Wednesday, July 16, 2008

எழுத்தாளினி ஏகாம்பரிக்கு ஏதுமறியாதவனின் பதில் (கேள்வி பதில் 4)


எழுத்தாளினி உஷா எப்பவோ கேட்ட கேள்விகள் இவை. கேள்விகளைக் கேட்ட அவருக்கே அந்தக் கேள்விகள் இன்னேரம் மறந்து போயிருக்கும். அவர் மறந்தாலும் மறக்கலாம்; நாங்கள் மறக்க மாட்டோம் என்று ஒரு சில நண்பர்கள் 'எங்கே மற்ற கேள்விகளுக்குப் பதில்கள்' என்று துளைத்து எடுக்கிறார்கள். அதனால் இதோ மீண்டும் பதில்களைச் சொல்லத் தொடங்கிவிட்டேன்.

உஷா கேட்ட கேள்விகளும் அதற்கு ஏதுமறியா பாலகனின் பதில்களும்:

1- ஆன்மீகம் என்றால் பதிவுலகில் குமரன்,கே ஆர் எஸ், கீதா, வல்லி, ஜீரா என்று வரிசைக்கட்டி சொல்கிறார்கள். ஆனால்
நீங்கள் எல்லாம் எழுதுவது பக்திசார்ந்த இந்து மத நம்பிக்கைகளை வலியுறுத்தி எழுதுவதில்லையா? மத நம்பிக்கை வேறு ஆன்மீகம் வேறு இல்லையா?


மதத்திற்கும் ஆன்மிகத்திற்கும் வேறுபாடுகளும் உள்ளன. ஒற்றுமைகளும் உள்ளன. ஆன்மிகத்தைச் சுற்றியே மதங்களும் அவற்றின் கோட்பாடுகளும் கட்டப்படுகின்றன. ஆன்மிகத்தைத் தவிர்த்து வெறும் வெளிச்சடங்குகளில் மட்டுமே நாட்டமும் வெறியும் கொள்ளும் போது அங்கே பெரும்கேடுகள் விளைகின்றன. வெளிச்சடங்குகளில் இருக்கும் ஆன்மிகக் கோட்பாடுகளை உணர்ந்து அவற்றில் நாட்டம் கொள்ளும் போது பெரும்நன்மைகள் விளைகின்றன. மதங்களைக் குறை சொல்பவர்களைப் பார்த்தால் தெரியும்; அவர்கள் எல்லோரும் பெரும் கேடுகளை விளைவிக்கும் ஆன்மிகம் தவிர்த்த வெளிச்சடங்குகளைத் தான் சொல்கிறார்கள் என்பது.

இங்கே நீங்கள் வரிசைப்படுத்தியிருக்கும் பதிவர்கள் வெளிச்சடங்குகளில் உறைந்திருக்கும் ஆன்மிகத்தைப் பேசுகிறார்கள். வெளிப்பார்வைக்கு வெறும் மதத்தைப் பற்றி மட்டுமே பேசுவது போல் தெரிந்தாலும் அவர்கள் பேசுவதெல்லாம் அந்த மதங்களில் இருக்கும் ஆன்மிகத்தையே. அதனால் அவர்களை ஆன்மிகப் பதிவர்கள் என்று சொல்வதில் தவறில்லை. அப்படிச் சொல்வதில் தயக்கம் இருப்பவர்கள் அவர்களை இந்து மதப் பதிவர்கள் என்று சொன்னாலும் சரி தான். அவரவர் வசதிப்படி சொல்லிக் கொள்ள வேண்டியது தான்.

பக்தி சார்ந்த இந்து மத நம்பிக்கைகளைப் பற்றி எழுதுபவர்களை ஆன்மிகப்பதிவர்கள் என்று சொல்லக்கூடாது என்று நீங்கள் சொல்வது போல் தோன்றுகிறது. பக்தி சார்ந்த இந்து மத நம்பிக்கைகளை எழுதுவதாலேயே இவர்கள் எல்லாம் ஆன்மிகம் பேசுவதில்லை என்று ஆகிவிடுகிறதா?

மத நம்பிக்கை வேறு ஆன்மிகம் வேறு இல்லை. மதத்தில் ஆன்மிகமும் இருக்கிறது; அதைச் சுற்றி இருக்கும் சடங்குகளும் இருக்கின்றன; அவற்றின் மேல் எழுப்பப்பட்ட நிறுவனங்களும் இருக்கின்றன. அதே நேரத்தில் எந்த மதத்த்திலும் சேராமல் எந்த மத சடங்குகளிலும் ஈடுபடாமல் எந்த நிறுவனத்திலும் பங்கேற்காமலும் ஆன்மிக வழி நிற்க முடியும். இப்படி ஆன்மிகத்தைத் தவிர்த்து மதங்களின் சில பகுதிகளும் மதங்களைத் தவிர்த்து சில வேளைகளில் ஆன்மிகமும் இருப்பதால் அவை இரண்டும் வெவ்வேறு என்று சொல்ல இயலாது. அதனால் இந்து மத நம்பிக்கைகளையே பெரும்பான்மையாக எழுதுபவர்களையும் ஆன்மிகப் பதிவர்கள் என்று சொல்லுவதிலும் தவறிருக்க முடியாது.

கீதாம்மாவிற்குப் பதில் சொன்ன பின்னூட்டத்தில் 'குரான், பைபிள் விஷயங்களைப் பேசும் பதிவுகளை ஏன் ஆன்மிகப் பதிவுகள் என்று சொல்வதில்லை' என்று கேட்டிருக்கிறீர்கள். அவர்களையும் ஆன்மிகப் பதிவர்கள் என்று சொல்வதில் தவறில்லை.

2- உங்கள் குழந்தைகளுக்கு உங்கள் நம்பிக்கையை சொல்லி தருவீர்களா? குழந்தை மனதில் அது திணிப்பு/ முளைசலவையில்லையா?

சொல்லித் தந்து மட்டும் தான் குழந்தைகள் கற்றுக் கொள்கிறார்களா? நாம் முனைப்போடு சொல்லித் தருபவற்றை விட அவர்கள் மிகுதியாகக் (அதிகமாக) கற்றுக் கொள்வது நம் நடத்தையில் இருந்து தானே? நம் செயல்கள் எல்லாமும் நம் அடிப்படை நம்பிக்கைகளையும் குணங்களையும் பொறுத்து அமையும் போது அவற்றில் இருந்து குழந்தைகள் கற்றுக் கொள்வதைத் தவிர்க்க முடியுமா? என் அனுபவத்தில் நான் சொல்லித் தந்து என் குழந்தைகள் கற்றுக் கொண்டதை விட பெற்றோர்களான எங்களின் செயல்களைக் கண்டு அவர்கள் கற்றுக் கொள்வதே அதிகம்.

எங்கள் வீட்டில் நான் ஆன்மிகத்தில் பற்று கொண்டிருந்தாலும் தினமும் இறைவனை வணங்குவது, அடிக்கடி கோவில் செல்வது போன்றவற்றில் ஈடுபடுவதில்லை; ஆனால் பெரும்பாலும் இறைப்பாடல்களையே கேட்கிறேன். தங்கமணி எப்போதாவது இறைவனை வணங்குவார்; நாங்கள் எல்லோரும் கோவிலுக்குச் செல்லும் போது அவரும் செல்வார். பாடல்கள் என்றால் திரைப்பாடல்கள் மட்டுமே. குழந்தைகள் இருவரின் செயல்களைப் பார்த்தும் கற்றுக் கொள்கின்றன. எங்கள் இருவரில் யார் திணிக்கிறோம், மூளைச்சலவை செய்கிறோம் என்று சொல்ல முடியுமா?

இறை மறுப்பு, பெண்ணியம், சம உரிமை என்று ஒரு பட்டியலே இடலாம். பல நேரங்களில் இவையும் நம்பிக்கையின் பாற்பட்டவையே. அவற்றை ஒருவர் தங்கள் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்தால் அது திணிப்பு ஆகுமா? அவர்களின் செயல்கள் மூலம் குழந்தைகள் கற்றுக் கொண்டால் அது திணிப்பு ஆகுமா?

எந்த ஒரு கருத்துமே அப்படித் தான் பெற்றோரிடமிருந்து குழந்தைகளுக்குச் செல்கின்றன. அவற்றைத் தவிர்க்க இயலாது. ஆன்மிகம், மதம், மத நம்பிக்கை இவை தீண்டத்தகாதவையாக உங்களுக்குத் தோன்றுவதால் அவற்றை என் குழந்தைகள் என்னிடமிருந்து கற்றுக் கொண்டால் அது உங்களுக்கு திணிப்பாகவும் மூளைச்சலவையாகவும் தோன்றுகிறது. அதே நேரத்தில் அரசியலில் ஈடுபாடுடைய பெற்றோரின் குழந்தையும் அரசியலில் ஈடுபாடு கொள்வதையும், இறை மறுப்பு பேசுபவர் குழந்தையும் இறை மறுப்பு பேசுவதையும் கண்டால் அது இயற்கையாகப் படுகிறது. அங்கே திணிப்பு என்று தோன்றுவதில்லை. மாறியும் நடப்பதுண்டு. வாத்தியார் பையன் மக்கு என்பதைப் போல். அப்போது அங்கே என்ன நடந்தது? திணிப்பு நடக்கவில்லையா?

அவரவர் கருத்தின் படி அவரவர் நடக்கும் போது அவற்றிலிருந்து குழந்தைகள் கற்றுக் கொள்வது தவிர்க்க முடியாமல் நடக்கும். அதனைத் திணிப்பென்றும் மூளைச்சலவை என்றும் சொல்வது அவரவர் அரசியல் சார்ந்ததொன்று. :-)

3-நம் புராணங்களில், வழி வழி வந்த நம்பிக்கைகளில் கடவுள்களுக்கு தந்த உருவங்கள் உண்மை என்று நம்புகிறீர்களா? ஆம்,
என்றால் இவர்கள் தேவலோகம்/ வைகுண்டம்... இவைகளில் ஆகாயத்தில் வசிக்கிறார்களா? ஆம் என்றால் சுவனம், ஹெவன்
ஆகாயத்தில் எங்கு உள்ளன?


என் தனிப்பட்ட நம்பிக்கையைக் கேட்டால் 'ஆமாம். இந்த இறை உருவங்கள் உண்மை' என்றே சொல்வேன். இறைவனுக்கு ஓருரு ஒரு பெயர் என்றில்லை. 'ஆணல்லன் பெண்ணல்லன் அல்லால் அலியுமல்லன்' என்று சொன்ன நம்மாழ்வார் அதே பாசுரத்திலேயே 'பேணும் போது பேணும் உருவாகும் அல்லனுமாம்' என்பார். அதுவே என் நம்பிக்கையும். இறைவன் இந்த உருவங்கள் எல்லாமுமாகவும் இருக்கிறான். ஆனால் இந்த உருவங்களில் மட்டுமே அவன் நின்றுவிடுவதில்லை. கல்லூரிக் காலத்தில் நான் நண்பர்களுக்குச் சொன்ன கருத்து நினைவிற்கு வருகிறது. முருகன், கண்ணன், சிவன், ஐயப்பன், அம்பிகை, இயேசு என்று சமயங்கள் சொல்லும் உருவங்களை வணங்கினால் மட்டுமே இறையருள் கிட்டும் என்பதில்லை. புதிதாக ஏதோ ஒரு படத்தை எடுத்து வைத்துக் கொண்டு வணங்கினாலும் அதே பயன் கிட்டும். அந்த வகையில் சிறு தெய்வங்கள் என்று சொல்லப்படும் தெய்வங்களுக்கும் பெரும் தெய்வங்கள் என்று சொல்லப்படும் தெய்வங்களுக்கும் வேறுபாடு இல்லை. இறைவனின் திருவுருவங்கள் தான் இவை எல்லாம். இறைவன் எல்லா வல்லமையும் படைத்தவன் என்பதால் அடியவன் போற்றும் எல்லா திருவுருவங்களையும் தன்னுருவமாகக் கொள்ளும் வல்லமையும் படைத்தவன்.

இவர்கள் தேவலோகம்/வைகுண்டம் போன்ற இடங்களில் வசிக்கிறார்களா என்ற கேள்விக்கும் பதில் 'ஆமாம்'. தேவலோகமும் வைகுண்டமும் சிவலோகமும் பருப்பொருட்களாக (ஸ்தூல இடங்களாக) எண்ணிக் கொண்டாலும் சரி; ஒருவர் உடலிலும் உள்ளத்தில் இருக்கும் உட்பொருளாக (சூக்கும இடங்களாக) எண்ணிக் கொண்டாலும் சரி எல்லாம் வல்ல இறைவனால் அவற்றின் இருப்பையும் ஏற்படுத்த இயலாதா என்ன?

சுவனம், ஹெவன் ஆகாயத்தில் எங்கே இருக்கின்றன என்று எனக்குத் தெரியாது. அவை ஆகாயத்தில் தான் இருக்கிறதா அன்றி காயத்தில் (உடலில்) தான் இருக்கிறதா என்றும் தெரியாது. ஈரேழு பதினாறு உலகங்களும் ஸ்தூல வடிவில் இருக்கின்றன என்றும் அவை உடலில் இருக்கும் சூக்கும உலகங்களே என்றும் ஆன்மிக நூற்கள் சொல்வதைப் படித்திருக்கிறேன். தேடிப் பார்க்க வேண்டும். கிடைத்தால் சொல்கிறேன். சொல்ல முடியுமா என்று தெரியவில்லை - கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர் - என்றும் சொல்லிச் சென்றிருக்கிறார்கள். அதனால் நீங்களும் தேடிப் பாருங்கள். :-)

4- உலகைப் படைத்தவன் இறைவன் ( இங்கு எந்த பெயரை வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளுங்கள்) என்றால்
கடவுள் மகா சாடிஸ்ட் இல்லையா?


அப்படித் தான் தோன்றுகிறது. :-)

என் நம்பிக்கையைக் கேட்டால் இறைவனும் உலகங்களும் உயிர்களும் என்றுமே காலம் காலமாக இருப்பவர்கள். புதிதாகப் படைக்கப்படுபவர்கள் இல்லை. விளக்கத் தொடங்கினால் விரிவாகச் செல்லும். தத்துவம் கேட்கும் மனநிலை இருந்தால் சொல்லுங்கள். இன்னொரு வாய்ப்பில் பேசுகிறேன்.

43 comments:

Kavinaya said...

உங்கள் இரண்டாவது கேள்விக்கான பதில் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. பெற்றவர்களிடமிருந்து கற்றுக் கொள்வதோடு அல்லாது, இறை நம்பிக்கை உள்ளவர்களின் படி, அவர்கள் ஆன்மா வாசனைக்கும் தக்கவாறுதான் அவர்கள் நம்பிக்கைகளும் நடத்தைகளும் அமைகின்றன என நினைக்கிறேன்.

நாலாவது கேள்விக்கான பதிலுடன் நான் ஒத்துப் போகவில்லை. ஸ்ரீராமகிருஷ்ணர் சொல்வதே எனக்கு போதுமானதாக இருக்கிறது. இறைவனை அளக்கவோ அவன் வழிகளை அறியவோ வேண்டிய அறிவு சின்ன சதவிகிதம் கூட நமக்கு இல்லை. அதனால் அவனை சாடிஸ்ட் என்று சொல்வதை ஒப்புக் கொள்ள முடியவில்லை.

குமரன் (Kumaran) said...

வாசனைகளைப் பற்றிய தங்கள் கருத்து மிகவும் உண்மையானது கவிநயா அக்கா. அதனைத் தொட்டால் இன்னும் விரிவாகப் போகும் என்பதால் பொதுவாகப் பேசி முடித்தேன்.

நாலாவது கேள்விக்கு நான் பதிலே சொல்லவில்லையே. சிரிப்பானுடன் சொன்னது - அப்படித் தான் 'தோன்றுகிறது' - என்று. அது முழு பதிலும் இல்லை. பதிலின் முதல் வரியை மட்டும் அடுத்த பத்தியில் சொல்லிவிட்டு விலகிவிட்டேன். அவ்வளவு தான்.

பெருங்கடலை அதில் வாழும் சிறு மீன் அளப்பதும் அளந்து ஒரு பட்டப்பெயர் கொடுப்பதும் இயலாது தான். :-) இந்த எடுத்துக்காட்டு பிடிக்கவில்லை என்றால் வேறொன்றைச் சொல்லலாம் - லட்டில் இருக்கும் சிறு துகள் லட்டினை முழுக்க முழுக்க அளந்து சொல்வதென்பது இயலாது தான். :-) இதுவும் பிடிக்கவில்லையா இன்னொரு எடுத்துக்காட்டு இருக்கிறது - ஒரு சிற்றெரும்பு என் மகளை அளந்து அறிவுரை கூறுவது இயலாது தான். :-) விசிஷ்டாத்வைதம், அத்வைதம், த்வைதம் என்று எந்த தத்துவம் பிடிக்குமோ அந்தத் தத்துவத்திற்குகந்த எடுத்துக்காட்டை எடுத்துக் கொள்ள வேன்டியது தான். :-)

அகரம் அமுதா said...

வினாவுக்கு உஷா! விடைக்கு நீர்! வாழ்த்துகள்.

இந்நேரம் அல்லவா? இன்னேரம்?

திவாண்ணா said...

//ஈரேழு பதினாறு உலகங்களும் ஸ்தூல வடிவில் இருக்கின்றன என்றும் அவை உடலில் இருக்கும் சூக்கும உலகங்களே என்றும் ஆன்மிக நூற்கள் சொல்வதைப் படித்திருக்கிறேன்//

இப்படிக்கூட யோசிக்கலாம் குமரன்:

விஞ்ஞானம் 5 டிமென்ஷன்கள் பற்றி பேசுகிறது. (நீளம், அகலம், உயரம், காலம்) மேலும் இருக்கலாம் என்றும் அவற்றை சரிவர புரிந்து கொள்ள முடியவில்லை என்றும் சொல்லுகிறது.
இவை வேறோர் டிமென்ஷனில் இருப்பதாக நினைக்கிறேன்.

குமரன் (Kumaran) said...

நன்றி அமுதா. பழநி பழனி ஆவதைப் போல் இந்நேரத்திற்கு இன்னேரம் எழுத்துப்போலி என்றெண்ணி எழுதினேன். எழுதும் போது கை தயங்கியது. இது சரியா என்று தங்கள் ஆசானைப் பார்க்கும் போது கேட்டுச் சொல்லுங்கள். எனக்கும் இலக்கணத்திற்கும் வெகு தூரம்.

குமரன் (Kumaran) said...

உண்மை தான் திவா ஐயா. ஸ்ட்ரிங்க் தியரியில் நீங்கள் சொன்ன 4 பரிமாணங்கள் உட்கொண்டு இன்னும் மிகுதியான பரிமாணங்களைச் சொல்கிறார்களே. பல்மடியாகச் செல்லும் 11 பரிமாணங்கள் இருக்கின்றன என்றும் சொல்கிறார்கள். இன்னும் ஆழ்ந்து படித்துப் புரிந்து கொள்ள வேண்டும் அதை. அவற்றைப் பற்றி முழுமையாக விஞ்ஞானம் விளக்கும் போது இந்த ஈரேழு பதினான்கு உலகங்கள் அந்தப் பரிமாணங்களில் இருக்கலாமா இல்லையா என்றும் விளங்கலாம்.

தங்களின் ஆன்மிகம்4டம்மீஸைப் படித்துக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு இடுகையாக. பல நாட்களாக.

Geetha Sambasivam said...

ஒவ்வொரு பதிலும் அருமை குமரன், அதிலும் குழந்தைகளின் மூளைச் சலவை பற்றிப் பேசும்போது, மிக அழகாயும், நிதானத்துடனும் எடுத்துச் சொல்லி இருக்கிறீர்கள். இல்லை என்பதும் திணிப்புத் தான் என்பது எனக்கும் தோன்றினாலும் சொன்னால் கடுமையாகத் தெரியுமோ எனத் தவிர்த்தேன், பதில் சொல்லும்போது, நீங்கள் எடுத்துக்காட்டி இருக்கும் விதம் அழகாயுள்ளது.

Geetha Sambasivam said...

என்னைப் பொறுத்த மட்டில் வீட்டில் அனைவருமே, இறை நம்பிக்கையுடன் இருந்தாலும், ஏன், எப்படி, எதுக்கு என்ற கேள்விகளும் பிறந்திருக்கின்றது. கூடியவரையில் எங்களுக்குத் தேவையானவற்றுக்கு விடைகளும் கிடைத்திருக்கின்றன. அதே சமயம் எங்கள் வீட்டிலேயே நாத்திகர்களும், கம்யூனிஸ்ட்களும் இருந்திருக்கின்றனர். பின்னர் மாறியும் இருக்கின்றனர். ஆகவே இது எல்லாம் அப்பா, அம்மா சொல்லிக் கொடுக்கிறதை வைச்சு வரதில்லை, அவரவர்கள் புரிந்துகொள்ளுவதையும், மனப் பக்குவம் வருவதையும், அனுபவங்களையும் வைத்தே வரும்! அப்படித் தான் வருகின்றது.

Geetha Sambasivam said...

//என் நம்பிக்கையைக் கேட்டால் இறைவனும் உலகங்களும் உயிர்களும் என்றுமே காலம் காலமாக இருப்பவர்கள். புதிதாகப் படைக்கப்படுபவர்கள் இல்லை. விளக்கத் தொடங்கினால் விரிவாகச் செல்லும். தத்துவம் கேட்கும் மனநிலை இருந்தால் சொல்லுங்கள். இன்னொரு வாய்ப்பில் பேசுகிறேன்.//
இறைவன் சாடிஸ்ட் இல்லை என்பதே என் முடிவு. ஒவ்வொருவருக்கும் அவரவருக்கு என விதித்தவையை அனுபவித்தே கழிக்க வேண்டி இருக்கிறது. இதற்கு உதாரணம் குசேலரும், ஆதிசங்கரர் வேண்டி நெல்லிக்காய்களை தங்கமாய் வர்ஷிக்க வைத்த பெண்மணியின் கதையும் ஆகும். இங்கே விவரிக்க முடியாது. பதிவாகப் போடுகின்றேன்.

திவாண்ணா said...

//உண்மை தான் திவா ஐயா.//

ஐயா எல்லாம் வேண்டாமையா!
:-))
// ஸ்ட்ரிங்க் தியரியில் நீங்கள் சொன்ன 4 பரிமாணங்கள் உட்கொண்டு இன்னும் மிகுதியான பரிமாணங்களைச் சொல்கிறார்களே. பல்மடியாகச் செல்லும் 11 பரிமாணங்கள் இருக்கின்றன என்றும் சொல்கிறார்கள். //

சந்தேகம். பொறியியல்ல இந்த பாடம் வருதா சும்மா படிச்சீங்களா?

// இன்னும் ஆழ்ந்து படித்துப் புரிந்து கொள்ள வேண்டும் அதை. அவற்றைப் பற்றி முழுமையாக விஞ்ஞானம் விளக்கும் போது இந்த ஈரேழு பதினான்கு உலகங்கள் அந்தப் பரிமாணங்களில் இருக்கலாமா இல்லையா என்றும் விளங்கலாம்.//

விக்கில படிச்சப்ப ரொம்ப ஒண்ணும் புரியல. சாத்தியக்கூறுகள்தான் புரிஞ்சது.

// தங்களின் ஆன்மிகம்4டம்மீஸைப் படித்துக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு இடுகையாக. பல நாட்களாக.//

ஆகா! தெரியாம போச்சே! மௌன வாசகரா? எப்போ வருவீங்களோன்னு எதிர்பார்த்துகிட்டு இல்லே இருக்கேன்!
கேள்வி கேட்க தயங்க மாட்டீங்கதானே?

Kannabiran, Ravi Shankar (KRS) said...
This comment has been removed by the author.
Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஆன்மீகம் என்றால் பதிவுலகில் குமரன்,கே ஆர் எஸ், கீதா, வல்லி, ஜீரா என்று வரிசைக்கட்டி சொல்கிறார்கள்//

யார் சொல்கிறார்கள் உஷாக்கா?
நீங்களும் சொல்றீங்களா என்ன? :)

இயேசு நாதரைப் பற்றியும், நபிகளைப் பற்றியும் அருமையான பதிவுகள் வருகின்றனவே!
சுல்தான் ஐயா-வின் சில பதிவுகளில் தெரியுமே!

கிறிஸ்துக் குழந்தையைப் பாதுகாக்க வீட்டுக் குழந்தைகள் தூங்காமல் எட்டிப் பார்ப்பதை நானும் கிறிஸ்து ஜெயந்திப் பதிவாகப் பதிந்துள்ளேனே!

//மத நம்பிக்கை வேறு ஆன்மீகம் வேறு இல்லையா?//

உஷாக்கா
மதம்=Religion
ஆன்மீகம்=Spirituality
அதனால் தான் மதம் என்று சொல்லாது தமிழ்ச் சமுதாயம் சமயம் என்று சொல்லிற்று!
பக்குவமாகச் சமைப்பதே சமயம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//வெளிப்பார்வைக்கு வெறும் மதத்தைப் பற்றி மட்டுமே பேசுவது போல் தெரிந்தாலும் அவர்கள் பேசுவதெல்லாம் அந்த மதங்களில் இருக்கும் ஆன்மிகத்தையே//

குமரன்
புரிதலுக்கு நன்றி!

உஷாக்கா
ஆன்மீகம் பேசும் போது, சமயமும் கண்ணுக்குத் தெரிவது போல் இருக்கும்! என்ன செய்ய?

பல சமயங்களில் மணத்தை மலரில் தான் வைக்கிறான் இறைவன்!
மணத்தை நுகர, மலர்-"உம்" வேண்டியிருக்கு!
ஆனால் அடியோங்கள் நுகர்வது மணத்தைத் தான்!

எழுதுங் கால் கோல் காணாக் கண்ணே போல் என்ற குறள் தாங்கள் அறியாததா?
கண்ணில் மை எழுதும் போது, மைக்குச்சி கண்னுக்குத் தெரியாது! ஆன்மீகம் பதியும் போது, மதங்கள் மனதுக்குத் தெரியாது!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//எங்கள் வீட்டில் நான் ஆன்மிகத்தில் பற்று கொண்டிருந்தாலும் தினமும் இறைவனை வணங்குவது, அடிக்கடி கோவில் செல்வது போன்றவற்றில் ஈடுபடுவதில்லை//

குமரன்
கோயிலுக்குப் போயே பல மாசம்/வருசம் ஆவுது இங்க!
தாயகம் செல்லும் போது அம்மா அப்பா, நண்பர்களுடன் செல்வதோடு சரி!

சொன்னா நம்ப மாட்டேங்குறாங்க! அடியேன் ஏதோ கோயில்ல தான் குடித்தனம் நடத்திக், கார்ன் ப்ளேக்ஸ் சாப்புடறேன்னு நினைச்சிக்கிறாங்களேப்பா! :))))

ஹூம்....
ஒரு வேளை பதிவுலயே கோயிலுக்குப் போயிக்கறோமோ? :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஆன்மிகம், மதம், மத நம்பிக்கை இவை தீண்டத்தகாதவையாக உங்களுக்குத் தோன்றுவதால் அவற்றை என் குழந்தைகள் என்னிடமிருந்து கற்றுக் கொண்டால் அது உங்களுக்கு திணிப்பாகவும் மூளைச்சலவையாகவும் தோன்றுகிறது//

Eggjactly!
குழந்தைகள் சில சமயங்களில், Thanks/Sorry சொல்லாமல் சென்றால், என்ன வளர்க்கறீங்க பசங்களை? -ன்னு கேப்பாய்ங்க? ஏன் Manners Mania-வைத் திணிக்கறீங்க-ன்னு கேட்பதில்லை! :)

அக்கா,

நான் நாத்திகனாய் இருந்த காலத்தில் வீட்டில் சாமி கும்பிடும் போது வந்து நிக்க மாட்டேன்! படையல் எடுக்கும் போது மொதல்ல போயி நிப்பேன்!:)
அப்பா என்னைய ஒன்னும் சொன்னது கிடையாது! குடும்பமா ஒன்னா சேர்ந்து இருந்தா நல்லா இருக்குமே-ன்னு அம்மா தான் சொல்லிப் பாத்தாங்க! அதுவும் ரெண்டு முறை தான்! அப்பறம் விட்டுட்டாங்க! அப்பறம் ஆன கதை எல்லாம் கொஞ்சமாச்சும் மாதவிப் பந்தல்ல சொல்லிட்டேன்-னு நினைக்கிறேன்! :)

என்னைப் பொறுத்தவரை
குழந்தைகளிடம் எதையும் திணிக்கத் தேவை இல்லை! சிரிக்க மட்டுமே தேவை!

சொல்லித் தரலாம்! அள்ளி அள்ளித் தர வேணாம்!
பார்வையைத் தரலாம்! அவர்கள் பார்த்துக் கொள்ளட்டும்!


Walk the talk and the child walks with you! Child is the father of Man!:)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//எப்போ வருவீங்களோன்னு எதிர்பார்த்துகிட்டு இல்லே இருக்கேன்!
கேள்வி கேட்க தயங்க மாட்டீங்கதானே?
//

திவா சார்
இது வரை உங்க கிட்ட கேள்விக்கே எனக்கு மூச்சு வாங்குது! :)

ஆன்மிகம்4டம்மீஸைப் படிக்காமப் போவோமா?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

@குமரன்
ஒரே ஒரு திருத்தம்
//'குரான், பைபிள் விஷயங்களைப் பேசும் பதிவுகளை ஏன் ஆன்மிகப் பதிவுகள் என்று சொல்வதில்லை' என்று கேட்டிருக்கிறீர்கள். அவர்களையும் ஆன்மிகப் பதிவர்கள் என்று சொல்வதில் தவறில்லை.
//

அவர்களையும் ஆன்மிகப் பதிவர்கள் என்று தான் சொல்ல வேண்டும்!
எந்த மதத்திலும் ஆன்மீகம் உண்டு!
மதம் பற்றிய எந்தப் பொதுவான பதிவிலும், ஆன்மீகம் சில துளிகளாவது இருக்கும்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//உலகைப் படைத்தவன் இறைவன் என்றால் கடவுள் மகா சாடிஸ்ட் இல்லையா?//

யக்கா
உலகைப் படைத்தவன் "இறைவன்" என்றால் "இறைவன்" தானே சாடிஸ்ட்?
"கடவுள்" எப்படி சாடிஸ்ட் ஆவார்?

என்னக்கா, பழி ஓரிடம் பாவம் ஓரிடமா? :)

thenkasi said...

கேள்வி பதில் ஆன்மீகம்,மதம்,கடவுள்,சமுதாயச் சூழ்நிலை மாற்றம்,குழந்தை வளர்ப்பு முதலிய பல செய்திகளை விளக்கியுள்ளது.நன்றி.

thenkasi said...

ஐயா ஒரு செய்தி குஜராத் மாநிலத்தில் ஒரு அன்பர் கோவில்களில் அபிசேகம் செய்யப் படும் நீரை வடிகால் வடிவமைத்து மழைநீர் சேகரிப்பாய் மாற்றி சாதனை புரிந்துள்ளதாக படித்தேன்.

அதே மாதிரி அபிசேகம் செய்யப் படும் பாலை மாசு இல்லாமல் திறனுடன் இதே முறையில் குழாய் மூலம் சேகரித்து அங்கு வாழும் ஏழைக் குழந்தைகளுக்கு கொடுப்பதாகவும் செய்தி விரிகிறது.

இதி பற்றி பெருமையாய் வீட்டில் பேசிக் கொண்டிருக்கும் போது என் மகன் ( வயது 21-B.sc)அருமையாய் ஒரு கேள்வி கேட்க அதை உங்களுக்கு
Forward செய்கிறேன். பதில்
சொல்லவும்.

அபிசேகம் பண்ணிய பாலை சேகரிச்சு அதன் பின்னர் ஏழை குழந்தை களுக்கு கொடுப்பதை அதன் முன்னரே கொடுத்தால் கடவுள் மிகவும் ஆனந்தப் படுவாரே!.

இளைஞர்களின் சில வினாக்களுக்கு விளக்கமான பதில் .

Geetha Sambasivam said...

//அபிசேகம் பண்ணிய பாலை சேகரிச்சு அதன் பின்னர் ஏழை குழந்தை களுக்கு கொடுப்பதை அதன் முன்னரே கொடுத்தால் கடவுள் மிகவும் ஆனந்தப் படுவாரே!.//

திரு தென்காசி, யார் சொன்னது முன்பே கொடுப்பதில்லை என?? கோயிலின் தேவைக்குப் போக மிகுந்திருக்கும் பால், கோயிலின் கோசாலைகளில் இருந்து சேமிக்கப் பட்டு பல பாலவிஹார் களுக்கு விநியோகம் செய்யப் படுகின்றது. இதற்கெல்லாம் சான்றோ, இங்கே போய்ப் பாருங்க, என்றோ சொல்லிக் கொண்டிருந்தால் செய்யும் வேலையை விளம்பரம் செய்வது போல் ஆகிவிடும். அபிஷேகம் செய்த பாலை விநியோகம் செய்வதின் அர்த்தம் அது இறைவனின் திருமேனியில் பட்டு வருவதால் "பிரசாதம்" ஆகிவிடுகின்றது. அதன் மகிமை தனியாகியும் விடுகின்றது அல்லவா??? மேலும் எந்தக் கோயிலிலும் வற்புறுத்திப் பால் அபிஷேகம் செய்யப் பால் கொண்டுவரச் சொல்லுவதும் இல்லை. எத்தனையோ நடிகர்களின் கட்-அவுட்டில் ஊற்றிப் பாலை வீணடிக்கின்றார்களே, அதை என்ன சொல்லுவீர்கள்????? தெரியவில்லை. இறைவனுக்கு நாம் ஒரு துளி கொடுத்தால் அது பல துளியாகத் திரும்பி நமக்கே வரும். இதை அனுபவித்தால் தான் புரியும் ஐயா!! உங்கள் மகனிடம் எடுத்துச் சொல்லுங்கள். வாழ்த்துகள், அருமையான கேள்வியைக் கேட்டதற்கு, சிஷ்யகோடிங்களும் பின்னாலே வந்து இதைவிட அருமையாகவும், தர்க்க ரீதியாகவும் சொல்லுவாங்க, நான் ஆரம்பிச்சு வச்சிருக்கேன், அவ்வளவுதான்! :))))))

குமரன் (Kumaran) said...

நன்றி கீதாம்மா. சில நேரங்கள்ல நிதானமா பேச வந்திருது போல. :-) கேள்வியைப் பாத்தவுடனே தோணுன பதில் தான் அது. ஆனா உடனே சொல்லியிருந்தா கொஞ்சம் கடுமையா வந்திருக்கும்ன்னு நினைக்கிறேன். இப்படி சொல்லலாமா அப்படி சொல்லலாமா என்றெல்லாம் கொஞ்சம் சிந்திச்சுக்கிட்டே இருந்ததால சிந்திச்ச எல்லாத்தையும் எழுதுறப்ப நிதானமா சொன்னதா தோணுது போல. :-)

குமரன் (Kumaran) said...

//பதிவாகப் போடுகின்றேன்.
//

போடுங்க போடுங்க. இராமாயணத்தைத் தான் உங்க வேகத்துக்கு ஈடு கொடுத்துப் படிக்க முடியலை. மத்ததெல்லாம் படிச்சுக்கிட்டு இருக்கேன்.

குமரன் (Kumaran) said...

பெரியவங்களை ஐயான்னு சொல்லாட்டி எப்படிங்க திவா ஐயா. :-)

சும்மா படிச்சது தான் ஐயா. பொறியியல் படிக்கிறப்ப பாடத்துல வந்ததை எங்க படிச்சேன்? வேற இருக்கிறதெல்லாம் தான் படிச்சேன். ஸ்பிரிங்க் தியரியெல்லாம் இப்ப படிச்சுக்கிட்டு இருக்கேன். :-)

இன்னும் பல விஞ்ஞானிகளுக்கே இந்தக் கோட்பாடு புரியலைன்னு நினைக்கிறேன் ஐயா.

மௌன வாசகர் தான். இணையத்தில இருக்கிற நேரம் குறைச்சல்ங்கறதால, அலுவலகத்திற்கு பேருந்தில் போய் வரும் ஒரு மணி நேர பயணத்தின் போது படிக்க பிரதி எடுத்து வைத்துக் கொள்வேன். உங்கள் இடுகைகளும் பிரதியில் இருக்கின்றன. ஒவ்வொன்றாகப் படித்துக் கொண்டு வருகிறேன்.

திவாண்ணா said...

//பெரியவங்களை ஐயான்னு சொல்லாட்டி எப்படிங்க திவா ஐயா. :-)//

நான் அப்படி ஒன்னும் பெரியவன் இல்லை குமரன். வயதில் பெரியவனாக இருக்கலாம். அதற்காக தேவையானால் அண்ணா என்று அழைக்கலாம்.

// சும்மா படிச்சது தான் ஐயா. பொறியியல் படிக்கிறப்ப பாடத்துல வந்ததை எங்க படிச்சேன்? வேற இருக்கிறதெல்லாம் தான் படிச்சேன். ஸ்பிரிங்க் தியரியெல்லாம் இப்ப படிச்சுக்கிட்டு இருக்கேன். :-)//

பொதுவாவே மக்கள் இப்படித்தானே! பள்ளி/ கல்லூரியில் படிக்க வேண்டியதில் மனசு போவதில்லை. அப்புறம் படிக்க ஒரு ஆர்வ இருந்துவிட்டால் மனசுக்கு பிடித்த பல விஷயங்களை படித்து புரிந்து கொள்கிறோம்!

// இன்னும் பல விஞ்ஞானிகளுக்கே இந்தக் கோட்பாடு புரியலைன்னு நினைக்கிறேன் ஐயா.//
உண்மைதான். வளர்ந்து கொண்டு இருக்கிற அறிவியல் இது. சிசு.

// மௌன வாசகர் தான். இணையத்தில இருக்கிற நேரம் குறைச்சல்ங்கறதால, ...... ஒவ்வொன்றாகப் படித்துக் கொண்டு வருகிறேன்.//

பல விஷயங்களை கற்றுக்ககொள்ள நீங்க காட்டுகிற ஆர்வம் பாராட்டத்தக்கது!

திவாண்ணா said...

என்னை பொறுத்தவரை சந்தேகமே இல்லாமல் குழந்தை எப்படி வளர வேண்டும் என்று தீர்மானிப்பது பெற்றோர் கையில்தான் இருக்கிறது. அது குழந்தையாக இருக்கும் வரை. சுய சிந்தனை வளர வளர ஈடுபாடு அதிகமாகலாம் குறையலாம். அதில் பிரச்சினை இல்லை. ஈடுபாடு வளரும் பட்சத்தில் ஒரு நல்ல முன்னேற்றம் சீக்கிரமாகவே கிடைத்துவிடும். (a flying start)

ஆனால் குழந்தைகளுக்கு வழி காட்ட வேண்டுமானால் பெற்றோர் தெளிவாக இருக்க வேண்டும் இல்லையா? கேள்வி கேட்கும் குழந்தையை அடமடக்காமல் உண்மையாக பதில் சொல்வதே போதும்.

குமரன் (Kumaran) said...

விளக்கங்களுக்கும் பதில்களுக்கும் நன்றிகள் இரவிசங்கர்.

திருத்தம் என்று ஏதோ சொல்லியிருக்கிறீர்கள். நான் சொன்னதும் நீங்கள் சொன்னதும் ஒன்று தானே. இதில் திருத்தம் எங்கே வந்தது?

குமரன் (Kumaran) said...

நன்றி திரு.தென்காசி அவர்களே.

நல்ல கேள்வி தான் தங்கள் மகன் கேட்டிருக்கிறார். முதலில் கேட்டவுடன் சரியாகத் தானே கேட்கிறார் என்று தோன்றும் கேள்வி. ஏழைகள் சிரிப்பில் இறைவனைக் காண வேண்டியிருக்க அப்படி செய்தால் இறைவன் மகிழ்வார் என்பது ஏரணத்திற்குரியது தானே என்று தோன்றும். கண்ணனிடம் அருச்சுனன் கீதையின் முதல் அத்தியாயத்தில் சொல்லும் காரணங்களைப் போல. முதல் பார்வையில் பார்த்தன் கேட்பவையெல்லாம்/சொல்பவையெல்லாம் மிகச் சரியெனத் தோன்றும். அப்படி முதல் பார்வைக்கு சரியாகவும் நியாயமாகவும் தோன்றியதை அடுத்து உள்சென்று இன்னும் தெளிவுறுத்தவே கண்ணனுக்கு பதினேழு அத்தியாயங்கள் தேவைப்பட்டன. அடியேன் சிறிய ஞானத்தன். தங்கள் மகன் கேட்கும் கேள்விக்கு யான் என்ன பதில் சொல்வது? வேருக்கு இடும் நீரைப் பற்றியும் இலையில் இடும் நீரைப் பற்றியும் சிந்தித்து எது சிறந்தது என்று பாருங்கள் என்று மட்டும் அவரிடம் சொல்லுங்கள்.

இலவசக்கொத்தனார் said...

வழக்கம் போல உள்ளேன் ஐயா!

திவாண்ணா said...

//வேருக்கு இடும் நீரைப் பற்றியும் இலையில் இடும் நீரைப் பற்றியும் சிந்தித்து எது சிறந்தது என்று பாருங்கள் என்று மட்டும் அவரிடம் சொல்லுங்கள்.//

இந்த ஒரு வரியே போதுமே! மிக நல்ல விளக்கம் குமரன்.
btw என் உண்மை வயதை சொல்லும்படி கூடல் அன்பர் ஒருவர் திருப்பி திருப்பி கேட்டுக்கொண்டு இருக்கிறார்.
இங்கே எனக்கு 90+ என்றூம் உண்மையில் நான் தொண்டு கிழம் என்பதையும் பதிவு செய்கிறேன்.
:-))
தொ.கி

jeevagv said...

மிகவும் சிறப்பான விளக்கங்கள் குமரன். குறிப்பாக மூன்றாம் கேள்விக்கான விளக்கத்தினை ரசித்தேன்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

@திவா சார்
//என் உண்மை வயதை சொல்லும்படி கூடல் அன்பர் ஒருவர் திருப்பி திருப்பி கேட்டுக்கொண்டு இருக்கிறார்//

கூடல் அன்பரா?....
எனக்குத் தெரிஞ்சிப் போச்சுதே!

திவா சார்,
கூடல் தலைவன், பிறை மகுடனா இப்படி எல்லாம் உங்களை வயதைச் சொல்லச் சொல்லி வம்பளப்பது?
சொல்லுங்க...அட்டோ அனுப்பிருவோம்! :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

@குமரன்
நீங்க சொன்னது //ஆன்மிகப் பதிவர்கள் என்று சொல்வதில் தவறில்லை//
இது கொஞ்சம் மேலோட்டமாக, அப்படிச் சொன்னால் தவறில்லை என்பது போல் இருக்கு!

அதனால் தான் திருத்தம் என்றும் சொல்லி //அவர்களை ஆன்மிகப் பதிவர்கள் என்று தான் சொல்ல வேண்டும்!// என்று சொன்னேன்!

Geetha Sambasivam said...

//btw என் உண்மை வயதை சொல்லும்படி கூடல் அன்பர் ஒருவர் திருப்பி திருப்பி கேட்டுக்கொண்டு இருக்கிறார்.
இங்கே எனக்கு 90+ என்றூம் உண்மையில் நான் தொண்டு கிழம் என்பதையும் பதிவு செய்கிறேன்.
:-))
தொ.கி//

who is that black sheep???
யார் அந்தக் கறுப்பு ஆடு??

இரண்டையுமே மேஜர் சுந்தரராஜன் குரலில் சொல்லிக்கவும். :P :P :P

Geetha Sambasivam said...

//கூடல் அன்பரா?....
எனக்குத் தெரிஞ்சிப் போச்சுதே!

திவா சார்,
கூடல் தலைவன், பிறை மகுடனா இப்படி எல்லாம் உங்களை வயதைச் சொல்லச் சொல்லி வம்பளப்பது?
சொல்லுங்க...அட்டோ அனுப்பிருவோம்! :))//

யார் அது குமரன்??? ரகசியமோ?? தெரிஞ்சால் எனக்கும் சொல்லுங்க, நானும் ரகசியமாவே வச்சுக்கறேனே?? :))))))))

குமரன் (Kumaran) said...

உங்கள் விருப்பப்படியே இனிமேல் அண்ணா என்றே அழைக்கிறேன் திவா அண்ணா. ஏற்கனவே தி.ரா.சவும் எஸ்.கேயும் ஐயா கூடாது என்று சொன்னதால் அவர்களை அவர்களின் இனிசியலை மட்டும் வைத்தே விளித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் மரியாதை உள்ளத்தில் இருக்கிறது. அது போலவே இங்கேயும் இருந்து விட்டுப் போகட்டும். :-)

தங்கள் பாராட்டுகளுக்கு நன்றிகள் திவா அண்ணா.

குமரன் (Kumaran) said...

சரியாக சொன்னீர்கள் திவா அண்ணா. குழந்தைக்கு வழிகாட்ட பெற்றோர்கள் தெளிவாக இருக்க வேண்டும். எனக்கு அடிக்கடி வரும் குழப்பம் இது தான். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லும் அளவிற்கு எனக்குத் தெளிவு உண்டா என்பது தான். அப்போதைக்கு என்ன பதிலோ அதனைக் கொஞ்சமே கொஞ்சம் சிந்தித்துச் சொல்லுவேன். இந்தக் கேள்வியெல்லாம் கேட்கக் கூடாது என்றோ 'அது அப்படித் தான்' என்றோ பொய்யான பதிலைச் சொல்வதோ இல்லை.

குமரன் (Kumaran) said...

கொத்ஸ்,

வழக்கம் போல் நன்றி ஐயா. :)

குமரன் (Kumaran) said...

நன்றி திவா அண்ணா. நீங்கள் கூடல் அன்பர் என்று சொன்னவுடன் நானும் பிறைசூடியைத் தான் சொல்கிறீர்களோ என்று நினைத்தேன். ஆனால் இன்னொரு அன்பர் வந்து 'எங்கப்பன் குதிருக்குள்ள இல்லை' என்று சொல்வதைப் பார்த்தால் அவர் தான் உங்களை வற்புறுத்துபவர் என்று தெரிகிறது. :-)

கிழவன், கிழத்தி இவற்றின் பழங்கால பொருளும் தொண்டின் பெருமையும் தெரிந்தவர்கள் எல்லாரும் நீங்கள் தொண்டு கிழவர் என்பதை அறிந்து மகிழ்வார்கள் அண்ணா. மதுரை அன்பர்களுக்கும் அது தெரியும் என்று நினைக்கிறேன். :-)

குமரன் (Kumaran) said...

மிக்க மகிழ்ச்சி ஜீவா. நன்றி.

குமரன் (Kumaran) said...

பிறைமகுடரைப் போல் தெரியவில்லை இரவி. சாம்பசிவமஹிஷியைப் போல் தோன்றுகிறது. அவருக்கும் ஆட்டோ அனுப்ப தயாரா? ஏற்கனவே அவங்க உங்களுக்கு ஆட்டோ அனுப்ப ரெடியாறதா தகவல் வந்திருக்கு. பாத்துக்கோங்க. :-)

//இங்கே நீங்கள் வரிசைப்படுத்தியிருக்கும் பதிவர்கள் வெளிச்சடங்குகளில் உறைந்திருக்கும் ஆன்மிகத்தைப் பேசுகிறார்கள். வெளிப்பார்வைக்கு வெறும் மதத்தைப் பற்றி மட்டுமே பேசுவது போல் தெரிந்தாலும் அவர்கள் பேசுவதெல்லாம் அந்த மதங்களில் இருக்கும் ஆன்மிகத்தையே. அதனால் அவர்களை ஆன்மிகப் பதிவர்கள் என்று சொல்வதில் தவறில்லை.//

இந்த இடத்திலும் 'தவறில்லை' என்று தான் சொல்லியிருக்கிறேன். ஒரே சொல் ஒவ்வொரு இடத்திலும் வெவ்வேறாக ஒலிக்கிறது போலும். :-) இங்கே ஆழமான எண்ணத்தைக் கூறுவது போல் தோன்றும் 'தவறில்லை' என்னும் சொல் அங்கே மேலோட்டமாகச் சொன்னதைப் போல் தோன்றியிருக்கிறது. என்னைப் பொருத்த வரையில் இரண்டு இடங்களிலும் திருத்தம் தேவையில்லை. :-)

குமரன் (Kumaran) said...

பிறைமகுடன்னு சொன்னது நானில்லை கீதாம்மா. அதனால இரகசியத்தை எல்லாம் நீங்கள் எப்போதுமே சிதம்பர இரகசியத்தைப் பத்தி பேசிக்குவீங்களே அவருக்கிட்டேயே கேட்டுக்கோங்க. :-) அவரு ஆட்டோ அனுப்புறதுக்கு முன்னாடி நீங்க சுதாரிச்சுக்கிட்டு அவருக்கு ஆட்டோ அனுப்பிடுங்க. என்ன?! :-)

திவாண்ணா said...

ஏதும் அறியாத மௌலி பாவம் மாடிக்கிட்டாரேன்னு நினைச்சேன்! பரவாயில்லை. எல்லாம் சரியா போச்சு!