Sunday, March 28, 2010

நிற்பதுவே! நடப்பதுவே! பறப்பதுவே! - 2

காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ? அங்குக் குணங்களும் பொய்களோ?
சோலையிலே மரங்களெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால்
சோலை பொய்யாமோ? இதைச் சொல்லொடு சேர்ப்பாரோ?

ஒரு நாளிலேயே காலை, பகல், மாலை, இரவு, 24 மணி நேரம், அதைவிட சிறிய நேர பாகுபாடுகள், நாள் என்பதைவிடப் பெரிய நேர பாகுபாடுகள் - வாரம், மாதம், வருடம், நூற்றாண்டு என்று காலத்தைப் பற்றி நாம் எல்லோரும் ஒரே நினைவு கொண்டுள்ளோம். அதனால் தான் உலக நிகழ்ச்சிகள் தடை இல்லாமலும் குழப்பம் இல்லாமலும் நடந்து கொண்டிருக்கின்றன. மேலும் காலம் இறைவனின் உருவம் என்றொரு கொள்கையும் உண்டு.
இப்படி பல வகையாக பிரிக்கப்பட்ட கால அளவுகளில் நாம் எத்தனையோ காட்சிகளைக் காண்கிறோம். அவை எத்தனைக் காலம் ஆனாலும் நம் நினைவில் நிற்கிறது. அப்படி நிற்கும் காலத்தைப் பற்றிய நினைவும் அதில் தோன்றும் காட்சிகளைப் பற்றிய நினைவுகளும் பொய்யா? என்கிறார். நல்லது, தீயது, சாந்தம், வேகம், அறியாமை என்று நாம் காணும் பல விதமான குணங்களும் பொய்களோ? என்கிறார்.

விதை உண்மை. அப்படியென்றால் அதிலிருந்து தோன்றும், சோலையில் உள்ள மரங்கள் எல்லாம் கூட உண்மையாகத்தானே இருக்க வேண்டும். இறைவன் உண்மை. அந்த இறைவனிடமிருந்து தோன்றிய, தோன்றும், தோன்றப்போகும் உலகும் அதில் வாழும் உயிர்களும் எப்படி பொய்யாக முடியும். உண்மையாம் இறைவனிடமிருந்து தோன்றுவதால் அவைகளும் உண்மையாகத் தானே இருக்கவேண்டும். அவை பொய் என்றால் அதனை ஒரு பேச்சாக மதிக்க முடியுமா? என்கிறார்.

காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ?
வீண்படு பொய்யிலே நித்தம் விதி தொடர்ந்திடுமோ?
காண்பதுவே உறுதிகண்டோம் காண்பதல்லால் உறுதியில்லை
காண்பது சக்தியாம்; இந்தக் காட்சி நித்தியமாம்.


இந்த உலகில் எதுவுமே நிலையில்லை; எல்லாம் ஒரு நாள் அல்லது ஒரு நாள் மறைந்து போகும் என்றால், அது சரி, இந்த உலகில் எதுவுமே புதிதாய் தோன்றுவதில்லை; அதனால் மறைந்து போகும் அவையெல்லாம் மீண்டும் தோன்றுமன்றோ? அதனால், நிலையில்லை என்பதால் அவற்றை பொய் எனலாகுமோ? அப்படி அது பொய் என்றால், நல்வினை தீவினை என்று நாம் செய்யும் செயலுக்கேற்ப வந்துறும் விதி எப்படி தொடர்ந்து வருகிறது. கண நேரத்தில் தோன்றி மறைபவை இக்காட்சிகள் என்றால், நாம் செய்யும் செயல்களும் கண நேரத்தில் தோன்றி மறையும் பொய்களாய்த் தானே இருக்க வேண்டும். அப்படிப் பட்ட பொய்களின் பலனை நாம் எப்படி செய்த வினைகளுக்கு ஏற்ப அனுபவிக்கிறோம்? அவ்விதம் விதி தொடர்ந்து வந்து ஊட்டுவதால், தோன்றி மறையும் இவை யாவும் நிலையில்லாதவை மட்டுமே; பொய்களல்ல, என்கிறார்.

நாம் காண்பதெல்லாம் உறுதியானவை; பொய்களில்லை. ஏனெனில் அவை யாவும் சக்தியின் உருவங்களாம். அதனால் இந்த காட்சிகளெல்லாம் அந்த ஆதி சக்தியைப் போலவே நித்தியமானவை என்று கூறி தன் கருத்தை வலியுறுத்துகிறார்.

Tuesday, March 23, 2010

நாலடியார் போற்றும் கால் நிலம் தோயாக் கடவுள்!

நாலடியார் என்ற சங்க கால நூலின் கடவுள் வாழ்த்துப் பாடல் சமண முனிவர் இயற்றியது என்ற குறிப்புடன் இருக்கிறது. அபியுத்தர், பதுமனார் என்று இரண்டு பேர்களில் ஒருவர் (அல்லது ஒரே புலவரின் இரு பெயர்களாகவும் இருக்கலாம்) இந்தப் பாடலை எழுதியவராக உரையாசிரியர்களால் குறிக்கப்படுகிறார்கள்.

வானிடு வில்லின் வரவறியா வாய்மையால்
கானிலம் தோயாக் கடவுளை - யானிலம்
சென்னியுற வணங்கிச் சேர்துமெம் உள்ளத்து
முன்னியவை முடிக என்று.

வான் இடு வில்லின் வரவு அறியா வாய்மையால்
கால் நிலம் தோயாக் கடவுளை யாம் நிலம்
சென்னி உற வணங்கிச் சேர்தும் எம் உள்ளத்து
முன்னியவை முடிக என்று.


வான் என்ற சொல் இங்கே மேகத்தைக் குறித்தது. வான் இடு வில் - மேகத்தால் உண்டாகும் வானவில்/இந்திரவில். வானவில் எப்போது தோன்றும் என்பது சொல்ல இயலாது. இன்றைய அறிவியலும் இந்த இந்த சூழல்கள் இருந்தால் வானவில் 'தோன்றலாம்' என்று சொல்கிறதே ஒழிய வானவில் தோன்றுவதற்கான காரணிகள் அனைத்தையும் சொல்லி அக்காரணிகள் இருக்கும் பொழுதில் கட்டாயம் வானவில் தோன்றும் என்று அறுதியிடவில்லை; இனி வருங்காலத்தில் அறிவியல் அந்நிலையை அடையலாம். இவையெல்லாம் தெரியாத சங்க காலத்தில், கண்ட காட்சியையும் உய்த்துணர்ந்த அறிவையும் பெரியோர் பொய்யாமொழிகளையும் சான்றாகக் கொண்ட அக்காலத்தில், வான் இடு வில்லின் வரவு அறிய முடியாததாக இருந்தது!

வான் இடு வில்லின் வரவு அறிய முடியாத வாய்மையை எடுத்துக் காட்டாகக் கூறி அதே போல் தான் இவ்வுலகில் நிகழும் அனைத்துமே என்று புலவர் உணர்த்துவதைப் போல் இருக்கிறது. இது ஊழ் (ஊழ்வினை என்று இன்றைக்கு நாம் சொல்லும் நல்வினைத் தீவினைப் பயன்கள் இல்லை; ஊழ் - நியதி; உலகில் நிகழ்வன அனைத்தும் ஒரு நியதியின் படியே நடப்பதாகச் சொல்லும் தத்துவம். வடநூலார் அதனை ரிதம் என்றும் சொல்வார்கள்) என்னும் தத்துவக் கருத்தினை மறுப்பது போல் தோன்றுகிறது. ஆனால் ஊழின் படியே அனைத்தும், வானவில்லின் வருகையும் நிகழ்கிறது; ஆனால் அதனை அறியும் அறிவு நமக்கில்லை என்று சொல்வதாகக் கொண்டால் ஊழ்/நியதி என்ற தத்துவக் கருத்தை மறுப்பதாகக் கொள்ள வேண்டியதில்லை!

'வான் இடு வில்லின் வரவு அறிய முடியாத வாய்மையைப் போல் எம் உள்ளத்தே நாங்கள் நினைத்தவையும் நிகழும் என்று உறுதியாகச் சொல்ல முடியாத நிலையும் எமக்கு இருக்கிறது. அதனால் கால் நிலத்தில் படியாத கடவுளை எம் தலை (சென்னி) நிலம் சேரும்படி தலை தாழ்ந்து வணங்கிப் போற்றுவோம்' என்கிறார் புலவர்.

அனைத்தும் கடந்து உள்ளே இருப்பதால் இறைக்குக் கடவுள் என்ற பெயர் சொன்னார்கள் புலவர்கள். தேவர்களின் கால்கள் நிலத்தில் படியாது என்பது இந்திய சமயங்களின் கருத்து. அதனைத் தான் இங்கே குறிக்கிறார் போலும் புலவர். வான் இடு வில்லின் வரவு என்பது முன்னியவைகள் முடிவதற்கு ஆன எடுத்துக்காட்டாகக் கொள்ளாமல், கால் நிலம் தோயாக் கடவுளின் வரவாகக் கொண்டால் அவதாரம் என்ற கருத்து இங்கே சொல்லப்படுகிறதோ என்று தோன்றுகிறது. கால் நிலம் தோயாக் கடவுள் நிலத்தில் கால் தோயும் படி பிறப்பெடுத்து வருவதன் காரணம் நம்மால் அறிய இயலாது - வான் இடு வில்லின் வரவு அறிய முடியாத உண்மையைப் போல். அதனால் எம் உள்ளத்தில் முன்னியவை முடிக என்று அவன் தாளை வணங்குவோம் என்று சொல்வதாகக் கொள்ளலாம்.

கடவுளின் கால்கள் நிலத்தில் தோயாமல் இருக்கலாம்; ஆனால் எங்கள் தலைகள் நிலத்தில் உறும் படி வணங்குவோம் என்று கூறியது இறையின் உயர்வினையும் வணங்குபவனின் தாழ்வினையும் மிக்க நயத்துடன் குறித்ததாகக் கொள்ளலாம்.

நிற்பதுவே! நடப்பதுவே! பறப்பதுவே! - 1

'உலகத்தை நோக்கி வினவுதல்' என்ற தலைப்பில் பாரதியார் ஒரு பாடல் பாடியுள்ளார். அது 'பாரதி' திரைப்படத்திலும் வந்து இப்போது பலரும் அறிந்த ஒரு பாடலாகி விட்டது.

மகாகவி புதுவையில் இருக்கும் போது தத்துவ விசாரணையில் மிகுதியும் ஈடுபாடு கொண்டிருந்தார். அப்போது புதுவையில் வாழ்ந்து வந்த அரவிந்தருடன் அடிக்கடி தத்துவங்களைப் பற்றி விவாதம் செய்து கொண்டிருந்தார் என்றும் அறிகிறோம்.

மாயாவாதம் எனப்படும் அத்வைதத் தத்துவம் இந்திய இறைத்தத்துவங்களிலேயே மிகப் புகழ் பெற்றது. இந்தத் தத்துவப்படி இங்கு உள்ளதெல்லாம் இறைவனைத் தவிர வேறொன்றும் இல்லை. பெயர் உருவம் உள்ளதாய்க் காண்பதெல்லாம் மாயை. ப்ரம்மம் சத்யம்; ஜகத் மித்யை - இறைவன் மட்டுமே உண்மை, இந்த உலகம் பொய் என்பது அதன் கருத்து.

பாரதியார் அந்தக் கருத்தைப் பற்றி இந்தப் பாடலில் பாடி பாடலிறுதியில் தன் கருத்தை வலியுறுத்துகிறார்.


நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம்
சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே கேட்பதுவே கருதுவதே நீங்களெல்லாம்
அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?

இங்கு உள்ளதெல்லாம் இறைவடிவம் என்பதில் பாரதியாருக்கு எந்த அளவும் சந்தேகம் இல்லை. ஆனால் பெயரும் உருவமும் கொண்டு தோன்றுவதெல்லாம் பொய் என்னும் கொள்கையைத் தான் அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

நிலையாய் ஓரிடத்தில் நிற்கும் மலைகள், மரங்கள் போன்றவற்றை 'நிற்பதுவே' என்றும், நடக்கும் விலங்கினங்களை 'நடப்பதுவே' என்றும், பறக்கும் பறவையினங்களை 'பறப்பதுவே' என்றும் விளித்து, உங்களை நான் எப்போதும் பார்த்துக்கொண்டு இருக்கிறேனே நீங்கள் என்ன நான் காணும் சொப்பனமா? எனக்கு வந்துள்ள அழகான கனவா? கானல் நீர் போல், இல்லாத ஒன்று இருப்பது போல் தோன்றும் தோற்ற மயக்கங்களா? என்று கேட்கிறார்.


பிறந்த நாள் முதல் எத்தனையோ விஷயங்களை கற்கிறோம். மற்றவர்கள் அனுபவங்களைக் கேட்டு அதிலும் பல பாடங்களைப் பெறுகிறோம். இப்படி கற்றும் கேட்டும் உள்ள விஷயங்களை மனதில் கருதி அசை போட்டு ஒரு நிலையான கருத்தை அடைகிறோம். இப்படி நாம் நாள்தோறும் செய்பவையெல்லாம் வெறும் அற்ப மாயைகளா? இவற்றால் எந்த பயனுமில்லையா? கற்பதிலும் கேட்பதிலும் மனதில் கருதுவதிலும் எந்த ஆழ்ந்த பொருளும் இல்லையா? என்கிறார்.

வானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்களெல்லாம்
கானலின் நீரோ? வெறும் காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்தே போனதனால்
நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?

அதிகாலையிலும் நடுப்பகலிலும் பொன்மாலைப் பொழிதினிலும் வானம் தீட்டும் வண்ண வண்ண ஓவியங்களைக் கண்டு ஆச்சரியமும் ஆனந்தமும் எத்தனை முறை அடைந்துள்ளோம்? அதிகாலையில் வீசும் இளவெயில் உடலுக்கும் மனதிற்கும் எத்தனைப் புத்துணர்ச்சி அளிக்கிறது என்பதை அனுபவித்துள்ளோம் அல்லவா? பசுமையான மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ள கானகத்தைக் கண்டால் மனது எப்படி துள்ளிக் குதிக்கிறது. இவையெல்லாம் கானலின் நீர் போல் தானோ? ஒன்றை பிறிதொன்றாய்க் காணும் காட்சிப் பிழைதானோ? என்கிறார்.

இவ்வுலகில் எந்தனையோ மாந்தர் வாழ்ந்தனர். பெரிய பெரிய வீரர்களும் பேரரசர்களும் பேரறிஞர்களும் செயற்கரிய செய்தவர்களும் எத்தனையோ பேர் வாழ்ந்துள்ளனர். ஆனால் அவர்களெல்லாம் வெறும் கனவினைப் போல் இப்போது இல்லாமல் போனார்கள். அது போல் நானும் ஒரு கனவினைப் போல் ஒன்றும் இல்லாமல் போய்விடுவேனோ? இந்த உலகம் உண்மையிலேயே பொய்தானோ? என்கிறார்.

'தோன்றிற் புகழொடு தோன்றுக' என்னும் பொய்யாமொழிக்கேற்ப அந்த செயற்கரிய செய்தவர்களெல்லாம் இப்போது இல்லாமல் மரித்து புதைந்து அழிந்து போனாலும், அவர் செய்த செயல்களின் பலன்களை அவர்களின் பின்னால் வந்த பல தலைமுறையினர் அனுபவிப்பதும் அவர் தம் புகழுடம்பால் என்றும் வாழ்வதும் உண்மையாதலால் அவர்கள் வெறும் கனவாய்ப் போய்விடவில்லை. இந்த ஞாலமும் பொய்யில்லை என்பது இப்பாடலில் தொக்கி நிற்கும் கருத்து என நினைக்கிறேன்.

இதன் தொடர்ச்சியை அடுத்தப் பதிவில் பார்க்கலாம்.

Sunday, March 21, 2010

பாட்டுக்கொரு புலவன் பாரதி

பாட்டுக்கொரு புலவன் பாரதியடா - அவன்
பாட்டைப் பண்ணோடொருவன் பாடினானடா - அதைக்
கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனடா - அந்த
கிறுக்கில் உளறுமொழி பொறுப்பாயடா

என்று ஒரு கவிஞன் அழகாகப் பாடி வைத்தான்.

பாட்டுக்கொரு புலவன் தான் நம் பாரதி. திருக்குறளைப் பற்றி ஒன்று சொல்வார்கள் - அதில் இல்லாத பொருளே இல்லை என்று. அது திருக்குறள் உலக மக்களுக்குத் தேவையான பல விஷயங்களைக் கூறுவதால் வந்தப் புகழ்ச்சி. அது போல பாரதியார் பல விஷயங்களைக் கூறியிருக்கிறார் தன் பாட்டில். அவர் தேசியப் பாடல்களை மட்டும் பாடிவிடவில்லை. பல சமூக பிரச்சனைகளைப் பற்றியும் பாடியிருக்கிறார். பல ஞானப்பாட்டுகளையும் பாடியுள்ளார். அதனால் அவரை தேசிய கவி என்பதை விட மகாகவி என்று சொல்வது தான் பொருத்தம்.

பாரதியின் பாடல்கள் மிக எளிமையானவை. எளிதில் பொருள் விளங்கும். அதனால் அவர் கவிதைகளுக்கு சொற்பொருள் கூறிவதைவிட அவர் கவிதைகள் ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டு அது எவ்வளவு அழகாக சொற்சுவையும் பொருட்சுவையும் கொண்டு இருக்கிறது என்று எழுதலாம் என்று இருக்கிறேன். உங்கள் தொடர்ந்த ஆதரவு வேண்டும்.

பாரதியைப் பாட்டுக்கொரு புலவன் என்று பாடிய கவிஞர் சொன்னது போல் பாரதி பாட்டைக் கேட்டு நான் கிறுகிறுங்கி ஏதாவது உளறினால் அதனைப் பொறுத்துக் கொண்டு, தவறுகளை சுட்டிக் காட்டித் திருத்துங்கள். நன்றிகள்.

இன்பத்துப் பால்: நலம் புனைந்துரைத்தல் - 2

தலைவன் தலைவியின் அழகைப் பாராட்டிக் கூறுதல் இந்த அதிகாரத்தின் பொருள். இது சாதாரணமாக புணர்ச்சியின்பத்தின் பிறகு அளவில்லா மகிழ்ச்சியோடும் அடக்க முடியாத உணர்ச்சிகளோடும் நிகழ்வது இயற்கை. அதனால் இந்த அதிகாரத்தை 'புணர்ச்சி மகிழ்தல்' அதிகாரத்தின் பின் வைத்தார் வள்ளுவர் பெருமான்.

***

மதியும் மடந்தை முகனும் அறியா
பதியில் கலங்கிய மீன்


தங்களின் தலைமைச் சுடராகிய நிலவுக்கும் இந்தப் பெண்ணின் முகத்திற்கும் வேறுபாடு தெரியாமல் எது நிலவு என்று குழம்பி நிலைதிரிந்து ஓரிடத்தில் நில்லாமல் கலங்குகின்றன விண்மீன்கள்.

மதியும் - நிலவையும்

மடந்தை முகனும் - பெண்ணின் முகத்தையும்

அறியா - அறியாது

பதியில் கலங்கிய மீன் - தம்மிடத்தில் நில்லாத விண்மீன்கள்

விண்மீன்கள் பதியில் கலங்கின என்பதை வானத்தில் அவை ஒரே இடத்தில் நிற்காமல் ஒவ்வொரு இரவும் வெவ்வேறு இடத்தில் தோன்றுவதையோ மினுக்கி மினுக்கிச் சுடர்விடுவதையோ கூறுவதாகக் கொள்ளலாம். '

கண்ணிமைத்துக் காண்பார் தம் கண்ணென்ன கண்ணே' என்று இன்னோரிடத்தில் ஒரு பெருந்தமிழ்ப்புலவன் கூறினான். அவ்வாறு கண்ணிமைக்காமல் காணும் அழகினைப் போலின்றி தயங்கித் தயங்கி இமைத்து இமைத்துப் பார்க்கும் படி இருக்கிறது போலும் இந்தப் பெண்ணின் முக அழகு.

பதியில் கலங்கிய என்பதற்கு ஓரிடத்தில் நிற்காமல் திரியும் என்று பொருள் கொண்டால் இவள் முகம் மதியா நம்மிடையே இருக்கும் பெருஞ்சுடர் மதியா என்று திகைத்து அவை மற்ற விண்மீன்களைக் கலந்து கொள்ளத் திரிவதாகச் சொல்லலாம். அவ்வாறின்றி மினுக்கி மினுக்கிச் சுடர்விடுவதைக் கூறுகின்றது என்று பொருள் கொண்டால் மதிக்கும் முகத்திற்கும் வேறுபாடு புரியாமல் திகைத்து இமைக்கின்றன என்று கூறலாம்.

பதியில் கலங்கிய மீன் என்பது உண்மை நிகழ்ச்சி ஆதலால் அதனை இங்கே கூறியதன் மூலம் மதியும் இவள் முகமும் ஒன்றே என்பதும் உண்மை என்று காட்டினான் காதலன் என்கிறார் உரையாசிரியர் மணக்குடவர்.

***

அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
மறு உண்டோ மாதர் முகத்து.

தேய்ந்தும் பின்னர் அந்த தேய்ந்த இடத்தில் நிறைந்தும் கிடக்கும் மதிக்கு இருப்பது போல மறு இந்தப் பெண்ணின் முகத்தில் உண்டா? இல்லையே!

அறுவாய் நிறைந்த - குறைந்த இடத்தில் நிறைவுற்ற

அவிர்மதிக்கு - முழுமதிக்கு

போல - இருப்பதைப் போல்

மறு உண்டோ மாதர் முகத்து - இந்தப் பெண்ணின் முகத்தில் மறு உண்டோ?

இந்தப் பெண்ணின் முகத்தையும் நிலவையும் கண்டு குழம்பி நிலை தடுமாறுகின்றன இந்த விண்மீன்கள். ஏனென்று புரியவில்லை. இந்த நிலவு தேய்வதும் வளர்வதுமாக இருக்கிறது. இந்தப் பெண்ணின் முக அழகு அப்படியில்லையே! பின் ஏன் இந்த விண்மீன்களுக்கு இந்தத் தடுமாற்றம்? அது மட்டுமா அந்த நிலவில் இருக்கும் களங்கம் இந்தப் பெண்ணின் முகத்தில் இல்லையே! இவ்வளவு வேறுபாடுகள் இருந்தும் இந்த விண்மீன்கள் தடுமாறுவது ஏன்?

***

மாதர் முகம் போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி.

இந்தப் பெண்ணின் முகத்தைப் போல் என்றும் தேய்வின்றியும் மறுவின்றியும் ஒளிவிட உன்னால் முடியும் என்றால் நீ வாழ்க நிலவே! நீயும் என் காதலுக்கு உரியவள்.

மாதர் முகம் போல் - இந்தப் பெண்ணின் முகம் போல்

ஒளிவிட வல்லையேல் - ஒளி வீசும் திறமை கொண்டிருந்தால்

காதலை - என் காதலுக்கு உரியவள் (நீ)

வாழி மதி - நீ வாழ்க நிலவே!

இந்தப் பெண்ணின் முகத்தைப் போல் என்றும் ஒரே தன்மையுடையதாய் ஒளி வீசிக் கொண்டிருந்தால் நீயும் என் காதலுக்கும் வாழ்த்துக்கும் உரியவள் நிலவே. இல்லையென்றால் என் காதலையும் வாழ்த்தையும் நீ இழக்கிறாய்.

இந்தப் பெண்ணை காதலித்து விட்டு நிலவை நோக்கியும் இந்தக் காதலன் நீ என் காதலுக்கு உரியவள் என்று கூறுகிறானே என்றால் இவளைப் போல் குறைவின்றி அந்த நிலவு இல்லையே; அதனால் இவளன்றி வேறு எவரையும் இந்தக் காதலன் காதலிக்க இயலாது என்று குறிப்பாகச் சொன்னான்.

***

மலர் அன்ன கண்ணாள் முகம் ஒத்தியாயின்
பலர் காணத் தோன்றல் மதி.


மலர் போன்றக் கண்கள் உடைய இவள் முகத்திற்கு ஒப்பாக இருக்கும் ஆசை உனக்கு இருந்தால், நிலவே, பலரும் காணும் படி தோன்றாதே.

மலர் அன்ன கண்ணாள் - மலர் போன்ற கண்களையுடையவள்

முகம் ஒத்தியாயின் - முகத்தை ஒத்து இருக்க வேண்டுமெனில்

பலர் காணத் தோன்றல் - பலரும் காணும் படி தோன்றாதே

மதி - நிலவே

இங்கே மலர் என்றது குவளையாகவும் சொல்லலாம் தாமரையாகவும் சொல்லலாம். அழகாக செவ்வரி ஓடி இருக்கும் கண்ணைத் தாமரைக்கண் என்றும் கரிய பெரிய கண்களை குவளைக்கண் என்றும் சொல்வதுண்டு.

நிலவே நீ ஒளியிலும் வடிவிலும் இவள் முகத்தை ஒத்திருந்தாலும் தேய்தல், மறு என்னும் குறைகள் உன்னிடம் இருக்கின்றன. அதனால் இவள் முகத்தை ஒத்தவள் என்ற பெயர் உனக்கு நிலைக்க வேண்டும் என்றால் எல்லோரும் காணும் படி தோன்றாதே. அப்படித் தோன்றினால் நீ இவள் முகத்திற்கு ஈடாக முடியாமல் தோற்றுப் போவாய்.

நிலவே. நீ ஒளியிலும் வடிவிலும் இவள் முகத்தை ஒத்து இருக்கலாம். ஆனால் இவளுக்கு மலர் போன்ற கண்கள் இருக்கின்றன. உனக்கு அவை இல்லை. அதனால் இவள் முகத்தை ஒத்தவள் என்ற பெயர் உனக்கு வேண்டுமென்றால் எல்லோரும் காணும் படி தோன்றாதே. அப்படித் தோன்றி உன் குறையைக் காட்டாதே.

நிலவே நீ ஒளியிலும் வடிவிலும் இவள் முகத்தை ஒத்திருந்தாலும் இன்னொரு வகையில் இவள் முகத்திற்கு ஒப்பாக மாட்டாய். இவள் முகம் நான் மட்டுமே கண்டு இன்புற்றது. நீயோ பொது மகள் போல் எல்லோரும் காணத் தோன்றுகிறாய். அதனால் இவள் முகத்திற்கு ஒப்பாக மாட்டாய். அப்படி இவள் முகத்திற்கு ஒப்பாக வேண்டும் என்ற ஆசை இருந்தால் நான் மட்டுமே காணும் படி தோன்றுவாய்; பலரும் காணும் படி தோன்றாதே.

***

அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்

மிக மெல்லியதென்று புலவர்கள் கூறும் அனிச்சம்பூவும் அன்னத்தின் வெள்ளிய சிறகும் இந்தப் பெண்ணின் மென்மையான கால்களுக்கு நெருஞ்சிமுள்ளினைப் போன்றவை.

அனிச்சமும் - அனிச்சம்பூவும்

அன்னத்தின் தூவியும் - அன்னப்பறவையின் தூய்மையான சிறகும்

மாதர் அடிக்கு நெருஞ்சிப்பழம் - இந்தப் பெண்ணின் கால்களுக்கு முற்றிய நெருஞ்சி முள்ளினைப் போன்றவை.

இவள் பாதங்கள் மிகவும் மென்மையானவை. மோந்தாலே குழையும் என்று சொல்லப்படும் அனிச்சம் பூவும் மிக மிக மென்மையான அன்னச்சிறகும் இவள் அடிகளை நோக வைக்கும். அப்படிப்பட்டவளை அழைத்துக் கொண்டு காட்டுவழியே செல்லச் சொல்கிறாயே தோழியே. அங்கே உண்மையாகவே நெருஞ்சி முற்கள் இருக்குமே.

***

இந்த இடுகையில் இருக்கும் விளக்கங்கள் எல்லாம் பரிமேலழகர், மணக்குடவர், தேவநேயப்பாவாணர் என்ற மூவரின் உரைகளைத் தழுவி எழுதப்பட்டவை. அவர்கள் சொல்லாத ஆனால் பொருத்தமெனத் தோன்றுகின்ற விளக்கங்களையும் சொல்லியிருக்கிறேன். அவற்றையும் கண்டுபிடித்துச் சுவைக்க வேண்டுகிறேன். :-)

Friday, March 19, 2010

இன்பத்துப் பால்: நலம் புனைந்துரைத்தல் - 1

தலைவன் தலைவியின் அழகைப் பாராட்டிக் கூறுதல் இந்த அதிகாரத்தின் பொருள். இது சாதாரணமாக புணர்ச்சியின்பத்தின் பிறகு அளவில்லா மகிழ்ச்சியோடும் அடக்க முடியாத உணர்ச்சிகளோடும் நிகழ்வது இயற்கை. அதனால் இந்த அதிகாரத்தை 'புணர்ச்சி மகிழ்தல்' அதிகாரத்தின் பின் வைத்தார் வள்ளுவர் பெருமான்.

***

நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம் வீழ்பவள்

அனிச்ச மலரே! சிறிதே மோந்துப் பார்த்தாலும் குழைந்து போவாய் நீ! அவ்வளவு மெல்லியவள் நீ என்று உலகத்தவர் சொல்லுவார்கள். நீயே மென்மையில் சிறந்தவள் என்ற செருக்கினைக் கொள்ளாதே. உன்னைவிட மென்மையானவள் ஒருத்தி இருக்கிறாள். அவள் நான் விரும்பும் என் காதலி.

நன்னீரை வாழி அனிச்சமே - அனிச்சமே நீ நல்லதொரு மென்மைக்குணத்தைக் கொண்டவள்; நீ வாழ்க.

நின்னினும் - ஆனால் உன்னை விட

மெல் நீரள் யாம் வீழ்பவள் - மென்மைக் குணம் கொண்டவள் யாம் விரும்பும் பெண்.

இங்கே சொன்ன மென்மைக்குணம் அனிச்சத்திற்கு புற மென்மையாக இருக்க தலைவிக்கோ அகமும் புறமும் மென்மை என நின்றது. அவள் மென்மையான குணத்தைக் கொண்டவள். மென்மையான உடலையும் கொண்டவள். இங்கே புணர்ச்சிக்குப் பின்னர் கூறுவதால் உடல் மென்மையைப் பெரிதும் பேசினான் தலைவன் என்று கொள்ளுதலும் தகும்.

அஃறிணையான அனிச்சம் பூ இவன் சொல்வதைக் கேட்கப் போவது போலும், சொல்வதைக் கேட்டுப் பதில் சொல்லப் போவது போலும் தலைவன் பேசுவது புணர்ச்சிக்குப் பின்னர் எழுந்த உணர்ச்சி வேகத்தால் வந்த மயக்கமாம்.

***

மலர் காணின் மையாத்தி நெஞ்சே இவள் கண்
பலர் காணும் பூ ஒக்குமென்று


நெஞ்சமே! இவளை விலகி நின்று பார்த்து மகிழ்ந்திருந்த காலத்தில் எல்லாம் பலரும் கண்டு மகிழும் தாமரை, குவளை போன்ற பூக்களைக் காணும் போதெல்லாம் இவள் கண்களைப் போல் அம்மலர்கள் இருக்கின்றன என்று சொல்லிக் கொண்டிருந்தாய். இன்று அவளை மிக அருகில் பார்த்து மகிழ்ந்த பின்னர் தானே தெரிகிறது இவள் கண்களுக்கு அம்மலர்கள் ஒப்புமை ஆகாது என்று. இனி மேலாவது அப்படி ஒப்பு கூறி மயங்காதே.

மலர் காணின் மையாத்தி நெஞ்சே - நெஞ்சமே! மலரைக் காணும் போது மயங்கி விடாதே

இவள் கண் பலர் காணும் பூ ஒக்குமென்று - இவளுடைய கண் பலரும் கண்டு மகிழும் பூக்களை ஒக்குமென்று சொல்லி.

இது நெஞ்சோடு கிளத்தல் ஆகும். அம்மலர்கள் பலரும் நெருங்கிச் சென்றுக் கண்டு இன்புன்று மகிழலாம்; ஆனால் இவள் கண்களோ தலைவன் மட்டுமே நெருங்கிக் கண்டு இன்புற்றவை - என்ற குறிப்பும் இங்கே இருக்கின்றது. அந்த வகையாலும் அம்மலர்கள் இவள் கண்களுக்கு ஒப்புமை ஆகா.

***

முறி மேனி முத்தம் முறுவல் வெறி நாற்றம்
வேல் உண்கண் வேய்த்தோளவட்கு


பச்சை மூங்கிலைப் போன்ற தோள்களை உடைய என் காதலிக்கு உடம்பு மாந்தளிர் போன்று மிக மெல்லியது; மாந்தளிர் போன்ற நிறமும் கொண்டது. புன்னகையோ முத்தினை ஒத்தது. அவள் உடலில் எழும் இயற்கையான நாற்றமும் (வாசனையும்) நறுமணமாக இருக்கின்றது. அவள் மை தீட்டிய கண்களோ வேலினைப் போல் உள்ளன.

முறி மேனி - உடல் மாந்தளிர் போன்றது (நிறத்தாலும் குணத்தாலும்)

முத்தம் முறுவல் - பல்லோ (புன்னகையோ) வெண்மையான முத்தினைப் போன்றது.

வெறி நாற்றம் - அவள் உடலில் எழும் மணம் நறுமணம்

வேல் உண்கண் - மையினை உண்ட கரிய கண்கள் வேல் போல் கூர்மையானவை

வேய்த் தோளவட்கு - மூங்கிலைப் போன்ற தோள் அவளுக்கு.

***

காணில் குவளை கவிழ்ந்து நிலன் நோக்கும்
மாணிழை கண் ஒவ்வேம் என்று


இந்தக் குவளைப் பூக்களுக்குக் காணும் கண்கள் மட்டும் இருந்தால் மாண்பு மிகுந்த அணிகலங்களை அணிந்த என் காதலியின் கண்களுக்குத் தாங்கள் ஒப்புமை ஆக மாட்டோம் என்று உணர்ந்து நாணி தலை கவிழ்ந்து நிலம் நோக்கியிருக்கும். அவற்றிற்குக் காணும் கண்களும் இல்லை; இவளைப் போன்ற நாணமும் இல்லை. அதனால் தான் அவை தலை நிமிர்ந்து நிற்கின்றன.

இயற்கையாகத் தலை நிமிர்ந்து நிற்கும் குவளை மலர்களைப் பார்த்து இப்படித் தன் கருத்தினை ஏற்றித் தலைவன் கூறுவது தற்குறிப்பேற்ற அணி.

காணில் குவளை கவிழ்ந்து நிலன் நோக்கும் - கண்கள் இருந்து காணில் குவளைப் பூக்கள் தலை கவிழ்ந்து நிலத்தை நோக்கி நிற்கும்

மாணிழை - மாண் + இழை; மாண்புடைய, அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த நகைகளை அணிந்து கொண்டிருக்கும் இந்தப் பெண்ணின்

கண் ஒவ்வேம் என்று - கண்களுக்கு ஒப்பாக மாட்டோம் என்று.

***

அனிச்சப்பூக் கால் களையாள் பெய்தாள் நுசிப்பிற்கு
நல்ல படாஅ பறை


ஆகா! இவள் என்ன காரியம் செய்தாள்? தன்னுடைய மென்மை இவள் அறியவில்லை போலிருக்கின்றதே! அனிச்சப்பூ என்ன தான் மென்மையான பூவாக இருந்தாலும் இப்படியா இவள் அதன் காம்பினை நீக்காமல் அணிந்து கொள்வாள். இந்தக் காம்புகளின் சுமையால் இவள் இடை இனி ஒடிந்து விடும். அந்த இடைக்கு இனி மங்கலப் பறை எதுவும் முழங்காது; அமங்கலப் படை தான் முழங்கும்.

அனிச்சப்பூக் கால் களையாள் பெய்தாள் - அனிச்சப்பூக்களின் காம்பினை எடுக்காமல் கூந்தலில் சூடிக் கொண்டாள்

நுசிப்பிற்கு - இவள் இடைக்கு

நல்ல படாஅ பறை - நல்ல பறை இனி மேல் முழங்காது

மக்கள் வாழும் போது மங்கலப் பறைகள் முழங்கும். அவர்கள் சாகும் போது அமங்கலப் பறை முழங்கும். இங்கே இடை இனி ஒடிந்து விடும் என்பதை நல்ல பறை இனி இந்த இடைக்கு ஒலிக்காது என்று சொல்வதன் மூலம் தலைவன் கூறுகிறான்.

தலைவியின் இடை இவ்வளவு மெல்லியது என்று சொல்ல விரும்பி அது ஒடிந்து விடும் என்று இடையின் மென்மையைப் பெரிது படுத்திக் கூறியதால் இது உயர்வு நவிற்சி அணி.

***

இந்த இடுகையில் இருக்கும் விளக்கங்கள் எல்லாம் பரிமேலழகர், மணக்குடவர், தேவநேயப் பாவாணர் என்ற மூவரின் உரைகளைத் தழுவி எழுதப்பட்டவை. இந்த ஐந்து குறட்பாக்களுக்கும் மூவர் உரையும் ஏறக்குறைய ஒன்றே போல் இருக்கின்றன. ஒருவர் சொன்னதை மற்றவர் மறுக்கவில்லை. வேறு பொருளும் கூறவில்லை.

Wednesday, March 17, 2010

இன்பத்துப் பால்: புணர்ச்சி மகிழ்தல் - 2


உறுதோறுயிர் தளிப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள்

நான் இவளைத் தழுவும் போதெல்லாம் என் உயிர் கிளர்ச்சியும் உரமும் பெறுமாறு தீண்டுகின்றாள். அதனால் இந்த இளம்பெண்ணின் தோள்கள் மென்மையும் குளிர்ச்சியும் இன்பமும் தரும் அமிழ்தினால் ஆனவை.

உயிர் என்றும் நிலைக்கும் படி செய்வது அமிழ்தம். அதனைப் போன்று இவள் தோள்களும் உயிரினை தழைக்கச் செய்வதால் அவையும் அமிழ்தம்.

அவளைத் தழுவாத நேரம் உயிர் உரமின்றிப் போய்விடுகிறது என்பது ஓர் உட்பொருள்.

உறுதோறும் - தழுவும் போதெல்லாம்


உயிர் தளிப்பத் தீண்டலால் - உயிர் தளிர்க்கும் படி தீண்டுவதால்


பேதைக்கு - இளம் பெண்ணிற்கு


அமிழ்தின் இயன்றன தோள் - தோள்கள் அமிழ்தத்தால் செய்யப்பட்டவை

***

தம்மில் இருந்து தமது பாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு

தமது இல்லத்தில் வீற்றிருந்து தன் முயற்சியால் பெற்ற பொருளை தென்புலத்தார், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார், தான் என்னும் ஐந்து விதமாக பகுத்து தனது பங்கினை உண்ணும் இன்பத்தைப் போல் உள்ளது இந்த மாநிறம் கொண்ட அழகியைத் தழுவிக் காணும் இன்பம்.

இங்கே களவின்பத்தைப் பேசும் போது இல்லறவொழுக்கத்தில் இருக்கும் இன்பத்தை இந்த இன்பத்துடன் ஒப்பிட்டுப் பேசுகிறான் தலைவன். இல்லறவின்பம் பெரிய இன்பம் என்பதே உலக வழக்கு. அதனால் அந்த உயர்ந்த இல்லற இன்பம் தனக்கு இந்தத் தலைவியைத் தழுவும் போதே கிட்டுகிறது என்று சொல்கிறான்.

தான் தன் முயற்சியால் பெற்ற பொருளைத் தமது என்று சிறப்பாகச் சொல்கிறார். திருக்குறளில் வேறோரிடத்தில் இல்லறத்தின் இன்பமாகச் சொன்ன தன் பொருளை ஐந்து விதமாகப் பகுத்து தெய்வத்தை வணங்க ஒரு பங்கும், விருந்தினர்களை விருந்தோம்ப ஒரு பங்கும், சுற்றத்தாரைக் காக்க ஒரு பங்கும், முன்னோர்களை வழிபடவும் அவர் பெயர் விளங்கவும் செய்ய ஒரு பங்கும், தனக்கு ஒரு பங்கும் செலவழிக்கும் இன்பத்தை இங்கே பகுத்து - பாத்து என்று குறிப்பாகச் சொல்கிறார். இன்னொரு இடத்தில் இந்த ஐந்து பங்கு போக ஆறாவது பங்கையும் சொல்கிறார். அது அரசனுக்குரிய வரி. பழந்தமிழகத்தில் வருமானத்தில் / விளைச்சலில் ஆறு பங்கு அரசனுக்கு உரிய வரி என்றும் அப்படி பெறுவதே நியாயமான வரி என்றும் அதற்கு மேல் பெற்றால் அது அநியாய வரி என்றும் கருதப்பட்டது.

தம்மில் இருந்து - தமக்கு உரிமையான வீட்டில் வாழ்ந்து


தமது - தாம் தம் முயற்சியால் ஈட்டிய பொருளை


பாத்து - பகுத்து


உண்டு அற்றால் - உண்டு மகிழ்வது போல் தானே இருக்கிறது


அம்மா அரிவை முயக்கு - அந்த மாநிறம் கொண்ட அழகிய பெண்ணின் தழுவல்

***

வீழும் இருவர்க்கு இனிதே வளி இடை
போழப் படாஅ முயக்கு

ஒருவரை ஒருவர் விரும்பும் இரு காதலர்களுக்கு இனியதாவது காற்று இடையில் அறுத்துக் கொண்டு செல்லாதபடி கட்டித் தழுவிக் கொள்வது.

வீழும் இருவர்க்கு - ஒருவரை ஒருவர் விரும்பும் இரு காதலருக்கு


இனிதே - இனிமையானது


வளி இடை போழப் படாஅ முயக்கு - காற்று இடையில் புகுந்து கிழிக்க முடியாத தழுவல்

***

ஊடல் உணர்தல் புணர்தல் இவை காமம்
கூடியார் பெற்ற பயன்

சிறு சிறு சண்டைகள் செய்து ஊடி நிற்பதும், பின்னர் தம் தவறுணர்ந்து ஊடல் மறப்பதும், அது மறந்த பின் மீண்டும் கூடுவதும் என இவை தான் காதல் உற்றவர் பெற்ற பயன்.

ஊடலிலும் இன்பம் உண்டு; அந்த இன்பம் போதும் என்று உணர்ந்து அந்த ஊடலை முடித்துக் கொண்டு பின்னர் புணர்ந்து மேன்மேலும் இன்பம் பெறுகின்றனர் காதலர் என்பது இன்னொரு உரையாசிரியரின் கருத்து.

ஊடல் - ஊடல் கொள்வதும்


உணர்தல் - பின் அதன் பயன் உணர்ந்து ஊடலை மறப்பதும்


புணர்தல் - அதன் பின் கூடுதலும்


இவை - என இந்த மூன்றே


காமம் கூடியார் பெற்ற பயன் - காதல் கொண்டவர்கள் பெற்ற பெரும்பேறு.
***


அறிதோறும் அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு

பல வித அறிவு நூல்களைக் கற்கும் தோறும் அதில் அறிவு ஏற்பட்டு இது வரை அந்த அறிவு இல்லாமல் இருந்தது எப்படி தோன்றுகிறதோ அதே போல் இவளுடன் கூடும் போதெல்லாம் மேன்மேலும் இன்பம் விளங்கி இந்த சிவந்த ஆடை அணிகலன் அணிந்த பெண்ணின் மீது மேன்மேலும் காதல் தோன்றுகிறது.

ஒரே நூலையும் மீண்டும் மீண்டும் படிக்கும் போது புதிது புதிதாகப் பொருள் தோன்றுவதைப் போல் ஒரே பெண்ணான இவளுடன் மீண்டும் மீண்டும் கூடும் போது புதிது புதிதாக இன்பம் தோன்றி இவள் மேல் மேன்மேலும் காதல் தோன்றச் செய்கிறது. புதிய அறிவு பழைய அறிவை சிறியதாக்குவதைப் போல் புதிய காதல் பழைய காதலை சிறியதாகக் காணச்செய்கிறது. காலம் செல்ல செல்ல காதல் கூடும்; கூடுகிறது என்பது உட்பொருள்.

அறிதோறும் - புதிய அறிவினைப் பெறும் போதெல்லாம்

அறியாமை - இதுவரை இருந்த அறியாமை

கண்டற்றால் - தெரிய வருவது போல்


காமம் செறிதோறும் சேயிழை மாட்டு - சிவந்த ஆடைகளை அணிந்த இந்த அழகிய பெண்ணின் மேல் உள்ள காதல் மென் மேலும் வளர்கிறது.

Sunday, March 14, 2010

இன்பத்துப் பால்: புணர்ச்சி மகிழ்தல் - 1

கண்டு கேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் பெண்ணில் இருக்கு - இந்தப் பெண்ணில் இருக்கு. இந்தத் திரைப்படப் பாடல் வரியை பலரும் கேட்டிருப்போம். இது ஐயன் வள்ளுவன் சொன்னதை அப்படியே சொன்னது.

கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உள


கண்ணால் கண்டும் காதால் கேட்டும் நாவால் உண்டும் மூக்கால் மோந்தும் உடலால் தீண்டியும் அனுபவிக்கப்படும் எல்லா இன்பங்களும் இந்த ஒளி பொருந்திய வளையல்களை அணிந்த பெண்ணிடம் மட்டுமே உண்டு.

ஐம்புலன்களால் ஒரே நேரத்தில் அனுபவிக்கப்படும் இன்பம் என்று வேறொன்றும் இல்லை. இசைத்துப் பாடப்படும் பாடல் போன்று சில ஒன்றிரண்டு புலன்களுக்கு ஒரே நேரத்தில் இன்பமூட்டுபவையாக இருக்கின்றன. ஆனால் எல்லாப் புலன்களுக்கும் ஒரே நேரத்தில் இன்பம் ஊட்டும் திறம் இந்தப் பெண்ணில் மட்டுமே உள்ளது என்பதைத் தான் ஒண்டொடி கண்ணே என்று ஏகாரத்தால் சொன்னான் காதலன்.

கண்டு - கண்ணால் கண்டு

கேட்டு - காதால் கேட்டு

உண்டு - நாவால் உண்டு

உயிர்த்து - மூக்கால் நுகர்ந்து

உற்று - உடலால் தீண்டி

அறியும் ஐம்புலனும் - அனுபவிக்கும் ஐம்புல இன்பங்களும்

ஒண்டொடி - ஒண் + தொடி - ஒளி பொருந்திய வளையல்; இங்கே அந்த வளையலை அணிந்தப் பெண்ணைச் சுட்டியது

ஒண்டொடி கண்ணே உள - பெண்ணிடம் மட்டுமே இருக்கின்றன.

***

பிணிக்கு மருந்து பிற மன் அணியிழை
தன் நோய்க்குத் தானே மருந்து

உலகத்தில் எல்லா வித பிணிகளுக்கும் அந்த பிணிகளை ஏற்படுத்தியவை எதுவோ அதற்கு எதிர்மாறான குணங்கள் கொண்டவையே மருந்தாக அமையும். அழகிய அணிகலன்களை அணிந்த இந்தப் பெண்ணோ அவளால் உண்டான நோய்க்கு அவளே மருந்தாகிறாள். இது பெருவியப்பு அன்றோ?

பிணிக்கு மருந்து பிற மன் - பிணிகளுக்கு மருந்து அந்தப் பிணிகளை ஏற்படுத்தியவைகளை விட மாறான மற்றவை

அணியிழை தன் நோய்க்குத் தானே மருந்து - அணிகலன்களை அணிந்த இந்தப் பெண்ணோ அவள் ஏற்படுத்திய காதல் நோய்க்கு அவளே மருந்தாகிறாள்.

***

தாம் வீழ்வார் மென்றோள் துயிலின் இனிது கொல்
தாமரைக் கண்ணான் உலகு.

தாம் விரும்பும் பெண்ணின் மெல்லிய தோளில் சாய்ந்து துயில்வதிலும் இன்பம் பயப்பதோ தாமரைக்கண்ணான் ஆகிய இறைவனின் உலகம்? இல்லவே இல்லை.

தாமரைக்கண்ணான் என்றது திருமாலை.

மென் தோள் துயில்தல் அதனை அடுத்த இன்பம் புணர்தலைக் குறித்து நின்றது.

தாம் வீழ்வார் மென்றோள் - தாம் விரும்பும் பெண்ணின் மெல்லிய தோளில்

துயிலின் - துயிலுவதை விட

இனிது கொல் - இனிமை பயப்பதோ? (இல்லை)

தாமரைக் கண்ணான் உலகு - தாமரைக்கண்ணனின் உலகம்.

***

நீங்கின் தெறூஉம் குறுகும் கால் தண்ணென்னும்
தீ யாண்டுப் பெற்றாள் இவள்

இவளைப் கூடும் முன்னரும் கூடிய பின்னரும் காதல் நோயால் சுடுகின்றாள்; இவளை நெருங்கும் போதும் கூடும் போதும் குளிர்ச்சியாக இருக்கிறாள். இப்படிப்பட்டப் புதுமையானத் தீ இந்த உலகில் இல்லை; எந்த உலகிலிருந்து இவள் பெற்றாள்?

நீங்கின் தெறூஉம் - விலகினால் சுடும்

குறுகும் கால் தண்ணென்னும் - நெருங்கும் போது தண்ணென்று குளிரும்

தீ யாண்டுப் பெற்றாள் இவள் - இப்படிப்பட்டத் தீயை எங்கே பெற்றாள் இவள்?

***

வேட்ட பொழுதின் அவையவை போலுமே
தோட்டார் கதுப்பினாள் தோள்


விரும்பிய பொருள்களெல்லாம் விரும்பிய போதெல்லாம் வந்து இன்பம் தந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது பூவினைச் சூடிய தோளில் தாழ்ந்த கூந்தலையுடைய இவளின் தோள்.

தோள் தாழ் கதுப்பினாள் - தோளில் தாழும் கூந்தல் உடையவள் என்று ஒரு அறிஞர் உரை செய்கிறார். கலவியின் போது தோளில் தாழ்ந்ததாம் கூந்தல்.

தோடு தார் கதுப்பினாள் - தொடுத்த மலர் மாலை அணிந்த கூந்தல் உடையவள் என்று இன்னொரு அறிஞர் உரை செய்கிறார்.

தோள் தரும் இன்பம் என்றது அதற்கு பின்னர் வரும் இன்பத்தைப் பற்றி.

வேட்ட பொழுதின் - விரும்பிய உடனே அப்போதே

அவையவை போலுமே - விருப்பப்பட்ட பொருள்களால் ஏற்படும் இன்பத்தைப் போன்றதே

தோட்டார் கதுப்பினாள் தோள் - தோளில் சாயும், மலர்மாலை சூடிய, கூந்தலையுடையவளின் தோள்.

Saturday, March 13, 2010

இன்பத்துப் பால்: குறிப்பறிதல் - 2

உறாஅ தவர் போல் சொலினும் செறா அர்சொல்
ஒல்லை உணரப் படும்

காதலர் ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள காதலை மறைத்துக் கொண்டு, காதல் இல்லாதவர் போல் நடித்து அயலார் போல் சினத்துடன் பேசினாலும் அவர்கள் கொண்டிருக்கும் காதல் விரைவில் மற்றவரால் உணரப்பட்டுவிடும்.

உறாஅதவர் போல் சொலினும் - காதல் கொள்ளாதவர் போல் பேசினாலும்

செறாஅர் சொல் - உண்மையில் சினமில்லாத அவர்களின் சொற்கள்

ஒல்லை உணரப்படும் - விரைவில் அவர்கள் மற்றவர் மேல் கொண்ட காதலை வெளிப்படுத்திவிடும்

***

செறாஅச் சிறுசொல்லும் செற்றார் போல் நோக்கும்
உறாஅர் போன்றுற்றார் குறிப்பு

சினமில்லாமல் ஆனால் சினத்தவர் போல் பேசும் சொற்களும் சினத்துடன் நோக்கும் பார்வையும் காதல் கொண்டதை வெளியே சொல்ல விரும்பாமல் ஆனால் காதல் கொண்டவர்கள் தங்களை அறியாமல் காட்டும் குறிப்பு

செறாஅச் சிறுசொல்லும் - சினமில்லா சுடுசொற்களும்

செற்றார் போல் நோக்கும் - சினத்தவர் போல் பார்க்கும் பார்வையும்

உறாஅர் போல் உற்றார் குறிப்பு - காதல் உறவில்லை என்று எண்ணிக் கொண்டே காதல் உறுபவர்கள் காட்டும் குறிப்பு.

***

அசையியற் குண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும்

என் மேல் அன்பு கொண்டவள் நான் பார்க்கும் போது மெல்லச் சிரிக்கிறாள். அப்போது அந்த அழகிய மெல்லியலாள் இன்னும் அதிக அழகுடன் தோன்றுகிறாள்.

யான் நோக்கப் பசையினள் பைய நகும் - என் மேல் அன்பு கொண்டவள் நான் நோக்கும் போது மெல்ல சிரிக்கிறாள். (பசை - பாசம்; அன்பு)

அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர் - அந்த அசையும் துடியிடை உடைய அந்த பெண்ணுக்கு அதிக அழகு உண்டு.

***

ஏதிலார் போல பொது நோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள

காதலர்களிடம் மட்டுமே இருக்கும் ஒரு குணம்: அவர்கள் பொது இடத்தில் இருக்கும் போது தமக்குள் எந்த வித உறவும் இல்லாதவர் போல் நடந்து கொள்வார்கள்.

ஏதிலார் போல பொது நோக்கு நோக்குதல் - தமக்கு நடுவில் எந்த விதமான உறவும் இல்லாதவர் போல் பொதுவாக பார்த்துக் கொள்ளுதல்

காதலார் கண்ணே உள - காதலர்களிடம் மட்டுமே இருக்கும் ஒரு குணம்.

***

கண்ணொடு கண் இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல


காதலர்கள் ஒருவரை ஒருவர் பார்க்கும் போது அவர்கள் உள்ளங்கள் கலப்பது போல் கண்களும் கலந்து ஒன்றுபட்டுவிட்டால் வாய்ச்சொற்களுக்கு எந்த பயனும் இல்லாமல் போய்விடுகின்றது.

கண்ணொடு கண் இணை நோக்கொக்கின் - கண்ணுடன் கண் இணைந்து பார்வைகள் ஒன்று பட்டுவிட்டால்

வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல - வாய்ச்சொற்களுக்கு எந்த பயனும் இல்லாமல் போய்விடுகின்றது

Friday, March 12, 2010

இன்பத்துப் பால்: குறிப்பறிதல் - 1

இன்பத்துப் பாலின் இரண்டாவது அதிகாரம்:

இருநோக்(கு) இவளுண்கண் உள்ள(து) ஒரு நோக்கு
நோய் நோக்(கு) ஒன்றந்நோய் மருந்து


என்னை உண்டு விடுவது போல் இருக்கும் இவள் கண்களில் இருவிதமான பார்வைகள் இருக்கின்றன. ஒரு பார்வை எனக்குக் காதல் நோயைத் தரும். இரண்டாவது பார்வை அந்த காதல் நோய்க்கு மருந்தாகும்.

இருநோக்(கு) இவள் உண்கண் உள்ளது - இரு விதமான பார்வைகள் இவளின் உண்ணும் கண்களில் உள்ளது.

ஒரு நோக்கு நோய் நோக்கு - ஒரு பார்வை காதல் நோய் தரும் பார்வை

ஒன்று அந்நோய் மருந்து - மற்றொன்று அந்த நோயைத் தீர்க்கும் மருந்து.

***

கண்களவு செய்யும் சிறு நோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது

கள்ளத்தனமாக அவள் வீசும் கடைக்கண் பார்வையில் கிடைக்கும் இன்பம் காதல் இன்பத்தில் சிறந்த பகுதி இல்லை; அதனை விடப் பெரிது.

கண் களவு செய்யும் சிறு நோக்கம் - யாரும் அறியாமல் என் மீது கள்ளத்தனமாக அவள் வீசும் பார்வை

காமத்தில் செம்பாகம் அன்று - கலவியில் கிடைக்கும் இன்பத்தில் சிறந்த பகுதி இல்லை

பெரிது - அதனை விடப் பெரியது.

***

நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்

கடைக்கண்ணால் என்னை அவள் நோக்கினாள்; பின்னர் நாணத்தால் தலைகுனிந்தாள்; அவ்விதம் அவள் செய்தது அவள் எங்கள் காதல் இருவரையும் சேர்த்துக் கட்டும் காதல் என்னும் பயிருக்கு ஊற்றிய நீரானது.

நோக்கினாள் - அவள் என்னைப் பார்த்தாள்

நோக்கி இறைஞ்சினாள் - பின்னர் நாணத்தால் தலை குனிந்தாள்

அஃது அவள் யாப்பினுள் அட்டிய நீர் - அது அவள் எங்களைக் கட்டும் காதல்பயிருக்கு ஊற்றிய நீர்.

***

யானோக்கும் காலை நிலனோக்கும் நோக்காக்கால்
தானோக்கி மெல்ல நகும்

நான் பார்க்கும் போது குனிந்து நிலத்தை நோக்குவாள். நான் பார்க்காத போது என்னைப் பார்த்து மகிழ்ந்து புன்னகை புரிவாள்.

யான் நோக்கும் காலை நிலன் நோக்கும் - நான் பார்க்கும் போது நிலத்தை நோக்குவாள்.

நோக்காக்கால் தான் நோக்கி மெல்ல நகும் - நான் பார்க்காத போது அவள் பார்த்து மென்மையாக புன்னகைப்பாள்.

***

குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒரு கண்
சிறக்கணித்தாள் போல நகும்


அவள் என்னைப் பார்ப்பதே குறிக்கோளாக என்னை உற்றுப் பார்க்கவில்லையே தவிர வேறு எங்கோ பார்ப்பது போல் ஒரு கண்ணால் என்னைப் பார்த்து சிரிக்கிறாள்.

குறிக்கொண்டு நோக்காமை அல்லால் - என்னை உற்று நோக்கவில்லையே தவிர

ஒரு கண் சிறக்கணித்தாள் போல நகும் - ஒரு கண்ணை வேறெங்கோ பார்ப்பது போல் வைத்துக் கொண்டு என்னைப் பார்த்து சிரிக்கிறாள்.

Monday, March 08, 2010

தகை அணங்குறுத்தல் - 2

முந்தையப் பதிவின் தொடர்ச்சியாக இன்பத்துப்பாலின் முதல் அதிகாரம்...

கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன் இவள் கண்


வளைந்திருக்கும் இவள் புருவம் வளையாமல் நேராய் அமைந்திருந்து அவள் கண்களை மறைத்திருந்தால் இப்படி நான் காதலில் மூழ்கி நடுக்கமுறும் துன்பத்தை அவள் கண்கள் செய்திருக்க மாட்டா.

கொடும்புருவம் - வளைந்து நிற்கும் புருவம்

கோடா - அப்படி வளையாமல் நேராய் அமைந்து

மறைப்பின் - அவள் கண்களை மறைத்திருந்தால்

நடுங்கஞர் செய்யல மன் இவள் கண் - நடுக்கமுறும் படி செய்பவை அன்று இவள் கண்.

***

கடாஅக் களிற்றின் மேல் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்


மதங்கொண்ட யானையின் மத்தகத்தின் மேல் இட்ட முகபடாம் போல் தோன்றுகிறது இந்தப் பெண்ணின் சாயாத கொங்கை மேல் அசைந்தாடும் ஆடை.

கடாஅக் களிற்றின் மேல் கட்படாம் - மதங்கொண்ட யானையின் மேல் உள்ள படாம் (போன்றது)

மாதர் படாஅ முலை மேல் துகில் - பெண்ணின் சாயாத முலையின் மேல் உள்ள துகில்.

***

ஒண்ணுதற்கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்குமென் பீடு.

போர்க்களத்தில் என்னுடன் நட்பு பாராட்டாத பகைவரும் போற்றும் என் வீரம் இந்த ஒளி பொருந்திய நெற்றியை உடையவளின் முன்னால் வளைந்து கொடுத்து விட்டதே!

ஒண்ணுதற்கோஒ உடைந்தததே - ஒளி நிறைந்த நெற்றியையுடைய (ஒளி + நுதல் - ஒண்ணுதல்) இந்தப் பெண்ணின் முன் உடைந்ததே

ஞாட்பினுள் - களத்தில்

நண்ணாரும் - நட்பு பாராட்டாத பகைவரும்

உட்கும் என் பீடு - போற்றும் என் வீரம் (பெருமை).

***

பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்(கு)
அணியெவனோ ஏதில தந்து.

பெண்மானைப் போல் இளமையான பார்வையும் நாணத்தையும் இயற்கையாக உடைய இவளுக்கு செயற்கையான அணிகலன்கள் எதற்காக? அவை இவள் பேரழகிற்கு முன் எம்மாத்திரம்?

பிணையேர் மட நோக்கும் - மானைப் போன்ற இளமையான பார்வையும்

நாணும் - நாணமும்

உடையாட்கு - உடையவளுக்கு

அணி எவனோ தந்து - செயற்கையான அணிகலன்களால் என்ன பயன்?

ஏதில - எதுவுமில்லை.

***

உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ் செய்தல் இன்று.

மது கூட உண்டவரைத் தான் மகிழ்விக்கும். ஆனால் கண்டவுடனே மகிழ்ச்சியைத் தருவது காதல் மட்டுமே.

உண்டார் கண் அல்லது அடு நறா - உண்டவர்களுக்கு மது (மகிழ்ச்சியூட்டும்)

காமம் போல் - காதலைப் போல்

கண்டார் மகிழ் செய்தல் இன்று - கண்டாலே மகிழ்ச்சியைத் தருவது (வேறொன்று) இல்லை.

Sunday, March 07, 2010

தகை அணங்குறுத்தல் - 1

இன்பத்துப் பாலில் முதல் அதிகாரத்துக்குப் பெயர் 'தகை அணங்குறுத்தல்'. காதலன் தன் காதலியைப் பற்றி வருணித்துப் பாடுவது போல் அமைந்துள்ளது இந்த அதிகாரம். இந்த அதிகாரத்தின் முதல் ஐந்து குறட்பாக்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.

அணங்கு கொல் ஆய் மயில் கொல்லோ கனங்குழை
மாதர் கொல் மாலும் என் நெஞ்சு.

என் காதலியின் அழகிய உருவம் வருணிக்க இயலாத ஒன்று. ஒரு முறை பார்த்தால் அவள் தேவதையோ என்று தோன்றுகிறது. மறுமுறை பார்க்கும் போது அழகிய தோகை மயிலோ என்று தோன்றுகிறது. இல்லை கனமான அழகிய குழையை காதில் அணிந்திருக்கும் மானிடப் பெண் தானோ என்று இன்னொரு முறை பார்க்கும் போது தோன்றுகிறது. அவளின் அழகைக் கண்டு என் மனம் மயங்குகிறதே.

அணங்கு கொல் - தேவதையோ? (அணங்கு என்னும் சொல் பயமூட்டும் தெய்வப் பெண்களுக்கு, மோகினிகளுக்கு தொடக்கத்தில் பயன்படுத்தப் பட்டு, பின் வள்ளுவர் காலத்தில் அழகிய அன்புள்ள மகிழ்ச்சியூட்டும் தேவதைகளைக் குறிக்க பயனாகத் தொடங்கியது என்று படித்திருக்கிறேன்).

ஆய் மயில் கொல்லோ - அழகிய தோகை மயிலோ?

கனங்குழை மாதர் கொல் - கனமான குழையை காதில் அணிந்திருக்கும் பெண்ணோ?

மாலும் என் நெஞ்சு - மயங்கும் என் மனம்.

*****

நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக் கொண்டன்ன(து) உடைத்து.

அவள் என்னை நோக்கினாள். அவள் என்னைப் பார்க்கிறாளே என்று நான் அவளைத் திரும்பப் பார்க்கும் போது அவள் என்னை மீண்டும் நோக்கினாள். இப்படி இருவரும் ஒருவரை ஒருவர் ஒரே நேரத்தில் நோக்கியது என்னால் தாங்க முடியவில்லை. அவள் ஒருத்தி என்று தான் நினைத்தேன். ஆனால் அவள் விழி அம்புகளால் அவள் தாக்கியது அவள் ஒரு பெரிய படையுடன் வந்து தாக்கியது போல் இருந்தது.

நோக்கினாள் நோக்கு எதிர் நோக்குதல் - அவள் என்னை நோக்கி, நான் அவளை நோக்கும் போது அவள் உடனே என்னை எதிர் நோக்கினாள்; அது

தாக்கு அணங்கு தானைக் கொண்டு அன்னது உடைத்து - தேவதை போன்ற அப்பெண் தனியாக வராமல் ஒரு தானையுடன் (படையுடன்) வந்து தாக்குவது போல் உள்ளது.

'அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள்' என்னும் போது இப்படித் தான் இருந்தது போலும். இன்றும் இளைஞர்களுக்கு இப்படித் தானே இருக்கிறது.

*****

பண்டறியேன் கூற்றென்பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு.

கூற்றுவன் எனப்படும் கொடிய எமனை எனக்கு முன்பெல்லாம் தெரியாது. அவனின் வலிய பாசக் கயிறு எவ்வளவு வலிமையை உடையது என்பதை இந்த பெண்களில் சிறந்தவளால் (பெண் தகையால்) இப்போது அறிந்து கொண்டேன்.

பண்டு அறியேன் கூற்று என்பதனை - கூற்றுவனை நான் முன்பெல்லாம் அறிய மாட்டேன்.

இனி அறிந்தேன் பெண் தகையால் பேரமர்க் கட்டு - இப்போது அறிந்து கொண்டேன் இந்த பெண்ணால் அவனின் வலிய கட்டினை.

*****

கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக் கமர்த்தன கண்.

பெண்மையின் சிறந்த உதாரணமாகத் தோன்றுகின்ற இந்தப் பேதைப் பெண்ணுக்கா கண்டவர்கள் உயிரை உண்ணும் கண்கள் அமைந்தன? என்ன முரண்பாடு?

கண்டார் உயிர் உண்ணும் - கண்டவர்கள் உயிரை உண்ணும்

தோற்றத்தால் பெண் தகைப் பேதைக்கு - பார்ப்பதற்கு பெண்மையின் உதாரணமாகத் தோன்றும் இந்தப் பேதைக்கு

அமர்த்தன கண் - அமைந்தன கண்கள்.

*****

கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கம் இம்மூன்றும் உடைத்து.

நான் பார்க்கும் போது அவள் என்னைப் பார்த்தால் அவள் கண்கள் என் உயிரைப் பறிக்கும் கூற்றம் போல் உள்ளன. அவள் பார்ப்பதற்காக பயன்படுத்தும் உறுப்பாகவும் அவள் கண்கள் உள்ளன. மருண்டு நோக்கும் அவளது கண்கள் மானின் கண்கள் போலும் உள்ளன. இந்த இளம்பெண்ணின் பார்வை இந்த மூன்றையும் கொண்டிருக்கிறதே? ஆச்சரியம்.

கூற்றமோ - கூற்றுவனோ?

கண்ணோ - கண்களோ?

பிணையோ - மானின் கண்களோ?

மடவரல் நோக்கம் - இளம்பெண்ணின் பார்வை

இம்மூன்றும் உடைத்து - இந்த மூன்றையும் கொண்டிருக்கிறது.

Monday, March 01, 2010

காசி போகும் வழியில் கருங்குரங்கு; காசிராமன் மகனோ செங்குரங்கு! - ஒரு சௌராஷ்ட்ர தாலாட்டு

தாலாட்டு பிறந்த கதை:

நண்பர் ஓபுளா விஸ்வேஷுக்கு அவரது தாயார் பாடிய தாலாட்டில் இந்த இரு வரிகள் தான் நினைவில் இருந்திருக்கிறது.

கசி ஜாத்தொ வாடும் களொ கோதி
கசிராமு தெகொ பெடொ கொரொ கோதி

kasi jaatho vaadum kalo kOthi
kasiraamu thego bedo goro kOthi

காசி போகும் வழியில் கருங்குரங்கு
காசிராமன் அவன் மகன் செங்குரங்கு

நண்பர்கள் பலரிடமும் கேட்டுப் பார்த்திருக்கிறார். யாருக்கும் தெரியவில்லை. அண்மையில் அவர் மதுரைக்குச் சென்றிருந்த போது அவருடைய நண்பர் மருத்துவர் V. L. R. கணேஷ் அவருக்காக இந்தத் தாலாட்டை எழுதித் தந்திருக்கிறார். அந்தப் பாட்டை விஸ்வேஷ் இசையுடன் அவருடைய மகள் பாடி யூட்யூபில் இட்டிருக்கிறார். இதோ அந்தப் பாடல்.



ந:ன கீஷ்டு எல்லெ ஐகிலிடே பா
சொன்னொ சொகன் காமுன் தூ கென்னொ சே பா
தின்னு ஜியெத் பல்ல அவ்னா இஞ்சிலிடே பா
மொன்னுமூ எல்லெ தூ தொவ்லி இஞ்சி பா

nhanna keeshtu elle aikilide baa
sonno sogan kaamun thoo kenno sE baa
dhinnu jiyeth phalla avnaa injilide baa
monnumoo elle thoo thouli inji baa

சின்ன கண்ணா இதை கேட்டுக் கொள்ளப்பா
பொன்னைப் போன்ற செயல்கள் நீயும் செய்ய வேண்டுமப்பா
தினம் போனால் பின்னர் வராது தூங்கிடு அப்பா
மனத்தில் இதை நீ வைத்துத் தூங்கப்பா

பள்ளாம் சேத்தெ கீஷ்டு இஞ்சிலிடே பா
பொள்ளாம் சேத்தெ குள்ளெ சோன் வத்த கென்ன பா
சொக்கட் சொவ்தி மெனி ஹொய் தூ தெக்கன்ன பெடா
பஸ்கடூ லோக் அவய் த:க்குனகொ பா

paLLaam sEththe keeshtu injilide baa
poLLaam sEththe gullE sOn vaththa kenna baa
chokkat chovthi meni hoi thoo thekkanna betaa
paskadoo lOg avai dhakkunakO baa

தூளியில் இருக்கும் கண்ணா தூங்கிடு அப்பா
பழத்தில் இருக்கும் இனிப்பு போல் பேச வேண்டுமப்பா
நன்கு படித்து ஆளாகி நீ காட்டணும் மகனே
பின்னாடியே உலகம் வரும் பயப்படாதே அப்பா

கசி ஜாத்தொ வாடும் களொ கோதி
கசிராமு தெகொ பெடொ கொரொ கோதி

kasi jaatho vaadum kalo kOthi
kasiraamu thego bedo goro kOthi

காசி போகும் வழியில் கருங்குரங்கு
காசிராமன் அவன் மகன் செங்குரங்கு

நஜ்ஜெ நாவுன் கொ:ப்பிம் க:ட ஹோனா
லஜ்ஜெ ஹோத்தெ காமுன் தூ கெர ஹோனா
ஹொல்லொ ஜாத்தக் தி:ல்ல காமுன் கெர ஹோனா
மெல்லரியொ வத்த தூ தொப்ப ஹோனா

najje naavun khobbim khada hOnaa
lajje hOththe kaamun thoo kera hOnaa
holla jaaththak dhilla kaamun kera hOnaa
mellariyo vaththa thoo thoppa hOnaa

கெட்ட பெயர் எப்போதும் எடுக்கக் கூடாது
வெட்கம் தரும் செயல் நீ செய்யக் கூடாது
மேலே போக கெட்ட செயல் செய்யக் கூடாது
சொன்ன வார்த்தை நீ தப்பக் கூடாது

உஜெ காமு ஹவ்டன் சொட ஹோனா
பஜெ சேத்த ந்யாவ் வாடும் ஜொடுஞ்சுனோ பா
போடு பா:துக் கொங்கி போடுர் ஹன ஹோனா
வாடுனு மச்சாய் கா:ல் பொட ஹோனா

uje gaamu howdan soda hOnaa
paje sEththe nyaav vaatum jodunchuno baa
pOtu bhaathuk konki pOtur hana hOnaa
vaatunu machchaai khaal poda hOnaa

பிறந்த ஊர் நினைவு விடக்கூடாது
வேண்டுவதை நியாய வழியில் சம்பாதிக்கணும்பா
வயிற்றுச் சோற்றுக்காக யார் வயிற்றிலும் அடிக்கக் கூடாது
வழிகள் மாறலாம் கீழே விழக்கூடாது

கசி ஜாத்தொ வாடும் களொ கோதி
கசிராமு தெகொ பெடொ கொரொ கோதி

kasi jaatho vaadum kalo kOthi
kasiraamu thego bedo goro kOthi

காசி போகும் வழியில் கருங்குரங்கு
காசிராமன் அவன் மகன் செங்குரங்கு

மாய் பாபு வத்த தூ தெட்ட ஹோனா
காய் ஹொயெத் ஹோந்தோ ஹாத் சொட ஹோனா
கௌலான் சொகன் அஸ்கி தெனு செரி ஜிவ்ன பா
ஹவ்லகொன் கொங்கிகு ஹவ்டுனகொ பா

maai baapu vaththa thoo thetta hOnaa
kaai hoyeth hOntho haath soda hOnaa
koulaan sogan aski thenu cheri jivna baa
houlakon konkigu houtunako baa

அம்மா அப்பா பேச்சு நீ தட்டக் கூடாது
என்ன ஆனாலும் ஆகட்டும் கை விடக்கூடாது
காக்கை போல எல்லோரும் சேர்ந்து வாழணுமப்பா
எளிமையாக யாரையும் எண்ணாதேயப்பா

கசி ஜாத்தொ வாடும் களொ கோதி
கசிராமு தெகொ பெடொ கொரொ கோதி
பள்ளாம் சேத்த கீஷ்டு இஞ்சிலிடே பா
பள்ளாம் சேத்த கீஷ்டு இஞ்சிலிடே பா

kasi jaatho vaadum kalo kOthi
kasiraamu thego bedo goro kOthi
paLLaam sEththe keeshtu injilide baa
paLLaam sEththe keeshtu injilide baa

காசி போகும் வழியில் கருங்குரங்கு
காசிராமன் அவன் மகன் செங்குரங்கு
தூளியில் இருக்கும் கண்ணா தூங்கிடு அப்பா
தூளியில் இருக்கும் கண்ணா தூங்கிடு அப்பா