Thursday, March 27, 2008

உடுக்கை இழந்தவன் கை - 10 (பாரி வள்ளலின் கதை)

'பறம்பு மலையே. உன் குடுமியில் பாரி வாழும் போது நீ பெரும் புகழ் பெற்றிருந்தாய். இன்றோ அவன் இல்லை. உன் புகழும் இனி மங்கும். யானை மென்று உண்ட கவளத்தின் சிதறல் தரையெங்கும் கிடப்பதைப் போல் மது பிழிந்து போடப்பட்ட சக்கையின் சிதறல் பாரியின் மாளிகை முற்றத்தில் சிதறிக் கிடந்தன அந்தக் காலத்தில். அந்த சக்கைகளின் சிதறல்களிலிருந்தும் மது ஊறி முற்றமெங்கும் சேறாகக் கிடக்கும். அப்படி அவன் செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்த காலத்தில் இங்கே நின்று பார்ப்பவர்களின் கண்களுக்கு நீ தோன்றுவதைப் போல் சிறிது தொலைவில் சென்று பார்ப்பவர்களின் சிந்தைகளிலும் நீ தோன்றும் பெருமை கொண்டிருந்தாய் அல்லவா? இனி அப்படி நிகழுமா?

ஈண்டு நின்றோர்க்கும் தோன்றும் சிறுவரை
சென்று நின்றோர்க்கும் தோன்றும் மன்ற!
களிறு மென்றிட்ட கவளம் போல
நறவு பிழிந்திட்ட கோதுடைச் சிதறல்
வார சும்பொழுகும் முன்றிற்று
ஏர் வீசிருக்கை நெடியோன் குன்றே!

பாரி வாழ்ந்த காலத்தில் இந்த மலையின் ஒரு பகுதியில் நீர் அருவி கொட்டிக் கொண்டிருக்கும். மற்றொரு பக்கம் பாணர்களின் உண்கலத்தில் மதுவை வார்ப்பதற்காக வடிகக்ப்பட்ட இனிய கள்ளின் தேறல் அருவி கற்களை எல்லாம் உருட்டி ஓடிக் கொண்டிருக்கும். வேற்படையுடையவனும் யானைப்படையைக் கொண்டிருக்கும் வேந்தர்களுக்கு இன்னானும் ஆகிய நமக்கு இனியவன் வாழ்ந்த போது நிகழ்ந்த இவை இனி நிகழாதே.

ஒரு சார் அருவி ஆர்ப்ப ஒரு சார்
பாணர் மண்டை நிறையப் பெய்ம்மார்
வாக்க உக்க தேக்கள் தேறல்
கல்லலைத்து ஒழுகும் மன்னே! பல்வேல்
அண்ணல் யானை வேந்தர்க்கு
இன்னான் ஆகிய இனியோன் குன்றே!
"

"பெரியப்பா. எத்தனை தான் அழுது புரண்டாலும் மாண்டவர் மீள்வரோ? சென்றதும் மீளுமோ? வாருங்கள் பகல் வீழும் காலமும் ஆனது. இன்றிரவு தங்கும் இடம் ஏதேனும் தென்படுகிறதா பார்க்கலாம்"

"ஆமாம் சங்கவை. நீ சொல்வது சரி தான். மாலை மயங்கி வருகிறது. இன்று முழுமதி நாள் என்பதால் இருக்கை தேடி விரைய வேண்டாம். மெதுவாகத் தேடுவோம்"

"அப்படியே செய்வோம் பெரியப்பா. அருகில் ஏதேனும் ஊர் உண்டா?"

"மலையின் அடிவாரத்தில் ஒரு சிற்றூர் உண்டு அம்மா. இரு திங்களுக்கு முன்னர் அந்த ஊரில் ஒரு பாணரின் வீட்டில் தான் நண்பகல் தங்கினேன். இரவு முதல் நாழிகைக்குள் அங்கே சென்றுவிடலாம் என்று எண்ணுகிறேன்"

***

"வாருங்கள் புலவரே. வாருங்கள்"

"பாணரே. நலமா? தங்கள் மனையாளும் நலமா?"

"தங்கள் ஆசிகளினால் நாங்கள் நலமாகத் தான் இருக்கிறோம் புலவரே. நம் மன்னர் மறைந்ததே இப்போது பெரும் குறை."

"நாடும் நகரமும் நன்கறிந்தது தானே அது பாணரே. இதோ இந்த இரு பெண்களும் பாரி மகளிர். இவர்களுக்குத் தகுந்த மணவாளனைத் தேடிச் சென்று கொண்டிருக்கிறோம். இன்றிரவு இங்கே தங்க இயலுமா என்றறியவே வந்தோம்"

"இது என்ன கேள்வி கபிலரே. எங்கள் மன்னன் மகளிர் எங்கள் குடிசையில் தங்க வந்தது எங்களின் பெரும்பேறல்லவா? இங்கேயே நீங்கள் விரும்பும் நாட்கள் வரை தங்கியிருக்கலாம். உள்ளே வாருங்கள். உணவு அருந்திய பின்னர் அமர்ந்து உரையாடலாம்"

***

உணவு அருந்திய பின்னர் அனைவரும் முற்றத்தில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருக்கின்றனர். பாரி மகளிரிடம் மன்னரைப் பாடித் தான் பெற்ற தங்க நாணைப் பற்றி விறலி சொல்லிக் கொண்டிருந்தாள். அவள் சொல்லச் சொல்ல அந்த நாள் நினைவுகளால் இரு பெண்களின் கண்களிலும் நீர் நிரம்பின.

(தொடரும்)

***
பாடற்குறிப்புகள்:

ஈண்டு நின்றோர்க்கும் என்று தொடங்கும் பாடல் புறநானூறு 114ம் பாடல். ஒருசார் அருவி ஆர்ப்ப என்று தொடங்கும் பாடல் புறநானூறு 115ம் பாடல். இரண்டும் கபிலர் பறம்பு நோக்கிப் பாடியது.

திணை: பொதுவியல்; துறை: கையறுநிலை. (விளக்கத்திற்கு சென்ற பகுதியைப் பார்க்கவும்). இரண்டு பாடல்களுக்கும் ஒரே திணையும் துறையும்.

பாடல்களின் பொழிப்புரையைத் தரவில்லை. பாடலில் ஏதேனும் ஐயம் இருந்தால் கேளுங்கள்.

27 comments:

G.Ragavan said...

குமரன், எனக்கு ஒரு ஐயம். இதுல நெடியோன் குன்றுன்னு வருதே... அப்ப இந்த நெடியோன் குன்றுதான் அந்த நெடியோன் குன்றா? இல்லை... பரம்பு மலையும் நெடியோன் குன்றுகள்ள ஒன்றா? போற போக்கப் பாத்தா நீங்க வைக்கிற தரவுகளில் இருந்து குன்று தோறாடும் கண்ணப் பெருமாள்னு சொல்லனும் போல இருக்கே. :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

என்ன கொடுமை குமரன்...
இந்தப் பகுதியில் கதையே சொல்லாம பாட்டை மட்டும் சொல்லி விட்டுட்டீங்க!

மெளலி (மதுரையம்பதி) said...

என்ன குமரன் இந்த பதிவுல சாராயவாடை ரொம்ப அதிகமா இருக்கே?....

ஆமாம், இந்த பரம்பு மலை எங்க இருக்கு?, இருக்கா இல்ல எல்லாம் கிரானைட் கற்களாயிடுச்சா?. இருக்குன்னா இன்றைய பெயர் என்ன?.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அப்ப இந்த நெடியோன் குன்றுதான் அந்த நெடியோன் குன்றா? இல்லை//

நீல மேனி நெடியோன் நின்ற வண்ணமும்-ன்னு சொல்லலை நண்பா! வெறுமனே நெடியோன் குன்று தான்!

அப்படிப் பார்த்தா நான் உங்களை விட நெடியோன்! :-) பாரியும் நெடியோனா இருந்திருக்கலாம்! உடனே Paari height weight measuremment chart எல்லாம் கேக்காதீங்க! பாவம் குமரன், அதுக்கெல்லாம் தரவுக்கு எங்கே போவார்? :-)

//போற போக்கப் பாத்தா நீங்க வைக்கிற தரவுகளில் இருந்து குன்று தோறாடும் கண்ணப் பெருமாள்னு சொல்லனும் போல இருக்கே. :)//

இன்றைய பிரான்மலை தான் அன்றைய பறம்பு மலை! இன்னிக்கி பிரான்மலையில் இருப்பது நன்மங்கைப்பாக சுவாமி! ஈசனார் மலை மேல் இருக்காரு! குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்கும் இடம்-னு சொல்றவங்க மலையேறி ஈசனை, சிவலிங்கத்தைக் கண்குளிர வழிபட்டு வாருங்கள் :-)

Geetha Sambasivam said...

கபிலர் இறந்து போய்ப் பாரி மகளிரின் திருமணத்தை ஒளவையார் தான் முடித்தார் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன், நீங்க எப்படிக் கொண்டு போகப் போறீங்க புரியலை, பார்க்கலாம்,

கொஞ்சம் வேலை அதிகமானதால் சரியா வர முடியலை! எப்படியும் இன்னும் கொஞ்ச நாட்கள் இப்படித் தான் இருக்கும்னு நம்பறேன்!

பாச மலர் / Paasa Malar said...

ஓ..பிரான்மலைதானா...

ஔவையாருக்கும் பாரி மக்களுக்கும் ஏதோ ஒரு வகையில் தொடர்புள்ள செய்தி உண்டென்ற ஞாபகம்..கீதா சொல்வதுதானா என்று தெரியவில்லை..கதையின் ஓட்டத்தில் போகப் போக வருமென்று நினைக்கிறேன்.

குமரன் (Kumaran) said...

இராகவன்,

உங்களுக்கு வந்த ஐயம் எனக்கும் இந்தப் பாட்டைப் படித்தவுடன் வந்தது. இது வரை நெடியோன் என்றாலே மாயோன் என்று மட்டும் தானே எண்ணிக் கொண்டு வந்திருக்கிறோம். இந்தப் பாடலைப் பார்த்தவுடன் நெடியவர்கள் எல்லோரையும் நெடியோன் என்று குறித்திருக்கிறார்கள்; மாயோனுக்கு மட்டுமே விதப்பான பெயர் இல்லை போலிருக்கிறது என்று தோன்றியது. அதனால் அதிகம் ஆராயாமல் விட்டுவிட்டேன்.

இப்போது நீங்களும் இந்த ஐயத்தை எழுப்பிய பின்னர் கொஞ்சம் தேடிப் பார்த்தேன். அகப்பட்டவை இவை:

1. புறநானூறு ஒன்பதாம் பாடலில் பாண்டிய மன்னன் 'நெடியோன்' என்று குறிக்கப்பட்டிருக்கிறான்.
2. புறநானூறு நூற்றிப் பதினான்காம் பாடலில் (இந்த இடுகையில் இருக்கும் பாடலில்) பாரி 'நெடியோன்' என்று குறிக்கப்பட்டிருக்கிறான்.
3. புறநானூறு இருநூற்றிநாற்பத்தியொன்றாவது பாடலில் 'ஒண்தொடி வச்சிரத் தடக்கை நெடியோன் கோயில்' குறிக்கப்பட்டிருக்கிறது. வச்சிரம் குறிக்கப்படுவதால் இந்திரனாக இருக்கலாம் என்று எண்ணினேன். அங்கே குறிக்கப்படும் நெடியோன் யார் என்று அறிய தமிழ் பல்கலைக்கழக நூலகத்தில் இந்தப் பாடலின் உரையைத் தேடிப் படித்தேன். உரையிலும் அது இந்திரனைத் தான் குறிக்கிறது என்று சொல்கிறது.
4. கலித்தொகை நெய்தல் கலி 30ம் பாடலில் நெடியோன் மகன் என்று காமதேவன் குறிக்கப்படுகிறான் என்று முன்னர் ஜீவி ஐயா சொல்லியிருந்தார். கலித்தொகையில் வேறு இடங்களிலும் நெடியோன் என்ற பெயரில் மாயோன் குறிக்கப்படுகிறான் என்றும் சொல்லியிருந்தார்.

தேடியதில் நெடியோனையும் குன்றினையும் இணைக்கும் தரவுகள் வேறெதனையும் காணிலேன். அதனால் தற்போதைக்கு 'குன்றிருக்கும் இடமெல்லாம் குமரனிருக்கும் இடம்' என்று தற்காலத்திலும் இருக்கும் நிலையோடு நின்று கொள்ளலாம். நீங்கள் விரும்பினால் வேறு தரவுகளைத் தேடிச் செல்லும் போது இதனைப் பற்றியும் ஏதேனும் அறியக் கிடைத்தால் சொல்கிறேன். :-)

நீங்க 'குன்று தோறாடும் கண்ணப் பெருமாள்'ன்னு சொன்னதைப் படிச்சவுடனே இந்த இடுகையையும் 'இலக்கியத்தில் இறை' என்று வகைப்படுத்திவிடலாமா என்று எண்ணினேன். :-)

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

குமரா!
பாட்டு பொருளுடன் ,கொஞ்சம் கதையையும் நகர்த்தவும்.

மெளலி (மதுரையம்பதி) said...

//புறநானூறு இருநூற்றிநாற்பத்தியொன்றாவது பாடலில் 'ஒண்தொடி வச்சிரத் தடக்கை நெடியோன் கோயில்' குறிக்கப்பட்டிருக்கிறது. வச்சிரம் குறிக்கப்படுவதால் இந்திரனாக இருக்கலாம் என்று எண்ணினேன். அங்கே குறிக்கப்படும் நெடியோன் யார் என்று அறிய தமிழ் பல்கலைக்கழக நூலகத்தில் இந்தப் பாடலின் உரையைத் தேடிப் படித்தேன். உரையிலும் அது இந்திரனைத் தான் குறிக்கிறது என்று சொல்கிறது. //

அப்படின்னா பழந்தமிழர் இந்திரனையும் வழிபட்டிருக்காங்களா?.
மால், மருகன், கொற்றவை, இப்போ இந்திரன்...வாவ்!!!!

மெளலி (மதுரையம்பதி) said...

//புறநானூறு இருநூற்றிநாற்பத்தியொன்றாவது பாடலில் 'ஒண்தொடி வச்சிரத் தடக்கை நெடியோன் கோயில்' குறிக்கப்பட்டிருக்கிறது. வச்சிரம் குறிக்கப்படுவதால் இந்திரனாக இருக்கலாம் என்று எண்ணினேன். அங்கே குறிக்கப்படும் நெடியோன் யார் என்று அறிய தமிழ் பல்கலைக்கழக நூலகத்தில் இந்தப் பாடலின் உரையைத் தேடிப் படித்தேன். உரையிலும் அது இந்திரனைத் தான் குறிக்கிறது என்று சொல்கிறது. //

அப்படின்னா பழந்தமிழர் இந்திரனையும் வழிபட்டிருக்காங்களா?.
மால், மருகன், கொற்றவை, இப்போ இந்திரன்...வாவ்!!!!

குமரன் (Kumaran) said...

இராகவன், இரவிசங்கர். விடுமுறைக்கு ஊருக்குப் போயிருக்கும் உங்கள் இருவரிடமிருந்து பின்னூட்டங்கள் வரும் என்று எதிர்பார்க்கவே இல்லை. மிக்க மகிழ்ச்சி. :-)

குமரன் (Kumaran) said...

கதை சொல்லலையா? நல்லா படிச்சுப் பாருங்க இரவிசங்கர். மலையில இருந்து இறங்குறாங்க. இறங்கி வந்து பாணர் வீட்டுல தங்குறாங்க. சாப்புடறாங்க. முற்றத்துல நிலவொளியில உக்காந்து பேசறாங்க. இம்புட்டு கதை சொல்லியிருக்கேனே. :-)

அடுத்த என்ன பாடல் வரும்ன்னு சொல்லுங்க பார்க்கலாம். :-)

குமரன் (Kumaran) said...

முதல் பாட்டுல சொல்ற பிழிஞ்ச நறவினை வேண்டுமானால் சாராயம் என்று சொல்லலாம் மௌலி. ரெண்டாவது பாட்டுல சொன்னது தேக்கள் தேறல் - தெளிந்த இனிமையான கள் - நம்ம ஊர்ல இப்ப அதுக்கு பதனீர்ன்னு பேரு. எனக்கு ரொம்ப பிடிக்கும். வாடை இருக்காது.

பறம்பு மலை இன்னும் இருக்குன்னு தான் நினைக்கிறேன். இந்தக் காலத்துல பிரான் மலைன்னு பேரு. சிவகங்கைக்கு அருகில இருக்காம்.

குமரன் (Kumaran) said...

வாங்க நெடியோன் அடியாரான நெடியோனே. :-)

பிரான் மலையில இருக்கிற சிவபெருமான் கோவிலில் நடக்கும் திருவிழாவைப் பற்றி முன்பொரு முறை இந்தத் தொடரிலேயே தி.ரா.ச. சொன்னாரே. அது நினைவில் இருக்கிறது. இராகவனார் ஐயத்தைத் தனியொருவராய்த் தீர்த்து வைத்த தருமி போன்றவரே நன்றி நன்றி. (நீங்க தருமின்னா இராகவனார் யாருன்னா கேக்கிறீங்க? அதை மட்டும் சொல்ல மாட்டேன். :-) ஏன்னா அது ஊரறிந்த மறைபொருள்).

வவ்வால் said...

கேஆரெஸ்,

//குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்கும் இடம்-னு சொல்றவங்க மலையேறி ஈசனை, சிவலிங்கத்தைக் கண்குளிர வழிபட்டு வாருங்கள் :-)//

அங்கே முருகன் கோவிலும் உள்ளது,ஏற்கனவே பாரிப்பற்றி சுருக்கமாக ஒரு பதிவு போட்டுள்ளேன் அதிலிருந்து,

//எனவே பாரிவேள் என்று அழைப்பது உண்டு.இவரதுக்காலம் கி.பி இரண்டாம் நூற்றாண்டு.

இவர் ஆண்ட இடம் பறம்பு மலை எனப்படும் , அப்போதைய பாண்டிய அரசின் கீழ் வரும்.அது தற்போது பிறான்மலை எனப்படுகிறது. இதற்கு இன்னொரு பெயர் கொடுங்குன்றம் என்றும் உள்ளது. இம்மலை மேரு மலையின் ஒரு பகுதி என்ற புராணம் உண்டு, இங்கே ஒரு சிவன் கோவில், முருகன் கோவில் உள்ளது.

பிறான்மலை சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர், காரைக்குடி அருகில் உள்ளது.//
------------------
//அப்படின்னா பழந்தமிழர் இந்திரனையும் வழிபட்டிருக்காங்களா?.
மால், மருகன், கொற்றவை, இப்போ இந்திரன்...வாவ்!!!!//

மதுரையம்பதினு வக்கணையா பேர் வச்சுக்கிட்டு இந்திரனை வழிப்படுறாங்களா வாவ்னு சொல்றிங்க , என்னக்கொடுமை சார் இது!

குமரனே ஏற்கனவே இந்திரத்திருவிழானு எல்லாம் பதிவு போட்டார்னு நினைக்கிறேன்.அங்கேயும் நீங்க எப்படியும் ஒரு அட்டெண்டன்ஸ் போட்டு இருப்பிங்க , ஆனாலும் இப்படி!

தி. ரா. ச.(T.R.C.) said...

வாழ்க்கையில் ஏற்ற தாழ்வு மன்னர்களுக்கும் வரும் போல.பாரிமகளிர் சாதரண குடிசையில்
தங்க வேண்டியிருந்தது அதனால்தனோ.

காளிதாசன் ரகுவசத்தில் கூறும் பொழுது அரசானான் திலீபன் தான் செல்வத்தையெல்லாம் முனிவருக்குக் கொடுத்துவிட்டு மறுபடி முனிவர் வாரும்பொழுது முன்பு தங்க பாத்திரத்தில் அவரது கால்களை கழுவி வரவேற்றவன் இப்பொழுது மண் பாத்திரத்தில் கழுவி வரவேற்றான். இதைப் பார்த்த முனிவர் ரகுவம்சத்தின் புகழை உயர்த்தி பாடினார். அதுபோல இருக்கிறது இதுவும்.

பிரான்மலைக்கு 1973வருடம் சென்ற அனுபவம் உண்டு

தி. ரா. ச.(T.R.C.) said...

மதுரையிலிருந்து பங்களுர் போனாலே சாரயவடை நல்லாவேத் தெரியும் போல.

குமரன் (Kumaran) said...

கீதாம்மா. கபிலர் பாரிமகளிர் திருமணத்தை முடித்துவிட்டதாகத் தான் இந்தத் தொடர்கதை சொல்கிறது. சென்ற பகுதியைப் பார்த்தீர்களா?

கபிலர் பாரிமகளிரை திருக்கோவலூர் மலையமானுக்கு மணமுடித்துக் கொடுத்ததாக ஒரு மரபும் ஒளவையார் பாரிமகளிரை தெய்வீகன் என்றொரு சிற்றரசனுக்கு மணமுடித்துக் கொடுத்ததாக ஒரு மரபும் வழங்கிவருகிறது. திருக்கோவிலூர் மலையமானுக்குக் கபிலர் இவர்களை மணமுடித்துக் கொடுத்துவிட்டு பின்னர் வடக்கிருந்தார் என்ற வகையில் தான் இந்தக் கதையைக் கொண்டு செல்கிறேன். அதற்கேற்ற பாடற்தரவுகள் தான் எனக்குக் கிட்டியிருக்கின்றன.

இந்தத் தொடர்கதையில் ஒளவையார் வரமாட்டார். அம்பி இந்தக் கதையை படித்துக் கொண்டிருந்தால் ஏற்கனவே ஒளவையார் வந்து கொண்டு தானே இருக்கிறார் என்று சொல்லுவார். :-)

மெளலி (மதுரையம்பதி) said...

//மதுரையம்பதினு வக்கணையா பேர் வச்சுக்கிட்டு இந்திரனை வழிப்படுறாங்களா வாவ்னு சொல்றிங்க , என்னக்கொடுமை சார் இது!

குமரனே ஏற்கனவே இந்திரத்திருவிழானு எல்லாம் பதிவு போட்டார்னு நினைக்கிறேன்.அங்கேயும் நீங்க எப்படியும் ஒரு அட்டெண்டன்ஸ் போட்டு இருப்பிங்க , ஆனாலும் இப்படி!//

வவ்வால்-ஜி,

குமரன் ஏற்கனவே இந்திரவிழா பற்றி பதிவு போட்டிருக்காரு, நீங்க எதிர்பார்த்தது போல நானும் அதில் பின்னூட்டியிருக்கேன்...என்ன பின்னூட்டியிருக்கேன்னு எனக்கு இப்போதும் நினைவிருக்கு!

இங்க நான் 'வாவ்' சொன்னதன் காரணம் வேறு. தமிழ்க்கடவுள் யார்?, கந்தனா, மாயனாங்கறது கொஞ்சம்-கொஞ்சமா தேய்ந்து போன வாரம் கொற்றவை இந்த வாரம் இந்திரன் வரையில் வந்திடுச்சுங்கறதுக்காக 'வாவ்' சொன்னேன்.

ஆமாம், அதுக்கும் நான் மதுரையம்பதின்னு பெயர் வச்சுகறதுக்கும் என்னங்க தொடர்பு?. :)

மெளலி (மதுரையம்பதி) said...

//மதுரையிலிருந்து பங்களுர் போனாலே சாரயவடை நல்லாவேத் தெரியும் //

வாங்க திரச,

ஏங்க?, சென்னையிலிருந்து பங்களூர் வந்தா சாராயவாடை, சந்தனமாக மணக்குமா?... :)

சாராயம் வாடையாக/நாற்றமாக இருப்பதே உடலுக்கு நல்லது...என்ன சொல்றீங்க? :)

G.Ragavan said...

// குமரன் (Kumaran) said...

இராகவன்,

உங்களுக்கு வந்த ஐயம் எனக்கும் இந்தப் பாட்டைப் படித்தவுடன் வந்தது. இது வரை நெடியோன் என்றாலே மாயோன் என்று மட்டும் தானே எண்ணிக் கொண்டு வந்திருக்கிறோம். இந்தப் பாடலைப் பார்த்தவுடன் நெடியவர்கள் எல்லோரையும் நெடியோன் என்று குறித்திருக்கிறார்கள்; மாயோனுக்கு மட்டுமே விதப்பான பெயர் இல்லை போலிருக்கிறது என்று தோன்றியது. அதனால் அதிகம் ஆராயாமல் விட்டுவிட்டேன்.

இப்போது நீங்களும் இந்த ஐயத்தை எழுப்பிய பின்னர் கொஞ்சம் தேடிப் பார்த்தேன். அகப்பட்டவை இவை: //

ம்ம்ம்.. அப்ப நெடியோன்னா குறிப்பிட்ட ஒருத்தரை மட்டுமில்லாம நெறையப் பேரைக் குறிக்கவும் செய்யுதுன்னு தெரிஞ்சுக்கிட்டேன். :)

குமரன் (Kumaran) said...

பாசமலர்.

ஆமாம். பிரான் மலை தான் பறம்பு மலை. கீதாம்மாவுக்குச் சொன்ன பதிலைப் பார்த்திருப்பீங்கன்னு நினைக்கிறேன். இந்தக் கதையில் ஒளவையார் வரவில்லை. அதற்கு ஏற்ற பாடல்கள் கிடைக்கவில்லை.

குமரன் (Kumaran) said...

கதை மிக மெதுவாக செல்வதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் யோகன் ஐயா. கிடைத்த பாடல்களை எல்லாம் எழுதிவிட வேண்டும் என்ற ஆவல் ஒரு புறம்; வேலைப்பளு இன்னொரு புறம் என்று இந்தக் கதை மிக மெதுவாகச் செல்கிறது.

குமரன் (Kumaran) said...

ஆமாம் மௌலி. பழந்தமிழர் இந்திரனை வழிபட்டிருக்கிறதாகத் தான் தெரிகிறது. தொல்காப்பியம் சொல்லும் வேந்தன் இந்திரன் தான் என்று உரையாசிரியர்கள் சொல்கிறார்கள். சிலப்பதிகாரம் போன்ற சங்கம் மருவிய கால காப்பியங்களில்/இலக்கியங்களில் நேரடியாக இந்திரன் என்ற பெயரே இருக்கிறது.

குமரன் (Kumaran) said...

வவ்வால்,

நீங்களும் இந்தத் தொடர் இடுகைகளைத் தொடர்ந்து படித்து வருகிறீர்கள் என்பதற்கு அடையாளமாக வருகைப்பதிவு செய்ததற்கு நன்றிகள்.

குமரன் (Kumaran) said...

உண்மை தானே தி.ரா.ச. வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வு எல்லோருக்கும் வரத் தானே செய்கிறது. பிரான் மலைக்குச் சென்ற அனுபவத்தைப் பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறீர்கள்.

குமரன் (Kumaran) said...

அப்படித் தான் தெரிகிறது இராகவன். நெடியோன் என்ற பெயர் நாம் யாரைக் குறிக்கிறது என்று நினைத்தோமோ அவருக்கு மட்டுமே விதப்பான பெயராகத் தெரியவில்லை. :-)