Saturday, December 16, 2017

வந்தது மார்கழி!

வந்தது மார்கழி! வங்கக் கடல் கடைந்து 
சந்ததம் நல்லோர் தமிழமுதம் அருந்த 
சிந்தித்து இருந்தான் செல்வத் திருமால்! 
சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை!
வந்தாள் சுடர்கொடியாய் சூடிக் கொடுத்திடவே!
தந்தாள் திருப்பாவை பாடி நாம் பரவ! 
முந்தை வினை அகல முகிலோன் திருவடியில் 
சிந்தை தனை வைத்துப் பாடி மகிழ்வோமே!

மார்கழி மாதம் வந்தது!

கப்பல்கள் (வங்கம்) நிறைந்த கடலைப் போல், பெரிய தத்துவங்கள் நிறைந்த தமிழ்க் கவிதை உருவாகி, அதனைக் கடைந்து நல்லோர் எல்லோரும் தமிழ் அமுதம் உண்ண வழி  என்ன என்று திருமகள் கேள்வன் செல்வத் திருமால் சிந்தித்துக் கொண்டிருந்தான்.

அந்தக் கவலையைத் தீர்த்தாள் பெரியாழ்வார் திருமகளான கோதை!

பாமாலையோடு பூமாலையும் திருமாலுக்குச் சூடிக் கொடுக்க, சுடர்கொடியாய் வந்தாள்!

நாம் பாடி மகிழும்படி திருப்பாவை தந்தாள்!

முன்பு செய்த வினைப்பயன்கள் அகல, முகில்வண்ணன் திருவடிகளில் நம் சிந்தனையை வைத்து, திருப்பாவையைப் பாடி மகிழ்வோம்!