Saturday, July 19, 2008

பாட்டும் பொருளும் பொருளால் பொருந்தும் பயனும்


பாட்டும் பொருளும் பொருளால் பொருந்தும் பயனும் என்பால்
கூட்டும் படி நின் கடைக்கண் நல்காய் உளம் கொண்டு தொண்டர்
தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம் தெளிக்கும் வண்ணம்
காட்டும் வெள் ஓதிமப் பேடே சகலகலாவல்லியே!

பாட்டும் பொருளும் பொருளால் பொருந்தும் பயனும் - நல்ல பாடல்களும், அதில் நல்ல பொருளும், அந்த பொருளால் நல்ல நல்ல பயன்களும்

என்பால் கூட்டும் படி நின் கடைக்கண் நல்காய் - என்னிடம் இருந்து உருவாகும் படி உன் கடைக்கண்ணால் பார்த்து அருள் புரிவாய்.

உளம் கொண்டு தொண்டர் தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம் - உள்ளத்தில் உறுதியும் தெளிவும் கொண்டு உன் தொண்டர்கள் தீட்டும் கலைத் தமிழ் தீம்பால் அமுதமானது

தெளிக்கும் வண்ணம் காட்டும் வெள் ஓதிமப் பேடே - மற்றவர்கள் எழுதும் சுவையில்லாதவற்றிலிருந்து பிரித்துக் காட்டி தெளிவிக்கும் (பாலினை நீரிலிருந்து பிரித்துக் காட்டும்) வெண்மையான பெண் அன்னமே

சகலகலாவல்லியே - எல்லாக் கலைகளையும் அருளும் கலைவாணியே.

***

எல்லாராலும் பாட்டு எழுத முடிவதில்லை. அப்படியே பாட்டெழுதினாலும் பொருட்செறிவுடன் எழுத எல்லாராலும் முடிவதில்லை. அப்படியே பொருட் செறிவுடன் எழுதினாலும் எல்லாருக்கும் பயன் தரும் பொருளுடன் எழுத எல்லாராலும் முடிவதில்லை. அப்படி எழுதுவது கலைவாணியின் அருள் உள்ளவருக்கு மட்டுமே முடியும்.

அவள் அருள் பெற்றவர்களும் தமிழ்ப்பாடல்கள் எழுதுவார்கள்; அருள் பெறாதவர்களும் எழுதுவார்கள். அருள் பெற்றவர் எழுதுவது தீம்பால் அமுதமென இருக்கும். மற்றவர் எழுதுவது வெறும் நீரென இருக்கும். அவை இரண்டினையும் பிரித்து நமக்கு தீம்பால் அமுதத்தை தெளிவாக்கிக் கொடுக்கும் அன்னப் பறவை போன்றவள் கலைவாணி.

6 comments:

குமரன் (Kumaran) said...

இந்த இடுகை 'சகலகலாவல்லிமாலை' பதிவில் 6 மார்ச் 2006 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

18 comments:

Natarajan said...
Nalla Pathivu Kumaran.

Kallaivanni arrullal, Nannum yenthau Annavam/Pirar Gongum vaarthaigali kuraaithu Naatuku nallathu seyya veendum.

Anbudan,
Natarajan

6:43 PM, March 06, 2006
--

ஹரிஹரன்ஸ் said...
நன்றாக உளது. குமர குருபரனைப் பற்றியும் ஏதாவது சொல்லுங்களேன், என் போன்றோர்க்கு உதவியாக இருக்கும்... நன்றி

6:56 PM, March 06, 2006
--

குமரன் (Kumaran) said...
நடராஜன். ரொம்ப நாளுக்கு அப்புறம் வந்து படித்து பின்னூட்டம் இட்டதற்கு நன்றி. ஆனால் என்ன சொல்லவருகிறீர்கள் என்பது தங்கிலீஷில் எழுதியதால் புரியவில்லை. கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள், இன்னொரு முறை இந்தப்பக்கம் வந்து இந்த பின்னூட்டத்தைப் படித்தால்.

7:26 PM, March 06, 2006
--

குமரன் (Kumaran) said...
நன்றி ஹரி அண்ணா. சகலகலாவல்லி மாலையில் 10 பாடல்கள் தான் உள்ளது. சீக்கிரம் அந்தப் 10 பாடல்களையும் பார்த்துவிட்டு பின்னர் சகலகலாவல்லிமாலை எழுதிய குமரகுருபரர் பற்றி எழுதுகிறேன்.

7:28 PM, March 06, 2006
--

வெளிகண்ட நாதர் said...
பொருட்செறிவுடன் பாட்டெழுத அருள் படைக்கும் கலைவாணி புகழ் பாடுவோம்!

10:33 PM, March 06, 2006
--

ஹரிஹரன்ஸ் said...
நன்றி. ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்..

1:55 AM, March 07, 2006
--

rnateshan. said...
தங்களுக்கு வாணி சரஸ்வதியின் அருளும் ,கடாட்சமும் மிகவே உள்ளது குமரன்!!!

3:10 AM, March 07, 2006
--

குமரன் (Kumaran) said...
தங்கள் கருத்துக்கு நன்றி வெளிகண்ட நாதர் சார் & நடேசன் சார்.

4:23 AM, March 07, 2006
--

G.Ragavan said...
சொல்வதெல்லாம் தூயதாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் அபிராமி அந்தாதியருக்கு. அந்தச் சொல்லும் வெல்லும் சொல்லாக இருக்க அன்னையை அன்றி யார் அருள்வார் என்று இறைஞ்சி வேண்டுகிறார். அந்தப் பாடலுக்குக் குமரனின் பொருத்தமான எளிய விளக்கமும் அருமை.

5:28 AM, March 07, 2006
--

குமரன் (Kumaran) said...
நன்றி இராகவன். நீங்கள் சொன்னதெல்லாம் சரி தான். ஆனால் இது அபிராமி அந்தாதி இல்லை; சகலகலாவல்லி மாலை. இரண்டுமே அன்னையைப் போற்றுவதால் ஒன்றாகத் தெரிந்துவிட்டதோ உங்களுக்கு? :-)

7:00 AM, March 07, 2006
--

குமரன் (Kumaran) said...
நண்பர் பாரீஸ் யோக நடராஜன் தனக்குத் தமிழில் கணினியில் எழுதத் தெரியாது என்பதால் ஒரு தாளில் கையால் இந்தப் பதிவுக்கு பின்னூட்டம் எழுதி அதனை பி.டி.எஃப் கோப்பாக மாற்றி மின்னஞ்சலில் அனுப்பியிருக்கிறார். அவர் சொல்வது:

பாரீஸ், 07-03- 2006

அன்புடன் குமரனுக்கு,

எளிமையும், இனிமையும் ததும்பும் விளக்கம்! ஒரு கணினிப் பொறி வல்லுனரிடம், இவ்வளவு கனிவான தமிழ்! ஆச்சரியப் படுகிறேன். ஓதிமம் - என்றால் அன்னமா? ... இது ஒரு சமஸ்கிருதச் சொல்லா? அல்லது தூயதமிழ் சொல்லா? ஹம்சம் - என்பது சமஸ்கிருதத்தில் - அன்னம் - என்று கூறுவார்கள். தெளிவு படுத்தவும்.

அடுத்து "தீம்பால்" - எங்கள் ஈழத்தில் சில பகுதிகளில் பசு கன்றீன்றதும், கறக்கும் பாலைத் "தீம்பால்" என்பர். ... சில பகுதிகளில் "கடும்புப்பால்" என்றும் கூறுவார்கள். ... அதை வறுத்துச் சாப்பிடத் தருவார்கள். ஒரு கிறங்கையே கிடைக்கும், மிகச் சுவையாக இருக்கும்! ... உண்மையில் அது கன்றுக்கு இயற்கையாக அளித்த "மருந்து"... என்றே... கூறுவார்கள். ..ஆனால் அதன் சிறப்புக் கருதி ... அதில் பங்கு போட்டு ஓரளவு கறந்து மனிதரும் சாப்பிடும் வழக்கம் வந்துவிட்டது. இதை உணர்ந்து, அறிந்தே - குமரகுருபரர் ... இச்சொல்லை - சேர்த்துள்ளாரா? அதுவும் "தீம்பால் அமுதம்" என்கிறார் - அமுதம் - சாகாவரம் தரும் மருந்து. .. இப்படி... என் சிந்தையில் உதித்தது. அறிந்து கூறவும். தொடரட்டும். நன்றி.

அன்புடன்
யோகன், பாரீஸ்

7:33 AM, March 07, 2006
--

குமரன் (Kumaran) said...
யோக நடராஜன்,

ஓதிமம் என்பது பழந்தமிழ் சொல். அதற்கு அன்னம் என்று பொருள். நீங்கள் சொன்னது மாதிரி ஹம்ஸம் என்பதே அன்னப்பறவைக்கான வடமொழிச் சொல்.

எங்கள் ஊரிலும் கன்று ஈன்றவுடன் பசு சுரக்கும் முதல் பாலுக்கு 'கடும்பால்', 'தீம்பால்' என்று சொல்லுவார்கள். சரியாகப் பிடித்தீர்கள். அந்த பால் நல்ல சுவையாக இருக்கும் என்று சொல்லுவார்கள். குமரகுருபரர் அந்தப் பாலைத் தான் தமிழ்ப் பாடல்களுக்கு இங்கு ஒப்பிடுகிறார் என்று எண்ணுகிறேன். :-)

தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

7:40 AM, March 07, 2006
--

ஜெயஸ்ரீ said...
//
எல்லாராலும் பாட்டு எழுத முடிவதில்லை. அப்படியே பாட்டெழுதினாலும் பொருட்செறிவுடன் எழுத எல்லாராலும் முடிவதில்லை. அப்படியே பொருட் செறிவுடன் எழுதினாலும் எல்லாருக்கும் பயன் தரும் பொருளுடன் எழுத எல்லாராலும் முடிவதில்லை//


பாடும் பாடல் பொருளோடும் பயனோடும் இருக்கவேண்டும் - நல்ல விளக்கம். எளிமையாக, இனிமையாக உள்ளது
கலைவாணியின் கடைக்கண் பார்வை இருந்தால்மட்டுமே காலத்தைவென்ற பாடல்களைப் படைக்க முடியும். அவள் அருளால்தானே கம்பனும், காளிதாசனும், பாரதியும் காலத்தால் அழியாத காவியங்கள் தந்தது.

"வெள்ளை மலர்மிசை வேதக்கருப்பொருள்
ஆக விளங்கிடுவாய்
தெள்ளு கலைத்தமிழ் வாணி நினக்கொரு
விண்ணப்பம் செய்திடுவேன்
எள்ளத்தனைப் பொழுதும் பயனின்றி
இராதென்றன் நாவினிலே
வெள்ளமெனப் பொழிவாய்" - பாரதி

8:34 AM, March 07, 2006
--

குமரன் (Kumaran) said...
நன்றி Jayashree. பொருத்தமான பாரதியார் பாடலைக் கொடுத்ததற்கும் நன்றி. விளக்கம் சொல்லாமல் விட்டுவிட்டீர்களே :-) பாரதியாரின் பாடலுக்கும் விளக்கமா என்று கேட்கிறீர்களா? விதி என்று ஒன்று இருக்கிறதே! அதனால் விளக்கம் (சுருக்கமாகவாவது) சொல்லவேண்டும். :-)

8:39 AM, March 07, 2006
--

Ram.K said...
படம், கவிதை, பொருள் என முக்கனிச்சுவை ஒரே பதிவில் !!!

9:50 AM, March 07, 2006
--

குமரன் (Kumaran) said...
மிக்கனிகளையும் நன்றாகச் சுவைத்தீர்களா இராமபிரசாத் அண்ணா? :-)

10:43 AM, March 07, 2006
--

செல்வன் said...
The picture was great.Looks like tanjore art.Am having class now.Very happy to read about kalaivani before going to class.

10:53 AM, March 07, 2006
--

குமரன் (Kumaran) said...
Great Selvan. May Goddess Saraswathi bless you.

Saraswathi Nama:thubyam varathey kaamaruupini
vidhyaarambam karishyaami; sidhdhir bhavathu mE sathaa

I am praying you Saraswathi. Bless me with boons. You are the form of all wishes. I am starting my studies. With your blessings, Let me become proficient in my studies always.

Yes. That picture is a Tanjaavoor art picture. Got it in google pictures.

10:59 AM, March 07, 2006

Kavinaya said...

கன்று போட்டவுடன் கறக்கும் பாலை "சீம்பால்" னு சொல்லிக் கேட்டிருக்கேன்..

"வெள் ஓதிமப் பேடே" என்பது நல்லாருக்கு.

//எல்லாராலும் பாட்டு எழுத முடிவதில்லை. அப்படியே பாட்டெழுதினாலும் பொருட்செறிவுடன் எழுத எல்லாராலும் முடிவதில்லை. அப்படியே பொருட் செறிவுடன் எழுதினாலும் எல்லாருக்கும் பயன் தரும் பொருளுடன் எழுத எல்லாராலும் முடிவதில்லை. அப்படி எழுதுவது கலைவாணியின் அருள் உள்ளவருக்கு மட்டுமே முடியும்.//

ரொம்ப அழகா சொன்னீங்க குமரா. உங்கள் பணி சிறக்க அன்னை கலைவாணி என்றும் அருளட்டும்!

Kavinaya said...

படமும் மிக அழகு.

திவாண்ணா said...

எல்லாருக்கும் புரிகிற மாதிரின்னும் சேத்து இருக்கலாம். எனக்கே புரியுது!

குமரன் (Kumaran) said...

நன்றி கவிநயா அக்கா.

குமரன் (Kumaran) said...

உண்மை திவா அண்ணா. சொற்சுவையும் பொருட்சுவையும் எளிமையும் அழகும் கொண்ட பாடல்கள் தான் குமரகுருபரர் இயற்றியிருக்கிறார்.