Saturday, March 31, 2007

பங்குனி உத்திரத் திருநாள்

இன்று பங்குனி உத்திரத் திருநாள். ஆன்மிக ஆர்வலர்களுக்கு இந்த நாளின் பெருமை மிக நன்றாகத் தெரியும். பலவிதங்களிலும் பெருமை வாய்ந்த திருநாள் இது.

கங்கையில் புனிதமான காவிரி நடுவில் உள்ள பூலோக வைகுண்டமாம் திருவரங்க நகரத்தில் பாம்பணையில் பள்ளி கொண்ட பெரிய பெருமாள் திருவரங்க நாதன் திருவரங்கநாயகித் தாயாருடன் சேர்த்தித் திருக்கோலத்தில் அமர்ந்து காட்சி தருவது இந்த உன்னதமான திருநாளில் தான். வருடத்தில் வேறு எந்த நாளிலும் இந்த திவ்விய தரிசனம் கிடைக்காது. அண்ணலும் அவளும் சேர்ந்து அமர்ந்திருக்கும் இந்தத் திருக்கோலத்தைத் தரிசிப்பவர் நினைப்பதெல்லாம் நடக்கும் என்பது காலம் காலமாய் வரும் நம்பிக்கை.




வைஷ்ணவ சம்ப்ரதாயத்தை நிலைநாட்டிய இளையபெருமாளாகிய இராமானுஜமுனி ஒரு முறை பங்குனி உத்திர மண்டபத்தில் இப்படி பெரிய பிராட்டியும் பெரிய பெருமாளும் சேர்ந்து காட்சி தரும் போது தான் கத்ய த்ரயம் (சரணாகதி கத்யம், வைகுண்ட கத்யம், ஸ்ரீரங்க கத்யம்) என்னும் மூன்று வடமொழி வசனகவிதைகளைப் பாடிச் சமர்ப்பித்தார். சரணாகதி கத்யத்தைச் சமர்ப்பித்த போது அரங்கன் அவருடைய சரணாகதியை ஏற்றுக் கொண்டு திருவாய் மலர்ந்தருளினான் என்றும் தாயார் அவரை உபய வீபூதிகளுக்கும் (கீழுலகம், மேலுலகம்) உடையவராய் நியமித்தார் என்றும் ஐதீகம். அன்றிலிருந்து இராமானுஜர் 'உடையவர்' என்ற திருநாமத்தாலும் அழைக்கப் படுகிறார்.

எம்பிரானை எந்தை தந்தை தந்தைக்கும்
தம்பிரானைத் தண் தாமரைக் கண்ணனை
கொம்பராவு நுண்ணேரிடை மார்வனை
எம்பிரானைத் தொழாய் மட நெஞ்சமே!

என் தலைவனை, என் தந்தை, அவர் தந்தை, அவர் தந்தை இப்படி என் முன்னோர் அனைவருக்கும் தலைவனை, குளிர்ந்த தாமரைக் கண்களை உடையவனை, பூங்கொம்பினை ஒத்த நுண் இடையாளான திருமகளைத் தன் மார்பில் உடையவனை, என் இறைவனைத் தொழாய் மட நெஞ்சமே!

நெஞ்சமே நல்லை நல்லை உன்னைப் பெற்றால்
என் செய்யோம் இனி என்ன குறைவினம்
மைந்தனை மலராள் மணவாளனை
துஞ்சும் போதும் விடாது தொடர் கண்டாய்!

என் மனமே! உன்னை நான் பெற்றதால் நன்றாகப் போனது. என்றும் இளையவனை, மலராளாகிய பெரியபிராட்டியின் மணவாளனை நான் தூங்கும் போதும் (என் உயிர் பிரியும் போதும்) நீ விடாது தொடர்ந்து போகிறாய். நன்று. நன்று. உன்னைப் பெற்று நான் என்ன தான் செய்ய முடியாது? இனி எனக்கு என்ன குறை?

நீயும் நானும் இந்நேர் நிற்கில் மேல் மற்றோர்
நோயும் சார்கொடான் நெஞ்சமே சொன்னேன்
தாயும் தந்தையுமாய் இவ்வுலகினில்
வாயும் ஈசன் மணிவண்ணன் எந்தையே

என் நெஞ்சமே! நீயும் நானும் இப்படி கூட்டணி அமைத்து அவனை வணங்கி வந்தால், இவ்வுலகத்தில் நமக்குத் தாயும் தந்தையுமாய் இருக்கும் ஈசன் மணிவண்ணன் என் தந்தை வேறெந்த பிறவி நோயும் நமக்கு வரும்படி விடமாட்டான். சொன்னேன் கேட்டுக் கொள்.

எந்தையே என்றும் எம்பெருமான் என்றும்
சிந்தையுள் வைப்பன் சொல்லுவன் பாவியேன்
எந்தை எம்பெருமான் என்று வானவர்
சிந்தையுள் வைத்துச் சொல்லும் செல்வனையே

வானவர்கள் எல்லாம் 'என் தந்தையே! என் தலைவனே' என்று தங்கள் சிந்தையில் வைத்து வணங்கும் செல்வனை (சம்பத் குமாரனை) இந்த உலகினில் பிறந்து எண்ணற்ற பாவங்களைச் செய்த நானும் 'எந்தையே' என்றும் 'எம்பெருமான்' என்றும் சொல்லி சிந்தையில் வைப்பேன். என்ன பேறு பெற்றேன்?

செல்வ நாரணன் என்ற சொல் கேட்டலும்
மல்கும் கண்பனி நாடுவன் மாயமே
அல்லும் நன்பகலும் இடைவீடின்றி
நல்கி என்னை விடான் நம்பி நம்பியே.

வழியில் போகும் ஒருவர் செல்வநாராயணன் என்று சொல்லவும் அதனைக் கேட்டு என் கண்களில் நீர் நிரம்பி வழியும். இது என்ன மாயம்? எவ்வளவு தாழ்ந்த நிலையில் இருந்த நான் எப்படி ஆகிவிட்டேன்? இரவும் பகலும் இடைவீடு இன்றி என்னை நம்பித் தன்னை எனக்குத் தந்து என்னை விடான் என் அழகிய மணவாள நம்பி.

(இவை மாறன் சடகோபனாகிய நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் பாசுரங்கள்)
***

கோதை பிறந்த ஊராம் தென்புதுவை நகரில் (ஸ்ரீவில்லிபுத்தூரில்) பங்குனிப் பெருவிழாவின் உச்சகட்டமாக அமைவது பங்குனி உத்திரத் திருநாளில் சுவாமி ரெங்க மன்னார் ஆண்டாளின் திருக்கரங்களைப் பற்றும் திருக்கல்யாண மகோற்சவம். கோதை நாச்சியாரும் ரெங்க மன்னாரும் மகிழ்ந்திருக்கும் காட்சி இங்கே.


கோதை பிறந்த ஊர் கோவிந்த வாழும் ஊர்
சோதி மணி மாடம் தோன்றும் ஊர் - நீதிசால்
நல்ல பக்தர் வாழும் ஊர் நான்மறைகள் ஓதும் ஊர்
வில்லிபுத்தூர் வேதக்கோனூர்

***

மதுரை வாழ் சௌராஷ்ட்ரப் பெருமக்களால் தங்கள் குலதெய்வமாகப் போற்றி வணங்கப் படும் தெற்கு கிருஷ்ணன் கோவில் ஸ்ரீ பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் பத்து நாட்கள் பங்குனி பிரம்மோற்சவம் கண்டு தீர்த்தவாரிக்காகக் குதிரை வாகனத்தில் ஏறி வைகை ஆற்றில் இறங்கும் புனித நன்னாளும் பங்குனி உத்திரத் திருநாளே.


(பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் ஆற்றில் இறங்கும் படம் இல்லாததால் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் படத்தை இங்கு இடுகிறேன்)

***

துர்வாச முனிவர் வந்து கொண்டிருக்கிறார். கோபத்திற்குப் பெயர் போனவர். ஆனால் இன்றோ மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார் போல் இருக்கிறது. அவரது திருக்கரத்தில் ஒளிவீசும் ஒரு அழகிய மலர் மாலை இருக்கிறது. அதனை மிகவும் பெருமையுடனும் பக்தியுடனும் ஏந்திக் கொண்டு வருகிறார். அப்போது அந்த வழியாகத் தேவர்களின் தலைவனான இந்திரன் தன் ஐராவதம் என்னும் யானையில் ஏறிக் கொண்டு பவனி வருகிறான். தேவர்களின் தலைவனான தன்னைப் பற்றி எல்லோரும் பெருமையாகப் பேசுவதைக் கேட்டுக் கேட்டு மிக்கப் பெருமிதம் அவன் முகத்தில் தெரிகிறது.
துர்வாச முனிவர் இந்திரனின் முன்னால் சென்று 'தேவேந்திரா. உன் புகழ் எல்லா உலகங்களிலும் நிறைந்து இருக்கிறது. இப்போது அன்னை மகாலக்ஷ்மியைத் தரிசித்துவிட்டு அவர் அன்போடு அளித்த இந்த மலர் மாலையுடன் வந்து கொண்டிருக்கிறேன். அன்னை கொடுத்த இந்த பிரசாதத்தை ஏற்றுக் கொள்ள தேவர்களின் தலைவனான உனக்குத் தான் உரிமை இருக்கிறது. இதோ வாங்கிக் கொள்' என்று சொன்னார்.

விண்ணோர் தலைவனும் அந்த மலர் மாலையை அலட்சியமாக அங்குசத்தால் வாங்கி ஐராவதத்தின் தலையில் வைத்தான். தேவர்களின் தலைவனான தான் கேவலம் இன்னொரு தெய்வம் கொடுத்த மலர்மாலையை பிரசாதம் என்று வணங்கி வாங்கி கொள்வதா என்ற எண்ணம். ஆனாலும் கொடுப்பவர் துர்வாசர் என்பதால் பேசாமல் வாங்கி கொண்டான். யானையோ தன் தலையில் வைக்கப்பட்ட மலர்மாலையை உடனே எடுத்துத் தன் கால்களின் கீழே போட்டு துவைத்துவிட்டது. அன்னையின் பிரசாதத்திற்கு ஏற்பட்ட அவமரியாதையைக் கண்டதும் வழக்கம் போல் துர்வாசருக்குக் கோபம் வந்து விட்டது.

'தேவேந்திரா. தேவர்களின் தலைவன், இத்தனைச் செல்வங்களின் தலைவன் என்ற மமதை, அகில உலகங்களுக்கும் அன்னையான மகாலக்ஷ்மியின் பிரசாதத்தையே அவமதிக்கும் அளவுக்கு உன்னிடம் இருக்கிறது. எந்த செல்வம் இருப்பதால் இந்த விதமாய் நீ நடந்து கொண்டாயோ அந்த செல்வங்கள் அனைத்தும் அழிந்து போகட்டும்' என்று சாபம் கொடுத்தார்.

துர்வாச முனிவரின் சாபத்தின் படி இந்திர லோகத்தில் இருந்த எல்லா செல்வங்களும் பாற்கடலில் வீழ்ந்துவிட்டன. அன்னை லக்ஷ்மியும் பாற்கடலில் மறைந்தாள். தேவர்கள் எல்லோரும் துன்பம் வரும்போது செய்யும் வழக்கம் போல் பாற்கடலில் பள்ளி கொண்டவனைப் போய் வணங்கினார்கள். இறைவனின் கட்டளைப்படி அசுரர்களின் உதவியோடு பாற்கடலைக் கடையத் துவங்கினார்கள்.

மந்தர மலையை மத்தாகவும் வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகவும் கொண்டு அசுரர்கள் ஒரு பக்கமாகவும் தேவர்கள் ஒரு பக்கமாகவும் பாற்கடலைக் கடைந்து கொண்டிருக்கின்றனர். நாட்கள் பல சென்று விட்டன. அழிந்து போன செல்வங்கள் திரும்பி வருவதைப் போல் தெரியவில்லை. ஆனால் திடீரென்று வெப்பம் அதிகமாகிவிட்டது. பாற்கடலில் இருந்து ஆலமென்னும் விஷம் வெளிவருகிறது. அதே நேரத்தில் வாசுகிப் பாம்பும் உடல்வலி தாங்காமல் விஷத்தைக் கக்குகிறது. இரண்டு விஷமும் சேர்ந்து கொண்டு ஆலகாலமாகி எல்லா உலகையும் அழித்துவிடும் போல் இருக்கிறது.

உலகங்களின் துன்பத்தைக் கண்டு பொறுக்காத கருணாமூர்த்தியாகிய மகேசன் உடனே அந்த ஆலகாலத்தை கையினில் ஏந்தி விழுங்கிவிட்டார். காலகாலனாகிய அவரை எந்த விஷம் என்ன செய்ய முடியும்? ஆனாலும் அன்னை பார்வதியால் அதனைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க முடியவில்லை. அண்ணல் உண்ட விஷம் கழுத்திலேயே தங்கிவிடும் படி அவரின் கழுத்தில் கையை வைத்தாள். விஷம் அங்கேயே நின்றது. விஷத்தின் வலிமையால் அண்ணலின் கழுத்து நீல நிறம் பெற்றது. அண்ணலும் 'நீலகண்டன்' என்ற திருப்பெயரைப் பெற்றார்.

இன்னும் சில நாட்கள் சென்றன. எல்லா செல்வங்களும் ஒவ்வொன்றாக பாற்கடலில் இருந்து வெளிவரத் தொடங்கின.



அன்னை மகாலக்ஷ்மியும் பாற்கடலில் இருந்து தோன்றினாள். அலைமகள் என்ற திருநாமத்தை அடைந்தாள். அப்படி அன்னை பாற்கடலில் இருந்து தோன்றிய பெருமை மிக்க திருநாள் பங்குனி உத்திரத் திருநாள். அன்னை பாற்கடலில் இருந்து தோன்றும் போதே கையில் ஒரு மலர்மாலையை ஏந்திக் கொண்டு தோன்றினாள். அதனை நேரே சென்று தன் கணவனாகிய திருமாலின் கழுத்தினில் இட்டாள். அதனால் பங்குனி உத்திரத் திருநாள் அன்னை மகாலக்ஷ்மியின் பிறந்த நாள் மட்டுமன்றி திருமண நாளாகவும் கொண்டாடப் படுகிறது.

***

மஹிஷியின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. அவள் வாங்கிய வரத்தின் படி சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்த மகனால் தான் அழிவு. ஆனால் ஆணும் ஆணும் சேர்ந்து பிள்ளை எப்படி பிறக்கும்? அது நடக்காத விஷயமாதலால் அவள் தன்னை அழிக்க யாருமில்லை என்று எண்ணிக் கொண்டு அளவில்லாத அட்டூழியங்கள் செய்துக் கொண்டிருக்கிறாள்.

பாற்கடலில் தோன்றிய அமுதத்தை தேவர்களுக்குக் கொடுப்பதற்காக விஷ்ணு மோகினியாக அவதாரம் எடுத்த போது மஹிஷி பெற்ற வரம் வேலை செய்யத் தொடங்கியது. மோகினிதேவியும் சிவபெருமானும் இணைந்ததால் ஹரிஹரசுதனான ஐயன் ஐயப்பன் பிறந்தான். மோகினிசுதன் பிறந்த தினம் பங்குனி உத்திரமாகிய திவ்வியத் திருநாள்.

***

சூரபதுமனும் அவன் தம்பியரும் செய்யும் தொல்லைகள் அளவிட முடியாமல் போய்விட்டன. சிவகுமாரனாலேயே தனக்கு அழிவு வரவேண்டும் என்று வரம் பெற்றதாலும் சிவபெருமான் காலகாலமாக அப்போது தவத்தில் மூழ்கி இருந்ததாலும் தனக்கு தற்போதைக்கு அழிவு இல்லை என்றெண்ணி அட்டகாசம் செய்து கொண்டிருக்கிறான் சூரன். அன்னை தாக்ஷாயிணி இமயமலைக்கரசன் மகளாய் பர்வத ராஜகுமாரியாய் பார்வதியாய் தோன்றி சிவபெருமானை மணக்க தவம் செய்து கொண்டிருக்கிறாள். சிவபெருமானோ அன்னை தாக்ஷாயிணியைப் பிரிந்ததால் மனம் வருந்தி யோகத்தில் நிலை நின்று விட்டார். சூரனின் அழிவு நேர வேண்டுமாயின் அன்னை பார்வதியை ஐயன் மணக்கவேண்டும். அதற்காக தேவர்களின் தூண்டுதலின் படி காமன் தன் கணைகளை ஐயன் மேல் ஏவி அவரின் நெற்றிக் கண்ணால் சுடப்பட்டு அழிந்தான். ஆனால் காமன் கணைகள் தன் வேலையைச் செய்தன. காமேஸ்வரன் அன்னை பார்வதியை மணக்க சம்மதித்துவிட்டார். ரதிதேவியின் வேண்டுகோளுக்கிணங்க மன்மதனும் உயிர் பெற்று எழுந்து ஆனால் உருவம் இல்லாமல் அனங்கன் ஆனான். அன்னையும் அண்ணலும் திருமணம் செய்து கொண்ட நன்னாள் பங்குனி உத்திரத் திருநாள். அதனால் இன்றும் பல சிவாலயங்களில் திருமண வைபவம் பங்குனி உத்திரத்தன்று நடைபெறுகிறது.

***


தைப்பூசம், கந்தர் சஷ்டி, திருக்கார்த்திகை, வைகாசி விசாகம் என்பன போல் பங்குனி உத்திரம் என்றாலே அது முருகன் கோவில் திருவிழா நாள் என்று தான் எல்லோருக்கும் உடனே தோன்றுவது. எங்கெல்லாம் முருகன் கோவில் கொண்டுள்ளானோ அங்கெல்லாம் பங்குனி உத்திரம் தவறாமல் கொண்டாடப்படுவதால் பங்குனி உத்திரம் என்றாலே குமரக்கடவுளின் நினைவு தான் நமக்கு வருகிறது. எனக்கும் அப்படித் தான். ஆனால் நாள் செல்லச் செல்ல நம் சமயத்தில் உள்ள மற்ற கடவுளர்களுக்கும் இந்த திருநாளில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதற்கும் மேலாக பல பெருமைகள் இந்தத் திருநாளுக்கு இருக்கலாம். படிப்பவர்கள் நான் எதையாவது விட்டிருந்தால் தயைசெய்து சொல்லுங்கள்.

***

எந்த காரணத்தினால் பங்குனி உத்திரம் முருகனுக்கு உகந்ததாகக் கொண்டாடப் படுகிறது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் எங்கள் குல தெய்வமான பழனியாண்டி அன்று தான் திருத்தேர் விழா கண்டருள்கிறான். முடிந்த வரை ஒவ்வொரு ஆண்டும் என் பெற்றோர் என் சிறு வயதில் பங்குனி உத்திரத் தேர்த் திருவிழாவிற்காக எங்களை (என்னையும் என் தம்பியையும்) பழனிக்குக் கூட்டிச் சென்றுள்ளனர். அதனால் பழனி தண்டாயுதபாணியின் மேல் எனக்குத் தனியொரு பாசம். இன்றும் ஒவ்வொரு முறை மதுரைக்குச் செல்லும் போது பழனிக்குச் செல்லத் தவறுவதில்லை. ஒவ்வொரு முறையும் அவனைப் பார்க்கும் போது கண் பனி சோரும்.

முருகன் குமரன் குகன் என்று மொழிந்(து)
உருகும் செயல் தன்(து) உணர்(வு) என்(று) அருள்வாய்
பொருபுங்கவரும் புவியும் பரவும்
குருபுங்கவ எண்குண பஞ்சரனே

கூகா என என் கிளை கூடியழப்
போகா வகை பொருள் பேசியவா
நாகாசல வேலவ நாலுகவித்
தியாகா சுரலோக சிகாமணியே

செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்
சும்மா இரு சொல் அற என்றலுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே

இந்தப் பாடல்களின் பொருளினை இராகவன், இராமநாதன் இவர்களின் பதிவில் பாருங்கள்.

***

இப்போது இதுவரை சொன்னதைப் பற்றியத் தொகுப்புரை:

1. திருவரங்கத்தில் திருவரங்கநாதனும் திருவரங்கநாயகியும் சேர்த்திச் சேவை அருளும் நாள்
2. வில்லிபுத்தூரில் ஆண்டாள் நாச்சியாரும் ரெங்கமன்னாரும் மணக்கோலத்தில் காட்சி தரும் நாள்
3. மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் வைகை ஆற்றில் எழுந்தருளும் நாள்
4. ஜனக ராஜ குமாரி ஜானகி இராகவனை மணந்த நாள்
5. நாமக்கல் இலட்சும் நரசிம்மப் பெருமாளும் நாமகிரித் தாயாரும் தேரில் பவனி வரும் நாள்
6. அன்னை திருமகள் பாற்கடலில் இருந்து தோன்றிய நாள்
7. மோகினி சுதனான ஐயன் ஐயப்பன் தோன்றிய நாள்
8. பார்வதி பரமேஸ்வரனை மணந்த நாள்
9. முருகனின் திருவருளால் மதுரை மாநகரில் உங்கள் அன்பிற்கினிய அடியேன் பிறந்த நாள்
10. முருகன் அருள் முன்னிற்க அடியேனின் அன்புத் திருமகள் பிறந்த நாள்

வணங்கி நிற்கிறோம். வாழ்த்துங்கள்.

Tuesday, March 27, 2007

திவ்ய பிரபந்த பாசுர இராமாயணம்


இராமாயணக் கதை பல இந்திய மொழிகளில் பாடப்பட்டிருக்கிறது. ஆதி காவியம் என்ற வால்மீகி இராமாயணம், அதற்கு முன்னர் இருந்த பல இராமாயணங்கள், தமிழில் கம்பரின் இராமாவதாரம், இந்தியில் துளசிதாசரின் இராமசரிதமானஸ் என்று பல மொழிகளிலும் பிரபலமான இராமாயணங்கள் இருக்கின்றன. சங்க காலத்திலும் இராமாயணக் காவியங்கள் இருந்துள்ளதாக பலத் தனிப்பாடல்கள் மூலம் எடுத்துக் காட்டும் கட்டுரை ஒன்றை மதுரை திட்டத்தின் வலைப்பக்கத்தில் படித்திருக்கிறேன்.

ஆழ்வார்களின் அருளிச்செயல்கள் என்னும் நாலாயிர திவ்ய பிரபந்தத்திலிருந்து பாசுர வரிகளைக் கொண்டு வியாக்கியான சக்ரவர்த்தி என்று பெயர் பெற்ற பெரியவாச்சான் பிள்ளை என்ற வைணவ ஆசார்யர் தொகுத்த இராமாயணம் ஒன்று இருக்கிறது. அது பாசுரப்படி இராமாயணம் என்று அழைக்கப்படுகிறது. இந்த இராமாயணத்தைப் பாடினால் ஆழ்வார்களின் பாசுரங்களைப் படித்த பயனும் இராமாயணம் பாடிய பயனும் ஒருங்கே கிடைக்கும் என்பது ஆன்றோர் வாக்கு. அந்த இனிய இராமாயணத்தை இங்கே இராமநவமி புண்ணிய தினமான இன்று இடுவதற்கு எம்பெருமானின் திருவருள் அமைந்தது என் பாக்கியம்.

***

திருமடந்தை மண்மடந்தை இருபாலும் திகழ
நலம் அந்தம் இல்லதோர் நாட்டில்
அந்தம் இல் பேரின்பத்து அடியரோடு
ஏழுலகம் தனிக்கோல் செல்ல வீற்றிருக்கும்
அயர்வறும் அமரர்கள் அதிபதியான
அணியார் பொழில் சூழ் அரங்க நகர் அப்பன்
அலை நீர்க் கடலுள் அழுந்தும் நாவாய் போல்
ஆவார் யார் துணையென்று துளங்கும்
நல்ல அமரர் துயர் தீர
வல்லரக்கர் இலங்கை பாழ்படுக்க எண்ணி
மண்ணுலகத்தோர் உய்ய
அயோத்தி என்னும் அணி நகரத்து
வெங்கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய்
கௌசலை தன் குல மதலையாய்
தயரதன் தன் மகனாய்த் தோன்றி
குணம் திகழ் கொண்டலாய்
மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காக்க நடந்து
வந்து எதிர்ந்த தாடகை தன் உரத்தைக் கீறி
வல்லரக்கர் உயிருண்டு கல்லைப் பெண்ணாக்கி
காரார் திண் சிலை இறுத்து
மைதிலியை மணம் புணர்ந்து
இருபத்தொருகால் அரசு களைகட்ட
மழு வாளி வெவ்வரி நற்சிலை வாங்கி வென்றி கொண்டு
அவன் தவத்தை முற்றும் செற்று
அம்பொன் நெடு மணிமாட அயோத்தி எய்தி
அரியணை மேல் மன்னன் ஆவான் நிற்க
கொங்கை வன் கூனி சொற்கொண்ட
கொடிய கைகேயி வரம் வேண்ட
அக்கடிய சொற்கேட்டு
மலக்கிய மாமனத்தனனாய் மன்னவனும் மறாதொழிய
குலக்குமரா காடுறையப் போ என்று விடை கொடுப்ப
இந்நிலத்தை வேண்டாது
ஈன்றெடுத்த தாயரையும் இராச்சியமும் ஆங்கு ஒழிந்து
மைவாய களிறொழிந்து மாவொழிந்து தேரொழிந்து
கலன் அணியாதே காமர் எழில் விழல் உடுத்து
அங்கங்கள் அழகு மாறி
மானமரு மென்னோக்கி வைதேவி இன் துணையா
இளங்கோவும் வாளும் வில்லும் கொண்டு பின் செல்ல
கலையும் கரியும் பரிமாவும்
திரியும் கானம் கடந்து போய்
பத்தியுடை குகன் கடத்தக் கங்கை தன்னைக் கடந்து
வனம் போய் புக்குக் காயொடு நீடு கனியுண்டு
வியன் கான மரத்தின் நீழல்
கல்லணை மேல் கண் துயின்று
சித்திரகூடத்திருப்ப தயரதன் தான்
நின் மகன் மேல் பழி விளைத்திட்டு
என்னையும் நீள்வானில் போக்க
என் பெற்றாய் கைகேசீ
நானும் வானகமே மிக விரும்பிப் போகின்றேன்
என்று வான் ஏற
தேனமரும் பொழில் சாரல் சித்திரகூடத்து
ஆனை புரவி தேரொடு காலாள்
அணி கொண்ட சேனை சுமந்திரன்
வசிட்டருடன் பரதநம்பி பணிய
தம்பிக்கு மரவடியை வான் பணயம் வைத்துக் குவலய
துங்கக் கரியும் பரியும் இராச்சியமும்
எங்கும் பரதற்கு அருளி விடை கொடுத்து
திருவுடைய திசைக்கருமம் திருத்தப் போய்
தண்டகாரணியம் புகுந்து
மறை முனிவர்க்கு
அஞ்சேல்மின் என்று விடை கொடுத்து
வெங்கண் விறல் விராதனுக வில் குனித்து
வண்டமிழ் மாமுனி கொடுத்த வரிவில் வாங்கி
புலர்ந்து எழுந்த காமத்தால் சீதைக்கு நேராவள்
என்னப் பொன்னிறம் கொண்ட
சுடு சினத்த சூர்ப்பனகாவை
கொடி மூக்கும் காதிரண்டும்
கூரார்ந்த வாளால் ஈரா விடுத்து
கரனொடு தூடணன் தன்னுயிரை வாங்க
அவள் கதறித் தலையில் அங்கை வைத்து
மலை இலங்கை ஓடிப் புக
கொடுமையில் கடுவிசை அரக்கன்
அலை மலி வேற் கண்ணாளை அகல்விப்பான்
ஓர் உருவாய் மானை அமைத்துச் சிற்றெயிற்று
முற்றல் மூங்கில் மூன்று தண்டத்தனாய் வஞ்சித்து
இலைக் குரம்பில் தனி இருப்பில்
கனி வாய்த் திருவினைப் பிரித்து
நீள் கடல் சூழ் இலங்கையில்
அரக்கர் குடிக்கு நஞ்சாகக் கொடு போய்
வம்புலாங் கடிகாவில் சிறையாய் வைக்க
அயோத்தியர் கோன் மாயமான் மாயச் செற்று
அலைமலி வேற்கண்ணாளை அகன்று தளர்வெய்தி
சடாயுவை வைகுந்தத்து ஏற்றி
கங்குலும் பகலும் கண் துயிலின்றி
கானகம் படி உலாவி உலாவி
கணை ஒன்றினால் கவந்தனை மடித்து
சவரி தந்த கனி உவந்து
வனம் மருவு கவியரசன் தன்னோடு காதல் கொண்டு
மரா மரம் ஏழு எய்து
உருத்து எழு வாலி மார்பில்
ஒரு கணை உருவ ஓட்டி
கருத்துடைத் தம்பிக்கு
இன்பக் கதிர் முடி அரசளித்து
வானரக் கோனுடன் இருந்து வைதேகி தனைத் தேட
விடுத்த திசைக் கருமம் திருத்து
திறல் விளங்கு மாருதியும்
மாயோன் தூது உரைத்தல் செப்ப
சீர் ஆரும் அநுமன் மாக்கடலைக் கடந்தேறி
மும்மதிள் நீள் இலங்கை புக்குக் கடிகாவில்
வாராரு முலை மடவாள் வைதேகி தனைக் கண்டு
நின் அடியேன் விண்ணப்பம் கேட்டருளாய்
அயோத்தி தன்னில் ஓர்
இடவகையில் எல்லியம் போதின் இருத்தல்
மல்லிகை மாமலை கொண்டு அங்கார்த்ததும்
கலக்கிய மா மனத்தளாய் கைகேயி வரம் வேண்ட
மலக்கிய மா மனத்தனனாய் மன்னவனும் மறாதொழிய
குலக்குமரா காடுறையப் போ என்று விடை கொடுப்ப
இலக்குமணன் தன்னோடு அங்கு ஏகியதும்
கங்கை தன்னில்
கூரணிந்த வேல் வலவன் குகனோடு
சீரணிந்த தோழமை கொண்டதுவும்
சித்திரக் கூடத்திருப்ப பரத நம்பி பணிந்ததுவும்
சிறுகாக்கை முலை தீண்ட மூவுலகும் திரிந்து ஓடி
வித்தகனே ராமா ஓ நின்னபயம் என்ன
அத்திரமே அதன் கண்ணை அறுத்ததுவும்
பொன்னொத்த மான் ஒன்று புகுந்து இனிது விளையாட
நின்னன்பின் வழி நின்று சிலை பிடித்து எம்பிரான் ஏக
பின்னே அங்கு இலக்குமணன் பிரிந்ததுவும்
அயோத்தியர் கோன் உரைத்த அடையாளம்
ஈது அவன் கை மோதிரமே என்று
அடையாளம் தெரிந்து உரைக்க
மலர்குழலாள் சீதையும்
வில் இறுத்தான் மோதிரம் கண்டு
அனுமான் அடையாளம் ஒக்கும் என்று
உச்சி மேல் வைத்து உகக்க
திறல் விளங்கு மாருதியும்
இலங்கையர் கோன் மாக்கடிகாவை இறுத்து
காதல் மக்களும் சுற்றமும் கொன்று
கடி இலங்கை மலங்க எரித்து
அரக்கர் கோன் சினம் அழித்து மீண்டு அன்பினால்
அயோத்தியர் கோன் தளிர் புரையும் அடியிணை பணிய
கான எண்கும் குரங்கும் முசுவும்
படையாக் கொடியோன் இலங்கை புகல் உற்று
அலையார் கடற்கரை வீற்று இருந்து
செல்வ விபீடணற்கு நல்லானாய்
விரிநீர் இலங்கை அருளி
சரண் புக்க குரை கடலை அடல் அம்பால் மறுக எய்து
கொல்லை விலங்கு பணி செய்ய
மலையால் அணை கட்டி மறுகரை ஏறி
இலங்கை பொடி பொடியாக
சிலை மலி வெஞ்சரங்கள் செல உய்த்து
கும்பனொடு நிகும்பனும் பட
இந்திரசித்து அழியக் கும்பகர்ணன் பட
அரக்கர் ஆவி மாள அரக்கர்
கூத்தர் போலக் குழமணி தூரம் ஆட
இலங்கை மன்னன் முடி ஒருபதும்
தோள் இருபதும் போய் உதிர
சிலை வளைத்துச் சரமழை பொழிந்து
மணி முடி பணி தர அடியிணை வணங்க
கோலத் திருமாமகளோடு
செல்வ வீடணன் வானரக் கோனுடன்
இலகுமணி நெடுந்தேரேறி
சீர் அணிந்த குகனோடு கூடி
அங்கண் நெடு மதிள் புடை சூழ் அயோத்தி எய்தி
நன்னீராடி
பொங்கிளவாடை அரையில் சாத்தி
திருச்செய்ய முடியும் ஆரமும் குழையும்
முதலா மேதகு பல்கலன் அணிந்து
சூட்டு நன்மாலைகள் அணிந்து
பரதனும் தம்பி சத்துருக்கனனும்
இலக்குமணனும் இரவு நன்பகலும் ஆட்செய்ய
வடிவிணை இல்லாச் சங்கு தங்கு முன்கை நங்கை
மலர்க்குழலாள் சீதையும் தானும்
கோப்புடைய சீரிய சிங்காதனத்திருந்து ஏழுலகும்
தனிக்கோல் செல்ல வாழ்வித்து அருளினார்

- பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் -

***

எம்பெருமான் திருவுளம் இருந்தால் இந்தப் பாசுரப்படி இராமாயணத்துக்கு விளக்கத்தை வருங்காலத்தில் எழுதுகிறேன். ஏதேனும் சொற்களுக்கு ஆங்காங்கே பொருள் புரியவில்லை என்றால் கேளுங்கள்.

Saturday, March 24, 2007

தனித்துவமானவன்...உங்களைப் போலவே!

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு


என்னங்க திருக்குறள் சொல்லித் தொடங்கறேனேன்னு பாக்கறீங்களா? இந்த மாதிரி திருக்குறளுக்கும் மத்த இலக்கியங்களுக்கும் பொருள் சொல்லி சொல்லித் தானே ஒரு இமேஜ் (??!!) இந்த வலைப்பதிவு மன்றத்துல எனக்கு (அடியேனுக்கு?!! - ஆமாம் எழுதுறப்ப மட்டும் பணிவு வந்துடும்) வந்திருக்கு. அதுக்கு வேட்டு வைக்கணும்ன்னே ரெண்டு மருத்துவர்கள் பேசி வைத்துக் கொண்டு சதி செய்கிறார்களோ என்ற ஐயம் இருந்தது. ஏன்னா மருத்துவர்கள் கொஞ்சம் மனோதத்துவமும் படிச்சிருப்பாங்கன்னு சொல்லுவாங்க. இவங்க ரெண்டு பேரும் வலைப்பதிவுகளைத் தாண்டியும் நம்மளைப் படிச்சிட்டாங்களோன்னு தோணிச்சு. நல்ல வேளையா சந்தோஷ் தம்பியும் நம்மளை விநோதமான ஆளுன்னு தெரிஞ்சி வச்சிக்கிட்ட மாதிரி கூப்பிட்டாரு. அப்பாடா. ஊரு உலகம் எல்லாருக்குமே தெரிஞ்சிருக்கு நம்மளைப்பத்தின்னு ஒரு ஆறுதல்!






அன்புடையார் எலும்பையும் மற்றவர்களுக்குக் கொடுப்பார்களாம். அது போல தங்களை உரித்து தங்கள் எலும்பையும் எல்லாருக்கும் காட்டுகிறார்கள் நம் மக்கள். வலைப்பதிவுகள் எல்லாம் எலும்புக்கூடுகளாய் தொங்குவதைப் பார்த்து எனக்குக் கொஞ்சம் பயமாகத் தான் இருந்தது. பயந்தது போல் என் தோலையும் உரிக்க மூவர் சதி செய்துவிட்டார்கள். அவர்களைத் திட்டிக் கொண்டே நீங்கள் இதனைப் படித்துவிடுங்கள். அன்பு உள்ளவர்களை எப்படி திட்டுறதுன்னா கேக்கறீங்க? நான் திட்டுவேனுங்க. ஏன்னா நான் Weird Fellow!!!

இதுவரை எழுதுன எந்த இடுகைக்கும் வீட்டுல ஐடியா கேட்டதில்லை. இந்த இடுகைக்குக் கேக்க வச்சிட்டாய்ங்க. நானும் வழிஞ்சுக்கிட்டே கேட்டேனே. ஆகா இது தான் சான்ஸுன்னு அவங்களும் ரெண்டு மூணு சொன்னாங்க. அவங்க சொன்னதை மொதோ சொல்லிடறேன்.





1. கோவிலுக்குப் போனா எல்லாரும் என்ன செய்வாங்க? புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேரும் சேந்து நின்னு சாமி கும்பிடுவாங்க தானே. தங்கமணி சொல்றாங்க நான் கோவிலுக்குப் போனா அவங்க இருக்கிறதையே மறந்துடறேனாம்.

ஒரு தடவை அவங்களோட சாமி கும்பிட்டு இந்தப் பக்கம் வந்ததும் அவங்களையும் கோவிலுக்கு எங்களோட வந்த மத்தவங்களையும் உக்கார வச்சுட்டு இன்னொரு தடவை போயி சாமி கும்பிட்டுட்டு வருவேன். திருப்பதியில மட்டும் அதை செய்ய முடியறதில்லை. அதனால சாமி பக்கத்துல போறப்போ காணாமப் போயிடுவேன். எல்லாரும் தீர்த்தம் வாங்கிட்டு காத்துக்கிட்டு இருப்பாங்க. நான் சாமி பாத்துட்டு மெதுவா வருவேன். மொதோ தடவை அவங்க குடும்பம், எங்க குடும்பம் எல்லாரும் சேர்ந்து போயிருந்தப்ப நான் வெளிய வர்றதுக்கு ரொம்ப நேரம் ஆச்சு. தங்கமணி அலட்டிக்காம நின்னாங்களாம். அவங்க அம்மா அப்பா தான் மாப்பிள்ளை கூட்டத்துல தொலைஞ்சிட்டாருன்னு பதறிப் போயிட்டாங்களாம். நான் வெளியே வந்த பிறகு வழிஞ்சேன்.

2. பணியிடத்துல என்னை வந்து பாத்தா எல்லாரோடயும் நல்லா பேசுவேன்; பழகுவேன். ஆனா ஏதாவது வார இறுதி கூடலுக்குப் (பார்ட்டி) போனா பெரியவங்களுக்கு வணக்கம் சொல்லிட்டு சின்னப் பசங்களோட விளையாடிக்கிட்டு இருப்பேன். பெரியவங்களோட பேசறதுக்கு என்ன தான் உங்களுக்குப் பயமோ; தயக்கமோன்னு வீட்டுல கேப்பாங்க. கூச்ச சுபாவம்ன்னு இல்லை. ஆனால் நிறைய பேரோட பழகுறதில்லை. நண்பர்களும் அவர்களா மின்னஞ்சல் அனுப்பியோ தொலைபேசியோ விசாரித்தால் தான் பதில் சொல்வேன். நானாக விசாரிப்பதில்லை. அதனால் நண்பர்கள் அதிகமாக இல்லை. வலைப்பதிவு நண்பர்கள் கூட அவர்களாக என் தொலைபேசி எண்களைப் பெற்று அழைத்துப் பேசியவர்கள் தான்; வருடக் கணக்கில் வலைப்பதிவுகளில் தெரிந்திருந்தாலும் பேசியதில்லை. கூச்சம் என்றில்லை; வேலை பாக்குற இடத்துல கூச்சப்படலையே. யாரைப்பத்தியும் உங்களுக்குக் கவலையில்லை என்பார்கள் வீட்டில் - அதுவும் இல்லை. பின்ன? ஏன்னு தெரியலைங்க. அம்புட்டுத் தான்.



3. முரண்பாடுகளின் மொத்த உருவம்ன்னு வேற சொன்னாங்க. பொண்ணுகிட்ட சாப்பிடறப்ப ஒன்னும் படிக்கக்கூடாது; எழுதக்கூடாதுன்னு சொல்லிக்கிட்டே இந்தப் பக்கம் நான் படிச்சுக்கிட்டே சாப்புடுவேன். மழையில நனையக்கூடாதுன்னு மொதொ நாள் சொல்லிட்டு மறு நாள் வா மழையில நனையலாம்ன்னு பொண்ணைக் கூட்டிக்கிட்டுப் போவேன். கறி சாப்புட்டுக்கிட்டே சக்தி விகடன் படிப்பேன். இப்படி நெறைய சொல்லலாம். எது எது எதிர்மறைன்னு மக்கள் நினைக்கிறாங்களோ அதெல்லாம் ஒரே நேரத்துல செய்யறேன் (நல்ல வேளையா இன்னும் பாத்ரூமுல போய் சாப்புடலை - விட்டா அதையும் செய்வீங்கன்றாங்க இங்க).

4. பெரியவங்க கிட்ட ஆசிர்வாதம் வாங்கறதுன்னா ரொம்ப பிடிக்கும். கல்யாணம் ஆன புதுசுல வயசானவங்க யாரைப் பாத்தாலும் எங்க வீட்டம்மாவுக்கு கடுப்பாகும் - ஐயோ ரெண்டு பேரும் சேர்ந்து காலுல விழலாம்ன்னு சொல்வானேன்னு. அதே நேரத்துல வயசுல எவ்வளவு பெரியவரா இருந்தாலும் எதாவது பிடிக்கலைன்னா சண்டை போடுவேன். +2 படிக்கும் போது அம்மாவைப் பெத்த பாட்டிக்கிட்ட சண்டை (ஒரு ரெண்டு மணி நேரம் போட்டோம் - எனக்குச் சளைக்காம அவங்களும் கத்துனாங்க) போட்டது இன்னும் நல்லா நினைவிருக்கு. 5 - 7 மணி வரை சண்டை போட்டுட்டு 7.30 மணிக்கு அவங்க சாப்பாடு போட உக்காந்து சாப்பிட்டேன். இன்னும் எனக்கு இந்தக் கேள்வி இருக்கு - அவங்க weirdஆ நான் weirdஆ?

5. பத்தாவது படிக்கிறப்ப அம்மா இறந்து போனாங்க. இந்த பகவத் கீதை எல்லாம் படிச்சு ரொம்ப கெட்டுப் போயிருந்தேன் அப்ப. ஒரு சொட்டுக் கண்ணீர் விடலை. அழுதவங்களைத் தேத்திக்கிட்டு இருந்தேன். காரியத்துக்கு மத்தவங்க எல்லாம் தயாராகிகிட்டு இருக்கிறப்ப தம்பியும் நானும் ஒருத்தனை ஒருத்தன் சீண்டி விளையாடிக்கிட்டு இருந்தோம். அதுக்கப்புறம் பல முறை கண்ணீர் விட்டிருக்கேன். இப்ப குழந்தைங்க பிறக்குறப்ப குழந்தைங்க செய்றதைப் பாத்துட்டு மாமியார் என் மனைவிகிட்ட நீ இப்படி தான் செஞ்சன்னு சொல்றப்ப நான் என்ன செஞ்சேன்னு சொல்ல அம்மா இல்லையேன்னு கண்ணீர் வரும். மாமியாருக்குத் தெரியாம முகத்தை திருப்பிக்கிட்டு வந்துடுவேன்.

சரி. ஈகோ டிரிப்புக்கு அஞ்சு விஷயம் போதும். அடுத்து அஞ்சு பேரைக் கூப்புடணுமே. இதோ அந்தப் பட்டியல்.

1. யோகன் ஐயா
2. மலைநாடான்
3. வெற்றி
4. இரவிசங்கர் கண்ணபிரான்
5. இளவஞ்சி (தலைப்புக்கு நன்றி தீவட்டித் தடியா)






Saturday, March 10, 2007

Sprituality in the Work Place

சின்மயா மிஷனின் 'பணியிடத்தில் ஆன்மிகம்' என்ற தலைப்பில் இருக்கும் இந்த அறிவுப்பேழையை நண்பர் ஒருவர் மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். அந்த அறிவுப்பேழையில் இருக்கும் செய்திகள் நம் எல்லோருக்கும் பயனளிக்கும் என்பதால் அதனை இங்கே இட விரும்பினேன். இந்த அறிவுப்பேழையை அனைவரும் பார்த்துப் பயன்பெறுங்கள்.