Monday, December 14, 2015

சிங்கப்பிரான் பெருமை ஆராயும் சீர்மைத்தே?!

'கண்ணன் எல்லா இடத்துலயும் இருக்கான்'ன்னு கொஞ்சம் கூட சந்தேகம் இல்லாம உறுதியா சொன்ன பிள்ளைய கோவிச்சு, 'இங்கே இருக்கானா?' ன்னு சவால் விட்டு இரணியன் தூணை உடைக்க, அங்கேயே அப்போதே அவன் கொட்டத்தை அழிக்க, தூணுல இருந்து வெளிய வந்த நரசிங்கப் பெருமானுடைய பெருமை நம்மால ஆராயுற அளவுல இருக்கா என்ன?

எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து
இங்கு இல்லையால் என்று இரணியன் தூண் புடைப்ப
அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய
சிங்கப்பிரான் பெருமை ஆராயும் சீர்மைத்தே?!


Sunday, November 29, 2015

துப்புடையாரை அடைவதெல்லாம்....

பெரிய ஆளுங்களை ஐஸ் வச்சு அவங்க பின்னாடி போறதெல்லாம் கஷ்ட காலத்துல அவங்க துணை நமக்கு கிடைக்கும்ன்னு தானே!
நான் ஒண்ணுக்கும் லாயக்கில்லாதவன்னாலும், நீ யானைக்கு எல்லாம் அருள் செஞ்சு காப்பாத்துனதுனால, தைரியமா உன்னை வந்து அடைஞ்சேன்.
கடைசி காலத்துல இழுத்துக்கிட்டு கிடக்கிறப்ப உன்னை நினைக்க என்னால இயலாது.
அப்போதைக்கு இப்போதே சொல்லிவச்சுக்கிறேன், அரங்கத்துல பாம்புல படுத்துக்கிட்டு இருக்குறவனே!

துப்புடையாரை அடைவதெல்லாம் சோர்விடத்து துணை ஆவர் என்றே!
ஒப்பிலேன் ஆகிலும் நின்னடைந்தேன்! ஆனைக்கு நீ அருள் செய்தமையால்!
எய்ப்பு என்னை வந்து நலியும்போது அங்கு ஏதும் நான் உன்னை நினைக்கமாட்டேன்!
அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன் அரங்கத்து அரவணைப் பள்ளியானே!