Tuesday, August 28, 2007

திருக்குறளை எரித்தார் பாண்டித்துரை தேவர்

பாண்டித்துரை தேவர் திருக்குறள் நூற்களை வாங்கி அவற்றைத் தீயிட்டுக் கொளுத்தினார் என்று சிவமுருகன் முன்பொரு பதிவின் பின்னூட்டத்தில் சொன்னதைப் படித்தபோது மிக்க வியப்பாக இருந்தது. அதனால் அந்த நிகழ்ச்சியைப் பற்றித் தேடிப் படித்தேன். நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே என்ற தமிழ்ப்புலவர் வாழ்ந்த மதுரையில் பிழை மலிந்த திருக்குறள் பதிப்பு என்றால் அவற்றை எரித்ததும் பொருத்தமான தமிழ்த் தொண்டே.

மதுரையில் வாழ்ந்த ஸ்காட் துரை என்ற ஒரு ஆங்கிலேய வழக்கறிஞர் தமிழ்மொழியில் ஆர்வம் கொண்டு தமிழ் இலக்கணத்தைக் கொஞ்சம் கற்றுக் கொண்டு தமிழ் இலக்கியங்களையும் படிக்கத் தொடங்கினார். தமிழ் அணி இலக்கணம் பேசும் எதுகை மோனைகளில் பெரும் ஈடுபாடு கொண்டு திருக்குறளில் எதுகை மோனை சரியாக அமையாத இடங்களில் அவற்றைத் திருத்தி இவரே ஒரு புதிய திருக்குறள் பதிப்பை வெளியிட்டார். 'சுகாத்தியரால் (ஸ்காட்டால்) திருத்தியும் புதுக்கியும் பதிப்பிக்கப்பட்ட குறள்' என்பது அந்த புதிய திருக்குறள் நூலுக்கான தலைப்பு.

ஒரு முறை நான்காம் தமிழ்ச்சங்கம் தந்த வள்ளலாம் பாண்டித்துரை தேவரை இந்த ஸ்காட் துரை சந்தித்து தாம் செய்த இந்த 'அரிய' பணியைப் பற்றிச் சொல்லி தாம் பதிப்பித்த நூலின் ஒரு பிரதியையும் கொடுத்தார். அந்தப் பதிப்பில் இருந்த குறைபாடுகளைக் கண்டு மிகவும் மனம் நொந்தார் பாண்டித்துரை தேவர்.

திருக்குறளின் முதல் குறட்பா இப்படி திருத்தப்பட்டிருந்தது.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
உகர முதற்றே உலகு


இப்படியே நூல் முழுக்க நெடுகவும் பெரும்பிழைகள் இருந்தன. தன் சினத்தை மறைத்துக் கொண்டு தேவர் ஸ்காட்டிடம் இந்த நூலின் பிரதிகள் மொத்தத்தையும் தாம் வாங்கிக் கொள்வதாகச் சொன்னார். ஸ்காட்டும் தேவர் தன் அரிய பணியைப் பாராட்டி அதில் மகிழ்ந்து எல்லாவற்றையும் வாங்குவதாக எண்ணிக் கொண்டு தன்னிடம் இருந்த எல்லா பிரதிகளையும் கொண்டு வந்து கொடுத்தார். முன்னூற்றுச் சொச்சம் பிரதிகளுக்கு பிரதி ஒன்றிற்கு ஒரு ரூபாய் வீதம் விலை கொடுத்து எல்லாவற்றையும் வாங்கிய தேவர், இராமநாதபுரம் சென்ற பின் அந்த புத்தகக் கட்டை கொண்டு வரச் செய்து எல்லாவற்றையும் தம் கண் முன் தீயிட்டுக் கொளுத்த வைத்தார்.

'இப்பித்துக்கொள்ளியிடம் எஞ்சியிருந்த முன்னூறு பிரதிகளும் அறிஞர் பாற் சென்று மனத்துன்பம் விளைக்காதிருப்பதற்கும் அறியாதார் திருக்குறளை தாறுமாறாக பாடமோதாமல் இருப்பதற்கும் இது தான் தக்க பரிகாரம்' என்று எல்லோரிடமும் சொல்லி மகிழ்ந்தார் தேவர்.

***

இந்த நிகழ்ச்சியைப் படித்தவுடன் சில எண்ணங்கள் தோன்றின. ஸ்காட் துரையின் தமிழார்வம் மெச்சத் தகுந்ததே. அந்த ஆர்வத்தால் தமிழ் கற்றுக் கொண்டது பாராட்டத் தகுந்தது. அது போல் தற்காலத்தில் மக்களுக்கு உண்மையை எடுத்துச் சொல்ல வேண்டும் என்று பதிவர்கள் பலரும் கொள்ளும் ஆர்வமும் அதில் அவர்கள் செலவிடும் நேரமும் மெச்சவும் பாராட்டவும் தகுந்தவை. எதுகை மோனைகளை மட்டும் கற்றுக் கொண்டு அதிலேயே தமிழ் இலக்கியம் எல்லாமும் முடிந்துவிட்டதாக எண்ணி திருக்குறளை பொருட்குறை தோன்ற திருத்தினார் ஸ்காட். அதே போல் தான் இந்தப் பதிவர்களும் தாங்கள் படித்த சில உண்மைகளையும் பல திரிக்கப்பட்ட உண்மைகளையும் தன் கண்முன் காண்பவை சிலவற்றையும் கொண்டு சில கருத்துகளைச் சொல்லி வருகிறார்கள். அவையே முடிந்த முடிபு என்பது போல் ஒரு தோற்றத்தையும் ஏற்படுத்துகிறார்கள். இந்தக் கட்டுரைகள் ஸ்காட் துரையின் திருக்குறள் பதிப்பைப் போல் தான் இருக்கிறது என்பதை அவர்கள் உணர்ந்தார் இல்லை. ஸ்காட்டிடம் கேட்டிருந்தால் மிகத் தெளிவாக விளக்கியிருப்பார் 'அகர என்று வந்ததால் உகர என்று வருவதே எதுகைக்குப் பொருத்தம். உலகு என்று வந்ததால் உகர என்று வருவதே மோனைக்குப் பொருத்தம். அது மட்டும் இல்லாமல் பொருளிலும் தவறு ஒன்றும் இல்லை. எழுத்துகள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன. உலகு என்ற சொல் உகரத்தில் தொடங்குகிறது. இது தான் வள்ளுவர் சொன்னது' என்று அடித்துச் சொல்லியிருப்பார். திருக்குறள் அறியாதவர் இந்த விளக்கத்தை ஏற்றுக் கொள்வதும் நடந்திருக்கும். ஆகா ஓகோ என்று புகழ்வதும் நடந்திருக்கும். அவர் ஒரு ஆங்கிலேயர் என்பதும் அந்த புகழ்ச்சிகளுக்கு ஊட்டம் கொடுத்திருக்கும். அதே போல் தான் பதிவர்கள் எழுதும் கட்டுரைகளுக்கும் நடக்கிறது. அவற்றில் எழுதியதை மிக நன்கு விளக்கிக் கூற அந்த கட்டுரையாளர்களால் முடிகிறது. அந்த விளக்கத்தை பலர் ஏற்றுக் கொண்டு ஆகா ஓகோ என்று புகழ்வதும் நடக்கிறது.

தேவர் செய்ததைப் போல் அந்தப் பிரதிகளை வாங்கி எரிக்க இந்தக்காலத்தில் முடியாது. இப்போது முடிவதெல்லாம் அந்தக் கட்டுரைகளில் இருக்கும் பிழைகளைத் தகுந்த முறையில் எடுத்துக்காட்டி மாற்றுக்கட்டுரைகள் வரைவதே. அதனையே செய்ய வேண்டும். ஸ்காட் துரையோ மாற்றார். அதனால் தேவர் அவர்கள் அவரிடம் விளக்க முயலவில்லை போலும். ஆனால் இங்கு கட்டுரை எழுதுபவர்கள் நம்மவர்கள். அதனால் கருத்துப் பரிமாற்றம் நன்கு நிகழவேண்டும். நிகழட்டும்.

Friday, August 24, 2007

திருக்குறள் vs.காமசூத்திரம்


'குமரன். உனக்கு சமஸ்கிருதம் தெரியும்ல? காமசூத்திரம் படிச்சிருக்கியா?'

'படிச்சிருக்கேன் நடவரசு. ஆனா சமஸ்கிருதத்துல இல்லை. இங்கிலீஷுல எழுதி நிறைய புத்தகம் வந்திருக்கே. அதுல ஒன்னை நூலகத்துல இருந்து எடுத்துப் படிச்சேன்'

'சமஸ்கிருதத்துல நேரடியா படிக்கலாம்ல?'

'எதுக்கு?'

'நேரடியா படிச்சா என்ன எழுதியிருக்காங்கன்னு தெரியும். மொழிபெயர்ப்பைப் படிச்சா அவங்க சொந்தக் கருத்தையும் சேர்த்து எழுதியிருப்பாங்க இல்லை?'

'அது உண்மை தான். மொழிபெயர்ப்புகளைப் படிக்கிறது நேரடியா படிக்கிற மாதிரி ஆகாது தான். ஆனா காமசூத்திரத்தை மொழி மாத்திப் படிச்சாலே போதும்; அவ்வளவு ஒன்னும் மாத்தி எழுத முடியாது'

'அப்ப எந்த புக்கை நேரடியா அந்த மொழியிலேயே படிக்கணும்ன்னு சொல்ற?'

'கீதை, பஜ கோவிந்தம், சகஸ்ரநாமம்ன்னு நெறைய புத்தகங்கள் இருக்கு. மொழிபெயர்ப்புகள்ல நெறைய நேரம் அவங்கவங்க சொந்த கருத்தையும் சேர்த்து எழுதியிருப்பாங்க. அந்த மாதிரி புத்தகங்கள் படிக்கிறப்ப நேரடியா அந்த மொழியிலயும் படிக்கணும்'

'உனக்கு சமஸ்கிருதம் தெரியும். அதனால படிச்சுருவ'

'நானும் சமஸ்கிருதம் கத்துக்கிட்டவன் இல்லை. இந்த மாதிரி புத்தகங்களை அகராதி துணையோட படிச்சுப் புரிஞ்சுக்க முயற்சி செய்றவன் தான்'.

'குமரா. பகவத் கீதை படிக்கணும். எந்த புக்கு படிக்கலாம்?'

'இப்ப பகவத் கீதை படிச்சு என்ன பண்ண போற?'

'சும்மா தெரிஞ்சுக்கலாம்ன்னு தான்'.

'கட்டாயம் அது படிக்க வேண்டிய புத்தகம் தான். ஆனா அதுக்கு முன்னால திருக்குறள் படி. சிம்பிளா விளக்கம் சொல்லி நிறைய புத்தகம் இருக்கு'

(இது 2004ல் எனக்கும் என்னுடன் வேலை பார்த்த நண்பர் நடவரசுவுக்கும் நடந்த உரையாடல். இது போல் பலருக்குத் திருக்குறள் படிக்க ஊக்குவித்திருக்கிறேன்.)

***

இப்போது இந்த உரையாடல் ஏன் நினைவிற்கு வந்தது என்று கேட்கிறீர்களா? காரணமாகத் தான்.

Thursday, August 23, 2007

தமிழ் இறைவனுக்கும் முன்னால்





'ஏன்டா. சீக்கிரம் வெளிய வா. பெருமாள் ஏளறார்'.

'ஏளரார்ன்னா என்னடா?'

'அதுவா. பெருமாள் வீதி உலா வர்றதைத் தான் அப்படிச் சொல்வோம்'

'அப்படியா. நாங்க எல்லாம் சாமி வருதுன்னு சொல்லுவோம்'.

'சரி. சரி. வெளிய வா. நாம் பெருமாளைச் சேவிக்கலாம்'

'சேவிக்கலாமா? அப்படின்னா?'

'தப்பாச் சொல்லிட்டேன். பெருமாளைக் கும்புடலாம் வாடா'

'சரி. என்னடா இது. இவ்வளவு பெரிய கூட்டம் சாமி முன்னாடி போகுது'

'அதுவா. அது பிரபந்த கோஷ்டிடா. சரி. சரி. பெருமாளை நல்லா சேவிச்சுக்கோ...இல்லை...இல்லை...கும்புட்டுக்கோ'.


'சாமிக்கு நல்லா அலங்காரம் பண்ணியிருக்காங்கடா. பாத்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு. ஏன்டா சாமி இவ்வளவு வேகமா போகுது?'

'அதுவா பிரபந்த கோஷ்டி வேகமா போகுதுல்ல அதான்'

'ஏன்டா. முன்னாடி ஒரு கூட்டம் போச்சு. பின்னாடியும் ஒரு கூட்டம் போகுது. முன்னாடி போன கூட்டமாவது என்னமோ தமிழ்ல பாடிகிட்டுப் போனாங்க. பின்னாடி போறவங்க என்னமோ கத்திக்கிட்டுப் போறாங்களே. யாருடா இவங்க?'

'முன்னாடி போறவங்க பிரபந்த கோஷ்டிடா. ஆழ்வார்கள் பாடின நாலாயிர திவ்யப் பிரபந்தங்களைப் சேவிச்சுக்கிட்டுப் (பாடிக்கிட்டுப்) போறாங்க. பின்னாடி போறவங்க வேத பாராயண கோஷ்டி. வேதங்களை ஓதிக்கிட்டுப் போறாங்க'.

'வேதங்களை ஓதுறாங்களா. அது வடமொழியில இருக்கிறதால எனக்குப் புரியலைன்னு நெனைக்கிறேன். அதான் கத்துற மாதிரி தோணிச்சு. ஆமா. முன்னாடி போறவங்க பிரபந்தம்ன்னு என்னமோ சொன்னியே. அவங்க தமிழ்ல பாடுற மாதிரில்ல இருந்துச்சு?'

'அது தமிழ் தான்டா. ஆழ்வார்கள் பாடுன தமிழ் பாட்டுகளை எல்லாம் நாலாயிர திவ்யப் பிரபந்தம்ன்னு சொல்லுவாங்க'.
'அப்டியா. ஹேய். இவங்களும் ஏன்டா சாமி பின்னாடி ஓடுறாங்க?'

'பெருமாள் பிரபந்த கோஷ்டி பின்னாடி ஓடுறார். வேத பாராயண கோஷ்டி பெருமாள் பின்னாடி ஓடுறாங்க'.

'ஏன் எல்லாரும் ஒருத்தர் பின்னாடி ஒருத்தர் ஓடுறாங்க? வேடிக்கையா இருக்கே?'

'அதுவா. எங்க தாத்தாகிட்ட இதைப் பத்திக் கேட்டேன். அவரோட ஆசாரியர் சொன்னதை அவர் எனக்குச் சொன்னார்.


வடமொழி வேதங்கள் தன்னோட சொந்த முயற்சியால பெருமாளைத் தெரிஞ்சுக்க முயற்சி செஞ்ச மகரிஷிகளால் பாடப்பட்டது. அதனால பெருமாளோட முழுப் பெருமையும் பாட முடியாம வேதங்கள் பின்வாங்கிடுச்சாம். ஆழ்வார்கள் பெருமாளாலேயே மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர்கள். அதனால பெருமாளை உள்ளது உள்ளபடி உணர்ந்து பாடல்கள் பாடியிருக்காங்க. அவங்களோட இனிமையான தமிழ்ப் பாடல்களை கேக்கிறதுக்குத் தான் பெருமாள் பிரபந்தம் பாடுறவங்களைத் தொரத்திக்கிட்டுப் போறார். அவரை இன்னும் முழுசாத் தெருஞ்சுக்காத வேதங்களை ஓதுறவங்க அவரைத் தொரத்திக்கிட்டுப் போறாங்க'.

'நல்லா இருக்கே இந்த விளக்கம். எப்படியோ தமிழுக்கு முதலிடம் கெடைச்சா சரிதான்'.

'எங்க வீட்டுல எப்பவுமே தமிழுக்குத் தான்டா முதலிடம். ஏன் அப்படிச் சொல்ற'.

'அத விடு. ஆமா. இந்த போர்டுல உங்க தாத்தா பேருக்கு முன்னாடி என்னமோ உ.வே.ன்னு போட்டிருக்கே? அப்டின்னா என்னடா? திரு.ன்னு போட்டுப் பாத்துருக்கேன். ஆனா இது புதுசா இருக்கே'.

'அதுவா. அது உபய வேதாந்தி அப்படிங்கறதோட சுருக்கம்'.

'அப்டின்னா என்னடா?'

'எங்க ஆளுங்க சமஸ்கிருதத்துல இருக்கிற வேதங்களோட ஆழ்வார்கள் பாடுன திவ்யப் பிரபந்தங்களையும் தமிழ் வேதங்கள்ன்னு சொல்லுவாங்க. உபய வேதாந்தின்னா ரெண்டு வேதங்கள் உடையவர்ன்னு அர்த்தம். வடமொழி வேதங்களை விட தமிழ் வேதங்களுக்கு மதிப்பு கூட. ஆழ்வார் அருளிச்செயல்ன்னு எங்க தாத்தா எப்பவுமே ஆழ்வார் பாட்டுகள் பாடிக்கிட்டே இருப்பார்'

'ஆமான்டா. நானும் கேட்டுக்கேன். அப்ப எல்லாம் ஏதோ பழைய பாட்டாப் பாடுறார்ன்னு நெனைச்சுக்குவேன்.'

'சரி வா. பெருமாள் அடுத்தத் தெருவுக்குப் போயிட்டார். நாம உள்ள போகலாம். படிக்கிறதுக்கு நிறைய இருக்கு'.


இந்திரற்கும் பிரமற்கும் முதல்வன் தன்னை
இருநிலம் கால் தீ நீர் விண் பூதம் ஐந்தாய்
செந்திறத்த தமிழோசை வடசொல் ஆகி
திசை நான்குமாய்த் திங்கள் ஞாயிறாகி
அந்தரத்தில் தேவர்க்கும் அறியலாகா
அந்தணனை அந்தணர்மாட்டு அந்தி வைத்த
மந்திரத்தை மந்திரத்தால் மறவாதென்றும்
வாழுதியேல் வாழலாம் மட நெஞ்சம்மே

பாடிக்கொண்டே வந்தார் தாத்தா...

***

இது ஒரு மீள்பதிவு.

Wednesday, August 22, 2007

அதிக வேலை எப்போது நடக்கிறது? (ஒரு நிமிட மேலாளர் - பகுதி 3)

பகுதி 1, பகுதி 2

சென்ற பகுதியில் இரண்டு வகை மேலாளர்களைப் பார்த்தோம். இரண்டு வகை மேலாண்மையும் (சர்வாதிகார மேலாண்மை, மக்களாட்சி மேலாண்மை) எவ்வளவு முக்கியம் என்பதைப் பார்த்தோம். அது ஏன் என்பதற்கும் சில காரணங்களை அங்கே பார்த்தோம். இங்கே இன்னொரு காரணத்தைப் பார்க்கப் போகிறோம்.

நீங்கள் அலுவலகத்தில் எந்தப் பொழுதில் அதிக வேலையைச் செய்து முடித்திருக்கிறீர்கள்? நீங்கள் உங்களைப் பற்றிய மகிழ்வான எண்ணத்தில் இருக்கும் போதா? உங்களைப் பற்றி ஏதோ ஒரு குறை மனத்தில் இருக்கும் போதா?

நான் பார்த்தவரையில் என்னைப் பற்றிய தாழ்வு மனப்பான்மையும் என்னைப் பற்றிய குறையும் மனத்தில் இல்லாமல் நான் நன்கு வேலை செய்கிறேன், எனக்கு அதற்குரிய திறன்கள் இருக்கின்றன என்று எப்போது நினைக்கிறேனோ அப்போது நிறைய வேலைகள் நடந்து முடிவதைப் பார்த்திருக்கிறேன். அதே போல் நான் பழகிய மற்றவர்களிடமும் பார்த்திருக்கிறேன்.

இன்னொரு எடுத்துக்காட்டு சொல்ல வேண்டுமென்றால் - பதிவுலகிலும் அப்படித் தான். சில வாரங்களில் (சில நாட்களில்) நான் தொடர்ந்து சில இடுகைகள் இட்டிருப்பேன். அப்போது பார்த்தால் அந்த நேரங்களில் என்னைப் பற்றிய குறை உணர்வு எதுவுமே எனக்கு இல்லாமல் இருந்ததைக் கவனித்திருக்கிறேன். நேரம் கிடைக்காமல் இடுகைகள் இடாமல் இருந்ததுண்டு. ஆனால் பெரும்பாலான நேரங்களில் நேரம் இருந்தும் என்ன எழுதி என்ன பயன் என்ற எண்ணமோ, நாம் எழுதுவதை யார் படிக்கிறார்கள் என்ற எண்ணமோ வேறு ஏதாவது மனக்குறையோ இருக்கும் போது இடுகைகள் எழுத முடிவதில்லை. இது ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே. இது போல் அலுவலகத்திற்கு வெளியே உள்ள வாழ்க்கையில் வேறு பல எடுத்துக்காட்டுகள் காட்டலாம். (எல்லா எடுத்துக்காட்டுகளும் எல்லோருக்கும் பொருந்தாது).

அதனால் நிறைய வேலையை முடிக்க வேண்டும் என்று நினைக்கும் சர்வாதிகார வகையில் இருக்கும் மேலாளர்கள் அதனை நன்கு நிறைவேற்ற வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? இந்தப் பகுதியிலேயே அதற்கு விடை இருக்கிறது. சொல்லுங்கள்.

***

மக்கள் தங்களைப் பற்றி எப்போது நல்லதாக உணர்கிறார்களோ அப்போது நிறைய வேலை செய்கிறார்கள். நம்மிடம் பணிபுரிபவர்கள் நல்லவிதமாகத் தங்களைப் பற்றித் தாங்களே உணர்ந்தால் தான் அவர்கள் நிறைய வேலைகளை நேரத்தோடு செய்து முடிப்பார்கள். அதனால் அவர்களிடம் பேசும் போது அவர்கள் செய்த தவற்றை பெரிது பண்ணி அவர்களைக் குறை கூறிக் கொண்டே இருந்தால் அவர்கள் நம்மிடம் பயப்படுவார்களே தவிர வேலை செய்து முடிப்பதில்லை; குறை கண்டு குறிப்பிட்டுச் சொல்லிவிட்டு அந்த குறை தீர அவர்களையே நல்ல வழிகளைக் காண உதவி செய்து அவர்கள் தங்களைப் பற்றி நல்லவிதமான எண்ணம் கொள்ளும் வகையில் பேசிப் பழகினால் அவர்களுக்குத் தங்களைப் பற்றிய நல்லெண்ணம் மிகும்; மகிழ்ச்சியுடன் இருப்பார்கள்; நம் நோக்கமான வேலைகளும் நேரத்தில் முடியும்.

சொல்லுவது யாருக்கும் எளிது தான். இந்த மாதிரி செய்ய இரண்டாவது வகை (மக்களாட்சி வகை) மேலாளருக்கு முடியும். அவர்களுக்கு அது இயற்கை. ஆனால் சர்வாதிகார மேலாளருக்கு? அது மிகக் கடினம். ஆனால் அவர்கள் நோக்கம் நிறைவேற வேண்டுமென்றால் அதற்கு எளிய வழி இது தான்.

Tuesday, August 21, 2007

கொழும்பு மயூராபதி அம்மன்

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் தேவஸ்தான 20 ஆவது ஆண்டு ஆடிப்பூர மஹோற்சவம்

[28 - July - 2007] [Font Size - A - A - A]

-கலாபூஷணம் செல்வத்தம்பி மாணிக்கவாசகர்-
கொழும்பு மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் தேவஸ்தானத்தின் 20 ஆவது ஆண்டு ஆடிப்பூர மகோற்சவம் இன்று சனிக்கிழமை ஆரம்பமாகி (18.08.2007) சனிக்கிழமை பஞ்சரதோற்சவமும் (சித்திரத்தேர்) 19.08.2007 ஞாயிற்றுக்கிழமை காலை இந்து சமுத்திர தீர்த்தோற்சவமும் மாலை இந்திரவிழாவும் நடைபெறும்.

மேலும், ஆடிப்பூர மஹோற்சவத்தை முன்னிட்டு மங்கையரின் பால்குட பவனி நடைபெறவுள்ளது, இம்முறை நடைபெறவுள்ள பால்குட பவனியில் 2,500 க்கு மேற்பட்ட மங்கையர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இத்துடன் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களும் அன்றைய தினம் இவ்விழாவிலே கலந்து கொள்ளலாம்.

பால்குட பவனி 15.08.2007 புதன்கிழமை காலை 7 மணிக்கு பம்பலப்பிட்டி சம்மாங்கோட்டார் ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் ஆரம்பமாகி லோறன்ஸ் வீதி, அமரசேகர மாவத்தை, ஹவ்லொக் வீதியூடாக மயூரா பிளேஸை வந்தடையும். அன்றைய தினம் மாலை 5.30 மணியளவில் இசை வல்லுநர்களின் பக்க வாத்தியத்துடன் சங்கீத வித்துவான் நாகராஜா `மாரியம்மன் தாலாட்டு' இசைக்கப்படும்.

மேலும், உலகில் ஏற்படும் தீமைகளைப் போக்குவதற்கும் நன்மைகளைப் பெருக்குவதற்கும், உலக உயிர்களுக்கு அருள் புரிவதற்குமாக அன்னை பராசக்தி பல்வேறு நிலைகளில் நின்று செயற்படுகின்றாள். இதனைச் சக்தியின் கூறுகள் அல்லது சொரூபங்கள் என அழைப்பர். சக்தியே அலைமகளாகவும் கலைமகளாகவும் உமையாகவும் காளியாகவும் துர்க்கையாகவும் வேறு பல சொரூபங்களாகவும் காட்சியளிக்கின்றாள்.

இச்சொரூபங்கள் யாவற்றுள்ளும் வீரத்தின் உறைவிடமாக விளங்குபவள் துர்க்கை. செல்வத்தின் உறைவிடமாக விளங்குபவள் திருமகள். கலைகளின் உறைவிடமாக விளங்குபவள் கலைமகள். இத்துடன் உலகப் பொருள்களின் இயக்கத்துக்கெல்லாம் சக்தி இன்றியமையாதது. இயற்கை சக்திக்கு அழிவில்லை என்பதை மெய்ஞ்ஞானிகளும் விஞ்ஞானிகளும் ஒரு மனதாக ஒப்புக் கொள்கின்றனர். சக்தியின்றிச் சிவம் இல்லை. சிவம் இன்றி சக்தியில்லை. அசைவற்றிருக்கும் அறிவு வடிவத்தைச் சிவம் என்றும் அசைவுள்ள ஆற்றல் வடிவத்தைச் சக்தி என்றும் கூறுவர்.

இன்று கொழும்பு மாநகரில் சைவமும் தமிழும் தழைத்தோங்கவும் கலியுகத்தில் தொழுவார் துன்பம் துடைக்கும் தூய அம்பிகை வீற்றிருக்கும் ஆலயமே மயூரபதி ஷ்ரீ பத்திரகாளி அம்மன் தேவஸ்தானம். ஆதியில் இவ்வாலயம் மிகவும் சிறிதாக இருந்து நாளடைவில் இது வளர்ந்து இன்று மாபெரும் சிறப்புகளை தன்னகத்தே கொண்டு ஒரு பெரும் ஆலயமாக ஈழத்தில் மட்டுமன்றி உலகளாவிய ரீதியில் பெயர் பெற்று விளங்குகின்றது. இன்று 20 ஆவது ஆண்டு ஆடிப்பூர மஹோற்சவத்தை கொண்டாடும் தருணத்தில் இவ்வாலயமானது `ஆல்போல தழைத்து அறுகுபோல் வேரூன்றி' நிற்பதற்குக் காரணமாக அமைந்தவர் இவ்வாலயத்தின் அறங்காவலர் பொன். வல்லிபுரம் என்றால் மிகையாகாது

இலங்கையின் தலைநகராம் கொழும்பு மாநகரில் `மயூரா இடம்' என்ற இடத்தில் ஆங்கிலேய ஆட்சியில் ஓர் நெசவாலை (Wellawatte Spinning & Weaving mills) உருவானது. இத் தொழிற்சாலையில் வேலை செய்வதற்காகத் தமிழ்நாடு, கேரளம் ஆகிய மாநிலங்களிலிருந்து தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு குடிமனைகள் அமைக்கப்பட்டு அமர்த்தப்பட்டார்கள். அவர்களின் வழிபாட்டிற்காக ஓர் அவை ஒதுக்கப்பட்டு வரதராஜப் பெருமாள் ஆலயம் என்று பெயரிடப்பட்டு வழிபாடு, பூசைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. 1977 தொடக்கம் 1980 வரையில் மண்டபத்திலே நடைபெற்றுக்கொண்டிருந்த வழிபாடு அருகில் இருந்த அரச மரத்தடிக்கு மாற்றப்பட்டது. இரு அரசமரங்களுக்கிடையில் ஓர் வேப்பமரமும் இருந்ததைக் கண்ட அடியார்கள் ஓர் சூலத்தை நிறுத்தி அன்னை காளி அம்மனாக வழிபடத் தொடங்கினர். ஓர் தகரக் கொட்டிலும் அமைக்கப்பட்டு அன்னையை வழிபட்டு வந்தனர்.சில காலம் செல்ல 1985 ஆம் ஆண்டில் அந்த இடத்திலே ஆலயம் அமைக்கவேண்டும் என்ற எண்ணம் ஒரு சிலரின் மனதில் உதிக்க ஓர் ஆலயம் உருவாக்கப்பட்டு சுற்றுமதிலும் , மண்டபமும் எழுப்பப்பட்டது. இக் காலங்களில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பூசையும் சிவராத்திரி, நவராத்திரி, திருவெம்பாவை காலங்களில் விஷேட ஆராதனைகளும் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

இப்படியாக வளர்ந்து வரும் காலத்தில் 1987 ஆம் ஆண்டு ஆனி மாதம் அறங்காவலர் பொன். வல்லிபுரம் அம்பாளின் அழைப்பை ஏற்று ஆலயத்தைப் பார்க்கச் சென்றார். அப்போது கும்பாபிஷேகத்துக்கு நாள் நியமிக்கப்பட்டு விட்டதாகச் சொன்னார்கள். ஆனால், மூர்த்திகள் மகாபலிபுரத்திலிருந்து வந்து சேரவில்லை. கும்பாபிஷேகம் செய்வதற்கு குருக்களுமில்லை என்று வேதனைப்பட்டார்கள்.

அதை உணர்ந்த பொன். வல்லிபுரம் முன்னாள் இந்துகலாசார அமைச்சர் செல்லையா இராசதுரையின் உதவியினால் விக்கிரகங்கள் எல்லாம் தருவிக்கப்பட்டன. மேலும் கப்பித்தாவத்தை பாலசெல்வ விநாயகமூர்த்தி ஆலயம் பிரதம குரு சிவஸ்ரீ சண்முகரத்தின சர்மா அனுசரணையுடன் பிரதிஷ்டா சிரோன்மணி சாமி விஸ்வநாதகுருக்கள் கும்பாபிஷேகம் செய்வதற்கு முன்வந்தார்கள். கார்த்திகை மாதம் பூர்வபட்ச உத்தராட நட்சத்திரத்திலே 25.11.1987 புதன்கிழமை மிகவும் கோலாகலமாக கும்பாபிஷேகம் நடைபெற்று 48 நாட்கள் மண்டலாபிஷேகமும் நடைபெற்றது. 1988 ஆம் ஆண்டு அம்பாளின் உற்சவமூர்த்திக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அக்காலகட்டத்தில் ஸ்ரீ சிவபாலயோகி சுவாமிகளும் ஆலயத்திற்கு விஜயம் செய்து ஆசீர்வதித்தார்கள். இவ்வாண்டிலேதான் சிறார்களுக்காக அறநெறிப்பாடசாலையும் நடனப் பாடசாலையும் ஆரம்பிக்கப்பட்டது. 1988 இல் இருந்து இன்று வரை ஆடிப்பூர இலட்சார்ச்சனையும் பௌர்ணமித் திருவிழாவும் தங்கு தடையின்றிச் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டு வருகின்றது.

கொழும்பு மயூராபதி அம்மன் எண்ணற்ற மக்களுக்குப் பாதுகாப்பையும் அருளையும் வாரி வழங்குகிறாள் என்பதற்கு இவ்வாலயத்தில் அலைமோதும் பக்தர்களின் கூட்டமே சாட்சி. இங்கு சாதி, மத, இனபேதங்கள் ஒன்றும் கிடையாது. அனைவரும் அவளது குழந்தைகள். சாந்தியும் , ஒற்றுமையும் சமாதானமும் இங்கு இயல்பாக மலர்ந்து நிற்கின்றது.

நன்றி: தினக்குரல்

***

கொழும்பு மயூராபதி அம்மன் கோவில் தேர்த்திருவிழா பற்றி படங்களுடன் மாயாவின் பதிவில் பார்த்தேன். பின்னர் இணையத்தில் மயூராபதி அம்மனைப் பற்றி தேடிப் பார்த்ததில் கிடைத்த தினக்குரல் செய்தியினை இங்கே தருகிறேன்.

Monday, August 20, 2007

வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே!

இந்த உலகில் எத்தனையோ வகை மனிதர்கள் இருக்கிறார்கள். சிலர் தெய்வ நம்பிக்கை நிறைய உடையவர்களாக இருக்கிறார்கள். சிலர் இறை நம்பிக்கை கொஞ்சமும் இல்லாமல் இருக்கிறார்கள். இரண்டு வகைகளுக்கும் நடுவில் பல தரங்களில் உலக மக்கள் பெரும்பான்மையினர் இருக்கிறார்கள். இந்தப் பெரும்பான்மையினர் தங்கள் தங்கள் புரிதலின் படி இறை நம்பிக்கை பக்கமும் சாய்வார்கள்; அவநம்பிக்கை பக்கமும் சாய்வார்கள்.

இந்த இடுகையின் தலைப்பில் இருப்பது வைணவம் தனது குல முதல்வன் என்று போற்றும் தமிழ் வேதமாம் திருவாய்மொழியைத் தந்த மாறன் சடகோபன் நம்மாழ்வாரின் அமுத மொழி. யாராக இருந்தாலும் இந்த உலகத்தில் இருக்கும் உயிர்கள் எல்லாம் இறைவனின் திருவடி நிழலை அடைவது திண்ணம்; அது உறுதி என்கிறார். அவர்கள் இன்று இறைவனை நம்பவில்லை என்று சொல்லலாம்; இறைவனை நம்புகிறேன் ஆனால் எம் இறைவனை - உங்கள் இறைவனை இல்லை என்று பிரித்துப் பேசலாம். என்ன செய்தாலும் ஏதோ ஒரு பிறவியில் இறைவனின் திருவருளுக்குப் பாத்திரமாகி வைகுந்தம் புகுவது மண்ணவர் விதி.

அண்மையில் கபீரன்பன் அவர்களின் பதிவினைப் படிக்கும் போது சுவாமி விவேகானந்தரின் கூற்றினைப் படித்தேன். எவ்வளவு அழகாகச் சொல்லியிருக்கிறார் பாருங்கள்.

'பூமியில் விழும் ஒவ்வொரு மழை துளியும் கடலை சென்றடைவது போல, விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இயற்கையின் படைப்பில் எல்லாம் இறைவனை நோக்கியே பயணித்துக் கொண்டிருக்கின்றன'. ஆத்ம சிந்தனையைப் பெருக்கிக் கொள்ளும் போது வெள்ளத்தின் வேகம் போல் பயணம் துரிதமாகிறது. அதற்கான முயற்சியில்லாமல் பொருள் ஈட்டுவதிலும் சுக போகங்களுக்காக தேடி அலைவதிலும் நேரம் போனால் நிலத்திலே வடிந்து பலகாலம் காத்திருக்க வேண்டிய தரையடி நீராகவோ, குட்டை நீராகவோ, ஏன் சாக்கடை நீராகவோ கூட மாறிப் போய் விடுகிறது நமக்கு கொடுக்கப்பட்ட பிறவி. - சுவாமி விவேகானந்தர்'

Wednesday, August 15, 2007

இன்றோ திருவாடிப்பூரம்!



திருவாடிப்பூரத்துச் செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்தப் பெண்பிள்ளாய் வாழியே
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒரு நூற்று நாற்பத்தி மூன்றுரைத்தாள் வாழியே
உயரரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே
மருவாரும் திருமல்லி வளநாடி வாழியே
வண்புதுவை நகர்க் கோதை மலர்ப்பதங்கள் வாழியே


திருவாடிப்பூரம் ஆகிய இன்றையத் திருநாளில் உலகத்தில் அவதரித்தவள் வாழ்க!
திருப்பாவை முப்பதும் சொன்னவள் வாழ்க!
பெரியாழ்வார் பெருமையுடன் வளர்த்தப் பெண் பிள்ளை வாழ்க!
திருப்பெரும்புதூரில் அவதரித்த இராமானுஜமுனிக்குத் தங்கையானவள் வாழ்க!
ஒரு நூற்று நாற்பத்தி மூன்று பாசுரங்களைப் பாடியவள் வாழ்க!
உயர்வற உயர்நலம் உடைய அரங்கனுக்கு மலர்மாலையை மகிழ்ந்து தான் சூடிக் கொடுத்தவள் வாழ்க!
மணம் கமழும் திருமல்லிநாட்டைச் சேர்ந்தவள் வாழ்க!
புதுவை நகரெனும் வில்லிபுத்தூர் நகர்க் கோதையின் மலர்ப்பதங்கள் வாழ்க வாழ்க!

கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழுமூர்
சோதி மணிமாடம் தோன்றும் ஊர் - நீதிசால்
நல்ல பக்தர் வாழுமூர் நான்மறைகள் ஓதுமூர்
வில்லிபுத்தூர் வேதக் கோனூர்.

கோதை பிறந்த ஊர்
கோவிந்தன் நிலைத்து வாழும் ஊர்
ஒளிவீசும் மணி மாடங்கள் விளங்கும் ஊர்
நீதியில் சிறந்த நல்ல பக்தர்கள் வாழும் ஊர்
நான்மறைகள் என்றும் ஒலிக்கும் ஊர்
அப்படிப்பட்ட வில்லிபுத்தூர் வேதங்களின் தலைவனின் ஊர்

பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்
வேதம் அனைத்திற்கும் வித்தாகும் - கோதைதமிழ்
ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானுடரை
வையம் சுமப்பதும் வம்பு.

பஞ்சமா பாதகங்களைத் தீர்க்கும்
பரமனின் அடிகளைக் காட்டும்
வேதங்கள் அனைத்திற்கும் வித்து ஆகும்
அப்படிப்பட்டக் கோதையின் தமிழ்ப் பாசுரங்கள்
ஐயைந்தும் ஐந்தும் (முப்பதும் - திருப்பாவை)
அறியாத மானுடரை
வையம் சுமப்பது வீண்

அன்னவயல் புதுவை ஆண்டாள் அரங்கற்கு
பன்னு திருப்பாவை பல்பதியம் இன்னிசையால்
பாடிக் கொடுத்தாள் நற்பாமாலை, பூமாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு.

அன்னங்கள் சூழ, அன்னம் விளையும் வயல்கள் கொண்ட புதுவை என்னும் திருவில்லிபுத்தூர்.
ஆங்கு அவதரித்த ஆண்டாள், ஆரா அமுதன் அழகிய திரு அரங்கன் மீது பாடிக் கொடுத்தாள் நல்ல பாமாலை...வாய்க்கு மணம்!
போதாது என்று பூமாலையும் சூடிக்கொடுத்தாள்...மேனிக்கே மணம்!
அந்த மாலைகளை அனைவரும் சொல்லுவோம்.


சூடிக் கொடுத்தச் சுடர்கொடியே தொல்பாவை
பாடி அருளவல்ல பல்வளையாய் - நாடி நீ
வேங்கடவற்கு என்னை விதி என்ற இம்மாற்றம்
நாங்கடவா வண்ணமே நல்கு.

மலர்மாலையை மாலவனுக்குச்
சூடிக் கொடுத்த சுடர்கொடியே!
தொன்மையான பாவை நோன்பிற்காக
திருப்பாவை பாடி அருளிய பலவிதமான வளையல்களை அணிந்தவளே!
'மன்மதனே. நீ மனம் இரங்கி திருவேங்கடவனுக்கே என்னை மணாட்டியாக விதி' என்று நீ கூறிய வார்த்தைகளை நாங்களும் ஏற்று
என்றும் புறந்தொழாமல்
என்றும் படிதாண்டா பத்தினிகளாக
எம்பெருமானையே பற்றி வாழ அருள்வாய்.

இன்றோ திருவாடிப்பூரம் எமக்காக
அன்றோ ஆண்டாள் அவதரித்தாள் - குன்றாத
வாழ்வான வைகுந்த வான்போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திருமகளாராய்.

இன்றல்லவோ திருவாடிப்பூரம்! (இந்தத் திருநாளில்)எம் பொருட்டு அன்றோ ஆண்டாள் அவதரித்தாள்!(எம் மேல் அவள் கருணை எப்படிப்பட்டதெனில்) என்றும் அழியாத பெரும்பேறான வைகுந்த வான்போகத்தை (அடியாரைக் காத்தருளுவதை விட கீழானதென்று) இகழ்ந்து பெரியாழ்வர் திருமகளாராய்!

அடையுங்கள் அடையுங்கள் ஆண்டாள் திருவடி அடையுங்கள் நம் ஆண்டாள் திருவடி அடையுங்கள்!

Saturday, August 11, 2007

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்!!!

வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரத மணித்திருநாடு!
இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க!
நன்மை வந்தெய்துக! தீதெலாம் நலிக!
அறம் வளர்ந்திடுக! மறம் அடிவுறுக!
சீரிய முயற்சிகள் சிறந்து மிக்கோங்குக!
நம் தேயத்தினர் நாள் தொறும் உயர்க!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!




***

விடுதலை! விடுதலை! விடுதலை!

பறைய ருக்கும் இங்கு தீயர்
புலைய ருக்கும் விடுதலை
பரவ ரோடு குறவருக்கும்
மறவ ருக்கும் விடுதலை!
திறமை கொண்டதீமை யற்ற
தொழில் புரங்ந்து யாவரும்
தேர்ந்த கல்வி ஞானம் எய்தி
வாழ்வம் இந்த நாட்டிலே. (விடுதலை)

ஏழை யென்றும் அடிமையென்றும்
எவனும் இல்லை ஜாதியில்,
இழிவு கொண்ட மனித ரென்பது
இந்தி யாவில் இல்லையே
வாழி கல்வி செல்வம் எய்தி
மனம கிழ்ந்து கூடியே
மனிதர் யாரும் ஒருநிகர் கர்ச
மானமாக வாழ்வமே! (விடுதலை)

மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமை யைக்கொ ளுத்துவோம்
வைய வாழ்வு தன்னில் எந்த
வகையி னும்ந மக்குள்ளே
தாதர் என்ற நிலைமை மாறி
ஆண்க ளோடு பெண்களும்
சரிநி கர்ச மான மாக
வாழ்வம் இந்த நாட்டிலே. (விடுதலை)





***

ஆடுவோமே - பள்ளுப் பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று (ஆடு)

பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே - வெள்ளைப்
பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே - பிச்சை
ஏற்பாரைப் பணிகின்ற காலமும் போச்சே - நம்மை
ஏய்ப்போருக் கேவல்செய்யும் காலமும் போச்சே (ஆடு)

எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு - நாம்
எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு
சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே - இதைத்
தரணிக்கெல் லாமெடுத்து ஓதுவோமே. (ஆடு)

எல்லோரும் ஒன்றென்னும் காலம் வந்ததே - பொய்யும்
ஏமாற்றும் தொலைகின்ற காலம் வந்ததே - இனி
நல்லோர் பெரியரென்னும் காலம் வந்ததே - கெட்ட
நயவஞ்சக் காரருக்கு நாசம் வந்ததே. (ஆடு)

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் - வீணில்
உண்டுகளித் திருப்போரை நிந்தனை செய்வோம்.
விழலுக்கு நீர்பாய்ச்சி மாய மாட்டோம் - வெறும்
வீணருக்கு உழைத்துடலம் ஓய மாட்டோம். (ஆடு)

நாமிருக்கும் நாடு நமதுஎன்ப தறிந்தோம் - இது
நமக்கே உரிமையாம் என்ப தறிந்தோம் - இந்தப்
பூமியில் எவர்க்கும்இனி அடிமை செய்யோம் - பரி
பூரணனுக் கேயடிமை செய்து வாழ்வோம். (ஆடு)


Thursday, August 02, 2007

மினியாபொலிஸில் முக்கிய மேம்பாலம் தானே விழுந்தது - 7 பேர் பலி, பலர் காயம்

நேற்று மாலை 6:05 மணிக்கு மினியாபோலிஸ் அருகில் 35W நெடுஞ்சாலையில் மிசிசிப்பி ஆற்றின் மேலே அமைந்திருக்கும் பாலம் தானாக நொறுங்கி விழுந்தது. ஏறக்குறைய 50 வாகனங்கள் நொறுங்கிய பாலத்துடன் ஆற்றில் விழுந்தன. இது வரை குறைந்தது 7 பேர் இறந்ததாகவும் 60 பேர் காயமடைந்ததாகவும் 20 பேர் காணவில்லை என்றும் செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

இந்த கொடிய விபத்தைப் பற்றி மேலும் அறிய இந்த செய்தி வலைத்தளங்களைப் பாருங்கள்.

http://www.cnn.com/
http://www.startribune.com/
http://www.twincities.com/

***

இப்போது எங்கள் வீடு வேறு திசையில் இருப்பதால் இந்தப் பாலத்தில் அவ்வளவாகப் பயணிப்பதில்லை. ஆனால் போன வருடம் வரை நான்கு வருடங்களாக இந்தப் பாலத்தின் வழியே தான் அலுவலகத்திற்குத் தினமும் சென்று வந்து கொண்டிருந்தேன். இந்த விபத்து நடந்த போது நெரிசல் மிகுந்த நேரம் என்பதால் பாலம் நொறுங்கிய பகுதியில் பல வண்டிகள் இருந்திருக்கின்றன. அதனால் சேதமும் அதிகமாக இருந்திருக்கிறது.

Wednesday, August 01, 2007

செப் 15 - பாரதி 125 - பாரீசில் திருவிழா




புழுதியில் எரியப்பட்ட பாரதிக்காக பராசக்தி வருகிறாள் அறம் பாட! பாரீசில் பாரதிக்கு மாபெரும் விழா. ஆதரவு தாரீர் அனபர்களே

இவண்

மகாகவி பாரதி 125 பிரான்சு விழாக் குழுவினர்.

***

மேல் விவரங்களுக்கு இந்தப் பதிவைப் பாருங்கள்; பதிவரைக் கேளுங்கள்.