Monday, June 30, 2008

அளிக்கும் செழுந்தமிழ்த் தெள்ளமுது ஆர்ந்து உன் அருட்கடலில் குளிக்கும் படிக்கு என்று கூடும்கொலோ?


அளிக்கும் செழுந்தமிழ்த் தெள்ளமுது ஆர்ந்து உன் அருட்கடலில்
குளிக்கும் படிக்கு என்று கூடும்கொலோ? உளம்கொண்டு தெள்ளித்
தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழை சிந்தக் கண்டு
களிக்கும் கலாப மயிலே! சகலகலாவல்லியே!

அளிக்கும் செழுந்தமிழ்த் தெள்ளமுது ஆர்ந்து - என்னைக் காத்து அருளும் செழுந்தமிழாகிய தெளிந்த அமுதினை ஆரவாரத்துடன் உண்டு

உன் அருட்கடலில் குளிக்கும் படிக்கு என்று கூடும்கொலோ? - உன் அருளாகிய கடலில் மூழ்கி எழுந்து உட்குடைந்து குளிக்கும் படி என்று நேருமோ?

உளம்கொண்டு தெள்ளித் தெளிக்கும் பனுவல் புலவோர் - உள்ளத்தில் ஆழ்ந்து நினைக்க தெளிவினை அள்ளித் தரும் பாடல்களைப் பாடும் புலவர்கள்

கவிமழை சிந்தக் கண்டு - கவிதை மழை சிந்த அதனைக் கண்டு

களிக்கும் கலாப மயிலே! - மகிழும் அழகிய தோகை கொண்ட மயில் போன்றவளே!

சகலகலாவல்லியே! - கலைவாணியே!

Saturday, June 28, 2008

அபிராமி அந்தாதி 98 பாடல் விளக்கம் தேவை

நண்பர்களே.

இது வரை அன்னையின் அருளால் அபிராமி அந்தாதியின் 97வது பாடல் வரை பொருள் சொல்லிவிட்டேன். 98ம் பாடலுக்குப் பொருள் சொல்ல முயலும் போது இந்தப் பாடல் அவ்வளவாகப் புரியவில்லை. முதலில் வரும் தைவந்து என்ற சொற்றொடருக்குப் பொருள் என்ன? கைவந்த தீயும் தலை வந்த ஆறும் ஏன் மறைந்தது? எப்போது மறைந்தது? இந்தக் கதை யாருக்காவது தெரியுமா? மீனாட்சித் திருக்கல்யாணத்தின் போது சுடலையாண்டி சுந்தரேஸ்வரராக மாறி வந்தார் என்று படித்திருக்கிறேன். அதனைத் தான் பட்டர் இங்கே சொல்கிறாரா? ஆனால் அப்போது கையிலிருக்கும் தீ மறைந்திருக்கலாம்; தலையில் கங்கையையும் மறைத்துக் கொண்டா வந்தார்? அது தெரியவில்லை. வாமனாவதாரத்தில் பிரம்மச்சாரியாக வரும் போது மார்பில் நிலையாக இருப்பவளை குறுக்கு ஆடையால் மறைத்துக் கொண்டு கள்ளன் வந்தது போல இவரும் வந்தாரா? தெரிந்தவர் தயை செய்து சொல்லுங்கள்.

தை வந்து நின் அடித் தாமரை சூடிய சங்கரற்கு
கை வந்த தீயும் தலை வந்த ஆறும் கரந்ததெங்கே
மெய் வந்த நெஞ்சின் அல்லால் ஒரு காலும் விரகர் தங்கள்
பொய் வந்த நெஞ்சில் புகல் அறியா மடப்பூங்குயிலே

Friday, June 27, 2008

தகப்பன் சாமி!

"அப்பா அப்பா ஒரு கதை சொல்லுங்க அப்பா" 

 "இப்பத் தானே, அம்மா ஒரு கதை புத்தகத்தைப் படிச்சுக் காமிச்சாங்க. அப்பாவுக்குத் தூக்கம் வருது. தூங்கணும்" 

 "அப்பா அப்பா ப்ளீஸ் அப்பா. ஒரே ஒரு கதை அப்பா" 

 "இல்லைம்மா. அப்பா பாட்டு பாடறேன். சீக்கிரம் தூங்கு. காலையில எந்திரிச்சுப் பள்ளிக்கூடம் போகணும்" 

 "ஒரே ஒரு கதைப்பா. ஒன்னே ஒன்னு. ப்ளீஸ். ப்ளீஸ்" 

 "உழந்தாள் நறுநெய்..." 

 "ம்ம்ம். கதை வேணும்பா" 

 "ஓரோ தடா உண்ண..." 
 
"ம். சரி. பாடுங்க" 

 "உழந்தாள் நறுநெய் ஓரோ தடா உண்ண 
இழந்தாள் எரிவினால் ஈர்த்து எழில் மத்தின் 
பழந்தாம்பால் ஓச்சப் பயத்தால் தவழ்ந்தான் 
முழந்தாள் இருந்தவா காணீரே 
முகிழ் முலையீர் வந்து காணீரே" 

"தூங்கிட்டியா அம்மா?" 

"தூக்கம் வர்றமாதிரி இருக்கு. ஆனா இன்னும் தூங்கலை" 

 "சரி. கதை சொல்லவா?" 

 "கதையா! ம்.ம். சொல்லுங்கப்பா. சொல்லுங்க" 

 "எந்தக் கதை வேணும்?" 

 "ம்.ம். கண்ணன் கதை. கண்ணன் கதை" 

 "ம். அப்பாவும் அதான் நினைச்சுக்கிட்டு இருந்தேன். சரி. கண்ணனுக்கு என்ன ரொம்ப பிடிக்கும்?" 

 "வெண்ணெய். வெண்ணெய்" 

 "ஆமாம். வெண்ணெய் தான். ஒரு தடவை அவங்கம்மா.." 

 "யசோதாவா? தேவகியா?" 

 "யசோதாம்மா தான். அவங்க ஒரு தடவை ரொம்ப நேரம் வேலை பார்த்து ஒரு பானை நிறைய வெண்ணெய் சேர்த்து வச்சாங்களாம்" 

 "எம்புட்டு பெரிய பானைப்பா?" 

 "நம்ம வீட்டுல இட்லி மாவு வப்போமே. அது மாதிரி பெரிய பானை" 

 "இட்லி மாவு பானையில இருக்காதே. பாத்திரத்துல தானே இருக்கும்" 

 "ஹிஹி ஆமாம். அந்த மாதிரி பெரிய பானைன்னு சொல்றேன்" 

 "அப்ப சரி" :-) 

 "அம்மா அந்தப் பக்கம் போனவுடனே இந்தக் கண்ணன் என்ன செஞ்சான் தெரியுமா?" 

 "தெரியும் தெரியும். அந்தப் பானையில இருக்குற வெண்ணெயை எல்லாம் தின்னுட்டான்" 

 "உனக்கும் குடுத்தானா என்ன?" 

 "இல்லை. எனக்குக் குடுக்கலை" 

 "அப்ப எப்படி உனக்குத் தெரியும்?" 

 "அப்பா தான் சொன்னீங்க. இன்னொரு கதை சொல்றப்ப" 

 "ம். :-). ஆமாம். அந்தப் பானையில இருக்குற எல்லா வெண்ணெயையும் அவன் வழிச்சு சாப்டான். கொஞ்ச நேரம் கழிச்சு அம்மாவுக்குத் தெரிஞ்சிருச்சு. அம்மாவுக்கோ கோவமோ கோவம். ஒரு பானை வெண்ணெயை முழுங்குனா என்ன ஆகும்?" 

"வயிறு வலிக்கும்" 

"ம். அதான். வயிறு வலிக்கும்ல. இந்தத் திருட்டுப்பய அம்மா எத்தனை தடவை சொன்னாலும் கேக்காம பானை வெண்ணெயை முழுங்கியிருக்கான். கண்ணனுக்கு வயிறு வலிக்குமேன்னு அம்மாவுக்கு பயம். அடடா நாம எத்தனை தடவை சொன்னாலும் கேக்க மாட்டேங்கறானே. இவனுக்கு வயிறு வலிக்குமேன்னு அம்மாவுக்கு கோவம் கோவமா வருது" 

 "ம்" 

 "அம்மா அந்த கோவத்துல கண்ணனை அடிக்க வர்றாங்க. அம்மா அடிக்கப் போறாங்கன்னு தெரிஞ்சவுடனே கண்ணனுக்கு பயம் வந்திருச்சு. உடனே அழ ஆரம்பிச்சுட்டான்" 

 "அப்பா" 

 "என்னம்மா?" 

 "இனிமே நான் நிறைய சாக்லேட் சாப்ட மாட்டேம்பா" 

 "இப்ப எதுக்கும்மா சாக்லேட் நினைவு வந்தது?" 

 "இன்னைக்கு காலையில நான் ரெண்டு பார் சாக்லேட் சாப்புட்டேன்னு அப்பா அடிச்சீங்கள்ல. எனக்கு வயிறு வலிக்கும்ன்னு நீங்க பயந்து தானே அடிச்சீங்க" 

அங்கே ஒரு நீண்ட மௌனம் நிலவியது.


Thursday, June 26, 2008

கண்ணன் பாட்டு 100வது இடுகைக்கு வாழ்த்துகள் - திரு. இந்திரா சௌந்தர்ராஜன் & திரு. அண்ணா கண்ணன்


'கண்ணன் பாட்டு' வலைப்பதிவின் நூறாவது இடுகைக்கு வாழ்த்துகளை தொலைக்காட்சித் தொடர் 'மர்மதேசம்' புகழ் திரு. இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களும் தமிழ்சிபி, தமிழ் சமாசார் ஆசிரியர் திரு. அண்ணா கண்ணன் அவர்களும் அனுப்பியிருக்கிறார்கள்.

***

திரு. இந்திரா சௌந்தர்ராஜன்:

kaNNan paattu 100vathu postkku enathu manam niraindha vaazththukkaL!

anbarkaL anaivarukkum paaraattukkaL!

Indrasoundarrajan(writer)

Madhurai

கண்ணன் பாட்டு 100வது இடுகைக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!

அன்பர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்!

இந்திரா சௌந்தர்ராஜன் (எழுத்தாளர்)
மதுரை.

***

திரு. அண்ணா கண்ணன்:


கண்ணன் பாட்டு என்ற இந்தக் கூட்டு வலைப் பதிவு, நூறாவது இடுகையைக் கண்டுள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. எட்டு பேர்கள் இணைந்து ஒன்றரை ஆண்டில் நூறு பதிவுகள் இட்டுள்ளார்கள். கண்ணனின் அழகை, அருளை, புகழை, லீலைகளை... கண்ணன் தொடர்பான ஒவ்வொன்றையும் ரசித்து, ருசித்துத் தொகுத்துள்ளார்கள். கண்ணன் பாட்டு என்று பதிவின் பெயர் இருந்தாலும் கண்ணனுடன் சேர்த்து ராமனும் அவர்களின் அடியவர்களும் காதல் பாடல்கள் பலவும் இடம் பெற்றுள்ளன. அனைத்தையும் கண்ணனாகப் பார்ப்பது ஒரு வகை உயர்ந்த ஆன்மீகம். அதனால் தான் உலகில் 660 கோடி ஆழ்வார்கள் இருக்கிறார்கள் என இவர்களால் உறுதியாகச் சொல்ல முடிகிறது.

கோயிலில் கொசுத் தொல்லை என்பதால் அர்ச்சனைத் தட்டில் டார்ட்டாய்ஸ் கொசுவத்தி வைத்துக் கொடுக்கும் அன்பு மயமான உள்ளத்தை இங்குதான் நான் கண்டேன்.

ஒவ்வொரு பதிவாகப் பின்னால் பார்த்துக்கொண்டே சென்றேன். அழகிய பாடல்கள், அவற்றின் உரை வடிவம், இசை வடிவம், வாய்ப்பிருந்தால் வீடியோ எனப்படும் ஒளி வடிவம், எழில் சிந்தும் புகைப்படங்கள், கண்ணன் தொடர்பான செய்திகள், கேள்விகள் - விளக்கங்கள்... எனத் தேடித் தேடித் தொகுத்த ஒவ்வொன்றும் ஈர்த்தன.

திரைப் பாடல்கள், தனிப் பாடல்கள், இலக்கியப் பாடல்கள்... எனக் கண்ணன் தொடர்பான எல்லாப் பாடல்களையும் அவற்றின் வரி வடிவத்துடன் வெளியிட்டு வருவது அருமை. புகழ் பெற்ற பாடல்கள் ஒரு புறம் அணி சேர, பதிவாளர்களே சொந்தமாகப் பாட்டெழுதி அதைப் பாடியும் வெளியிட்டுள்ளது இன்னும் சிறப்பு.

கே ஆர் எஸ் எனப்படும் கண்ணபிரான் ரவிஷங்கர், வேற்று மொழிப் பாடலைத் தமிழில் தந்துள்ளதும் கவர்ந்தது. தாயாருக்குத் திருமஞ்சனம் செய்விக்கையில் அதனை ஒரு குழந்தையைக் குளிப்பாட்டுவதுடன் ஒப்பிட்டது கவித்துவமாக ஒளிர்கிறது.

ஷைலஜாவுக்குத் திருவரங்கப்ரியா என்றொரு பேர் இருப்பதை இந்த வலைப்பதிவிலிருந்து அறிந்துகொண்டேன். அவரும் நாகி நாராயணனும் இணைந்து பாடியது, செவிக்கினிமை சேர்த்தது.

இப்படியாக

* தி. ரா. ச.(T.R.C.)
* மடல்காரன்
* மலைநாடான்
* G.Ragavan
* குமரன் (Kumaran)
* ஷைலஜா
* Raghavan
* kannabiran, RAVI SHANKAR (KRS)
* dubukudisciple

ஆகிய ஒன்பது பேர்களும் ஒரு புனிதப் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். ஒரு மதம் தொடர்புடைய வலைப் பதிவு என்றாலும் கூட, மதத்தைப் பிரச்சாரம் செய்யும் நோக்கம் இவர்களிடம் இல்லை. தங்களை அடியவர்களாகக் கருதி, தங்கள் இறைவனை ரசித்து, ஆழந்து பக்தியில் மூழ்கி முத்தெடுத்து வருகிறார்கள். இந்த 21ஆம் நூற்றாண்டில், பரபரப்பான இணைய வெளியில் அமைதியைப் பரப்பும் உயர்ந்த நோக்கம் இவர்களிடம் உள்ளது. அதற்காக இவர்களைத் தனித் தனியாகப் பாராட்டுகிறேன்.

வலைப் பதிவின் இடுகைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவை என்றால், பல பின்னூட்டங்களும்கூட சுவையாகவே இருக்கின்றன. இந்த எட்டு பேர் அல்லாது மேலும் பலரின் பங்களிப்பும் உள்ளதை இந்த வலைப் பதிவுத் தடத்தில் கண்டேன். மதுமிதாவின் பாடலாகட்டும் வல்லிசிம்ஹனின் இசையாகட்டும் நா.கண்ணனின் சுட்டியாகட்டும் ஒவ்வொன்றும் இந்த வலைப் பதிவுக்கு வலிமை சேர்க்கின்றன.

இந்த இனிய முயற்சியில் ஈடுபட்டுள்ள அனைவரையும் நான் பெரிதும் பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன். வணங்குகிறேன்.

இந்த இடத்தில் ஒரு சிறு விளக்கம். நான் இந்த வலைப்பதிவையும் அதன் உறுப்பின்ர்களையும் வாழ்த்தத் தகுதியுடையவன்தானா? என் பெயரில் கண்ணன் இருப்பதால் எனக்கு இதில் தொடர்பு ஏற்பட்டுவிட்டதா? நான் கண்ணனை ஒரு கடவுளாக ஏற்கிறேனா? என்ற கேள்விகள் என் முன்பு எழுகின்றன. இவை தொடர்பாக ஒரு சிறு விளக்கத்தை நான் அளிக்க வேண்டும்.

கண்ணனை ஒரு கதாபாத்திரமாக நான் மிகவும் ரசிக்கிறேன். அவனது சிறையில் பிறந்து, நதியைக் கடந்து, ஆயர்பாடியில் வளர்ந்து, காளிங்க நர்த்தனம் ஆடி, புல்லாங்குழல் இசைத்து, மாடுகள் மேய்த்து, வெண்ணெய் திருடி, சேலைகளை ஒளித்துவைத்து, கோபிகையருடன் விளையாடி, காதலில் குழைந்து, கம்சனைக் கொன்று.... என அழகான கதாநாயகனாக அவனை ஏற்கிறேன். கண்ணன் என்றில்லை; எந்தக் கடவுளையும் நம்பி, வணங்கி, துதித்து, வேண்டும் வழக்கம் என்னிடம் இல்லை.

நான் ஒரு நாத்திகனா? என்ற கேள்விக்கும் என்னிடம் தெளிவான பதில் இல்லை. கடவுள் வெளியில் இல்லை; நமக்குள் இருக்கிறார் என்ற கருத்தினை நான் ஏற்கிறேன். இதன் மூலம் நாமே கடவுளாக வாய்ப்பிருப்பதை உணர்கிறேன். யோகம், தியானத்தின் வழியே ஓர் உன்னத நிலையை அடையலாம் என்ற வழியை நான் ஏற்கிறேன். தாய்மை உணர்வு பெண்களிடம் மட்டுமின்றி, ஆண்களிடம் இருந்தாலும் அவரும் தாயே என்ற கருத்து எனக்கு உண்டு. கடவுளுக்கு உருவம் கொடுப்பதை நான் ஏற்கவில்லை. அறிவியல்பூர்வம் அல்லாத சடங்கு, சம்பிரதாயங்களில் எனக்கு ஈடுபாடில்லை. என் ஆன்மீகக் கோட்பாடு இப்படியாகச் சில புள்ளிகள் கொண்டது.

ஒரு பயணியாக நான் ஆலயங்களுக்குச் செல்வேன். சுற்றிப் பார்ப்பேன். அங்கு துளசியும் நீரும் கொடுத்தால் விருப்பத்துடன் பருகுவேன். தல விருட்சங்களின் காற்றினை ஆழ நுகர்வேன். கலைநயம் மிகு சிற்பங்களை ரசிப்பேன். விக்கிரகங்களுக்குச் செய்த அலங்காரங்களை ஆர்வத்துடன் கவனிப்பேன். மனத்தை உருக்கும் பாடல்களைக் கேட்டு அந்த இசையில் கரைவேன். ஆனால் கடவுளைப் பற்றி எனக்குக் கவலை இல்லை.

சுருக்கமாகச் சொன்னால் என் மதம் அறிவியல். அது ஏற்கும் எதையும் நான் ஏற்பேன். அது மறுக்கும் எதையும் நான் வெளிப்படையாக மறுக்க மாட்டேன். விடை தெரியாத பலவற்றையும் ஆய்வுக்குரியது என்ற தலைப்பிலேயே வைக்க விரும்புகிறேன்.

விஞ்ஞானமும் மெய்ஞானமும் ஒரு புள்ளியில் சந்திக்குமானால் அங்கு தாராளமாக என்னைப் பொருத்தலாம். ஏனெனில் நிரந்தரக் கருத்து எதையும் கொண்டிருக்கவில்லை. அவ்வப்போதைய நிரூபணங்களுக்கு ஏற்ப, நெகிழ்ந்து கொடுக்கத் தயாராய் இருக்கிறேன்.

இவ்வளவு விளக்கமாக நான் சொல்ல வேண்டிய தேவை இருக்கிறது. இல்லாவிட்டால் நான் கிருஷ்ண பக்தி கொண்டவன் என்ற தவறான கருத்து ஏற்பட வாய்ப்புண்டு.

கண்ணன் பாட்டு என்ற வலைப்பதிவினைப் பாராட்டும் நான் அதை எந்தக் கண்ணோட்டத்தில் பார்த்துள்ளேன் என்பதையும் சொல்லிவிடுகிறேன்.

நண்பர்களே,

கண்ணன் பாட்டின் மூலம், இணைய தளத்தில் தமிழின் ஆன்மீகச் சாரத்தைப் பகிர்ந்து கொள்கிறீர்கள். உங்கள் முயற்சியின் மூலமாக ஆன்மீகம் வளருவது இருக்கட்டும். உறுதியாகத் தமிழ் வளர்கிறது. அதற்காக உங்களைப் பாராட்டுகிறேன்.

திரை இசை முதல் தனி இசை வரை இனிய இசையை வளர்க்கிறீர்கள். அவற்றைக் கேட்கக் கேட்க மனம் மகிழ்கிறது. அதற்காக உங்களை வாழ்த்துகிறேன்.

வலைப் பதிவில் எழுத்து, இசை ஆகியவற்றுடன் இனிய புகைப்படங்களையும் ஒளிப்படங்களையும் இணைத்து, இணையத்தின் தொழில்நுட்பத் திறனைப் பயன்படுத்துகிறீர்கள். இவற்றுக்குத் தமிழ்த் தொன்மம் என்ற அடையாளம் இருப்பதால் இதன் மூலம் தமிழரின் நம்பிக்கைகள், வழிபாடு, தத்துவம், இலக்கியம்.... ஆகிய பலவற்றையும் பாதுகாத்து இணையத்தில் சேமிக்கும் அரிய பணியில் உங்கள் கைகளையும் சேர்த்துள்ளீர்கள். இந்த நற்பணிக்காக உங்களை நாவினிக்கப் போற்றுகிறேன்.

தமிழர்கள் ஒன்றிணைந்து செயல்பட மாட்டார்கள் என்ற அவதூறு ஒன்றுண்டு. அதைப் பொய்யாக்கி, எட்டு பேர் இணைந்து ஒரு கூட்டு வலைப்பதிவை வெற்றிகரமாய், ஒரு வீணையின் தந்திகளைப் போல் நடத்துகிறீர்களே அதற்காக உங்களை வானளாவ வாழ்த்துகிறேன்.





--
Annakannan

Tamil Editor

http://tamil.sify.com
http://tamil.samachar.com
http://annakannan-photos.blogspot.com

பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும் பாடும் பணியில் பணித்தருள்வாய்


நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியில் பணித்தருள்வாய் பங்கயாசனத்தில்
கூடும் பசும்பொற் கொடியே கனதனக்குன்றும் ஐம்பால்
காடும் சுமக்கும் கரும்பே சகலகலாவல்லியே

சகலகலா வல்லியே - எல்லாக் கலைகளையும் காத்து அருள்பவளே! கலைவாணியே!

பங்கயாசனத்தில் கூடும் - தாமரை மலர் இருக்கையில் வீற்றிருக்கும்

பசும்பொற் கொடியே - பசும்பொன்னால் செய்யப்பட்டக் கொடி போன்றவளே!

கனதனக் குன்றும் ஐம்பால் காடும் சுமக்கும் கரும்பே - பெருத்தக் குன்றினைப் போன்ற கொங்கைகளும் ஐம்பால் காடும் சுமக்கும் கரும்பைப் போல் இனியவளே!

நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும் பாடும் பணியில் பணித்தருள்வாய் - நானும் இந்த உலகமும் விரும்பும், பொருட்சுவையும் சொற்சுவையும் தோய்ந்து வரும், நான்கு விதமான கவிதைகளையும் பாடும் பணியில் என்னைப் பணித்தருள்வாய்!

----------

நான்குவிதமான கவிதைகள் - ஆசுகவி, மதுரகவி, சித்திரக் கவி, வித்தாரக் கவி என்று கவிதைகள் நான்கு வகை. நினைத்தவுடன் புதுமையாக இதுவரை யாரும் பாடாத ஒரு பொருளைப்பற்றிப் பாடுவது ஆசுகவி. இசையுடன் கூடி இனிமையான சொற்களும் உவமைகளும் கூடி வரும்படிப் பாடுவது மதுரகவி. தேர் போன்ற ஒரு சித்திரத்தில் வைக்கலாம் படி சொற்களை அழகுற அமைத்துப் பாடுவது சித்திரக் கவி. பலவிதமான வடிவங்களில் அமைத்துப் பாடுவது வித்தாரக் கவி.

ஐம்பால் காடு - விளக்கம் தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

Wednesday, June 25, 2008

சர்வேசனுக்கு வணக்கம் (கேள்வி பதில் 3)

'கேள்விகள் வரவேற்கப்படுகின்றன'ன்னு ஒரு இடுகை போட்டேன். அப்ப நிறைய பேர் கேள்விங்க கேட்டாங்க. ஒவ்வொன்னா பதில் சொல்லிக்கிட்டு வர்றேன். இதுக்கு முன்னாடி வந்த கேள்வி பதில் இடுகைகள் இங்கே: இடுகை1, இடுகை2

இப்ப இந்த இடுகையில சர்வேசன் கேட்ட கேள்விக்களுக்குப் பதில்கள்.

1) கடவுள் உண்மையிலேயே இருக்காருன்னு உங்களுக்கு எது சொல்லுது? கடவுள் உண்மையிலேயே இருக்கான்னு, தினம் தினம் தெருவோரத்தில் (ஒரு தவறும் பண்ணாத) வயிற்றுப் பசியுடன் பிச்சைக்காரனுக்கு எது சொல்லும்னு நெனைக்கறீங்க?

நல்லா மாட்டிவிட்டீங்க சர்வேசரே. இதுக்கு என்ன பதில் சொல்றது? டக்குன்னு தோணுன பதிலைச் சொல்றதா? சிந்திச்சு பதில் சொல்றதா?

டக்குன்னு தோணுன பதில்: கடவுள் இருக்காருன்னு எனக்கு எது சொல்லுதுன்னு எனக்குத் தெரியலைங்க. எதாவது நிச்சயமா சொல்லுதான்னே ஐயமா இருக்கு. :-)

பிச்சைக்காரருக்கு எது சொல்லும்ன்னு அவருகிட்ட தானுங்க கேக்கணும். தாயும் பிள்ளையும் ஆனாலுமே வாயும் வயிறும் வேற வேறன்னு சொல்றாங்களே. எனக்கே எது சொல்லுதுன்னு தெரியாதப்ப அவருக்கு எது சொல்லும்ன்னு எனக்கு எப்படி தெரியும்? :-)

சிந்திச்சப்ப வந்த பதில்: உள்ளுணர்வும் வருங்காலத்தின் மேல் இருக்கும் நம்பிக்கையும் கடவுளின் இருப்பைச் சொல்லும். எனக்கும் சரி தெருவோர பிச்சைக்காரருக்கும் சரி. :-)

2) உங்கள் வாழ்வின் மிக மிக மிகப் பெரீரீரீய திருப்புமுனை எதுன்னு சொல்லுங்க. அதுக்கு காரணமானவங்க யாருன்னு சொல்லுங்க. திருப்புமுனைல, வேர பக்கம் திரும்பியிருந்தா என்ன ஆகியிருக்கலாம்னும் சொல்லுங்க. சுவாரஸ்யமா சொல்லுங்க. உண்மையே சொல்லுங்க.

இது வரைக்கும் இந்த மாதிரி சிந்திச்சதே இல்லீங்க. சிந்திச்சா குழப்பமா தான் இருக்கு.

நினைவுக்கு வந்த திருப்பங்களில் சில: சின்ன வயசுல படிக்கக் கிடைச்ச பாட்டியோட ஆன்மிக/சமய புத்தகங்கள், பத்தாவது படிக்கும் போது அம்மா இறந்தது, கல்லூரியில நுழைஞ்சவுடனே வந்த முதல் காதல், பி.இ.யில் இடம் கிடைத்தது, முதலாம் ஆண்டிலயே வந்த இரண்டாவது காதல் (அதுக்கப்புறமும் நிறைய காதல் வந்தன; ஆனா அதெல்லாம் திருப்பம் இல்லை:-) ), எம்.இ.யில் இடம் கிடைத்தது, டி.சி.எஸ்ஸில் வேலை கிடைத்தது, அமெரிக்கா வந்தது, திருமணம், மகள் பிறந்தது, தற்போது வேலை செய்யும் நிறுவனத்தில் சேர்ந்தது, வலைப்பதிவிற்கு வந்தது, மகன் பிறந்ததுன்னு எல்லா நேரங்களிலேயும் வாழ்க்கை மாறியிருக்கு. இதுல பெரீரீரீய திருப்பம்ன்னா எதைச் சொல்றது? ம்ம்ம்ம்.

எம்.இ. கிடைத்தது தான் பெரிய திருப்பம்ன்னு நினைக்கிறேன். அது கிடைச்ச கதையைச் சொல்றதா? கிடைக்காம இருந்திருந்தா என்ன ஆகியிருக்கும்ன்னு சொல்றதா? ரெண்டையும் தானே கேட்டிருக்கீங்க? ரெண்டையும் சொல்றேன். சுவையா சொல்லணும்ன்னு கேட்டிருக்கீங்க. அது மட்டும் நமக்கு சுட்டு போட்டாலும் வராது.:-) உண்மையைச் சொல்லணும்ன்னு சொல்லியிருக்கீங்க. நீதிமன்றத்துல சொல்ற மாதிரி 'நான் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையைத் தவிர வேறில்லை'ன்னு ஏதாவது ஒரு புத்தகத்து மேல கையை வச்சுக்கிட்டு உறுதி மொழியெல்லாம் தரணும்ன்னு கேக்கலையே. அது வரைக்கும் மகிழ்ச்சி. :-) நெஞ்சாங்கூட்டுல என்ன இருக்கோ அதைச் சொல்றேன் - ஆனா கொஞ்சம் சொந்தப்பெருமையைப் பேசுற மாதிரி வந்ததுன்னா கோவிச்சுக்கக்கூடாது. ஏன்னா அது தானே உள்ளத்தில இருக்கு. :-)

அந்தத் திருப்புமுனைக்குக் காரணமானவங்க யாருன்னும் கேட்டிருக்கீங்க. அதுக்கு பதில் தான் கொஞ்சம் சிந்திக்கணும். சொல்லிக்கிட்டே வர்றேன். காரணங்கள் யார் யாருன்னு நீங்களே படிச்சுப் பாத்து சொல்லுங்க. :-)

பி.இ. படிக்கும் போது கலசலிங்கம் கல்லூரி ரொம்ப பிடிச்சுப் போச்சு. எல்லாருக்கும் அப்படித் தானே. அவங்க அவங்க கல்லூரின்னா ரொம்ப பிடிக்கும்ல. ரெண்டாம் ஆண்டுல தொடங்குன பஜனைக் குழு கடைசி வரைக்கும் தொடர்ந்து வந்தது. (நான் கல்லூரியை விட்டு வந்த பின்னாடியும் ரெண்டு மூனு வருடம் அந்தக் குழு இருந்தது. அப்புறம் புதுப்பசங்க வந்து 'உலகத்திலேயே பஜனைக்குழு இருக்கும் ஒரே பொறியியல் கல்லூரி'ங்கற பெருமையை கலசலிங்கம் இழக்குற மாதிரி பண்ணிப்புட்டங்க). வாராவாரம் சனிக்கிழமை கூட்டு வழிபாடுன்னு ஒரு கூட்டத்தை வச்சுக்கிட்டு சின்ன மடாதிபதியா நடந்துக்கிட்டதும் எங்க போனாலும் அந்தக் கூட்டத்தோடவே போய் அளப்பரை பண்ணுனதும் இன்னும் நினைவுல பசுமையா இருக்கு. விடுதியில இரவு உணவுக்கு ஒரு கூட்டமா இந்த பஜனைக் குழு 20, 25 பேர் நம்ம தலைமையில கிளம்புனாங்கன்னா சீனியர், ஜீனியர் எல்லாருமே 'டேய். குமரன் அடியாட்களோட கெளம்பிட்டான்டா. ஒதுங்கி வழி விட்றுங்க'ன்னு பவ்யமா ஒதுங்கி வழிவிட்டதும் நல்லா நினைவு இருக்கு. நடுவுல நாலு பேருக்கு நான் என் காதலைச் சொன்னதும் என் கவிதைகளைப் படித்து ஒரு பெண்ணும் என் கதைகளைப் படித்து ஒரு பெண்ணும் என்னிடம் தங்கள் காதலைச் சொன்னதும்ன்னு அதுவும் நடந்தது. அதுல யாரையும் நான் தொடர்ந்து காதலிக்கலை. திருமணம் வரைக்கும் அந்தக் காதல்கள் வரலை. :-) ரெண்டாம் ஆண்டு படிக்கிறப்ப தொடங்குன மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துல ரெண்டாவது இடங்குறது கடைசி வரைக்கும் தொடர்ந்து வந்தது. (அதுல ஒரு மறைபொருள் - இரகசியம் இருக்கு. அதை உங்ககிட்ட மட்டும் சொல்றேன். வேற யாருக்கிட்டேயும் சொல்லாதீங்க. நான் படிக்கிறப்ப மதுரைப் பல்கலைக்கழகத்துக்குக் கீழ வர்ற கல்லூரிகள்ல எங்க கல்லூரியில மட்டும் தான் அளவியியல் & கட்டுப்பாட்டுப் பொறியியல் - Instrumentation and Control Engineering - இருந்தது. அதனால எங்க வகுப்புல ரெண்டாவது இடம்னாலே பல்கலைக்கழகத்துலயும் ரெண்டாவது இடம் தான். இன்னும் பல்கலைக்கழகத்துல ரெண்டாவது இடங்கற பொய்யான மெய்யைச் சொல்லிக்கிட்டு வர்றேன். நீங்களும் அப்படியே சொல்லிக்கிட்டு வாங்க. சரியா? )

இப்படி சொல்லத் தொடங்குனா சொல்லிக்கிட்டே போகலாம் கலசலிங்கம் வாழ்க்கையைப் பத்தி. அப்படி பேரும் புகழுமா வாழ்ந்து நல்லா அனுபவிச்சதால அங்கேயே வாழ்க்கை முழுக்க இருந்துரலாம்ன்னு ஒரு எண்ணம். கலசலிங்கத்துலேயே வாத்தியார் வேலைக்குச் சேர்ந்து கல்லூரி பக்கத்துலயே ஒரு பங்களா கட்டிக்கிட்டு குழந்தை குடும்பம்னு (இப்ப எல்லாம் யாராவது குழந்தை குட்டின்னு சொல்லுவாங்களா என்ன? அதான் குடும்பம்ன்னு சொல்லிட்டேன்) இருந்தா வாழ்க்கை அமைதியா போகும்ன்னு ஒரு கனவு. அந்த மாதிரியே செய்யறதுக்காக படிச்சு முடிச்ச பின்னாடி சென்னைக்குப் போய் திரு.கலசலிங்கம் ஐயாவைச் சந்திச்சேன். அதுக்கு முன்னாடியே நம்ம பஜனைக் குழு மூலமா செஞ்ச சில தொண்டு நடவடிக்கைகள் மூலம் ஐயாவோட அறிமுகம் இருந்தது. அவரோட சொந்த ஊருல இருக்கிற பள்ளி ஆண்டுவிழாவுல ஐயா தலைமை ஏத்து நடத்துறப்ப முதல், இரண்டு, மூன்றாம் நிலையைப் பெற்ற எல்லா வகுப்பு மாணவர்களுக்கும் நம்ம பணத்துல பரிசுகள் வழங்குனதுலயும் ஐயாகிட்ட நல்ல பேரு எனக்கு. அதனால உடனே வேலை போட்டுக் குடுக்க சம்மதம் தெரிவிச்சு பரிந்துரை கடிதம் குடுத்து அனுப்பிட்டாரு.

நான் கல்லூரிக்கு வந்து முதல்வரைப் பாக்குறதுக்கு முன்னாடி எங்க துறைத்தலைவரைப் போய் பாத்தேன். அவருக்கோ ஒரே அதிர்ச்சி. 'குமரா. நீ நல்லா படிக்கிற பையன். சரியா படிக்காம வேற எங்கையும் வேலை கிடைக்காம கடைசியில தான் இங்க வாத்தியார் வேலைக்கு வருவாங்க. நீ இந்த வேலைக்கு வந்தா உன்னோட ஜூனியர்கள் ரொம்ப நொந்து போயிடுவாங்க. உனக்கே வேலை கிடைக்கலையா வெளிய? நமக்கெல்லாம் எப்படி கிடைக்கும்ன்னு' அப்படி இப்படின்னு சொல்லத் தொடங்கிட்டாரு. என்ன என்னவோ சொல்லிப் பாக்குறேன். அவரு விடலை. கடைசியில 'அப்ப்டி நீ வாத்தியார் வேலைக்குத் தான் வருவேன்னா ஒன்னு செய். போய் எம்.இ. படிச்சுட்டு வா. எப்படியும் வாத்தியாரா தொடரணும்ன்னா எம்.இ. படிக்கணும். மொதல்ல அதை முடிச்சுட்டு வா. அப்புறம் வேலை குடுக்குறேன்'னு சொல்லிட்டார். அவர் சொன்னதும் சரின்னு பட்டதால முதல்வரைப் பாக்காமலேயே திரும்பி வந்துட்டேன்.

இப்ப எம்.இ. சேர்றதுக்காக GATE தேர்வுக்காகப் படிக்கணும். எனக்கோ வீட்டுல உக்காந்திருக்கப் பிடிக்கலை. அப்பத் தான் ஒரு நண்பன் புட்டபர்த்தியிலேயே தங்கியிருக்கான்னு தெரிஞ்சது. நானும் புட்டபர்த்திக்குப் போயிட்டேன். அங்கேயே ஒரு நாலு மாசம் தங்கியிருந்து தரிசனம் பார்த்த நேரம் போக மத்த நேரம் தேர்வுக்காகப் படிச்சேன். படிச்சு முடிச்சு வேலைக்குப் போவான்னு பாத்தா இப்படி புட்டபர்த்தியில போயி உக்காந்திருக்கானேன்னு எங்கப்பாவுக்கு கடுப்பு. யாரு அதையெல்லாம் கண்டுக்கிட்டாங்க? அப்பத் தான் நான் காதலிக்கிறேன்னு சும்மாவாச்சும் சொன்ன பொண்ணுங்க ரெண்டு பேருக்குத் திருமணமும் ஆச்சு. அதனால மனசு நொந்து நான் சாமியாரா போயிட்டேன்னு ஒரு நண்பன் வதந்தியை வேற கிளப்பிவிட்டுட்டான். :-) .

தேர்வு நேரமும் வந்து தேர்வும் எழுதி முடிந்து வெளியே வந்த போது எனக்குத் துளி கூட நம்பிக்கை இல்லை. ஒழுங்கா வீட்டுல இருந்து படிச்சிருந்தாலாவது நல்லா எழுதியிருக்கலாம். புட்டபர்த்துக்குப் போயி நேரத்தை வீணாக்கிட்டோம்ன்னு நினைச்சுக்கிட்டேன். ஆனா எம்.இ. முடிக்காம திரும்பவும் கலசலிங்கத்துக்கும் போக முடியாது; சரி மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியிலாவது சேரலாம்ன்னு அங்கே முயற்சி செய்யத் தொடங்கினேன். நான் கலசலிங்கத்துல படிக்கிறப்ப வாராவாரம் திருநகர் வந்து ஒருத்தர்கிட்ட பகவத் கீதை கத்துக்கிட்டேன். அவர் தியாகராஜர்ல ஆசிரியரா இருக்கார். அவர் பரிந்துரையில வேலை கிடைச்சிரும்ன்னு நம்பிக்கை.

தேர்வு முடிவுகள் இன்னும் வரலை. ஆனா கல்லூரிக்களுக்கு விண்ணப்பிக்கும் நேரம் வந்துவிட்டது. அண்ணா பல்கலைக்கழகம், கோவை தொழிற்நுட்பக் கல்லூரி (CIT) ரெண்டு இடத்துலயும் விண்ணப்பப் படிவம் வாங்கிட்டேன். தேர்வு முடிவுகள் வர்றதுக்கு முன்னாடியே சிஐடியில விண்ணப்பிக்க வேண்டியதா இருந்ததால அதைச் செஞ்சுட்டேன். தேர்வு முடிவுகள் வந்த பின்னாடி மொத்தமா நம்பிக்கை இழந்ததால அண்ணா பல்கலைக்கழகப் படிவத்தை நண்பருக்குக் குடுத்துட்டேன். (அந்த நண்பருக்கு அண்ணாவுல இடம் கிடைச்சு எல்லாம் உன் கைராசின்னு சொல்லிக்கிட்டு இருந்தாரு. அடப் போடா என் கைராசி எனக்குக் கைகுடுக்கலைன்னு நொந்துக்குவேன்).

சிஐடியில இருந்து நேர்முகத்துக்கு அழைப்பு வந்தது. சரி அழைப்பு வந்திருக்கே போகலாம்ன்னு போய் பாத்தா 4 இடங்களுக்கு 500 பேரு வந்திருக்காங்க. பக்கத்துல இருக்கிறவங்க கிட்ட பேச்சு குடுத்துப் பாத்தா ஒவ்வொருத்தரும் அருமையா மதிப்பெண்கள் வாங்கியிருக்காங்க. ஏன்டா என்னையெல்லாம் கூப்புட்டு வதைக்கிறாங்க இவங்கன்னு நெனைச்சுக்கிட்டு சரி கிளம்பிற வேண்டியது தான்னு நெனைச்சுக்கிட்டு இருக்கிறப்ப வந்தாரு குருராஜர். எம்.இ. ரெண்டாம் ஆண்டு படிக்கிற குருராஜன் தேர்வுக்கு எத்தனை பேரு வந்திருக்காங்க, யாரு யாரு வந்திருக்காங்கன்னு பாக்க வந்திருக்காரு. வந்து பக்கத்துல உக்காந்து அறிமுகம் செஞ்சுக்கிட்டு பேசத் தொடங்குனாரு. நான் அப்ப என்ன மனசுல ஓடிச்சோ அதை அவருகிட்ட சொன்னேன். வந்தது வந்துட்டே; நேர்முகம் முடிஞ்ச பிறகு போகலாம்ன்னு அவர் வற்புறுத்த நான் கிளம்பியே ஆகணும்ன்னு கிளம்புனேன். அவரு விடவே இல்லை. முதல் பார்வையிலேயே ஒரு நட்பு, பந்தம் வந்திருச்சு. அவர் சொல்றதைத் தட்ட முடியாம காத்திருந்து நேர்முகத்துக்கும் போனேன். உள்ள போனா சுத்தி ஆறு பேரு உக்காந்துக்கிட்டு கேள்விகளால வேள்வி செஞ்சாங்க. பாதி கேள்விகளுக்குத் தான் பதில் சொன்னேன். மீதிக்கு நல்லா முழிச்சேன்.

வெளியே வர்றப்ப கட்டாயம் நமக்கு இடம் கிடைக்காதுன்னு தோணியாச்சு. குருராஜன் 'சரி போகட்டும். வா. சாப்புட்ட பிறகு போகலாம்'ன்னு விடுதிக்குக் கூட்டிக்கிட்டு போயி சாப்பாடு போட்டார். நல்ல சாப்பாடு. சாப்புட்டு முடிச்சு 'சரி நான் கெளம்புறேங்க. இப்பக் கெளம்புனாத் தான் மருதமலைக்குப் போயிட்டு ராத்திரிக்குள்ள ஊரு போயி சேரலாம்'ன்னு சொன்னா 'இருப்பா. இன்னும் கொஞ்ச நேரத்துல தேர்வு முடிவுகளைச் சொல்லிருவாங்க. அதுக்கப்புறம் போகலாம்'ன்னு நிறுத்தி வச்சாரு. அன்புத் தொல்லைக்காக நின்னேன். நேரம் ஆக ஆக 'வெட்டியா இங்க உக்காந்திருக்கோமே. மருதமலையானைப் பாக்க நேரம் இருக்காதோ'ன்னு குறுகுறுப்பு. புலம்பிக்கிட்டு இருந்தேன். நாலு மணி போல முதல்வர் வந்து ஒவ்வொரு பேரா கூப்பிட்டாரு. 'செந்தில் குமரன்' ஒல்லியா ஒரு பையன் வந்து முன்னாடி நின்னான். 'வேணுகோபால்' குண்டா உயரமா ஒரு பையன் (ஆளு?) வந்து நின்னாரு. 'நாகேஸ்வரராவ்' குள்ளமா (என்னை விட ஒரு இஞ்ச் தான் குள்ளமா இருப்பாரு. ஆனாலும் அவரைக் குள்ளம்ன்னு சொல்லுவோம்ல) ஒருத்தர் வந்து முன்னாடி நின்னாரு. 'குமரன்' யாரும் முன்னாடி வரலை 'எம்.என்.குமரன்' அட நம்ம பேரு தான்னு அப்ப தான் உறைச்சது. வேக வேகமா முன்னாடி போய் நின்னேன். 'நீங்க நாலு பேரும் முதல் மாடியில இருக்குற அலுவலகத்துக்குப் போங்க'ன்னு பத்திவிட்டாரு. நாலு பேரும் படிக்கட்டுல போறப்பவே ஒருத்தருக்கொருத்தர் அறிமுகம் செஞ்சுக்கிட்டோம். யாருக்கும் எதுக்கு நாம மேல போறோம்ன்னு தெரியலை. வேணுகோபால் 'நான் ப்ராஜக்ட் ரிபோர்ட் கொண்டு வரலை. நீங்களும் அப்படித் தானா? அதுக்குத் தான் நம்மளை தனியா அனுப்பியிருக்காங்க'ன்னு சொல்றார். செந்திலோ 'எனக்கு ஒன்னும் புரியலைங்க. ஒரே குழப்பமா இருக்கு'ன்னு புலம்புறாரு. அலுவலகத்துக்கு வந்து இப்படி முதல்வர் எங்க நாலு பேரையும் அனுப்புனாருன்னு சொன்னா 'கட்டணப்பணம் கொண்டு வந்திருக்கீங்களா? எடுத்துக்கட்டுங்க'ங்கறாரு அலுவலர். அப்பவும் ஒன்னும் புரியல. 'கட்டணமா? எதுக்கு?'ன்னு கேட்ட பின்னாடி 'அடப்பாவிங்களா. உங்களுக்கு எம்.இ. இடம் கிடைச்சுருக்கு. அதுக்குத் தான் கட்டணம்'ன்னு சொல்றாரு. அப்பத் தான் புரியுது எல்லாருக்கும் ராவ்-க்கு மட்டும் ஏற்கனவே தெரியும் போல - இந்த தமிழாளுங்க கிட்ட நமக்கென்ன பேச்சுன்னு கமுக்கமா இருந்திருகாரு. செந்திலும் நானும் ஒருத்தரை ஒருத்தர் கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுக்காதது தான் குறை. அப்படி ஒரு மகிழ்ச்சி. வாயெல்லாம் பல்லா கட்டணத்தைக் கட்டி வகுப்புல சேர்ந்தோம்.

இதையேன் பெரீரீரீய திருப்பம்ன்னு சொல்றேன்னு இன்னேரம் புரிஞ்சிருக்கும். இல்லியா? அதையும் விலாவாரியா சொல்லணும்ன்னா சொல்றேன். :-) ஆனா ஒன்னு. கலசலிங்கத்துல அதுக்கப்புறம் படிச்சப் பசங்க செஞ்ச புண்ணியம் தான் அவங்களை எங்கிட்ட இருந்து காப்பாத்தியிருக்குன்னு மட்டும் கட்டாயம் சொல்லலாம். :-)

காண இனியது நீறு கவினைத் தருவது நீறு


காண இனியது நீறு கவினைத் தருவது நீறு
பேணி அணிபவர்க்கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணம் தகைவது நீறு மதியைத் தருவது நீறு
சேணம் தருவது நீறு திருஆலவாயான் திருநீறே

காண இனியது நீறு - அணிந்தவர்களைக் காண இனிமையாக இருக்கும்படி செய்வது திருநீறு

கவினைத் தருவது நீறு - அழகையும் நற்குணங்களையும் தருவது திருநீறு

பேணி அணிபவர்க்கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு - உளம் விரும்பி பேணி அணிபவர்களுக்கெல்லாம் பெருமையைக் கொடுப்பது திருநீறு

மாணம் தகைவது நீறு - மாண்பைத் தருவது திருநீறு. (உறுதிப்படுத்தும் ஆதாரமாய் (பிரமாணமாய்) அமைவது திருநீறு என்று தொடக்கத்தில் தவறாகப் பொருள் சொல்லியிருந்தேன்)

மதியைத் தருவது நீறு - நிலைத்த ஞானத்தைத் தருவது திருநீறு

சேணம் தருவது நீறு - விண்ணுலகப்பேற்றையும் உயர்வையும் அளிப்பது திருநீறு. (கடினமான நேரங்களில் மன அமைதியைத் தருவது திருநீறு என்று தொடக்கத்தில் தவறாகப் பொருள் சொல்லியிருந்தேன்)

திருஆலவாயான் திருநீறே - அது திருவாலவாயாம் மதுரையம்பதியில் வாழும் இறைவனின் திருநீறே

***

முதல் இரண்டு அடிகள் எவ்வளவு எளிமையாக இருக்கிறதோ அவ்வளவு கடினமாகத் தோன்றியது கடைசி இரு அடிகள். கொடுத்துள்ள பொருள் தவறாக இருப்பின் திருத்துமாறு வேண்டிக் கொள்கிறேன்.

திருத்தங்கள் 07 நவம்பர் 2006 அன்று செய்யப்பட்டது. திருத்தங்களைச் சொன்ன நண்பர்களுக்கு மிக்க நன்றி.

Tuesday, June 24, 2008

வெண்தாமரைக்கு அன்றி நின்பதம் தாங்க என் வெள்ளை உள்ளத்தண்தாமரைக்குத் தகாது கொலோ?


வெண்தாமரைக்கு அன்றி நின்பதம் தாங்க என் வெள்ளை உள்ளத்
தண்தாமரைக்குத் தகாது கொலோ? சகம் ஏழும் அளித்து
உண்டான் உறங்க ஒழித்தான் பித்தாக உண்டாக்கும் வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகலகலாவல்லியே!

சகலகலாவல்லியே - எல்லாக் கலைகளையும் காத்து அளிப்பவளே! கலைமகளே!

சகம் ஏழும் அளித்து உண்டான் உறங்க - ஏழு உலகங்களையும் காக்கும் தொழில் புரியும் நாராயணன் பிரளயக் காலத்தில் அவற்றைக் காப்பதற்காக அவற்றையெல்லாம் உண்டு தன் வயிற்றில் வைத்துக் காப்பாற்றிப் பின் பாற்கடலில் உறங்கி கொண்டிருக்க

ஒழித்தான் பித்தாக - எல்லாவற்றையும் அழிக்கும் தொழில் புரியும் அண்ணல் சிவபெருமான் பித்தனாய் ஊழித் தாண்டவம் ஆடிக் கொண்டிருக்க

உண்டாக்கும் வண்ணம் கண்டான் - பிரளயத்தின் முடிவில் மீண்டும் உலகங்களையும் உயிர்களையும் உண்டாக்கும் வண்ணம் பார்த்திருக்கும், படைக்கும் தொழில் புரியும் நான்முகனாம் பிரம்ம தேவன்

சுவைகொள் கரும்பே - ஆசையுடன் சுவைக்கும் கரும்பு போன்றவளே!

வெண்தாமரைக்கு அன்றி நின் பதம் தாங்க என் வெள்ளை உள்ளத் தண்தாமரைக்குத் தகாது கொலோ? - நீ வெண்தாமரையில் வீற்றிருக்கிறாய். அதிலேயே இருக்கிறாயே. என் உள்ளமும் வெள்ளை உள்ளம் தானே? அதையும் ஒரு குளிர்ந்த வெண்தாமரை என்றுக் கருதி உன் பாதத்தை அங்கேயும் வைக்கலாகாதா? என் உள்ளத்திற்கு உன் பாதங்களைத் தாங்கும் பாக்கியம் கிடைக்காதா? உனது அருள் எனக்குக் கிடைக்காதா?

***

சகலகலாவல்லிமாலையின் இந்தப் பாடலுக்கு மட்டும் நகைச்சுவையாகச் சொன்ன பொருளை இங்கே காணலாம்.

Monday, June 23, 2008

முத்தி தருவது நீறு முனிவர் அணிவது நீறு


முத்தி தருவது நீறு முனிவர் அணிவது நீறு
சத்தியம் ஆவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு
சித்தி தருவது நீறு திருஆலவாயான் திருநீறே


முத்தி தருவது நீறு - பிறப்பு இறப்பு என்னும் சுழலில் இருந்து விடுதலை தருவது திருநீறு

முனிவர் அணிவது நீறு - முக்கண்ணனை அறியும் முனிவர்கள் அணிவது திருநீறு

சத்தியம் ஆவது நீறு - நிலையில்லாத இந்த உலகத்தில் என்றும் நிலையானது திருநீறு

தக்கோர் புகழ்வது நீறு - நம் அன்பிற்கும் பணிவிற்கும் தக்கோரான அடியார்கள் புகழ்வது திருநீறு

பத்தி தருவது நீறு - அணிபவர்களுக்கு பக்தியெனும் இறையன்பைத் தருவது திருநீறு

பரவ இனியது நீறு - போற்றிப் புகழ இனியது திருநீறு

சித்தி தருவது நீறு - நினைத்ததை அடைய வைக்கும் நல்வலிமையைத் தருவது திருநீறு

திருஆலவாயான் திருநீறே - அது திருவாலவாயாம் தென்மதுரையில் வாழும் இறைவனின் திருநீறே.

Sunday, June 22, 2008

வேதத்தில் உள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு


வேதத்தில் உள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
போதம் தருவது நீறு புன்மை தீர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு உண்மையில் உள்ளது நீறு
சீதப் புனல் வயல் சூழ்ந்த திருவாலவாயான் திருநீறே

வேதத்தில் உள்ளது நீறு - வேதங்களில் எல்லாம் புகழப்பட்டுள்ளது திருநீறு

வெந்துயர் தீர்ப்பது நீறு - உலகத்தில் எல்லாவிதமான துயர்களையும் தீர்ப்பது திருநீறு

போதம் தருவது நீறு - ஞானத்தைத் தருவது திருநீறு

புன்மை தீர்ப்பது நீறு - நம் குறைகளைத் தீர்ப்பது திருநீறு

ஓதத் தகுவது நீறு - போற்றிப் புகழத் தகுந்தது திருநீறு

உண்மையில் உள்ளது நீறு - என்றும் உண்மையாக நிலைத்திருப்பது திருநீறு

சீதப் புனல் வயல் சூழ்ந்த திருவாலவாயான் திருநீறே - குளிர்ந்த நீர் வளம் மிக்க வயல்களால் சூழப்பட்டுள்ள திருவாலவாயான கூடல் நகரானின் திருநீறே.

Saturday, June 21, 2008

மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு


மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்திலுல்ளது நீறு
செந்துவர்வாய் உமைபங்கன் திருவாலவாயான் திருநீறே


மந்திரமாவது நீறு - மந்திரங்களில் எல்லாம் சிறந்த மந்திரமாவது திருநீறு.

வானவர் மேலது நீறு - வானில் வாழும் தேவர்கள் எல்லாம் வணங்கி அணிவது திருநீறு.

சுந்தரமாவது நீறு - அழகு தரும் பொருட்களில் எல்லாம் மிகவும் அழகானது திருநீறு.

துதிக்கப்படுவது நீறு - பெரும் பெருமையுடையது என்று எல்லாராலும் துதிக்கப்படுவது திருநீறு.

தந்திரமாவது நீறு - இறைவனை அடையும் வழிகளில் (தந்திரங்களில்) எலலாம் மிகச் சிறந்த வழியாக விளங்குவது திருநீறு

சமயத்திலுல்ளது நீறு - சிவபெருமானை ஏத்தும் சைவ சமயத்தில் பெருமையுடன் போற்றப்படுவது திருநீறு.

செந்துவர்வாய் உமைபங்கன் திருவாலவாயான் திருநீறே - சிவந்த திருவாயினையுடைய உமையம்மையை இடப்பாகத்தில் கொண்டிருக்கும் திருவாலவாயான மதுரையம்பதியில் வாழும் சோமசுந்தரக் கடவுளின் திருநீறே.

Friday, June 20, 2008

நான்முகன் ஆதியாய பிரமாபுரத்து மறைஞான ஞான முனிவன்


தேனமர் பொழில் கொள் ஆலை விளை செந்நெல் துன்னி
வளர்செம்பொன் எங்கும் திகழ
நான்முகன் ஆதியாய பிரமாபுரத்து
மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரை செய்
ஆன சொல் மாலை ஓதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே.

தேனமர் பொழில் கொள் ஆலை - தேன் நிரம்பிய மலர்கள் நிரம்பிய சோலைகளும் கரும்பு மிகுதியாக விளைவதால் எங்கெங்கு நோக்கினும் கரும்பாலைகளும்

விளை செந்நெல் துன்னி வளர் செம்பொன் எங்கும் திகழ - செந்நெல் எங்கும் மிகுதியாக விளைந்து சிவந்த பொன்னைப் போல் திகழ இருக்கும்

நான்முகன் ஆதியாய பிரமாபுரத்து - நான்முகனாகிய பிரம்மனை முதலாகக் கொண்டு எல்லாத் தேவர்களும் நிலையாகத் தங்கியிருக்கும் பிரமாபுரமாகிய சீர்காழியின்

மறைஞான ஞான முனிவன் - மறைஞானமும் மறைகளைத் தாண்டிய இறையருளால் பெற்ற மெய்ஞ்ஞானமும் உடைய முனிவனான திருஞான சம்பந்தர்

தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரை செய் - தன் நல்வினைத் தீவினைக்கேற்ப பயன் நல்கும் கோள்களும் நாட்களும் அடியாரை நலியாத வண்ணம் உரைத்த

ஆன சொல் மாலை ஓதும் - சிறந்த இந்தச் சொல்மாலையை ஓதுகின்ற

அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே - அடியவர்கள் வானுலகத்தை அடைந்து மகிழ்ந்திருப்பார்கள். இது மிக மிக உறுதி.

Thursday, June 19, 2008

புத்தரொடு அமணை வாதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமே


கொத்தலர் குழலியோடு விசயற்கு நல்கு
குணமாய வேட விகிர்தன்
மத்தமும் மதியு(ம்)நாகம் முடிமேலணிந்தென்
உளமே புகுந்த அதனால்
புத்தரொடமணை வாதில் அழிவிக்கும் அண்ணல்
திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே


கொத்தலர் குழலியோடு - கொத்தாக மணம் மிகுந்த மலர்களை கூந்தலில் அணிந்திருக்கும் உமையன்னையோடு

விசயற்கு நல்கு - விசயனான அருச்சுனனுக்கு அருள் செய்வதற்காக

குணமாய வேட விகிர்தன் - இறைவனின் குணங்களைப் பறைசாற்றும் உருவினை விடுத்து மாய உருவில் வேடனாகத் தோன்றும் திருவிளையாடல்கள் செய்பவன்

மத்தமும் - கங்கை என்னும் நீரையும்

மதியும் - பிறை நிலவினையும்

நாகம் - பாம்பினையும்

முடிமேலணிந்து - தன் திருமுடிமேல் அணிந்து

என் உளமே புகுந்த அதனால் - என் உள்ளம் புகுந்து நிலை நின்றதனால்

புத்தரொடு அமணை வாதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமே - பௌத்தரையும் சமணர்களையும் வாதப்போரில் செருக்கழிக்கும் அண்ணலின் திருநீற்றின் பெருமையில் எனக்கு ஆழ்ந்த திடமான நம்பிக்கை உண்டு

அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே - அத்தகு எதிர்ப்புகளும் சிவனடியார்களுக்கு நல்லவையாக மாறும் அவை மிக நல்லவையாக மாறும்

பல பல வேடமாகும் பரன் நாரி பாகன் பசுவேறும் எங்கள் பரமன்


பல பல வேடமாகும் பரன் நாரி பாகன்
பசுவேறும் எங்கள் பரமன்
சலமகளோடு எருக்கு முடி மேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
மலர்மிசையோனும் மாலும் மறையோடு தேவர்
வருகாலமான பலவும்
அலைகடல் மேரு நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே

பல பல வேடமாகும் பரன் - அடியார்கள் வேண்டிய வடிவங்களில் எல்லாம் தோன்றி அருள் புரியும் பரமன்

நாரி பாகன் - பெண்ணாகிய உமையன்னையைத் தன் உடலில் பாதியாகக் கொண்டவன்

பசுவேறும் எங்கள் பரமன் - விடையின் மேல் ஏறும் எங்கள் பரமன்

சலமகளோடு எருக்கு முடி மேல் அணிந்து - நீர்மகளாகிய கங்கையையும் எருக்கம் பூக்களையும் தன் திருமுடி மேல் அணிந்து

என் உளமே புகுந்த அதனால் - தானாகவே (என் முயற்சி சிறிதுமின்றி அவன் அருளாலே அவனாகவே) என் உள்ளம் புகுந்து நிலைநின்றதனால்

மலர்மிசையோனும் மாலும் மறையோடு தேவர் வருகாலமான பலவும் - மலரில் வாழும் பிரமனும் திருமாலும் வேதங்களும் தேவர்களும் எல்லோருக்கும் முடிவினை ஒரு காலத்தில் வந்து நடத்தும் காலனும் அது போன்ற பலவும்

அலைகடல் மேரு நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே - அலைகடலில் இருக்கும் மேரு மலை போல் மிக நல்லவை; அவை அடியார்களுக்கும் மிக மிக நல்லவை.

Wednesday, June 18, 2008

ஏழ்கடல் சூழ் இலங்கை அரையன் தனோடும்


வேள்பட விழி செய்து அன்று விடைமேல் இருந்து
மடவாள் தனோடும் உடனாய்
வாண்மதி வன்னி கொன்றை மலர்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழ் இலங்கை அரையன் தனோடும்
இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே

வேள்பட விழி செய்து அன்று - அன்று மதனவேள் சாம்பலாக நெற்றிக்கண்ணைத் திறந்து

விடைமேல் இருந்து - அறவுருவான எருதின் மேல் அமர்ந்து

மடவாள் தனோடும் உடனாய் - அழகிய உமையன்னையுடன் சேர்ந்து

வாண்மதி வன்னி கொன்றை மலர்சூடி வந்து - ஒளிமிகுந்த நிலவையும் வன்னி, கொன்றை மலர்களையும் திருமுடிமேல் சூடி

என் உளமே புகுந்த அதனால் - என் உள்ளம் புகுந்து நிலை நின்ற அதனால்

ஏழ்கடல் சூழ் இலங்கை அரையன் தனோடும் இடரான வந்து நலியா - ஏழ்கடல்களால் சூழப்பட்ட இலங்கைக்கு அரசனான இராவணன் முதலான அரக்கர்களால் எந்த இடரும் ஏற்பட்டு நம்மை வருத்தாது

ஆழ்கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே - ஆழ்கடல்களும் அவற்றில் வாழ்பவைகளும் சிவனடியார்களுக்கு மிக நல்லவையே.

***

இராவணன் சிறந்த சிவபக்தன். அவ்வாறிருக்க இராவணன் போன்றவர்களால் துயரம் வராது என்று ஏன் எழுதியிருக்கிறார் சம்பந்தர் என்று சிந்திக்கத் தோன்றுகிறது. மதனவேளை அழித்தவன், காமேஸ்வரன், காமதகனன் தன் துணைவியுடன் என் உள்ளத்தில் நிலைபெற்றதனால், பெரும்பண்டிதனாய் இருந்தும் எல்லாவிதமான அரச நற்குணங்கள் இருந்தும் பிறன் மனையை நாடிய இராவணனை போன்ற காமத்தால் நிலைதடுமாறியவர்களால் எனக்கு எந்த துயரமும் நிகழாது என்று கூறுகிறாரோ என்று தோன்றுகிறது.

Tuesday, June 17, 2008

செப்பிள முலை நன்மங்கை ஒரு பாகமாக விடையேறும் செல்வன்


செப்பிள முலை நன்மங்கை ஒரு பாகமாக
விடையேறு செல்வனடைவார்
ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும் வாதம் மிகையான பித்தும்
வினையான வந்து நலியா
அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே

செப்பிள முலை நன்மங்கை ஒரு பாகமாக - அழகான கொங்கைகளைக் கொண்ட மங்கையான உமையன்னை ஒரு பாகமாக

விடையேறு செல்வனடைவார் - விடையில் ஏறுகின்ற, நம்மையெல்லாம் தன் செல்வமாக உடைய செல்வனாம் சிவபெருமான் சேரும் இடம்

ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல் அணிந்து - ஒப்பு கூறத்தக்க இளமதியமும் கங்கையும் (அப்பு - நீர், இங்கு கங்கை) தன் திருமுடி மேல் அணிந்து

என் உளமே புகுந்த அதனால் - தானாகவே என் உள்ளம் புகுந்து அங்கு நிலை நின்றதனால்

வெப்பொடு குளிரும் வாதம் மிகையான பித்தும் - வெப்பமான காய்ச்சல், குளிர் காய்ச்சல், வாதம் (நரம்பு தொடர்பான நோய்கள்), பித்தம் (மனநிலை தொடர்பான நோய்கள்) போன்ற எந்த நோயும்

வினையான வந்து நலியா - வினைப்பயனாக வந்து என்னை வாட்டாது

அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே - சிவனடியார்களுக்கு அந்த வினைகளும் மிக நல்லவை; அவற்றின் பயனாக வரும் நோய்களும் மிக நல்லவை (அவை வராமல் இருந்து நல்லவையாய் இருக்கும்; வந்தாலும் வாட்டாமல் இருந்து நல்லவையாய் இருக்கும்)

கவிநயா அக்கா, வாத்தியார் ஐயா, பரிசல்காரன், கோவி.கண்ணன் - அனைவருக்கும் வணக்கம் (கேள்வி பதில் 2)

பாராட்டுகளை அள்ளி வழங்கக் கற்றுக் கொள்ள வேண்டுமா? உணர்ச்சிப் பெருக்கில் உருக வேண்டுமா? அப்படி உருகக் கற்றுக் கொள்ள வேண்டுமா? ஒரு பதிவர் எழுதுவது பிடித்துவிட்டால் அவர் ஒரு இடுகை இட்டு பத்தே நிமிடத்தில் படித்துப் பின்னூட்டம் இடக் கற்றுக் கொள்ள வேண்டுமா? இவற்றில் ஏதேனும் ஒன்றிற்கு 'ஆம்' என்று உங்கள் மனத்திற்குள்ளேயே பதில் சொல்லிக் கொண்டீர்கள் என்றால் நீங்கள் தொடர்ந்து படிக்க வேண்டியவை கவிதாயினி கவிநயா அக்காவின் பதிவினையும் பின்னூட்டங்களையுமே. :-)

இதோ அக்கா கேட்ட கேள்விகளும் தம்பியேன் சொல்லும் பதில்களும்:

அக்கா முதல் கேள்வியாக செல்வன் கேட்ட கேள்விகளில் ஒன்றையே கேட்டார். அதற்கான விடை சென்ற இடுகையிலே சொல்லியிருக்கிறேன்.

2. உங்களுக்கு சங்க இலக்கியத்திலும், ஆன்மீகத்திலும் எப்போது ஆர்வம் ஏற்பட்டது? ஒன்றுக்கொன்று உள்ள தொடர்பினாலா, இல்லை தனித்தனியாக ஏற்பட்டதா?

ஆன்மிகத்தில/சமயத்தில/மதத்தில/பக்தியில ஈடுபாடு வந்தது குட்டியூண்டு வயசிலே. ( நீங்க ஆன்மிகத்திலன்னு தான் கேட்டீங்க. மத்ததையும் சொல்லாட்டி உஷா கோவிச்சுக்குவாங்க போலிருக்கு. :-) )

முதல் காரணம் அம்மம்மா சந்திரா அம்மாள். இந்தப் பாட்டியைப் பத்தி முந்தையப் பதிவுகளில் எழுதியிருக்கிறேன். அவங்க நேரடியா எதுவுமே சொல்லித் தரலை. ஆனா புத்தகப்புழுவா சின்ன வயசுலயே இருந்த எனக்குப் படிக்க நிறைய புத்தகங்களை வச்சிருந்தார். என் பதிவுகளைப் பத்தி தினமலர்ல வந்தப்ப அவங்க தான் அதை முதல்ல பார்த்து என் தம்பிக்கிட்ட சொன்னாங்க. அமெரிக்காவுல இருந்துக்கிட்டு அபிராமி அந்தாதியும் நாயகி சுவாமிகள் பாட்டும் எழுதுனா வெள்ளைக்காரன் இதெல்லாம் படிக்கிறானான்னு நான் அதுக்கப்புறம் மதுரைக்குப் போனபோது கேட்டாங்க. பாட்டி இதெல்லாம் நம்ம ஊரு ஆளுங்க படிக்கிறதுக்குத் தான் எழுதிக்கிட்டு இருக்கேன்னா அவங்களுக்குப் புரியலை. இன்னைக்குப் போயி சொன்னாலும் புரியாதுன்னு நினைக்கிறேன். ஏதோ பேரன் அமெரிக்காவுல பொட்டி தட்டிக்கிட்டு நிறைய சம்பாரிச்சுகிட்டு அப்பப்ப கம்ப்யூட்டர் பொட்டியில அபிராமி அந்தாதியும் எழுதிக்கிட்டு இருக்கான்னு நினைச்சுக்கிட்டு இருக்காங்க. அவங்க வச்சுக்கிட்டு இருந்த புத்தங்களைப் படிச்சு 7 (அ) 8 வயசுல அவங்ககிட்ட கீதையில ஐயம் கேட்டுக்கிட்டு இருந்தது நினைவிருக்கு. புரியாம மகாபாரதம் பெரிய புத்தகம் படிச்சதும் நினைவிருக்கு. ராமாயணம் படிக்கிறப்ப அகலிகைக்கு ஏன் கௌதமர் சாபம் குடுத்தாருன்னு புரியாம பாட்டிக்கிட்ட கேட்டதும் நினைவிருக்கு. ஆனா அவங்க என்ன பதில் சொன்னாங்கங்கறது மட்டும் மறந்திருச்சு. :-)

ரெண்டாவது காரணம் நான் பத்தாப்பு படிக்கிறப்ப டாடா சொல்லாம செத்துப் போன அம்மா. பகவத் கீதையெல்லாம் படிச்சு ரொம்ப அறிவாளியா நினைச்சுக்கிட்டு அம்மா செத்ததுக்கு அன்னைக்கு அழலை. ஆனா கல்லூரிக்காலத்துல இருந்து இன்னை வரைக்கும் அழுதுக்கிட்டு இருக்கேன். இப்ப இதை எழுதுறப்பவும் கண்ணுல தண்ணி கட்டுது. சரி சரி. எதையோ சொல்ல வந்து வேற எதையோ சொல்றேன். எங்கம்மா சுசிலா பெரிய முருக பக்தை. திருப்பரங்குன்றத்துக்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கூடல் குமரன் சன்னிதிக்கும் அடிக்கடி (தினமும் ஒரு முறைன்னு சொல்ல முடியாது; வாரத்துக்கு ஒரு முறைன்னும் சொல்ல முடியாது - ரெண்டுக்கும் நடுவுல) கூட்டிக்கிட்டு போயி திருப்புகழும் 'சண்முக நாயகன் தோன்றிடுவான்' பாட்டும் நல்லா சொல்லிக் குடுத்தாங்க. அன்னைக்குத் தொடங்குனது தெய்வத் தமிழின் மேல் காதல்.

அம்மாவோட மறைவுக்குப் பிறகு அந்த தெய்வப் பாடல்களின் மேல் இருந்த காதல் கீதையின் மேல் திரும்பியது. அப்ப எல்லாம் கீதைக்கு எத்தனை உரைகள் இருக்கோ அத்தனையையும் வாங்கி ஒவ்வொரு சுலோகமா ஒப்பீடு செஞ்சே படிச்சேன். அப்படிப் படிச்சது தான் வடமொழி. பள்ளிக்கூடத்துல தமிழ் படிச்சது மாதிரி யாருக்கிட்டயும் முறையா வடமொழி படிக்கலை. அதனால என்னோட வடமொழி அறிவு கேள்வியறிவு மட்டுமேன்னு சொல்லலாம்; அரைகுறை அறிவுன்னும் சொல்லலாம். :-) உங்க அடுத்த கேள்வியான '3. வடமொழியும் நீங்களே ஆர்வத்தால் கற்றுக் கொண்டீர்களா?'க்கும் பதில் சொல்லியாச்சு. ரெண்டாவது கேள்விக்கான பதில் தொடருது.

கல்லூரிக்காலத்தில கீதையை எந்தளவுக்குப் படிச்சேனோ அந்த அளவுக்கு ஆழ்வார் பாசுரங்களைப் படிக்கத் தொடங்குனது வேலை பாக்கத் தொடங்குனப்ப. அதுக்கு இணையத்துல இருக்கிற வைணவ குழுமங்கள் (பக்தி, ஒப்பிலியப்பன், சரணாகதி) தான் காரணம். அப்ப பழந்தமிழ் இலக்கியங்கள் மேல இன்னும் பழக்கம் கூடிச்சு.

2005ல பதிவுகள்ல எழுதத் தொடங்குன பிறகு தான் சங்க இலக்கியங்கள்ல ஆர்வம் வந்தது. 2006 ஜனவரியில 'மாலவனும் தமிழ்க்கடவுள்' என்ற விவாதம் என்னோட நட்சத்திர வாரத்துல வந்தது. நான் அந்தக் கருத்தை வைக்க இராகவன் மறுத்தார். பலவகையில என் கருத்தைச் சொன்னேன். ஆனா தரவுகளோட சொன்னா இன்னும் பலமா என் கருத்தை வைக்கலாம்ன்னு தோணிச்சு. அப்பத் தொடங்குனது 'இலக்கியத்தில் இறை' என்ற தொடருக்கான எண்ணம். ஆனா நான் விரும்புற கருத்துக்குத் தரவுகளைத் தேடாம திறந்த மனத்தோடு தான் சங்க இலக்கியங்களை அணுகுகிறேன். அதனால் கடைசியில் மாலவன் தமிழ்க்கடவுள் என்று சொல்ல சரியான தரவுகள் கிடைக்கவில்லை என்றால் அந்தக் கருத்தை மாற்றிக் கொள்ளவும் புதிய கருத்துகளை ஏற்றுக் கொள்ளவும் தயக்கங்கள் இல்லை.

சங்க இலக்கியங்கள்ல ஆர்வம் வந்ததுக்கு இன்னொரு காரணமும் உண்டு. வடமொழி வேதங்கள், நூற்கள் ஆராயப்பட்ட அளவிற்குத் தமிழிலக்கியங்கள் ஆராயப்படவில்லை என்ற எண்ணம் உண்டு. திராவிடம், ஆரியம், தமிழ், வடமொழி போன்ற கருத்தாங்கள் எல்லாம் வடமொழி நூற்களை அடிப்படையாகக் கொண்டே இருப்பதாக ஒரு எண்ணம். தமிழிலக்கியங்களில் அதற்கு ஏற்பவோ எதிர்ப்பாகவோ தரவுகள் இருக்கிறதா என்று பார்க்க ஆசை. சில தரவுகள் கிடைத்து அவற்றை கூடலில் (முக்கியமாக பாரி வள்ளல் தொடர்கதையில்) வைத்திருக்கிறேன். எத்தனை பேர் படித்தார்களோ தெரியாது.

***

இணையத்தில் ஒரே ஒரு வாத்தியார் தான்; ஒரே ஒரு வாத்தியார் அம்மா தான். ரெண்டு பேருக்கும் அறிமுகம் தேவையில்லை. வாத்தியார் அம்மாவை நான் அக்கான்னு தான் கூப்புடறது. வாத்தியார் ஐயா எழுத வந்த நாள்ல இருந்து தொடர்ந்து படிச்சுக்கிட்டு தான் வர்றேன். பின்னூட்டங்களும் முடிஞ்ச வரைக்கும் இட்டுக்கிட்டு வர்றேன். வாத்தியார் ஐயா கேட்ட கேள்வியும் என்னோட பதிலும் இங்கே.

இறைவனைக் காணும் வாய்ப்புக் கிடைத்தால் என்ன கேட்பீர்கள்?

நல்ல கேள்வி வாத்தியார் ஐயா. பதில் சொல்லக் கடினமான கேள்வியும். எந்தப் பதில் சொன்னாலும் முழுமையாக இருக்காது.

இப்போதைக்கு ரெண்டு பதில்கள் இருக்கிறது. இரண்டையுமே சொல்கிறேன்.

உங்க கேள்வியை நீங்க கேட்டவுடனே படிச்சப்ப ஒரு பதில் தோணிச்சு. அது: சங்க இலக்கியங்களைத் தொடர்ந்து படிச்சு எல்லாத்தையும் தெளிவா புரிஞ்சுக்கிற அறிவு வேணும். அப்படி படிச்சுப் புரிஞ்சிக்கிட்டதைத் தெளிவா மத்தவங்களுக்குச் சொல்ற வல்லமையும் வேணும். (ஏன் இந்த வரம்ன்னு போன பத்தியில சொல்லியிருக்கேன்)

இந்தக் கேள்விக்குப் பதில் எழுத உக்காந்தப்ப இதைப் பத்தி சிந்திச்சேன். அப்ப தோணினது: எங்குமுளன் கண்ணன்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க. இப்ப எனக்குக் கிடைச்ச இந்தக் காட்சி என்றென்றைக்கும் தொடர்ந்து கிடைக்கணும். எந்த எந்த வகையில உனக்குத் தொண்டு செய்ய முடியுமோ அந்த அந்த வகையில தொண்டு செய்யும் வாய்ப்பும் வசதியும் வல்லமையும் கிடைக்க வேண்டும். நீ எங்கு எந்த நிலையில் என்னை வைக்கிறாயோ அந்த நிலையில் உன் நினைவோட நான் எந்தக் குறையும் இல்லாமல் இருக்கணும். (இதெல்லாம் சொல்லுதல் யார்க்கும் எளிய கதை. கடவுள் காட்சி தரும் போது இவற்றைத் தான் கேப்பேனாங்கறது ஐயமே)

***

என் பதிவுக்குப் புதுசா வந்து கேள்வி கேட்ட பரிசல்கார கிருஷ்ணகுமாரை வரவேற்கிறேன். அவர் கேட்ட கேள்வியும் அதற்குரிய பதிலும்:

எனது கேள்வி..
உங்களுக்கு எங்களையெல்லாம் பத்தா பாவமா இல்லையா?


கிருஷ்ணகுமார். பதிவுகள்ல எழுதுறதே சில நேரம் மத்தவங்களைக் கொடுமைபடுத்துற மாதிரி தான். குடும்பத்தோட செலவழிக்க வேண்டிய நேரத்துல பதிவு எழுதுறதால குடும்பத்தைக் கொடுமைபடுத்துறோம். இந்த மாதிரி கேள்வி கேளு கேள்வி கேளுன்னு நச்சரிச்சு உங்களை மாதிரி பதிவர்களைக் கொடுமைபடுத்துறோம். என்னங்க செய்றது - கொடுமையே கொடுந்தொழில்ன்னு ஆகிப் போச்சு வாழ்க்கை. :-)

***

கோவி.கண்ணனுக்கு அறிமுகம் தேவையில்லை. வெள்ளம் போல் பெருகும் அவரது கருத்துகளே அவரை நன்கு அறிமுகம் செய்து விடும். அந்தக் கருத்துகள் அவருக்கு என்ன பட்டப்பெயரை வாங்கித் தந்ததுங்கறதை மட்டும் நான் சொல்ல மாட்டேன். :-)

அவர் 'கேள்விகள் தயாராகின்றன'ன்னு முன்னோட்டம் கொடுத்தபோது சரி வழக்கம் போல விவகாரமா தான் எதாச்சும் கேப்பாருன்னு நினைச்சேன். அப்புறம் அவர் கேட்ட ஒரே கேள்வியைப் பாத்தவுடனே சப்புன்னு ஆயிருச்சு. அப்படி கேட்ட ஒரே கேள்விக்கு முன்னாடியும் ஒரு பாராட்டுரைங்கற பாறாங்கல்லு. எதுக்குன்னு தெரியலை. :-)

ஆன்மிகம், சங்க இலக்கியம், பக்தி இலக்கியம்,சமஸ்கிரதம் ஆகியவற்றை கரைத்துக் குடித்து இருக்கிறீர்கள்.

ஆன்மிகம் தொடர்புடைய கேள்வி - பதில் பகுதியை ஆரம்பிக்கலாமே... இது பற்றி உங்கள் எண்ணம் ?


கண்ணன்,

எதையும் இன்னும் கரைத்தெல்லாம் குடிக்கவில்லை. அப்படி செய்ய வெகுகாலம் செல்லும். அதற்கெல்லாம் காலம் தான் கை கொடுக்க வேண்டும்.

ஆன்மிகம் தொடர்பா கேள்வி - பதில் தொடங்கலாம்ன்னு இரவிசங்கரோட விண்மீன் வாரத்துல பாபா சொல்லியிருந்தார். நீங்களும் இப்ப அதைக் கேக்குறீங்க. அப்படி ஒன்னு தொடங்குறதா எண்ணம் இல்லை. காரணங்கள் இரண்டு.

1. ஆன்மிகத்தில் கேள்வி பதில் தொடங்கும் அளவிற்கு ஒன்றும் தெரியாது. உஷா சொல்வது போல் இந்து மதத்தைப் பற்றித் தான் எழுதுகிறேன்; அதனால் மதப்பதிவர் தான் என்றாலும் இந்து மதத்தைப் பற்றி கேள்வி பதில் நடத்தும் அளவிற்கு அறிவில்லை. அறிந்தவன் என்ற எண்ணமும் இல்லை.

2. அப்படியே அரைகுறை அறிவோடு தொடங்கினாலும் உஷா பட்டியல் இட்ட ஒவ்வொருவரும் ஒரே கேள்விக்கு ஒவ்வொரு விதமாக பதில் சொல்வார்கள்/சொல்வோம். அது அப்புறம் கேள்வி பதிலாக இருக்காது; பெரும் சர்ச்சையாக முடியும். ஏற்கனவே விளையாட்டாகச் சிலர் தொடங்கிய சர்ச்சைகள் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கும் போது இது வேற தேவையா? :-)

எனக்கு ஏன் இந்த எண்ணம் இல்லைங்கறதுக்குத் தான் காரணங்கள் சொன்னேன். வேற எவராவது 'கேள்வி - பதில்' தொடங்கும் எண்ணம் இருந்தா கட்டாயம் அவங்க செய்யலாம்; அது அவங்களோட உரிமை.

வாள்வரி அதளதாடை வரிகோவணத்தர்


வாள்வரி அதளதாடை வரிகோவணத்தர்
மடவாள் தனோடும் உடனாய்
நாண்மலர் வன்னி கொன்றை நதி சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
கோளரி உழுவையோடு கொலையானை கேழல்
கொடுநாகமோடு கரடி
ஆளரி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே


வாள்வரி அதளதாடை - வாளைப் போன்ற கூரிய வரிகளைக் கொண்ட புலித்தோலால் ஆன மேலாடையும்

வரிகோவணத்தர் - வரிகளையுடைய புலித்தோலால் ஆன இடையாடையும் அணிந்த சிவபெருமான்

மடவாள் தனோடும் உடனாய் - அன்பு மனையாளோடு சேர்ந்து

நாண்மலர் வன்னி கொன்றை நதி சூடி வந்து - தாமரையும் வன்னிமலரும் கொன்றைமலரும் கங்கை நதியும் தன் திருமுடியின் மேல் சூடி

என் உளமே புகுந்த அதனால் - தானாக என் உள்ளம் புகுந்து அங்கே நிலைநின்றதால்

கோளரி உழுவையோடு - கொடுமையே வடிவான புலியும்

கொலையானை - பயங்கரமான யானையும்

கேழல் - காட்டுப் பன்றியும்

கொடுநாகமோடு - கொடிய நாகமும்

கரடி - கரடியும்

ஆளரி - ஆளைக் கொல்லும் சிங்கமும்

நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே - அவை அடியார்களுக்கு மிக நல்லவைகளாக இருக்கும்

***

மேலே இருக்கும் படத்தில் இருப்பவர் திருஞானசம்பந்தர். 9ம் நூற்றாண்டுத் திருவுருவம். பாரிஸில் உள்ள ஆசிய அருங்காட்சியகத்தில் தற்போது இருக்கிறது. யோகன் ஐயா அண்மையில் அங்கு சென்றிருந்த போது எடுத்து அனுப்பியப் புகைப்படம்.

Monday, June 16, 2008

கடவுள் இருந்தா நல்லா இருக்கும்னு தான் சொல்றேன்

கடவுள் இல்லைன்னு சொல்லிக்கிட்டே கடவுள் செயலால் நடந்ததுன்னு ஒரு பிரிவினரும் தற்செயலாக நடந்ததுன்னு ஒரு பிரிவினரும் வாதிக்கும் படியாக காட்சியமைப்புகளுடன் வந்திருக்கிறார் தாமரைநகையார். நான் யாரை சொல்றேன்ன்னு புரியாவிட்டால் இராகவன் (ஜிரா), இரவிசங்கர் கண்ணபிரான் இவர்கள் பதிவுகளைப் பாருங்கள். தாமரைநகையார் யார் என்று தெரியும். :-)



ஒழுங்கா குறுந்தகட்டில இந்த படம் வரும் வரை காத்திருந்து பார்க்கலாம்ன்னு தான் நினைச்சிருந்தேன். ஆனா சிலருடைய விமர்சனங்கள் (முக்கியமாக பெனாத்தலார் விமர்சனம்) சரி திரையரங்கில் சென்றே பார்த்துவிடலாம்ன்னூ தூண்டிவிட்டது. என் குடும்பச் செலவிற்கோ பொதுநலனுக்கோ சென்றிருக்க வேண்டிய $32.50 இந்தப் படத்தை வெள்ளித்திரையில் காண்பதற்காகச் சென்றது - அந்தப் பாவம் என்னைத் தூண்டி விட்ட பதிவர்களுக்குச் செல்லாமல் இருக்க கோவிந்தராஜனை வேண்டிக்கிறேன்.

இராகவனுடைய விமர்சனத்தைப் படிக்காமல் போயிருக்கலாம். சைவர்களை அக்கிரமக்காரர்களாகக் காட்டிவிட்டார்கள்ன்னு அவருக்கு ஏற்பட்ட வேகத்தில் எழுதப்பட்ட விமர்சனத்தைப் படித்துச் சென்றதால் அப்படி அவர் கோவித்துக் கொள்ளும் படி என்ன தான் காட்டியிருக்கிறார்கள் என்று கவனித்ததில் படத்தின் சுவை குறைந்துவிட்டதோ என்று கூட தோன்றுகிறது.

எனக்கு திரைப்பட விமர்சனம் எல்லாம் எழுத வராது. சும்மா நானும் படத்தைப் பார்த்துவிட்டேன்ன்னு ஒரு மொக்கை போடலாம்ன்னு தான் போட்டேன். அம்புட்டுத் தான்.

நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும்


நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும்
விடையேறும் நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேலணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடும் உருமிடியும் மின்னும்
மிகையான பூதமவையும்
அஞ்சிடும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே.

நஞ்சணி கண்டன் - தேவர்களும் அசுரர்களும் இழந்த செல்வங்களை மீண்டும் அடைவதற்காக பாற்கடலைக் கடைந்த போது அதிலிருந்து எழுந்த ஆலகால நஞ்சை இந்த உலகங்களின் மீதுள்ள கருணையினால் தான் விழுங்கி அது தொண்டையில் தங்கியதால் அதுவே தொண்டைக்கு ஒரு அணிகலனாக அழகுடன் அமையப் பெற்ற நீலகண்டனாகிய

எந்தை - என் தந்தை

மடவாள் தனோடும் விடையேறும் நங்கள் பரமன் - அன்பும் அருளும் மிக்க அன்னை உமையவளோடு அறவுருவாகிய எருதின் மேல் ஏறி வரும் எங்கள் பரமனாகிய சிவபெருமான்

துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேலணிந்து - அனைவரும் ஆழ்ந்து உறங்கும் நடு இரவு நேரத்தின் இருட்டினைப் போன்ற நிறம் கொண்ட வன்னி மலரையும் (சிவந்த) கொன்றை மலரையும் தனது திருமுடி மேல் அணிந்து கொண்டு

என் உளமே புகுந்த அதனால் - அவனது அளவில்லா அருளினாலே என் உள்ளத்தில் புகுந்து அங்கேயே நிலை பெற்றதனால்

வெஞ்சின அவுணரோடும் - வெப்பமும் கோபமும் மிகுந்த அவுணரும்

உருமிடியும் மின்னும் - உருமும் இடியும் மின்னலும்

மிகையான பூதமவையும் - மிக்க சக்தி வாய்ந்த ஐம்பூதங்களும் (நிலம், நீர், காற்று, தீ, விண்)

அஞ்சிடும் நல்ல நல்ல - இறைவனது பெருமையையும் அவனடியார்களது பெருமையும் எண்ணி அஞ்சிடும்

அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே - அதனால் அவை அடியார்களுக்கு மிக நல்லவைகளாக இருக்கும்

Saturday, June 14, 2008

மதிநுதல் மங்கையோடு வடபாலிருந்து மறையோதும் எங்கள் பரமன்


மதிநுதல் மங்கையோடு வடபாலிருந்து
மறையோதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றை மாலை முடிமேலணிந்தென்
உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலன் அங்கி நமனோடு தூதர்
கொடுநோய்கள் ஆன பலவும்
அதிகுண நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே

மதிநுதல் மங்கையோடு - நிலாப் பிறையை போல் வளைந்து, நிலவைப் போல் குளிர்ந்த ஒளிவீசும் நெற்றியையுடைய அன்னை உமையோடு

வடபாலிருந்து - தென் திசை நோக்கி (தட்சினாமூர்த்தி திருவுருவத்தில்) வடப்பக்கமாய் அமர்ந்து

மறையோதும் எங்கள் பரமன் - மறைபொருளாய் இருக்கும் ஞான நூல்களை ஓதி அருளும் எங்கள் பரமனான சிவபெருமான்

நதியொடு கொன்றை மாலை முடிமேலணிந்து - கங்கையும் கொன்றை மாலையும் தன் திருமுடிமேல் அணிந்து

என் உளமே புகுந்த அதனால் - என் உள்ளத்தில் புகுந்து அங்கேயே நிரந்தரமாய் வீற்றிருப்பதால்

கொதியுறு காலன் - உடலை வருத்தும் காய்ச்சல் என்னும் காலனும்

அங்கி - உடலைச் சுடும் அக்கினியும் (தீயும்)

நமனோடு தூதர் - உயிரை எடுக்கும் நமனெனும் யமனும் அவனுடைத் தூதர்களாகிய

கொடுநோய்கள் ஆன பலவும் - கொடிய நோய்கள் யாவும்
அதிகுண நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே - சிவனடியார்களுக்கு அவை மிக நல்லவை. நற்குணங்கள் மிகுந்தவை. நற்குணங்கள் அளிப்பவை.

***

சிவபெருமான் உமா மகேசுரவராக அன்னையுடன் கூடி அமர்ந்திருக்கும் திருக்கோலமும் யோகீஸ்வரனாய் வட விருக்ஷம் எனப்படும் கல் ஆல மரத்தின் கீழ் அமர்ந்து மறைகளை சனத்குமாரர்களுக்கு உபதேசிக்கும் தென்முகக் கடவுள் திருக்கோலமும் முதல் வரியில் குறிக்கப் படுகின்றன. தென்முகக்கடவுளாய் அமர்ந்திருக்கும் போது அன்னையுடன் சேர்ந்திருப்பதில்லை ஐயன். ஆனால் சம்பந்தருக்கு அன்னையையும் ஐயனையும் பிரித்துப் பார்க்க முடியவில்லை போலும். உள்ளம் புகுந்தவன் அன்னையுடன் அல்லவா புகுந்தான். அதனால் மதி நுதல் மங்கையோடு என்று யோகநிலையில் இருக்கும் திருக்கோலத்திலும் அன்னையுடன் சேர்த்து ஐயனை தரிசிக்கிறார்.

ஐயனுடன் அடியாருக்கு இருக்கும் நெருக்கமான உறவைக் குறிக்க 'எங்கள் பரமன்' என்கிறார். அவன் பரமன் - எல்லோருக்கும் மேலானவன். ஆனால் அதே நேரத்தில் எங்களவன். :-)

காலனும் நமனும் யமனின் மறுபெயர்கள். இங்கு கொதியுறு காலன் என்று சொல்லிவிட்டு மீண்டும் நமன் என்கிறார். இருமுறை யமனைக் குறித்திருப்பாரோ என்று கேள்வி வந்தது. அதனால் அவன் அருளை முன்னிட்டுச் சிந்தித்ததில் 'கொதியுறு காலன்' என்பது 'காய்ச்சலாகிய காலன்' எனப் பொருள் தரலாம் என்று தோன்றியது.

அங்கி என்பது அக்கினி எனும் வடசொல்லின் திரிபு.

நமனோடு அவன் தூதர்களும் கொடு நோய்களான பலவும் என்று சொல்லவந்தவன் பின்னர் நோய்களைத் தானே யமதூதர்கள் என்று சொல்லுவார்கள் என்று எண்ணி அதே பொருளைக் கொடுத்திருக்கிறேன்.

Friday, June 13, 2008

உலகின் புதிய கடவுளுக்கு வணக்கம்! (கேள்வி பதில் 1)



உலகின் புதிய கடவுளாம் நமது செல்வன் கேட்ட கேள்விகளுக்கு பதில்கள் இங்கே.

***

என்னங்க முனைவர். செல்வன்? முதல் கேள்வியைன்னு ஒற்றையில் சொல்லிட்டு மொத்தம் ஐந்து கேள்விகள் கேட்டிருக்கீங்க? சரி. சரி. நெற்றிக்கண்ணைத் திறக்காதீங்க. ஐந்துக்கும் பதில்கள் சொல்றேன். :-)

1) கல்லூரியில் படிக்கும்போது ஜாலியாக சராசரி பசங்களை போல் இருந்தீர்களா அல்லது ரொம்ப நல்ல பையனாக இருந்தீர்களா?

அப்ப சராசரி பசங்கன்னா நல்ல பசங்க இல்லைன்னு சொல்றீங்களா? எந்த அம்மா அப்பாகிட்ட கேட்டாலும் அவங்க அவங்க பசங்க நல்ல பசங்க தான். கூட இருக்கிற பசங்க தான் கெடுத்துவுட்டுர்றாங்க. இல்லியா? :-)

சராசரி பசங்கன்னா தம், தண்ணி இதெல்லாம்ன்னா இன்னைக்கும் இதெல்லாம் கிடையாது. ஒரு தடவை இந்தியாவுக்கு விமானத்துல வர்றப்ப சுவைச்சுப் பார்க்கலாம்ன்னு பீர் கேன் வாங்கி குடிச்சுப் பார்த்தேன். பாதிக்கு மேல எறங்கலை. திருப்பிக் குடுத்தா அந்த விருந்தோம்பி அக்கா வாங்கிக்க மாட்டேன்னுட்டாங்க 'யூ கேன் டூ இட் மேன்'ன்னுட்டு போயிட்டாங்க. ரெண்டு மூனு தடவை குடுத்தும் இதே கதை தான். மூக்கைப் பிடிச்சுக்கிட்டு 'யூ கேன், ஐ கேன், பீர் கேன்'ன்னு சொல்லிக்கிட்டே குடிச்சு முடிச்சேன். அன்றும் இன்றும் என்றும் நாள்தோறும் (திங்கள் - எங்க முருகனுக்கும் சிவனுக்கும் உரிய நாள் தவிர) கோழி, ஆடு, மீன், எறா, அப்பப்ப மாடு, அப்பப்ப பன்னின்னு தின்னுக்கிட்டு தான் இருக்கேன்.

பள்ளிக்கூடத்துல படிக்கிறப்பவே செக்ஸ் மாத இதழ்கள் எல்லாம் வாங்கிப் படிக்கத் தொடங்கினேன். கல்லூரியில படிக்கிறப்ப கொஞ்சம் முன்னேறி 'மனைவியை மகிழ்விப்பது எப்படி'ங்கற லேனா தமிழ்வாணனோட புத்தகம் படிச்சேன். இப்ப அப்பப்ப தொலைக்காட்சியிலயும் இணையத்திலயும் பாக்குற திரைப்படங்கள், நகர்படங்கள்ன்னு தொடருது.

இப்ப நீங்களே சொல்லுங்க. நான் நல்ல பையனா இருந்திருக்கேனா/இருக்கேனா இல்லையா? உங்க வரையறைபடி ஜாலியா இருந்திருக்கேனா இல்லையா? :-)

2) ஆன்மிகம் உங்கள் பர்சனல் வாழ்க்கையில் என்ன பங்காற்றுகிறது?

ஆன்மிகம்ன்னாலே தனிப்பட்டது தான்னு ஒரு வரையறையை இப்ப நெறைய பேரு சொல்லத் தொடங்கிட்டாங்க. எனக்கு அது சரி தானான்னு தெரியலை. 'கூடியிருந்து குளிர்ந்து'ன்னு எங்க அக்கா கோதை சொன்னதைத் தான் சரின்னு நெனைச்சுகிட்டு கூட்டத்துல கோவிந்தா போட்டுகிட்டு இருக்கேன். நல்லவங்க கூட்டத்து நடுவுல ஒரு கெட்டவன் நல்லவனைப் போல வேடம் கட்டிக்கிட்டு இருந்தா அவனையும் நல்லவன்னு சொல்லிடுவாய்ங்க இல்ல அது மாதிரி இருக்கேன். ஆனா இந்தக் கூட்டத்து நடுவுலயும் ஒவ்வொருத்தர் உள்ளேயும் ஒரு பெருங்கள்வன் இருந்துக்கிட்டு எவன் நல்லவன் எவன் கெட்டவன்னு தெரிஞ்சுக்கிறான்னும் தெரியும். ஆனா ஏமாத்துறது நடந்துக்கிட்டு தான் இருக்கு.

பர்சனல் வாழ்க்கையை இரு பிரிவா பிரிச்சுக்கிறேன். ஒன்னு என்னளவுல தனிப்பட்ட தனிமனித வாழ்க்கை. அதுல 100% ஆன்மிகம் தான் பங்காற்றுது. அப்படி மொத்தமா பொய் சொல்லக்கூடாதுன்னு தடுத்தீங்கன்னா 85, 90%ன்னு சொல்லுவேன். அதுவும் பொய் தான்னு சொல்றீங்களா? உங்க கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல வந்தேன் பாருங்க. என்னை புதூச்செருப்பால தான் அடிக்கணும். :-)

குடும்ப வாழ்க்கையின்னு சொல்ல வந்தா 30% தான். தெனமும் காலையில எந்திருச்சு சாமி கும்புடறது கூட கிடையாது. அவக்கர அவக்கரமா (அவசர அவசரமா) எழுந்து 1 மணி நேரம் பிளாக்கிவிட்டு அவக்கர அவக்கரமா குளிச்சு பணியாலயத்துக்குப் போறதுக்கே சரியா இருக்கு. செய்யும் தொழிலே தெய்வம் இல்லியா? :-)

மனைவியும் மகளும் ஆன்மிகவாதிகளும் இல்லை; பக்தியாளர்களும் இல்லை; இன்னும் என்ன என்ன இல்லைன்னு சொல்லலாமோ அதெல்லாம் இல்லை. மகனைப் பத்தி இனி மேல தான் தெரியும். இப்ப என்னைக் கொஞ்சம் காப்பியடிக்கிறான். ஆ, ஊன்னா கையைத் தூக்கி கும்புடறான். சன் தொலைக்காட்சி திருவிளையாடல் வர்றப்ப தலைப்புப்பாடல் முடியுற வரைக்கும் அவனும் சரி; நானும் சரி கைகளை கும்புட்ட மேனிக்காவே வச்சுக்கணும். இல்லாட்டி இழுத்து புடிச்சு வச்சிருவான். அவன் என்னைப் போல வந்திருவானோன்னு வீட்டுல ஒரே கவலை. :-) அப்படியெல்லாம் ஆகாதுன்னு ஆதரவா நாலு வார்த்தை சொல்லிக்கிட்டு இருக்கேன். :-)

3) $4.10 காலன் பெட்ரோல் உங்கள் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்களை கொண்டுவந்துள்ளது?

திரும்புன பக்கம் எல்லாம் இதே தான் பேச்சு. பெட்ரோல் விலையேறிப்போச்சு உணவு விலை ஏறிப்போச்சுன்னு. அடிவாங்குறவங்க எல்லாம் பாவம் தான் இல்லை? :-(

என்னைப் பொறுத்தவரை எந்த மாற்றமும் இதுவரைக்கும் வரலை. சேமிச்சு வக்கிறது கொஞ்சம் குறையுதோ என்னவோ கவனிக்கணும். அம்புட்டுத் தான்.

4) இதுவரை சுற்றி பார்த்ததில் மறக்க முடியாத சுற்றுலா தளம் எது?

இன்னா கேள்விய்யா இது? ஒன்னா ரெண்டா? எத்தனையோ சுற்றுலா தளங்களும் தலங்களும் இருக்கின்றனவே. எதை என்று சொல்வது? ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பதில் வருமே. சரி. இன்றைக்குத் தோன்றும் இடம் 'கருநாடகத்தில் இருக்கும் தருமஸ்தலா'. ஏன் என்று கேட்காததால் அதை சொல்லப் போவதில்லை. :-)

5) இத்தனை கடவுள்களை பற்றி எழுதுகிறீர்களே..இதில் உங்கள் ஃபேவரைட் யார்? ஏன்? (ஒருத்தர் பேரை தான் சொல்லவேண்டும்)

கடவுள்களா? நானா? எழுதவில்லையே. ஒரே கடவுளைப் பற்றித் தானே எழுதுகிறேன்?! ஒருத்தர் பெயரை மட்டுமே சொல்லணும்ன்னு சொன்னதால அந்த ஒருத்தரின் பெயர்களைச் சொல்றேன். சொல்லி முடியாது அந்த பெயர்கள். ஆயிரக்கணக்கில உண்டு. நானோ கணக்கில் சிறுவயசுல (அதாவது கல்லூரியில் படிக்கும் வரை) பலமா இருந்தேன். இப்போதோ கணக்குடன் எனக்குப் பிணக்கு. முடிஞ்சவரைக்கும் சொல்றேன்.

கண்ணன், கேசவன், மாதவன், கோவிந்தன், சிவன், சந்திரமௌலி, ஏழைப்பங்காளன், பசுபதி, முருகன், கந்தன், வள்ளி மணாளன், தேவசேனாபதி, பிள்ளையார், கணபதி, சித்திவிநாயகன், ஐங்கரன், கொற்றவை, குமரி, சிவசங்கரி, கருணாகரி,..... இப்படி நிறைய பெயர்கள் அந்த ஒருத்தருக்கு உண்டு. என்னால் சொல்லி முடியாது.

உருவளர் பவளமேனியும் ஒளி திருநீறும்.....


உருவளர் பவளமேனி ஒளி நீறணிந்து
உமையொடும் வெள்ளை விடை மேல்
முருகலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி
திசை தெய்வமான பலவும்
அருநெதி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.

உருவளர் பவளமேனி ஒளி நீறணிந்து - அழகில் சிறந்த சிவந்த மேனியின் மேல் ஒளிவீசும் திருநீற்றினை அணிந்து கொண்டு

உமையொடும் வெள்ளை விடை மேல் - உமையன்னையுடன் வெள்ளை எருதின் மேல் ஏறி

முருகலர் கொன்றை - தேன் நிறைந்து மலர்ந்த அழகிய கொன்றைப் பூவினையும்

திங்கள் - நிலவையும்

முடிமேல் அணிந்து - திருமுடியின் மேல் சூடி

என் உளமே புகுந்த அதனால் - என் உள்ளத்தில் புகுந்து வீற்றிருப்பதால்

திருமகள் - செல்வத்திற்கு அதிபதியான திருமகள்

கலையதூர்தி - கலையாகிய வித்தைகளை வாகனமாகக் கொண்ட கலைமகள்

செயமாது - வெற்றிக்கு அதிபதியான மலைமகள்

பூமி - நிலமகள்

திசை தெய்வமான பலவும் - எல்லா திசைகளிலும் இருந்து மக்களைக் காக்கும் தெய்வங்கள் எல்லாம்

அருநெதி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே - அடியவர்களுக்கு மிக நல்லவை. மிக மிக நல்லவை. நன்மையை அன்றி மற்றவற்றைத் தாரா.

***

உருவளர் பவள மேனி ஒளி நீறனிந்து:

கரிய மேகங்களைப் பார்க்கும் தோறும் எப்படி மேகவண்ணனின் கரிய நிறம் மனதில் தோன்றி மயக்குகிறதோ அது போல் மேலே வெளிர்ந்த சாம்பல் பூசி எரிந்து அடங்கி நிற்கும் தீக்கங்கினைக் காணும் தோறும் மனதில் தோன்றுவது சிவபெருமானின் தோற்றமே. தீக்கங்கினைப் போன்ற சிவந்த, பவளம் போன்ற மேனியைக் கொண்டவன் சிவன் (சிவந்தவன், செம்மையானவன்). அந்த செந்நிற மேனி முழுவதும் மறையும் படி வெண்ணிற நீறணிந்து தோன்றும் தோற்றம் தீக்கங்கினை சாம்பல் சூழ்ந்தது போன்ற தோற்றம். காக்கைச் சிறகினிலே கண்ணனைக் கண்டது போல் இந்த சாம்பல் சூழ்ந்த கங்கினைக் காணும் தோறும் நினைவில் வருபவன் 'ஆத்தி சூடி இளம் பிறை அணிந்து மோனத்திருக்கும் முழுவெண் மேனியான்'.

ஒரு முறை வாரியார் சுவாமிகள் சொன்னது நினைவிற்கு வருகிறது. தென்னாட்டார் சிவனைச் சிவந்தவன் என்ன, வடநாட்டார் அவனை வெண்ணிறம் கொண்டவன் என்கிறார்களே என்ற கேள்விக்கு அவர் சொன்னது: நாம் அவனின் உண்மையான தோற்றத்தைக் கண்டோம். அதனால் அவன் சிவந்த நிறம் கொண்டவன். சிவன் என்றோம். வடவர்கள் அவன் உடலெங்கும் திருநீறு பூசி நிற்கும் கோலத்தைக் கண்டார்கள். அதனால் அவன் பனியைப் போன்ற நிறமுடையவன் என்றார்கள்.

பாரதியாரும் முழுவெண்மேனியான் என்கிறார் பாருங்கள்.

முருகுலர் கொன்றை:

முருகு என்றால் அழகு என்று பொருள். நிறைய பேருக்கு அது தெரியும். முருகன் என்றால் அழகன்.

ஆனால் முருகு என்றால் தேன் என்றும் ஒரு பொருள் இருக்கிறது. அதனால் தான் இதற்கு தேன் நிரம்பி அலர்ந்த அழகிய கொன்றை என்று பொருள் சொன்னேன்.

திருமகள் கலையதூர்தி செயமாது பூமி:

இதில் கலையதூர்தி செயமாது என்பதற்கு முன்னோர்கள் கலையென்னும் மானை வாகனமாகக் கொண்ட துர்க்கையும், வெற்றிக்கு அரசியான செயமாதுவும் என்று பொருள் சொல்லியிருக்கிறார்கள்.

பின்னால் வந்தவர்கள் சிலர் வெற்றிக்கு அரசியான (செயமாதுவான) மான் வாகனம் கொண்ட துர்க்கை என்று இருவரும் ஒருவரே என்று பொருள் கொண்டிருக்கிறார்கள்.

கலையதூர்தி என்னும் போது மானை ஊர்தியாகக் கொண்டவள் என்ற பொருளிலேயே சம்பந்தர் பாடியிருக்கலாம். ஆனால் இங்கு திருமகளையும் சொல்லி, மலைமகளையும் சொல்லிவிட்டு, கலைமகளை விட மனம் வரவில்லை. அதனால் கலை என்பதை வித்தை என்ற பொருள் கொண்டு கலையதூர்தி என்பதனை கலைமகள் என்று பொருள் கொண்டேன்.

திசை தெய்வமான பலவும்:

முதலில் இதற்குத் தோன்றிய பொருள் 'எட்டுத் திசைகளிலும் இருந்து நம்மைக் காக்கும் எண்திசைக்காவலர்கள்' என்பதே. வடமொழியில் அவர்களை 'அஷ்டதிக் பாலகர்கள்' என்பார்கள். அவர்கள் கிழக்கு - இந்திரன், தென்கிழக்கு - அக்கினி, தெற்கு - யமன், தென்மேற்கு - நிர்ருதி, மேற்கு - வருணன், வடமேற்கு - வாயு, வடக்கு - குபேரன், வடகிழக்கு - ஈசானனாகிய சிவன்.

இந்த சொற்றொடர் இந்த எண்திசைக் கடவுளர்களை மட்டும் குறிக்காமல் மேலும் எல்லாத் திசைகளிலும் இருந்து நம்மைக் காக்கும் தெய்வங்களையும் குறிக்கும் என்று பின்னர் தோன்றியது.

இப்போது இன்னொரு பொருளும் தோன்றுகிறது. வேற்று மொழியில் இருந்து தமிழுக்கு வந்த சொற்களைத் திசைச் சொற்கள் என்பார்கள். அது போல் தொடக்கத்தில் நம் வழிபாட்டு முறையில் இல்லாமல் பின்னர் நம் வழிபாட்டு முறையில் சேர்ந்த, சேர்ந்து கொண்டிருக்கும் தெய்வங்களைத் திசைத் தெய்வங்கள் எனலாம் என்று தோன்றுகிறது.

Thursday, June 12, 2008

கேள்விகள் வரவேற்கப்படுகின்றன!!!


இதை யாரு தொடங்கினாங்கன்னு தெரியலை. சிறில் பதிவுல தான் முதல்ல பார்த்தேன். சரி நானும் முயற்சி செய்யலாமே என்று முயல்கிறேன். எவ்வளவு நாள் தான் மறுபதிவாகவே போட்டுக் கொண்டிருப்பது?

உங்களுக்கு அடியேனிடம்/என்னிடம் (யாருக்கு எது பிடிக்குதோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்) ஏதாவது கேள்விகள் கேட்கும் எண்ணம் இருந்தால் அவற்றை பின்னூட்டத்திலோ மின்னஞ்சலிலோ தாருங்கள். முடிந்த வரை சுவையாகப் பதில் சொல்கிறேன். (எல்லாம் ஒரு முயற்சி தான். சுவையாக எழுதுறது தான் நமக்குச் சுட்டுப் போட்டாலும் வராதுல்ல).

எத்தனை பேர் கவனித்தீர்களோ தெரியவில்லை. என் பெயரில் இருக்கும் பதிவுகள் குறைந்து கொண்டு வருகின்றன. 'படித்ததில் பிடித்தது', 'கேட்டதில் பிடித்தது', 'சொல் ஒரு சொல்', 'சின்ன சின்ன கதைகள்', 'விவேக சிந்தாமணி' போன்ற பதிவுகளில் இருந்த இடுகைகளை எல்லாம் கூடலுக்கு மாற்றிவிட்டு அவற்றை எல்லாம் அழித்துவிட்டேன். இன்னும் சில பதிவுகளும் இங்கே வந்துவிடும். 'எத்தனை இடத்துக்குத் தான் போவது? ஒரே இடத்தில் எழுது' என்று என்னை விரட்டும் நண்பர்கள் மகிழ்வார்கள் என்று நினைக்கிறேன். :-)

எம்பொடு கொம்பொடாமை இவை மார்பிலங்க...


என்பொடு கொம்பொ(டு) ஆமை இவை மார்பிலங்க
எருதேறி ஏழையுடனே
பொன்பொதி மத்தமாலை புனல் சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஒன்பதொடு ஒன்றொடு ஏழு பதினெட்டொடு ஆறும்
உடனாய நாள்களவை தாம்
அன்பொடு நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியாரவர்க்கு மிகவே!

என்பொடு கொம்பொடு ஆமை இவை மார்பிலங்க - எலும்பு, கொம்பு, ஆமை ஓடு இவை போன்றவை மார்பில் இலங்கி நிற்க

எருதேறி ஏழையுடனே - அறவுருவாகிய எருதின் மேல் ஏறி அன்னையுடன்

பொன்பொதி மத்தமாலை புனல் சூடி வந்து - பொன்னால் ஆகிய குளிர்ச்சி பொருந்திய மாலையையும் புனலாகிய கங்கையையும் தலையில் சூடி வந்து

என் உளமே புகுந்த அதனால் - என் உள்ளமே புகுந்த அதனால்

ஒன்பதொடு - கிருத்திகையை முதல் விண்மீனாய்க் கொண்டால் ஒன்பதாவது விண்மீனாய் வரும் பூரமும்

ஒன்றொடு - முதல் விண்மீனான கிருத்திகையும்

ஏழு - ஏழாவது விண்மீனான ஆயிலியமும்

பதினெட்டொடு - பதினெட்டாவது விண்மீனான பூராடமும்

ஆறும் - அதிலிருந்து ஆறாவது விண்மீனான பூரட்டாதியும்

உடனாய நாள்களவை தாம் - இவை போல் உள்ள பயணத்திற்கு ஆகாத நாட்கள் எல்லாமும்

அன்பொடு நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே - ஈசனின் அடியார்களுக்கு அன்பொடு அவை நல்லவையாக இருக்கும்; மிக நல்லவையாக இருக்கும்.

***

முதல் பாடலில் நவகோள்கள் அடியார்களுக்கு மிக நல்லவை என்று சொன்னார். இந்தப் பாடலில் பயணத்திற்கு ஆகாத விண்மீன்கள் (நட்சத்திரங்கள்) என்று தள்ளப்பட்ட நாட்களும் அடியார்களுக்கு மிக நல்லவை என்று சொல்கிறார்.

சிவபெருமான் எலும்பு மாலை, கொம்பு, ஆமை ஓடு போன்றவை அணிந்திருக்கும் காரணத்தை மற்றோரிடத்தில் காணலாம்.

ஏழையென்றது பெண் என்னும் பொருளில். இங்கு அது உமையன்னையைக் குறித்தது. ஏழைப்பங்காளன் என்று வள்ளல் தன்மையை உடையவரைக் குறிப்பது இன்று வழக்கில் உள்ளது. அது 'ஏழைப்பங்காளன்' என்னும் சொற்றொடரின் பொருள் உணராததால் வந்த வினை. ஏழைப்பங்காளன் என்று குறிப்பிடப் படும் முழுத் தகுதியும் சிவபெருமானுக்கே உண்டு. மற்றோருக்கு இல்லை. ஏழையை (பெண்ணை) தன் உடலில் ஒரு பங்காக உடையவன் என்று இதற்குப் பொருள். அப்படி மனைவிக்கு தன் உடலில் பாதியைத் தந்தவர் அண்ணலையன்றி வேறு யார்?

சோதிட நூல்களில் 27 விண்மீன்கள் சொல்லப் பட்டிருக்கின்றன. வார நாட்கள் ஏழும் கோள்களின் பெயர்களில் அமைந்தது போல ஒவ்வொரு மாதமும் இந்த 27 விண்மீன்களின் சுழற்சியில் வருமாறு அமைத்திருக்கின்றனர் நம் முன்னோர். நல்ல செயல் செய்யவோ எங்காவது பயணம் கிளம்பும் போதோ வார நாளைப் பார்த்தபின் அந்த நாளில் அமைந்த விண்மீனையும் பார்த்திருக்கிறார்கள். அந்த 27 விண்மீன்களில் 12 விண்மீன்களை பயணம் தொடங்க தகுதியில்லாத நாட்களாகத் தள்ளி வைத்துள்ளனர் - பூரம், பூரட்டாதி, பூராடம், மகம், கேட்டை, பரணி, கிருத்திகை, சுவாதி, ஆயிலியம், விசாகம், ஆதிரை, சித்திரை என்பவையே அவை. அவற்றில் சிலவற்றை இந்தப் பாடலில் சம்பந்தர் குறித்து அவையெல்லாமும் கூட அடியார்க்கு மிக நல்லவையே என்கிறார்.

சோதிட நூல்களில் அசுவினியில் தொடங்கி விண்மீன்களைச் சொன்னாலும் கிருத்திகையை முதல் விண்மீனாய் சொல்லும் மரபும் இருந்திருக்கிறது. மேஷம் முதல் ராசியானதால் அது அசுவினியில் தொடங்குவதால் அசுவினியை முதலாகக் கூறும் வழக்கமும் வந்தது. ஆனால் சம்பந்தரோ இங்கு கிருத்திகையை முதலாகக் கூறும் மரபைப் பாராட்டி அந்த விண்மீன்களை எண்களாகச் சொல்லியிருக்கிறார்.

Wednesday, June 11, 2008

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா!



உலகில் நான்குவிதமான பக்தர்கள் இருப்பதாக கண்ணன் கீதையில் சொல்லியிருக்கிறார் - ஆர்த்தி, அர்த்தார்த்தி, ஜிக்ஞாஸு, ஞானி என்று அவர்களைப் பற்றி சொல்வார். ஆர்த்தி என்பவர்கள் தங்கள் குறைகளைக் கூறி துன்பங்களில் இருந்து விடுபடவேண்டும் என்று வணங்குபவர்கள். அர்த்தார்த்தி என்பவர்கள் பொருளை விரும்பி வேண்டி வணங்குபவர்கள். ஜிக்ஞாஸு என்பவர்கள் உண்மை நிலையை உணர்ந்து உலகப் பந்தங்களில் இருந்து விடுதலை பெற வேண்டி வணங்குபவர்கள். ஞானி என்பவர்கள் உண்மை நிலையை உணர்ந்து உலகப் பந்தங்களில் இருந்து விடுபட்டு உண்மை நிலையில் உருவமான இறைவனை வணங்குபவர்கள். தற்போது நம் கண்களுக்குத் தெரியும் பக்தர்களில் முதலில் சொல்லியிருக்கும் இரண்டுவிதமான பக்தர்களையே அதிகம் காண்கிறோம் இல்லையா? அப்படி இருக்கும் போது 'குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா' என்ற பாடலைக் கேட்கும் போது வித்தியாசமாக இல்லை?

மூதறிஞர் இராஜாஜி எழுதி இசையரசி எம்.எஸ். சுப்புலக்ஷ்மி அவர்கள் பாடிய இந்தப் பாடலைக் கேட்டுப் பாருங்கள். இந்தப் பாடலைப் பற்றி ஏற்கனவே ஒரு பதிவு இட்டிருக்கிறேன். அதனையும் பாருங்கள். மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல். என் தம்பியும் நானும் என் திருமணத்திற்கு முன்பு அடிக்கடி இந்தப் பாடலைச் சேர்ந்து இசைத்திருக்கிறோம். இப்போதும் என் தம்பியிடம் இந்தப் பாடலைப் பாடச் சொல்லிக் கேட்டு ரசிப்பவர்கள் இருக்கிறார்கள்.

அதிருஷ்டம் = நல்லூழ்?

நண்பர் 1: 'நீங்க நல்ல அதிர்ஷ்டக்காரருங்க. பல இலக்கியங்கள் படிக்க வாய்ப்பு கிடைச்சிருக்கே'.

நண்பர் 2: 'நீங்களும் என்ன குறைவு? உங்களுக்குத் தெரிஞ்ச அளவு எனக்கு இலக்கியங்கள் தெரியாதே'

'ஹ. எப்பவும் இப்படியே சொல்லிக்கிட்டு இருங்க.

உங்களை ஒன்று கேட்கணும்ன்னு நினைச்சேன். அதிர்ஷ்டத்தை எப்படி தமிழ்ல சொல்றது?'

'நான் வழக்கமா நல்வினைப்பயன்னு எழுதுறேன்'

'நல்வினைப்பயனா? ஓரளவு பொருந்தி வருது. ஆனால் அதுவும் முழுக்கப் பொருந்துற மாதிரி தோணலையே'

'நாம் செய்த நல்லது, தீயது இவற்றின் படி தானே பயன்களும் ஏற்படுகின்றன. அதிருஷ்டம் என்பது நாம் செய்த நல்வினைகளின் பயன் தானே. அப்ப நல்வினைப்பயன் என்று சொன்னால் தவறில்லையே'

'இல்லை நண்பரே. இதனைவிட நல்ல சொல் இருக்கும். தேடிப்பார்க்க வேண்டும்'

***

சில நாட்கள் கழித்து...

'நண்பரே. அன்று அதிர்ஷ்டத்தைப் பற்றி கேட்டீர்களே. நல்லூழ் என்ற சொல் பொருந்துமா?'

'நல்லூழ்... ம்ம்ம். கொஞ்சம் நெருங்கி வருகிறது. ஆனால் ஊழ் என்றால் என்ன என்று தெரியுமா?'

'ஊழ் என்றால் ஊழ்வினை தானே'

'அப்படி நினைப்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் ஊழ் என்றால் நியதி என்றும் 'முன்பே கட்டப்பட்ட ஒரு ஒழுங்கு' என்றும் பொருள் உண்டு'

'ஆமாம் ஆமாம். மரத்தடியிலும் வளவிலும் படித்திருக்கிறேன்'

'அப்படி பார்க்கும் போது நல்வினைப்பயன் என்று அதிர்ஷ்டத்தைச் சொல்வதா நல்லூழ் என்று சொல்வதா என்பது கேள்வியே'

'ம்ம்ம். நான் வளவுல போய் கேட்டுப் பாக்குறேன். அவரும் நம்ம வீட்டுக்கு அடிக்கடி வர்றாராம். அதனால் நான் கேக்காமலேயே அவர் நாம பேசறத வச்சே தெளிவா சொல்லிடுவாரு. நம்ம வள்ளுவரும் ஊழ் பத்தி ஒரு அதிகாரமே சொல்லியிருக்காராமே. நீங்களும் உங்க நண்பர்கிட்ட கேட்டு அந்த அதிகாரத்தைப் பத்தி எழுதுங்களேன். அப்படியே கபாலியை நான் கேட்டதாவும் சொல்லிடுங்க'

Tuesday, June 10, 2008

ஜிரா கோரா இராகவன் வழங்கும் 'செரு'

கவுண்டமணி அன்று பள்ளிக்கூடத்திற்கு ஆய்வாளராக வந்திருக்கிறார். தலைமை ஆசிரியர் உசிலைமணி அவரை வரவேற்று ஒவ்வொரு வகுப்பாக அழைத்துச் செல்கையில் செந்தில் தமிழ்ப்பாடம் எடுக்கும் வகுப்பிற்குள் நுழைகிறார்கள்.

"ஆய்வாளர் ஐயா! இவர்தான் தமிழாசிரியர் கொண்டல்நாதர். இவர் தமிழ்ப் பாடம் எடுத்தார்னா நூத்துக்கு நூறுதான். இதுவரைக்கும் ஒருத்தர் கூட பெயில் ஆனதில்லை. ஹிஹ்ஹிஹ்ஹி"

கவுண்டர் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார். "ஓ! தமிழ் ஆசிரியர்! (செந்திலோடு கை குலுக்குகிறார்.) கொண்டல்! பேரே நல்ல தமிழ்ப் பேர். ஒங்களப் பத்தி தலைமை ஆசிரியர் ரொம்ப நல்லபடி சொல்லீருக்காரு. அதுனால......ஒங்கள நான் பாராட்டுறேன்."

செந்தில் முகமெல்லாம் புன்னகையுடன். "நன்றி ஐயா! நான் உ.வே.சா கிட்ட தமிழ் படிச்சவன். அதுனாலதான் இப்பிடி. என்னோட பெருமைய நானே சொல்லக் கூடாது. இருந்தாலும்....."

கவுண்டர் இன்னும் வியக்கிறார். "உ.வே.சா? You mean தமிழ்த் தாத்தா? நீங்க ரொம்பப் பெரியவர். சரி.இன்னைக்கு என்ன பாடம்? எதுவும் கேள்வி கேக்கலாமா?"

"நீங்க கேளுங்க ஐயா. பசங்க நல்லா பதில் சொல்வாங்க. இன்னைக்குக் காளமேகப் பாடல்தான் பாடம்." பெருமையோடு சொல்கிறார்.

"ஓ! காளமேகம்!" கவுண்டமணி ஒரு மாணவரை எழுப்பி, "தம்பி! இன்னைக்குச் சொல்லிக் கொடுத்த பாட்டு ஒனக்குத் தெரியுமா? எங்க ஒரு வரி சொல்லு."

"செருப்புக்கு வீரரைச் சென்றுழக்கும் வேலன்-னு தொடங்குற பாடல் ஐயா."

"செருப்பு? என்ன செய்யுள் இது?" செந்திலை நோக்கி. "ஐயா, தமிழ்க் கடலே. இந்த வரி சரிதானா? என்ன பொருள்னு சொல்லுங்களேன். பையன் எதோ செருப்பு பருப்புன்னு சொல்றானே?"

செந்தில் மிகப் பெருமையுடன். "சொல்றேன் ஐயா. சொல்றேன். செருப்புக்கு வீரரைன்னா கல்யாண வீட்டுல செருப்பு திருடுற வீரன் ஒழக்கு மாதிரி இருந்தாலும்னு பொருள்."

வியப்படைகிறார் கவுண்டர். "என்ன கொடுமை சரவணன் இது? காளமேகப் புலவர் காலத்துலயே கல்யாண வீட்டுல செருப்பு திருடீருக்காங்களா? சேச்சே! நம்ப முடியலையே. நீங்க உ.வே.சா கிட்டயெல்லாம் படிச்சிருக்கீங்க. சரியாத்தான் சொல்வீங்க.." தலையை ஆட்டி அலுத்துக் கொள்கிறார்.

"இல்லை ஐயா. அந்தப் பாட்டுக்குப் பொருள் வேற." பாடலைச் சொன்ன மாணவன் படக்கென்று சொல்கிறான்.

கவுண்டமணி பொங்கி எழுகிறார். "என்னது பொருள் வேறயா? இவர யாருன்னு நெனச்ச? தமிழ்ப் பெரியதாத்தா மீனாட்சி சுந்தரம் பிள்ளை கிட்ட பாடம் படிச்ச தமிழ்த்தாத்தா உ.வே.சா கிட்ட பாடம் படிச்சவரு. பாரதியார் பாரதிதானோட விவாதம் செஞ்சு தமிழ் இலக்கணத்துக்கெல்லாம் சிக்கெடுத்தவரு. ஆத்திச்சூடி எழுதும் போது...கால நீட்டி உக்கார்ரதால ஔவையாருக்கு விழுந்த சுளுக்கத் தமிழ்ப் பாட்டுப் பாடியே சரி செஞ்சவரு. நீ எட்டாப்பு படிக்கிற சின்னப் பையன். ஒனக்கென்ன தெரியும். எங்க? தெரிஞ்சதச் சொல்லு பாக்கலாம்?"

"அதாவதுங்க..செருன்னா போர்க்களம். செருப்புக்கு அப்படீன்னா செருவுக்குள்ள புகுகின்றன்னு பொருள். செருப்புக்கு வீரரைன்னு சொன்னா போர்க்களத்துக்குள்ள புகுகின்ற வீரன்னு பொருள். அப்படிப்பட்ட வீரனைச் சென்று உழக்கும் வேலன். அதாவது முருகப் பெருமானோட போருக்குப் போகிற வீரர்களை வெல்லும் முருகன் அப்படீன்னு பொருள். அதுவுமில்லாம முழுப்பாட்டையும் சொல்றேன் கேளுங்க.

செருப்புக்கு வீரரைச் சென்றுழக்கும் வேலன்
பொருப்புக்கு நாயகனைப் புல்ல
மருப்புக்குத் தண்டேன் பொழிந்த
திருத்தாமரை மேல் வீற்றிருக்கும் வண்டே விளக்குமாறே

காளமேகத்திடம் செருப்பு என்று தொடங்கி விளக்குமாறு என்று முடிக்குமாறு முருகனைப் பற்றிப் பாடச் சொன்ன பொழுது பாடிய பாடல்."

யோசிக்கிறார் கவுண்டமணி. "சரி. ஆனா விளக்குமாறுன்னு வருதே? அதுக்கு என்ன பொருள்?"

"அதாவது திருத்தாமரை மேல் வீற்றிருக்கும் வண்டை விளக்குமாறு கேட்கிறார்."

"வண்டு கிட்ட விளக்குமாறு ஏன் கேக்குறாரு? கடைல கிடைல வாங்குறது."

"விளக்குமாறுன்னா விளக்கிச் சொல்லுமாறு கேட்பது. இதுதாங்க இந்தப் பாட்டுக்கு உண்மையான பொருள்"

செந்தில் சிரித்துக்கொண்டே, "பாத்தீங்களா ஐயா. பையன் எப்படி பதில் சொன்னான்னு. அவன் வாயால வரனும்னுதான் நான் வேணுக்குன்னே தப்பாச் சொன்னேன். ஹி ஹி ஹி."

கவுண்டமணிக்குப் புரிந்து போகிறது. கிண்டலோடு "ஓ அப்படீங்களா ஐயா? நீங்க சொன்னா சரிதாங்க ஐயா. நீங்க எப்பேர்ப்பட்டவர். நல்லவர். வல்லவர். தமிழ் மொழியையே செம்புத் தண்ணீல கல்ல்ல்லக்கிக் குடிச்சவர். இப்பப் பாருங்க. இந்தப் பையன நான் எப்படி மாட்டுறேன்னு." அந்த மாணவனைப் பார்த்து, "தம்பி. இந்தப் பாட்டுக்கு நல்லா விளக்கம் சொல்லீட்ட. அது சரீன்னு ஒங்க தமிழ் ஆசிரியரே ஒத்துக்கிட்டாரு. அதுவுமில்லாம இவரு பாடம் எடுத்தா வகுப்புல (ஒவ்வொரு மாணவனாகக் காட்டி) நீதான் பாரதியாரு. அவந்தான் பாரதிதாசன். இந்தப் பையந்தான் இளங்கோவடிகள். அந்தப் பொண்ணுதான் கோதை ஆண்டாள். இந்தப் பொண்ணுதான் சௌந்தரா கைலாசம். ஆகையால இன்னொரு கேள்வி. செருன்னா போர்க்களம்னு சொன்ன. சரி. இந்தச் செரு வர்ர வேறொரு செய்யுள் சொல்லு பாக்கலாம்."

"சொல்றேன் ஐயா. முருகனைப் பத்திச் சொல்லும் போது செருவில் ஒருவன்னு நக்கீரர் சொல்லீருக்காரு ஐயா."

"ஓ! நக்கீரர். அதாவது திருவிளையாடல் படத்துல நடிகர் திலகம் கூட நெற்றிக் கண்ணைத் திறந்தாலும் குற்றமேன்னு சண்டை போட்டவரு." செந்திலை நோக்கி, "தமிழ் ஐயா, இந்த வரியைப் பத்தி நீங்க என்ன சொல்றீங்க?"

செந்தில் லேசாகக் கனைத்துக் கொண்டு, "ஐயா, இந்தப் பாட்டில் பிழை இருக்கிறது."

கவுண்டர் வியப்பது போல நடித்து ஒரு கையைத் தூக்கிக் கொண்டு சொல்கிறார். "ஓ! பரமசிவம் பாட்டுல பிழை இருக்குன்னு சொன்ன நக்கீரர் பாட்டுலயே நீங்க பிழை கண்டு பிடிச்சிருக்கீங்க. நீங்க ரொம்பப் பெரியவராத்தான் இருக்கனும். உ.வே.சா கிட்ட படிச்சிருக்கீங்களே. அப்ப ஒங்களுக்கு கி.வா.ஜா, வாரியார் எல்லாரையும்...."

"ஓ! நல்லாத் தெரியுமே? வாரியாருக்கு வெண்பா எழுதக் கத்துக்குடுத்ததே நாந்தான். கி.வா.ஜாவுக்குச் சிலேடையா பேசச் சொல்லிக் குடுத்ததே நாந்தான். அது மட்டுமில்ல.....கவிமணி, தமிழ்த்தாய் வாழ்த்து எழுதுன மனோண்மணீயம் சுந்தரம் பிள்ளை, உவமைக் கவிஞர் சுரதா....ஏன் இப்ப இருக்குற அப்துல்ரகுமான் வரைக்கும் என் கிட்ட படிச்சவங்கதான். இன்னொன்னு சொல்றேன். மெல்லிசை மன்னர் கிட்டப் பேசி தமிழ்த் தாய் வாழ்த்துப் பாட டி.எம்.சௌந்தரராஜனுக்கும் பி.சுசீலாவுக்கும் வாய்ப்பு வாங்கிக் குடுத்ததே நாந்தான்."

செந்திலின் தோளில் கை வைக்கிறார் கவுண்டமணி. "ஆமாமா! நீங்க கத்துக்குடுத்துதான் அவங்க ரொம்ப முன்னேறிட்டாங்க. ஆனா பாருங்க. நீங்க மட்டும் ஆசிரியராவே இன்னமும் இருக்கீங்க. சரி...அதென்னவோ பிழைன்னு சொன்னீங்களே. அது என்ன?"

"செருவில் ஒருவ அப்படீன்னு பையன் சொன்னான். அது தப்பு. செருகு வில் உருவன்னு வந்திருக்கனும். நக்கீரர் ஓலைல எழுதும் போது தப்பா எழுதீட்டாரு."

"ஓ! நக்கீரர் கோழி கிறுக்குறாப்புல கிறுக்கி தப்பா எழுதீட்டாருன்னு சொல்றீங்க. சரி. இருக்கட்டும்." மாணவனை நோக்கி, "தம்பி,இந்த வரிக்கு நீ விளக்கம் சொல்லு."

"செருவில் ஒருவ அப்படீன்னா போர்க்களத்தில் தனியாக நிற்பவன்னு பொருள். அதாவது இறைவனை எதிர்த்து யாரும் போரிட முடியாதுங்குறதுதான் உட்பொருள். தமிழ் ஐயா சொல்றது போல செருகிய வில் உருவறது கிடையாது."

செந்திலின் கழுத்தில் இருக்கும் துண்டைப் பிடித்து இழுக்கிறார். "ஐயா. தமிழ் ஆசிரியரே. உ.வே.சா இருந்தது எப்ப? நீங்க பொறந்தது எப்ப? எங்கிட்டயே காது குத்துறீங்களே. செருன்னு ஒரு சொல். அதுக்குப் பொருள் தெரியலை. ஒங்களப் பத்தித் தலைமை ஆசிரியர் ரொம்ம்ம்ம்பப் புகழ்றாரு. அதெப்படி ஒங்க வகுப்புல மட்டும் எல்லாரும் நல்ல மதிப்பெண் வாங்குறாங்க?"

மாணவன் குட்டை உடைக்கிறான். "ஐயா. இவரு எப்பவும் ஒழுங்காவே பாடம் சொல்லித்தர மாட்டாரு. பாதி நேரம் வகுப்புல தூக்கம்தான். இன்னைக்கு நீங்க இருக்கிறதால தூங்காம இருக்காரு. இவரு சொல்லித்தர மாட்டாருன்னு தெரிஞ்சதால நாங்களே படிச்சிக்கிறோம். அதனாலதான் எல்லாருக்கும் நல்ல மதிப்பெண் கிடைக்குது."

"அப்படிச் சொல்லுடா தம்பி." செந்திலைப் பார்த்து, "இனிமே இந்த வகுப்புல நீதான் மாணவன். (மேசையைக் காட்டி) இனிமே இங்க நிக்கக் கூடாது. (மாணவர்கள் அமர்ந்திருக்கும் இடத்தைக் காட்டி) அங்கதான் உக்காரனும். புரிஞ்சதா?"

போலியான பணிவோடு, "புரிஞ்சது ஐயா."

"ரொம்ப நல்லது. எங்க செருன்னா என்னன்னு சொல்லு பாக்கலாம்."

"செருன்னா போர்க்களம் ஐயா."

கிண்டல் சிரிப்போடு. "இது..இது...இது நல்ல பிள்ளைக்கு அடையாளம். இப்பிடிப் பொருள் சொல்றத விட்டுட்டு செருப்புக்கு அலையக் கூடாது.புரிஞ்சதா?"

"புரிஞ்சது ஐயா."

"நல்லது." மாணவர்களை நோக்கி, "எங்க ஒவ்வொருத்தரும் வேறெந்த நூல்ல செருவைப் பத்திப் படிச்சிருக்கீங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம்."

அன்புடன்,
கோ.இராகவன்

Monday, June 09, 2008

தீண்டாய் மெய் தீண்டாய்...

கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
நல் ஆன் தீம் பால் நிலத்து உக்காங்கு
எனக்கும் ஆகாது என் ஐக்கும் உதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குல் என் மாமைக் கவினே

(கன்றும் உண்ண முடியாது கலத்திலும் தங்கியிருக்காது
நல்ல தீம்பாலானது நிலத்தில் வீழ்ந்தது போல
எனக்கும் பயனில்லாது என் தலைவனுக்கும் உதவாது
பசலை நோய் தீர்ந்திடுமோ
என்னுடைய தொட்டால் ஒட்டிக் கொள்ளும் கவின் மிகு அழகே!)

தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய்
ஒரு விரல் வந்து என்னைத் தீண்டியதே
என் நரம்போடு வீணை மீட்டியதே
மனம் அவன்தானா இவன் என்று திடுக்கிட்டதே

தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய்
ஒரு விரல் வந்து உன்னைத் தீண்டியதோ
உன் நரம்போடு வீணை மீட்டியதோ
உன் உயிர்க்குள்ளே காதல் அம்பைத் தொடுத்திட்டதோ



விழியோடும் தீண்டல் உண்டு விரலோடும் தீண்டல் உண்டு
இரண்டோடும் பேதம் உள்ளது
விழித்தீண்டல் உயிர் கிள்ளும் விரல் தீண்டல் உள்ளம் கிள்ளும்
அதுதானே நீ சொல்வது

நதியோரப் பூவின்மேலே ஜதிபாடும் சாரல் போலே
என்னில் இன்பதுன்பம் செய்குவதோ
ஒரு கன்னம் தந்தேன் முன்னே மறு கன்னம் தந்தாய் பெண்ணே
யேசுநாதர் காற்று வந்து வீசியதோ

உறவின் உயிரே உயிரே என்னைப்பெண்ணாய்ச் செய்க
அழகே அழகே உன் ஆசை வெல்க

(தீண்டாய்)

கடலோடு முத்தம் தந்தும் கலையாத வானம் போல
உடலோடு ஒட்டிக்கொள்ளவோ
உடலோடு அங்கும் இங்கும் உறைகின்ற ஜீவன் போல
உன்னோடு கட்டிக்கொள்ளவோ

உனைத் தேடி மண்ணில் வந்தேன் எனைத்தேடி நீயும் வந்தாய்
உன்னை நானும் என்னை நீயும் கண்டுகொண்டோம்

பல பேர்கள் காதல் செய்து பழங்காதல் தீரும்போது
பூமி வாழப் புதிய காதல் கொண்டுவந்தோம்

பனியோ பனியின் துளியோ உன் இதழ்மேல் என்ன
பனியோ தேனோ நீ சுவைத்தால் என்ன

(தீண்டாய்)

உதயம், மதியம், அஸ்தமம், ராத்திரி

பொழுதுகளை குறிப்பிட்டுச் சொல்ல இன்னும் பேச்சு வழக்கிலும், எழுத்து நடையிலும் வேற்று மொழிச் சொற்களைப் பயன்படுத்தி வருகிறோம். குறிப்பாக ஆங்கிலத்தில் 'குட்மார்னிங் சார்', 'குட் ஈவினிங் சார்' என படித்த தமிழர்களிடையே (மத்தியில்) வணங்க (WISH) பயன்படுத்தும் சொற்கள் மிகுந்து வழக்கில் இருக்கிறது .

புலம்பெயரும் போது தமிழர் மட்டுமல்ல பிற இந்திய மொழிக்காரர்களும் தத்தம் அடையாளத்தை கட்டிக் காக்கவும் சிலர் அதைவிட முதன்மையாக நாம் பேசுவது வெளிநாட்டுக்காரர்களுக்கு புரியக் கூடாது என்ற சூழ்நிலையில் அவரவர் மொழிகளை தூய்மையாகப் (சுத்தம்) பேச ஆரம்பிக்கின்றனர். இதுதான் புலம்பெயர்ந்த தமிழர்கள் முடிந்த அளவில் செந்தமிழில் பேசுவதற்கு காரணம். வெளிநாட்டில் தமிழருக்கிடையே அழைக்கும் போது அங்கு வாழும் தமிழர்கள் இயல்பாகவே 'வணக்கம்' , 'காலை வணக்கம்' என்று புழக்கத்திற்கு வந்து ஹலோவுக்கு விடை செல்லிவிட்டார்கள்

இத்தகைய பயிற்சி தமிழகத்து தமிழர்களுக்கு குறைவாக இருப்பதாலும் பலுக்குவதில் அதிக ஈடுபாடு, அக்கறை காட்டாததால் திரித்தும், தமிழகம் வணிக (வியாபார) காரணங்கள் மற்றும் அலுவல் தொடர்புடன் மற்ற மாநிலங்களுடன் இருப்பதால் மற்ற மாநில மொழிகளின் சொற்கள் தமிழகத்தில் பேச்சு வழக்கில் மிகுந்து இருக்கிறது.

எந்த ஒரு மொழியும் அது வேற்று மொழிச் சொற்களைக் ஏற்றுக் கொள்ளும் நிலை எவ்வாறு என்று ஆராய்ந்தால் அந்த மொழியில் புதிய பெயர் சொல்லையோ, வினைச்சொல்லையோ பொருள் மாறாமல் சொல்ல
சொற்களோ, கலைச் சொற்கள் அமைக்க வேர் சொற்கள் முற்றிலும் இல்லை என்ற ஒரு தீர்மான நிலையில் இயல்பாகவே அது பிற மொழிச் சொற்களை ஏற்றுக் கொள்கிறது. இது உலக மொழிகள் அனைத்திற்கும் பொருந்தும். நாம் இருப்பதை மறந்து கடினமான எழுத்துக்கள் அமைந்த சொற்களை ஏற்றுக் கொண்டு தமிழின் தொன்மை மற்றும் மென்மையை மறந்துவிட்டோம்.

பொழுதுகளைப் பற்றி சொல்லும் போது காலை வேளைகளை குறிப்பிட அதிகாலை (உதயம்), காலை என்றும் பகல் வேளைகளை குறிப்பிட மதியம் (மத்ய + சமயம் = மதியம் ?) என்ற சொல்கிறோம். அதையே முற்பகல், நடுப்பகல், பிற்பகல் என்று கால வேறுபாடுகளைக் குறித்து முறையாகக் குறிப்பிட்டால் மொழிக்கும் பொருளுக்கும் அழகு.

அதுபோல் மாலை நேரத்தை குறிக்க 'அந்தி வரும் நேரம்' என்றும் அந்தி என்றும் பாடல் ஆசிரியர்களைத் தவிர மற்றவர்கள் மிகுந்து பயன்படுத்துவதில்லை. சாயும் + காலம் = சாயங்காலம் (அஸ்தமனம்) எனவும் எளிதாக பிற்பகலின் பகுதியாக இருப்பதால் மாலை வேளை என்று குறிக்கலாம்.

இரவு பொழுதின் பல்வேறு வேளைகளைக் குறிக்க முன்னிரவு, நடு இரவு, பின்னிரவு என மூன்று கால அளவுகளில் குறியிடலாம். வெறும் இரவு என்றால் இரவு பொழுது முழுவதும் என்று பொருள் படுகிறது, அவ்வாறு சொல்ல வேண்டிய இடத்தில் மட்டும் இரவு என்பது சரி. ராத்திரி (ராத்ரி) என்று சொல்வதைவிட இரவு என்று சொல்வதால் இரவின் கருமைக்கு குறைபாடு இல்லை. இரவு என்பது தனித்தமிழ்ச் சொல். பொதுவாக முன் ராத்திரி, பின் ராத்திரி என சொல்வதில்லை, அங்கெல்லாம் சரியாகவே முன்னிரவு, பின்னிரவு என குறிப்பிடுகிறோம். நடு இரவு-க்கு பதில் நடு ராத்திரி என்று சொல்கிறோம் அப்படிச் சொல்வதும் தற்போது குறைவாகவே வழக்கில் இருந்து வருகிறது.

கடந்த மாதம் நான் சென்னை சென்றிருந்த போது பி.எஸ்.என்.எலின் செல்பேசி குறித்த தமிழக விளம்பரத்தில் 'ஒரு வருட வேலிடிட்டியுடன்' என்று தமிழையும் ஆங்கிலத்தையும் கலந்து தமிழெழுத்துகளில் விளம்பரப் படுத்தி இருந்தார்கள். அதாவது அந்த குறிப்பிட்ட சலுகை உடைய தொடர்பு திட்டத்தை (wireless plan) ஒரு ஆண்டு வரை பயன்படுத்தலாம் என்பதைக் குறிக்க அவ்வாறு எழுதி இருக்கிறார்கள் என்று புரிந்து கொண்டேன். எளிமையாக 'ஓர் ஆண்டு பயனுடன் அல்லது ஓர் ஆண்டு பயன்படுத்த' என்றும் குறிக்க முடியும் என்ற போதிலும் அரசாங்க அமைப்பே இத்தகைய கலப்புக்கு துணை போவது வியப்பாகவும், வருத்தமாகவும் இருந்தது.

உதயம், மதியம்,அஸ்தமம், இராத்திரி என்று சொல்வது பற்றியும் காலை, பகல், மாலை, இரவு என்பது பற்றியம் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.