின் கையை எதிர் நோக்காமல் அவருக்கு இணையான ஆசிரியராக ஆகி வரவிருந்த அவமானம் வராமல் போனது. அப்போதிலிருந்து ஏறு முகம் தான். குரு குல இளவல்களின் ஆசிரியர் என்றால் என் பெயரைத் தான் முதலில் சொல்கிறார்கள். அவர் பெயர் மறந்தே போய்விட்டது.

இந்த நிலையில் நாமாக ஒரு முடிவு எடுத்தால் தான் நல்லது. பீஷ்மரும் கிருபரும் என்ன முடிவு வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும். நமக்கென்ன?

விதுரர் பாடு பாவம். அரசவையில் அவமானப்பட்டு வில்லை ஒடித்துவிட்டுச் சென்றுவிட்டார். அதுவும் ஒரு வகையில் நல்லதாக போனது அவருக்கு. எனக்கு இருக்கும் குழப்பம் இல்லையே அவருக்கு.

இதோ போர் மூண்டுவிட்டது. யார் பக்கம் நாம் நிற்பது? எனக்குப் பிரியமான அருச்சுனன் பக்கமா? நூற்றுவர் பக்கமா? அருச்சுனன் அந்தப் பக்கத்தில் இருப்பதால் ஐவர் படையில் தான் நாம் இருக்க வேண்டும் என்று மனம் விரும்புகிறது. ஆனால் ஆனால் ஏதோ ஒன்று தடுக்கிறதே? என்ன அது?

உண்மையில் துரியோதனனின் மேல் தான் எனக்கு அன்பு அதிகமோ? அதனால் தான் ஐவர் பக்கம் நிற்பதை அது தடுக்கிறதோ? இல்லையே! முக்குணங்களைப் போல் ஆடை அணிந்து வரும் கர்ண துரியோதன சகுனியரைக் கண்டாலே கண் எரிகிறதே! பின் எது தடுக்கிறது?

வீடுமரோ? அதுவும் இல்லை. மற்றவரைப் பற்றி அவர் கவலைப்படுவதில்லை; அவருடைய கடமைகளும் சபதங்களுமே அவருக்கு முக்கியம். அவருக்காக மற்றவரும் கவலைப்பட வேண்டும் என்று அவர் எதிர்பார்ப்பதில்லை. அதனால் தடுப்பது பீஷ்மரும் இல்லை.

பின் எது?

ஓ தெரிந்தது தெரிந்தது. துருபதன்!

நண்பன் பகையானால் எவ்வளவு பெரிய கொடுமை! அப்பப்பா! அது தான் நம்மைத் தடுக்கிறது!

என்ன தான் துருபதனை நாம் பழி தீர்த்தாலும் என்னைக் கொல்லவே அவன் பெற்ற மகனுக்கு வில் வித்தை சொல்லித் தந்தாலும் நம் மனத்திலும் அந்தப் பகை தீரவில்லை; துருபதன் மனத்திலும் தீரவில்லை.

மகளை பார்த்தனுக்கு மணமுடித்து ஐவரின் சம்பந்தி ஆகிவிட்டான் அவன். எப்படியும் பாண்டவர் பக்கம் நின்று அவன் போரிட முனைவான். நானும் பாண்டவர் பக்கம் சென்றால் அவனுக்குப் பெரிய தருமசங்கடம் ஆகிவிடும். தயங்குவான்.

அவன் தயங்கினால் அவன் மகன் தயங்குவான். அவன் மகன் தயங்கினால் என் விதி எப்படி முடிவது?

துருபதனும் திருட்டதுய்மனும் சம்பந்திகளை எதிர்த்து கௌரவர் பக்கமும் நின்று போரிட மாட்டார்கள்.

அது தான் சரி. நாம் நூற்றுவர் பக்கமே நிற்போம். அப்படி செய்தால் தான் துருபதனின் பெரும் உதவி பாண்டவர்களுக்குக் கிட்டும். நாம் எதிர்பக்கம் நின்றாலும் என்னைக் கொல்வதற்கே பிறந்தவன் அவர்கள் பக்கம் நிற்பான். என்னைக் கொல்வான். நான் நூற்றுவர் பக்கம் நிற்பதே பாண்டவர்களுக்கு உதவியாகும்! அப்படியே செய்கிறேன்!

அருச்சுனா! உன் பெயர் இருக்கும் வரை என் பெயரும் இருக்கும்! அதற்கு நீ வெற்றி பெற வேண்டும்! அதற்கு நான் உன் எதிரியாக நின்று அழிய வேண்டும்! இதுவே விதி!’

Pictures Courtesy: http://netra-creative-vision.blogspot.com/

Tuesday, June 22, 2010

பெருமாளே ஆனாலும் சரி போயிட்டு வாங்க!


அண்மையில் 'The pursuit of Happyness' என்ற ஒரு படத்தை நூலகத்திலிருந்து இரவல் வாங்கி வீட்டில் எல்லோரும் சேர்ந்து பார்த்தோம். தேவைப்படும் பொழுது பணம் இல்லாததால் ஒரு மனிதன் எப்படி எல்லாம் துயரப்படுகிறான் என்பதை மிக நன்றாகக் காட்டியது இந்தத் திரைப்படம். படத்தில் நெஞ்சை நெகிழ வைக்கும் காட்சிகள் வரும் போதெல்லாம் ஏழு வயது தேஜஸ்வினி 'இப்படியும் நடக்குமா?' என்பது போல் அதிர்ச்சியைக் காட்டினாள். பணத்தின் அருமையைப் பற்றி பேச எங்களுக்கு அது வாய்ப்பாக அமைய அவள் கேள்விகளுக்கு எல்லாம் விளக்கங்கள் சொல்லிக் கொண்டிருந்தோம். சேந்தனுக்கு என்ன புரிந்ததோ தெரியவில்லை. நாங்கள் பேசுவதை அவனுக்குப் புரிந்த அளவில் திருப்பிச் சொல்லிக் கொண்டிருந்தான்.

அன்றிரவு படுப்பதற்கு முன் அவன் மிகவும் சோகமாக இருந்தான்.

"சேந்தன். என்ன ஆச்சு?"

"நான் கவலையாக இருக்கிறேன்"

"ஏன்?"

"தம்பிகிட்ட பணம் இல்லை!"

சிரிப்பதா இல்லையா என்று தெரியவில்லை. திரைப்படத்தின் விளைவா, எங்கள் பேச்சுக்களின் விளைவா தெரியவில்லை. மூன்று வயதில் ‘பணம் இல்லை’ என்ற கவலை! அவனுடைய உண்டியலில் பணம் இருக்கிறதே என்று சொன்னவுடன் அவன் கவலை பறந்தோடிவிட்டது. :-)

இதையெல்லாம் இப்போது ஏன் சொல்கிறேன் என்று கேட்கிறீர்களா? நாலடியாரில் ஒரு பாடலைப் படித்ததால் வந்த விளைவு!

'இல்லானை இல்லாளும் வேண்டாள்!' என்று ஒரு பழமொழி இருக்கிறது. பணம் இல்லாதவன் என்றால் மனைவியும் விரும்ப மாட்டாள் என்று பொருள். மேலே சொன்ன திரைப்படத்தின் கதை உண்மைக்கதை. அதில் பணம் இல்லாத கணவனை மனைவி பிரிந்து சென்று விடுகிறாள். திரைப்படம் முடியும் வரை அவள் திரும்பி கணவனிடம் வந்தாளா இல்லையா என்றே காட்டவில்லை. தேஜஸ்வினிக்கு அது பெரிய கேள்வியாக இருந்தது. கடைசியில் கதாநாயகன் பெரும் கோடீஸ்வரன் ஆகிறான் என்பதால் மனைவி திரும்பி வந்திருப்பாள் என்று சொன்னேன்.




பணம் இல்லாதவனைப் பிரிந்து மனைவியே செல்லும் போது விலை மகளிர் அவனைப் புறந்தள்ளுதல் இயல்பு தானே. அதனைத் தான் நாலடியார் கூறுகிறது. அக்காலத்தில் பரத்தையரிடம் செல்வது குமுகாயத்தில் (சமுதாயத்தில்) இயல்பான ஒன்றாக இருந்ததால் அதனை அழுத்திக் கூற வேண்டிய தேவை நாலடியாரின் ஆசிரியருக்கு இருந்தது போலும்.

அங்கண் விசும்பில் அமரர் தொழப்படும்
செங்கண் மால் ஆயினும் ஆக மன்! - தம் கைக்
கொடுப்பது ஒன்று இல்லாரைக் கொய்தளிர் அன்னார்
விடுப்பர் தம் கையால் தொழுது!

(நாலடியார் – பொருட்பால் - பொதுமகளிர் – 373)

விரிந்து பரந்த விண்ணுலகத்தில் வாழும் தேவர்களால் தொழப்படும் பெருமை பெற்ற, சிவந்த தாமரை போன்ற திருக்கண்களைப் பெற்று சிறந்த ஆண்மகன் - புருஷோத்தமன் - என்று பெயர் பெற்ற திருமாலே ஆனாலும் ஆகட்டும், தனது கையில் கொடுப்பதற்கு ஒரு பொருளும் இல்லாதவரை கொய்து முகரத் தகுந்த இளந்தளிர் போன்ற மேனியை உடைய மகளிர் தம் கைகளால் வணங்கி விடை கொடுத்து அனுப்புவார்கள்!

பொது மகளிருக்கு எத்தகுதியும் பொருட்டில்லை; பொருளுடையவன் என்பது ஒன்றே தகுதி என்று வலியுறுத்துகிறது இந்தப் பாடல்.




விரிந்து பரந்தது அங்கண் மா ஞாலமாகிய இந்த உலகம்! அதனிலும் பெருமை உடையது அங்கண் விசும்பாகிய விண்ணுலகம்! அந்த விண்ணுலகில் வாழும் தேவர்கள் மனிதர்களால் வணங்கப்படும் பெருமை உடையவர்கள்! அந்த தேவர்களாலேயே வணங்கப்படும் பெருமை உடையவன் செங்கண் மால்! செங்கண் என்று இங்கே சொன்னது அவனது அழகான தாமரை போன்ற கண்களைக் கூறி அதன் மூலம் அவனது வடிவழகைக் குறிப்பாக உணர்த்த. அப்படி பெருமைக்கெல்லாம் சிறந்த பெருமை பெற்றிருந்தாலும் சரி; அழகுக்கெல்லாம் சிறந்த அழகு பெற்றிருந்தாலும் சரி - அவை எல்லாம் இளந்தளிர் போன்ற மென்மையான அழகான மேனியை உடைய பெண்களுக்கு ஒரு பொருட்டில்லை. கையில் காசு இல்லை என்றால் போயிட்டு வாங்க என்று கை தொழுது அனுப்பிவிடுவார்கள்.

இன்னொரு குறிப்பும் இந்தப் பாடலில் இருக்கிறது. பணம் இல்லாதவரைக் கடிந்து துரத்தவில்லை இந்தப் பொது மகளிர். பெருமையுடையவன்; அழகுடையவன் என்பதால் இனி வருங்காலத்தில் அவனிடம் பணம் இருக்க வாய்ப்புண்டு. அப்படி பணம் கிடைக்கும் போது அவனை அவர்கள் 'வருக வருக' என்று அழைப்பார்கள். இப்போது கடிந்து அனுப்பினால் பின்னர் பணம் வரும் போது பகையாக முடியும் என்று எண்ணி பணமில்லாத நேரத்தில் பணிவாகக் கை தொழுது திருப்பி அனுப்புகிறார்களாம்!

பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை என்று சும்மாவா சொன்னார் ஐயன்!

Sunday, June 20, 2010

மடப்பயலா நீ முருகா?


சங்கப்புலவர் பிரமசாரி பாடிய பாடல் ஒன்று முருகனை நோக்கி மடவனா நீ என்று கேட்கிறது. இப்பாடல் எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான நற்றிணையில் 34வது பாடலாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது.

தலைவனின் பிரிவால் பசலை நோய் கொண்டு வருந்தி நிற்கும் தலைவியைக் கண்டு அவள் தாய் அதனை புரிந்து கொள்ளாது, முருகனை வணங்கும் வேலன் வெறியாடலை நிகழ்த்தினால் தலைவியின் நோய் நீங்கும் என்று நினைத்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறாள். அதனைக் கண்ட தோழி முருகனை நோக்கி உரைப்பதைப் போல் பேசி தலைவியின் உண்மை நிலையைக் குறிப்பால் தாய் அறியும் படி செய்கிறாள்.

மானிடர் யாராலும் அணிவதற்குப் பறிக்கப்படாமல் நிறைய பூத்து நிற்கும் குவளை மலரொடு, குருதியைப் போல் சிவந்த காந்தள் மலர் ஒன்று சேரக் கட்டி, தேவ மகளிர் இசையுடன் ஆடும் மலையை உடைய நாடனின் மார்பை தழுவியதால் தோன்றிய நோய் இந்நோய் என்பதை அறியாத மூடர்களாக வெறியாடலுக்கு ஏற்பாடு செய்த தாயும் வெறியாடலை நிகழ்த்த வந்த பூசாரியான வேலனும் இருக்கலாம். ஆனால் உண்மையை அறிந்த கடவுளான நீயும் அந்த வெறியாடலை ஏற்க வரலாமா முருகா? அப்படி நீ வந்தால் நீ மடப்பயலே!

சரி தானே?! அறியா மானிடர் வெறியாடலை நிகழ்த்தலாம்! எல்லாம் அறிந்த கடவுளும் அதனை ஏற்க வரலாமா? அப்படி வந்தால் அவன் மடவன் தானே?!

இதோ அந்த நற்றிணைப்பாடல்.

கடவுள் கல் சுனை அடை இறந்து அவிழ்ந்த
பறியாக் குவளை மலரொடு காந்தள்
குருதி ஒண்பூ உருகெழக் கட்டி
பெருவரை அடுக்கப் பொற்பச் சூர்மகள்
அருவி இன்னியத்து ஆடு நாடன்
மார்பு தர வந்த படர் மலி அருநோய்
நின் அணங்கு அன்மை அறிந்து அண்ணாந்து
கார் நறும் கடம்பின் கண்ணி சூடி
வேலன் வேண்ட வெறிமனை வந்தோய்
கடவுளாயினும் ஆக
மடவை மன்ற வாழிய முருகே!

பாடலின் நிரல்வரிசையிலேயே பொருளைப் பார்ப்போமா?

கடவுள் தன்மை பொருந்திய மலையிலுள்ள சுனையில் இலைகளை விலக்கி மேலே எழுந்து மலர்ந்த கொய்யாமல் விடப்பட்டிருக்கும் குவளை மலரைப் பறித்து, அவற்றோடு குருதி போன்ற காந்தளின் ஒளிவீசும் பூக்களை அழகுடன் கட்டி, அதனைச் சூடி, பெரிய மலையின் பக்கங்களெல்லாம் பொலிவு பெற தேவ மகள் அங்கே விழும் அருவியின் இசையையே இன்னிசையாகக் கொண்டு ஆடுகின்ற நாட்டை உடையவனின் மார்பைத் தழுவியதால் அந்த மார்பு தர வந்த நோய் இந்த படர்ந்து மலிந்த பசலை நோய். இது உன் அணங்கால் வந்தது இல்லை என்று நீ அறிந்திருந்தும் மிகப் பெருமையுடன் தலை நிமிர்ந்து கார்காலத்தில் மலர்கின்ற நறுமணம் வீசும் கடம்ப மாலையை சூடி, பூசாரியான வேலன் வேண்ட வெறியாடும் இடத்திற்கு வந்தாய்! உண்மையை அறிந்திருந்தும் இப்படி வந்தாயே! கடவுள் ஆனாலும் ஆகட்டும் நீ மடவனே! வாழ்ந்து போவாய் முருகனே!

கடவுள் சுனையில் மலர்ந்த மலர் ஆதலால் மானிடர் யாரும் குவளையைப் பறிப்பதில்லை. ஆனால் அந்த மலையில் வாழும் தேவ மகளில் அவற்றைப் பறித்துச் சூடிக் கொள்கிறார்கள். மானிடர்கள் தேவ மகளுக்காக அம்மலர்களைப் பறித்து தேவ மகளிரின் சிலைகளுக்குச் சூடி வழிபட்டார்கள் என்று சொன்னாலும் பொருந்தும்.

இந்தப் பாடலின் கருத்து அப்படியே சிலப்பதிகாரத்தின் குன்றக்குரவையிலும் வருகின்றது வியப்பு.

இறை வளை நல்லாய் இது நகையாகின்றே
கறி வளர் தண் சிலம்பன் செய்த நோய் தீர்க்க
அறியாள் மற்றன்னை அலர் கடம்பன் என்றே
வெறியாடல் தான் விரும்பி வேலன் வருகென்றாள்

ஆய் வளை நல்லாய் இது நகையாகின்றே
மாமலை வெற்பன் நோய் தீர்க்க வரும் வேலன்
வருமாயின் வேலன் மடவன் அவனில்
குருகு பெயர்க் குன்றம் கொன்றான் மடவன்

செறி வளைக் கை நல்லாய் இது நகையாகின்றே
வெறி கமழ் வெற்பன் நோய் தீர்க்க வரும் வேலன்
வேலன் மடவன் அவனினும் தான் மடவன்
ஆலமர் செல்வன் புதல்வன் வருமாயின்

நேரிழை நல்லாய் நகையா மலை நாடன்
மார்பு தரு வெந்நோய் தீர்க்க வரும் வேலன்
தீர்க்க வரும் வேலன் தன்னினும் தான் மடவன்
கார்க்கடப்பந்தார் எம் கடவுள் வருமாயின்...


கடவுளே ஆயினும் பொருத்தமில்லாத காரியத்தைச் செய்தால் அவனை மடவன் என்று விளித்தல் அக்காலத்திலிருந்து இக்காலம் வரை தொடர்ந்து வந்து கொண்டே தான் இருக்கிறது போலும்! வாழிய முருகே!

Thursday, June 17, 2010

தாழையாம் பூமுடிச்சு....

தாழையாம் பூ முடிச்சு
தடம் பார்த்து நடை நடந்து
வாழையிலை போல வந்த பொன்னம்மா - என்
வாசலுக்கு வாங்கி வந்தது என்னம்மா?

(தாழையாம்...)

பாளை போல் சிரிப்பிருக்கு
பக்குவமாய் குணமிருக்கு
ஆளழகும் சேர்ந்திருக்கு கண்ணையா - இந்த
ஏழைகளுக்கு என்ன வேணும் சொல்லையா!

(பாளை போல்...)

தாயாரின் சீதனமும்
தம்பிமார் பெரும்பொருளும்
மாமியார் வீடு வந்தால் போதுமா?
மானாபிமானங்களைக் காட்டுமா?

(தாழையாம்...)

மானமே ஆடைகளாம்
மரியாதை பொன் நகையாம்
நாணமாம் துணையிருந்தால் போதுமே! - எங்கள்
நாட்டுமக்கள் குலப்பெருமை தோன்றுமே!

(பாளை போல் ...)




அங்கம் குறைந்தவனை
அழகில்லா ஆண்மகனை
மங்கையர்கள் நினைப்பதுண்டோ பொன்னம்மா? - வீட்டில்
மணம் பேசி முடிப்பதுண்டோ சொல்லம்மா?

மண் பார்த்து விளைவதில்லை
மரம் பார்த்து படர்வதில்லை
கன்னியரும் பூங்கொடியும் கண்ணையா
கண்ணிலே களங்கம் உண்டோ சொல்லையா?

(பாளை போல்...)
(தாழையாம்...)

Saturday, June 05, 2010

நான்கு கடமைகள்!




உலகில் வாழும் எல்லோருக்கும் நான்கு கடமைகள் இருப்பதாகப் பாரதியார் கூறுகிறார். இறைவணக்கம் நான்காவது கடமை தான் - முதல் கடமையாகக் கூறவில்லை. முதல் கடமை தன்னைக் கட்டுதல் தான்.

கடமை ஆவன: தன்னைக் கட்டுதல்
பிறர் துயர் தீர்த்தல் பிறர் நலம் வேண்டுதல்
விநாயகத் தேவனாய் வேலுடைக் குமரனாய்
நாராயணனாய் நதிச்சடைமுடியனாய்
பிற நாட்டிருப்போர் பெயர் பல கூறி
அல்லா யெஹோவா என தொழுது இன்புறும்
தேவரும் தானாய் திருமகள் பாரதி
உமையெனும் தேவியர் உகந்த வான் பொருளாய்
உலகெங்கும் காக்கும் 'ஒருவனை'ப் போற்றுதல்
இந்நான்கே இப்பூமியில் எவர்க்கும்
கடமை எனப்படும் பயன் இதில் நான்காம்
அறம் பொருள் இன்பம் வீடு எனும் முறையே
தன்னை ஆளும் சமர்த்து எனக்கு அருள்வாய்
மணக்குள விநாயகா வான்மறைத் தலைவா
தனைத் தான் ஆளும் தன்மை நான் பெற்றிடில்
எல்லாப் பயன்களும் தாமே எய்தும்
அசையா நெஞ்சம் அருள்வாய் உயிரெலாம்
இன்புற்றிருக்க வேண்டி நின் இருதாள்
பணிவதே தொழில் எனக் கொண்டு
கணபதி தேவா வாழ்வேன் களித்தே!

'யா காவார் ஆயினும் நா காக்க' என்றார் வள்ளுவர். பாரதியும் முதல் கடமையாகத் தன்னைக் கட்டுவதைச் சொல்கிறார். தன்னைக் கட்டுதல் என்றால் என்ன? ஒன்றுமே செய்யாமல் இருப்பதா? அந்நிலை உயிருடன் இருக்கும் எந்தப் பொருளுக்கும் ஆகுமா? உயிருடன் இருக்கும் வரை மனம் நினைத்துக் கொண்டே இருக்கும்; புலன்கள் தங்கள் வேலைகளைச் செய்து கொண்டே இருக்கும்; உள்ளுறுப்புகளும் தங்கள் வேலைகளைச் செய்து கொண்டே இருக்கும். அதனால் உயிருடன் இருக்கும் வரை ஒன்றுமே செய்யாமல் இருப்பது என்பது இயலாத ஒன்று தான். அப்படியென்றால் 'தன்னைக் கட்டுதல்' என்றால் என்ன? எனக்குத் தெரியவில்லை. குருமுகமாகத் தான் அறிந்து கொள்ள வேண்டும் போல. கண்ணன் கீதையில் சொன்னது போல் அறிவுடையோரிடம் பணிவுடனும் பணிவிடையுடனும் கேட்டுத் தெரிந்து கொள்வோம்.

இரண்டாவது கடமை? பிறர் நலம் வேண்டுதலா? இல்லை. பிறர் துயர் தீர்த்தலே இரண்டாவது கடமை. பிறர் துயர் கண்டு இரங்கி அவருக்கு உதவி செய்து அவர் துயர் தீர்க்கும் 'செயலை'ச் செய்யச் சொல்கிறார். 'சொல்லுதல் யார்க்கும் எளிய' - எத்தனை எத்தனையோ கருத்துகளைத் தினம் தினம் பதிவுகளில் எழுதிக் கொண்டே செல்லலாம். அதனைப் படித்துப் பலரும் பெருமையாக நம்மைப் பற்றிப் பேசலாம். சும்மா பேசிக் கொண்டே இருந்தால் போதுமா? செயலில் அந்த கருத்துகள் வர வேண்டாமா? மற்றவர் துயரைப் பற்றி பேசுவதை விட அவர் துயர் தீர்க்கும் செயல்கள் செய்வதே முதன்மையானது அல்லவா? அதனால் தான் அதனை இரண்டாவது கடமையாகச் சொன்னார் போலும். ஆனால் நாம் அவர் சொன்ன இந்த இரண்டாவது கடமையை எப்போதாவது தான் செய்கிறோம். அதற்குப் பதிலாக மூன்றாவது கடமையாகச் சொன்ன 'பிறர் நலம் வேண்டுதலை'ச் செய்து விடுகிறோம்.

மூன்றாவது கடமையான 'பிறர் நலம் வேண்டுதலும்' வேண்டும் தான். ஆனால் அது பிறர் துயர் தீர்க்கும் செயல்பாட்டைக் கொஞ்சமேனும் செய்த பிறகு வர வேன்டியது. பிறர் நலம் வேண்டும் தூய மனம் உடையவர்கள் எல்லோரும் பிறம் துயர் தீர்க்கும் செயல்களைச் செய்கிறோமா என்று கேட்டுக் கொள்ள வேன்டும்.

இம்மூன்று கடமைகளுக்குப் பின்னர் தான் 'பல பெயர் பல உருவம்' கொண்டு இலகும் உலகமெல்லாம் காக்கும் 'ஒரு பொருளை' போற்றும் கடமையைச் சொல்கிறார்.

கடமையைச் செய்தால் போதும்; பயன் எண்ணாமல் செய்ய வேண்டும் என்றொரு வழக்கு இருக்கிறது. பயனை அறியாமல் கடமையைச் செய்ய இயலுமா என்னில் இயலாது என்பதே பதிலாக இருக்கும். எந்தச் செயலைச் செய்தாலும் அதனால் ஏற்படக்கூடிய பயன்களைத் தெரிந்து கொண்டே செய்ய வேண்டும். அப்படியென்றால் கீதை சொல்வது? கீதை பயனை அறிந்து கொள்ளாமலோ பயனை எண்ணாமலோ கடமையைச் செய்யச் சொல்லவில்லை. அப்படியா? அப்படியென்றால் கீதை என்ன சொல்கிறது? அறிவுடையோரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

பயனை அறிந்தே கடமையைச் செய்ய வேண்டும் என்பதால் இந்தப் பாடலில் இந்நான்கு கடமைகளின் பயனைச் சொல்கிறார் பாரதியார். அறம், பொருள், இன்பம், வீடு என்னும் பயன்கள் தான் அவை நான்குமாம்.

தன்னை ஆளுதல் முதல் கடமை என்று சொன்னவர் அடுத்துத் தலைகீழாக தன்னை ஆளும் சமர்த்தை கொடுக்க வேண்டும் என்று இறைவனையே வேண்டுகிறார். அவன் அருளால் தான் அவன் தாள் வணங்கமுடியும் என்ற ஆன்றோர் வாக்கியத்தை அறிந்தவர். அதனால் தான் தன்னைக் கட்டுதலும் அவன் அருளாலே தான் நிகழும் என்று அறிந்து அதனை வேண்டுகிறார். அந்தத் தன்னைத் தான் ஆளும் திறன் வந்துவிட்டால் போதுமே; எல்லாப் பயன்களும் தானே விளைந்துவிடுமே.

மணக்குள விநாயகா வான்மறைத் தலைவா எமக்கும் எம் நண்பர்கள் அனைவருக்கும் அந்த வான் பொருளையே நல்குவாய்!

Friday, June 04, 2010

செம்மொழியாம் தமிழ்மொழி!

பாரதியாரின் விஜயதசமிப் பாட்டு

"அப்பா அப்பா. இந்த நவராத்திரி நேரத்துல ஒரு நல்ல பாட்டா அம்மன் மேல பாடுங்க அப்பா. அதைக் கத்துக்கிட்டு இவங்க வீட்டு கொலுவுல பாடணும்"

"ஆமாம் மாமா. நானும் அந்தப் பாட்டைக் கத்துக்கறேன் மாமா"

"ஓம் சக்தி!

தங்கம்மா. பொன்னுரங்கம். உங்கள் ஆசை அன்னை பராசக்தியின் ஆசை அல்லவா? இதோ உடனே ஒரு பாடலைப் பாடுகிறேன் கேளுங்கள்.

உஜ்ஜயினீ நித்ய கல்யாணீ
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி (உஜ்ஜயினீ)

உஜ்ஜய காரண சங்கர தேவி
உமா சரஸ்வதி ஸ்ரீ மாதா ஸா (உஜ்ஜயினீ)

வாழி புனைந்து மஹேசுவர தேவன்
தோழி பதங்கள் பணிந்து துணிந்தனம் (உஜ்ஜயினீ)

சத்ய யுகத்தை அகத்தில் இருத்தி
திறத்தை நமக்கருளிச் செய்யும் உத்தமி (உஜ்ஜயினீ)
"

"ரொம்ப நல்லா இருக்கு அப்பா இந்தப் பாட்டு. தமிழும் சமஸ்கிருதமும் சேர்ந்து வருது இந்தப் பாட்டுல"

"ஆமாம் தங்கம்மா. இரண்டு மொழிகளும் இந்தப் பாடலில் வந்திருக்கின்றன. மணியும் பவளமும் போல"

"இந்தப் பாட்டுக்கு பொருளும் சொல்லுங்க அப்பா. அப்பத் தான் பாடம் பண்றதுக்கு எளிதா இருக்கும்"

"சரி தான் அம்மா. இதோ சொல்கிறேன் கேள்.

உஜ்ஜயினி என்று ஒரு ஊர் மத்திய பிரதேச மாகாணத்தில் இருக்கிறது. விக்கிரமாதித்தன் எழுப்பியது. அங்கிருக்கும் காளி தேவியின் திருப்பெயரும் உஜ்ஜயினி என்பதே. அந்த அன்னையின் கோவிலையும் அவனே எழுப்பினான். தாயின் பெயரையே ஊருக்கும் வைத்தான்.

உஜ்ஜயினி என்றால் மீண்டும் மீண்டும் வெற்றி பெறுபவள்; மீண்டும் மீண்டும் வெற்றி தருபவள். கொற்றம் என்னும் வெற்றியைத் தரும் கொற்றவை அவளே. கொற்றவை என்னும் தமிழ்ப் பெயரின் வடமொழி வடிவம் உஜ்ஜயினி எனலாம்.

என்றைக்கும் மங்கள வடிவாக இருப்பவள் என்பதாலும் என்றைக்கும் மங்களத்தைத் தருபவள் என்பதாலும் அவளுக்கு நித்ய கல்யாணி என்று பெயர்."



"அப்பா. அப்படியென்றால் உஜ்ஜய காரண என்பதற்கு மீண்டும் மீண்டும் வெற்றி பெறுவதற்குக் காரணமான என்று பொருளா?"

"அப்படியும் சொல்லலாம் தங்கம்மா. ஆனால் இந்த இடத்தில் உஜ்ஜய என்பதற்கு உய்வு என்ற பொருளே பொருத்தம். நம் அனைவரின் உய்விற்குக் காரணமானவள் அன்னை. அவள் சங்கரனின் தேவி.

அவளே உமாவாகவும் சரஸ்வதியாகவும் லட்சுமியாகவும் இருக்கிறாள்."

"மாமா. ஸா என்று ஒரு எழுத்தைச் சொல்லியிருக்கிறீர்களே. அப்படியென்றால் என்ன?"

"பொன்னுரங்கம். ஸா என்றால் அவள் என்று பொருள். அவளே சரஸ்வதியாகவும் லட்சுமியாகவும் பார்வதியாகவும் இருக்கிறாள்.

மஹேசுவர தேவனாம் சிவபெருமானின் தோழி நம் அன்னை. அவள் திருவடிகளுக்கு வாழி என்று சொல்லும் பனுவல்களைப் புனைந்து அந்தத் திருவடிகளை வணங்குவோம்.

கலியுகம் இந்த உலகத்தில் இருந்து நீங்கி சத்ய யுகம் மீண்டும் வருவதற்கு உரிய வழியை நம் மனத்தில் நிலை நிறுத்தி அந்த வழியில் நாம் செல்லும் திறத்தை நமக்கருள் செய்யும் உத்தமி நம் உஜ்ஜயினி நித்யகல்யாணி.

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி"

"அப்பா. இந்தப் பாடலை நீங்கள் பாடிய முறையிலேயே பாடி மனனம் செய்கிறோம்"

Thursday, June 03, 2010

கனக்கும் செல்வம் நூறு வயது இவையும் வேண்டும்!


எனக்கு வேண்டும் வரங்களை இசைப்பேன் கேளாய் கணபதி!
மனத்தில் சலனம் இல்லாமல் மதியில் இருளே தோன்றாமல்
நினைக்கும் பொழுது நின் மவுன நிலை வந்திட நீ செயல் வேண்டும்
கனக்கும் செல்வம் நூறு வயது இவையும் தர நீ கடவாயே!


மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலுக்குச் செல்லும் போதெல்லாம் முக்குறுணி விநாயகர் திருமுன் இந்தப் பாடல் தான் நினைவிற்கு வரும். என் நினைவு தெரிந்த நாளிலிருந்து இந்தப் பாடலைச் சொல்லித் தான் முக்குறுணி பிள்ளையாரை வணங்கி வருகிறேன். அந்தப் பிள்ளையாரின் திருவுருவப் பெருமைக்கு ஏற்ற பெரிய பெரிய பொருட்களை வேண்டும் பாடல் இது.

இந்தப் பாடலில் இருக்கும் உரிமை பாரதியாரின் தனித்தன்மை. சொல்லடி சிவசக்தி என்று இன்னொரு பாடலில் பாடுவதைப் போல் இங்கே கடவாயே என்று கணபதிக்குக் கட்டளை இடுகிறார். எனக்கு வேண்டும் வரங்களை சொல்வேன் என்று சொல்லாமல் இசைப்பேன் என்கிறார். தான் கேட்பவை எல்லாம் மிகப்பொருத்தமானவை; பொருத்தமானவற்றைக் கேட்கிறானே பாரதி என்று விநாயகர் மிகவும் மகிழ்வார் என்பதைப் போல் இருக்கிறது அது.

வேதங்களும் இதே உரிமையுடன் தானே எல்லா வரங்களையும் கேட்கிறது. அந்த வேதங்களைக் கீதங்களாக இசைக்கிறோமே. அதே போல் இந்தப் பாடலும் வேதகீதமாக இசையுடன் விளங்குகிறது போலும்.

மிகக்கடினமானது எது என்றால் மனத்தின் சலனத்தை நிறுத்துவது தானே. ஆழ்ந்து உறங்கும் போது அரச மரத்து இலையைப் போல் சலனத்துடனே அசைந்து கொண்டே இருப்பது தானே மனம். அப்படிப் பட்ட மனம் சலனம் இன்றி இருப்பதே முதல் வரமாகக் கேட்கிறார் பாரதியார்.

மனம் சலனப்படும் போதெல்லாம் அதனை நல்வழிப்படுத்துவது அறிவு. சில நேரங்களில் தத்துவங்களைத் தவறாகப் புரிந்து கொண்டு அந்த மதியில் இருள் கவிழ்ந்துவிடும். அந்த நேரங்களில் மனத்தை வழி நடத்தவேண்டிய அறிவும் வழி தவறிச் செல்லும். அதனால் தான் அந்த மதியில் இருளே தோன்றாமல் என்று தெளிவுடன் இருக்க வேண்டும் என்று கேட்கிறார் போலும்.

மனம் அசைவற்றும் மதி இருளற்றும் இருந்தால் நினைக்கும் போது நினைத்ததை நடத்தலாம். அனைத்துச் செயல்களைச் செய்தாலும் எந்த வித அலட்டலும் இல்லாமல் மௌனமாக இருக்கலாம். அந்த மௌன நிலை தமக்கு வேண்டும் என்கிறார் பாரதியார்.

அருளிலார்க்கு அவ்வுலகம் இல்லை. பொருளிலார்க்கு? இவ்வுலகம் இல்லை. உலகப் பட்டறிவின் மொத்தமான முடிவு அது தானே. அந்தப் பொருள் கனக்கும் படி வேண்டும். அத்துடன் நூறு வயது ஆயுளும் வேண்டும்.

முதல் மூன்று வரங்கள் துறவிகள் கேட்பது போல் இருக்க கடைசி இரு வரங்களில் வேதங்கள் கேட்பதைப் போல் கேட்கிறார் பாரதியார்.