Saturday, December 31, 2005

100: எழுத்தறிவித்தவன் இறைவன்

'எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்; எழுத்தறிவித்தவன் இறைவன்; ஆசார்ய தேவோ பவ; மாதா பிதா குரு தெய்வம்' என்று பலவிதமாக, அறிவுக்கண் திறக்கும் ஆசிரியர்களைப் பற்றி நம் பண்பாடு சொல்கிறது. குரு வணக்கம் செய்தே எந்தக் காரியத்தையும் தொடங்க வேண்டும். ஆனால் நானோ அப்படிச் செய்யாமல் 100 பதிவு வரை எழுதிவிட்டேன். நல்ல நேரத்தில் தி.ரா.ச அவர்கள் அதனை நினைவூட்டினார். அதனால் இந்த 2006 ஆண்டு தொடங்கும் இந்த நல்ல நாளில் 100வது பதிவை என் வாழ்வில் பல நிலைகளில் எனக்கு அமைந்த ஆசிரியர்களைப் பற்றியதாக எழுதலாம் என்று எண்ணி ஆரம்பிக்கிறேன்.

அம்மாவை விடச் சிறந்த ஆசிரியர் யார் உண்டு? அன்று அந்தத் தாய் என்ன விதைக்கிறாளோ அது தானே நன்கு வேர்விட்டு பெரிய மரமாக (இந்த வார நட்சத்திரத்தைச் சொல்லலீங்க) வளர்கிறது. சின்ன வயதில் அம்மா கையைப் பிடித்துக் கொண்டு கோவில் கோவிலாகச் சென்று கந்தர் சஷ்டி கவசம் சொன்னது நினைவில் என்றும் நிற்கிறது. தமிழையும் பக்தியையும் தாய்ப்பாலுடன் சேர்த்து ஊட்டினாள். அதன் பலனைக் காணத் தான் அவள் இன்று இல்லை. தாயே நீயே துணை. தாயிற் சிறந்த கோவிலும் இல்லை.

எல்லா அப்பாக்களைப் போலவே எந்தக் குறையும் தெரியாமல் வளர்த்த அதே வேளையில் வருடத்திற்கு ஒரு முறை அவரின் அலுவலக நண்பர்களுடன் இணைந்து பல ஊர்களுக்குச் சுற்றுலா அழைத்துச் சென்று உலகத்தை சுற்றிக் காண்பித்த அப்பா அடுத்த ஆசிரியர். பழனிக்கு வருடம் மூன்று நான்கு முறை அழைத்துச் சென்று அம்மா ஊட்டிய முருக பக்தி தழைத்தோங்கச் செய்தவர். பின்னாளில் தன் மகன் பல இடங்களில் பேசுவதையும் எழுதுவதையும் கேட்டும் படித்தும் ஆனந்தக் கண்ணீர் வடித்தும் தனக்கு காயத்ரி மந்திரத்தைத் அதன் பொருளோடு மகன் சொல்லிக்கொடுத்ததும் 'தகப்பன் சாமி' என்று சொல்லி மகிழ்ந்ததும் அவன் அருள். அவர் அன்பையும் ஆசியையும் என்றும் விரும்பி நிற்கிறேன். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.

ஒன்றாம் வகுப்பில் படிக்கும் போது எனக்கு 'ஊமைக் குசும்பன்' என்று பெயர் கொடுத்த ஆசிரியையை இன்னும் மறக்கமுடியவில்லை. அது வரை யாருமே என்னைத் திட்டியதில்லை. திட்டுவதென்ன, என்னைப் பற்றித் தவறாய்ச் சொன்னதில்லை. அன்று அந்த ஆசிரியை எங்களை எல்லாம் தானாகப் படிக்கச் சொல்லிவிட்டு புதிதாக வந்த இன்னொரு ஆசிரியையிடம் வகுப்பில் இருக்கும் ஒவ்வொரு குழந்தையைப் பற்றியும் சொல்லிக்கொண்டிருந்தார். என்னைப் பற்றி அந்த ஆசிரியை என்னச் சொல்லப் போகிறார் என்று ஆவலுடன் கேட்டுக் கொண்டிருந்த எனக்கு அவர் என்னை 'ஊமைக் குசும்பன்' என்று கூறி அதற்கு விளக்கமும் கூறியது மிக்க அதிர்ச்சியாக இருந்தது. அது ஒரு சிறந்த பாடமாய் அமைந்தது. நாம் நினைப்பது மாதிரியே எல்லாரும் நினைப்பதில்லை. அவரவர்கள் பார்வை அவரவர்களுக்கு அமையும் சூழ்நிலையைப் பொறுத்து அமைகிறது. அதனால் எல்லாவிதமான கருத்தையும் எதிர்நோக்க வேண்டும் என்பது மிகவும் உதவிய ஒரு பாடம்.

எங்கள் ஆரம்பப் பள்ளிக்குப் பக்கத்தில் ஒரு சின்ன பலசரக்குக் கடை இருந்தது. ஒரு வயதான தாத்தா அதை நடத்தி வந்தார். அவர் ஒரு நல்ல விஷயம் செய்து வந்தார். பள்ளியில் படிக்கும் குழந்தைகள் ஒரு பேனாவை எடுத்துக் கொண்டு வந்தால் அதில் மையை இலவசமாக ஊற்றித் தருவார். அப்போது அது ஒரு பெரிய விஷயமாகத் தெரியவில்லை. ஆனால் வளர்ந்தவுடன் அவரின் செய்கையின் நோக்கமும் படிப்பு என்பது நம் முன்னேற்றத்திற்கு எவ்வளவுத் தேவையானது என்பதும் நன்கு புரிந்தது. அவரால் முடிந்த அளவில் அவர் செய்ததைப் போல நம்மால் முடிந்த அளவில் மற்றவர் கல்விக்காக நாமும் செய்ய வேண்டும் என்ற ஊக்கத்தைக் கொடுத்த பாடம் அது.

பகவத் கீதை, இராமாயணம், மகாபாரதம், திருக்குறள், திருப்பாவை, தேவாரத் திருவாசகங்கள், திவ்யப் பிரபந்தம், கந்தர் அனுபூதி, திருப்புகழ் போன்ற புத்தகங்களை வீட்டில் வைத்திருந்து அவைகளைப் படிப்பதில் எனக்கு இருக்கும் விருப்பத்தை மிகச் சிறு வயதிலேயே கண்டு அதற்கு ஏற்ற ஊக்கத்தைக் கொடுத்து, கேட்ட போதெல்லாம் என் வயதிற்கு உகந்த விளக்கங்கள் கொடுத்த என் தாய் வழிப் பாட்டி அடுத்து நினைவில் நிற்பவர். மகா பாரதம் படித்து விட்டு பல இடங்களில் புரியாமல் விவகாரமான கேள்விகளைக் கேட்டு அவரை தர்ம சங்கடத்தில் பல முறை ஆழ்த்தியது நன்றாக நினைவில் இருக்கிறது. அப்போதெல்லாம் தாத்தா வந்து வேறு எதையோ சொல்லி என் கவனத்தை மாற்றிவிடுவார். அன்று கேட்ட கேள்விகளுக்கு இன்னும் சரியான விடைகள் எனக்குத் தெரியவில்லை. அதில் ஒரு கேள்வியை ஏற்கனவே பதிவிட்டிருக்கிறேன்.

அடிக்கடி மீனாக்ஷி அம்மன் கோவிலுக்கு வந்து நாட்கணக்கில் கதை சொல்லி 'செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம்' என்பதற்கேற்ப பல விஷயங்களைச் சொல்லிப் புரியவைத்த வாரியார் சுவாமிகளை மறக்க முடியாது. பேசும் போது நடுநடுவே ஏதாவது கேள்விகளைக் கேட்டு கூட்டத்தில் இருக்கும் சிறுவர் சிறுமியர் அதற்குப் பதில் சொல்ல வேண்டும் என்று கூறுவார். சரியாகப் பதில் சொல்லும் சிறுவர்/சிறுமியருக்கு ஒரு சின்ன நூல் பரிசாகக் கொடுப்பார். அப்படிப் பல முறை அவர் கையால் சிறு நூல்களையும் அவர் ஆசிகளையும் பெறும் பாக்கியம் கிடைத்தது. ஒரு முறை என்னுடன் யார் வந்துள்ளார் என்று கேட்ட போது நான் தனியாக வந்துள்ளேன் என்று அறிந்து கண்களில் நீர் மல்க 'நானும் ஒரு வாரமாகப் பார்க்கிறேன். முதல் வரிசையில் இந்த எட்டு வயது சிறுவன் தனியாக வந்து அமர்ந்துக் கொண்டு கூட்டம் முடிந்த பிறகே போகிறான். இவன் நிச்சயமாய் முருகன் அருளால் வருங்காலத்தில் பெரிய ஆளாய் வருவான்' என்று ஆசிர்வதித்தார். அவர் ஆசி சீக்கிரம் பலிக்கும் என்று நம்புகிறேன்.

உயர்நிலைப் பள்ளியில் என் தமிழார்வத்தைக் கண்டுகொண்டு என்னில் தனிக் கவனம் செலுத்தி எனக்குத் தமிழைச் சொல்லிக்கொடுத்த தமிழாசிரியர்கள் சுரேந்திரன் ஐயாவையும் சக்திவேல் ஐயாவையும் மறக்க முடியாது. ஏழாம் வகுப்பு முதல் மூன்று வருடம் சுரேந்திரன் ஐயா எனக்குத் தமிழ் சொல்லிக் கொடுத்தார். அதற்கு அப்புறம் மூன்று வருடங்கள் சக்திவேல் ஐயா தமிழ் வகுப்பெடுத்தார். அன்று அவர்கள் சொல்லிக் கொடுத்தத் தமிழ் தான் இன்று இங்கு வலைப்பதிவுகளில் எழுதும் போது பெருந்துணையாக இருக்கிறது.

பத்தாம் வகுப்பில் எனக்கு கணிதம் சொல்லிக் கொடுத்த சுரேந்திரன் சார் அடுத்து நினைவில் நிற்கிறார். அவர் பல ஆன்மிகப் பெரியவர்களைப் பற்றிப் பல தமிழ் நூல்களை எழுதிப் பதித்திருக்கிறார். என்னையும் எழுதத் தூண்டியவர் அவர். அந்த வயதில் கவிதை எழுத ஆரம்பித்தேன். பாரதிதாசன், சுப்புரத்தின தாசன் (சுரதா), கண்ணதாசன் இவர்கள் வரிசையில் நானும் ஒரு பெரிய கவிஞனாய் வருவேன் என்று எண்ணிக் கொண்டு சுரேந்திர தாசன் (சுதா) என்ற பெயரிலும் இளங்கவி குமரன் என்ற பெயரிலும் கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். மற்றவர் கவிதைகளை ரசிக்க ஆரம்பித்த உடன் நான் கவிதை எழுதுவது இப்போது குறைந்து விட்டது. இன்னும் நான் எழுதியவை எதையும் நூலாகப் பதிக்கவில்லை. எதிர்காலத்தில் நடக்கலாம்.

நான் உங்களிடம் பகவத் கீதை கற்றுக் கொள்ள வேண்டும் என்று சொன்னவுடன் தயங்காமல் வீட்டிற்கு வா என்று சொல்லி வாராவாரம் பகவத் கீதையையும் திவ்யப் பிரபந்தத்தையும் எனக்குச் சொல்லிக் கொடுத்த, தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் வேதியியல் பேராசிரியராய் இருக்கும் திரு. வாசுதேவன் எனக்கமைந்த அடுத்த குரு. வில்லிபுத்தூர் அருகில் இருக்கும் கிருஷ்ணன் கோவிலில் இளங்கலை பொறியியல் படித்துக் கொண்டிருந்தேன் அப்போது. ஒவ்வொரு சனிக்கிழமையும் தவறாமல் மதுரை அருகே இருக்கும் திருநகருக்கு வந்து அவர் இல்லத்தில் அவரிடம் தமிழும் கீதையும் கற்றுக் கொண்டேன். பல முறை அந்த வாரம் மதுரைக்கு (வீட்டிற்கு) வரவேண்டாம் என்று எண்ணியிருப்பேன். அந்த வாரங்களும் தவறாமல் திருநகர் வரை வந்து செல்வேன். அவர் அடிக்கடி சொற்பொழிவு ஆற்றுவார். எனக்கும் சொற்பொழுவு ஆற்ற ஊக்கம் தந்தார்.

நட்பு என்றால் என்ன? நண்பர்கள் எங்கே இருந்தாலும் எப்படி இருக்கவேண்டும்? என்பதை நன்றாக எனக்குப் புரியவைத்தவர்கள் தற்போது குஜராத்தில் இருக்கும் என் நண்பன் குமரனும் வெர்ஜினியாவில் இருக்கும் என் நண்பன் கார்த்திகேயனும். பல விஷயங்கள் அவர்களிடம் கற்றுக் கொண்டுள்ளேன். அவற்றை எல்லாம் சொன்னால் மிக விரிவாய்ப் போய்விடும்.

வேலை பார்க்க ஆரம்பித்தப் பிறகு எத்தனையோ ஆசிரியர்கள். எனக்கு வேலை கொடுத்தவர்கள், என்னுடன் வேலை பார்த்தவர்கள், என்னிடம் வேலை பார்த்தவர்கள் என்று நிறைய பேரிடம் அவர்கள் நேரே சொல்லியும் அவர்கள் செய்வதைக் கவனித்தும் கற்றுக் கொண்டவை ஏராளம். கற்றுக் கொள்வது கடைசிக் காலம் வரை நடப்பது அல்லவா? அதனால் இனிமேல் வரப்போகும் ஆசிரியர்களையும் இப்போதே வணங்கிக் கொள்கிறேன்.

இன்னும் நிறைய பேரைப் பற்றிச் சொல்ல வேண்டும். ஆனால் பதிவு மிக விரிவாகச் செல்கிறது. அதனால் அவர்கள் பெயர்களை மட்டும் கூறிக்கொண்டு விரிக்காமல் விடுகிறேன்.

பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபா, பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்ஸர், பகவான் ஸ்ரீ ரமணர், ஸ்ரீ அரவிந்த மகரிஷி, அன்னை மிரா, ஸ்ரீ ஞானானந்தகிரி சுவாமிகள், ஸ்ரீ நடனகோபால நாயகி சுவாமிகள், இப்படி பல மகான்கள் எழுதியதைப் படித்தும் கேட்டும் பல விஷயங்கள் புரிந்தன.
பத்தாவது படிக்கும் போது வந்த ஒரு கனவு நினைவிற்கு வருகிறது. வீதியில் ஏதோ ஒரு பேராரவாரம். வீட்டு வாசலில் வீட்டில் இருக்கும் எல்லோரும் நின்று கொண்டிருக்கின்றனர். என்னவென்றால் ஒரு மகான் வந்துக் கொண்டிருக்கிறார் என்று சொன்னார்கள். அவர் எங்கள் வீட்டிற்கு முன் வந்தவுடன் என்னை அறியாமல் நான் அவர் முன் சென்று நமஸ்கரிக்கிறேன். யாரோ ஒருவர் ஒரு சிறு நாற்காலியைக் கொண்டு வந்து போடுகிறார்கள். அதில் அந்தப் பெரியவர் அமர்ந்து கொண்டு கீழே விழுந்து வணங்கிக் கொண்டிருக்கும் என் தலையில் தன் கால்களை வைக்கிறார். பின்புலத்தில் கீதையின் பெருமையைப் பேசும் சுலோகத்தை ஒருவர் சொல்கிறார். கனவு கலைந்தது. அப்படி கனவில் வந்து கீதையை படி என்று சொல்லாமல் சொல்லி எனக்குப் பாத தீட்சை கொடுத்தவர் ஆசார்யர் என்று சொன்னவுடனே எல்லாருக்கும் நினைவிற்கு வருபவர்.

என்ன புண்ணியம் செய்தேனோ? சத்குரு நாதா
எத்தனை தவம் செய்தேனோ? உன் அருள் பெறவே (என்ன)

பன்னரும் வேதங்கள் படித்து உணர்ந்தாலும் உன்னருள் இல்லாவிட்டால் ஒன்றுக்கும் உதவாது (என்ன)

அவர் இவரே.



குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணு
குருர் தேவோ மஹேஷ்வர:
குருர் சாக்ஷாத் பரப்ரம்ஹ:
தஸ்மை ஸ்ரீ குரவே நம:

99: தெய்வீக எண்

எண்களில் ஒன்பதாம் எண்ணுக்கு ஒரு தனிப் பெருமை உண்டு. இந்த எண்ணை தெய்வீக எண் என்றும் கூறுவர்.

உயர்வற உயர்நலம் உடையவன் இறைவன்; அவனைக் குறிக்க எண்களிலேயே உயர்ந்த எண்ணாகிய ஒன்பது தானே பொருத்தமான எண்.

இந்த எண்ணுடன் வேறு எந்த எண்ணைக் கூட்டினாலும் எந்த எண்ணைக் கூட்டினோமோ அந்த எண்ணே மிகும். எடுத்துக்காட்டுகள்: 9 + 5 = 14 = 1+4 = 5; 9+3 = 12 = 1+2 = 3; இப்படி தன்னுடன் எந்த எண்ணைக் கூட்டினாலும் தான் மறைந்து அந்த எண்ணை வெளிப்படுத்திக் காட்டுவதால் அது இறையைக் குறிக்கும் எண் என்பர்; இறையும் தன்னை மறைத்து தன்னைச் சார்ந்து நிற்கும் பிறவற்றை வெளிப்படுத்துகிறதே.

அதே போல் இந்த எண்ணின் பெருக்கல் வாய்ப்பாட்டைப் பார்த்தால் இன்னும் ஒரு உண்மை விளங்கும். இந்த எண்ணை வேறு எந்த எண்ணோடு பெருக்கினாலும் விடையாக வரும் எண் ஒன்பதாய்த் தான் இருக்கும். எடுத்துக்காட்டுகள்: 9 * 5 = 45 = 4+5 = 9; 9*11 = 99 = 9+9 = 18 = 1+8 = 9. இப்படி மற்ற எண்களை எல்லாம் தன்னுள் அடக்கிக் கொண்டு தான் மட்டுமே நிலையாய் நிற்பதால் இந்த எண் இறையைக் குறிக்கிறது என்பதில் என்ன சந்தேகம்?

பழந்தமிழில் இந்த எண்ணுக்குத் தொன்பது என்பது பெயர் என்று படித்துள்ளேன். தொன்மையான இறைவனைக் குறிக்கும் எண் தொன்பதாய்த் தானே இருக்க முடியும்? அந்தப் பெயர் எப்படியோ ஒன்பது என்று மறுவிவிட்டது. ஆனால் தொன்னூறு, தொள்ளாயிரம் எல்லாம் இன்னும் வழக்கில் இருக்கிறது.

தொன்னூற்றித் தொன்பதாம் பதிவில் தொன்பதைப் பற்றி பேசக் கிடைத்தது அந்தத் தூயவன் அருளே. அவனைப் பணிந்து இந்த 2005 வருடத்தை இனிதே முடித்து புது வருடம் எல்லார்க்கும் எல்லா நன்மையும் தர வேண்டும் என்று பணிந்து வாழ்த்துவோம்.

பொங்கும் மங்களம் எங்கும் தங்குக.

எல்லார்க்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

Thursday, December 22, 2005

85: துளசி தளம்

துளசியைப் பற்றி நம்மில் பெரும்பாலோருக்குத் தெரிந்திருக்கும். நம் பக்தி இலக்கியங்களிலும் துழாய் மாலை, துழாய் அலங்கல் என்றப் பெயரில் துளசி மிகவும் பெருமையாகப் பாடப்பட்டிருக்கும். கீதையில் கண்ணன் சொல்லும் 'பத்ரம், புஷ்பம், பலம், தோயம்...', 'இலை, பூ, பழம், நீர் இதில் எதையெனக்குச் சமர்ப்பித்தாலும் அதனை அதன் பின் உள்ள பக்தியை முதற்கொண்டு நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுகொள்கிறேன்' என்பதில் இலை இந்த துளசியைத் தான் குறிக்கிறது என்றும், துளசி கண்ணனுக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் அதனை முதலில் சொன்னான் என்றும் படித்துள்ளேன். புனிதமான இந்தத் துளசி காலம் காலமாக நம் நாட்டில் ஒரு மூலிகையாகவும் பயன் படுத்தப் பட்டுள்ளது. ஜலதோசம் (இதற்குத் தமிழில் என்ன சொல்வது?) இருக்கும் போது சிறிது துளசியைப் பறித்து உண்டால் ஜலதோசம் குறையும் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். இந்த மூலிகையைப் பெருமாள் கோவில் போகும் எல்லாருக்கும் கிடைக்கும்படியும் நம் முன்னோர்கள் ஏற்பாடு செய்து வைத்திருக்கிறார்கள்.

அண்மையில் ஒரு ஆங்கில மாத இதழில் துளசியின் மருத்துவ குணங்களைப் பற்றி மேலை நாட்டு ஆராய்ச்சியாளர்கள் சொல்வதைப் பற்றிப் படித்தேன். இது நாள் வரை மேலை நாடுகளில் தக்காளி சூப்பில் மட்டும் பேசில் எனப்படும் துளசியை உபயோகப் படுத்தியிருக்கிறார்கள். இனிமேல் அதனை, நோய் எதிர்ப்புச் சக்தியைக் கூட்டுவதற்காக தேனீருடனும் கலந்து சாப்பிடலாம் என்று தொடங்குகிறது அந்தக் கட்டுரை. அந்தக் கட்டுரையின் தமிழாக்கத்தை இங்கு கொடுக்கிறேன்.

இனிமேல் துளசி தக்காளி சூப்பிற்கு மட்டும் உரியதன்று. நோய் எதிர்ப்பு சக்தியைக் அதிகரிக்க ஒரு கோப்பை துளசி கலந்தத் தேனீரைக் குடிக்கலாம். இதயத்தைக் காக்க அந்த மூலிகையை காய்கறிச் சாறுடன் கலந்துக் குடிக்கலாம். அல்லது உங்கள் மனம் சிறிது குழப்பமுறும்போது அதனை அமைதிப்படுத்தத் துளசிச் செடியை வீட்டில் வைத்திருந்தால் அதன் மணம் உதவலாம்.

இந்தியாவில் இந்த புனித பேசிலுக்குத் துளசி என்று பெயர். அதன் பொருள் 'இணையற்றது' என்பது. மிகப் புனிதமாகக் கருதப்படும் இந்தத் துளசி சமய சம்பந்தமாகப் பெரிதும் பயன்படுத்தப் படுகிறது. எந்த வீட்டில் இந்தச் செடி உள்ளதோ அந்த வீடு துளசியால் பாதுகாக்கப் படுகிறது என்று நம்பப்படுகிறது. ஆயுர்வேத பாரம்பரியத்தில் துளசி, மனதையும் இதயத்தையும் ஆன்மீகப் பாதைக்கு ஏற்ப பண்படுத்துவதில் தலைசிறந்த மூலிகை என்றும், ஜலதோசத்தையும் காய்ச்சலையும் குறைக்கவல்லது என்றும், நுரையீரல் சம்பந்தமான நோய்களுக்கு சிறந்த மருந்து என்று சொல்லப்படுகிறது.

நவீன (மாடர்ன்) ஆராய்ச்சிகள் இரண்டு விஷயங்களை முன் வைக்கிறது . (1) இந்த மூலிகையில் மிகச் சக்தி வாய்ந்த 'ஆன்டிஆக்சிடன்ட்ஸ் antioxidants' - உடல் முதிர்ச்சி அடைவதற்குக் காரணமான ஆக்சிடன்ட்ஸ்களை குறைக்கும் சக்தி இருக்கிறது. அது இதயத்தையும் அது சார்ந்த மற்ற உறுப்புகளையும் பாதுகாக்கிறது. கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது. (2) சுற்றுச் சூழலால் பாதிக்கப் பட்ட, பூச்சிக்கொல்லிகளால் பாதிக்கப்பட்ட நுரையீரலை அந்தப் பாதிப்பில் இருந்து மீட்டு நன்கு ஆரோக்கியமாகச் செயல்பட உதவுகிறது.

ஆரம்பக்கட்ட ஆராய்ச்சிகள் இன்னும் சில விஷயங்களைச் சொல்கின்றன. வயிற்றுப் புண்ணைக் குணமாக்க துளசியைப் பயன்படுத்திப் பார்க்கிறார்கள். நீரிழிவு நோய் உடையவர்களுக்கு துளசியைக் கொடுத்தால் அவர்களில் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறைவதைக் கண்டிருக்கிறார்கள். அண்மையில் துளசிச் சாறு பூச்சிக்கடிகளையும் புரையோடிய புண்களையும் ஆற்றுவதற்கு வெற்றிகரமாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். எந்தவிதமான பின்விளைவுகளும் துளசியால் ஏற்பட்டதாக இந்த ஆராய்ச்சிகளில் தெரியவில்லை.

Natural Health (October 2005 issue) என்ற புத்தகத்தில் வந்த கட்டுரையின் தமிழாக்கம்.

-----------------------------------------------------------------------------

இந்த வார நட்சத்திரம் துளசி அக்காவைப் பற்றியப் பதிவு இது என்று எண்ணி உள்ளே வந்திருந்தால் மன்னிக்கவும். இந்தக் கட்டுரையை இரண்டு மாதங்களுக்கு முன்பே படித்து இதை இங்கு எழுதவேண்டும் என்று எடுத்துவைத்திருந்தேன். அதனை இந்த வாரத்தில் எழுதியது தற்செயலானது இல்லை என்பதை மட்டும் தெரிவித்துக்கொள்கிறேன். (அவர் மீது விழும் போகஸ் லைட் என்மீதும் சிறிது விழட்டுமே) :-)

Tuesday, December 06, 2005

73: அதற்குத் தக

அதிகாலை நேரம். திருவள்ளுவர் தன் குடிலில் அமர்ந்திருக்கிறார். புதிதாய் ஒரு மாணவன் நேற்று தான் சேர்ந்தான்.

புதிய மாணவன்: ஐயனே. நான் என்ன செய்ய வேண்டும்?

திருவள்ளுவர்: கற்க

மாணவன் (மனதில்): 'கற்க' என்று ஒற்றைச் சொல்லில் சொல்லிவிட்டாரே. நம்மையும் அதற்காகத்தான் நம் பெற்றோர் அனுப்பியுள்ளனர். ஆனால் ஏன் கற்கவேண்டும் என்று நம் பெற்றோர் சொல்லவில்லை. ஆசானைக் கேட்போம்.

மாணவன்: ஐயா. ஏன் கற்கவேண்டும்?

திருவள்ளுவர்: கசடற

மாணவன் (மனதில்): இதற்கும் ஒரு சொல்லில் பதில். ஆனால் தெளிவான பதில். நம் புத்தி, மனம், சொல், மெய் இவற்றில் உள்ள கசடுகள், குற்றங்கள், அழுக்குகள் நீங்க கற்கவேண்டும் என்று சொல்லிவிட்டார். சரி. அடுத்து ஒரு கேள்வி வருகிறதே.

மாணவன்: ஐயனே, நம் கசடு அற கற்கவேண்டும் என்று அருளினீர். எப்படி கற்கவேண்டும்?

திருவள்ளுவர்: கசடற

மாணவன் (மனதில்): இதற்கும் கசடற என்கிறாரே. நம் குற்றங்கள் நீங்க, படிப்பதைக் குற்றமின்றி படிக்கவேண்டும் என்கிறார் போலும். மிக்க சரி. படிப்பதை தவறான பொருள் கொண்டு எத்தனைப் பேர் படிப்பதாய் கேட்டுள்ளோம். அதைத்தான் ஐயன் குறிப்பிட்டு, குற்றமின்றி கற்க என்கிறார்.

மாணவன்: ஐயா, எதைக் கற்கவேண்டும்.

திருவள்ளுவர்: கற்பவை கற்க

மாணவன் (மனதில்) : கற்பவை கற்க. மூத்தோர் எதனைக் கற்கிறார்களோ அதனைக் கற்க. மூத்தோர் கற்பவை கற்க. மூத்தோர் எதனை கற்கவேண்டும் என்று சொல்கிறார்களோ அதனைக் கற்க. களவும் கற்று மற என்பார்கள். ஆனால் அது 'கற்பவை'யில் அடங்காது. எனவே மூத்தோர் வழி நடந்து அதனையும் அது போன்றவற்றையும் கற்க கூடாது.

மாணவன்: ஐயனே. கற்பவைகளைக் குற்றமின்றி நம் குறைகள் நீங்கக் கற்கவேண்டும் என்று அருளினீர். அப்படி கற்றவுடன் நம் குறைகள் எல்லாம் நீங்கிவிடுமா? இல்லை வேறு எதுவும் செய்ய வேண்டுமா?

திருவள்ளுவர்: கற்றபின் நிற்க அதற்குத் தக.

-------------------------------------------------------------

என் மனதில்: இந்த கடைசியில் சொன்னது தான் நமக்குப் பிரச்சனையே. எத்தனையோ படிக்கிறோம். படிப்பது எளிதாய் இருக்கிறது. அதனை மற்றவர்க்கும் சொல்கிறோம். சொல்லுதல் யார்க்கும் எளிய; அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்ன்னு சொன்னபடி 'நிற்க அதற்குத் தக' தான் நமக்கு கொஞ்சம் ஆட்டம் காண்கிறது. என் செய்ய?

Saturday, December 03, 2005

71: நன்றே செய்மின் அதை இன்றே செய்மின் - 2

துளசி அக்கா என் 'நன்றே செய்மின் அதை இன்றே செய்மின்' பதிவுக்குக் கொடுத்திருந்த பின்னூட்டத்தை இப்போது தான் படித்தேன். அந்த பின்னூட்டத்தில் 'இன்றே செய்மின் இல்லை குமரன். இப்போதே செய்மின்; இந்தக்கணமே செய்மின்' என்று இருக்கவேண்டும் என்று சொல்லியிருந்தார். அது எவ்வளவு உண்மை என்பது dreamindia2020 நண்பர் வருண் அனுப்பிய ஒரு சோகச் செய்தியில் இருந்து தெரிகிறது. அந்த சோகச் சம்பவத்தைப் பற்றி வருண் அவருடைய ஆங்கில வலைப்பதிவில் எழுதியிருக்கிறார்.