Saturday, April 12, 2008

நல்லதே நினைப்போம்! நல்லதே சொல்வோம்!

அண்மைக்காலமாக மனத்தில் ஓடிக்கொண்டிருக்கும் எளிமையான இரு துதிப்பாடல்களை இந்த இனிய சித்திரைத் திங்கள் முதல் நாளில் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்கிறேன்.



ஆனைமுகன் ஆறுமுகன் அம்பிகை பொன்னம்பலவன்
ஞானகுரு வாணியை உள் நாடு.


ஆனைமுகனாம் விநாயகன், ஆறுமுகனாம் திருமுருகன், அம்பிகையாம் அன்னை, பொன்னம்பலவனாம் நடராஜன், ஞானத்தை அருளும் குருநாதர், அறிவை வழங்கும் வாணி இவர்களை உள்ளத்தில் நாடித் துதிப்பாய் (மனமே).

அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா
நிகரில் புகழாய் உலகம் மூன்றும் உடையாய் என்னை ஆள்வானே
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே
புகலொன்றில்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே

நொடிப்பொழுதும் அகன்றிருக்க மாட்டேன் என்று சொல்லி அலர்மேல்மங்கையாம் திருமகள் உறைகின்ற திருமார்பை உடையவனே! நிகரில்லாத புகழை உடையவனே! மேலுலகம், கீழுலகம், நடுவுலகம் என்ற மூன்று உலகங்களையும் உடையவனே! என்னை என்றும் ஆள்பவனே! நிகரில்லாத அமரர்களும் முனிவர்கள் கூட்டங்களும் விரும்பித் தொழுகின்ற திருவேங்கடத்தானே! வேறு கதி ஒன்றுமே இல்லாத அடியேன் உன் திருவடிகளின் கீழ் தஞ்சமாக வந்து அடைந்து அங்கேயே நிலையாக நிற்கின்றேன்.

10 comments:

jeevagv said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் குமரன்.
அலர்மேல்மங்கை மனாளன் பாடல் அழகாக இருந்தது.

குமரன் (Kumaran) said...

நன்றிகள் ஜீவா. உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

அகலகில்லேன் இறையும் என்று என்பது மிகவும் புகழ் பெற்ற திருவாய்மொழிப்பாசுரம். தினந்தோறும் பாடுவது. சின்னவயதில் கற்றுக் கொண்டு இப்போது அடிக்கடி வாய் முணுமுணுப்பது 'ஆனைமுகன் ஆறுமுகன்' பாடல். மொத்தக் குடும்பத்தையும் ஒரே பாட்டில் அதுவும் குறள் வெண்பாவில் கொண்டுவந்துவிட்டார்கள் பாருங்கள். :-)

மெளலி (மதுரையம்பதி) said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் குமரன். பாடல்களை இனிமேல் தான் கேட்க வேண்டும்.

குமரன் (Kumaran) said...

நன்றி மௌலி. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

Geetha Sambasivam said...

புத்தாண்டு வாழ்த்துகள் குமரன், உங்க பதிவுகள் இன்னும் மிச்சம் இருக்கு படிக்க! :))))

குமரன் (Kumaran) said...

நன்றி கீதாம்மா. உங்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். இராமாயணத் தொடர் நிறைவு பெற்ற பின்னர் மெதுவாக வந்து படித்துபாருங்கள். அவக்கரமில்லை (அவசரமில்லை). நானும் சென்ற இருவாரங்களில் நிறைய எழுதிவிடவில்லை.

ஷைலஜா said...

புத்தாண்டுவாழ்த்துகள் குமரன்.அகலகில்லேன் பாடல் என்றும் மனதில் அகலாத பாசுரம்...
சாற்றுமூறை முடியும்போது பெருமாள் கோவில்களில் இந்தப்பாடலோடுதான் பூஜையே நிறைவு பெறும். நன்றி இங்கு இட்டதற்கு.

வல்லிசிம்ஹன் said...

அன்பு குமரன்,
திரு அகலாமல் மாலுடன் உறைவது போல நிம்மதியும்,மகிழ்ச்சியும்,ஆரோக்கியமும் எல்லோருக்கும் எப்போதும் வேண்டும்.
வாழ்த்துகள்.

குமரன் (Kumaran) said...

புத்தாண்டு வாழ்த்துகள் ஷைலஜா.

ஆமாம் நானும் சாற்றுமுறையின் போது நிறைய முறை இந்தப் பாசுரத்தைக் கேட்டிருக்கிறேன். திருவேங்கடமுடையானிடம் நம்மாழ்வார் தஞ்சம் புகும் இந்தப் பாடல் தானே துவய மந்திரத்திற்குப் பொருள் என்று பெரியவர்கள் சொல்வார்கள்.

குமரன் (Kumaran) said...

திருவைப் போல் நீங்காது வாழவேண்டும் என்ற தங்கள் வாழ்த்தைக் கண்டவுடன் 'நமக்கும் திருமகளுக்கும் இன்பனை' என்ற பாசுர வரியும் 'ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்' என்ற வரிகளும் நினைவில் நிற்கின்றன. இந்த அருமையான வாழ்த்திற்கு நன்றிகள்.