Wednesday, June 25, 2008

சர்வேசனுக்கு வணக்கம் (கேள்வி பதில் 3)

'கேள்விகள் வரவேற்கப்படுகின்றன'ன்னு ஒரு இடுகை போட்டேன். அப்ப நிறைய பேர் கேள்விங்க கேட்டாங்க. ஒவ்வொன்னா பதில் சொல்லிக்கிட்டு வர்றேன். இதுக்கு முன்னாடி வந்த கேள்வி பதில் இடுகைகள் இங்கே: இடுகை1, இடுகை2

இப்ப இந்த இடுகையில சர்வேசன் கேட்ட கேள்விக்களுக்குப் பதில்கள்.

1) கடவுள் உண்மையிலேயே இருக்காருன்னு உங்களுக்கு எது சொல்லுது? கடவுள் உண்மையிலேயே இருக்கான்னு, தினம் தினம் தெருவோரத்தில் (ஒரு தவறும் பண்ணாத) வயிற்றுப் பசியுடன் பிச்சைக்காரனுக்கு எது சொல்லும்னு நெனைக்கறீங்க?

நல்லா மாட்டிவிட்டீங்க சர்வேசரே. இதுக்கு என்ன பதில் சொல்றது? டக்குன்னு தோணுன பதிலைச் சொல்றதா? சிந்திச்சு பதில் சொல்றதா?

டக்குன்னு தோணுன பதில்: கடவுள் இருக்காருன்னு எனக்கு எது சொல்லுதுன்னு எனக்குத் தெரியலைங்க. எதாவது நிச்சயமா சொல்லுதான்னே ஐயமா இருக்கு. :-)

பிச்சைக்காரருக்கு எது சொல்லும்ன்னு அவருகிட்ட தானுங்க கேக்கணும். தாயும் பிள்ளையும் ஆனாலுமே வாயும் வயிறும் வேற வேறன்னு சொல்றாங்களே. எனக்கே எது சொல்லுதுன்னு தெரியாதப்ப அவருக்கு எது சொல்லும்ன்னு எனக்கு எப்படி தெரியும்? :-)

சிந்திச்சப்ப வந்த பதில்: உள்ளுணர்வும் வருங்காலத்தின் மேல் இருக்கும் நம்பிக்கையும் கடவுளின் இருப்பைச் சொல்லும். எனக்கும் சரி தெருவோர பிச்சைக்காரருக்கும் சரி. :-)

2) உங்கள் வாழ்வின் மிக மிக மிகப் பெரீரீரீய திருப்புமுனை எதுன்னு சொல்லுங்க. அதுக்கு காரணமானவங்க யாருன்னு சொல்லுங்க. திருப்புமுனைல, வேர பக்கம் திரும்பியிருந்தா என்ன ஆகியிருக்கலாம்னும் சொல்லுங்க. சுவாரஸ்யமா சொல்லுங்க. உண்மையே சொல்லுங்க.

இது வரைக்கும் இந்த மாதிரி சிந்திச்சதே இல்லீங்க. சிந்திச்சா குழப்பமா தான் இருக்கு.

நினைவுக்கு வந்த திருப்பங்களில் சில: சின்ன வயசுல படிக்கக் கிடைச்ச பாட்டியோட ஆன்மிக/சமய புத்தகங்கள், பத்தாவது படிக்கும் போது அம்மா இறந்தது, கல்லூரியில நுழைஞ்சவுடனே வந்த முதல் காதல், பி.இ.யில் இடம் கிடைத்தது, முதலாம் ஆண்டிலயே வந்த இரண்டாவது காதல் (அதுக்கப்புறமும் நிறைய காதல் வந்தன; ஆனா அதெல்லாம் திருப்பம் இல்லை:-) ), எம்.இ.யில் இடம் கிடைத்தது, டி.சி.எஸ்ஸில் வேலை கிடைத்தது, அமெரிக்கா வந்தது, திருமணம், மகள் பிறந்தது, தற்போது வேலை செய்யும் நிறுவனத்தில் சேர்ந்தது, வலைப்பதிவிற்கு வந்தது, மகன் பிறந்ததுன்னு எல்லா நேரங்களிலேயும் வாழ்க்கை மாறியிருக்கு. இதுல பெரீரீரீய திருப்பம்ன்னா எதைச் சொல்றது? ம்ம்ம்ம்.

எம்.இ. கிடைத்தது தான் பெரிய திருப்பம்ன்னு நினைக்கிறேன். அது கிடைச்ச கதையைச் சொல்றதா? கிடைக்காம இருந்திருந்தா என்ன ஆகியிருக்கும்ன்னு சொல்றதா? ரெண்டையும் தானே கேட்டிருக்கீங்க? ரெண்டையும் சொல்றேன். சுவையா சொல்லணும்ன்னு கேட்டிருக்கீங்க. அது மட்டும் நமக்கு சுட்டு போட்டாலும் வராது.:-) உண்மையைச் சொல்லணும்ன்னு சொல்லியிருக்கீங்க. நீதிமன்றத்துல சொல்ற மாதிரி 'நான் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையைத் தவிர வேறில்லை'ன்னு ஏதாவது ஒரு புத்தகத்து மேல கையை வச்சுக்கிட்டு உறுதி மொழியெல்லாம் தரணும்ன்னு கேக்கலையே. அது வரைக்கும் மகிழ்ச்சி. :-) நெஞ்சாங்கூட்டுல என்ன இருக்கோ அதைச் சொல்றேன் - ஆனா கொஞ்சம் சொந்தப்பெருமையைப் பேசுற மாதிரி வந்ததுன்னா கோவிச்சுக்கக்கூடாது. ஏன்னா அது தானே உள்ளத்தில இருக்கு. :-)

அந்தத் திருப்புமுனைக்குக் காரணமானவங்க யாருன்னும் கேட்டிருக்கீங்க. அதுக்கு பதில் தான் கொஞ்சம் சிந்திக்கணும். சொல்லிக்கிட்டே வர்றேன். காரணங்கள் யார் யாருன்னு நீங்களே படிச்சுப் பாத்து சொல்லுங்க. :-)

பி.இ. படிக்கும் போது கலசலிங்கம் கல்லூரி ரொம்ப பிடிச்சுப் போச்சு. எல்லாருக்கும் அப்படித் தானே. அவங்க அவங்க கல்லூரின்னா ரொம்ப பிடிக்கும்ல. ரெண்டாம் ஆண்டுல தொடங்குன பஜனைக் குழு கடைசி வரைக்கும் தொடர்ந்து வந்தது. (நான் கல்லூரியை விட்டு வந்த பின்னாடியும் ரெண்டு மூனு வருடம் அந்தக் குழு இருந்தது. அப்புறம் புதுப்பசங்க வந்து 'உலகத்திலேயே பஜனைக்குழு இருக்கும் ஒரே பொறியியல் கல்லூரி'ங்கற பெருமையை கலசலிங்கம் இழக்குற மாதிரி பண்ணிப்புட்டங்க). வாராவாரம் சனிக்கிழமை கூட்டு வழிபாடுன்னு ஒரு கூட்டத்தை வச்சுக்கிட்டு சின்ன மடாதிபதியா நடந்துக்கிட்டதும் எங்க போனாலும் அந்தக் கூட்டத்தோடவே போய் அளப்பரை பண்ணுனதும் இன்னும் நினைவுல பசுமையா இருக்கு. விடுதியில இரவு உணவுக்கு ஒரு கூட்டமா இந்த பஜனைக் குழு 20, 25 பேர் நம்ம தலைமையில கிளம்புனாங்கன்னா சீனியர், ஜீனியர் எல்லாருமே 'டேய். குமரன் அடியாட்களோட கெளம்பிட்டான்டா. ஒதுங்கி வழி விட்றுங்க'ன்னு பவ்யமா ஒதுங்கி வழிவிட்டதும் நல்லா நினைவு இருக்கு. நடுவுல நாலு பேருக்கு நான் என் காதலைச் சொன்னதும் என் கவிதைகளைப் படித்து ஒரு பெண்ணும் என் கதைகளைப் படித்து ஒரு பெண்ணும் என்னிடம் தங்கள் காதலைச் சொன்னதும்ன்னு அதுவும் நடந்தது. அதுல யாரையும் நான் தொடர்ந்து காதலிக்கலை. திருமணம் வரைக்கும் அந்தக் காதல்கள் வரலை. :-) ரெண்டாம் ஆண்டு படிக்கிறப்ப தொடங்குன மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துல ரெண்டாவது இடங்குறது கடைசி வரைக்கும் தொடர்ந்து வந்தது. (அதுல ஒரு மறைபொருள் - இரகசியம் இருக்கு. அதை உங்ககிட்ட மட்டும் சொல்றேன். வேற யாருக்கிட்டேயும் சொல்லாதீங்க. நான் படிக்கிறப்ப மதுரைப் பல்கலைக்கழகத்துக்குக் கீழ வர்ற கல்லூரிகள்ல எங்க கல்லூரியில மட்டும் தான் அளவியியல் & கட்டுப்பாட்டுப் பொறியியல் - Instrumentation and Control Engineering - இருந்தது. அதனால எங்க வகுப்புல ரெண்டாவது இடம்னாலே பல்கலைக்கழகத்துலயும் ரெண்டாவது இடம் தான். இன்னும் பல்கலைக்கழகத்துல ரெண்டாவது இடங்கற பொய்யான மெய்யைச் சொல்லிக்கிட்டு வர்றேன். நீங்களும் அப்படியே சொல்லிக்கிட்டு வாங்க. சரியா? )

இப்படி சொல்லத் தொடங்குனா சொல்லிக்கிட்டே போகலாம் கலசலிங்கம் வாழ்க்கையைப் பத்தி. அப்படி பேரும் புகழுமா வாழ்ந்து நல்லா அனுபவிச்சதால அங்கேயே வாழ்க்கை முழுக்க இருந்துரலாம்ன்னு ஒரு எண்ணம். கலசலிங்கத்துலேயே வாத்தியார் வேலைக்குச் சேர்ந்து கல்லூரி பக்கத்துலயே ஒரு பங்களா கட்டிக்கிட்டு குழந்தை குடும்பம்னு (இப்ப எல்லாம் யாராவது குழந்தை குட்டின்னு சொல்லுவாங்களா என்ன? அதான் குடும்பம்ன்னு சொல்லிட்டேன்) இருந்தா வாழ்க்கை அமைதியா போகும்ன்னு ஒரு கனவு. அந்த மாதிரியே செய்யறதுக்காக படிச்சு முடிச்ச பின்னாடி சென்னைக்குப் போய் திரு.கலசலிங்கம் ஐயாவைச் சந்திச்சேன். அதுக்கு முன்னாடியே நம்ம பஜனைக் குழு மூலமா செஞ்ச சில தொண்டு நடவடிக்கைகள் மூலம் ஐயாவோட அறிமுகம் இருந்தது. அவரோட சொந்த ஊருல இருக்கிற பள்ளி ஆண்டுவிழாவுல ஐயா தலைமை ஏத்து நடத்துறப்ப முதல், இரண்டு, மூன்றாம் நிலையைப் பெற்ற எல்லா வகுப்பு மாணவர்களுக்கும் நம்ம பணத்துல பரிசுகள் வழங்குனதுலயும் ஐயாகிட்ட நல்ல பேரு எனக்கு. அதனால உடனே வேலை போட்டுக் குடுக்க சம்மதம் தெரிவிச்சு பரிந்துரை கடிதம் குடுத்து அனுப்பிட்டாரு.

நான் கல்லூரிக்கு வந்து முதல்வரைப் பாக்குறதுக்கு முன்னாடி எங்க துறைத்தலைவரைப் போய் பாத்தேன். அவருக்கோ ஒரே அதிர்ச்சி. 'குமரா. நீ நல்லா படிக்கிற பையன். சரியா படிக்காம வேற எங்கையும் வேலை கிடைக்காம கடைசியில தான் இங்க வாத்தியார் வேலைக்கு வருவாங்க. நீ இந்த வேலைக்கு வந்தா உன்னோட ஜூனியர்கள் ரொம்ப நொந்து போயிடுவாங்க. உனக்கே வேலை கிடைக்கலையா வெளிய? நமக்கெல்லாம் எப்படி கிடைக்கும்ன்னு' அப்படி இப்படின்னு சொல்லத் தொடங்கிட்டாரு. என்ன என்னவோ சொல்லிப் பாக்குறேன். அவரு விடலை. கடைசியில 'அப்ப்டி நீ வாத்தியார் வேலைக்குத் தான் வருவேன்னா ஒன்னு செய். போய் எம்.இ. படிச்சுட்டு வா. எப்படியும் வாத்தியாரா தொடரணும்ன்னா எம்.இ. படிக்கணும். மொதல்ல அதை முடிச்சுட்டு வா. அப்புறம் வேலை குடுக்குறேன்'னு சொல்லிட்டார். அவர் சொன்னதும் சரின்னு பட்டதால முதல்வரைப் பாக்காமலேயே திரும்பி வந்துட்டேன்.

இப்ப எம்.இ. சேர்றதுக்காக GATE தேர்வுக்காகப் படிக்கணும். எனக்கோ வீட்டுல உக்காந்திருக்கப் பிடிக்கலை. அப்பத் தான் ஒரு நண்பன் புட்டபர்த்தியிலேயே தங்கியிருக்கான்னு தெரிஞ்சது. நானும் புட்டபர்த்திக்குப் போயிட்டேன். அங்கேயே ஒரு நாலு மாசம் தங்கியிருந்து தரிசனம் பார்த்த நேரம் போக மத்த நேரம் தேர்வுக்காகப் படிச்சேன். படிச்சு முடிச்சு வேலைக்குப் போவான்னு பாத்தா இப்படி புட்டபர்த்தியில போயி உக்காந்திருக்கானேன்னு எங்கப்பாவுக்கு கடுப்பு. யாரு அதையெல்லாம் கண்டுக்கிட்டாங்க? அப்பத் தான் நான் காதலிக்கிறேன்னு சும்மாவாச்சும் சொன்ன பொண்ணுங்க ரெண்டு பேருக்குத் திருமணமும் ஆச்சு. அதனால மனசு நொந்து நான் சாமியாரா போயிட்டேன்னு ஒரு நண்பன் வதந்தியை வேற கிளப்பிவிட்டுட்டான். :-) .

தேர்வு நேரமும் வந்து தேர்வும் எழுதி முடிந்து வெளியே வந்த போது எனக்குத் துளி கூட நம்பிக்கை இல்லை. ஒழுங்கா வீட்டுல இருந்து படிச்சிருந்தாலாவது நல்லா எழுதியிருக்கலாம். புட்டபர்த்துக்குப் போயி நேரத்தை வீணாக்கிட்டோம்ன்னு நினைச்சுக்கிட்டேன். ஆனா எம்.இ. முடிக்காம திரும்பவும் கலசலிங்கத்துக்கும் போக முடியாது; சரி மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியிலாவது சேரலாம்ன்னு அங்கே முயற்சி செய்யத் தொடங்கினேன். நான் கலசலிங்கத்துல படிக்கிறப்ப வாராவாரம் திருநகர் வந்து ஒருத்தர்கிட்ட பகவத் கீதை கத்துக்கிட்டேன். அவர் தியாகராஜர்ல ஆசிரியரா இருக்கார். அவர் பரிந்துரையில வேலை கிடைச்சிரும்ன்னு நம்பிக்கை.

தேர்வு முடிவுகள் இன்னும் வரலை. ஆனா கல்லூரிக்களுக்கு விண்ணப்பிக்கும் நேரம் வந்துவிட்டது. அண்ணா பல்கலைக்கழகம், கோவை தொழிற்நுட்பக் கல்லூரி (CIT) ரெண்டு இடத்துலயும் விண்ணப்பப் படிவம் வாங்கிட்டேன். தேர்வு முடிவுகள் வர்றதுக்கு முன்னாடியே சிஐடியில விண்ணப்பிக்க வேண்டியதா இருந்ததால அதைச் செஞ்சுட்டேன். தேர்வு முடிவுகள் வந்த பின்னாடி மொத்தமா நம்பிக்கை இழந்ததால அண்ணா பல்கலைக்கழகப் படிவத்தை நண்பருக்குக் குடுத்துட்டேன். (அந்த நண்பருக்கு அண்ணாவுல இடம் கிடைச்சு எல்லாம் உன் கைராசின்னு சொல்லிக்கிட்டு இருந்தாரு. அடப் போடா என் கைராசி எனக்குக் கைகுடுக்கலைன்னு நொந்துக்குவேன்).

சிஐடியில இருந்து நேர்முகத்துக்கு அழைப்பு வந்தது. சரி அழைப்பு வந்திருக்கே போகலாம்ன்னு போய் பாத்தா 4 இடங்களுக்கு 500 பேரு வந்திருக்காங்க. பக்கத்துல இருக்கிறவங்க கிட்ட பேச்சு குடுத்துப் பாத்தா ஒவ்வொருத்தரும் அருமையா மதிப்பெண்கள் வாங்கியிருக்காங்க. ஏன்டா என்னையெல்லாம் கூப்புட்டு வதைக்கிறாங்க இவங்கன்னு நெனைச்சுக்கிட்டு சரி கிளம்பிற வேண்டியது தான்னு நெனைச்சுக்கிட்டு இருக்கிறப்ப வந்தாரு குருராஜர். எம்.இ. ரெண்டாம் ஆண்டு படிக்கிற குருராஜன் தேர்வுக்கு எத்தனை பேரு வந்திருக்காங்க, யாரு யாரு வந்திருக்காங்கன்னு பாக்க வந்திருக்காரு. வந்து பக்கத்துல உக்காந்து அறிமுகம் செஞ்சுக்கிட்டு பேசத் தொடங்குனாரு. நான் அப்ப என்ன மனசுல ஓடிச்சோ அதை அவருகிட்ட சொன்னேன். வந்தது வந்துட்டே; நேர்முகம் முடிஞ்ச பிறகு போகலாம்ன்னு அவர் வற்புறுத்த நான் கிளம்பியே ஆகணும்ன்னு கிளம்புனேன். அவரு விடவே இல்லை. முதல் பார்வையிலேயே ஒரு நட்பு, பந்தம் வந்திருச்சு. அவர் சொல்றதைத் தட்ட முடியாம காத்திருந்து நேர்முகத்துக்கும் போனேன். உள்ள போனா சுத்தி ஆறு பேரு உக்காந்துக்கிட்டு கேள்விகளால வேள்வி செஞ்சாங்க. பாதி கேள்விகளுக்குத் தான் பதில் சொன்னேன். மீதிக்கு நல்லா முழிச்சேன்.

வெளியே வர்றப்ப கட்டாயம் நமக்கு இடம் கிடைக்காதுன்னு தோணியாச்சு. குருராஜன் 'சரி போகட்டும். வா. சாப்புட்ட பிறகு போகலாம்'ன்னு விடுதிக்குக் கூட்டிக்கிட்டு போயி சாப்பாடு போட்டார். நல்ல சாப்பாடு. சாப்புட்டு முடிச்சு 'சரி நான் கெளம்புறேங்க. இப்பக் கெளம்புனாத் தான் மருதமலைக்குப் போயிட்டு ராத்திரிக்குள்ள ஊரு போயி சேரலாம்'ன்னு சொன்னா 'இருப்பா. இன்னும் கொஞ்ச நேரத்துல தேர்வு முடிவுகளைச் சொல்லிருவாங்க. அதுக்கப்புறம் போகலாம்'ன்னு நிறுத்தி வச்சாரு. அன்புத் தொல்லைக்காக நின்னேன். நேரம் ஆக ஆக 'வெட்டியா இங்க உக்காந்திருக்கோமே. மருதமலையானைப் பாக்க நேரம் இருக்காதோ'ன்னு குறுகுறுப்பு. புலம்பிக்கிட்டு இருந்தேன். நாலு மணி போல முதல்வர் வந்து ஒவ்வொரு பேரா கூப்பிட்டாரு. 'செந்தில் குமரன்' ஒல்லியா ஒரு பையன் வந்து முன்னாடி நின்னான். 'வேணுகோபால்' குண்டா உயரமா ஒரு பையன் (ஆளு?) வந்து நின்னாரு. 'நாகேஸ்வரராவ்' குள்ளமா (என்னை விட ஒரு இஞ்ச் தான் குள்ளமா இருப்பாரு. ஆனாலும் அவரைக் குள்ளம்ன்னு சொல்லுவோம்ல) ஒருத்தர் வந்து முன்னாடி நின்னாரு. 'குமரன்' யாரும் முன்னாடி வரலை 'எம்.என்.குமரன்' அட நம்ம பேரு தான்னு அப்ப தான் உறைச்சது. வேக வேகமா முன்னாடி போய் நின்னேன். 'நீங்க நாலு பேரும் முதல் மாடியில இருக்குற அலுவலகத்துக்குப் போங்க'ன்னு பத்திவிட்டாரு. நாலு பேரும் படிக்கட்டுல போறப்பவே ஒருத்தருக்கொருத்தர் அறிமுகம் செஞ்சுக்கிட்டோம். யாருக்கும் எதுக்கு நாம மேல போறோம்ன்னு தெரியலை. வேணுகோபால் 'நான் ப்ராஜக்ட் ரிபோர்ட் கொண்டு வரலை. நீங்களும் அப்படித் தானா? அதுக்குத் தான் நம்மளை தனியா அனுப்பியிருக்காங்க'ன்னு சொல்றார். செந்திலோ 'எனக்கு ஒன்னும் புரியலைங்க. ஒரே குழப்பமா இருக்கு'ன்னு புலம்புறாரு. அலுவலகத்துக்கு வந்து இப்படி முதல்வர் எங்க நாலு பேரையும் அனுப்புனாருன்னு சொன்னா 'கட்டணப்பணம் கொண்டு வந்திருக்கீங்களா? எடுத்துக்கட்டுங்க'ங்கறாரு அலுவலர். அப்பவும் ஒன்னும் புரியல. 'கட்டணமா? எதுக்கு?'ன்னு கேட்ட பின்னாடி 'அடப்பாவிங்களா. உங்களுக்கு எம்.இ. இடம் கிடைச்சுருக்கு. அதுக்குத் தான் கட்டணம்'ன்னு சொல்றாரு. அப்பத் தான் புரியுது எல்லாருக்கும் ராவ்-க்கு மட்டும் ஏற்கனவே தெரியும் போல - இந்த தமிழாளுங்க கிட்ட நமக்கென்ன பேச்சுன்னு கமுக்கமா இருந்திருகாரு. செந்திலும் நானும் ஒருத்தரை ஒருத்தர் கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுக்காதது தான் குறை. அப்படி ஒரு மகிழ்ச்சி. வாயெல்லாம் பல்லா கட்டணத்தைக் கட்டி வகுப்புல சேர்ந்தோம்.

இதையேன் பெரீரீரீய திருப்பம்ன்னு சொல்றேன்னு இன்னேரம் புரிஞ்சிருக்கும். இல்லியா? அதையும் விலாவாரியா சொல்லணும்ன்னா சொல்றேன். :-) ஆனா ஒன்னு. கலசலிங்கத்துல அதுக்கப்புறம் படிச்சப் பசங்க செஞ்ச புண்ணியம் தான் அவங்களை எங்கிட்ட இருந்து காப்பாத்தியிருக்குன்னு மட்டும் கட்டாயம் சொல்லலாம். :-)

26 comments:

Kavinaya said...

உங்களுக்கா சுவாரஸ்யமா எழுதத் தெரியாது :)

//உள்ளுணர்வும் வருங்காலத்தின் மேல் இருக்கும் நம்பிக்கையும் கடவுளின் இருப்பைச் சொல்லும்.//

நல்ல பதில். நம்பிக்கைதான் கடவுள். கடவுள்தான் நம்பிக்கை.

//கொஞ்சம் சொந்தப்பெருமையைப் பேசுற மாதிரி வந்ததுன்னா கோவிச்சுக்கக்கூடாது. ஏன்னா அது தானே உள்ளத்தில இருக்கு. :-)//

எல்லாருக்கும் அப்படி ஏதாச்சும் இருக்கும்னு நெனக்கிறேன் :)

//நான் காதலிக்கிறேன்னு சும்மாவாச்சும் சொன்ன பொண்ணுங்க ரெண்டு பேருக்குத் திருமணமும் ஆச்சு. அதனால மனசு நொந்து நான் சாமியாரா போயிட்டேன்னு ஒரு நண்பன் வதந்தியை வேற கிளப்பிவிட்டுட்டான். :-) //

ஹா ஹா :)

SurveySan said...

இம்மாம் பெரிய பதிலுக்கு நன்னி.

சுவாரஸ்யம் எல்லா வரியிலும் கொட்டிக் கெடக்கு :)

பிச்சைக்காரனுக்கு வருங்காலத்தின் மேல் என்ன நம்பிக்கை இருக்கும்னுதான் புரீல :)

//இதையேன் பெரீரீரீய திருப்பம்ன்னு சொல்றேன்னு இன்னேரம் புரிஞ்சிருக்கும். இல்லியா?//

இல்லியே, வேர ஏதாவது பதிவுல, டீட்டெயில்ஸ் கீதா?

குமரன் (Kumaran) said...

சர்வேசரே. சிந்திச்சுப் பாருங்க. எதிர்காலத்துல நம்பிக்கைங்கறது புரியும். :-)

இம்புட்டு பெரீரீரீசா எழுதியிருக்கேனே - அப்ப இது பெரீரீரீய திருப்பம் தானே? :-)

இது நடக்காட்டி கலசலிங்கத்துல இருந்திருப்பேன்; அமெரிக்காவுல இல்லை. இப்படி நிறைய சொல்லலாம். முடிஞ்சா நீங்களே இன்னொரு தடவை படிச்சுப் பாத்துக்கோங்க. இங்கேயே 'இது நடந்தது; இது நடந்தது'ன்னு வரிசையா சொல்லியிருக்கேன்னு நினைக்கேன். கிடைச்சா சரி. கிடைக்காட்டி விட்டிருங்க. என் கதையைத் தெரிஞ்சுக்கிட்டு என்ன ஆகப்போவுது? :-)

கலசலிங்கத்துல இன்னும் மகிழ்ச்சியா இருந்திருக்க வாய்ப்புண்டு. இக்கரைக்கு அக்கரை பச்சை. :-)

விளக்கம் எல்லாம் கீதாம்மா வந்து சொல்லுவாங்கன்னு தானே கீதா?ன்னு சொல்லியிருக்கீங்க. :-)

குமரன் (Kumaran) said...

சுவையா இருந்ததா? மகிழ்ச்சி கவி அக்கா.

இன்னும் நிறைய இடத்துல் நான் சிரிச்சேன். நீங்களும் சிரிச்சீங்களா? :-)

இலவசக்கொத்தனார் said...

அடுத்த கேள்வி - எப்பவுமே இப்படித்தானா இல்லை சுருக்கமா பதில் சொல்லவும் தெரியுமா? :P

குமரன் (Kumaran) said...

தெரியாது.

சுருக்கமா சொல்ல முயன்றிருக்கிறேன். புரிஞ்சதான்னு சொல்லுங்க. :-)

SurveySan said...

//என் கதையைத் தெரிஞ்சுக்கிட்டு என்ன ஆகப்போவுது? :-) //

என்னங்க இப்படீ கேட்டுட்டீங்க? இதெல்லாம் தெரிஞ்சுக்கதானே, ரூம் போட்டு யோசிச்சு, டக்கரா கேள்வி கேட்டேன் ;)

SurveySan said...

fyi,
http://surveysan.blogspot.com/2008/06/blog-post_25.html

மெளலி (மதுரையம்பதி) said...

மூன்று கேள்வி-பதில் பதிவுகள் போட்டதுல இதுதான் மிக சுவாரஸ்யம் அப்படின்னு மட்டும் சொல்லிக்கறேன்...

ஆமாம், அந்த பஜனை கோஷ்டியத்தான் வேறு நபர்களை வச்சு இணையத்துலயும் தொடருவதா பலர் சொல்றாங்களே?, அது உண்மையா?...:)

jeevagv said...

படித்தறிய சுவை மேலும் மேலும் கூடியது!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ரொம்ப நேரம் சிரிச்சிக்கிட்டு இருந்தேன் குமரன்!
ஏற்கனவே ஒரு மாதிரி பார்க்கிறாங்க! இதுல பதின்மூன்றாம் சிரிப்பு சிரிச்சாருன்னு யாராச்சும் கெளப்பிருவாங்களோ-ன்னு பயத்துல உங்க பதிவை விட்டு ஓடிப் போயிட்டேன்! அதான் அப்பாலிக்கா வந்து இந்தப் பின்னூட்டம்!

(BTW,பல விடயங்களில், we cross each other :-)

G.Ragavan said...

:) நல்ல கேள்விகள் நல்ல வடைகள். மன்னிக்க.. விடைகள் :D

காலேஜ்ல படிக்கிறப்போ பஜனையா.. செம காமெடியா இருந்திருக்கும் போலவே. கனாக்காணும் காலங்கள் நாடகத்தில் வரும் கிஷன் மாதிரி இருந்திருக்கும் போல!

VSK said...

//இதையேன் பெரீரீரீய திருப்பம்ன்னு சொல்றேன்னு இன்னேரம் புரிஞ்சிருக்கும். இல்லியா? //

சாய்ராம்!!

VSK said...

மிக அருமையா எழுதியிருக்கீங்க குமரன்

geethasmbsvm6 said...

சுயபுராணமும் படிக்க நல்லாவே இருக்கு!!!!. தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்.

passerby said...

இப்படிப்பட்ட அனுபவங்கள் இல்லையெனில் கடவுள் இல்லையென்று அர்த்தம்.

தனிமனித போதையே இங்கு ஆண்மிகமாகி விடுகிறது.

தன்னை விட்டு விலகிய
நிலை அடைய்ம்போது
கடவுள் உண்டா இல்லையா
என்ற கேள்விக்கு விடை கிடைக்கும்.

TBR. JOSPEH said...

குமரன் பதில் கொஞ்சம் நீளமானாலும் அது தேவைதான். அந்த நேரத்துல இருந்த டென்ஷன அப்படியே எழுத்துல வடிச்சிருக்கீங்க.

கடவுள் இருக்காரா இல்லையான்னு எல்லார் மனசுலயும் தெரியும். சிலர் அத அப்படியே ஒத்துக்குவாங்க. சிலர் வீம்புக்கு இல்லைன்னு சொல்லிக்கிட்டிருப்பாங்க. இதுதான் உண்மை.

உலகத்துல இருக்கற எல்லாருக்கும் பொதுவானவர்தான் கடவுள். ஆனா ஏன் சிலருக்கு மட்டும் வசதியான வாழ்க்கை சிலருக்கு ஏழ்மையான வாழ்க்கைன்னு கேள்வி கேட்டா பதில் சொல்றது சிரமம். அதுவும் இறை சித்தம்னு ஏத்துக்கணும். அதுக்கு மனப்பக்குவம் தேவை.

குமரன் (Kumaran) said...

என்ன பண்றதுங்க மௌலி? தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும். என்ன இப்ப எல்லாம் நான் அடியார் மட்டுமே. தலைமைப் பொறுப்பு இராம, கிருஷ்ணாவதாரங்களுக்குக் கொடுத்தாச்சு. :-)

மெளலி (மதுரையம்பதி) said...

//என்ன பண்றதுங்க மௌலி? தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும். என்ன இப்ப எல்லாம் நான் அடியார் மட்டுமே. தலைமைப் பொறுப்பு இராம, கிருஷ்ணாவதாரங்களுக்குக் கொடுத்தாச்சு. :-)//

ஆஹா!!! மேலே சொன்ன இந்த பதில் கூட சூப்பர் :-)

குமரன் (Kumaran) said...

நன்றி ஜீவா.

குமரன் (Kumaran) said...

இரசித்துச் சிரிக்கும்படியாக இருந்ததில் மகிழ்ச்சி இரவிசங்கர். உங்கள் வாழ்க்கை இன்னும் சுவையாக இருக்கும் என்று நினைக்கிறேன். :-)

குமரன் (Kumaran) said...

காமெடியா இல்லை இராகவன்; ரொம்ப சீரியஸாவே இருந்தது. அரை மணி நெரமோ முக்கால் மணி நேரமோ பஜனை முடிந்த பிறகு கால் மணி நேரம் என் சொற்பொழிவும் இருக்கும். அவற்றை எல்லாம் மறக்காமல் சிலர் வாழ்க்கையில் பின்பற்றவும் முயன்றார்கள் என்பதை கல்லூரியில் இருந்து விடைபெறும் போது அவர்கள் எழுதித் தந்தவற்றில் இருந்து அறிந்தேன். எப்போதோ நான் பேசி மொத்தமாக மறந்து போன ஒன்றை வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தி பயனடைந்தவர்களையும் கண்டேன்; வெட்கப்பட்டேன். :-)

நீங்க 'கனாக்காணும் காலங்கள்' தொலைக்காட்சித் தொடரை மட்டுமே பார்ப்பீர்கள் என்று சொன்னது நினைவிருக்கிறது. ஆனால் நான் இது வரை அந்தத் தொடரைப் பார்த்ததில்லை. அதனால் கிஷ்ன் மாதிரியா இல்லையா என்று தெரியவில்லை.

குமரன் (Kumaran) said...

சாய்ராம் எஸ்.கே

நன்றிகள் எஸ்.கே.

குமரன் (Kumaran) said...

மகிழ்ச்சி கீதாம்மா. நன்றி.

குமரன் (Kumaran) said...

நன்றி கரிக்குலம் ஐயா.

குமரன் (Kumaran) said...

ரொம்ப நல்லா சொன்னீங்க டி.பி.ஆர். ஐயா. ரொம்ப நன்றி.