Monday, February 28, 2011

ஸௌராஷ்டிர பாஷா கலாசாலோ - ௨௦௧௧, ஸௌராஷ்டிர மொழிப் பட்டறை - 2011



நண்பர் சுரேஷ் தன் பதிவில் சௌராஷ்ட்ர மொழியின் வரலாற்றைப் பற்றி சுருக்கமாகவும் தெளிவாகவும் சொல்லியிருக்கிறார். எழுத்துகள் இருந்தாலும் அவை இருப்பதே தெரியாமலும், தெரிந்தாலும் கற்றுக் கொள்ளாமலும் (நான் இந்த வகையில் இருக்கிறேன்), கற்றிருந்தாலும் புழங்காமலும் ஒரு பேச்சு மொழியாக மட்டுமே சௌராஷ்ட்ரம் இப்போது இருக்கிறது. மொழி நிலைத்திருக்க வேண்டுமெனில் இந்த நிலை மாற வேண்டும். மொழி வெறும் தகவல் தொடர்பு சாதனம் மட்டுமே இல்லை; அதில் பண்பாடும் அடங்கியிருக்கிறது. எழுதத் தொடங்கும் போது இலக்கியங்களும் புதிது புதிதாகத் தோன்றும். மொழியும் நிலைபெறும். இந்த நோக்கங்களை மனத்தில் கொண்டு பலரும் ஊக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த பட்டறையை மதுரை சௌராஷ்ட்ரக் கல்லூரியில் நடத்த நண்பர் சுரேஷும் அவருடைய செயற்துணைவர்களும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். மேல்விவரங்களை அவருடைய பதிவில் பார்க்கலாம்.

Wednesday, February 23, 2011

மொழி எதற்காக? - ஜெயமோகன்

எழுத்தாளர் ஜெயமோகன் மொழி பற்றி எழுதிய இந்த கட்டுரையை இன்று படித்தேன். அதனைப் படித்ததில் பிடித்தது வகையில் பகிர்ந்து கொள்கிறேன்.

http://www.jeyamohan.in/?p=11623

என் மக்கள் இருவரும் மிக நன்றாக சௌராஷ்ட்ரம் பேசுவார்கள். எட்டு வயது மகளுக்குத் தமிழ் கற்று கொள்ள வேண்டும் என்று ஆர்வம்; என் பணிச்சுமையால் அவளுக்குக் கற்றுக் கொடுக்க இயலவில்லை. விரைவில் அதனையும் வாழ்வின் ஒரு முக்கியப் பகுதியாக எடுத்துக் கொண்டு சொல்லிக் கொடுக்க வேண்டும். ஜெயமோகன் சொல்லும் நுண்ணுணர்வுள்ள குழந்தைகள் தான் என் மக்கள். அவர்களுக்கு தமிழைக் கற்றுக் கொடுக்காமல் ஒரு இழப்பு ஏற்படுத்தக் கூடாது என்ற ஊக்கம் இக்கட்டுரையைப் படித்த போது தோன்றுகிறது!