Wednesday, May 07, 2008

இணைய எழுத்துகள் எழுதியவருக்குச் சொந்தமா இல்லையா?

இணையத்தில் எழுத வந்த நாள் முதல் இந்த கேள்வி உண்டு. என்னுடைய வலைப்பதிவுகளில் நான் எழுதிய இடுகைகள் அப்படியே ஒரு சொல்லும் மாறாமல் மற்ற இணையத் தளங்களிலும் வலைக்குழுமங்களிலும் இருப்பதை பல முறை கண்டிருக்கிறேன். சில நேரங்களில் என் இடுகையோ என் பதிவோ தொடுப்பாகக் கொடுக்கப் பட்டிருக்கும். சில நேரம் என் பெயர் மட்டும் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த வகையில் இருந்தால் சரி 'கொடுக்க வேண்டிய மரியாதையைக் கொடுத்துவிட்டார்கள்' என்று மகிழ்ந்திருப்பேன். பல இடங்களில் அப்படி எந்த விதக் குறிப்பும் இல்லாமல் அப்படியே நான் எழுதியது எழுத்துப்பிசகாமல் இருப்பதைக் காணும் போது மெல்லிய சினம் படர்வதைத் தவிர்க்க முடிவதில்லை. ஒருவருடைய எழுத்து பிடித்திருந்தால் அவரிடம் அனுமதி பெற்றே மற்ற இடத்தில் அதனை எடுத்து இடவேண்டும் என்று ஒரு புரிதல் இருக்கிறது. ஆனால் இணையத்தில் அது எல்லா நேரங்களிலும் செய்ய முடிவதில்லை. அதனால் சுட்டியை மட்டும் கொடுப்பது வழக்கமாக இருக்கிறது. அந்த அளவிற்காவது என் எழுத்துகளை எடுத்து இடும்போது குறிக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

இவ்வளவு தூரம் மெனக்கெட்டு ஏன் இதனை எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று நினைக்கிறீர்களா? நாளை யாராவது ஒருவர் அப்படி எந்த வித குறிப்பும் இல்லாமல் என் எழுத்துகள் இருக்கும் வலைப்பக்கத்தைப் பார்த்துவிட்டு அதனைத் திருடித் தான் என் எழுத்து என்று சொல்லிக் கொண்டு என் வலைப்பதிவில் எழுதுகிறேன் என்று சொல்லிவிட்டால்? :-)

ஒரே ஒரு எடுத்துக்காட்டு: http://www.mayyam.com/hub/viewtopic.php?t=10549&postdays=0&postorder=asc&start=0 ('மாயோன் புகழ் பாடும் தொல்காப்பியம்' என்னும் என் இடுகை தலைப்பிலிருந்து எதுவுமே மாறாமல் அப்படியே இருக்கிறது. ஆனால் என் பெயரோ இடுகையோ பதிவோ குறிக்கப்படவில்லை)

30 comments:

இலவசக்கொத்தனார் said...

குமரன், இது என்ன கேள்வி. எழுதினவருக்குத்தான் சொந்தம். அவருக்கு சுட்டி குடுத்துதான் மத்தவங்க எழுதணும். அதுவும் முழு பதிவும் போடக் கூடாது. இதெல்லாம் எழுதப்பட்ட / படாத விதிகள்.

ஆனா நாமதான் மண்டபத்தில் எழுதிக் குடுத்ததைக் கொண்டு போய் குடுத்து பரிசு கேட்டவங்களாச்சே!! அதான் இப்படி. முடிந்த இடங்களில் தங்கள் எதிர்ப்பை தெரிவியுங்கள். அதான் நம்மால முடியும்.

அப்புறம் இந்த காப்புரிமை பற்றி முன்னமே பத்ரி ஒரு பதிவு போட்டு இருந்தாரு. முடிந்தாத் தேடிப் பாருங்க.

குமரன் (Kumaran) said...

எழுதப்பட்ட/படாத விதிகளைச் சொன்னதற்கு நன்றிகள் கொத்ஸ். பத்ரியின் இடுகையைப் படித்த நினைவு இருக்கிறது. முழுப்பதிவும் போடக்கூடாது என்ற விதி எனக்குத் தெரியாது. இனி மேல் மற்றவர் இடுகையை/எழுத்தைப் பாராட்டியோ மேற்கோளிட்டோ எழுதும் போது முழுமையாகக் கொடுக்காமல் தொடுப்பு/சுட்டி மட்டும் கொடுத்து எழுதுகிறேன்.

இலவசக்கொத்தனார் said...

குமரன்,

மேற்கோள் காட்டுவதில் தப்பு இல்லை. ஆனால் முழு இடுகையையும் தருவது சரி இல்லை. சமீபத்தில் தமிழ்மண முகப்பில் முழுவதும் தெரிந்த பொழுது எழுந்த சர்ச்சையை நினைவில் கொள்ளுங்கள்.

எல்லாம் எழுதியவர் பதிவில் ஹிட் மற்றும் பின்னூட்டம் வர வேண்டும் என்ற எண்ணம்தான்.

மலைநாடான் said...

குமரன்!

திருடனாய் பார்த்துத் திருந்தாவிட்டால்... என்ன செய்வது ?

//எல்லாம் எழுதியவர் பதிவில் ஹிட் மற்றும் பின்னூட்டம் வர வேண்டும் என்ற எண்ணம்தான்.//
இப்படி மட்டும்தான் எண்ணலாமா?

எழுதப்படும் கருத்துக்களை, அவற்றுக்கு இசைவான பக்க வடிவமைப்பில், பொருத்தமான படங்களுடன் அல்லது பொருத்தமான இசையுடன், படிப்பது மேலும் சுவையான அனுபவத்தைக் தரும் என்பதாகவும் இருக்கலாமல்லவா? :)

அச்சுத் துறையில் கணனி செல்வாக்குச் செலுத்தத் தொடங்கியதன் பின்னர், ஒரு காலத்தில் சுவர்களில் வடிக்கப்பட்ட சித்திரக்கவியின் மற்றுமொரு வடிவமாக அச்சில் கவிதைகள் வடிக்கப்படுகின்றன. வாசிப்பனுபவம் என்பதற்கும் மேலாக, மேலும் ஒரு அனுபவத்தை வாசிப்பவனுக்கு
தருவதாக இதை உணரலாம்.

ஏனைய ஊடகங்களின் திறனனைத்தையும் ஒன்றாகத் தன்னுள் கொண்டிருக்கும் இணையத்தில் இதன் சாத்தியங்கள் அதிகம். ஆதலினால் எழுதுபவரின் விருப்பங்களை, தெரிவுகளை ஒருவர் தன் வலைத்தளத்தில் வெளிப்படுதுகின்றார் என்றால் அதை அவர் தளத்தில் படிப்பதுவே பண்பும், பயனுமாகும்.:)))

நன்றி.

SP.VR. SUBBIAH said...

////ஆனா நாமதான் மண்டபத்தில் எழுதிக் குடுத்ததைக் கொண்டு போய் குடுத்து பரிசு கேட்டவங்களாச்சே!! அதான் இப்படி. முடிந்த இடங்களில் தங்கள் எதிர்ப்பை தெரிவியுங்கள். அதான் நம்மால முடியும்.////

கொத்தனார் சொன்னது சரியானதுதான்!
வேறு என்ன செய்ய முடியும்?
ராஜிவ் காந்தி வழக்கையே 16 ஆண்டுகளாக விசாரித்துக் கொண்டிருக்கும் தேசம் நமது தேசம்!

கோவி.கண்ணன் said...

//ஒருவருடைய எழுத்து பிடித்திருந்தால் அவரிடம் அனுமதி பெற்றே மற்ற இடத்தில் அதனை எடுத்து இடவேண்டும் என்று ஒரு புரிதல் இருக்கிறது. ஆனால் இணையத்தில் அது எல்லா நேரங்களிலும் செய்ய முடிவதில்லை. அதனால் சுட்டியை மட்டும் கொடுப்பது வழக்கமாக இருக்கிறது.//

குமரன்,
முழுப்பதிவையும் அப்படியே வெளியிட்டால், வெளியிடுபவர் குறைந்த அளவு பதிவின் சுட்டியாவது கொடுக்க வேண்டும், எழுதியவரிடம் அனுமதி பெறுவது என்பது நடைமுறையில் சரிவரும் என்று சொல்ல முடியாது என்றே நினைக்கிறேன். அனுமதி பெற மின் அஞ்சல் முகவரி தெரிந்திருக்க வேண்டும் அல்லது பதிவில் பின்னூட்டமாக கேட்க முடியும், அப்படி அனுமதி கேட்டாலும் உடனடியாக பதில் வருமா, எழுதிய பதிவர் வேலை அழுத்ததில் இருக்கிறாரா, வேறு வெளியூருக்கு சென்றிருக்கிறாரா, அதை திறந்து படித்தாரா என்று தெரியாது.

எழுத்து யாருடையது என்று சுட்டிக்காட்டாமல், எழுத்தை மட்டும் எடுத்து வெளி இடுவது கண்டனத்துக்கு உரியதுதான். இணையம் கட்டற்ற ஊடகம் என்றாலும் சில அடிப்படை நாகரீகம் புரிந்துணர்வுக்கு தேவையானதே.

//இவ்வளவு தூரம் மெனக்கெட்டு ஏன் இதனை எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று நினைக்கிறீர்களா? நாளை யாராவது ஒருவர் அப்படி எந்த வித குறிப்பும் இல்லாமல் என் எழுத்துகள் இருக்கும் வலைப்பக்கத்தைப் பார்த்துவிட்டு அதனைத் திருடித் தான் என் எழுத்து என்று சொல்லிக் கொண்டு என் வலைப்பதிவில் எழுதுகிறேன் என்று சொல்லிவிட்டால்? :-)//

வலைப்பதிவில் பழைய தேதியில் அதாவது ஐந்தாண்டுக்கு முன்பே எழுதியது போல் தேதி மாற்றி பதிப்பிக்க முடியும். உங்கள் பதிவை ஒருவர் உங்களுக்கு முன்பே எழுதியது போன்று காட்டினால் என்ன செய்வீர்கள் ? :)

இதைப்படிக்கும் போது முன்பெல்லாம் ஓட்டல்களில், 'இந்த தம்ளர் விஜயா பவனில் திருடியது' - பொறித்திருப்பார்கள் என்பது நினைவு வருகிறது. அது போல் 'எனது இந்த இடுகை அந்த பதிவில் என் அனுமதி இன்றி ஆட்டை போடப்பட்டுள்ளது' என்று சுட்டியுடன் இடுகையின் பின்குறிப்பாக இணைத்தால், தடுக்கமுடியுமா ? :-)

கோவி.கண்ணன் said...

//நாமதான் மண்டபத்தில் எழுதிக் குடுத்ததைக் கொண்டு போய் குடுத்து பரிசு கேட்டவங்களாச்சே!! //

கொத்ஸ்,

கலக்கல் !
:)

குமரன் (Kumaran) said...

கொத்ஸ். தமிழ்மண முகப்பில் முழு இடுகையும் தெரிந்ததும் தெரியாது; அதனால் தோன்றிய உரையாடலும் தெரியாது. வேறேதோ உலகத்தில் தான் இருக்கிறேன் போலிருக்கிறது. மாற்றம் வந்திருப்பது தெரியும்; ஆனால் முழுவதும் ஆராய நேரமின்றிப் போனது.

எழுதியவர் பதிவில் மற்றவர் வந்து படிக்க வேண்டும் என்ற நோக்கம் சரியானது தான். எனக்கெல்லாம் வந்து படித்தால் கூட போதும்; பின்னூட்டமும் தேவையில்லை என்ற நிலை தான். :-)

குமரன் (Kumaran) said...

வாங்க மலைநாடரே. சரியாகச் சொன்னீர்கள். இலக்கியங்களை மொழிபெயர்க்கும் போதும் இதனைச் சொல்வார்களே. என்ன தான் மொழிபெயர்க்கப் பட்ட கவிதையும் கட்டுரையும் கதையும் சுவையாக இருந்தாலும் முதல் மொழியில் படிக்கும் போது அவற்றின் சுவை இன்னும் கூடுதலாக இருக்கும் என்று சொல்வார்கள். அதே போல் தான் பல பதிவுகளும். நீங்கள் சொன்னது போல் எழுதியவர் அவரது மனநிலைக்கு ஏற்ப தகுந்த வண்ணங்கள், படங்கள் என்றெல்லாம் தருவதைச் சுவைப்பது எழுதியவரின் இடுகையில் தான் இயலும்.

அச்சுத்துறையில் கணியின் உதவியுடன் சித்திரகவிகள் வருகின்றனவா? அருமை. நீங்கள் சொன்னது மெத்தச் சரி. இந்தப் பண்பைக் கொண்டு பயனைப் பெறுவோம். நன்றிகள்.

குமரன் (Kumaran) said...

வாத்தியார் ஐயா. நீங்க சொல்றது சரி தான். மக்கள் தொகைப்பெருக்கம் அப்படி. மற்ற நாடுகளில் மக்கள் தொகைக்கு ஏற்ற வகையில் நீதிமன்றங்கள் அமைவதால் பெரிய கொலை வழக்கும் இரு வருடங்களுக்குள் முடிந்து விடுகிறது.

குமரன் (Kumaran) said...

வாங்க கோவி.கண்ணன். கருத்துகளுக்கு நன்றி. நீங்கள் சொன்னது போல் முன் தேதியிட்டு எழுதி நான் எழுதியதை 'நான் திருடி எழுதியது' என்று காட்டிவிடுவார்களோ என்பது தான் என் கவலையும். :-) இடுகலன்களில் பெயரைப் பொறிக்கலாம்; திருடிய பின்னரும் அந்தப் பெயரை எளிதில் நீக்க முடியாது. இணையத்தில் எழுதுவது அப்படியா? அந்தப் பகுதியை மட்டும் நீக்கிவிடலாமே. :-)

குமரன் (Kumaran) said...

//
//நாமதான் மண்டபத்தில் எழுதிக் குடுத்ததைக் கொண்டு போய் குடுத்து பரிசு கேட்டவங்களாச்சே!! //

கொத்ஸ்,

கலக்கல் !
:)

//

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பார்கள். அன்று நடந்தது மகேசன் திருவிளையாடல்; இன்று நடப்பது மக்களின் திருவிளையாடல் என்று சொல்ல வேண்டும் போல. :-)

இராம்/Raam said...

ததா,


இந்த தளத்தை உபயோகப்படுத்தி பாருங்க... எங்க எங்க நம்ம சரக்கை சுட்டு வித்துருக்கான்னு தெரியும்.....

மெளலி (மதுரையம்பதி) said...

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் என்பது சரியே...

பினாத்தல் சுரேஷ் said...

சுட்டி கொடுப்பதுதான் முறை. அனுமதி கேட்பது நாகரீகம். முழுப்பதிவைத் தவிர்ப்பது நலம்.

ஆனால் விகடன் போன்ற பெரும் நிறுவனங்களிலேயே இவற்றைக் கண்டு கொள்ளாமல் விடுகிறார்கள் - இத்தனைக்கும் காபிரைட் ராயல்டி போன்றவற்றில் 70-80 வருடங்களாக ஊறியவர்கள்..

கிரியேட்டிவ் காமன்ஸ் பற்றி கூகுளித்துப் பாருங்கள்.

குமரன் (Kumaran) said...

நீங்கள் கொடுத்த வலைத்தளத்தைப் பயன்படுத்திப் பார்க்கிறேன் இராமசந்திரமூர்த்தி தம்பி. நன்றி.

குமரன் (Kumaran) said...

திருடுகிறோம் என்றே தெரியாமல் செய்வது தானே இவையெல்லாம்?! அப்படித் தான் நினைக்கிறேன் மௌலி அண்ணா.

குமரன் (Kumaran) said...

முறை, நாகரிகம், நலம் - இவற்றை நினைவில் கொள்கிறேன் பெனாத்தலாரே. நன்றி.

மெளலி (மதுரையம்பதி) said...

//அப்படித் தான் நினைக்கிறேன் மௌலி அண்ணா.//

என்னது? உங்களுக்கும் நான் அண்ணாவா?...எங்க இப்படி எல்லோரும் கொடுமை பண்ணுறீங்க....
:(

Kavinaya said...

எனக்கும் இந்த சந்தேகம் உண்டு. நான் தமிழ் மணம் / வலைப்பூவுக்கெல்லாம் கொஞ்சம் புதுசு :) அதனால பொறுத்துக்கோங்க. இணையத்துல போடறது ஒரு பக்கம் இருக்க, pdf பண்ற வசதி செய்து தராங்களே, தமிழ்மணப்பட்டையில்.. (இது வரை முயன்றதில்லை) அப்போ யார் படைப்பையும், யார் வேணும்னாலும் எப்படி வேணும்னாலும் பயன்படுத்திக்கலாமே... அதுக்கு கட்டுப்பாடே இல்லைதானே?

குமரன் (Kumaran) said...

அண்ணான்னு கூப்புட்டா கொடுமையா? என்னங்க்ணா சொல்றீங்க? அது அன்பையும் மரியாதையையும் காட்டும் சொல் தானே மௌலி? :-)

குமரன் (Kumaran) said...

நல்ல ஐயம் கேட்டீர்கள் கவிநயா அக்கா. நீங்கள் கேட்ட பிறகு தமிழ்மணம் தரும் வசதியைச் சோதித்துப் பார்த்தேன். என் பெயர் இருக்கிறது; தமிழ்மணத்தின் பெயர் இருக்கிறது; சில விதிகளையும் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் என் இடுகையின் சுட்டியோ பதிவின் சுட்டியோ இல்லை. அதனால் யார் வேண்டுமானாலும் குமரன் என்ற பெயர் கொண்டிருந்தால் அதனைத் தான் எழுதியதாகச் சொல்லி அடுத்தவருக்கு அனுப்பலாம். :-)

தமிழ்மணப் பட்டை என்று இடுகைகளின் மேலே ஒன்று இருக்கிறதே. அதில் இந்த பிடிஎப் வசதி வேண்டாம் என்றால் எடுத்துவிடலாம் என்று நினைக்கிறேன். நான் செய்ததில்லை. அடுத்த இடுகை இடும் போது சோதித்துப் பார்க்க வேண்டும். அப்படிச் செய்தால் தமிழ்மண முகப்பிலும் அந்த வசதி இந்த இடுகைக்கு இல்லாமல் போகுமோ என்னவோ? அப்படி எடுக்காமல் விட்டால் பிடிஎப் செய்யும் அனுமதியை நாம் மறைமுகமாகக் கொடுப்பதாகப் பொருள் கொள்ளப்படுகிறது போலும்.

Sridhar V said...

இணையமே ஒருவருக்கு சொந்தமில்லையே. 'கட்டற்ற, மட்டற்ற' என்று சொல்லும்போது etiquettes எல்லாம் எதிர்பார்க்க முடியுமா? Plagaraism என்பது பல்வேறு வகையில் உருமாறி விட்டது. அண்மையில் ஒரு எழுத்தாளர் மறைந்த பொழுது அவருடைய எழுத்துகளை ஆளாளுக்கு இணையத்தில் ' இன்னாரின் எழுத்துகள் PDF கோப்புகளாக இருக்கிறது. வேண்டுமென்றால் இறக்கி கொள்ளுங்கள்' என்று கூவி கூவி கொடுத்தார்கள்.

எத்தனை பாடல்கள் இணையத்தில் கிடைக்கின்றன? நேற்று வெளியான திரைப்படம் இன்று இணையத்தில். எழுத்தாவது ஒருவரின் படைப்பு சொத்து. திரைப்படம் பலரின் கூட்டு முயற்சி. அதையே நாம் மதிப்பதில்லையே... :-(

அட... வணிக மென்பொருள்களை எடுத்து கொள்ளுங்கள் (commercial software என்று சொல்ல வந்தேன். சரியா?). எத்தனை torrent சைட்டில் மென்பொருளோடு, லைசன்ஸோடு எல்லாம் இருக்கின்றன. என்னவென்று சொல்வது?

ஆனால் உங்கள் எழுத்துகளை நீங்கள் பாதுகாக்க முடியும். அதாவது எளிதாக 'வெட்டி / ஒட்ட' முடியாமல் செய்யலாம். Blogspot-ல் முடியுமா என்று தெரியவில்லை.

Kavinaya said...

//பிடிஎப் வசதி வேண்டாம் என்றால் எடுத்துவிடலாம் என்று நினைக்கிறேன். நான் செய்ததில்லை. அடுத்த இடுகை இடும் போது சோதித்துப் பார்க்க வேண்டும். //

அப்படிச் செய்ய முடியும்னா, எப்படின்னு எனக்கும் சொல்லுங்க :) (என்னமோ நான் பெரீசா எழுதிக் கிழிக்கிற மாதிரி :)

//இன்னாரின் எழுத்துகள் PDF கோப்புகளாக இருக்கிறது. வேண்டுமென்றால் இறக்கி கொள்ளுங்கள்' என்று கூவி கூவி கொடுத்தார்கள். //

ஆனால் அவர் பெயரைச் சொல்லித்தானே கொடுத்தார்கள்? :)

//எளிதாக 'வெட்டி / ஒட்ட' முடியாமல் செய்யலாம்//

சில பத்திரிகை தளங்களில் அப்படித்தான் இருக்கும்...

Sridhar V said...

கவிநயா,

//ஆனால் அவர் பெயரைச் சொல்லித்தானே கொடுத்தார்கள்? :)
//

அவர் பெயரைச் சொல்லி கொடுத்தாலும், அது காபிரைட் சட்டப்படி தவறு. அவர் எழுத்துகள் அவருக்கு மட்டும்தான் சொந்தம். அதை மறுபதிப்பிக்க, விநியோகிக்க அவருடைய் ஒப்புதல் இல்லாமல் செய்ய முடியாது. :-)

Kavinaya said...

ஓ, அப்படிச் சொல்றீங்களா... சரி..சரி.. நன்றி :)

மெளலி (மதுரையம்பதி) said...

பதிவுக்கு தொடர்பில்லாதது, ஆகவே கிழே இருப்பதை வெளியிட வேண்டாம், :-)

//அண்ணான்னு கூப்புட்டா கொடுமையா? என்னங்க்ணா சொல்றீங்க? அது அன்பையும் மரியாதையையும் காட்டும் சொல் தானே மௌலி? :-)//

ஓ! இப்படி ஒரு அர்த்தம் இருக்கா...
மரியாதை மனத்தில் இருந்தால் போறும் அப்படின்னு நினைப்பேன் நான்...வார்த்தைக்கு வார்த்தை அண்ணாங்கறது ஏதோ உ.கு மாதிரி தோணும் எனக்கு.. :-)

எப்படியாகிலும், நீங்க சொல்லிட்டதால நானும் எல்லோரையும் இனி அண்ணான்னே விளிக்கிறேன் :)

குமரன் (Kumaran) said...

சாட்டையடி அடித்தீர்கள் Sridhar. இணையத்தில் கிடைக்கும் திரைப்படங்களை அவ்வப்போது பார்ப்பவன் என்பதால் எனக்கும் அந்த சாட்டையடி கிடைத்தது. வாணிக மென்பொருட்களும் கிடைப்பது எனக்குப் புதிய செய்தி. தெரிந்து கொள்ளாமல் இருந்ததே நல்லது. :-)

என் பதிவுகளை வெட்டி ஒட்டுவதில் எனக்கு எந்த குறையும் இல்லை. சுட்டியைக் கொடுத்துவிட்டோ பெயரைச் சொல்லியோ செய்தால் மகிழ்வேன். அவ்வளவு தான்.

குமரன் (Kumaran) said...

நான் முயன்று பார்த்துவிட்டுச் சொல்கிறேன் கவிநயா அக்கா.

குமரன் (Kumaran) said...

மௌலி அண்ணா. இந்தப் பதிவில் மட்டுறுத்தலை சில வாரங்களுக்கு முன் நீக்கிவிட்டேன். அதனால் 'வெளியிட வேண்டாம்' என்று சொல்லி நீங்கள் இட்ட பின்னூட்டம் தானாக வெளியாகிவிட்டது. மன்னிக்கவும்.