Monday, July 14, 2008

அன்பர் கண்ணும் கருத்தும் நிறைந்தாய் சகலகலாவல்லியே


பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் யான்
எண்ணும் பொழுது எளிது எய்த நல்காய் எழுதா மறையும்
விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலும் அன்பர்
கண்ணும் கருத்தும் நிறைந்தாய் சகலகலாவல்லியே


பண்ணும் - இசையும்

பரதமும் - ஆடலும்

கல்வியும் - எல்லாவிதமான கலைகளும் கல்விகளும்

தீஞ்சொல் பனுவலும் - இனிமையான சொற்கள் நிறைந்து மீண்டும் மீண்டும் (பன்னிப் பன்னிப்) பாடும் படியான பாடல்களும்

யான் எண்ணும் பொழுது எளிது எய்த நல்காய் - நான் நினைத்தவுடனே எளிதாய் எய்துமாறு அருளுவாய்!

எழுதா மறையும் - நூலைச் செய்தவர் யாருமே இல்லாத வேதங்களும்

விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலும் - வான், மண், நீர், நெருப்பு, காற்று என்னும் ஐம்பூதங்களும்

அன்பர் கண்ணும் கருத்தும் நிறைந்தாய் சகலகலாவல்லியே - உன் அன்பர் கண்களிலும் கருத்தினிலும் நிறைந்தாயே கலைவாணியே!

5 comments:

குமரன் (Kumaran) said...

இந்த இடுகை 'சகலகலாவல்லிமாலை' பதிவில் 20 பிப்ரவரி 2006 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

6 comments:

செல்வன் said...
அன்பு குமரன்,

மிகவும் அருமையான விளக்கம்

6:16 PM, February 20, 2006
--

Merkondar said...
அருமையான கருத்துகள்

4:48 AM, February 21, 2006
---

இராமநாதன் said...
//யான் எண்ணும் பொழுது எளிது எய்த நல்காய் //
ஆஹா.. பிரமாதம். எவ்வளவு உண்மை. அருமையான பாடல்.

8:16 AM, February 21, 2006
---

G.Ragavan said...
ஒரு பட்டியல் போட்டிருக்கிறார் குமரகுருபரர்...எங்கெங்கே எங்கெங்கே எங்கெங்கே....என்று...அடுக்கிக் கொண்டே போனவர் கடைசியில் அன்பர் கண்ணும் கருத்தும் நிறைந்தாய் என்று அருமையாக முடித்திருக்கிறார்.

அன்பர் கண்ணில்தான் அன்பிருக்கும். கண்ணிலே அன்பிருந்தால் மட்டுமே தெய்வம் எங்கும் புலப்படும். கருத்தில் நிறைந்திருந்தால்தான் கண்ணில் பட்டது தெய்வம் என்று உணர முடியும்.

சிகப்புக் கல் கண் முன்னே கிடக்கிறது. அதை மாணிக்கம் என்று கருத்தில் உணர்ந்தவந்தான் அந்தக் கல்லைக் கண்ணால் கண்டு கொண்டாட முடியும். மாணிக்கத்தை கருத்தில் அறியாதவனுக்கு கண் முன்னே இருப்பது வெறும் கல்லே.

நான் சொல்ல வந்ததைச் சரியாக எல்லாருக்கும் புரியும் வகைக்குச் சொல்லியிருக்கிறேன் என்று நினைக்கிறேன்.

8:54 AM, February 21, 2006
---

குமரன் (Kumaran) said...
நன்றிகள் செல்வன், என்னார் ஐயா, இராமநாதன்.

9:02 AM, February 21, 2006
--

குமரன் (Kumaran) said...
ரொம்பத் தெளிவாச் சொல்லியிருக்கீங்க இராகவன். மிக்க நன்றி.

9:03 AM, February 21, 2006

Kavinaya said...

அழகான பாடல். அருமையான விளக்கம். நன்றி குமரா.

குமரன் (Kumaran) said...

நன்றி கவிநயா அக்கா.

நம்பிக்கைபாண்டியன் said...

அன்னை சரஸ்வதி புகழ்பாடும் அருமையான பாடல் ! நல்ல விளக்கம்!
ஆன்மீகமணம் கமழும் தங்கள் வலைபதிவு சேவை மேன்மேலும் பரவட்டும்

குமரன் (Kumaran) said...

தங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி நம்பிக்கைப்பாண்டியரே.