Tuesday, June 03, 2008

தமிழ்ச் சுடர்


வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்பது பொய்யாமொழி. பலரின் மதிப்பினைப் பெற்றவர்கள் மறைந்தால் அவர்கள் நினைவாக திருக்கோவில்களில் மோட்ச தீபம் ஏற்றுவார்கள். எம்.ஜி.ஆர். இறந்த போதும் காஞ்சிப் பெரியவர் மறைந்த போதும் இந்திரா அம்மையார் கொலையுண்ட போதும் அண்மையில் தமிழக முன்னாள் பேரவைத்தலைவர் பழனிவேல்ராசன் மறைந்த போதும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திருக்கோபுரங்களில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது. வீடுகளிலும் மறைந்தவர் நினைவாக சுடர்த்தீபம் ஏற்றுவது நம் பண்பாடு. வலையுலகில் பல்லோராலும் பண்பாளர் என்று போற்றப்படும் திரு. சாகரன் அவர்களின் மறைவிற்கு சுடர் ஏற்றி என் அஞ்சலியைச் செலுத்தி நண்பரும் அகவையில் மூத்தவரும் ஆன திரு. எஸ்.கே. அவர்களின் கேள்விகளுக்கு விடை அளிக்க முயல்கிறேன்.

(இந்த சுடர் எனும் தொடர்ப்பதிவுகள் திரு.சாகரன் அவர்களின் நினைவாக என்று யாருமே எனக்குச் சொல்லவில்லை. எங்கும் படித்ததாகவும் நினைவில்லை. அதனால் நான் அப்படி குறிப்பிட்டது தவறெனில் மன்னித்துக் கொள்ளுங்கள்)

எஸ்.கே. கொஞ்சம் விவகாரமான கேள்விகளாகத் தான் கேட்டிருக்கிறார். எளிதாகப் பூசி மெழுகி பதில் சொல்லலாம். அப்படி சொல்லாமல் நேர்மையாக மனத்தில் தோன்றும் பதில்களைத் தந்திருக்கிறேன். ஏதேனும் அவையடக்கம் இன்றிப் பேசினால் குட்ட வேண்டிய அளவிற்குக் குட்டுங்கள். சரியான பதில்கள் என்று தோன்றினால் தர வேண்டியதைத் தாருங்கள்.

1. நீங்கள் பார்ப்பனர் அல்ல எனத் தெரியும் எனக்கு. உங்களை ... உங்கள் சாதியினரை ஏன் பார்ப்பனரோடு வைத்து சதிராடுகின்றார்கள்? சௌராஷ்ட்ரர்களுக்கும் சம்ஸ்கிருதத்துக்கும் என்ன தொடர்பு?

நான் சௌராஷ்ட்ரன் என்று சொல்லிக் கொள்ளும் போது அதனை ஒரு தமிழர் தான் தமிழன் என்றுச் சொல்லிக் கொள்வதைப் போல் எடுத்துக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் அது ஒரு தனி சாதியாக குறிக்கப்படுவதால் அதனை சாதியாகவும் எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை சௌராஷ்ட்ரர்களில் சாதிப்பிரிவினை இல்லை. புரோகிதர்களும் இருக்கிறார்கள்; எல்லா விதமான தொழிலை பரம்பரையாகச் செய்பவர்களும் இருக்கிறார்கள்; புரோகிதமும் தொழிலில் ஒன்றாக இருக்கிறது. பரம்பரையாக மட்டுமில்லாமல் மற்றவர்களும் புரோகிதம் கற்றுக் கொண்டு புரோகிதம் செய்கிறார்கள். அனைவரும் சௌராஷ்ட்ரர்கள் என்றே சொல்லிக் கொள்கிறார்கள். (பெரும்பான்மையாக நெசவுத் தொழில் செய்பவர்களாக இருப்பதாலும் பட்டு நெசவில் தேர்ந்தவர்களாக இருந்ததாலும் - இருப்பதாலும் என்று சொல்லலாமா தெரியவில்லை - பட்டுநூல்காரர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.) கோவில்களில் அர்ச்சகர்களாக இருக்கும் சௌராஷ்ட்ரர்களும் சடங்குகளில் புரோகிதர்களாக இருக்கும் சௌராஷ்ட்ரர்களும் எந்த வித வேறுபாடுகளும் இன்றி எல்லாரிடமும் கொடுக்கல் வாங்கல் செய்து கொண்டிருக்கிறார்கள். மொழி என்னும் கட்டுப்பாட்டால் சௌராஷ்ட்ரர்களுக்குள்ளேயே நடந்து வந்த கொடுக்கல் வாங்கல் இப்போது வேற்று மொழியினருடனும் நடக்கத் தொடங்கியிருக்கிறது.

உங்கள் கேள்வியின் அடுத்தப் பகுதி ஏன் சௌராஷ்ட்ரர்களைப் பார்ப்பனர்களுடன் வைத்துச் சதிராடுகிறார்கள் என்பது. அப்படி ஒரே ஒரு வலைப்பதிவர் மட்டுமே செய்கிறார். அவர் பதிவில் வரும் அனானிப் பின்னூட்டங்கள் மட்டுமே அப்படி சொல்கின்றன. அவர்(கள்) கருத்தினை சில நேரங்களில் தவறென்று நானும் இன்னொரு சௌராஷ்ட்ரப் பதிவரும் சொன்னதால் எங்கள் கருத்துகளை நேராக எதிர்க்காமல் எல்லா சௌராஷ்ட்ரர்களையும் திட்டுகிறார்(கள்). அவ்வளவு தான். அவர்கள் சொல்லும் கருத்திற்கு யார் எதிர் கருத்து சொன்னாலும் அவர் ஒன்று பார்ப்பனராக இருக்க வேண்டும்; இல்லை பார்ப்பன அடிவருடியாக இருக்க வேண்டும் என்ற தீவிரவாத எண்ணத்தின் வெளிப்பாடு தான் அந்த மாதிரிப் பேசுவது. You are with us or against us என்று புஷ் சொன்னதற்கும் இதற்கும் வேறுபாடு இல்லை.

இந்த இந்தியத் திருநாட்டில் இருக்கும் மொழிகள் பலவற்றிற்கும் வடமொழிக்கும் என்ன தொடர்போ அந்த தொடர்பு தான் சௌராஷ்ட்ரத்திற்கும் வடமொழிக்கும் இருக்கும் தொடர்பு.

2. திருப்பரங்குன்ற முருகனை வைத்து ஒரு கவி பாடுங்களேன்!

மன்றங்கள் நிறைந்திருக்கும் மதுரை மாநகரிலே
என்றைக்கும் எழிலார்ந்த இன்ப பூங்காவிலே
கன்றுக்கு இரங்கும் கவின்பசுவாம் மீனாட்சிக்
கன்றான குமரனைப் போற்றினோம் போற்றினோம்

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரனிருக்கும் இடம்
குன்றாத அருள் வீசி குவலயத்தைக் காக்கும் இடம்
குன்றங்கள் எத்தனை தான் இருந்தாலும் திருப்பரங்
குன்றத்தை ஒக்குமோ போற்றினோம் போற்றினோம்

குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்
அன்று ஞாலம் அளந்த பிரான் பரன்
இன்று அவன் மருகன் இனியனவன் பெற்றியை
என்றும் மனம் விரும்பிப் போற்றினோம் போற்றினோம்

3. கூட்டு வலைப் பதிவைத் தவிர, தனியே வலைபதிவதில்லை என்ற முடிவை எப்போது மாற்றப் போகிறீர்கள்? உங்களை ரசிக்கும் வலை ரசிகர்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?


நீங்கள் என்னக் கேட்க நினைத்திருக்கிறீர்கள் என்று புரிகிறது. கேள்வியில் தவறுள்ளது. கூட்டு வலைப்பதிவுகளிலும் எழுதுகிறேன். என்னுடைய தனி வலைப்பதிவுகளிலும் எழுதுகிறேன். வாரத்திற்கு குறைந்தது நான்கு ஐந்து பதிவுகளாவது எழுதிக் கொண்டு தான் இருக்கிறேன். உங்களுக்கும் மின்னஞ்சலில் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் தான் பார்ப்பதில்லையோ என்னவோ?

நீங்கள் கேட்க நினைத்தது - கூட்டு வலைப்பதிவுகளைத் தவிர உங்களின் தனி வலைப்பதிவுகளை தமிழ்மணத்தில் தொடுப்பதில்லை என்ற முடிவை எப்போது மாற்றப் போகிறீர்கள்? உங்களை ரசிக்கும் வலை ரசிகர்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்? - இது தான் உங்கள் கேள்வி. சரியா?

நல்ல கேள்வி. அண்மைக்காலமாக சில நண்பர்கள் கேட்டுக் கொண்டிருக்கும் கேள்வி. தமிழ்மணத்தில் இருந்து விலகுவதாக இரு மாதத்திற்கு முன் சொன்ன போது இருந்த சூழலுக்கும் இப்போதிருக்கும் தமிழ்மணச் சூழலுக்கும் வேறுபாடு அதிகம் இல்லை. அப்போதிருக்கும் நிலையே இப்போதும் இருக்கிறது. அதனால் எந்தக் காரணத்தைக் கூறி நான் விலகினேனோ அந்தக் காரணம் சரியாகிவிட்டது என்று நான் மீண்டும் தமிழ்மணத்தில் சேர முடியாது. அப்போதும் நீங்கள் கேட்டக் கேள்வியை பலர் கேட்டார்கள். நீங்கள் விலகுவதால் தமிழ்மணத்தில் இருக்கும் சூழல் மாறிவிடப்போவதில்லை; ஆனால் உங்களை விரும்பிப் படிக்கும் நண்பர்கள் உங்கள் பதிவுகளைப் படிக்க முடியாமல் போகும் - என்று சொன்னார்கள். அப்போது நான் சொன்ன பதில் - என் பதிவுகளை விரும்பிப் படிக்கும் நண்பர்களுக்கு நான் மின்னஞ்சலில் சொல்கிறேன்; அவர்கள் அதன் மூலம் பதிவுகளுக்கு வந்து படித்துக் கொள்வார்கள்; அப்படி படிக்க முடியவில்லை; நீங்கள் தமிழ்மணத்தில் இருந்தால் நாங்கள் உங்கள் பதிவுகளைப் படிப்பதற்கு வசதியாக இருக்கும்; என்று அவர்கள் எப்போது சொல்கிறார்களோ அப்போது நான் மீண்டும் வந்துவிடுவேன் - என்பது தான். தனிமடல்களிலும் மின்னரட்டைகளிலும் (Chat) சில நண்பர்கள் இதனைச் சொல்லியிருக்கிறார்கள். பெரும்பான்மையினரின் கருத்து அது தான் என்றால் நான் என் முடிவை மாற்றிக் கொள்வதில் எந்தத் தடையும் இருக்காது. நண்பர்கள் சொன்னால் நாராயணன் சொன்ன மாதிரி.

4. சொல் ஒரு சொல் எனும் உங்கள் பதிவு எனக்குப் பிடித்ததே! ஆனாலும், இது ஒரு பின்னோக்கு கருத்து,... புது சொற்களை தமிழில் கொண்டு வரும் முயற்சிக்கு பின்னடைவு எனும் குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில் என்ன?

இந்தக் குற்றச்சாட்டு உங்கள் குற்றச்சாட்டு இல்லை என்று நம்புகிறேன். இதற்கான பதிலை ஒரு தனிப்பதிவாகவே இடவேண்டும். சென்ற சில நாட்களாகத் தமிழ்மணத்தில் இந்த கருத்தினை ஒட்டியும் வெட்டியும் வரும் பதிவுகளைப் படித்துக் கொண்டிருக்கும் போது என் கருத்தைச் சொல் ஒரு சொல் பதிவில் சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன். அதே நேரத்தில் இது அரசியல் பாற்பட்டது. தேவையில்லாமல், யாரும் என் கருத்தைக் கேட்காத போது என் மூக்கை நுழைக்க வேண்டுமா என்றெண்ணித் தயங்கிக் கொண்டிருந்தேன். இப்போது நீங்கள் கேட்டுவிட்டீர்கள். பதிலைத் தனிப் பதிவாகத் தருகிறேன்.

5. "ஆட்டி வைத்த மிருகம் இன்று அடங்கி விட்டதடா! மனம் சாந்தி சாந்தி என்று அமைதி கொண்டதடா" என எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா?

இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. எப்போதும் உணர்ந்ததில்லை என்று தான் சொல்ல வேண்டும். பொதுவாகவே அமைதியான மனம் உடையவன் நான். ஆட்டிவைக்கும் மிருகங்கள் எதுவும் இன்னும் அடங்கவில்லை. அதற்குரிய நேரம் வந்தால் தானே அடங்கும்.

முருகனருள் முன்னிற்கும்.

***

சுடர் பதிவுகளுக்கான விதிமுறைகள்

ஆத்திகச் சுடராய் என்னிடம் கொடுத்தார் எஸ்.கே. ஆத்திரச் சுடர் அடங்க வேண்டும் என்றும் விரும்பினார். ஆத்திரச் சுடரை அடங்கவைக்க ஆத்திகச் சுடரால் சில நேரம் முடிவதில்லை. ஆனால் விசுப்பாற்றிச் சுடரால் (நகைச்சுவைச் சுடரால்) கட்டாயம் முடியும். அதனால் இந்தச் சுடரை நம் நண்பர் நாமக்கல் சிபி அவர்களின் கரங்களில் தருகிறேன். பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக.

நகைச்சுவை நாயகர் நாமக்கல்லாருக்கு நான்கு கேள்விகள்(சே. இந்த கேள்விகள் என்ற சொல் வந்து மோனைச்சுவையைக் கெடுத்துவிட்டது):

1. நீங்கள் நடுநிலை நாயகர் என்று தெரியும். எல்லோரிடமும் நட்புடன் இருப்பதையே விரும்புபவர். உங்கள் கருத்துகளை நேர்மையாகச் சொல்பவர். ஆனாலும் எப்போதெல்லாம் புதிதாக பெயர் மறைத்து வலைப்பதிவர்கள் தமிழ்மணத்தில் தோன்றுகிறார்களோ அப்போதெல்லாம் அந்த வலைப்பதிவர் நீங்கள் தான் என்று ஒரு வதந்தி கிளம்புகிறதே? அது ஏன்? நெருப்பில்லாமல் புகையாது என்பார்கள். நெருப்பு இருக்கிறதா?

2. உங்களிடம் கவிதை எழுதுங்கள் என்று மட்டுமே கேட்க நினைத்தேன். ஆனால் நீங்கள் எழுதுவதோ புதுக்கவிதைகளாகவே இருக்கின்றன. அதனால் ஒரு மரபுக்கவிதை எழுதுங்கள். நாமக்கல்லையும் மதுரையையும் பாடலின் கருத்தாக வைத்து.

3. கலாய்த்தல் திணை என்ற பெயரில் பதிவெழுதுகிறீர்களே. திணை என்றால் என்ன என்று தெரியுமா? விளக்கமாக விளக்குங்கள். (சொல் ஒரு சொல் பதிவில் சேர விரும்புபவர்களுக்கு இது தான் முதல் கேள்வி).

4. அமெரிக்கா என்றவுடன் உங்களுக்கு எந்த நகரம் நினைவிற்கு வருகிறது? அந்த நகரத்தைப் பற்றி நகைச்சுவையாக எழுதுங்கள்.


ஆத்திரச் சுடர் அடங்கி ஆத்திகச் சுடர் விளங்கி விசுப்பாற்றி நிற்கட்டும்.
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்!

5 comments:

குமரன் (Kumaran) said...

இந்த இடுகை 'சொல் ஒரு சொல்' பதிவில் 18 பிப்ரவரி 2007 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

84 கருத்துக்கள்:

குமரன் (Kumaran) said...
சுடர் என்றாலே எனக்கு இரண்டு சுடர்கள் தான் உடனே நினைவிற்கு வருகின்றன. இரண்டுமே முதலாழ்வார்கள் ஏற்றியது.

February 18, 2007 2:01 AM
--

சந்தோஷ் aka Santhosh said...
நல்ல பதில்கள் குமரன். சில கேள்விகளுக்கு அமைதியா பதில் சொல்லி இருக்கிங்க :)))..

February 18, 2007 2:14 AM
--

குமரன் (Kumaran) said...
சில கேள்விகளுக்கு மட்டும் தானா சந்தோஷ்? நான் எல்லாக் கேள்விகளுக்கும் என்றல்லவா நினைத்தேன்? :-)

February 18, 2007 2:21 AM
---

G.Ragavan said...
வாழ்த்துகள் குமரன். எஸ்.கே அவரிடமிருந்து சுடர் உங்களிடம் வந்திருக்கிறது. நன்றாக ஏற்றியிருக்கின்றீர்கள். அடுத்து சிபியாரா! ம்ம்ம்...காத்திருக்கிறேன்.

குன்றம் அமர்ந்த குமரன் பற்றிய குமரம் பாவும் அருமை. சிற்சில எழுத்துப்பிழைகள். திருத்துங்கள். நீங்களே ஒருமுறை படித்தால் தெரிந்து போகும்.

அலை ஓய்வதும் காலை நனைப்பதும் எப்பொழுது நடப்பது குமரன்? ஆகையால் வேலைப்பளு குறைந்து ஓய்வு நேரம் கிடைக்கும் பொழுது விரைவில் வாருங்கள்.

சொல்லொரு சொல் ஏன்? அதற்குத் தனிப்பதிவு. ம்ம்ம்..காத்திருக்கிறேன்.

February 18, 2007 2:27 AM
--

ramachandranusha said...
பெரும்பான்மையினரின் கருத்து அது தான் என்றால் நான் என் முடிவை மாற்றிக் கொள்வதில் எந்தத் தடையும் இருக்காது. நண்பர்கள் சொன்னால் நாராயணன் சொன்ன மாதிரி.//

குமரன்,
மீண்டு (ம்) வருவதற்கு வாழ்த்துக்கள்

February 18, 2007 2:34 AM
--

SK said...
வில்லங்கமான கேள்விகளுக்கு விவேகமான பதில் சொல்லி இருக்கிறீர்கள்.

எனக்கு எல்லாக் கேள்விகள்ளுக்கும் விடை தெரியும் என்றாலும், அடக்கத்தின் காரணமாக நீங்கள் சொல்லாமல் இருப்பதை ஊருக்கும் தெரிய வைக்கவே அப்படி கேட்டேன்.
தவறெனில் மன்னிக்க.

தனிப் பதிவு மூலம் சொல்வதாகச் சொல்லி ஒரு கேள்வியினின்று தப்பித்து விட்டீர்கள்!:))

ஒரு சின்ன தகவல்:

இது சாகரனுக்கு நினைவாஞ்சலி செலுத்தும் சுடர் அல்ல.
அவர் உயிரோடு இருக்கையில், அவரால் ஆரம்பித்து வைத்த சுடர்த்தொடர் [அ] தொடர்ச்சுடர் இது.

ஆனால், ஆரம்பித்த ஒரு வாரத்துக்குள் அவரே போய் விட்டார்.
இப்போது அவர் நினைவாக இது வலம் வருகிறது!

என் வேண்டுகோளை ஏற்று உடனடியாக
[ரொம்ப சுட்டுடுச்சோ!:))] பதிவிட்டமைக்கு நன்றி.

கவிஞர் கோமேதகன் என்ன சொல்லுகிறார் பார்ப்போம்.

அதென்ன, அவரிடம் 4 கேள்விகள் மட்டும்?
சுடர் விதிப்படி 5 அல்லவா கேட்க வேண்டும்!


திருப்பரங்குன்ற முருகன் கவி அருமை!

ஊருக்கு

February 18, 2007 2:34 AM
--

மலைநாடான் said...
குமரன்!

அருமையான பதிவு. பலதகவல்கள் எனக்குப் புதிது. தனிமடலில் தெரியப்படுத்தினாலும், தமிழ்மணத்திலிடும்போது, இலகுவாக வர முடிகிறது என்பது உண்மை. ஆகவே மீளவும் வாருங்கள்.
நன்றி!

February 18, 2007 2:47 AM
--

நாமக்கல் சிபி said...
குமரன்,

சுடரை நம்ம கையில் கொடுத்திருக்கிறீர்கள். நன்றி.

(விவகாரமான கேள்விகள் கேட்கவேண்டும் என விதி இருக்கிறதோ? :) )

எனினும் முயற்சி செய்கிறேன். நான் சிலவற்றைத் தேடிப் பிடித்து கற்றுக் கொள்ள வேண்டும் என்பது குமரன் எண்ணம் என்பதும் புரிகிறது.

விரைவில் நானும் சுடரை ஏற்றுகிறேன்.

February 18, 2007 3:41 AM
--

நாமக்கல் சிபி said...
ஐந்தாவது கேள்விக்கி எண்ணும் இடவில்லை. கேள்வி போலும் தோன்றவில்லை.

இடஞ்சுட்டி பொருள் விளக்கம் தர வேண்டுமா என்ன?

:))

(இது சும்மா கேட்டேன். வழக்கம் போல. ஆம் என்று சொல்லிவிடப் போகிறீர்கள். அப்புறம் எனக்கு சொ.செ.சூ ஆகிவிடப் போகிறது.)

February 18, 2007 3:43 AM
--

இராம் said...
குமரன்,

சுடரை நல்லவே ஏத்திட்டிங்க... விதிமுறைகளின்படி தள சிபியிடம் நீங்கள் இன்னும் ஒரு கேள்வி கேட்க வேண்டும்... :))

February 18, 2007 4:12 AM
--

வல்லிசிம்ஹன் said...
ஆத்திகச் சுடர், சொல் சுடர் இரண்டையும் ரசித்தேன் குமரன்.

வையம்,அன்பு இரண்டு தகழிகளில்.
சுடர் விடும் தமிழைச் சொன்னதும் அருமை.
அமைதி கிடைக்க அதைக் காத்தாலே போதும்.
தானே வரும்.
எப்போதும் ஆனந்தம் உங்களில் நிலைக்க வாழ்த்துக்கள்.
என் தமிழ் உங்கள் தமிழ் அல்ல. இருந்தாலும் ரசித்ததற்கும் நன்றி.

February 18, 2007 6:33 AM
--

பினாத்தல் சுரேஷ் said...
நல்ல பதிவு குமரன்.

ஆரம்பத்தில் இந்த விளையாட்டு என்னை அவ்வளவு கவரவில்லை, ஆனால் இப்போது சுடர் விளையாட்டு சூடுபிடித்திருக்கிறது. நல்ல வெரைட்டியான கேள்விகளும் (நான் இதுவரை சுடர் ஏற்றிய அனைவரையும் சொல்கிறேன்), வித்தியாசமான பதில்களும்.

நாமக்கல் சிபிக்கு உங்கள் சார்பாக என் 5ஆவது கேள்வி:

5. குமரன் உங்களுக்கு மட்டும்4 கேள்விகளாகக் குறைத்து விட்டாரே. குறைந்தபட்ச தர்மசங்கடக் கேள்விகளுக்காக கைமாறிய தொகை எவ்வளவு?

February 18, 2007 10:23 AM
--

குமரன் (Kumaran) said...
இராகவன், பாடலில் எழுத்துப் பிழைகளா பதிவில் எழுத்துப்பிழைகளா? கொஞ்சம் தெளிவுறுத்துங்கள்.

ஆக மொத்தத்தில் என்னைப் பைத்தியங்களில் ஒருவன் என்று சொல்லிவிட்டீர்கள். :-) பைத்தியங்கள் கதையில் தானே ஒரு பைத்தியம் அலை ஓய்ந்தபின் குளிப்பதற்குக் காத்திருப்பார். :-)

அடுத்தப் பதிவிற்கு நல்ல தலைப்பு கொடுத்திருக்கிறீர்கள். சொல் ஒரு சொல் ஏன்? என்ற தலைப்பிலேயே எழுதுகிறேன்.

February 18, 2007 10:29 AM
--

வெட்டிப்பயல் said...
ஐந்தாவது கேள்வி மிஸ்ஸிங்!!!

சுடர் ரொம்ப நல்லா வந்திருக்குங்க...

//அலை ஓய்வதும் காலை நனைப்பதும் எப்பொழுது நடப்பது குமரன்? ஆகையால் வேலைப்பளு குறைந்து ஓய்வு நேரம் கிடைக்கும் பொழுது விரைவில் வாருங்கள்.//
ரிப்பீட்டே!!!

February 18, 2007 10:57 AM
--

நாமக்கல் சிபி said...
//5. குமரன் உங்களுக்கு மட்டும்4 கேள்விகளாகக் குறைத்து விட்டாரே. குறைந்தபட்ச தர்மசங்கடக் கேள்விகளுக்காக கைமாறிய தொகை எவ்வளவு?//

இப்படியொரு ஆப்சன் இருந்தா 3 கேள்விகளில் இருந்து தப்பித்திருப்பேனே!

February 18, 2007 11:08 AM
--

நாமக்கல் சிபி said...
//விதிமுறைகளின்படி தள சிபியிடம் நீங்கள் இன்னும் ஒரு கேள்வி கேட்க வேண்டும்... //

வாங்க இராம்!

எப்படா மாட்டுவான்னு பழிவாங்கக் காத்திகிட்டிருந்தீங்க போல!

February 18, 2007 11:09 AM
---

குமரன் (Kumaran) said...
உஷா. மீண்டும் வருவதற்கு வாழ்த்துகள் சரி. அதென்ன மீண்டு வருவதற்கு? நான் எதுலயோ மாட்டிகிட்டு இப்ப வெற்றிகரமா (?) மீண்டு வர்றதைப் போல எழுதியிருக்கீங்களே? :-)

நீங்கள் ஆவலோட எதிர்பார்த்த அளவுக்கு பதிவு இருக்கா இல்லை ஏமாத்திட்டேனான்னு சொல்லவே இல்லை?

February 18, 2007 11:18 AM
--

குமரன் (Kumaran) said...
ஏனுங்க எஸ்.கே. வில்லங்கமா கேட்டுட்டு அந்த கேள்விகளுக்காக பதில்களை எப்படி சொல்றதுன்னு என்னைக் குழம்ப விட்டுட்டு இப்ப விவேகமா பதில் சொல்லியிருக்கேன்னு சொல்றீங்களே? இது நியாயமா? பாருங்க நான் சுடரோட வில்லங்கமான கேள்விகளையும் நாமக்கல்லாருக்கு அனுப்பிட்டேன். அவருக்கும் கொஞ்சம் வீட்டு வேலை கொடுத்த மாதிரி ஆச்சு. :-)

February 18, 2007 11:20 AM
--

தருமி said...
மதுரையில் செளராஷ்ட்ரர்கள் அதிகம் இருந்த மஹால் அருகில் பல ஆண்டுகளாக வாழ்ந்தவன் என்று முறையில், நானறிந்த அளவு, முதல் கேள்விக்கு பின்னால் நான் குறிப்பிடும் காரியங்கள் காரணிகளாக ஒருவேளை இருக்குமோவென நினைக்கிறேன்.

1. அவர்கள் மொழியின் ஓசைகள் இந்திக்கு ஒட்டி வருமாதலால், என்னைப் போன்றவர்கள் இந்தி படிக்க முயற்சித்தும் முடியாமல் போனபோது, அதை நிறைய பேர் சிறு வயதிலேயே கற்றது. (என் வயது செளராஷ்ட்ர மாணவர்கள் என்றாலே அவர்கள் இந்தியும், தட்டச்சும் படிக்க வேண்டுமென்பது ஒரு விதி போலவே அவர்களுக்குள் இருந்தது. தெற்குவாசல் பகுதியில் தட்டச்சு பள்ளிகள் அதிகம்; அவைகளை நடத்துபவர்கள் கூட இவர்களே - நான் படித்த Sun School of Type Writing உட்பட.

2. காக்கி காற்சட்டை, வெள்ளை சட்டை, கையில் குச்சி இவைகளோடு அவர்கள் மைதானங்களில் உடற்பயிற்சி செய்யும் போது பார்த்து, Scout மாதிரி இதுவும் ஒன்று போல் நினைத்துள்ளேன். அப்போது அது R.S.S. வகுப்புகள் என்றெல்லாம் தெரியாது. இந்த தொடர்பு இன்னும் உண்டு என்றுதான் நினைக்கிறேன்.

3. softies (?) - அப்போது அப்படித்தான். எங்கள் தெருவில் வரும் செளராஷ்ட்ர மூதாட்டிகள் பலருக்கும் அதிகமாக தமிழ் வராது. அவர்களைக் கேலி செய்வதும், பயமுறுத்துவதும் எப்போதுமே எங்கள் தெரு பசங்களுக்கு – எனக்கு கிடையாது; நாய்னாட்ட யார் அடி வாங்குறது – வாடிக்கை. அந்த சமயத்தில் செளராஷ்ட்ர பசங்களும் பயந்தவர்கள் என்ற கருத்தும் இருந்தது. நான் பார்த்தவரையிலும் அன்று அது உண்மை. அதனாலேயே அவர்களுக்குள் உடல் வலிமைக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்து பந்தடி தெருக்களில் பல உடற்பயிற்சிப் ப்ள்ளிகள் தோன்றி, இளைஞர்கள் முனைப்போடு நிறைய சேர்ந்தது நன்கு நினைவில் இருக்கிறது. என் கல்லூரிப் பருவத்திலேயே பந்தடி செளராஷ்ட்ர இளைஞர்கள் இந்த விஷயத்தில் தேறி விட்டார்கள்.

4. உடல் நிறம்

5.பலரும் பூணூல் அணிவது

6. மற்ற "தமிழர்களிடமிருந்து" தங்களைத் தனி(மை)ப் படுத்திக் கொள்வது.

அவர்களிடம் பிடித்தது: சித்ரான்னங்கள் . அவர்களின் புளியோதரை, பொங்கல் …இத்யாதி.. இத்யாதி..

அவர்களிடம் பிடிக்காதது: பத்து பேர் சேர்ந்து உட்கார்ந்திருந்தாலும் இரண்டு செளராஷ்ட்ரர்கள் அதில் இருந்தால் மற்றவர்களைப் பற்றிக் கவலைப் படாமல் தங்கள் மொழியில் பேச ஆரம்பித்து விடுவார்கள். இதை எங்கள் கல்லூரி காண்டீனிலும், சிறை சென்ற போதும் நிறையவே பார்த்ததுண்டு.

February 18, 2007 11:23 AM
--

குமரன் (Kumaran) said...
சௌராஷ்ட்ரர்களைப் பற்றிய கேள்விக்கு என் பதிலை பதிவில் சொல்லியிருக்கிறேன். மதுரை, பரமக்குடி, சேலம் போன்ற நகரங்களில் சௌராஷ்ட்ரர்களை நண்பர்களாகவும், அண்டை அயலில் வசிப்பவர்களாகவும் உடைய நண்பர்கள் சௌராஷ்ட்ரர்களைப் பற்றிய அவர்களின் பார்வைகளையும் கருத்துகளையும் சொன்னால் மிக்க மகிழ்வேன். எங்க ஊர் பெரியவர் அப்பா என்று பலராலும் அன்புடன் அழைக்கப்படுபவர் ஐயா தருமி அவர்களிடம் நேற்று மின் அரட்டையில் கேட்டுக் கொண்டேன். அவரும் தன் கருத்துகளைச் சொல்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்.

பதிவுலகில் இரண்டு மூன்று சௌராஷ்ட்ரர்களும் இருக்கிறார்கள். அவர்களும் விரும்பினால் தங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்.

February 18, 2007 11:25 AM
--

குமரன் (Kumaran) said...
வாவ். தருமி ஐயா தன் கருத்துக்களைச் சொல்லுவார் என்று நான் பின்னூட்டம் இட்டுக் கொண்டிருந்த நேரத்தில் ஐயாவும் பின்னூட்டம் இட்டிருக்கிறார். மிக்க நன்றி ஐயா. :-)

February 18, 2007 11:27 AM
--

நாமக்கல் சிபி said...
//ஐந்தாவது கேள்வி மிஸ்ஸிங்!!!//

அந்தக் கேள்வியை எனது கேள்விகளோடு சேர்த்து தருமி ஐயாவிற்கு பாஸ் செய்து விட்டேன்.

:))

February 18, 2007 11:58 AM
--

நாமக்கல் சிபி said...
என்னுடைய சுடர் ஏற்றியாயிற்று!



முத்து முத்துச் சுடரே சுடரே கொடு வேண்டிடும் வரங்களையே!

http://pithatralgal.blogspot.com/2007/02/200.html

February 18, 2007 12:21 PM
---

ஜெயஸ்ரீ said...
சுடரை நன்றாக ஏற்றியிருக்கிறீர்கள்.

புதிய கலைச்சொற்கள் உருவாக்கப்படுவதோடு இருக்கும் பல நல்ல, அழகான சொற்களும் வழக்கொழிந்து போய்விடக்கூடாது என்பதற்கான நல்ல் முயற்சிதான் 'சொல் ஒரு சொல்' பக்கம் .

உங்கள் தனிப்பதிவை ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கிறேன்.

February 18, 2007 12:24 PM
--

குமரன் (Kumaran) said...
பதில்கள் தெரிந்தே கேள்விகள் கேட்டீர்களா? இது முறையா? நீதியா? எஸ்.கே. இந்தப் பதில்களில் எங்கே அடக்கம் இருக்கிறது என்று சொல்கிறீர்களா? :-)

தனிப்பதிவு என்று சொல்லித் தப்பிக்கவில்லை. உண்மையிலேயே தனிப்பதிவு இடும் அளவிற்கு பதில் சொல்ல வேண்டும் என்று விரும்பியே அப்படி சொன்னேன். விரைவில் இடுகிறேன். கருத்துகளை ஒருக்கிணைத்துச் சொல்ல வந்ததைத் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்று விரும்புகிறேன்.

நினைவஞ்சலித் தொடரா இல்லையா என்ற ஐயத்தை நீக்கியதற்கு நன்றி எஸ்.கே.

உடனடியாகப் பதிவிட்டதற்குக் காரணம் எங்கள் குட்டிப்பயல். இரவு தூங்காமல் அழுது கொண்டிருந்தான். அவனை தொட்டிலில் இட்டு ஆட்டிவிட்டு அவன் அழுவதை நிறுத்தியவுடன் பதிவு எழுதுவது என்று இடையிடையே எழுதினேன். பதிவு நிறைவடைந்துவிட்டது என்று தோன்றிய போது பதிவிட்டு விட்டேன்.

நீங்கள் சுடரை சுட்டெரிக்கும் சுடரிலிருந்து ஒளிவீசும் சுடராக மாற்றி தானே எனக்குத் தந்தீர்கள்?! அப்படியிருக்க எனக்கு எப்படி சுடும்? :-) மாயவனின் குளிர்மதிய முகம் போன்ற சுடர் இது.

சுடர் விதி அதிகபட்சம் ஐந்து கேள்விகள் என்பது. அதனால் நான் நான்கோடு நிறுத்திக் கொண்டேன். இப்போது பாருங்கள் சிபி ஆறு கேள்விகளை தருமி ஐயாவிடம் கேட்டிருக்கிறார். :-)

திருப்பரங்குன்ற கவிதைக்கு மன்னாரோ மயிலாரோ விளக்கம் தந்தால் மகிழ்வேன். இருவரும் தந்தாலும் மகிழ்ச்சியே.

பின்னூட்டம் பாதியில் நிற்கிறதோ? 'ஊருக்கு' என்பதோடு தொக்கி நிற்கிறதே.

February 18, 2007 1:06 PM
--

குமரன் (Kumaran) said...
தங்களின் அன்பிற்கு நன்றி மலைநாடான். விரைவில் வருகிறேன். வரும் போது சொல்லிவிட்டு வருகிறேன்.

February 18, 2007 1:12 PM
--

குமரன் (Kumaran) said...
சிபி. ஐந்தாவது கேள்வி கேட்கவில்லை. நீங்கள் இடம் சுட்டிப் பொருள் விளக்கம் தந்தாலும் சரியே. தமிழ்வலைப்பதிவுலகில் சொ.செ.சூ வைத்துக்கொள்ளாதவர்கள் யாராவது இருக்கிறார்களா என்ன? :-)

February 18, 2007 1:14 PM
--

குமரன் (Kumaran) said...
நன்றி இராம்.

February 18, 2007 1:14 PM
---

நாமக்கல் சிபி said...
//நீங்கள் இடம் சுட்டிப் பொருள் விளக்கம் தந்தாலும் சரியே//

ஆஹா! கெளம்பீட்டாங்கைய்யா! கெளம்பீட்டாங்கைய்யா!

February 18, 2007 1:22 PM
---

இராம் said...
/வாங்க இராம்!

எப்படா மாட்டுவான்னு பழிவாங்கக் காத்திகிட்டிருந்தீங்க போல!//


யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்'க்கிறது காரணமா இருக்குமோ..... :))))

பின்னே சுடர் என்கிட்டே வர்றோப்போ ரொம்பவே கஷ்டப்பட்டுட்டேன், பரிட்சையிலே கேட்கிற கேள்விக்கு அடுத்தவனை பார்த்து எழுதவே ரொம்ப சிரமப்படுவோம்.... நானா தனியா பதில் சொல்லனுமின்னு சொன்னதும் ரொம்பவே கஷ்டமாயிடுச்சு... அப்பிடி இப்பிடி என்னத்தையோ சொல்லி பதிவே தேத்தி ஒப்பேத்திட்டேன் :)

February 18, 2007 1:42 PM
---

வல்லிசிம்ஹன் said...
இரண்டு சுடரும் ஏற்றிப் பெருமாளைக் கண்ட பதிவுக்கு நீங்கள் வழிவகுத்து விட்டீர்கள். குமரன், என் முந்தைய பின்னூட்டத்தில் வையம்,அன்பு என்பதைப் பதிக்கத் தவறிவிட்டேன்.

February 18, 2007 1:53 PM
---

இராம் said...
//அண்டை அயலில் வசிப்பவர்களாகவும் உடைய நண்பர்கள் சௌராஷ்ட்ரர்களைப் பற்றிய அவர்களின் பார்வைகளையும் கருத்துகளையும் சொன்னால் மிக்க மகிழ்வேன//

ததா,

எனக்கும் சில அனுபவங்கள் இருக்கு, தருமி ஐயா சொன்னது போலே நானும் தெற்குவாசல் பகுதியை சேர்ந்தவன் தான்,

எங்கள் கோஷ்டியிலும் இரண்டு மூன்று நண்பர்கள் உண்டு, எல்லாரும் பேசிக்கொண்டு இருக்கும்போது தீடீரென்று அவர்களுக்குள் செள்ராஷ்டரா'விலே பேச ஆரம்பித்து விடுவர், ஆரம்பத்தில் எங்களுக்கெல்லாம் கோபம் வந்தாலும் நாள் செல்ல செல்ல பழகிவிட்டது, நாமும் அந்த மொழியை கத்துக்கலாமின்னு ஆர்வம் கூட காரணமாக இருக்கலாம்.

இரண்டாவது அந்த பொங்கல், சித்தரனங்கள் பற்றி

இன்னும் எங்கள் விட்டில் சிறு விஷேசமின்னாலும் ரெடிமேட் முறையில் வரும் லெமன் சாதமும், புளியோதரைதான், :)

இன்னும் இருக்கு பெறகு வாறேன் :)

February 18, 2007 1:58 PM
---

கால்கரி சிவா said...
குமரன்,

ஒரு சௌராஷ்ட்ரன் என்ற வகையில் சில விளக்கங்கள். நாம் இருவரும் ஒரே மொழி, ஒரே ஊர் கொண்டவர்கள். சுற்றி வளைத்துப் பார்த்தால் உங்கள் தாய் வழியிலோ அல்லது தந்தை வழியிலோ நாம் உறவினராக இருப்பதற்கும் வாய்ப்புண்டு, ஆனால் உங்களுக்கும் எனக்கும் சில விஷயங்கள் ஏணி வைத்தாலும் எட்டாது. உ.ம். உங்கள் ஆன்மிக அனுபவம், உங்களின் தமிழ் மற்றும் வடமொழி புலமை. ஆகையால் ஒரே ஜாதியை சேர்ந்தவர்கள் ஒரே மாதிரி இருப்பார்கள் என்பது குறுகிய மனபான்மையை குறிக்கிறது.

செளராஷ்ட்ரர்கள் ஏன் ப்ராமணர்களுக்கு இணையாக பேசப்படுகிறார்கள்?

வர்ணம் என்பது செய்யும் தொழிலில் இருந்து வருவது. பிறப்பால் வருவதில்லை என்பதை சௌராஷ்ட்ரர்கள் நன்றாகவே உணர்ந்த்துள்ளார்கள். சௌராஷ்ட்ரர்கள் சனாதான தர்மத்தில் ஆழ்ந்த பற்றுடையவர்கள். நால்வகை வர்ணம் பிறப்பால் வருவதன்று செய்யும் தொழிலால் வருவதென்று நீருபித்தவர்கள். செய்யும் முக்கிய தொழில் நெசவு, நெசவை சான்ற தொழிலாக இருந்தாலும் புரோகிதத்தையும் கற்று ப்ராமணர்கள் இணையாக உயர்ந்திருக்கிறார்கள். ப்ராமணர்களை போலவே முழு சம்பிராதயங்களையும் நியதிகளையும் சௌராஷ்ட்ரர்கள் பின்பற்றியதால் ப்ராமணர்கள் புரோகிதத்தை கற்றுத்தந்தார்கள். தியாகய்யரின் பிரதம சீடர் வெங்கடரமண பாகவதர் ஒரு சௌராஷ்ட்ரர் என்பது எத்தனைப் பேருக்கு தெரியும்.

எங்கள் குடும்பத்தில் நால் வர்ணமும் உண்டு : அடியேன் சூத்திரன் என் மனைவி ஐயங்கார் என் மகன் வெள்ளைக்காரன். ஆனால் நாங்கள் வீட்டில் பேசுவது சௌராஷ்ட்ரா மொழிதான்

சௌராஷ்ட்ரா ஐயர், சௌராஷ்ட்ரா ஐயங்கார், சௌராஷ்ட்ரா செட்டியார், சௌராஷ்ட்ர முதலியார், சௌராஷ்ட்ரா கொல்டி, சௌராஷ்ட்ரா மலையாளி என்று நானும் என் உடன்பிறப்புகளும் என் உறவினர்களை கிண்டல் செய்வது வழக்கம் ஏனென்றால் அவர்கள் பெயர் அப்படி இருக்கும் : உ.ம் ராமாச்சாரி, சாமி ராவ், இராமநாதன், தேவதாஸ், சரவணன் போன்றவை

இனி தருமி சாருக்கு என் பதில்கள்

1. சௌ.மொழியில் மற்ற இந்திய மொழிகளை நான்கு வகை உச்சரிப்புகள் இருப்பதால் ஹிந்தி கற்க ஏது வாகிறது. அப்படியிருந்தும் திராவிட மற்றும் தமிழ் பற்றுக் கொண்ட என் தயார் எங்களை ஹிந்தி கற்றுக் கொள்ள என்கரேஜ் செய்யவில்லை. தமிழில் பற்றுக் கொண்டு திராவிட இயக்கங்களில் பணியாற்றி எம் எல் ஏ வாகவும், மேயராகவும், மந்திரிகளாகவும் பலர் இருந்திருக்கின்றனர்/இருக்கின்றனர்.

2. மதுரை RSS இல் அதிகம் இருந்தது சௌராஷ்ட்ரர்கள் என்பது உண்மை. அதைவிட அதிகம் இருந்தது /இருப்பது காங்கிரஸில். சுதந்திர போரட்டத்தில் பலர் கலந்து பிறகு காங்கிரஸில் ஐக்கியமானவர் மெஜாரிட்டி. இன்னும் கூட அவ்வாறுதான் என்று நினைக்கிறேன். சௌராஷ்ட்ரர்கள் ஆழ்ந்த இந்துமத உணர்வுகொண்டவர்கள். அதற்கு காரணம் சரித்திரத்தில் உள்ளது. கொள்ளையர்கள் சோமநாதபுரத்தை கொள்ளையடித்த போது அவர்களின் கொடுமைகளிலிருந்து தப்பிக்க அமைதி பூங்கா தமிழகம் மற்றும் ஆந்திராவில் (குறிப்பாக திருப்பதியில்) செட்டில் ஆனவர்கள். அந்த உணர்வு ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னும் சிலரிடம் எஞ்சி இருப்பது ஒன்றும் ஆச்சரியமில்லை.

3. இன்னும் கூட softies தான். தான் உண்டு தன் வேலையுண்டு இருப்பவர்கள் கோழையும் அல்ல தெருவில் கம்பு எடுத்து சுற்றுபவனும் இணைய்த்தில் கெட்ட வார்த்தையில் திட்டி எழுதுபவனும் வீரனும் அல்ல.

வம்பிற்கு போகதே என்று வளர்ப்பார்கள். நானும் என் உடன்பிறப்புகளும் மற்ற சௌ நண்பர்களும் வந்த வம்பை விட்டதிலை.

4. பெரும்பாலனவர்கள் வெள்ளையாக இருப்பார்கள். வெள்ளையாக இருப்பவர்கள் எல்லாம் ப்ராமணரா?

5. பூணுல் என்பது இந்துமத அடையாளம். இது ப்ராமணர்களுக்கு மட்டும் உரித்தானது அல்ல. எனக்கு தெரிந்து என் செட்டியார், பிள்ளை, முதலியார், தெலுகு வெள்ளாளார், கோமுட்டி நண்பர்கள் பூணூலை பெருமையாகவே அணிந்து பார்த்திருக்கிறேன்

6."அவர்களிடம் பிடிக்காதது: பத்து பேர் சேர்ந்து உட்கார்ந்திருந்தாலும் இரண்டு செளராஷ்ட்ரர்கள் அதில் இருந்தால் மற்றவர்களைப் பற்றிக் கவலைப் படாமல் தங்கள் மொழியில் பேச ஆரம்பித்து விடுவார்கள். இதை எங்கள் கல்லூரி காண்டீனிலும், சிறை சென்ற போதும் நிறையவே பார்த்ததுண்டு
"

கெட்ட வழக்கம் என்பதை ஒத்துக் கொள்கிறேன். இன்று வெளிநாட்டில் தமிழர் என்னிடமும் அவரின் குடும்பத்தினருடமும் ஆங்கிலத்தில் பேசுகிறார். சௌ. தமிழர் என்னிடம் சௌ. மொழியில் பேசுகிறார். தன் குழ்ந்தைகளுக்கு சௌ. மொழியில் பேச கற்றுக் கொடுக்கிறார். மொழிப்பற்று நல்லது என்றே நினைக்கிறேன்.

February 18, 2007 3:23 PM
---

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
அன்புக்குமரனுக்கு!
சிக்கலான கேள்விகள் சிறப்பாக,நிதானத்துடன் பதில் இட்டுப் பதிவைச் சிறப்பித்துள்ளீர்கள்.இதுவே பதிவுலகில் தேவையானது.
வாழ்த்துகிறேன்.
முருகன்பாடல் மிக நன்று!

February 18, 2007 3:24 PM
---

குமரன் (Kumaran) said...
வல்லியம்மா, உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி. அமைதியும் ஆனந்தமும் தானே மனித வாழ்க்கையின் குறிக்கோள்கள். மிக்க நன்றி.

February 18, 2007 4:10 PM
---

குமரன் (Kumaran) said...
சுரேஷ். அம்புட்டு தானா உங்கள் பின்னூட்டம்? எதாவது வந்து பெனாத்துவீங்கன்னா இப்படி சுருக்கமா சொல்லிட்டுப் போயிட்டீங்களே? :-)

இந்த விளையாட்டு தொடங்கினதே எனக்கு ரெண்டு நாளைக்கு முன்னால தான் தெரியும். பொட்டீகடை பதிவின் தலைப்பைப் பார்த்துவிட்டு உள்ளே சென்றேன். அவர் கருப்பு அண்ணாவிற்குக் கேட்டிருந்த கேள்விகள் பிடித்திருந்தன. அதனால் கருப்பு அண்ணா பதிவையும் படித்தேன். நல்ல பதில்கள் சொல்லியிருந்தார். அவர் எஸ்.கே.வுக்கு அதனை விட மிக நல்ல கேள்விகளைக் கேட்டிருந்தார். நான் 'ஆகா. எஸ்.கே. மாட்டிக்கிட்டார். ஆனால் நல்ல பதில் சொல்லுவார்' என்று எண்ணிக் கொண்டேன். அதே போல் நல்ல பதில்கள் சொல்லியிருந்தார். அடுத்து எனக்கும் நல்ல கேள்விகள். நன்கு சிந்தித்துப் பதில் சொல்ல வேண்டியதாகப் போய்விட்டது. நான்கு, ஆறு என்று முன்பு ஆடிய ஆட்டங்களை விட இந்த தொடர்ப்பதிவுகள் மிக நன்றாகச் செல்கின்றன என்று தான் நினைக்கிறேன்.

நாமக்கல் சிபி உங்கள் கேள்விக்கு சரியா பதில் சொல்லலை. நான் சொல்றேன். மதுரை மீனாட்சி அம்மனின் தாழம்பூ குங்குமமும் பழனி முருகன் திருநீறும் தான் கைமாறிய தொகை. அந்த பிரசாதங்களை விட அதிகமாக யாரால் என்ன கொடுக்க முடியும்? :-)

February 18, 2007 4:25 PM
--

குமரன் (Kumaran) said...
ஐந்தாவது கேள்வி தேவையில்லை என்று நினைத்தேன் பாலாஜி. சுடர் நன்றாக வந்திருக்கிறதா? நன்றி பாலாஜி. ரிப்பீட்டே போட்டு தங்கள் கருத்தினை மீண்டும் தெரிவித்ததற்கும் நன்றி பாலாஜி.

February 18, 2007 7:14 PM
---

குமரன் (Kumaran) said...
//இப்படியொரு ஆப்சன் இருந்தா 3 கேள்விகளில் இருந்து தப்பித்திருப்பேனே!
//

சிபி. இன்னொரு கேள்வியும் கேட்டிருப்பேன். ஏதோ உங்கள் ஊர்ப்பெயர் உங்களை ஐந்தாவது கேள்வியில் இருந்து காப்பாற்றியது. :-) நாமக்கல்லாருக்கு நான்கு கேள்விகள் என்று சொன்னால் தான் மோனை நயம் வந்தது. :-)

February 18, 2007 7:15 PM
---

SP.VR.சுப்பையா said...
குன்றத்தானைப் பதிவிற்குக் கூட்டிவந்த குமரரே
என்றைக்கும் அவன்புகழை ஏற்றமுடன் சொல்வீர்
மன்றங்கள் நிறைந்திருக்கும் மதுரையில் மட்டுமல்ல
மன்னவன் தருவானதன் மனதில் ஓரிடம்!

February 18, 2007 7:30 PM
---

குமரன் (Kumaran) said...
நான் கேட்டுக் கொண்ட படி நீண்ட பின்னூட்டத்தில் தங்கள் கருத்தைச் சொன்னதற்கு நன்றி தருமி ஐயா. நான் தனிமடலில் சொன்னதைப் போல் நான் என்னைப் பற்றி என்ன நினைக்கிறேன் என்பது ஒரு பக்கம்; மற்றவர் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது இன்னொரு பக்கம். அது போல் சௌராஷ்ட்ரர்களைப் பற்றி சௌராஷ்ட்ரர்களுடன் பழகியவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று அறிய விரும்பிய போது உங்கள் நினைவு வந்தது. நீங்களும் அப்போது ஜிமெயிலில் இருந்தீர்கள். என் வேண்டுகோளை ஏற்று பின்னூட்டம் இட நேரம் எடுத்துக் கொண்டதற்கு மிக்க நன்றி.

நல்ல காரணிகளாக அடுக்கியிருக்கிறீர்கள். நீங்கள் கவனித்தவற்றை நன்கு பட்டியல் இட்டிருக்கிறீர்கள். பலவற்றிற்கு நான் என்ன பதில் சொல்ல நினைத்தேனோ அதனையோ இல்லை அதனை ஒட்டியோ கால்கரி சிவா அண்ணாவும் பதில் சொல்லியிருக்கிறார்.

1. நானும் என் நண்பர்களும் இந்தி கற்றுக் கொள்ளவில்லை. இந்தி கற்றுக் கொள்ள நான் சென்றேன். ஆனால் ஏதோ ஒரு இனம் தெரியாத வெறுப்பு இந்தியின் மேல் அந்த சிறுவயதிலேயே எனக்கு இருந்தது. ப்ராத்மிக்கில் 25 மதிப்பெண் பெற்றுத் தேர்வில் தோற்றேன். அப்புறம் வீட்டில் உனக்குப் பிடித்த தமிழைப் படி என்று விட்டுவிட்டார்கள். அப்போது நான் படித்துக் கொண்டிருந்தது ஆறாம் வகுப்பு. இந்தித் திணிப்பு என்பதை கேட்டுக் கேட்டு அது அப்படியே அந்த இளம்வயதிலேயே இந்தியின் மேல் வெறுப்பை ஏற்படுத்தியிருந்தது. நான் அறிந்த அளவில் என் உறவினர்களும் நண்பர்களும் என் வயதுள்ளவர்கள் யாருமே இந்தி கற்றுக் கொள்ளவில்லை. என் தந்தையார் தலைமுறையினரில் தமிழுடன் தெலுங்கும் இந்தியும் நன்கு தெரிந்தவர்களைக் கண்டிருக்கிறேன்.

நீங்கள் சொல்வது போல் சௌராஷ்ட்ரத்தில் தமிழ் தவிர்த்து இந்தியத் திருநாட்டில் இருக்கும் பெரும்பான்மை மொழிகளில் இருப்பது போல் ககரம், சகரம் போன்றவற்றிற்கு நான்கு எழுத்துகள் இருக்கின்றன. அது எனக்கு வடமொழியைக் கற்பதற்கு உதவியாக இருந்தது என்பது உண்மை. ஆனால் அது ஒரு காரணி என்பது ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அப்படி என்றால் தமிழரைத் தவிர்த்து வேறு மொழி பேசும் எல்லா இந்தியரையுமே அந்த காரணியில் உட்படுத்த முடியும். அதே நேரத்தில் இது எப்படி உங்கள் பார்வையில் காரணியாகத் தோன்ற முடியும் என்பதும் புரிகிறது. எல்லோருமே தெரிந்ததை வைத்தே தெரியாததை முடிவு செய்கிறோம். இந்தி படிப்பவர்கள் என்றால் திராவிட கருத்திற்கு எதிரானவர்கள் என்ற எண்ணம் இருக்கும் போது அப்படி பொதுவாக நினைக்க வழியுண்டு. ஆனால் அதே அடிப்படையில் திராவிட கட்சிகளில் இருந்து மத்திய அமைச்சர்கள் ஆனவர்களுக்கும் அந்த காரணியை வைத்து சாடலாம் என்பதையும் நினைவில் இருத்த வேண்டும். மத்திய அமைச்சர்கள் ஆகும் தகுதியை அவர்களுக்குப் பெற்றுத் தந்ததே இந்தி அறிந்திருந்தது தானே. (Last part may be farfetched but not impossible)

2. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைப் பற்றி நான் முதன்முதலில் கேள்விப்பட்டது அத்வானியின் ரத யாத்திரையின் போது தான். அது வரை அப்படி இருப்பது எனக்குத் தெரியாது. நண்பர்கள், உறவினர்கள் என்று யாருமே அந்த இயக்கத்தில் இல்லாததால் தெரியாமல் இருந்தது.

உங்கள் வயதில் அது கட்டாயம் (இப்போதைப் போல) ஒரு சிறுபான்மை இயக்கமாகவே இருந்திருக்கும். என் சிறுவயதிலும் அப்படியே. ஆனால் அந்த சிறுபான்மை இயக்கத்தில் ஒரு பெரிய எண்ணிக்கையில் சௌராஷ்ட்ரர்கள் இருந்திருப்பார்கள் (இருந்தார்கள்) என்பதை நான் நம்புகிறேன். ஆனால் அந்த சிறுபான்மையினரை வைத்துக் கொண்டு சௌராஷ்ட்ரர்கள் எல்லாருமே ஆர்.எஸ்.எஸ். காரர்கள் என்று நினைப்பது சரியா? எத்தனையோ வருடங்களாக மதுரை எம்.பி.யாக இருந்த தந்தையும் மகனும் காங்கிரஸ்காரர்கள் தானே. எத்தனையோ தி.மு.க., அ.தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள் சௌராஷ்ட்ரர்களாக இருந்திருக்கிறார்கள்; இருக்கிறார்கள். ஏன் கொலை செய்யப்பட்டு இறந்தாரே கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் திருமதி. லீலாவதி; அவர் சௌராஷ்ட்ரர் தானே? இவர்களை எல்லாம் பார்த்த பின்னும் சௌராஷ்ட்ரர்களை ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துடன் மட்டுமே தொடர்புறுத்தலாமா?

சௌராஷ்ட்ரர்களில் பெரும்பான்மையினர் எந்த கட்சியிலும் தீவிரமாக இல்லாதவர்கள். அப்படியே அரசியலில் இருப்பவர்களும் பெரும்பாலும் இந்துத்துவ கட்சியல்லாத கட்சிகளில் தான் இருக்கிறார்கள்.

February 18, 2007 7:40 PM
---

குமரன் (Kumaran) said...
3. இப்போதும் பெரும்பான்மை சௌராஷ்ட்ரர்கள் மென்மையானவர்களே. துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்பதை தலை மேல் ஏற்று நடப்பவர்கள். கோழைகள் என்று சொன்னாலும் பரவாயில்லை என்றிருப்பவர்கள். என் தலைமுறையில் தான் வந்த வம்பை எதிர்கொண்டு சண்டைக்குச் செல்பவர்களைப் பார்க்கிறேன்.

மூதாட்டிகளுக்கு தமிழ் தெரியாமல் இருந்ததற்கு அந்தக் காலத்து ஸ்திரி தருமமும் ஒரு காரணம் என்று நினைக்கிறேன். எந்த சமூகத்திலும் அந்தக் காலத்தில் பெண் என்பவள் வீட்டில் அடங்கி இருக்க வேண்டியவள் என்ற நிலை இருந்தது. நீங்களே மூதாட்டிகளை மட்டும் குறிப்பிடுவதிலிருந்து உங்கள் தலைமுறைப் பெண்களும் எங்கள் தலைமுறைப் பெண்களும் நன்கு தமிழ் அறிந்தவர்களாக இருக்கிறார்கள் என்று சொல்லிவிட்டீர்கள்.

எதிர்த்து நிற்க வேண்டும் என்பதற்காக உடற்பயிற்சி நிலையங்கள் தோன்றினவா இல்லை உடலை நன்கு பேண வேண்டும் என்ற நோக்கத்திற்காகத் தோன்றினவா என்று சொல்ல இயலாது. உடற்பயிற்சி நிலையங்கள் தோன்றியது உண்மை.

4. உடல் நிறம் ஒரு காரணியாக இருக்கும் என்று சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் அது ஒரு ஸ்டிரியோ டைப் என்று நீங்களே ஒத்துக் கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.

5. இது ஒரு காரணியாக இருக்கும் என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். பார்ப்பனர்கள் மட்டுமே பூணூல் அணிகிறார்கள் என்ற ஒரு தவறான எண்ணத்தினால் வந்த வெறுப்பு இது. செய்யும் தொழிலைப் பொறுத்து பூணூல் அணிகிறார்கள் சௌராஷ்ட்ரர்கள். கால்கரி சிவா அண்ணா சொன்னது போல் தமிழர்களிலும் பார்ப்பனரல்லாத சாதியினரில் சிலர் எப்போழுதும், மற்றவர் சடங்குகளின் போதும் பூணூல் அணிவதைப் பார்த்திருக்கிறேன்.

6. மற்றவர்களிடமிருந்து தனிப்படுத்திக் கொள்வது: இது ஒரு தற்காப்பிற்காகவும் மொழி, பண்பாட்டுக் காரணங்களுக்காகவும் என்று நினைக்கிறேன். மற்ற நாடுகளுக்குச் சென்ற நம்மவர் 'தமிழர்கள்' என்று கூடி அந்த நாட்டினரிடமிருந்து தனிப்படுத்திக் கொள்வதில்லையா? அது போல் தங்களைச் சுற்றிப் பெரும்பான்மை வேறு மொழி பேசுபவர்களாக இருக்கும் போது தங்கள் மொழியையும் பண்பாட்டினையும் காத்துக் கொள்வதற்காக அந்த மாதிரி செய்கிறார்கள் என்று நினைக்கிறேன். இது வேண்டுமென்றே திட்டமிட்டுக் கூடச் செய்யத் தேவையில்லை; இயற்கை உந்துதலில் இது தானாக நடக்கிறது.

பிடித்தது: உங்களுக்கு மட்டும் இல்லை. மதுரை வாழ் மக்கள் அனைவரும் ஒரே குரலில் இதனைச் சொல்வார்கள் என்று நினைக்கிறேன். :-) சரியான சாப்பாட்டு ராமன்களாக இருந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். :-) புளியோதரைக்குச் சொத்தையே எழுதிக் கொடுப்பார்கள். (கொடுப்பேன்) :-)

பிடிக்காதது: இது நம்மவர் (நம் நாட்டினர்) எல்லாருக்கும் இருக்கும் ஒரு பழக்கம். அமெரிக்காவில் அடிக்கடி கேட்கும் குற்றச்சாட்டு இது - இந்த தமிழ்நாட்டுக்காரர்கள் எல்லாம் தமிழில் பேசத் தொடங்கி விடுகிறார்கள்; இந்த கொல்டிப்பசங்க எல்லாம் தெலுங்குல பேசத் தொடங்கிவிடுகிறார்கள்; வங்காளிகள் பெங்காலியில் பேசத்தொடங்கி விடுகிறார்கள் என்பது. ஆனால் ஒரு தமிழன் இன்னொரு தமிழனுடன் தமிழில் பேசும் போதும், தெலுங்கன் தெலுங்கனுடன் அவன் மொழியில் பேசும் போதும், வங்காளி வங்காளத்தில் பேசும் போதும் அவர்களுக்கு அது தவறாகத் தெரிவதில்லை. மற்றவர்களுக்கு? அதே போல் தான் இதுவும் என்று நினைக்கிறேன்.

February 18, 2007 8:01 PM
---

குமரன் (Kumaran) said...
நன்றி ஜெயஸ்ரீ. சொல் ஒரு சொல்லுக்கு சுருக்கமான வரையறையைக் கொடுத்திருக்கிறீர்கள். மிக்க நன்றி. சொல்லுக்குச் சொல் ஒத்துக் கொள்கிறேன்.

February 18, 2007 8:03 PM
---

குமரன் (Kumaran) said...
இராம், என் நண்பர்கள் பலர் இப்படிச் செய்து மற்ற நண்பர்கள் கத்தியிருக்கிறார்கள் - வந்துட்டாய்ங்க பாருடா காய்ரா பூய்ரா கம்பெடுத்து ஓய்ரான்னு. டேய் ஒழுங்கா தமிழ்ல பேசுங்கன்னு. :-)

பெறகு விரைவில் வந்து சொல்லுங்க. ததா காத்திருக்கிறேன்.

February 18, 2007 8:05 PM
---

துளசி கோபால் said...
எனக்குத் தெரிந்த பல செளராஷ்டிர நண்பர்கள் தமிழை மிகவும் அழகாக
உச்சரிப்பார்கள். அதுவுமே கேட்பதற்கு இனிமைதான்.

நம்ம டி.எம் எஸ், அப்புறம் எம்.என் ராஜம் எல்லாம் எப்படி டாண்டாண்ணு பாட்டையும்,
வசனத்தையும் உச்சரித்தாங்கன்னு பார்த்தீங்கதானே?

வீட்டுலே என்ன மொழி பேசினால் என்னங்க.......... தமிழ்நாட்டில் பிறந்து
வளர்ந்தவங்க ( நான் உள்பட)எல்லாமே தமிழர்தானே?

February 18, 2007 8:47 PM
---

oagai said...
குமரன் சுடர் விளையாட்டுக்கு பெருமை சேர்க்கும்படி இருக்கிறது உங்கள் பதிவு.

மோனைக்காக ஒரு கேள்வியையே குறைத்த உங்கள் தமிழ்ப் பற்றை என்னென்று சொல்வது? ஆனாலும் பெனாத்தலாரின் ஐயம் ஐயம்தான்!

இனி சௌராஷ்ட்ரா மக்களைப் பற்றி நான் அறிந்தவை.

மதுரைக்கு அடுத்தபடியாக அவர்கள் அதிகம் வாழ்வது குடந்தையில்தான் என்று அறிந்திருக்கிறேன். எங்கள் ஊரில் அவர்களை சௌராஷ்ட்ரா என்று அழைத்து நான் கேள்விப்பட்டதில்லை. பட்டுநூல்காரர்கள் என்றே கூறுவார்கள். எனக்கு கல்லூரி வாழ்வில் சில நண்பர்கள் கிடைத்தார்கள்.

1. சௌராஷ்ட்ரா குஜராத்தி போன்ற மொழிகளைப் போல் வடமொழியிலிருந்து பிறந்த மொழிதான். நான்கு ககரங்கள் இருந்தாலும் மலையாளம் தெலுங்கு ஆகியவற்றைப் போல் இது திராவிட மொழி இல்லை. ஆகவே இம்மொழியின் பல ஒலிகள் இந்தி மற்றும் மற்ற வட இந்திய மொழிகளைப்போலவே ஒலிக்கும்.

2. பெரும்பாலானவர்கள் இந்து மதத்திலும் தேசியத்திலும் தீவிர நம்பிக்கை உடையவர்கள். இரண்டு தலைமுறைக்கு முந்தியவர்கள் பெரும்பாலும் காங்கிரஸுக்கு வக்களிப்பவர்கள்.

3. பழக்கவழக்கத்தால் மென்மையானவர்கள். பொருளாதாரத்தில் மிக மிக ஏழ்மையிலிருந்து ஓரளவுக்கு பணக்காரர்கள் வரை இருக்கிறார்கள். சென்னை மைலாப்பூரில் மிக மிக ஏழ்மையான குடும்பத்தினர் இருந்ததை நான் அறிவேன். எந்த வம்பு தும்புக்கும் போகாமல் எல்லோருடனும் அன்பாக பழகுபவர்கள்.

4. உடல் நிறம் வெள்ளையாக இருப்பதற்கு அவர்கள் பூர்வீகம் வடநாடாக இருபது ஒரு காரணம். ஆனால் இதை பொதுமைப் படுத்த முடியாது. என் நண்பர் ஒருவரின் குடும்பத்தினர் மற்றும் அவரது பெரும்பாலான உறவினர்கள் மாநிறமாக இருக்கிறார்கள்.

5. பூனூல் போட்டவர்களெல்லாம் பிராமணர்கள் என்று அழைப்பதை தெரியாமல் செய்யும் குற்றம் என்று என்னால் கூற முடியாது. சாதாரண பொது அறிவு பிராமணர்களைத் தவிர்த்த பலரும் பூனூல் போடுவார்கள் என்று சொல்லிவிடும்.

6. மற்றவர்களிடமிருந்து தனிமைப் படுத்திக் கொள்வது என்பது நான் அறியாதது. இது மதுரைக்கு மட்டுமே உரிய தன்மையாக இருக்கலாம். என் கல்லூரி வாழ்விலும் குடந்தை மற்றும் மைலாப்பூரிலும் என் அனுபவம் முற்றிலும் வேறானது.

7. சாப்பாட்டு ரசிகர்கள். சாதாரணமாக அவர்கள் வீட்டில் சாப்பிடும் போது நம்முடைய சமையல் போலவே இருக்கும். ஆனால் திருமணங்களில் அவர்களின் ஏராளமான பதார்த்தங்கள் மிகவும் வேறுபட்ட சுவையுடன் இருக்கும். பலர் சைவம். சிலர் அசைவம். ஒரே வீட்டில் மனைவி அசைவம் கணவன் சைவம் என்றெல்லாம் உண்டு.

8. எல்லாம் நல்ல குணங்களாக கொண்டிருப்பதாலோ என்னவோ இரண்டு சௌராஷ்ட்ரர்கள் சேர்ந்துவிட்டால் சுற்றிலும் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் மொழியில் பிளந்து கட்ட ஆரம்பித்துவிடுவார்கள். மிக விரைவாக துருத கதியில் அவர்களது மொழியில் பேச ஆரம்பித்துவிட்டால் நம் காதுகளின் கதி அதோ கதிதான். எத்தனை முறை இதை எடுத்துச் சொன்னாலும் சரி என்று தலையாட்டிவிட்டு அடுத்தமுறையும் அதையே செய்வார்கள். இந்த விஷயத்தில் அதீதமானவர்கள்.

குமரன், உங்களுக்கு தன்னிலை விளக்கமளிக்க ஒரு அருமையான சந்தர்ப்பம் கொடுத்த எஸ்கேவுக்கு ஒரு சிறப்பு நன்றி சொல்லிவிடுங்கள்.

February 18, 2007 8:57 PM
---

kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//குமரன் (Kumaran) said...
சுடர் என்றாலே எனக்கு இரண்டு சுடர்கள் தான் உடனே நினைவிற்கு வருகின்றன. இரண்டுமே முதலாழ்வார்கள் ஏற்றியது//

கார்த்திகைச் சுடர் மலை மேல்.
வள்ளலார் ஏற்றியதும் சுடர்!

வானியல் நிகழ்வுகளில் சுடர், விசேடமான சேதிகளைக் கொண்டு வரும். தேவகுமாரன் ஏசுவின் பிறப்பும், குருகூரில் நம்மாழ்வார் இருப்பும் சுடரால் அன்றோ சுட்டிக்காட்டப்பட்டன!

சாகரன் தொடங்கிய சுடர், தொடர்ச் சுடராக ஒளி உமிழ்வது மகிழ்ச்சி.

குமரன், தமிழ்ச் சுடர் அருமை!
வில்லங்கமான கேள்விக்கு விளக்கமான பதில்கள்!
விளக்குச் சுடரால், இருள் விலகும்.
SK உங்களுக்கு அளித்த சுடராலும் இருள் விலகுமே! வாழ்த்துக்கள்!!

February 18, 2007 9:48 PM
---

Anonymous said...
வாழ்த்துக்கள் குமரன்...நல்லதொரு பதிவு படித்த மகிழ்ச்சி...!!! நேரமின்மையால் ஒரு 'குட்டி' (இது தமிழா?) பின்னூட்டம்...

செந்தழல் ரவி

February 18, 2007 10:43 PM
---

இலவசக்கொத்தனார் said...
ஒரு பின்னூட்டம் போட்ட ஞாபகம். வரவில்லையா?

February 18, 2007 10:55 PM
---

இலவசக்கொத்தனார் said...
உங்களுக்கான கேள்விஒன்றிற்கு எஸ்.கே பதிவில் நானே பதில் சொல்லிவிட்டேன். சரியாகத்தானே சொல்லி இருக்கிறேன்?!

February 18, 2007 10:56 PM
---

இலவசக்கொத்தனார் said...
நல்ல அருமையான பதில்கள். அடுத்து இவ்விளையாட்டு எப்படி போகிறதென்று பார்க்க ஆவலாகவே இருக்கிறது.

February 18, 2007 10:57 PM
---

இலவசக்கொத்தனார் said...
நான்தானே 50?!

வாழ்த்துக்கள் குமரன்!!

February 18, 2007 10:58 PM
---

Mathuraiampathi said...
சற்று வேலைபளு அதிகம். இன்றுதான் பார்க்க முடிந்தது.....சுடரை அருமையாக கையாண்டு சரியான இடத்திற்கு அனுப்பியுள்ளீர்கள்.....

எனக்கும் தங்களது சமுகத்தில் நண்பர்களுண்டு.....தாங்களூம், தருமி அவர்களும் கூறிய பல காரணங்கள் எனக்கும் தொன்றியவை.

February 18, 2007 11:45 PM
---

கோவி.கண்ணன் said...
குமரன்,
சுடர் நன்றாக இருக்கிறது... ஆன்மிக சுடர் ! விளக்கை உங்களிடம் கொடுத்து ஏற்ற வைத்த எஸ்கேவுக்கும், அழகாய் சுடரை தூண்டிய உங்களுக்கும் பாராட்டுக்கள்.

February 18, 2007 11:55 PM
--

விடாதுகருப்பு said...
//அப்படி ஒரே ஒரு வலைப்பதிவர் மட்டுமே செய்கிறார். அவர் பதிவில் வரும் அனானிப் பின்னூட்டங்கள் மட்டுமே அப்படி சொல்கின்றன. அவர்(கள்) கருத்தினை சில நேரங்களில் தவறென்று நானும் இன்னொரு சௌராஷ்ட்ரப் பதிவரும் சொன்னதால் எங்கள் கருத்துகளை நேராக எதிர்க்காமல் எல்லா சௌராஷ்ட்ரர்களையும் திட்டுகிறார்(கள்). அவ்வளவு தான். அவர்கள் சொல்லும் கருத்திற்கு யார் எதிர் கருத்து சொன்னாலும் அவர் ஒன்று பார்ப்பனராக இருக்க வேண்டும்; இல்லை பார்ப்பன அடிவருடியாக இருக்க வேண்டும் என்ற தீவிரவாத எண்ணத்தின் வெளிப்பாடு தான் அந்த மாதிரிப் பேசுவது. You are with us or against us என்று புஷ் சொன்னதற்கும் இதற்கும் வேறுபாடு இல்லை.//

நன்னா எழுதி இருக்கேள்.

February 19, 2007 12:20 AM
---

கவிதா|Kavitha said...
நல்ல கேள்விகள் அதற்கேற்ற பதில்கள்.. நல்லா தான் சுற்றி வருது நம்ம சுடர்.. நீங்க வேறு இப்ப சிபிக்கிட்ட கொடுத்துட்டீங்க.. சூப்பர் கேள்வியா கேட்டு இருக்கீங்க. .பார்க்கலாம்.. சிபியின் பதில்கள் எப்படின்னு.. :)

February 19, 2007 1:19 AM
---

குமரன் (Kumaran) said...
கால்கரி சிவா அண்ணா. நீங்கள் சொல்வது சரி. இருவரை மட்டுமே வைத்து கோடிக்கணக்கில் இருக்கும் ஒரு மொழிச்சமூகத்தை எடைப்போட முடியாது. உங்களுக்கும் எனக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. நீங்கள் குறித்தவை தவிர்த்த மற்ற கருத்துகளிலும்.

//ப்ராமணர்கள் இணையாக உயர்ந்திருக்கிறார்கள்.//

இந்தப் பத்தியில் நீங்கள் சொன்ன கருத்தை ஏற்றுக் கொண்டாலும், இந்த வரியை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இது பார்ப்பனர்கள் உயர்ந்தவர்கள் என்ற கருத்தை வைக்கிறது. மனிதர் யாரும் ஒரு நிகர் சமானம் என்று எண்ணுகிறேன் நான்.

சௌராஷ்ட்ரர்கள் இறை நம்பிக்கையிலும் மதக் கொண்டாட்டங்களிலும் திருவிழாக்களிலும் மிக்க ஈடுபாடு கொண்டவர்கள் என்பதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் இந்துத்துவ கருத்துகள் அவர்களிடம் ஆதரவு பெறவில்லை. சிறுபான்மையினரே சங்க குடும்ப கட்சிகளில் இருக்கிறார்கள். நீங்களே சொன்னது போல் மற்றவர்கள் காங்கிரஸ், திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட், அண்மையில் விஜய்காந்த் கட்சி என்று தான் இருக்கிறார்கள்.

தருமி ஐயாவின் கருத்திற்கு உங்கள் கருத்துகளைச் சொன்னதற்கு நன்றிகள்.

February 19, 2007 8:33 AM
---

குமரன் (Kumaran) said...
நன்றி யோகன் ஐயா. ஆமாம் நிறைய சிந்தித்துத் தான் பதிலை இட்டேன். கொஞ்சம் கடுமையான சொற்கள் வந்து விழுந்ததென்னவோ உண்மை தான். பின்னர் அவற்றை கடுமை குறைத்து ஆனால் கருத்தைத் தெளிவாக்கும் சொற்களாக மாற்றி எழுதினேன். அப்படியும் ஒன்றிரண்டு சொற்கள் வந்திருக்கின்றன. கருப்பு அண்ணாவும் அவற்றை மட்டுமே ஹைலைட் செய்திருக்கிறார்.

முருகன் பாடலை எழுதும் போது வழக்கம் போல் கருத்துகளுடன் எதுகை, மோனைச் சுவைகளும் வருமாறு பார்த்துக் கொண்டேன். இன்னொரு புதுமை ஒரே எதுகையை மூன்று செய்யுளுக்கும் அமைந்தது. தமிழ்க்கடவுளைத் தொழத் தானே வருகிறது தமிழ்.

February 19, 2007 8:37 AM
---

குமரன் (Kumaran) said...
பாடலைப் பாடி வாழ்த்திய ஐயா சுப்பையா அவர்களுக்கு என் நன்றிகள். கூவி அழைத்தால் குமரன் மட்டுமில்லை; சுப்பையா அவர்களும் வருவார் என்று காட்டிவிட்டீர்கள்.

February 19, 2007 8:40 AM
---

குமரன் (Kumaran) said...
துளசி அக்கா. நீங்கள் சொல்வது சரி தான். நிறைய பேர் சரியாத் தான் தமிழை உச்சரிப்பார்கள். என்னிடம் பழகியவர்கள் யாருமே இதுவரை நான் வேற்று மொழியை வீட்டில் பேசுபவன் என்று நானாகச் சொல்லும் வரை கண்டுபிடித்ததில்லை. நேற்று கூட ஒரு தமிழ் நண்பர் என் ஒரு மாத குழந்தையைப் பார்க்க வந்திருந்த போது என் மகளுக்கு ஆங்கிலமும் சௌராஷ்ட்ரமும் தெரிகிறது; தமிழை சன் டிவி மூலம் கற்று கொள்கிறாள் என்று சொன்ன போது 'குமரன். உங்க (அழுத்தம் கொடுத்தார்) பொண்ணுக்குத் தமிழ் தெரியாதுன்னா நல்லா இருக்காது. தமிழும் சொல்லிக் குடுங்க' என்றார். :-) தமிழில் அவள் தன் பெயரையும் சன் டிவி தொடர்களின் பெயர்களையும் (கஸ்தூரி, மலர்கள் போன்றவை) எழுதுவாள் என்று சொன்னேன்.

டி.எம்.எஸ்., எம்.என்.இராஜம் என்று இருவரைச் சொல்லியிருக்கிறீர்கள். இன்னும் நிறைய பேரைச் சொல்லலாம். ஆனால் ஏற்கனவே எஸ்.கே. ஐயா 'ஆட்டி வைத்த மிருகங்களை' பற்றி கேட்டிருக்கிறார். அவற்றிற்கு இதுவரை கொடுத்த தீனியே போதும்.

வந்து படிச்சு பின்னூட்டம் இட்டதற்கு நன்றி அக்கா.

February 19, 2007 8:46 AM
---

ச.சங்கர் said...
குமரன்...

வணக்கம்...சுடரை அழகாகவும் அமைதியாகவும் ஏற்றியுள்ளீர்கள்

அன்புடன்...ச.சங்கர்

February 19, 2007 8:47 AM
---

சிவபாலன் said...
குமரன் சார்,

இரசிக்கும்படி எழுதியுள்ளீர்கள்!!

நன்றி!

February 19, 2007 9:35 AM
---

குமரன் (Kumaran) said...
சுடர் விளையாட்டிற்குப் பெருமை சேர்க்கும் படி இந்தப் பதிவு இருக்கிறது என்று பாராட்டியதற்கு நன்றிகள் ஓகை ஐயா. பெரியவங்க சொன்னா பெருமாள் சொன்ன மாதிரி. (கிண்டல் இல்லை. உண்மையிலேயே உணர்வதைச் சொல்கிறேன்).

பெனாத்தலாரின் ஐயம் நியாயமானது. ஆனால் அது எங்கள் நேர்மையை ஐயப்படுவதால் அநியாயமானது. :-) நேர்மையின் மறுவடிவங்கள் நாங்கள். :-) (சும்மா).

ஆமாம். பட்டுநூல்காரர்கள் கும்பகோணத்திலும் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். என் உறவினர்கள் மதுரை, பரம்குடி, சேலத்தில் இருப்பதால் கும்பகோணத்தை மறந்துவிட்டேன். கால்கரி சிவா அண்ணா சொன்னது போல் திருப்பதியிலும், அது போக மைசூர், பெங்களூரிலும் இருக்கிறார்கள்.

1. ஆமாம். கண்ணன் பேசிய மொழி என்று சில நேரம் நான் பீத்திக் கொள்வதுண்டு. :-) கண்ணன் பேசியது சௌரசேனி என்ற பிராகிருத மொழிகளில் ஒன்று. அதிலிருந்து பிறந்தது தான் சௌராஷ்ட்ரம் என்று சொல்வார்கள். ஆனால் இப்போது நிறைய தெலுங்கு, தமிழ் சொற்கள் தான் சௌராஷ்ட்ரத்தில் இருக்கின்றன. சொல் ஒரு சொல் பதிவிற்கு தூண்டுதலும் சௌராஷ்ட்ரத்தின் இந்த நிலை தான். விரைவில் சௌராஷ்ட்ரமே இல்லாமல் போய்விடும் அபாயம் இருக்கிறது, இதே நிலை தொடர்ந்தால். இப்போதே சிவமுருகன், நான் என்று சிலருக்குத் தெரிந்த சௌராஷ்ட்ர சொற்கள் எங்கள் வயதினர் பலருக்குத் தெரியாது.

2. இப்போதும் நிலை அப்படித் தான். காங்கிரஸ் பெரும்பான்மையாகவும், அதிமுக அடுத்தபடியும், திமுக அடுத்தபடியும், பாஜக அடுத்தபடியும் என்று தான் மதுரையில் நான் கணித்திருக்கிறேன். மதுரை விட்டு வந்து 8 வருடங்கள் ஆகிவிட்டன. மாறியிருக்கலாம்.

3. சரியாகச் சொன்னீர்கள் ஐயா. மதுரையில் பெரும்பான்மையானவர்கள் கைத்தறி நெசவுத் தொழில் செய்கிறார்கள். ஏழ்மையில் உழல்கிறார்கள். நீங்கள் சொன்னது போல் நானெல்லாம் க்ரீமி லேயரைச் சேர்ந்தவன் தான். :-)

4. இதுவும் சரியாகச் சொன்னீர்கள். எங்கள் குடும்பத்திற்கே 'மொல்லின் கள பிள்ளல்ன்னு' - 'மல்லி கருப்பு பசங்க' என்றே பெயர். :-) என் அம்மா, நான், என் தம்பி மூவர் மட்டுமே கொஞ்சம் நிறமாக இருப்போம். மற்றவர்கள் எல்லாம் கொஞ்சம் நிறம் கம்மி தான்.

5. நன்றி.

6. மதுரைக்கே உரியதாக இருக்கலாம்.

7. மதுரையில் பலர் அசைவம். சிலர் சைவம். ஆனால் அது நீங்கள் சொன்னது போல் தான். என் தம்பி முட்டையும் சாப்பிடமாட்டான். நான் சிக்கன், மட்டன், மீன் வகையறாக்களை நன்கு வெட்டுவேன். உப்புக்கண்டம் என் பேவரைட். :-)

8. மற்றவர்கள் முன்னிலையில் என் மனைவியிடம் தமிழிலும் (ஆங்கிலத்திலும் - மற்றவர்களுக்குத் தமிழ் தெரியாதென்றால்) பேச நான் மிகுந்த முயற்சி எடுத்துக் கொள்வேன். கொஞ்சம் கடினமாகத் தான் இருக்கிறது.

எஸ்.கே. கேட்ட கேள்விகள்ல முதல் கேள்வியைப் பார்த்த போது 'என்னத்துக்கு இந்த வம்பான கேள்வியைக் கேட்டிருக்கார்'ன்னு தான் நெனைச்சேன். அப்புறம், முன்பு முத்துகுமரன், அப்டிபோடு கற்பகம் அக்கா போன்றவர்கள் சௌராஷ்ட்ரர்களைப் பற்றி எழுதச் சொல்லிக் கேட்டுக் கொண்டது நினைவிற்கு வந்தது. சுய தம்பட்டம், சாதிப் பெருமை போன்றதாக இல்லாமல் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதாக எழுதினால் தவறில்லை என்று தோன்றியது. அதனால் துணிந்துப் பேசத் துவங்கினேன். எஸ்.கே. ஐயாவிற்கு நன்றி சொல்லும் போதே தருமி ஐயாவிற்கும், கால்கரி சிவா அண்ணாவிற்கும், தம்பி இராமச்சந்திரமூர்த்திக்கும் (இராம்), துளசி அக்காவிற்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

February 19, 2007 11:38 AM
--

குமரன் (Kumaran) said...
ஓகை ஐயா. உங்களுக்கும் நன்றி என்று எல்லார் பெயரையும் சொல்லிவிட்டுச் சொல்லலாம் என்று எண்ணியிருந்தேன். தவறிவிட்டேன். உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டதற்கு உங்களுக்கும் நன்றி.

February 19, 2007 11:42 AM
---

வெளிகண்ட நாதர் said...
குமரன், இந்த பட்நூல்காரங்களுக்கும் எனக்கும் மிகப்பெரிய தொடர்பு உண்டு. சிறு வயதில், நான் எங்கள் பூக்கடைக்கு தேவையான நூற்கண்டுகளை வாங்க நான் அவர்கள் வீட்டிற்கே செல்வேன். திருச்சியில் பட்நூல்காரத்தெரு என்ற ஒன்று பெரியக்கடை வீதி அருகில் இருக்கிறது! அப்படி சிறுவயதில் அவர்கள் வீட்டில் சில சமயம் தங்கி அந்த நூற்கண்டுகளை வாங்கி வரவேண்டும்! அப்படி வாங்கி வரும் பொழுது எனக்கு ஏகப்பட்ட செளராஷ்ட்ர நண்பர்கள்! அவ்வளவு காலத்திற்கு பிறகு இணையத்தில் நீங்கள் என் நண்பர்! இதில் என்ன இருக்கிறது நாம் அனைவரும் ஓரிடத்தில் கூடி வாழ்ந்து அந்நாட்டின் மொழியினை சிறுவயதிலிருந்தே ஆர்வம் கொண்டு அதன்பல் ஈடுபாடு கொண்டிருப்பதில் எந்த ஆச்சிரியமில்லை, நம் மூதாதையர் வேறு எங்கிருந்து வந்தாலும்! நான் கூட ஒரு தெலுங்கன் தான், தமிழின் ஆர்வம் நான் இறக்கும் வரை என்னைவிட்டு அகலாது! நடந்தவற்றை எல்லாம் மறந்து மீண்டும் தமிழ் சொர்க்கத்திற்கு வாருங்கள்!

February 19, 2007 11:56 AM
---

குமரன் (Kumaran) said...
நன்றி இரவிசங்கர். வில்லங்கமான கேள்விகளைக் கேட்பது ஒரு நல்ல தெளிவைக் கொண்டு வருவதற்கு உதவியாக இருக்கும் என்றே நினைக்கிறேன். இது வரை அப்படித் தான் சுடர் சென்ற தடத்தில் தெரிகிறது.

February 19, 2007 2:07 PM
---

குமரன் (Kumaran) said...
நன்றி செந்தழல் இரவி. 'குட்டி' தமிழ்ச் சொல்லாகத் தான் இருக்க வேண்டும். மலையாளத்திலும் இருக்கிறதே. :-)

February 19, 2007 2:39 PM
---

குமரன் (Kumaran) said...
கொத்ஸ். இப்ப நீங்க தொடர்ச்சியா நாலு பின்னூட்டங்கள் இட்டிருக்கீங்களே. அவை தான் வந்தன. அதற்கு முன் எந்தப் பின்னூட்டமும் இந்தப் பதிவிற்கு உங்களிடமிருந்து வரவில்லை.

சரியாத் தான் எஸ்.கே. பதிவில் சொல்லியிருந்தீர்கள்.

நன்றி.

நன்றி.

(எதற்கு இரண்டு நன்றிகள் என்று பார்க்கிறீர்களா? உங்கள் பின்னூட்டங்களைப் பாருங்கள். புரியும்). :-)

February 19, 2007 4:53 PM
---

குமரன் (Kumaran) said...
மிக்க நன்றிகள் மதுரையம்பதி ஐயா.

February 19, 2007 4:54 PM
---

குமரன் (Kumaran) said...
பாராட்டுகளுக்கு நன்றிகள் கோவி.கண்ணன் அண்ணா.

February 19, 2007 4:54 PM
---

குமரன் (Kumaran) said...
//நன்னா எழுதி இருக்கேள்.//

இத்தனை பேர் சௌராஷ்ட்ரர்களுடன் பழகியிருக்கிறீர்களே. எந்த சௌராஷ்ட்ரராவது உங்களுடன் பிராமணர் தமிழில் பேசியிருக்கிறார்களா? பேசியிருக்க மாட்டார்கள் என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். ஆனால் நான் சொன்னால் கருப்பு அண்ணா நம்ப மாட்டார். நீங்கள் சொன்னாலும் நம்புவார் என்ற உறுதியில்லை.

கருப்பு அண்ணா,

பதிவைப் படித்து உங்களுக்குப் பிடித்தக் கருத்தைக் கட்டம் கட்டிப் பின்னூட்டம் இட்டதற்கு மிக்க நன்றி.

February 19, 2007 4:57 PM
---

குமரன் (Kumaran) said...
கவிதா. கூப்புட்டவுடனே வந்து சுடரைப் படிச்சு உங்க கருத்தைச் சொன்னதற்கு நன்றி. அது சரி. நீங்க மட்டும் வந்திருக்கீங்க? அணில்குட்டி எங்கே?

சிபியும் சுடரை ஏற்றிய பிறகு சுடரை தருமி ஐயாகிட்ட கொடுத்திருக்கிறார். பார்த்தீர்களா?

February 19, 2007 4:59 PM
---

குமரன் (Kumaran) said...
நன்றிகள் அன்புடன்.ச.சங்கர்.

February 19, 2007 5:00 PM
---

குமரன் (Kumaran) said...
உங்களைத் தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் சிவபாலன். வந்துவிட்டீர்கள். நன்றி.

எழுதியதைப் படித்து இரசித்ததற்கு மிக்க நன்றி.

February 19, 2007 5:01 PM
---

குமரன் (Kumaran) said...
உதயகுமார் ஐயா. உங்கள் பதிவில் ஏற்கனவே நீங்கள் பட்டுநூல்காரர்களைப் பற்றிச் சொன்னதைப் படித்ததாக நினைவு. நீங்கள் சொல்வது சரி ஐயா. யார் என்ன சொன்னாலும் நமது தமிழின் ஆர்வத்திற்கு நாம் தான் சான்று.

தமிழ் சொர்க்கமா? :-) ஆகட்டும் ஐயா. :-)

February 19, 2007 9:34 PM
---

பொன்ஸ்~~Poorna said...
சுடர் நன்றாக ஏற்றி உள்ளீர்கள் குமரன், மலைநாடன் சொல்வது போல், மீண்டும் தமிழ்மணத்தில் சேர்ந்து கொள்ளுவதைப் பற்றி யோசியுங்கள் என்று தான் சொல்ல எண்ணி இருந்தேன்.

ஆனால், பின்னூட்டங்களைப் படித்தபின்னர், நீங்கள் குறிப்பிட்டிருந்த படி, நிலைமை கொஞ்சமேனும் இணக்கமாக மாறும் வரை பொறுத்திருக்கலாம் என்று தோன்றிவிட்டது... உங்கள் விருப்பப்படி செய்யுங்கள் :)

February 20, 2007 10:05 AM
---

குமரன் (Kumaran) said...
ஆஹா. தெய்வமே. பொன்ஸ். நீங்கள் தெய்வம் போல் வந்து உங்கள் கருத்தைச் சொல்லி என்னை நல்ல வழியில் திருப்பி விட்டுவிட்டீர்கள். நேற்று வீட்டிற்குச் சென்ற பிறகு ஜிமெயிலைத் திறந்தால் மூன்று வலைப்பதிவர்கள் 'நான் புதிய வலைப்பதிவர். உங்கள் சுடர் பதிவைப் பார்த்தேன். உங்கள் பதிவுகள் தமிழ்மணத்தில் தெரியாது என்று சொல்லியிருக்கிறீர்கள். உங்கள் பதிவுகளைப் படித்தேன். எனக்கும் மின்னஞ்சல் அனுப்புங்கள்' என்று சொல்லியிருந்தார்கள். (ஒருவர் என்னுடைய எல்லா வலைப்பதிவுகளையும் இடுகைகளையும் இரண்டு நாட்களாகப் படித்துக் கொண்டிருக்கிறேன் என்கிறார். இன்னொருவர் நேற்று தான் உங்கள் சொல் ஒரு சொல் பதிவைப் பார்த்தேன் என்கிறார். இன்னொருவர் உங்கள் புரொபைல் பார்த்தேன் என்கிறார். ஆனால் மூவரும் மின்னஞ்சல் அனுப்புமாறு சொல்லியிருக்கிறார்கள்). அடடா. நம் நண்பர்களில் சிலரும் மீண்டும் தமிழ்மணத்திற்கு வருமாறு சொல்கிறார்கள். இரவிசங்கர் கண்ணபிரான் சொன்னது போல் புதிய வலைப்பதிவர்களும் நம்மைக் கண்டு கொள்ள தமிழ்மணத்தில் வருவது உதவுகிறது. பேசாமல் வந்துவிடலாமா என்று தோன்றத் தொடங்கிவிட்டது. இன்று இந்தப் பதிவில் பின்னூட்டமாக அதைச் சொல்லிவிட்டு ஒவ்வொன்றாக எல்லா வலைப்பதிவையும் இணைத்து விடலாம் என்று இருந்தேன்.

உங்கள் பின்னூட்டம் வந்து 'டேய். நீ என்னத்தைச் சொல்லிட்டுப் போனீயோ அந்த நிலைமை இன்னும் சரியாவலை. அதனால கம்முனு கிட'ன்னு சொல்லிடுச்சு. :-)

நிலைமை கொஞ்சமாகவேனும் இணக்கமாக மாறும் வரை பொறுத்திருக்கலாம் என்று சொல்லியிருக்கிறீர்கள். மிக்க நன்றி. எனக்கும் அப்படித் தான் தோன்றுகிறது. ஆனால் சில நேரங்களில் என் கணிப்புகள் தவறாகப் போயிருக்கின்றன. அதனால் ஒரு நல்ல தோழியாக இணக்கமான சூழ்நிலை எப்போதாவது வந்து விட்டதாகத் தோன்றினால் தனி மடலிலாவது எனக்குச் சொல்லுங்கள். எனக்கு அப்படித் தோன்றினாலும் உங்களிடம் கேட்கிறேன்.

February 20, 2007 11:45 AM
---

குமரன் (Kumaran) said...
நண்பர்களே. நாங்க எல்லாம் இம்புட்டுச் சொல்லியும் கேக்க மாட்டேங்கறியே. ஒருத்தர் மட்டும் சொன்னதை வச்சுக்கிட்டு இப்படி செய்யலாமா என்று சினந்து கொள்ளாதீர்கள்.

இராகவன் சொன்னது போல் எப்போது அலை ஓய்வது? எப்போது காலை நனைப்பது? என்று எனக்கும் தோன்றுகிறது. ஆனால் அண்மைக்காலமாக சில நல்ல அறிகுறிகள் தென்பட்டன. ஆனால் இப்போது மற்றவர்கள் நிலைமையை சீர்குலைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது சுழற்சி போல் நடக்கிறது. ஒன்று நானே 'இது மாறவே மாறாது' என்று வெறுத்து திரும்பி வந்துவிடுவேன். இல்லை உண்மையிலேயே இணக்கமான சூழ்நிலை தோன்றி என்னை இழுத்து வந்துவிடும். அதுவரை நீங்கள் ஒழுங்காக மின்னஞ்சல் அனுப்பும் போது அதனைத் தொட்டு பதிவுகளைப் படித்துவிடுங்கள். (கடைசி வரி மட்டும் அன்பினால் சொன்னது. சினந்து கொள்ளாதீர்கள்) :-)

February 20, 2007 11:49 AM
--

குறும்பன் said...
குமரன் தெளிவாக பதில் சொல்லியிறுக்கிங்க.

வெள்ளைத்தோலும் பூணூலும் ஒருங்கே இருந்தால் பிராமணர் என்று எண்ணத்தானே தோன்றும் (பிராமணர்கள் அனைவரும் வெள்ளையல்ல என்ற போதிலும்), சில பிராமணர்களே அவ்வாறு நினைத்த்தை / நினைப்பதை நான் அறிவேன்.

February 21, 2007 7:06 PM
---

குறும்பன் said...
குமரன் தமிழ்மணத்திற்கு வாருங்கள இதன் மூலம் மேலும் பல புதியவர்கள் (தமிழ்மணத்திற்கு, வலையுலகிற்கு) உங்கள் பதிவுகளை படிப்பார்கள்.

/அலை ஓய்வதும் காலை நனைப்பதும் எப்பொழுது நடப்பது குமரன்?/
/ இது சுழற்சி போல் நடக்கிறது/
அதே.

February 21, 2007 8:20 PM
--

சிவமுருகன் said...
அண்ணா,
தமிழில் இருக்கும் அழகா? தமிழில் உங்களுக்கிருக்கும் அறிவா? என்று வழக்காடு மன்றம் எல்லாம் வைக்கும் அளவுக்கு ரொம்ப பொருமையா. மத்தவங்களையும் விட்டு கொடுக்காமல், நம்மவர்களையும் நேர்த்தியா கைகோர்த்து ஒரு மாலையாக்கி சுடருக்கு சூட்டியுள்ளீர்கள்.

உங்கள் பதிவுகளை கூட இப்போது படிக்க நேரம் கிடைப்பதில்லை. சற்று வேலை பளு அதிகம். இருந்தாலும் இந்த முழூ நீள பதிவை இடையில் எந்த வித இடரும் இன்றி படிக்க முடிந்தது.

குமரன் இயற்றிய குன்றத்து குமரன் பாடலும் அருமை.

February 21, 2007 9:56 PM
--

குமரன் (Kumaran) said...
ஆமாம் குறும்பன். கொஞ்சம் நிறமாகவும் இருந்து பூணூலும் போட்டிருந்தால் அப்படி தான் தோன்றுகிறது. என் மச்சானை (மனைவியின் தம்பியை அப்படித் தானே சொல்வார்கள்?) சேட்டுப் பையன்னு நெனைச்சுக்குவாங்க. :-)

February 22, 2007 12:29 PM
---

குமரன் (Kumaran) said...
இந்த புதியவர்கள் படிப்பார்கள் என்பதும் சுழற்சி போல் நடக்கிறது என்பதும் நண்பர்களின் வற்புறுத்தலும் மீண்டும் வந்துவிடலாம் என்று தான் எண்ண வைக்கிறது. கொஞ்சம் நாள் போகட்டும் குறும்பன். ஆன்மீகப் பதிவுகளைப் படிப்பவர்கள் தமிழ்மணத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் படிக்கிறார்கள் என்று நினைக்கிறேன். மற்ற பதிவுகளை வேண்டுமானால் அவற்றில் எழுதத் தொடங்கும் போது ஒவ்வொன்றாக தமிழ்மணத்தில் இணைக்கிறேன். கூடலில் விரைவில் 'மென்பொருள் துறையில் மேலாண்மை' என்பதைப் பற்றி ஒரு தொடர் எழுதலாம் என்று எண்ணியிருக்கிறேன்.

February 22, 2007 12:32 PM
--

குமரன் (Kumaran) said...
சிவமுருகன்,

தங்கள் பாராட்டிற்கு நன்றி. குன்றத்துக் குமரன் பாடலை இரசித்ததற்கும் நன்றி. எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது இடுகைகளைப் படியுங்கள்.

February 22, 2007 3:03 PM

Kavinaya said...

ஆஹா, குமரா. வழக்கம்போல இந்தப் பதிவும் எனக்குப் பாடம். கொஞ்சம் பெரீய்ய்ய்ய்ய பாடம்... :) வரலாறு தெரியாததால சில விஷயங்கள் புரியல...

//கன்றுக்கு இரங்கும் கவின்பசுவாம் மீனாட்சிக்
கன்றான குமரனைப் போற்றினோம் போற்றினோம்//

அந்தக் குமரனைப் பற்றி இந்தக் குமரன் பாடிய பாடல் அற்புதம்!

குமரன் (Kumaran) said...

பின்னூட்டங்களையும் படித்துவிட்டீர்களா கவிநயா அக்கா? வியப்பு தான்.

வரலாறு பெரிய வரலாறு இல்லை. தெரிந்து கொள்ளாமல் இருப்பதே நல்லது. :-)

R.DEVARAJAN said...

www.angumingum.wordpress.com ல் ஒரு நல்ல திறனாய்வு நடைபெற்று வருகிறது.
குமரன்சாரின் கவனத்திற்கு

R.dev

குமரன் (Kumaran) said...

தேவராஜன் ஐயா. நீங்கள் தந்துள்ள வலைப்பதிவிற்குச் சென்று 'விதிர்ப்பை'ப் பற்றி பேசும் இடுகையைப் படித்தேன். திறனாய்வு நடக்கும் இடத்தைத் தேடிப் பிடிக்கவில்லை. எந்த இடுகை என்று பார்த்து அந்த இடுகையின் சுட்டியைத் தருகிறீர்களா? நன்றிகள்.