Saturday, June 27, 2009

செல்வத்துப் பயனே ஈதல்!

சங்க இலக்கியங்களுள் ஒன்றான புறநானூற்றுப் புலவர்கள் பெரும்பாலும் அரசர்களின்
வீரம்
கொடை
புகழ்
போன்றவைகளைப் பற்றிப் பாடியுள்ளனர்.

ஒரு சிலர் அரசர்களையே இடித்துரைக்கும் பாடல்களை யாத்துள்ளனர். சிலரோ, மக்கள் எல்லார்க்கும் பொதுவான நீதிகளை விளக்கியுள்ளனர்.

மதுரைக் கணக்காயனார் மகன் நக்கீரனாரின் பொது நீதி தொடர்பான பாடல் ஒன்றை ஈண்டு காண்போம்.

"தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்
உண்பது நாழி; உடுப்பவை இரண்டே;
பிறவும் எல்லாம் ஓரொக் கும்மே;
அதனால் செல்வத்துப் பயனே ஈதல்;
துய்ப்பேம் எனினே, தப்புந பலவே'' (புறம் - 189)

எல்லாத் திணைகளுக்கும் பொதுவான இலக்கணங்களைக் கூறும் "பொதுவியல்" திணையாகவும், தெளிந்த பொருளை எடுத்துச் சொல்லும் - உயிர்க்கு உறுதி தரும் பொருள்களை எடுத்துரைக்கும் பொருண்மொழிக் காஞ்சித் துறையாகவும் இப்பாடல் பகுக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் அனைவருக்கும் பொதுவானது அன்று; என் ஒருவனின் தனி உரிமையாகும் என்று பலர் தவறாக நினைப்பதாகப் புலவர் கூறுகிறார்.

இக்கூற்று, வள்ளுவரின் பின்வரும் குறட்பாவை நினைக்க வைக்கிறது.

"அன்பிலார் எல்லாம் தமக்குரியர்; அன்புடையார்,
என்பும் உரியர் பிறர்க்கு'' (குறள் - 72)

பெருநிலத்தை ஒரு குடையின்கீழ் ஆட்சி செய்யும் அரசர்க்கும், இரவும் பகலும் தூங்காது விலங்குகளை வேட்டையாடக் காத்திருக்கும் கல்லாத ஏழைக்கும் உண்ணப்படும் பொருள் நாழி அளவு தானியம்; உடுக்கப்படுபவை அரை ஆடை, மேலாடை என இரண்டே. இவைபோலப் பிற உடல், உள்ளத் தேவைகளும் ஒன்றே என்று புலவர் சுட்டிக் காட்டுகிறார்.

பிற்கால ஒளவையாரின் பின்வரும் பாடலையும் ஈண்டு காண்பது நன்று.

"உண்பது நாழி உடுப்பது நான்குமுழம்
எண்பது கோடிநினைந் தெண்ணுவன - கண்புதைத்த
மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச்
சாந்துணையும் சஞ்சலமே தான்'' (நல்வழி - 28)

அதனால், செல்வத்துப் பயனே, செல்வமற்றவர்க்கு உவந்து கொடுத்தல் என்று புறநானூற்றுப் புலவர் கூறுவதையும் காணலாம்.

அப்படி உவந்து அளிக்காதவர்களை வள்ளுவர்,

"ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல்; தாம் உடைமை
வைத்திழக்கும் வன்கண் அவர்'' (குறள் - 228)

என்று சாடுகிறார்.

மேலும் ஈகையின் புகழை,

"ஈதல் இசைபட வாழ்தல்; அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு'' (குறள் - 231)

என்றும் கூறுகிறார்.

செல்வத்தைப் பிறர்க்கு உவந்து கொடுக்காமல் யாமே துய்ப்போம் என்று எண்ணித் தாமும் துய்க்கத் தவறியவர் வாழ்நாளே இவ்வுலகில் பலவாகும் என்கிறார் நக்கீரனார்.

புலவரின் இக்கூற்றுக்குப் பொருந்துவதாய் பின்வரும் குறட்பா அமைகிறது.

"ஒருபொழுதும் வாழ்வது அறியார்; கருதுப
கோடியும் அல்ல பல'' (குறள் - 337)

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு புறநானூற்றுப் புலவரும், திருவள்ளுவரும் மற்றும் பிற்கால ஒளவையாரும் கூறியுள்ள அறிவுரைகள், இன்றுள்ள மக்களுக்கும் பொருந்துவதாய் உள்ளன. ஆனாலும், பலர் இதுபோன்ற அறிவுரைகளைப் படிக்காததாலும், படித்தவர்களில் பலபேர் அவ்வறிவுரைகளின் படி நடக்காததாலும் இன்று நம் நாட்டில் செல்வம் ஒரே இடத்தில் முடங்கிக் கிடக்கிறது. இதுபோன்ற பாடல்களைப் படித்து அதன்படி வாழ முன்வந்தால் தாமும் இன்பம் துய்த்து, மற்றவர்களையும் இன்பம் துய்க்கச் செய்ய முடியும். அதுமட்டுமல்ல, தாம் எடுத்துள்ள கிடைத்தற்கரிய மானுடப் பிறப்பின் நோக்கத்தையும் நிறைவேற்ற முடியும்.

இரா.பரஞ்சோதி

நன்றி:- தினமணி

நன்றி: மின் தமிழ் குழுமம்; அக்குழுமத்தில் இக்கட்டுரையை இட்ட திரு. கண்ணன் நடராஜன்.

Wednesday, June 17, 2009

திருக்குறளும் ஊழியலும் - முனைவர் க.நெடுஞ்செழியன்

கால வரையறை செய்வதிலும் கருத்து வரையறை செய்வதிலும் ஆய்வாளர்களுக்குத் திருக்குறள் ஒரு பெரும் புதிராகவே உள்ளது. திருக்குறளை ஒவ்வொரு சமயத்தவரும் தத்தம் சமயக் கோட் பாடுகளோடு அணுகியுள்ள காரணத்தாலும், திருக்குறளின் சமூகப் பின்புலம் பற்றியோ அதன் மெய்யியல் பின்புலம் பற்றியோ கவலைப்படாத நிலையில் அதுபற்றிய ஆராய்ச்சிகளைத் தொடர்ந் துள்ளதாலுமே திருக்குறளை முற்றாக அறியவும், அதன் கோட்பாடுகளை வகைப்படுத்தவும் முடியாத ஒருநிலை ஏற்பட்டுள்ளது.

தொல்காப்பியத்தில் காணப்படும் மெய்யியல் கூறுகள் யாவும் திருக்குறளிலும் அப்படியே அமைந்துள்ளன. தொல்காப்பியம் இலக்கண நூலாதலால், அதில் செய்திகள் சுருக்கமாகச் சொல்லப் பட்டுள்ளன. ஆனால் திருக்குறளோ செய்திகளை விளக்கமாகவும் செறிவாகவும் தொகுத்தும் வகுத்தும் விளக்கியுள்ளது. மேலும் திருக்குறள் வழங்கும் செய்திகள் அனைத்தும் பொருள்முதல் கோட்பாடு களுக்கு உரியனவாகவே உள்ளன.
திருக்குறளில் ஆய்வில் விடுவிக்க வேண்டிய பல புதிர்களுள் ஊழியலும் அடங்கும். அறத்துப்பாலை இல்லறவியல், துறவறவியல் எனப் பகுத்த வள்ளுவர் அதன் மூன்றாவது கூறாக ‘ஊழியல்’ என ஒன்றையும் அமைத்துள்ளார். இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள இவ்வியலில் ஓர் அதிகாரம் மட்டுமே இடம் பெற்றுள்ளது. இவ்வியலின் அமைப்பைக் குறித்துப் பரிமேலழகர்,

“இவ்வாற்றான் இம்மை மறுமை வீடு என்னும் மூன்றனையும் பயத்தற் சிறப்புடைத்தாய அறம் கூறினார்; இனிப் பொருளும் இன்பமும் கூறுவார் அவற்றின் முதற் காரணமாகிய ஊழின்வலி கூறு கின்றார்” என்பார்.
பரிமேலழகர் கருத்துப்படி ஊழியல் பொருட்பாலுக்கும், காமத்துப்பாலுக்கும் முன்னுரையாக வைக்கப்பட்டது என்பதாகின்றது. அப்படியாயின் இல்லறத்தானுக்கும் துறவிக்கும் ஊழ் தேவை யில்லையோ என்ற ஐயம் தோன்றுகின்றது.

ஆனால் வள்ளுவர் இவ்வியலை மூன்று பால்களுக்கும் பொருந்தும் வண்ணம் ‘மத்திம தீபமாக’ வைத்துள்ளாரா? அல்லது தன் கோட்பாட்டை நிலைநாட்டப் பிறர்மதம் கூறலாக அமைத் துள்ளாரா? என்பதும் ஆய்விற்கு உரியது.

ஊழியல் அதிகாரத்தில் சொல்லப்படும் செய்திகளைப் பின் வருமாறு வகைப்படுத்தலாம்.

ஆகூழ் : செல்வப் பெருக்கிற்கும் ஆக்கத்திற்கும் காரணமாவது, அறிவு வளர்ச்சிக்கும் இது அடிப்படை.
போகூழ் : இழவூழ் என்றும் குறிக்கப்படும். சோம்பலுக்கும் பொருள் இழப்பிற்கும் காரணமாவது. அறிவையும் பேதமைப் படுத்தும். (குறள் 1-2)

அறிவு மிகுதிக்கு ஊழே காரணம். (3)

செல்வம் உடையராய் இருத்தல், அறிவுடையோராய் இருத்தல் ஆகிய இருவேறு நிலைமைகட்கும் ஊழே அடிப்படை. (4)

நல்லனவெல்லாம் தீயனவாக மாறுவதற்கும், தீயனவெல்லாம் நல்லனவாக மாறுவதற்கும்-மாற்றுவதற்கும் உள்ள ஆற்றல் ஊழிற்கு உண்டு. (5)

பொருள் ஒருவரிடம் நிலைத்துத் தங்குவதற்குக் காரணம் ஊழே. தமக்குரிய ஊழ் அல்லாத போது பொருள்களை எவ்வளவுதான் போற்றிப் பாதுகாக்க முற்பட்டாலும் அது தாங்காது. (6)

கோடி கோடியாகப் பொருளைத் திரட்டினாலும் தங்களுக்கென்று ஊழ் வகுத்துள்ளது எதுவோ அதைத் தவிர வேறு எதையும் துய்த்துவிட முடியாது. (7)

எட்டாவது குறள் சற்றுச் சிக்கலானது. உரையாசிரியர்களான பரிமேலழகர், பரிப்பெருமாள் ஆகியோரின் உரையும் பொருள் விளக்கத்தோடு புரிந்து கொள்ளுமாறு அமையவில்லை.

துறப்பார்மன் துப்புரவு இல்லார்; உறற்பால
ஊட்டா கழியும் எனின்.

ஊழினால் வரும் இன்பங்கள் தமக்குக் கிட்டாதபோது துய்ப்பதற்கு ஏதுமற்ற வறியவர்களும் துறவை மேற்கொள்வார்கள் என்பது குறளின் பொருள்.
மெய்ப்பொருளை நாடும் பேரறிவாளர்களின் துறவு சமூகப் பயன் கருதியது. உலக நோக்கம் கொண்டது. வரன்முறைகளும், தூய ஒழுக்கங்களும் நிறைந்தது. ஆனால் வறுமையாளர்களின் துறவு வாழ்க்கைப் போராட்டத்திலிருந்து தப்பித்துக் கொள்ள உதவுவது, வயிற்றுப் பசியை அடிப்படையாகக் கொண்டது. எனவே மேற்காட்டிய குறள் சமூகச் சிக்கலை ஒட்டி அமைந்துள்ளது என்பது புலனாகிறது. ஆனால் பரிமேலழகர்,
‘ஊழ்வினைகள் துன்பங்களைச் சேர்க்காமல் நீக்கினால் வறுமையால் அனுபவிக்கப்படும் பொருள் இல்லாதவர் துறவு கொள்வர்’ என உரை கூறுகின்றார்.

வறுமையால் வரும் துன்பம் கொடியது எனில் ஊழ்வினையினால் வரும் துன்பமும் கூட கொடியதாகத்தான் இருக்க முடியும். ஊழ்வினையின் துன்பத்தைத் தாங்கிக் கொள்ள ஒருவனால் முடியுமாயின் வறுமையினால் வரும் துன்பத்தையும் அவனால் தாங்கிக் கொள்ள முடியும். எனவே, ‘உறற்பால ஊட்டா கழியும்’ என்பதற்கு ஆகூழால் தோன்றும் செல்வ நுகர்ச்சி இல்லாத போது எனப் பொருள் கொள்வது குறளை அறியத் துணை புரிகின்றது. ‘துறவும் கூட ஊழின் பயனே’ எனக் கூறும் காலிங்கரின் கருத்து பொருத்தமாக உள்ளது. (8)

நல்வினை இன்பங்களைக் கொடுக்கும் போது மகிழ்ச்சியுடன் நுகர்பவர், தீவினை துன்பந் தரும்போது அதை எதிர்கொள்ளாமல் கலங்குவது ஏன்? (9)

ஊழ் மிகுந்த வலிமையுடையது; அதை விலக்க நினைத்தாலும் முந்திக் கொண்டு வந்து நிற்கும். (10)

இப்பத்துக் குறள்களிலும் அமைந்த கருத்தைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

1. ஊழ் இரண்டு வகைப்படும். ஒன்று நன்மைக்குக் காரணமாவது; மற்றொன்று தீமைக்குக் காரணமாவது.
2. செல்வத்தின் செழிப்பிற்கு ஆகூழும் செல்வத்தின் தேய்விற்குப் போகூழும் காரணங்களாகின்றன.
3. கற்ற கல்வியும் ஒருவனுக்குத் தன் ஊழின் காரணமாகவே பயன் தரும்.
4. ஊழினால் வரும் நுகர்ச்சி இல்லையெனில் வறுமையால் மனிதர்கள் துறவை நாடலாம். (பஞ்சத்திற்கு ஆண்டி என்ற மக்கள் வழக்கும் ஒப்பு நோக்கத்தக்கது.)
5. ஊழ் மிகுந்த வலிமையுடையது.

மேற்காட்டிய வகையில் ஊழின் இயல்புகளைச் சொல்லிச் செல்கிறார் வள்ளுவர்.

வள்ளுவரும் கோசாலரும்

வள்ளுவரின் ஊழ் பற்றிய கருத்து, மற்கலி கோசாலர் ஊழ் (நியதி) பற்றிச் சொல்லும் கருத்திலிருந்து முற்றாக மாறுபட்டு நிற்பதை இரண்டையும் ஒப்பிட்டுக் காணும்போது உணர முடிகின்றது.

கோசாலரின் கருத்துப்படி ஊழ் அனைத்து ஆற்றலும் கொண்டது. பிறவிக்குக் காரணமாக இருப்பது. பிறவிகள் தோறும் எவ்வளவுதான் நன்மைகள் செய்தாலும் ஊழ்வினையின் துணை இல்லாது போனால் பிறவித் தளையை அறுக்க முடியாது. சுருங்கக் கூறினால், கணியன் பூங்குன்றனார் கூறுவது போல், உயிர் ஊழின் இயக்கத்திற்கு ஏற்பவே இயங்கும்.

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்

என்ற குறளிலும் கூட தீயவன் வளத்தோடு வாழ்வதும், நல்லவன் வறுமையோடு உழல்வதும் நினைக்கப்படும் என்றே சொல்லுகின்றார். இக்குறளில் ஊழ்வினையின் தாக்கம் இருப்பதை பரிமேலழகர்,

இம்மை செய்தன யானறி நல்வினை
உம்மைப் பயன்கொல் ஒருதனி உழந்து

என்ற சிலப்பதிகார அடிகளை மேற்கோளாகக் காட்டி உணர வைக்கின்றார்.
வள்ளுவர் ஊழ்வினையைப் பற்றித் தனி ஓர் இயல் அமைத்துப் பத்துக் குறட்பாக்களாகத் தொகுத்துக் கூறினாலும் கூட மற்கலி கோசாலர் வரையறுத்த ஊழ்வினை பற்றிய கோட்பாட்டைப் பின்பற்றவில்லை என்பது தெளிவு.

வள்ளுவர் கோசாலருக்குப் பிற்பட்ட காலத்தவராக இருந் திருப்பின், ஊழியலுள் வரும் கருத்துக்கள் ஆசீவகத்தின் தாக்கத்தோடு அமைந்திருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. கோப்பெருஞ்சோழன் கணியன் பூங்குன்றனார் இருவரும் கோசாலரின் நியதிக் கோட்பாட்டைப் பின்பற்றியதைப் போல வள்ளுவரும் பின்பற்றி இருக்கலாம். ஆனால் ஊழின் முழு வல்லமையை-அதாவது இன்ப துன்பம், ஆக்கம் இழப்பு, பிறப்பு இறப்பு ஆகிய அனைத்திற்கும் காரணமாக அமைந்த ஊழின் தலைமையை வள்ளுவர் குறிக்காததுடன் ஊழ்வினையின் ஆற்றலை மறுக்கும் கருத்துக்களையும் பல அதிகாரங்களுள் கூறியுள்ளார்.

கோசாலர் ஊழின் ஆற்றலை மக்கள் நடுவே பரப்பத் தொடங்கிப் பேரளவில் வெற்றியும் கண்டவர். இந்நிலையில் மகாவீரரும், புத்தரும் ‘இக்கோட்பாடு செல்வாக்குப் பெறுமானால் மனித வாழ்வில் முயற்சிக்கே இடமில்லாது போய்விடும்’ என்று பெரிதும் கவலைப்பட்டனர்.

வள்ளுவர் முயற்சி பற்றிக் கூறும் கருத்துக்களைத் தொகுக்கும் போது, அவர் வாழ்வின் வெற்றிக்குக் காரணமாக அமைவது மனித முயற்சிதான் என்ற கோட்பாட்டின் மீது கொண்டுள்ள நம்பிக்கையைப் புரிந்து கொள்ளலாம்.

‘ஊக்கமுடைமை’ அதிகாரத்துள்,

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்கம் உடையான் உழை

என்று அசைவிலா ஊக்கத்தை வலியுறுத்துவார். ‘ஆள்வினை உடைமை’ அதிகாரத்திலோ,

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழா துஞற்று பவர்

என்று இடைவிடா முயற்சியின் ஆற்றலை எடுத்துக் காட்டுவார்.
ஊக்கமுடைமை, ஆள்வினை உடைமை என்ற இரண்டு அதிகாரங்களிலும் முயற்சியின் வெற்றியை உடன்பாடாகச் சொல்லுவார். ‘மடியின்மை’, ‘இடுக்கண் அழியாமை’ என்ற அதிகாரங்களுள் எதிர்மறையாக மனித முயற்சியைப் போற்றுகின்றார். குடியியலிலும் ‘குடிசெயல்வகை’ என்ற அதிகாரத்துள்,

ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனவிரண்டின்
நீள்வினையால் நீளுங் குடி

என்று முயற்சியையும் அதற்குத் துணையாகிய ஆன்ற அறிவையும் எடுத்துக் காட்டுவார். வள்ளுவரின் கருத்தில் ‘முயற்சியின் இடத்தைக்’ காணும்போது பொருட்பால் முழுமையுமே மனித முயற்சியின் அடித்தளத்தில்தான் கட்டப்பட்டுள்ளது என்பதை அறியலாம்.

இவ்வாறு பொருட்பால் முழுமையிலும் முயற்சியின் ஆற்றலை, அது நல்கும் பயனை விளக்குவதால், ஊழின் ஆற்றலைக் கோசாலரைப் போல வள்ளுவர் பெரிதாகக் கருதவில்லை என்பது தெளிவு.

துறவறவியலிலும் பல குறள்கள் ஊழ்வினைக்கு மாறாக அதாவது நியதிக் கோட்பாட்டிற்கு உடன்பாடில்லாத வகையில் அமைந்துள்ளன.

‘அவா அறுத்தல்’ என்ற அதிகாரத்துள்,

அவாவென்ப வெல்லா வுயிர்க்குமெஞ் ஞான்றுந்
தவாஅப் பிறப்பீனும் வித்து

என்ற குறள் பிறப்பிற்குக் காரணம் ‘அவாவே’ என வற்புறுத்துகின்றது.
துறவு என்ற அதிகாரத்துள்ளும்,

பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும்; மற்று
நிலையாமை காணப் படும்

என்ற குறள்வழி பிறப்பினை அறுப்பது பற்றற்ற நிலைதான் என்பதை வற்புறுத்துவார்.

இவ்வாறு அறத்துப்பாலிலும் பொருட்பாலிலும் பல அதிகாரங்களுள் ஊழின் ஆற்றலை வள்ளுவர் மறுப்பதுடன் ஊழ்வினையின் இலக்கணமாகச் சொல்லப்படும் அனைத்துக் கருத்துக்களுக்கும் எதிர்மறையான கருத்துக்களையே விளக்கிச் செல்கின்றார். எனவே, ஊழ் பற்றிய கருத்துக்கள் திருக்குறளில் இடம் பெற்றிருந்தாலும் அவை நியதிக் கோட்பாட்டை ஒட்டி அமையவில்லை. ஆதலால் வள்ளுவர் காலத்தில் தமிழகத்தில் நிலவிய ஊழ் பற்றிய சிந்தனையின் வளர்ச்சியே ‘ஆசீவகமாக’ உருப்பெற்றிருக்க வேண்டும் என்பது தெளிவு.

நன்றி: முனைவர் நெடுஞ்செழியன்; தமிழாயம் குழுமம்; முனைவர் இரவா.

Tuesday, June 16, 2009

கூரத்தாழ்வானின் குரு பரம்பரை - 3 (நாதமுனிகள்)

ஆசார்ய பரம்பரையில் திருமகள் கேள்வன், திருமகள், சேனைமுதலியாராகிய விஷ்வக்சேனர், நம்மாழ்வார் என்ற நான்கு ஆசாரியர்களின் வாழித் திருநாமங்களை சென்ற இரு இடுகைகளிலும் பார்த்தோம். முதல் மூவர் விண்ணுலகத்தவர். நான்காவது ஆசாரியரான நம்மாழ்வார் இறைவனால் மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர் - அதனால் உள்ளதை உள்ளபடி உள்ளங்கை நெல்லிக்கனி போல் அறிந்து வேதங்கள் சொல்லாதவற்றையும் வேதங்களில் நேரடியாகச் சொல்லப்படாதவற்றையும் வேதங்களில் குழப்பம் தரும் பகுதிகளைத் தெளிவுறுத்துபவற்றையும் தன்னுடைய திருவாய்மொழி முதலான பாசுரங்களில் பாடி 'வேதம் தமிழ் செய்த மாறன்' என்று பெயர் பெற்றவர். இப்பரம்பரையில் ஐந்தாவது ஆசாரியர் நாதமுனிகள். அவர் முதற்கொண்டு தொடர்ந்து ஆசார்ய பரம்பரை தடையில்லாமல் வந்து கொண்டிருக்கிறது. முதல் மூவர் விண்ணுலகத்தவர்; நான்காமவர் அவதாரமாகிய ஆழ்வார் என்பதால் மானுட ஆசாரியர்களில் இவரே முதல்வராக அமைகிறார். அதனால் இவரிடமிருந்தே வைணவ ஆசாரிய பரம்பரை தொடங்குவதாகக் கூறும் மரபும் உண்டு.

காட்டுமன்னார்குடி என்ற திருத்தலத்தில் ஒன்பதாம் நூற்றாண்டில் பிறந்தவர் நாதமுனிகள். அவர் பிறந்த காலத்தில் ஆழ்வார்களால் பாடப்பெற்ற பாசுரங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பாடப்பெற்று வந்தன. எல்லோரும் முறையாகப் பயின்று பாடும்படியாக அவை தொகுக்கப் பெறவில்லை. அனைத்து பாசுரங்களையும் அறிந்தவர் என்று ஒருவரும் காணப்படவில்லை. அப்படியிருக்கும் போது இத்திருத்தலத்தில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு இறைவனை வணங்கவந்த அடியவர்கள் சிலர் 'ஆராவமுதே' என்று தொடங்கும் திருவாய்மொழியின் பத்து பாசுரங்களைப் பாடினார்கள். அப்பாசுரங்களின் அழகிலும் இனிமையிலும் பொருளாழத்திலும் கவரப்பட்ட இளைஞரான நாதமுனிகள் அப்பாடல்களைப் பற்றி அந்த அடியார்களிடம் விசாரிக்க அவர்கள் தாங்கள் கும்பகோணத்தில் இருந்து வருவதாகவும் அப்பாசுரங்கள் நம்மாழ்வாருடைய திருவாய்மொழிப் பாசுரங்கள் என்றும் அவை திருக்குடந்தைப் பெருமாளைப் பாடும் பாசுரங்கள் என்றும் அதனால் முன்னோர்கள் கற்றுக் கொடுத்துத் தங்களுக்குப் பாடமாயின என்றும் தெரிவித்தனர். அப்பாசுரங்களின் முடிவில் 'ஆயிரத்தில் இந்தப் பத்துப் பாசுரங்கள்' என்ற குறிப்பு வந்ததைக் கேட்டு அந்த ஆயிரம் பாசுரங்களும் அவர்களுக்குத் தெரியுமா என்று நாதமுனிகள் கேட்க, 'தெரியாது. ஆழ்வாரின் பிறந்த ஊரான திருக்குருகூர் ஆழ்வார் திருநகரிக்குச் சென்றால் கிடைக்கலாம்' என்று அவர்கள் கூறினார்கள்.

அதன்படியே நாதமுனிகள் தாமிரபரணி ஆற்றங்கரையில் இருக்கும் ஆழ்வார் திருநகரிக்கு வந்து விசாரிக்க அங்கும் அவருக்கு அப்பாசுரங்கள் கிடைக்கவில்லை. நம்மாழ்வாரின் சீடரான மதுரகவியாழ்வார் தன் ஆசாரியரின் மேல் எழுதிய 'கண்ணிநுண்சிறுத்தாம்பு' என்று தொடங்கும் பத்து பாசுரங்கள் மட்டுமே கிடைத்தன. அந்தப் பாசுரங்களைக் கற்றுக் கொண்டு நம்மாழ்வார் அமர்ந்திருந்த உறங்காப்புளியின் கீழ் அமர்ந்து அப்பாடல்களைப் பல்லாயிரம் முறை ஓதினார் நாதமுனிகள். அப்படி ஓதும் போது யோகதசையில் நம்மாழ்வார் நாதமுனிகளின் முன்பு தோன்றி தன்னுடைய திருவாய்மொழி மட்டும் இல்லாமல் மற்ற ஆழ்வார்கள் பாடிய பாசுரங்களையும் தந்தருளினார். அப்பாசுரங்களை எல்லாம் தொகுத்து முறைப்படுத்தி இசையமைத்து தன் மருமகன்களுக்கு அவற்றைக் கற்றுக் கொடுத்து அவர்கள் மூலமாக இசையுடன் கூடிய ஆழ்வார் பாசுரங்களை தமிழகம் எங்கும் பரவச் செய்தார் நாதமுனிகள்.

ஆனிதனில் அனுடத்தில் அவதரித்தான் வாழியே
ஆளவந்தார்க்கு உபதேசம் அருளி வைத்தான் வாழியே
பானு தெற்கில் கண்டவன் சொல் பல உரைத்தான் வாழியே
பராங்குசனார் சொல் பிரபந்தம் பரிந்து கற்றான் வாழியே
கானமுறத் தாளத்தில் கண்டிசைத்தான் வாழியே
கருணையினால் உபதேசக் கதி அளித்தான் வாழியே
நானிலத்தில் குருவரையை நாட்டினான் வாழியே
நலம் திகழும் நாதமுனி நற்பதங்கள் வாழியே

ஆனி மாதத்தில் அனுஷ நட்சத்திரத்தில் இந்த பூமியில் அவதரித்த நாதமுனிகள் வாழ்க. ஆனிதனில் அனுடத்தில் அவதரித்தான் வாழியே.

ஆசாரிய பரம்பரையில் நாதமுனிகளுக்குப் பின்னர் பெரும் புகழ் பெற்றவர் அவருடைய பேரனான யாமுனமுனிகள் /யமுனைத்துறைவர் . அவருக்கு ஆளவந்தார் என்றும் ஒரு பெயர் உண்டு. தனக்கு நம்மாழ்வார் மூலமாகக் கிடைத்த உபதேசங்களை எல்லாம் ஆளவந்தாருக்குத் தக்க காலம் வரும் போது உபதேசிக்கும் படி தன் சீடரான உய்யக்கொண்டாரிடம் சொல்லி வைத்தார் நாதமுனிகள். உய்யக்கொண்டாரும் தனது சீடரான மணக்கால் நம்பியிடம் அப்பொறுப்பை ஒப்படைத்தார். மணக்கால் நம்பி ஆளவந்தாருக்கு உபதேசம் செய்து தன் பரமகுருவின் கட்டளையை நிறைவேற்றினார். அப்படி ஆளவந்தாருக்காக உபதேசத்தை அவருக்குத் தகுந்த காலம் வருவதற்கு முன்னரே உபதேசித்து வைத்த நாதமுனிகள் வாழ்க. ஆளவந்தார்க்கு உபதேசம் அருளி வைத்தான் வாழியே.

அயோத்தி நகரில் வாழ்ந்து வரும் போது தென் திசையில் தோன்றிய பேரொளியைக் கண்டு தெற்கே வந்து நம்மாழ்வாரை ஆழ்வார் திருநகரியில் தரிசித்து அவருடைய சீடரானார் மதுரகவியாழ்வார். அவர் அருளிய 'கண்ணிநுண்சிறுத்தாம்பு' என்று தொடங்கும் பாசுரங்களை பல முறை ஓதி நம்மாழ்வாரிடம் இருந்து நாலாயிரப் பனுவல்களைப் பெற்றார் நாதமுனிகள். நம்மாழ்வார் என்னும் பகலவனைத் தெற்கில் கண்ட மதுரகவியாழ்வாரின் பாசுரங்களைப் பல முறை உரைத்தவன் வாழ்க. பானு தெற்கில் கண்டவன் சொல் பல உரைத்தான் வாழியே.

மதம் பிடித்துத் திரியும் யானையை அங்குசம் கொண்டு அடக்கி நல்வழியில் அழைத்துச் செல்வார்கள். அது போல் தீயவழியில் செல்லுபவர்களைத் திருத்தி நல்வழியில் சேர்க்கும் திருவாய்மொழியைத் தந்த நம்மாழ்வார் அங்குசத்தைப் போன்றவர். அதனால் அவர் திருப்பெயர் பராங்குசர். அவர் யோகதசையில் அருளிச் செய்த நாலாயிர திவ்வியப் பிரபந்தங்களையும் மிகவும் பரிவுடன் கற்றுக் கொண்டவர் நாதமுனிகள். பராங்குசனார் சொல் பிரபந்தம் பரிந்து கற்றான் வாழியே.

பாடல்களை ஓதினால் அவ்வளவு எளிதாக மனதில் நிற்காது. அதே பாடல்களை இசையுடன் பாடினால் மிகவும் எளிதாக மனதில் நிற்கும். இசையுடன் பாடும் படி அமைந்த நாலாயிரம் பனுவல்களுக்கும் தகுந்த இசைமுறைகளை அமைத்து கீழையகத்து ஆழ்வான், மேலையகத்து ஆழ்வான் என்னும் தன்னுடைய இரு மருமகன்களுக்கும் கற்றுக் கொடுத்து அதன் மூலம் நாலாயிரம் பாசுரங்களும் உலகத்தில் பரவும் படி செய்தார் நாதமுனிகள். இசையுடன் பாடும் படி தாளம் அமைத்து நாலாயிரம் பனுவல்களையும் இசைத்தவர் வாழ்க. கானமுறத் தாளத்தில் கண்டிசைத்தான் வாழியே.

மக்கள் மீது இருக்கும் கருணையினால் நம்மாழ்வாரிடமிருந்து தான் கற்ற யோக இரகசியங்களையும் மறைப்பொருட்களையும் அனைவரும் அறியும் படி ஒரு உபதேச வழிமுறையைத் தோற்றுவித்தார் நாதமுனிகள். கருணையினால் உபதேசக் கதி அளித்தான் வாழியே.

அந்த உபதேச வழிமுறையை உலகமெங்கும் பரப்பிட ஒரு ஆசாரிய பரம்பரையை நிலைநாட்டினார் நாதமுனிகள். எதற்கும் அசையாத மலையைப் போல் அரைகுறைத் தத்துவவாதிகளின் மிடுக்கினை எல்லாம் ஒடுக்கி தான் எப்போதும் போல் இருக்கும் ஆசாரிய பரம்பரை என்பதால் அதனை குருவரை (குரு மலை) என்று சொல்கிறது இந்த வாழித்திருநாமம். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்னும் நான்கு வகையான நிலங்களை உடைய உலகத்தில் குரு பரம்பரை என்னும் மலையை நாட்டியவன் வாழ்க. நானிலத்தில் குருவரையை நாட்டினான் வாழியே.

உயர்வற உயர்நலம் உடையவன் என்று இறைவனைச் சொல்வார் நம்மாழ்வார். எல்லாவிதமான கல்யாண குணங்களும் உடையவன் இறைவன். அவனைப் போன்ற கல்யாண குணங்கள் நிரம்பியவர் நாதமுனிகள். அவருடைய திருவடிகள் வாழ்க. நலம் திகழும் நாதமுனி நற்பதங்கள் வாழியே.

நாதமுனிகள் திருவடிகளே தஞ்சம்.

Sunday, June 14, 2009

முப்பத்தியிரண்டும் முப்பத்தியேழும்...

யார் இந்தத் தொடர் வலைப்பின்னல் பதிவினைத் தொடங்கியவர் என்று தெரியவில்லை. அண்மையில் சில நண்பர்கள் பதிவுகளில் இதனைக் கண்டபோது விரைவில் நமக்கும் அழைப்பு வரும்; ஆனால் அது சில நாட்களிலா வாரங்களிலா மாதங்களிலா என்று பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். சில நாட்களிலேயே வந்துவிட்டது. ஜி.ரா., கோ.ரா, இராகவன் (இராஜேஷ்) தான் அழைத்தது. எப்போதும் போல் வலைப்பின்னல் இடுகை இட அழைப்பு வந்து ஒரு மாதம் இரண்டு மாதம் கழித்து இடாமல் இந்த முறை உடனே இட்டுவிடலாம் என்று இடுகிறேன். :-)

***

1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்கள் பெயர் பிடிக்குமா?

எங்க குலக்கடவுள் திருப்பரங்குன்றத்துறைவோன். எங்க அம்மா முருக பக்தை. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், அன்னை அங்கயற்கண்ணியின் இடப்புறம் கோவில் கொண்டிருக்கும் 'கூடல் குமரனை' ஒவ்வொரு சஷ்டியன்றும் சென்று வழிபடுவார்கள். அத்தோடு நான் பிறந்தது பங்குனி உத்திரமாகவும் அமைந்து விட்டதால் 'குமரன்' என்ற பெயரை வைத்துவிட்டார்கள். என் வயதுக்குழுவில் மதுரையில் நிறைய குமரன்கள் உண்டு. என் பள்ளி வகுப்பில் என்னுடன் ஐந்து குமரன்கள் படித்தார்கள்.

என்னிடமிருந்து மின்னஞ்சல் பெற்றவர்கள் என் பெயரின் பிற்பகுதியான 'மல்லி' என்பதைப் பார்த்திருப்பார்கள். அது பரம்பரையாக எங்கள் குடும்பத்திற்கு வழங்கப்படும் பெயர். சௌராட்டிரர்கள் ஒவ்வொருவருக்கும் அப்படி ஒரு குடும்பப் பெயர் உண்டு.

என் பெயர் எனக்கு மிகவும் பிடிக்கும். என் நண்பர்கள் பலருக்கும் (இராகவன், இரவிசங்கர்,...) வடமொழிப்பெயர் அமைந்துவிட எனக்கு முழுக்க முழுக்கத் தமிழ்ப்பெயராக அமைந்ததில் அதுவும் தமிழ்க்கடவுள் முருகனின் பெயர் அமைந்ததில் மிகவும் மகிழ்ச்சி.

2. கடைசியாக அழுதது எப்பொழுது?

இராகவன் கண்களால் அழுவதையும் மனத்தால் அழுவதையும் பற்றி சொல்லியிருந்தார். எனக்கும் அப்படி சொல்லத் தோன்றுகிறது.

கண்ணீர் விட்டது அண்மையில் விஜய் தொலைக்காட்சியில் 'சூப்பர் சிங்கர் 2008'ன் இறுதி நாளில் அஜீஷ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட போது. என்னைப் பொறுத்தவரை வெற்றி பெறத் தகுந்தவர் இரவி தான். அதனால் அஜீஷ் வெற்றி பெற்றதில் எனக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான். ஆனால் கண்ணீர் விடக் காரணம் அந்த வெற்றிச் செய்தியைக் கேட்ட போது அஜீஷின் தாயார் மிகவும் நெகிழ்ந்து கண்ணீர் விட்டதும் குழைந்த குரலில் நன்றி உரைத்ததும் கண்ட போது. ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய் என்பதனை நேரில் கண்ட நெகிழ்ச்சி. அத்தோடு என்னை ஈன்றவளும் உயிருடன் இருந்திருந்தால் இப்படித் தானே என் வாழ்வினைக் கண்டு மகிழ்ந்திருப்பாள் என்ற நினைவு. அஜீஷின் அன்னையிடம் என் அன்னையைக் கண்டேன் போலும்.

மனத்தால் அழுது கொண்டிருப்பது வயதான தந்தையை எண்ணி. எழுபது வயதாகும் அவருக்கு ஒரு வாரத்திற்கு முன்னர் தான் சிறுநீரக அறுவை மருத்துவம் செய்தார்கள். இரு நாட்களுக்கு முன்னர் அவக்கரமாக கட்டிலில் இருந்து எழுந்தவர் தரையில் இருந்த போர்வை தடுக்கி விழுந்து இடுப்பு எழும்பு விலகிவிட்டது. மீண்டும் நேற்று அறுவை மருத்துவம் செய்து சரி செய்திருக்கிறார்கள். முனைப்புக் கவனிப்பில் (ICU) வைத்திருக்கிறார்கள். தம்பி நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்கிறான். செவ்வாய் கிழமை தான் அவருடன் பேச இயலும் என்றும் சொல்கிறான்.

3. உங்களுடைய கையெழுத்து உங்களுக்குப் பிடிக்குமா?

கையெழுத்து என்றால் Handwritingஆ Signatureஆ என்று புரியவில்லை. நாம் தான் இரண்டையும் கையெழுத்து என்றே சொல்கிறோமே? Handwriting என்றால் பரவாயில்லாமல் இருக்கும். Signature என்றால் யார் வேண்டுமானால் போடும் படி எளிமையாக இருக்கும். இரண்டுமே பிடிக்கும் பிடிக்காது என்று சொல்லும் நிலையில் தான் இருக்கின்றன.

4. பிடித்த மதிய உணவு என்ன?

எண்ணெய் பருப்புப் பொடி சாதம், மட்டன்/சிக்கன் குழம்பு, வத்தற்குழம்பு, தயிர்சாதத்துடன் புதினா கொத்தமல்லி கருவேப்பிலைத் துவையல்.

5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

தொடர்ந்து பேசவேண்டும்; பழகவேண்டும் என்றில்லாமல் ஒத்த சிந்தனை, செயல்பாடு என்று இருக்கும் நண்பர்கள் பலர் உண்டு. இரவிசங்கரும் இராகவனும் போல். இப்போது இருக்கும் இடத்திலும் நெருங்கிய நண்பர்கள் என்று யாரும் இல்லை; முன்பிருந்த நெருங்கிய நண்பர்களுடனும் அடிக்கடி தொலைபேசுவது கூட இல்லை.

6. கடலில் குளிக்கப் பிடிக்குமா? அருவியில் குளிக்கப் பிடிக்குமா?

இரண்டுமே பிடிக்கும். கடல் என்றால் திருச்செந்தூர் கடல் பிடிக்கும். அருவி என்றால் பழைய குற்றால அருவி பிடிக்கும்.

7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

முழுமையான தோற்றத்தின் கவர்ச்சி.

8. உங்ககிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?

பிடித்தது என் தமிழார்வம். பிடிக்காதது தற்புகழ்ச்சியும் புகழ்ச்சிக்கு மயங்குதலும்.

9. உங்க சரிபாதிகிட்ட உங்களுக்குப் பிடித்த பிடிக்காத விஷயம் எது?

Pass...

10. யார் பக்கத்துல இல்லாம இருக்கிறதுக்கு வருந்துகிறீர்கள்?

அப்பா. அவருடன் மதுரையில் இருக்க இயலவில்லை.

11. இதை எழுதும் போது என்ன வண்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?

வெண்ணிற பனியனும் காக்கி நிற இடையாடையும்.

12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்கீங்க?

எல்லோரும் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். அப்பாவை நினைத்து எனக்குத் தூக்கம் வரவில்லை. யார் தூக்கத்தையும் கெடுக்காமல் எதையும் கேட்காமல் அமைதியாக இந்த இடுகையை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

13. வண்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வண்ணமாக உங்களுக்கு ஆசை?

நீல நிறம். வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்.

14. பிடித்த மணம்?

புளிக்காய்ச்சல் காயும் மணம். எனக்கு மிக மிகப் பிடித்த உணவு புளியோதரை.

15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?

முனைவர் நா. கண்ணன்: தமிழ் மரபு அறக்கட்டளையை நிறுவி பாடுபடுபவர். தமிழுக்காக அவர் ஆற்றும் தொண்டுகள் மிகச் சிறந்தவை.

மௌலி: ஆழ்ந்த சமயப் பற்றும் சமய ஒழுக்கமும் மிக்கவர்.

கவிநயா அக்கா: எளிமையும் இனிமையும் உடையவர்.

கீதாம்மா: கல்விக் கடல். கற்றதை அள்ளித் தரும் வண்மை.

யோகன் ஐயா: எளிமையும் அன்பும் மிக்கவர். வெகு நாட்களாக என் பதிவுகள் பக்கம் இவரைக் காணவில்லை.

இராகவ்: பண்பும் பணிவும் மிக்கவர்.

சிவமுருகன்: செயல்திறன் மிக்கவர். மீனாட்சி அம்மன் கோவில் படங்களைத் தொகுத்தவர்.

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

ஒவ்வொன்றும் பிடிக்கும். மிகவும் பிடித்தது 'பொற்சிலையும் சொற்குவையும்'.

17. பிடித்த விளையாட்டு:

எதுவும் இல்லை.

18. கண்ணாடி அணிபவரா?

ஆமாம். ஆனால் பெரும்பாலும் தொடுவில்லை (Contact Lens) அணிந்திருப்பேன்.

19. எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?

நகைச்சுவை, வரலாறு, புராணம்.

20. கடைசியாகப் பார்த்த படம்?

Night in the Museum - திரையரங்கில் என் இரு குழந்தைகளுடன்.

21. பிடித்த பருவகாலம் எது?

பருவகாலமா? +2 படிக்கும் போது நிறைய வாங்கினேன். அதில் எந்த இதழ் பிடித்தது என்று இப்போது நினைவில்லை. :-)

ஓ. பெரும்பொழுதுகளைப் பற்றி கேட்டீர்களா? இளவேனில் தான் மிகவும் பிடிக்கும். :-)

22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

கலித்தொகை - புலியூர்க் கேசிகன் உரை.

23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

எப்போதாவது. தோன்றும் போது.

24. பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?

பிடித்தது: கீசு கீசு என்று எங்கும் பறவைகள் தமக்குள் கலந்து பேசும் பேச்சு அரவம்.
பிடிக்காதது: பேரிரைச்சல்.

25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

தற்போது வாழும் இடம்.

26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

உண்டு. ஆனால் சொல்ல இயலாது. :-)

27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

யாராவது அரைகுறையாக ஒன்றைப் படித்துவிட்டு அதுவே அறுதியானது என்று பேசும் போது.

28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

சினம். இந்த சேர்ந்தாரைக் கொல்லி வீட்டை விட்டு வெளியே அவ்வளவாக வருவதில்லை. அதனால் வீட்டில் உள்ளோருக்கு மட்டுமே இதன் வேகம் தெரியும். மனைவி, மக்கள், அப்பா, தம்பி, பாட்டி என்று இவர்களிடம் மட்டுமே இது பாய்ந்திருக்கிறது இது வரை. அண்மைக் காலமாக அவ்வளவாக வெளிப்படவில்லை. அதனால் மனைவியும் மக்களும் வருத்தமின்றி இருக்கிறார்கள்.

29. உங்களுக்குப் பிடித்த சுற்றுலா தலம்?

நயாகரா.

30. எப்படி இருக்கணும்ன்னு ஆசை?

மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும் என்று ஆசை.

31. மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம்?

பதிவுகள் எழுதுவதும் படிப்பதும்.

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க.

ஒருவன் மற்றவரை நேசிப்பது மற்றவருக்காக இல்லை; தனக்காகவே.

தானே தமக்குச் சுற்றமும்; தானே தமக்கு விதிவகையும்.

Saturday, June 13, 2009

கலித்தொகை காட்டும் சிவசக்தியின் ஊழிக்கூத்து - 2


கலித்தொகையின் கடவுள் வாழ்த்தாக கலித்தொகையைத் தொகுத்த 'மதுரையாசிரியன் நல்லந்துவனார்' இயற்றிய 'ஆறறி அந்தணர்' என்று தொடங்கும் கடவுள் வாழ்த்தினைச் சென்ற பகுதியிலிருந்து பார்த்து வருகிறோம். அந்தப் பாடலின் முதல் நான்கு அடிகளுக்கான விளக்கங்களைச் சென்ற இடுகையில் பார்த்தோம். இந்த இடுகையில் மற்ற அடிகளுக்கான விளக்கங்களைக் காண்போம்.

ஆறு அறி அந்தணர்க்கு அருமறை பல பகர்ந்து
தேறு நீர் சடைக்கரந்து திரிபுரம் தீ மடுத்து
கூறாமல் குறித்து அதன் மேல் செல்லும் கடுங்கூளி
மாறாப்போர் மணிமிடற்று எண் கையாய் கேள் இனி
படுபறை பல இயம்பப் பல்லுருவம் பெயர்த்து நீ
கொடுகொட்டி ஆடுங்கால் கோடு உயர் அகல் அல்குல்
கொடி புரை நுசுப்பினாள் கொண்ட சீர் தருவாளோ
மண்டு அமர் பல கடந்து மதுகையான் நீறு அணிந்து
பண்டரங்கம் ஆடுங்கால் பணை எழில் அணை மென் தோள்
வண்டு அரற்றும் கூந்தலாள் வளர் தூக்குத் தருவாளோ
கொலை உழுவைத் தோல் அசைஇக் கொன்றைத் தார் சுவற்புரளத்
தலை அம் கை கொண்டு நீ காபாலம் ஆடுங்கால்
மு(ல்)லை அணிந்த முறுவலாள் முற்பாணி தருவாளோ
என ஆங்கு
பாணியும் தூக்கும் சீரும் என்று இவை
மாண் இழை அரிவை காப்ப
ஆணம் இல் பொருள் எமக்கு அமர்ந்தனை ஆடி.


'வாழும் வழிமுறைகளை அறியும் அந்தணர்களுக்கு அரிய மறைகள் பலவும் பகர்ந்து, தெளிந்த நீரைச் சடையில் மறைத்து, திரிபுரங்களைத் தீ மடுத்து, மொழியாலும் நினைவாலும் எட்ட இயலாத கடுமையான கூளி எனும் தோல்வியில்லாத கடும்போரினை நடத்தும் கரியமணி போன்ற கழுத்தினை உடைய எட்டுகைகளைக் கொண்டவனே இனி நான் சொல்வதைக் கேட்பாய்' என்று இறைவனை முன்னிலை விளியில் விளித்துப் பாடலைப் பாடுகிறார் நல்லந்துவனார்.

பாடுகிறார் என்று சொன்னது வெறும் எழில் வார்த்தை இல்லை. இப்பாடல் இசையுடன் பாடப்பட்டதே என்று முன்னோர்கள் பலரும் சொல்லியிருக்கிறார்கள். பாடல் வரிகளைப் பார்த்தாலும் இது இசைப்பா என்பது புரியும்.

எண் தோள் ஈசன் ஊழிக்கூத்து ஆடும் போது ஒலி மிக்க பல பறைகள் ஒலி செய்கின்றன. அவன் திருக்கையினில் இருக்கும் உடுக்கையும் இங்கே சொல்லப்பட்ட பறைகளில் ஒன்று - அதுவும் ஓங்கி ஒலிக்கின்றது. படுபறைகள் பல இயம்ப இறைவன் ஆடும் போது மாறி மாறிப் பல்வேறு வடிவங்களும் காட்டுகின்றான். அவன் காட்டும் அவ்வடிவங்கள் எல்லாம் அண்டங்களின் வடிவங்கள். அவை ஒவ்வொன்றையும் மீண்டும் தன்னுள்ளே ஒடுக்கிக் கொள்கின்றான். அப்படி ஒடுக்கத்திற்காக அவன் ஆடும் ஆட்டம் கொடியதாக 'கொட்டி' என்னும் ஆட்டம். இதனைப் புலவர் 'படுபறை பல இயம்பப் பல்லுருவம் பெயர்த்து நீ கொடு கொட்டி ஆடும்' என்று குறிக்கிறார்.

எல்லா அண்டங்களும் இறைவனிடமிருந்தே தோன்றி அவனுள்ளே ஒடுங்குவதால் 'பல்லுருவம் பெயர்த்து' என்றார் புலவர். 'நீல மேனி வால் இழைப் பாகத்து ஒருவன் இரு தாள் நிழல் கீழ் மூவகை உலகும் முகிழ்த்தன முறையே' என்று ஐங்குறுநூற்றின் கடவுள் வாழ்த்து அண்டங்களெல்லாம் சிவபெருமானிடத்திலிருந்து தோன்றுவதைக் காட்டும். 'மணி மிடற்று அந்தணன் தாவில் தாள் நிழல் தவிர்ந்தன்றால் உலகே' என்று அகநானூற்றின் கடவுள் வாழ்த்து உலகங்களெல்லாம் நிலைபெற்றிருப்பது சிவபெருமானின் திருவடி நிழலில் என்று சொல்லும்.

'போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்' என்றும், 'போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்' என்றும் திருவாசகத்தின் பகுதியான திருவெம்பாவை பாடும்.

அப்படி யாவையும் ஒழிக்கும் காலத்தில் இறைவன் கொட்டி என்னும் ஆட்டத்தை ஆடும் போது அவன் அருகில் உமையன்னை இருந்து தாளத்தின் நிறைவினைக் குறிக்கும் சீரைத் தருவாளோ என்று புலவர் கேட்பது அன்னை அருளுருவாக இருக்க உலகனைத்தையும் நீ அழிக்கும் போது அதற்கு துணை போவாளோ என்று கேட்பது போல் இருக்கிறது. ஆனால் உலகெல்லாம் அழிந்து போனபடியால் அவளைத் தவிர தாளத்தின் காலங்களை உணர்த்த வேறு யாரும் இல்லை என்றும் சொல்வது போலவும் இருக்கிறது.

பக்கங்களில் உயர்ந்து அகன்ற அல்குலையும் கொடி போன்ற நுண்மையான இடுப்பினையும் கொண்டவள் உமையம்மை என்று அன்னையின் எழிலுருவை இந்த இடத்தில் புகழ்கிறார் புலவர்.

முடிவில்லாத பல போர்களையும் வென்று அந்த வலிமையால் பகைவரின் வெந்த உடலின் நீற்றினை அணிந்து நீ பாண்டரங்கம் என்னும் கொடிய ஆட்டத்தை ஆடும் போது மூங்கிலைப் போன்ற வடிவினை உடைய தோள்களையும் வண்டுகள் ஒலிக்கும் கூந்தலையும் உடைய உமையம்மை தாளத்தின் இடைக்காலத்தை உணர்த்தும் தூக்கினைத் தருவாளோ? அங்கு தான் வேறு யாரும் இல்லையே. அவள் தான் தரவேண்டும்.

கொல்லும் தொழிலையுடைய புலியை நீ கொன்று அதன் தோலை உடுத்துக் கொண்டு கொன்றைப்பூவால் செய்த மாலை தோளிலே அசைய, அயனுடைய (பிரம்மனுடைய) தலையைக் கையிலே ஏந்திக் கொண்டு நீ 'காபாலம்' என்னும் கூத்தினை ஆடும் போது முல்லையை ஒத்த புன்முறுவலை உடையவளோ தாளத்தின் தொடக்கத்தினைக் குறிக்கும் பாணியைத் தருவாள்? அவள் தான் தரவேண்டும். அப்போது தான் வேறு யாரும் இல்லையே.

கொட்டி, பாண்டரங்கம், காபாலம் என்னும் இந்த மூவகை ஆட்டங்களைப் பற்றியும் சிலப்பதிகாரம் பேசுகின்றது என்று உரையாசிரியர்கள் சொல்கிறார்கள். அப்போது கொட்டியென்பது உலகை அழிக்கும் தொழிலின் போது ஆடும் கூத்து என்றும், பாண்டரங்கம் என்பது திரிபுரத்தை அழித்த போது ஆடிய கூத்து என்றும், காபாலம் என்பது அயன் தலையைக் கொய்த போது ஆடிய கூத்து என்றும் சொல்கிறதாம்.

அயன் உலகைப் படைக்கும் தொழிலை உடையவன் என்பதால் அவன் தலையைக் கொய்த பின் ஆடும் ஆட்டமான காபாலத்திற்கு 'பாணி' என்னும் தாளத் தொடக்கத்தை உமையம்மை தருகிறாள் போலும்.

தீமையை அழித்து நன்மையைக் காத்த நிகழ்வாகத் திரிபுரம் எரித்தது அமைவதால் அப்போது ஆடும் பாண்டரங்கத்திற்கு 'தூக்கு' என்னும் தாளத்தின் இடைநிலையைத் தருகிறாள் போலும் உமையன்னை.

உலகெல்லாம் அழிந்து நீறாகப் போகும் நிலையில் ஆடும் ஆட்டம் 'கொட்டி' என்பதால் அந்த நேரத்தில் தாளத்தின் முடிவான 'சீரினை'த் தருகிறாள் போலும் அம்மை.

ஆணவம் மிகுந்த போது அதனை அழித்த கூத்து முதலாவதான காபாலம். பிறருக்குத் தீங்கு விளைத்தாரை அழித்த கூத்து இரண்டாவதான பாண்டரங்கம். அனைத்தையும் அழித்த கூத்து மூன்றாவதான கொட்டி.

இப்படியாக அழிக்கும் தொழிலை நிகழ்த்தும் ஆட்டங்களை நீ ஆடும் போது அவைகளுக்கு உரிய 'பாணி', 'தூக்கு', 'சீர்' என்னும் தாள காலங்களை சிறப்பான அணிகலன்களை அணிந்த அம்மை காத்து நிற்க, நீ ஆடுகின்றாயோ? அன்னை அப்போது அருகிருக்கும் அருட்செயலினால் தான் போலும் நீ வெம்மையை நீக்கி அன்பற்ற பொருளான எமக்கும் அருள் தர ஒரு உருவோடு வந்து எதிர் நின்றாய்.

சிவபெருமானை வடமொழி வேதம் புகழவில்லை; உருத்திரனைத் தான் போற்றுகிறது. ஆனால் சங்கத் தமிழ் இலக்கியங்களோ உருத்திரனைப் போற்றவில்லை; சிவபெருமானையே போற்றுகின்றது என்று சில அன்பர்கள் கூறக் கேட்டிருக்கிறோம். ஆனால் இந்த சங்கப் பாடல் மிகவும் விரிவாக சிவபெருமானின் உருத்திரத் திருக்கோலத்தைப் பாடிப் போற்றுகிறது. நுணிகிப் பார்த்தால் உருத்திரக் கோலத்தைப் போற்றும் சங்கப் பாடல்களும் மிகுதியாக இருப்பது புலப்படுகிறது.

Friday, June 12, 2009

கலித்தொகை காட்டும் சிவசக்தியின் ஊழிக்கூத்து - 1


எல்லா உலகங்களுக்கும் முதல் காரணமாகவும் அதே நேரத்தில் தனக்கு வேறெதுவும் காரணம் இன்றித் தான் அநாதியாகவும் விளங்குபவன் சிவபெருமான். அநாதி மட்டுமின்றி அனந்தனும் ஆனவன்; அவனுக்கு அழிவும் கிடையாது. அவனே படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழிலையும் ஆற்றும் முதல்வன். ஊழிக் காலத்திலே அனைத்தையும் தனக்குள் ஒடுக்கி வைத்துக் கொண்டு மீண்டும் தோற்றுவிப்பவன் அவனே. ஊழிப்பெருங்கூத்தினை அவன் ஆடி உலகனைத்தையும் அழித்து வரும் வேளையிலே அன்னை பராசக்தியின் அருள் நிறைந்த பார்வையினைக் கண்டுப் படிப்படியாக வேகம் குறைந்து அமைதி அடைந்து ஆதிசக்தியின் துணையோடு அனைத்துலகையும் மீண்டும் படைப்பான். ஊழிப் பெருங்கூத்தை சிவபெருமான் ஆடுவதையும் அப்போது உமையன்னை அருகிருந்து அவனை அமைதிப்படுத்துவதையும் மிக அழகான ஓவியமாக கலித்தொகையின் கடவுள் வாழ்த்தில் காட்டுகிறார் 'மதுரை ஆசிரியன்'
என்ற சிறப்புப் பெயர் பெற்ற நல்லந்துவனார் என்னும் புலவர். இவரே இக்கலித்தொகை என்ற நூலில் நெய்தல் திணைக்கு உரிய பாடல்களைப் பாடி இக்கலித்தொகை என்னும் நூலினைத் தொகுத்தவர்.

ஆறு அறி அந்தணர்க்கு அருமறை பல பகர்ந்து
தேறு நீர் சடைக்கரந்து திரிபுரம் தீ மடுத்து
கூறாமல் குறித்து அதன் மேல் செல்லும் கடுங்கூளி
மாறாப்போர் மணிமிடற்று எண் கையாய் கேள் இனி
படுபறை பல இயம்பப் பல்லுருவம் பெயர்த்து நீ
கொடுகொட்டி ஆடுங்கால் கோடு உயர் அகல் அல்குல்
கொடி புரை நுசுப்பினாள் கொண்ட சீர் தருவாளோ
மண்டு அமர் பல கடந்து மதுகையான் நீறு அணிந்து
பண்டரங்கம் ஆடுங்கால் பணை எழில் அணை மென் தோள்
வண்டு அரற்றும் கூந்தலாள் வளர் தூக்குத் தருவாளோ
கொலை உழுவைத் தோல் அசைஇக் கொன்றைத் தார் சுவற்புரளத்
தலை அம் கை கொண்டு நீ காபாலம் ஆடுங்கால்
மு(ல்)லை அணிந்த முறுவலாள் முற்பாணி தருவாளோ
என ஆங்கு
பாணியும் தூக்கும் சீரும் என்று இவை
மாண் இழை அரிவை காப்ப
ஆணம் இல் பொருள் எமக்கு அமர்ந்தனை ஆடி.

அந்தணர் என்போர் அறவோர் என்றது அருந்தமிழ். ஒழுக்க நெறியை நன்கு அறிந்தவரே அந்தணர். ஆறு என்றால் வழி என்று ஒரு பொருள் உண்டு. ஒழுக்க வழிமுறைகளையும் வாழ்க்கை வழிமுறைகளையும் நன்கு அறிந்தவர்களே அந்தணர்கள் என்று சொல்லத் தகுந்தவர்கள். பிறப்பால் அந்தணர் என்று பெயர் பெற்றவர்கள் அல்லர். அப்படி 'ஆறு (வழி) அறியும் அந்தணர்களுக்கு அரிய மறைகள் பலவும் சொன்னவன் இறைவன்' என்கிறது இந்தப் பாடலின் முதல் அடி. கல்லால மரத்தின் கீழ் தென்முகக் கடவுளாக சிவபெருமான் அமர்ந்து அந்தணர்களுக்கு அருமறைகள் உரைத்ததாக பழங்கதைகள் கூறும். அச்செய்தியினை இந்தப் பாடலின் அடி கூறுகின்றது. மறைகள் பற்பல என்றும் எண்ணில்லாதவை என்றும் முன்னோர் சொல்லுவார்கள். அம்மறைகளை நான்காகத் தொகுத்து நான்மறைகள் என்று உரைக்கும் மரபு தோன்றுவதற்கு முன்னர் இருந்த நிலையை 'நான்மறைகள் பகர்ந்து' என்று சொல்லாமல் 'அருமறைகள் பல பகர்ந்து' என்பதால் இந்தப் பாடல் கூறுவதாகத் தோன்றுகிறது.

அருமறைகளுக்கு ஆறு அங்கங்கள் உண்டு. அந்த ஆறங்கங்களை அறிந்த அந்தணர்கள் என்பதையே 'ஆறு அறி அந்தணர்' என்று இந்தப் பாடலடி கூறுவதாகச் சொல்பவரும் உண்டு. 'ஆறு அறி' என்ற இடத்தில் அது வினைத்தொகையாக அமைகின்ற காரணத்தால் 'ஆறு அறியும், ஆறு அறிந்த, ஆறு அறியப் போகும்' என்று முக்காலத்திற்கும் பொருள் தரும்படி அமைந்திருக்கிறது. அருமறை பல இறைவன் அந்தணர்க்குப் பகர்ந்த பின்னர் அவர்கள் ஆறு அறிந்தார்கள் என்று சொன்னாலும் பொருந்தும். அந்த வகையில் அருமறைகளின் அங்கங்ளான ஆறங்களையும் அருமறையை இறைவனிடம் இருந்து அறிந்த பின்னர் அறிந்தனர் அந்தணர் என்றாலும் பொருத்தம் ஆகும்.

அருமறையைக் கொண்டவர்களைப் பார்ப்பார் என்று அழைக்க வேண்டும்; அந்தணர் என்று அழைக்கக் கூடாது என்று சில அன்பர்கள் இக்காலத்தில் கூறத் தொடங்கியிருக்கிறார்கள். சங்க இலக்கியங்களைக் கண்டால் இவ்விரு சொற்களும் ஒரு பொருட் பன்மொழியாக, ஒத்த பொருள் கொண்ட இரு சொற்களாகத் தான் விளங்குகின்றன என்பதற்கு இந்தப் பாடலின் முதல்
அடியும் ஒரு சான்று.



கங்கை என்ற பெயருக்குத் தெளிவுடையவள் என்ற பொருள் உண்டு. கங்கை நீர் வெண்ணிறமாகவும் யமுனை நீர் கருநிறமாகவும் இருக்கும் என்றும் கங்கையும் யமுனையும் சரசுவதியும் கலக்கும் முக்கூடலுக்குச் சென்றவர்கள் கூறக் கேட்டிருக்கிறோம். அப்படி தெளிந்த நீர் கொண்ட கங்கை என்பதனைத் தேறு நீர் என்கிறார் புலவர். அப்படி தெளிந்த நீரான கங்கையைத் தன் சடையின் ஒரு பகுதியில் முடிந்து வைத்துக் கொண்டவன் சிவபெருமான். பகீரதனுக்காக உலகிற்கு வந்த கங்கையைத் தன் சடையில் முடிந்து அவள் விரைவினைச் சிவபெருமான் தடுத்த நிகழ்வினை இந்த அடி கூறுகின்றது.

கொடுஞ்செயல்கள் பல புரிந்து எங்கும் திரிந்து கொண்டிருந்த திரிபுரங்களையும் அதில் வாழ்ந்தவர்களையும் தன் சிரிப்பினாலேயே கொளுத்தியவன் சிவபெருமான். அந்த நிகழ்வினை 'திரிபுரம் தீ மடுத்து' என்ற பகுதியால் சொல்கிறது இந்தப் பாடல் அடி.

கூளி என்பது ஒரு கடுமையான போர் வகை. அதனை மிகத் திறமையாக ஆற்றும் ஆற்றல் கொண்டவன் சிவபெருமான். அப்போரில் சிவபெருமான் தோற்றதே இல்லை. அந்தப் போரினைப் பற்றி விவரித்துச் சொல்வது இயலாது. அப்படியே சொன்னாலும் அவை முழுவதும் அப்போரினைப் பற்றியும் அப்போரினில் சிவபெருமானின் திறமையைப் பற்றியும் சொல்லி முடியாது. அது வாக்கிற்கும் மனத்திற்கும் எட்டாத நிலையை உடையது. அதனை 'கூறாமல் குறித்து, அதன் மேல் செல்லும், கடும் கூளி மாறாப் போர்' என்கிறது இந்தப் பாடல் அடிகள்.

சிவபெருமானது போர்த்திறமை மட்டுமின்றி அவனது எச்செயலும் சொல்லுக்கும் நினைவிற்கும் எட்டாதவை. இறைவனுக்கு உருவமில்லை என்றும் இறைவனுக்கு உருவத்தை மனிதர்கள் உருவகித்துக் கொண்டார்கள் என்றும் சில அன்பர்கள் இப்போது சொல்லிக் கொள்கிறார்கள். சிவபெருமானுக்கு உருவமும் உண்டு; அவன் அருவுருவினனும் கூட. அவனுடைய உருவத்தைக் குறிக்கும் படி 'மணி மிடற்றன்' என்றும் 'எண் கையாய்' என்றும் இந்தப் பாடல் கூறுகின்றது.

பாற்கடலைக் கடைந்த போது தோன்றிய ஆலால விடத்தை உண்டதால் கருமணி போன்ற மிடற்றினைப் பெற்றான் சிவபெருமான். அவனுக்கு எட்டு குணங்களும் உண்டு; எட்டு கைகளும் உண்டு. எண்குணத்தான் ஆகிய சிவபெருமானுக்கு எட்டு கைகளும் உண்டு என்பதை 'எண் கையாய்' என்ற சொல் உணர்த்துகிறது.

சொல்லுக்கும் நினைவிற்கும் எட்டாத இறைவன் இப்போது மணிமிடற்றையும் எண் கைகளையும் தாங்கி உருவத்துடன் எதிரே நிற்கிறான். அவனை முன்னிலையாக வைத்து இந்தப் பாடல் பாடப்படுகின்றது என்பது 'கேள் இனி' என்னும் முன்னிலைச் சொற்களால் புரிகிறது.

வடமொழி புராணங்கள் கூறும் பல செய்திகளை இப்பாடலின் முதல் அடிகள் கூறுகின்றன. சங்க இலக்கிய தொகை நூல்கள் முதலில் ஆக்கப்பட்டன; பின்னர் கடவுள் வாழ்த்துப் பகுதிகள் இணைக்கப்பட்டன என்று ஒரு கருத்து உள்ளது. கடவுள் வாழ்த்துப் பகுதிகள் பிற்காலத்தவை ஆதலால் அவை வடமொழி நூல்களின் கருத்தினைச் சொல்வது இயல்பு என்றும் ஒரு கருத்து சொல்லப்படுகிறது. அந்த கருத்து மற்ற நூல்களுக்கு வேண்டுமானால் பொருந்தலாம். ஆனால் இந்த கலித்தொகை நூலினைத் தொகுத்த பரங்குன்றத்து வாழ்ந்த மதுரையாசிரியர் நல்லந்துவனாரே இந்தக் கடவுள் வாழ்த்துப் பாடலையும் பாடியுள்ளதால் இந்த நூலும் கடவுள் வாழ்த்துச் செய்யுளும் ஒரே காலத்தவை என்று அறியலாம்.

(தொடரும்)

Friday, June 05, 2009

உடுக்கை இழந்தவன் கை - 16 (பாரி வள்ளலின் கதை)

பெரியோர்கள் குறித்தபடி ஒரு நல்ல நாளில் மலையமான் திருமுடிக்காரிக்கும் பாரிமகளிருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பின்னர் தன் வழியே செல்ல விரும்பிய கபிலரைத் தடுத்து சில காலமேனும் தங்களுடன் தங்கியிருந்து நல்லறிவுரைகளைக் கூறி நல்வழிப்படுத்த வேண்டுமென்று மலையன் வேண்டிக் கொண்டதால் கபிலர் திருக்கோவலூரில் தங்கியிருக்கிறார்.

'நண்பா பாரி. நீ விரும்பியபடியே குலத்திலும், கல்வியிலும், செல்வத்திலும் உன் மக்களுக்கு ஒத்த ஒருவனுக்கே அவர்களை மணமுடித்துக் கொடுத்துவிட்டேன். இவர்கள் வாழும் வாழ்க்கையைக் காண மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. காமனும் இரதியும் போல, மாயோனும் நப்பின்னையும் போல, உமையும் உமையொருபாகனும் போல, வள்ளியும் முருகனும் போல, வசிட்டனும் அருந்ததியும் போல இவர்கள் வாழ்கிறார்கள். வள்ளல் என்று பெரும் புகழ் பெற்ற உன்னையும் மிஞ்சும் படியான வண்மை உன் மருகனுக்கு இருக்கிறது. இவற்றையெல்லாம் கண்டு பெருமிதம் கொள்ள நீ உயிருடன் இல்லாமல் போய்விட்டாயே.

இவர்கள் வாழும் கற்பு வாழ்க்கையைப் பற்றி உன்னிடம் கூற விரைந்து வருகிறேன். உன் மக்களின் விருப்பப்படி சிறிது நாட்களே இங்கு தங்கியிருக்கப் போகிறேன். இனி மேலும் உன் பிரிவினை என்னால் தாங்க இயலாது'

"புலவர் பெருமானே. மன்னர் திருவோலக்கத்து வீற்றிருக்கப் புறப்பட்டுவிட்டார். தாங்களும் அரசவைக்கு எழுந்தருளி திருவோலக்கத்தைப் பொலிவு பெறச் செய்ய வேண்டும் என்பது மன்னரின் வேண்டுகோள்"

"அமைச்சரே. இன்னும் ஒரு நாழிகைக்குள் அரசவைக்கு வருகிறேன். மன்னரின் அரசவையை நான் கண்டதுண்டு. இப்போது என் மருகனாய் என் மக்கள் இருவரையும் இருபுறமும் அமர்த்திக் கொண்டு அவன் அரசுக்கட்டிலில் வீற்றிருக்கும் அழகைக் காண்பதற்காக விரைந்தோடி வருகிறேன்"

***

'இதென்ன. என்றுமில்லா திருநாளாக எங்குமில்லா வழக்கமாக மூவேந்தர்களின் அமைச்சர்களின் கூட்டம் அலைமோதுகின்றதே. புலவர்களும் இரவலர்களும் மட்டுமே வந்திருப்பார்கள் என்றல்லவோ நினைத்தேன். மன்னன் மணம் புரிந்த பின்னர் முதன்முதலில் அரசவைக்கு வருவதால் அவனை வாழ்த்துவதற்காக அந்தணர்களும் வந்திருக்கிறார்கள். அதனைப் புரிந்து கொள்ள முடிகின்றது. ஆனால் மூவேந்தர்களின் தூதுக்குழுக்களும் இங்கே வந்த காரணமென்ன? ஒருவேளை பாரி மகளிரை மலையன் மணந்ததால் அவன் மீது மூவரும் போர் தொடுக்கின்றார்களோ?'

"வாருங்கள் கபிலரே. இங்கே வலப்புறத்தில் இருக்கும் இருக்கையில் அமர்ந்து அருளுங்கள்" அங்கவை சங்கவை இருவருடன் மலையமான் எழுந்து கை கூப்பி கபிலரை வரவேற்றான்.

"வாழ்க மன்னவா" என்று வாழ்த்திவிட்டு கபிலர் அவன் காட்டிய இருக்கையில் அமர்கிறார்.

மூவேந்தர்களின் விருதுகளையும் உரக்கச் சொல்லிக் கொண்டு ஒருவர் பின் ஒருவராக மூவேந்தர்களின் அமைச்சர்களும் அரசனுக்கு முன்னர் வந்து மலையமானின் திருமணத்திற்கு வேந்தர்கள் அனுப்பிய வாழ்த்துகளைத் தெரிவித்துப் பரிசுப் பொருட்களை வழங்குகிறார்கள். வந்தவர்கள் தேரும், பரியும், யானையும், அணிகளும் என பலவிதமான பரிசுகளை அறிவித்தார்கள். போரினை அறிவிக்க வந்தவர்களோ என்ற ஐயத்தில் இருந்த கபிலருக்கு இக்காட்சி மிக வியப்பாக இருந்தது. மலையமானின் வீரச்சிறப்பைக் கேள்விப்பட்டிருந்த கபிலர் இன்று அதனை நேரிலேயே கண்டார். மற்றவர் வியக்கும் படைசிறப்பினை உடைய வேந்தர்களும் வியக்கும் வெற்றிச் சிறப்பு இவனிடம் இருப்பதால் இவனது துணை வேண்டி இப்படி மூவேந்தர்களும் தனித்தனியே பரிசுகள் அனுப்பியிருக்கிறார்கள் என்பதை உணர்ந்தார்.

மூவேந்தர்களிடமிருந்தும் வந்த பரிசுப் பொருட்களை ஏற்றுக் கொண்டு திருமுடிக்காரி அவரவர்களுக்குத் தகுதியான இருக்கைகளைத் தந்து அமரச் செய்தான். பின்னர் அங்கிருந்த அந்தணர்கள் முன் வந்து வாழ்த்து மொழிகளைக் கூறினர். அவர்கள் முன் அரசன் வணங்கி தன் நாடு முழுவதுமே அவர்களுக்கே உரியது என்று மரியாதைச் சொல் சொல்லி அவர்களை விடுத்தான்.

பின்னர் புலவர்களும் இரவலர்களும் ஒவ்வொருவராக வந்து வாழ்த்துகளையும் பாடல்களையும் கூறி மன்னனைச் சிறப்பித்தார்கள். ஒவ்வொருவருக்கும் அவரவர் தகுதியறிந்து அவரவர் வேண்டி வந்ததை வரையாது வழங்கினான் மன்னன். மூவேந்தர்களிடம் இருந்து வந்த பரிசுப் பொருட்கள் எல்லாம் இப்படி வந்தவர்களுக்கெல்லாம் தந்தான் அரசன். சில மன்னர்கள் அதிகாலையில் எழுந்து கள்ளருந்தி அந்த மகிழ்வினால் தேரும் பரியும் என பரிசுகள் வழங்குவதை கபிலர் கண்டதுண்டு. ஆனால் அப்படி இன்றி எந்த வித மயக்கமும் இல்லாத நிலையிலும் தேரினையும் பரியினையும் அணிகளையும் வாரி வாரி வழங்கும் மலையமானைப் பாட வேண்டும் என்ற ஆவலுடன் எழுந்தார் கபிலர்.

"நாள் கள் உண்டு நாள் மகிழ் மகிழின்
யார்க்கும் எளிதே தேர் ஈதல்லே
தொலையா நல்லிசை விளங்கு மலையன்
மகிழாது ஈத்த விழை அணி நெடுந்தேர்
பயன் கெழு முள்ளூர் மீமிசைப்
பட்ட மாரி உறையினும் பலவே
"


"புலவர் பெருமானே".

"சொல்லுங்கள் அரசியாரே"

"பெரியப்பா. இதென்ன கொடுமை? என்னை எப்போதும் போல் சங்கவை என்றே அழைக்கலாமே. ஏன் அரசியார் என்று அழைக்கிறீர்கள்"

"அம்மா சங்கவை. நீ என்னை புலவர் பெருமானே என்று விளித்தாய். நான் அதற்குத் தகுந்த மரியாதையாக அரசியாரே என்றேன். இப்போது பெரியப்பா என்றாய்; நானும் உன் பெயரைச் சொன்னேன்"

"சரி தான். போட்டிக்குப் போட்டியா? அது போகட்டும். மன்னவரைப் புகழ்வது போல் வேறு யாரையோ இகழ்வது போல் தோன்றுகிறதே. நம் மன்னவர் கள்ளருந்தும் வழக்கம் இல்லாதவர். அதனால் அவரைப் பற்றி பாடிய பாடல் அடிகள் பொருத்தமானவை. ஆனால் கள்ளுண்டு அந்த மகிழ்ச்சியில் தேரினை வழங்கியவர் என்று யாரைக் குறிக்கிறீர்கள்? உங்கள் அருமை நண்பரையா?"

"அடடா. என் அருமை நண்பன் பாரியைப் பற்றி அப்படி பேசுவேனா அம்மா? என்ன வார்த்தை சொன்னாய்? அவனும் பல இரவலர்களுக்குத் தேரினை ஈந்தவன் தான். ஆனால் அவனுடைய புகழ் அதனால் கிட்டியதில்லையே! உன் தந்தைக்கு வான் புகழ் கிட்டியது வாடிக்கிடந்த முல்லைக்கொடிக்குத் தேரினை அவன் ஈந்ததால் தான் அம்மா. ஆறறிவு கொண்ட மக்களுக்கு இரங்குபவரே இங்கு அரிதாக இருக்கும் போது ஓரறிவு கொண்ட முல்லைக் கொடிக்கு இரங்கியதால் தான் அம்மா உன் தந்தையார் வள்ளல்களில் முதன்மையிடத்தைப் பெற்றான். அந்த நேரத்தில் அவன் கள்ளும் உண்ணவில்லை. அதனால் நான் பாடிய பாடலின் அடிகள் அவனைக் குறிக்கவும் இல்லை"

"எனக்கு தெரியும் பெரியப்பா. ஆனால் பாடலைக் கேட்டவர் யாரேனும் நீங்கள் பறம்புக் கோமானைப் புறம்பாகப் பேசிவிட்டீர்களோ என்று எண்ணலாம் என்பதால் தான் விளக்கம் கேட்டேன்"

"அங்கவை. சங்கவை. நீங்கள் பட்ட துன்பங்களுக்கு எல்லாம் சேர்த்து கிடைத்த நற்பயனாக உங்களுக்கு இந்த மலையமான் கணவனாக அமைந்திருக்கிறான். பாரியின் மக்களாகப் பிறந்த பயனை இவனை மணந்து பெற்றீர்கள். நீங்கள் எந்தக் குறையும் இல்லாதவர்கள். ஆனால் உங்கள் கணவனான இம்மன்னன் அப்படியில்லை. அவனிடம் இருக்கும் செல்வமோ குறைவு. ஆனால் அவனுக்கு இருக்கும் பெருமிதமோ மிகுதி"

"பெரியப்பா. இதென்ன விந்தை. எங்கள் தந்தையாரைக் குறையாகப் பேசவில்லை என்று மகிழ்ந்து ஒரு நொடியே ஆகிறது. அதற்குள் எங்கள் மணாளனைக் குறைவாகப் பேசுகிறீர்களே. இது என்ன விந்தை? முறை தானா இது?"

"அங்கவை. பார் மலையனும் சங்கவையும் உன் சினம் கண்டு தமக்குள் நகைக்கிறார்கள். பாட்டு பாடினால் தான் நான் சொல்ல வந்தது புரியும் போலும்.

கடல் கொளப்படாஅது உடலுநர் ஊக்கார்
கழல் புனை திருந்து அடிக் காரி நின் நாடே
அழல் புறம் தரூஉம் அந்தணர் அதுவே
வீயாத் திருவின் விறல் கெழு தானை
மூவருள் ஒருவன் உறுப்பாகியர் என
ஏத்தினர் தரூஉம் கூழே நும் குடி
வாழ்த்தினர் வரூஉம் இரவலர் அதுவே
வடமீன் புரையும் கற்பின் மடமொழி
அரிவை தோள் அளவு அல்லதை
நினது என இலை நீ பெருமிதத்தையே

இப்போது புரிகிறதா அம்மா நான் சொல்ல வந்தது?"

"புரிகிறது பெரியப்பா. இகழ்வது போல் புகழ்ந்திருக்கிறீர்கள்".

"இல்லாததைச் சொல்லிப் புகழவில்லை அம்மா. நான் என் கண்களால் கண்டவற்றைக் கொண்டே புகழ்கிறேன். கோழி கூவ துயில் எழும் மக்கள் உள்ள ஊர் உறையூரும் வஞ்சியும்; அழலை ஓம்பும் அந்தணர் மறை மொழி முழங்க துயில் எழும் மக்கள் உள்ள ஊர் எங்கள் ஊராம் மதுரை என்று பெருமை கொண்டிருந்தேன். ஆனால் தழலைப் போற்றும் அந்தணர் பெற்ற பெருமையை இங்கே கண்டேன். அவர்களுக்குத் தன் நாட்டையே தருவதாக மன்னவன் சொன்ன மொழியையும் கேட்டேன். அப்படி ஒவ்வொன்றும் இயல்பாக நடந்தவற்றைக் கொண்டே இந்தப் பாடல் பாடப்பட்டது அம்மா"

"உண்மை தான் பெரியப்பா. இன்று மாலையிலும் சில பாடல்களைப் பாடி எங்களை மகிழ்விக்க வேண்டும்"

"ஆமாம் புலவர் பெருமானே. இப்போது சற்றே ஓய்வு எடுத்துக் கொண்டு இன்று மாலை தாங்கள் அரண்மனை நந்தவனத்திற்கு வந்து அருள வேண்டும்"

"ஆகட்டும் திருமுடிக்காரி. அப்படியே செய்கிறேன்".

***
பாடற்குறிப்புகள்:

1. 'நாள் கள் உண்டு' என்று தொடங்கும் பாடல் புறநானூறு 123-ஆவது பாடல். கபிலர் மலையமான் திருமுடிக்காரியைப் பாடியது. திணை: பாடாண் திணை (பாடப்படுபவரது புகழைக் கூறுவது); துறை: இயன்மொழித் துறை (இயல்பாக அமைந்த குணங்களைக் கூறுவது).

பொழிப்புரை: அதிகாலையில் கள்ளினை உண்டு நண்பர்களுடன் கூடி மகிழும் மகிழ்ச்சியுடன் இருந்தால் தேரினைத் தருவது யாருக்கும் எளிது. என்றும் குறையாத நல்ல புகழுடன் விளங்கும் மலையமான் அப்படி மது நுகர்ந்து மகிழாது ஈத்த பொற்படைக்கலன்களுடன் கூடிய உயர்ந்த தேர்கள், பயன் பொருந்திய முள்ளூர் மலையுச்சியின் மீது பெய்த மழையின் துளிகளிலும் பல. ஏனையோர் வழங்குவது செயற்கை. இவன் கொடை இயற்கை.

2. 'கடல் கொளப்படாஅது' என்று தொடங்கும் பாடல் புறநானூறு 122-ஆவது பாடல். கபிலர் மலையமான் திருமுடிக்காரியைப் பாடியது. திணை: பாடாண் திணை (பாடப்படுபவரது புகழைக் கூறுவது); துறை: இயன்மொழித் துறை (இயல்பாக அமைந்த குணங்களைக் கூறுவது).

பொழிப்புரை: கடலாலும் கொள்ளப்படாது (இயற்கையால் அழிவில்லை); பகைவர்களும் அதனைக் கொள்ள வேண்டும் என்று எண்ண மாட்டார்கள் (செயற்கையாகவும் அழிவில்லை). உடலமைப்பு இலக்கணங்களின் படி திருத்தமாக அமைந்த கால்களை உடைய காரி! உனது நாடே அப்படிப்பட்டது. அது வேள்வித் தீயைப் பாதுகாக்கும் அந்தணர்கள் உடையது. அழியாத செல்வத்தினையும் வெற்றி பொருந்திய படைகளையும் உடைய மூவேந்தர்களுக்குள் ஒருவருக்குத் துணையாக வேண்டுமென்று வேண்டி அவர்களிடம் இருந்து வந்தவர்கள் தனித் தனியே புகழ்ந்து உனக்குத் தரும் கூழாகிய பரிசுகள் உனது குடியின் பெருமையை வாழ்த்தியவர்களாக வரும் பரிசிலர்களுக்கு உரியது. வடமீனாம் அருந்ததியைப் போல் கற்பு நெறியில் சிறந்த இந்தப் பெண்களின் தோள் அளவல்லது வேறு எதையும் உனது என்று கூறிக் கொள்ள இயலாது. ஆனாலும் நீ பெருமிதம் கொண்டிருக்கிறாயே!