Tuesday, December 29, 2009

வாலாஜாபேட்டை வேங்கடரமண பாகவதர்

கர்நாடக இசை மும்மூர்த்திகளில் முதன்மையானவரான சத்குரு தியாகராஜ சுவாமிகளின் முதன்மை சீடர்களில் ஒருவர் வாலாஜாபேட்டை வேங்கடரமண பாகவதர். அவருடைய நினைவினைப் போற்றி இந்திய அஞ்சல் துறை அவருடைய திருவுருவ அஞ்சல்தலையை 27 டிசம்பர் 2009 அன்று மதுரையில் வெளியிட்டுள்ளது.

மதுரை தெற்கு கிருஷ்ணன் கோவில் எனப்படும் ஸ்ரீ பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் திருக்கோவிலில் வேங்கடரமண பாகவதரின் திருவுருவச் சிலை இருக்கிறது. அந்தத் திருவுருவச் சிலையின் படத்தை இங்கே தருகிறேன்.

வேங்கடரமண பாகவதரின் வரலாறு, பாடல்கள் போன்றவற்றைப் படிக்கவும் கேட்கவும் இந்த வலைப்பக்கத்திற்குச் செல்லுங்கள்.

Saturday, December 26, 2009

அகநானூறு போற்றும் புரிசடை அந்தணன்

பாரதம் பாடிய பெருந்தேவனார் என்னும் புலவர் சங்க கால தொகை நூல்களான அகநானூறு, புறநானூறு போன்ற பல தொகுப்புகளுக்கும் கடவுள் வாழ்த்து பாடியிருக்கிறார். வெவ்வேறு காலங்களில் வாழ்ந்த பல்வேறு புலவர்கள் பாடிய பாடல்களைத் தொகுத்து வைத்தவை இந்த எட்டுத் தொகை நூல்கள். யார் இவற்றைத் தொகுத்தார்கள் என்ற குறிப்புகள் இருப்பதாகத் தெரியவில்லை. ஏரணப்படி பார்த்தால் தொகுக்கும் காலத்தில் கடவுள் வாழ்த்து பாடப்பட்டிருக்கலாம்; கடவுள் வாழ்த்து பாடியவரே தொகுத்த புலவராகவும் இருக்கலாம் - என்று தோன்றுகிறது. உறுதிபடுத்த மேற்கொண்டு ஆராய்ச்சிகள் வேண்டும்; ஏற்கனவே ஆய்வுகள் நடந்திருந்தால் அந்த ஆய்வுகளை நான் இனிமேல் தான் படிக்க வேண்டும். இந்த ஏரணம் சரி என்றால் பாரதம் பாடிய பெருந்தேவனாரே அகநானூறு, புறநானூறு போன்ற நூல்களைத் தொகுத்தவராவார்.

எட்டுத்தொகையில் இருக்கும் பல பாடல்கள் கி.மு. 5ம் நூற்றாண்டு தொடங்கி கி.பி. 2ம் நூற்றாண்டு வரையில் பாடப்பட்டிருக்கலாம் என்று ஆய்வுகள் சொல்கின்றன. அதன் படி பார்த்தால் இவை கி.பி. 2ம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டிருக்க வேண்டும். இந்தக் கடவுள் வாழ்த்தும் அக்காலத்திலேயே எழுதப்பட்டிருக்கலாம். பாரதம் பாடிய பெருந்தேவனாரும் அக்காலத்திலேயே வாழ்ந்திருக்கலாம். இவ்விரு விடயங்களையும் உறுதி செய்ய மேற்கொண்டு ஆய்வுகளோ படிக்கவோ வேண்டும்.

அகநானூற்றின் கடவுள் வாழ்த்து சிவபெருமானைப் போற்றுகிறது. பதம் பிரித்துப் படித்தால் உரை இல்லாமலேயே விளங்கக் கூடிய வகையில் கொஞ்சம் எளிமையாகவே இருக்கிறது. சிவபெருமானின் திருவுருவத்தை எண்ணத்தில் நிலை நிறுத்தும் வகையில் பாடப்பட்டிருக்கிறது.

கார் விரிக் கொன்றைப் பொன் நேர் புது மலர்த்
தாரன்; மாலையன்; மலைந்த கண்ணியன்;
மார்பின் அஃதே மை இல் நுண் ஞாண்;
நுதலது இமையா நாட்டம்; இகல் அட்டு
கையது கணிச்சியொடு மழுவே; மூவாய்
வேலும் உண்டு அத் தோலாதோற்கே!
ஊர்ந்தது ஏறே; சேர்ந்தோள் உமையே;
செவ்வான் அன்ன மேனி; அவ்வான்
இலங்கு பிறை அன்ன விலங்கு வால் வை எயிற்று
எரி அகைந்து அன்ன அவிர்ந்து விளங்கு புரி சடை;
முதிராத் திங்களொடு சுடரும் சென்னி;
மூவா அமரரும் முனிவரும் பிறரும்
யாவரும் அறியாத் தொல் முறை மரபின்
வரி கிளர் வயமான் உரிவை தைஇய
யாழ் கெழு மணி மிடற்று அந்தணன்
தாஇல் தாள் நிழல் தவிர்ந்து அன்று ஆல் உலகே!


பொன்னைப் போல் ஒளி வீசும் மஞ்சள் நிறக் கொன்றைப் பூ சூடியவனாக சிவபெருமான் சங்க கால பாடல்கள் பலவற்றிலும் போற்றப்படுகிறான். கொன்றை கார் காலத்தில் பூக்கும். அப்படி கார்காலத்தில் பூத்த, பொன்னைப் போல் நிறம் கொண்ட, புத்தம் புதிய கொன்றை மலர்களைத் தாராகவும் மாலையாகவும் திருமுடியில் சுற்றியிருக்கும் கண்ணியாகவும் அணிந்திருக்கிறான் சிவபெருமான். கார் விரிக் கொன்றைப் பொன் நேர் புது மலர்த் தாரன்; மாலையன்; மலைந்த கண்ணியன்.

ஆண்டாள் மாலை என்று தற்காலத்தில் சொல்கிறோமே, இரண்டு குஞ்சம் வைத்து, கழுத்தில் சூடினால் நீண்டு இருபுறமும் தொங்குமே அதனைத் தார் என்று சொல்வார்கள். ஒரே ஒரு குஞ்சத்துடன் வளையம் போல் கட்டினால் அது மாலை. மிகவும் நெருக்கமாகச் சிறு சிறு வளையமாகக் கட்டினால் அது கண்ணி. இன்றைக்கும் வைதிகச் சடங்குகளின் போது கழுத்தில் மாலையும் கை மணிக்கட்டுகளில் கண்ணிகளும் அணிந்து கொள்ளும் வழக்கம் இருக்கிறது.

தார் ஆண்களுக்கும் மாலை பெண்களுக்கும் கண்ணி இருபாலருக்கும் உரியவை. தார் ஆண்களுக்கு உரியது என்றால் அது எப்படி ஆண்டாள் மாலை ஆகியது என்று யாராவது கேட்டால் 'போய் ஆண்டாள் கதையைப் படியுங்கள். அவள் சூடிக் கொடுத்த சுடர்கொடி ஆனதை நுண்மையாகப் படித்துப் பாருங்கள். அப்போது புரியும்' என்று சொல்லலாம்.

இந்தப் பாடலில் தாரும் மாலையும் கண்ணியும் அணிந்தவன் சிவபெருமான் என்று சொல்லும் போது அவன் ஆணுமாய் பெண்ணுமாய் அல்லனுமாய் நிற்பதைக் குறிக்கிறார் போலும் புலவர். மாதொருபாகனாய் நிற்கும் சிவபெருமான் தாரும் மாலையும் கண்ணியும் அணிந்திருப்பதில் தடையென்ன?

இந்தக் கொன்றைத் தாரை பிற்காலத்தில் வந்த அபிராமி பட்டரும் 'தார் அணிக் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லை ஊரர்' என்று பாடுகிறார். அபிராமி பட்டரும் 'தில்லை ஊரர் மாலையும் அணிந்தவர்' என்று சொல்லுவதைப் பாருங்கள். அதனைக் கவனித்தால் அவர் ஏன் 'தில்லை ஊரர் தம் பாகத்து உமை' என்று பாடுகிறார் என்பதும் புரியும்.

'மார்பின் அஃதே' என்னும் அடுத்த அடியின் முதல் பகுதியை கொன்றைத் தாரன், மாலையன், கண்ணியன் என்ற தொடருடன் சேர்த்துப் படித்தால் சிவபெருமானின் மார்பு நிறைய கொன்றைப்பூவே நிறைந்திருக்கிறது என்ற பொருள் கிடைக்கிறது. ஆனால் உரையாசிரியர்கள் இதனை அதே வரியில் இருக்கும் அடுத்தப் பகுதியுடன் சேர்த்துப் பொருள் கொள்கிறார்கள். 'மார்பின் அஃதே மை இல் நுண் ஞாண்' என்பதை ஒரே வரியாகக் கொள்கிறார்கள். இந்த அடிக்கு உரையாசிரியர்கள் தரும் பொருள் 'குற்றமில்லாத பூணூல் மார்பில் விளங்குகின்றது'. மை என்பது இங்கே கருமையைக் குறித்து 'மை இல்' என்பது குற்றமற்ற / வெண்ணிறமான என்ற பொருளைத் தருகிறது.

சிவபெருமானின் திருவுருவத்தில் இருக்கும் சிறப்புகளில் அடுத்த சிறப்பாகப் புலவர் குறிப்பது நெற்றிக் கண். தேவர்களின் கண்கள் இமைக்காமல் இருக்குமாம். எல்லா தேவர்களைப் போல் சிவபெருமானின் திருக்கண்களும் இமைக்காமல் இருக்கும் போது அவரது சிறப்பான மூன்றாவது கண்ணும் இமைக்காமல் இருக்குமாம் நெற்றியில். நுதலது இமையா நாட்டம் - நெற்றியில் இமைக்காத திருக்கண்.

தேவதேவனான சிவபெருமான் எண்ணியதெல்லாம் நிகழ்த்திக் கொள்ளும் ஆற்றல் உடையவன். தோல்வி என்பதே அறியாதவன். அதனால் அவனுக்குத் தோலாதவன் என்றே ஒரு திருப்பெயரைத் தருகிறார் புலவர். எந்த வித தடையையும் நீக்கிக் கொள்ளும் ஆற்றல் உடையவன். பகையெனும் தடையை நீக்கி அவன் திருக்கைகளில் விளங்குகின்றன மழுவும் மூவாய் வேலான திரிசூலமும். இகல் அட்டு கையது கணிச்சியொடு மழுவே; மூவாய் வேலும் உண்டு அத்தோலாதோற்கே! இகல் என்றால் பகை. பகையை வென்று கையில் இருக்கிறது மழு. மூவாய் வேலும் அந்த தோல்வியில்லாதவனிடம் உண்டு. கணிச்சி என்றாலும் மழு என்றே பொருள் சொல்கிறது அகரமுதலி. இங்கே புலவர் 'கணிச்சியொடு மழுவே' என்று ஏன் சொன்னார் என்பது புரியவில்லை. கணிச்சி என்றால் குந்தாலி என்று ஒரு பொருளை உரையாசிரியர் தந்திருக்கின்றனர்.

சிவபெருமானது ஊர்தி தரும வடிவான காளை; ஏறு. ஊர்ந்தது ஏறே. அவன் ஒரு பாகத்தில் இருப்பவள் உமையவள். சேர்ந்தோள் உமையே.

அவனது திருமேனி சிவந்த வானத்தைப் போன்ற நிறம் உடையது. செவ்வான் அன்ன மேனி. அந்த வானில் விளங்கும் பிறை நிலவைப் போல் வளைந்த வெண்மையான கூர் பல்லினை உடையவன். அவ்வான் இலங்கு பிறை அன்ன விலங்கு வால் வை எயிற்று. விளங்கு என்றால் வளைவு. நேராக நில்லாமல் வளைந்து நிற்பதால் தான் மிருகங்களை விலங்கு என்றனர் போலும். வால் என்றால் வெண்மை. வை என்றால் கூர்மையான. எயிறு என்றால் பல். சிவபெருமானின் உருத்திர வடிவம் இங்கே போற்றப்படுகின்றது போலும். இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை என்று ஐந்து கரத்தனையும் இதே உவமையுடன் இன்னொரு பெரியவர் போற்றுவதையும் நினைவு கூரலாம்.

தீ கொழுந்து விட்டு எரிவதைப் போல் மேல் நோக்கிக் கட்டி விளங்கும் பல சுற்றுகள் கொண்ட சடை முடியை உடையவன் சிவபெருமான். எரி அகைந்து அன்ன அவிர்ந்து விளங்கு புரி சடை. மெல்லிய கோடு போல் இருக்கும் இளைய பிறையைச் சூடி ஒளிவிடும் தலை. முதிராத் திங்களொடு சுடரும் சென்னி. மற்றவர் இளம்பிறை என்று சொல்ல இப்புலவர் முதிரா திங்கள் என்று சொன்னது பெரும் சுவையாக இருக்கிறது.

திங்களை முதிர்ச்சியடையாத என்று சொன்னதைப் போல், என்றும் இளமையுடன் திகழும் அழிவில்லாத தேவர்களை மூவா அமரர் என்கிறார் புலவர். தேவரும் முனிவரும் பிறரும் என்று இருக்கும் யாவரும் அறிய முடியாத தொன்மையான மரபினை உடையவன் சிவபெருமான். எல்லோர்க்கும் மூத்தவன். மூவா அமரரும் முனிவரும் பிறரும் யாவரும் அறியாத் தொல் முறை மரபின்.

வரியை உடைய புலித்தோலாடையை அணிந்தவன் சிவபெருமான். வரி கிளர் வயமான் உரிவை தைஇய. இங்கே வயமான் என்று குறித்திருக்கிறார் புலவர். அதன் நேர் பொருள் மான். மான் தோலாடையும் சிவபெருமானுக்கு உண்டு. அதனால் இங்கே மான் தோலாடையைத் தான் புலவர் குறித்துள்ளார் என்று சொல்லலாம். ஆனால் மானுக்கு புள்ளிகள் உண்டு; வரிகள் இல்லை. இங்கே வரி கிளர் என்று சொன்னதால் இது புலித்தோலாடையைத் தான் குறிக்கிறது என்று பொருள் கொண்டார்கள் போலும் உரையாசிரியர்கள். நெய் என்பது விதப்பாகப் பாலின் நெய்யைக் குறித்து பொதுவாக மற்ற நெய்களையும் குறிப்பது போல் மான் என்பது விதப்பாகப் புள்ளிமானைக் குறித்து பொதுவாக மற்ற விலங்குகளையும் குறிக்கும் போலும். அது உண்மையென்றால் இங்கே வயமான் என்று சொன்னது புலியையே என்பதில் தடையில்லை. உரிவை என்றால் உரிக்கப்பட்ட தோல் ஆடை.

யாழைப் போல் இனிமையான குரலையும் கருமையான கழுத்தினையும் உடைய அந்தணன் சிவபெருமான். யாழ் கெழு மணி மிடற்று அந்தணன். இங்கே யாழ் ஆகுபெயராக மறைகளைக் குறித்தது என்று உரைகள் சொல்கின்றன. அந்தணன் என்று இங்கே குறித்தமையாலும் சிவபெருமானது திருவாக்கு மறைவாக்கு என்பதாலும் அப்பொருளும் பொருத்தமுடைத்தே என்று தோன்றுகிறது.

தொல் முறை மரபினன் சிவபெருமான் என்று முன்னர் சொன்னார் புலவர். முடிவும் இல்லாதவன் என்று இங்கே சொல்கிறார். முடிவு இல்லாத சிவபெருமானின் திருவடி நிழலில் உலகம் நிலையாக நிற்கின்றதே என்கிறார். தாஇல் தாள் நிழல் தவிர்ந்து அன்று ஆல் உலகே! இந்த உலகையும் மூவா அமரரும் முனிவரும் பிறரும் யாவரும் ஆனவர்களைக் காக்கத் தானே ஆலகாலத்தை உண்டு மணிமிடற்றன் ஆனான் சிவபெருமான். அவன் திருவடி நிழலின் பெருமை சொல்லவும் அரிதே!

Tuesday, December 22, 2009

தன்னைத் தானே சுற்றுதல்!


சித்திரைத் திருவிழாவின் போது வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் போது ஆற்றிலும் ஆற்றங்கரையிலும் நின்று அந்தத் திருநாளைத் தரிசிக்கும் பேறு பெற்றவர்கள் வினோதமான ஒரு நிகழ்ச்சியைக் கண்டிருக்கலாம். தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் ஆற்றில் இறங்கிய சிறிது நேரத்தில் ஆற்றில் ஏற்கனவே வெள்ளி குதிரை வாகனத்தில் நின்று கொண்டிருக்கும் ஒரு பெருமாள் எதிர் வந்து கள்ளழகரை வரவேற்பதையும் கள்ளழகரை மூன்று முறை வலம் வந்து முதல் மரியாதைகளைப் பெறுவதையும் காணலாம். திருமலை நாயக்கர் காலம் முதலாக இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருவதாகச் சொல்கிறார்கள். அப்படி கள்ளழகரிடம் இருந்து ஆற்றில் இறங்கிய உடனே முதல் மரியாதை பெறுபவர் மதுரை தெற்கு மாசி வீதி வீரராகவப் பெருமாள்.

மதுரை கூடல் அழகர் திருக்கோவிலுக்குத் கிழக்கே சிறிது தொலைவில் மதுரை தெற்கு கிருஷ்ணன் திருக்கோவில் அமைந்திருக்கிறது. அதற்கும் கிழக்கே ஏறக்குறைய தெற்கு கிருஷ்ணன் கோவிலுக்கு நேர் முன்னர் இருப்பது வீரராகவப்பெருமாள் திருக்கோவில். சிறு வயதில் நவராத்திரியின் போது ஒவ்வொரு இரவும் தெற்கு கிருஷ்ணன் கோவில் தொடங்கி, வீரராகவப் பெருமாள் திருக்கோவில், தெற்கு மாசி வீதி காமாட்சி அம்மன் திருக்கோவில், தெற்கு மாசி வீதி திரௌபதி அம்மன் திருக்கோவில், தெற்கு மாசி வீதி தென் திருவாலவாய சுவாமி திருக்கோவில், மேல மாசி வீதி இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோவில், மேல மாசி வீதி மதனகோபால சுவாமி திருக்கோவில், கூடல் அழகர் திருக்கோவில் என்று வரிசையாகச் சென்று நவராத்திரி அலங்காரங்களைத் தரிசித்தது இப்போது நினைவிற்கு வருகிறது. வீரராகவப் பெருமாள் திருக்கோவிலில் வீரராகவப் பெருமாளும் திருவரங்கநாதனும் தனித்தனியே நவராத்திரிக் கொலு வீற்றிருப்பார்கள். திருக்கோலங்கள் காணக் கண் கோடி பெறும்.

திருமலை நாயக்கர் காலத்தில் சித்திரைத் திருவிழாவின் போது கள்ளழகர் வீற்றிருந்த தேனூர் மண்டபத்தில் தீ விபத்து ஏற்பட்ட போது தன் உயிரையும் பொருட்படுத்தாமல் தீயினுள் புகுந்து கள்ளழகர் திருமேனியைக் காத்தார் வீரராகவப் பெருமாள் கோவில் அர்ச்சகர். அந்தத் தீரச் செயலைப் பாராட்டி திருமலை மன்னர் தனக்குரிய முதல் மரியாதையை அர்ச்சகருக்கு வழங்க, அர்ச்சகரோ தன் வழிபடு தெய்வமான வீரராகவப் பெருமாளுக்கு அந்த முதல் மரியாதை கிடைக்க வேண்டும் என்று சொன்னார். அதன் படி அப்போதிலிருந்து சித்திரைத் திருவிழாவின் போது கள்ளழகர் வீரராகவருக்கு முதல் மரியாதை தருகிறார்.

கள்ளழகர் ஆற்றில் இறங்குவதற்கு முன்னரே வெள்ளி குதிரை வாகனத்தில் வீரராகவப் பெருமாள் மதுரையிலிருந்து கிளம்பி வந்து ஆற்றில் இறங்கி காத்திருப்பார். கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் ஆற்றில் எழுந்தருளியவுடன் வீரராகவர் எதிர் சென்று வரவேற்பார். பின்னர் மும்முறை கள்ளழகரைச் சுற்றி வருவார். பின்னர் கள்ளழகர் வீரராகவருக்கு மாலை, பரிவட்டம், தீர்த்தம் முதலியவற்றை அளிப்பார். வீரராகவருக்கு மாலையும் பரிவட்டமும் சூட்டப்படும். வீரராகவரின் பிரதிநிதியாக அர்ச்சகர் தீர்த்த பிரசாதம் பெற்றுக் கொள்வார்.

அடுத்த முறை சித்திரை திருவிழாவின் போது அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தைக் காண அழகர் அழைத்தால் இந்த நிகழ்ச்சியையும் கட்டாயம் கண்டு களியுங்கள்.

Monday, December 21, 2009

கூரத்தாழ்வானின் குரு பரம்பரை - 5 (மணக்கால் நம்பி)

தமிழக வைணவ குருபரம்பரையில் திருமால், திருமகள், சேனை முதல்வர், நம்மாழ்வார், நாதமுனிகள், உய்யக்கொண்டார் ஆகியோரின் வாழித் திருநாமங்களை இதுவரைப் பார்த்திருக்கிறோம். இன்று உய்யக்கொண்டாரின் சீடரான மணக்கால் நம்பியின் வாழித் திருநாமத்தைப் பார்க்கப் போகிறோம்.

"இராதா மோகன். இரவி உய்யக்கொண்டாரைப் பற்றி சொல்லும் போது அவருடைய சீடரான மணக்கால் நம்பியைப் பற்றி உங்களுக்கு நன்றாகத் தெரியும் என்று சொன்னார். அவரைப் பற்றி சொல்லுங்களேன்".

"என்ன குமரன் விளையாடுகிறீர்களா? உங்களுக்கு மணக்கால் நம்பியைப் பற்றி தெரியாதா என்ன?"

"கொஞ்சம் தெரியும் இராதா. அவர் உய்யக்கொண்டாருடைய சீடர் என்றும் நாதமுனிகளின் பேரனான ஆளவந்தாருடைய ஆசாரியர் என்று தெரியும். மற்ற படி ஒன்றும் தெரியாது".

"சரி. எனக்கு அவரைப் பற்றித் தெரிந்த சிலவற்றைச் சொல்கிறேன்.

மணக்கால் நம்பியின் இன்னொரு பெயர் இராமமிச்ரர். பரசுராமன், இராமன், பலராமன் இம்மூவரையும் முதல் மூன்று இராமர்கள் என்றும் இவரை நான்காவது இராமர் என்றும் சொல்வார்கள். திருச்சிக்கு அருகில் இருக்கும் அன்பில் என்ற கிராமத்தில் பிறந்தவர்."

"கூரத்தில் பிறந்தவர் கூரத்தாழ்வான் என்று பெயர் பெற்றதைப் போல் மணக்கால் என்ற ஊரில் பிறந்ததால் இவருக்கு மணக்கால் நம்பி என்று பெயர் வந்ததாக நினைத்தேனே. அது தவறா?"

"அதுவும் ஒரு வகையில் சரி தான் குமரன். அன்பில் என்ற ஊரில் இருந்த ஒரு பகுதிக்கு மணக்கால் என்ற பெயர் இருந்தது என்று சொல்லக் கேள்வி. ஆனால் மணக்கால் நம்பியின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சியால் அவருக்கு இந்தத் திருப்பெயர் வந்தது என்றும் சொல்வார்கள்".

"எந்த நிகழ்ச்சி அது இராதா?"

"உய்யக்கொண்டாரின் மனைவியார் மறைந்த பின்னர் உய்யக்கொண்டாரின் வீட்டு மேற்பார்வையையும் சமையல் வேலைகளையும் இராமமிச்ரரே ஏற்றுக் கொண்டார். உய்யக்கொண்டாருக்கு சிறுமியர்களான இரு மகள்கள் இருந்தனர். அவர்களை தாயைப் போல் வளர்த்தார் இராமமிச்ரர். ஒரு முறை அச்சிறுமியர் ஆற்றுக்குச் சென்று நீராடி வரும் போது வழியில் இருந்த சேற்றில் கால் வைக்கத் தயங்கினார்கள். அதனைக் கண்ட இராமமிச்ரர் அச்சேற்றில் தானே விழுந்து தன் உடலின் மேல் அச்சிறுமியர் ஏறிச் செல்லுமாறு சொன்னார். அதே போல் அவர்கள் செய்ய அவர்களின் காலடித் தடங்கள் அவர் உடலில் விழுந்தன. மணற்கால் தடங்கள் பெற்றதால் அவருக்கு மணக்கால் நம்பி என்ற பெயர் வந்தது".

"அடடா. அவருடைய ஆசாரிய பக்தியை என்றென்றும் எல்லோரும் நினைத்து நல்வழி காணும்படியாக அவருக்கு இந்தத் திருப்பெயரே நிலைத்துவிட்டது போலும்".

"ஆமாம் குமரன். ஆசாரியன் மட்டுமின்றி அவருக்குத் தொடர்புடைய எல்லோரும் நம்மை ஆளும் உரிமையுடையவர்கள் என்று எண்ணுவதும் அதே போல் நடந்து கொள்வதும் தான் சீடனுக்கு இலக்கணம் என்று சொல்வார்கள். அந்த இலக்கணத்திற்கு இலக்கியமாக அமைந்தவர் இந்த நான்காம் இராமர்".

"இராதா. வெகு நாட்களாக எனக்கு ஒரு ஐயம் உண்டு. நாதமுனிகளின் பேரர் தானே யமுனைத்துறைவனான ஆளவந்தார். அப்படியிருக்க நேரடியாகத் தன் பேரனுக்குத் தானே உபதேசம் செய்யாமல் ஏன் தன் சீடர்களிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தார்?"

"குமரன். நாதமுனிகள் மறைந்த போது ஆளவந்தார் சிறுவர். அதனால் தான் தன் சீடர்களிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தார்".

"ம்ம். அது சரி. ஆனால் தாத்தாவுக்கும் பேரனுக்கும் நடுவில் இரு ஆசாரியர்கள் வந்துவிடுகிறார்களே. ஏன் அப்படி?"

"உய்யக்கொண்டார் நாதமுனிகளை விட சில வருடங்களே இளையவர். மணக்கால் நம்பிகள் உய்யக்கொண்டாரை விட சில வருடங்களே இளையவர். ஒருவருக்கு அடுத்து ஒருவர் மறையும் காலம் வந்ததால் ஆளவந்தாருக்குக் குருவாய் இருக்கும் பொறுப்பை ஒருவர் அடுத்தவருக்குக் கொடுக்க வேண்டி வந்தது. நாதமுனிகள் நேரடியாகத் தன் பேரனுக்கு உபதேசம் தர விரும்பினார். ஆனால் காலம் வந்துவிட்டதால் அந்தப் பொறுப்பை உய்யக்கொண்டாருக்குத் தந்தார். அவரும் ஆளவந்தாரைச் சீடராய் அடையும் நேரத்திற்கு முன்னரே மறைய வேண்டி வந்ததால் மணக்கால் நம்பியிடம் அந்தப் பொறுப்பைத் தந்தார். அதனாலேயே நாதமுனிகளை ஆளவந்தாரின் நேரடி ஆசாரியராகச் சொல்லும் வழக்கமும் உண்டு".

"இப்போது புரிகிறது இராதா. நன்றி".

"இன்னொன்றும் சொல்ல வேண்டும் குமரன். சேனை முதலியாரின் அம்சம் நம்மாழ்வார் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். சேனை முதல்வரான விஷ்வக்சேனரின் சேனைத்தலைவர்கள் கஜானனர், குமுதர், குமுதாட்சர், ஹரிவக்த்ரர் என்பவர்கள். கஜானனர் நாதமுனிகளாகவும், குமுதர் உய்யக்கொண்டாராகவும், குமுதாட்சர் மணக்கால் நம்பியாகவும், ஹரிவக்த்ரர் ஆளவந்தாராகவும் அவதரித்தார்கள் என்றும் சொல்லுவார்கள்".

"ஆகா. அருமை அருமை. மிக்க நன்றி இராதா. இப்போது மணக்கால் நம்பிகளுடைய வாழித் திருநாமத்தைப் படித்தால் நன்கு புரியும் என்று நினைக்கிறேன்".

***

தேசம் உய்யக் கொண்டவர் தாள் சென்னி வைப்போன் வாழியே
தென்னரங்கர் சீர் அருளைச் சேர்ந்திருப்போன் வாழியே
தாசரதி திருநாமம் தழைக்க வந்தோன் வாழியே
தமிழ் நாதமுனி உகப்பைத் தாபித்தான் வாழியே
நேசமுடன் ஆரியனை நியமித்தான் வாழியே
நீள் நிலத்தில் பதின்மர் கலை நிறுத்தினான் வாழியே
மாசி மகம் தனில் விளங்க வந்துதித்தான் வாழியே
மால் மணக்கால் நம்பி பதம் வையகத்தில் வாழியே


உலகம் உய்யும் வகையில் தமிழ் மறைகளை நிலை நாட்டியவரான உய்யக்கொண்டாரின் திருவடிகளைத் தன் தலையில் ஏந்திக் கொள்ளும் மணக்கால் நம்பி வாழ்க!

தென்னரங்கரின் சிறந்த அருளை என்றும் நினைத்திருப்பவர் வாழ்க!

தசரதன் மகனான இராமனின் திருநாமம் உலகில் தழைக்கும் வகையில் நான்காவது இராமனாக வந்தவர் வாழ்க!

தமிழ் மறைகளை மீட்டுத் தந்த நாதமுனிகளின் மகிழ்ச்சியை நிலைநாட்டியவர் வாழ்க!

அன்புடன் உயர்ந்தவரான ஆளவந்தாரை நல்வழியில் செலுத்தியவர் வாழ்க!

நீள் நிலத்தில் பத்து ஆழ்வார்களின் பாசுரங்களை நிலை நிறுத்தியவர் வாழ்க!

மாசி மகம் தன்னில் உலகம் விளங்க வந்து உதித்தவர் வாழ்க!

திருமாலே என்னும் படியான மணக்கால் நம்பி திருவடிகள் உலகத்தில் வாழ்க வாழ்க!

Saturday, December 19, 2009

தமிழின் திருநாள்

மார்கழி மாதத்தில் வரும் தமிழின் திருநாளாம் திருவாய்மொழி திருமொழித் திருநாளைப் பற்றி திரு. மோகனரங்கன் அவர்கள் எழுதிய கட்டுரையை இங்கே 'படித்ததில் பிடித்தது' வகையில் தருகிறேன்.

***

திருமொழித் திருவாய்மொழித் திருநாள்

தமிழின் திருநாள்

சார்! வைகுண்ட ஏகாதசி வரது போல இருக்கே! ஸ்ரீரங்கம் போகப்போறீங்களா? என்றார் நண்பர் தொலைபேசியில். கூப்பிட்டால் போகலாம் என்றேன். 'என்ன சார் இதுக்கெல்லாம் கூப்பிடுவாங்களா? நாமேதான் போகவேண்டும்' என்று உபதேசம் செய்தார். 'ஆமாம் சரிதான்' என்று சொல்லிவைத்தேன். ஆனால் நான் மட்டுமன்று. நெடுங்காலம் ஸ்ரீரங்கத்திலேயே ஊறிப்போனவர்கள் யாரை நீங்கள் கேட்டாலும் இது போன்ற பதில்தான் வரும். இப்பொழுது டி வி சானல்கள் வந்து எல்லாவற்றையும் மழுங்க அடித்திருக்குமோ என்னவோ. உண்மையான ஸ்ரீரங்கத்துக்காரர் என்றால் அப்படித்தான். 'அவனுக்கு என்ன சார் எதைப் பற்றியுமே கவலையில்லாமல் படுத்துண்டு இருக்கான்' என்று சொன்னால் நீங்கள் ஸ்ரீரங்கத்தில் 'யாரு? வீட்டிலயா? பையனா? மாமாவா? தோப்பனாரா? ' என்றெல்லாம் கேட்டுக்கொண்டிருக்கக் கூடாது. பூலோக வைகுண்டம் என்று ஸ்ரீரங்கத்தைச் சொல்வது ஏதோ உபசாரமாக அன்று. ஸ்ரீவைஷ்ணவ ஆகமங்களில் ஸ்ரீவைகுண்டம் என்பது என்ன விவரணைகளோடு அமைந்திருக்கிறதோ அதனுடைய ஆர்கிடெக்ட் மாடல் போன்றதுதான் ஸ்ரீரங்கம். ஏன் பாரமேஸ்வர சம்ஹிதையில் என்னென்ன திக்பாலர்கள், அதிஷ்டான தேவதைகள், கிரியா பாதத்தின் படி என்னென்ன மூர்த்தி பேதங்கள், உற்சவாதிகளின் தாத்பர்யம் அனைத்தையும் நுணுக்கமாக பாரமேஸ்வர சம்ஹிதை கோவிந்தாச்சாரியார் ஸ்வாமி ஒரு காலத்தில் விளக்கமாகச் சொல்லிக் கொண்டிருந்தார். அவரிடம் அந்த நுணுக்கங்களை எழுதி வாங்கிப் பாதுகாக்க வேண்டும் என்று பல மகனீயர்கள் சொல்லிக்கொண்டு இருந்தனர். அதற்குள் காலங்கள் மாறிவிட்டன.

ஆகமங்களில் ஜீவனின் முக்தி அடைதலைப் பற்றிய விவரணைகள் வரும். அர்ச்சிராதி கதியில் சென்று ஜீவன் முக்தியை அடைகிறான் என்பது செய்தி. அர்ச்சிர் என்றால் ஒளி. ஓளிமயமான வழியில் உயிரின் கடைத்தேற்றத்திற்கான பயணம் என்பது எத்தனை ஆரோக்கியமான ஒரு சித்திரம்.! நாம் தான் எல்லாவற்றையும் 60 வயதிற்கு மேல் பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டு, 60 வருவதற்கு முன்னரே, சார் கண் பிரச்சனை, ரொம்ப நேரம் படிக்க முடியலை, உட்கார்ந்த முதுகு பிடிக்கறது, நடந்தா உடம்பு கூட வருகிறது, கால் எல்லாம் விண் விண் என்று இழுக்கிறது, அதிக நேரம் உட்கார்ந்து கேட்க முடியலை, சார் ஏதாவது நல்ல ஸத் விஷயமா காதுல விழுந்தா அப்பா என்ன சுகமா தூக்கம் வருதுங்கிறீங்க, ---இப்படித்தான் நமது ததவார்த்த ரீதியான விஷய்ங்களில் அக்கறையும், கொடுப்பினையும் இருந்து கொண்டிருக்கிறது. 'சார் என்ன நினைச்சிண்டு இருக்கீங்க? அதற்கெல்லாம் ஏது சார் நேரம்? வயிற்றுப் பாடே பெரும் பாடு. அது போதாதுன்னு ஏகப்பட்ட பிக்கல் பிடுங்கல், வீட்டில், ஆபீசில். ஆனால் கிரிக்கட் பார்க்க இதெல்லாம் தடையாவதில்லை. சினிமா நட்சத்திரங்கள் ஆட்டம் பாட்டங்களைப் பார்க்க எதுவும் தடையில்லை. இதில் எதுவும் தப்பில்லை. ஏனெனில் லோகோ பின்ன ருசி: ஆயினும் 'கிளரொளி இளமை கெடுவதன் முன்னம் வளரொளி மாயோன் மருவிய கோயில் தளர்விலராகில் சார்வது சதிர்' என்று போய்ப்பார்த்தால், அதுவும் மார்கழி மாதத்தில் விடியற் பொழுதின் பனிப்படலத்தில், அன்றாடம் பொங்கிய பொங்கலும், பொழியும் இசையும், வழியும் கதிரொளியுமாய் ஸ்ரீரங்கம் ஸ்ரீவைகுண்டமேதான் என்று சொல்ல வேண்டியிருக்கும். ஸ்ரீரங்கநாதனோ ஆகமங்களில் சொல்லியபடி ஜீவன் முக்தி அடையும் அர்ச்சிராதி மார்க்கத்தைத் தானே முக்தனாக வேஷம் போட்டுக் காண்பித்து நடித்துக்க்கொண்டிருப்பான்.

மார்கழி முதல் தேதி முதல் தொடங்கும் திருப்பாவை நம்மை ஸர்வ அவஸ்தைகளினின்றும் துயிலெழத் தூண்டியபடியே இருக்கும். பகல் பத்து இராப் பத்து என்று 21 நாட்கள் மக்கள எல்லாம் கோவிலை நோக்கிப் போவதும், அர்ஜுன மண்டபத்தில், திருமாமணி மண்டபத்தில் என்று மாறி மாறி அரங்கத்தரவின் அணையான் அக்காவின் தொணப்பல் தாங்காமல் ஒருவழியாய் எழுந்து சுறுசுறுப்பாகக் கிளம்பித் தமிழை உன்னிப்பாகக் கேட்டுக்கொண்டிருப்பான். தமிழை அவனுக்கு எடுத்துச் சொல்லும் அரையர்களோ மகாராஜாக்கள் போல் தலையில் கிரீடம் தரித்து நின்று சொல்வார்கள். இந்த டியூஷன் படிக்கற பிள்ளை சமத்தாகத் தன் கூட்டாளிகளை எல்லாம் செட் சேர்த்துக்கொண்டு உட்கார்ந்து கேட்கும். இந்த ட்யூஷன் வாத்யார்கள் எல்லாம் மிகவும் கண்டிப்பு. கொஞ்சம் விட்டால் பிள்ளையாண்டான் தூங்கப் போய்விடும் என்று தெரியும்.

அது சரி. இந்த மாதிரி கோவிலில் தெய்வத்திற்குத் தமிழைச் சொல்வது என்பது நாம் விளையாட்டாகச் சொல்லி விட முடிகிறது. ஆனால் எந்தக் காலத்தில் யார் ஏற்படுத்தினது? உலக மதங்களிலேயே இன்றும் பொருள் தெரிகிறதோ இல்லையோ கடவுளுக்கு என்று புராதன மொழியில்தான் சொல்ல வேண்டும் என்பது பெரிதும் மாறாமல் இருக்கும் போது இங்கு மட்டும் சாந்தமாக ஒரு புதுமை. கவிதை சொட்டச் சொட்டப் பைந்தமிழில் கடவுள் காதலைக் கைங்கர்ய பரர்கள் விண்ணப்பம் செய்ய அவன் சற்று அங்கும் இங்கும் திரும்பினாலும் ம்ம்ம்ம் 'மெய் நின்று கேட்டருளாய்' என்று அதட்டி அன்போடு ஸேவிக்கின்றார்கள். யார் இதற்கெல்லாம் அடிப்படை இட்டது தெரியுமா?

வேறு யார் திருமங்கை மன்னன் தான். ஊரை வளைத்து மதிலைக் கட்டினார். உண்மையை வளைத்துத் தமிழைக் கட்டினார். உறங்கிய பக்தியை துயிலெழுப்பினாள் அக்கா. உறங்காத தெய்வம் விழித்துக் கொண்டது. தமிழ் பின் சென்ற பெருமாள் தண் தமிழ்க் கொண்டல் பொழிய திருவோலக்கம் இருந்து நனைகின்றான். திருமங்கை மன்னனுக்குத் திருவாய்மொழி என்றால் கொள்ளை ஆசை. நம்மாழ்வாரின் பக்திப்பெருக்கில் அமிழ்ந்தார். தம்முடைய திருவாய்மொழியைக் கேட்டு ஆரார் வானவர்கள் என்று சடகோபன் சொன்னது அவர் மனத்தில் ரீங்காரம் இட்டுக்கொண்டு இருந்தது. நிதய சூரிகளே இங்கிருப்போர் அங்கு சென்றால் 'உங்களுக்குத் திருவாய்மொழி தெரியுமா? சொல்லுங்கள் சொல்லுங்கள் என்று சொல்லச் சொல்லிக் கேட்டு திருப்தி அடைய மாட்டார்களாம். ஸ்ரீவைகுண்டத்திலேயே இந்த கதி என்றால் பூலோக வைகுண்டத்தில் நிச்சயம் அது நடைமுறைக்கு வரவேண்டுமே என்று நினைத்தவர் சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். ஒரு நாள் அரஙகனின் அருளப்பாடு வந்தது. 'கலியன் என்ன வேண்டும் உமக்கு?' சரியான சமயம். கலியன் விடுவாரா? 'நாயன் தே! வடமொழி வேதங்களை நீர் அத்யயனத் தொடக்கம் தொடங்கி செவி மடுப்பது போல் திராவிட வேதமாகிய திருவாய்மொழியையும் அதற்கு முந்தைய பத்து நாட்கள் தேவிமார் பரிஜனங்கள் உடனே திருவோலக்கமாக வீற்றுக் கேட்டருள வேண்டும்.' என்றார். வானிளவரசு வைகுந்தக் குட்டன்
வரந்தரும் பெருமாள் ஆனார்.

அன்று தொடங்கி ஆழ்வார் திருநகரியிலிருந்து நம்மாழ்வாரை எழுந்தருளப் பண்ணிக்கொண்டு வந்து திருவாய்மொழித் திருநாள் நடத்தும் வழக்கம் நடந்தது. அதற்கு நம்மாழ்வாருக்கு அழைப்பு ஓலை பெருமாள் கைப்பட எழுதி அனுப்புவது திருக்கார்த்திகை தீபத்தின் அன்று. பின் காலம் இருட்டாகி திருவாய்மொழி மறைந்து, நாதமுனிகள் 'ஆராவமுதே' பத்துப்பாட்டின் பின் தொடர்ந்து சென்று ,
திருவாய்மொழி, திருமங்கை மன்னன் மற்ற ஆழ்வார்கள் அனைவரது பாடல்களையும் மீட்டது ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாய வரலாறு.

நாதமுனிகள் திவ்ய பிரபந்தங்களை மீட்டு, நின்று போயிருந்த தமிழ்த் திருநாளை மீண்டும் தொடங்கி, பண்டை நாளைவிட இன்னும் விமரிசையாக தேவ கானம் என்ற புதிய இசை முறையில் ஆழ்வார் பாடல்களை இசையமைத்து உரியவரைப் பயிற்றி பெரும் ஓலக்கமாகச் செய்து திருவிழாவாக ஆக்கிவிட்டார். திருவாய்மொழிக்கு திருநாள் கண்ட கலியனின் திருமொழிகளையும், மற்றுமுள்ள ஆழ்வார்களின் பாசுரங்களையும் திருவாய்மொழி பத்துநாளுக்கு முந்தைய பத்துநாளும் பகலில் விண்ணப்பம் செய்ய ஏற்பாடு செய்து, திருமொழித் திருவாய்மொழித் திருநாளாக வளர்த்தெடுத்த பெருமை நாதமுனிகளைச் சேரும். மங்கை மன்னன் வேற் கலியன் மான வேல் பரகாலன் கண்ட கனா அவர் காலத்திலேயே வேரூன்றி நாதமுனிகள் காலத்தில் கப்பும் கிளையும் கனியும் தட நிழலுமாய் விரிந்து எம்பெருமானார் காலத்திலோ பெரும் கற்பக விருட்சமாய் விச்வரூபம் எடுத்ததுதான் சங்கத் தமிழ் ரங்கத் தமிழாகித் திருவோலக்கம் வீற்று இன்றும் இனியும் விண்ணும் ஆண்டு நிற்கிறது மண்ணூடே.

சூடிக்கொடுத்த சுடர்க் கொடி
சொல்லிக் கொடுத்த நெறிப்படி
சங்கத் தமிழ்ச் சங்கமத்தில்
சாத்வத நூல் சையோகத்தில்
வேதாந்தம் விளையுதம்மா
விண்ணும் இங்கே தெரியுதம்மா
மார்கழித் திங்கள்
மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ !

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்

***

Tuesday, December 01, 2009