Wednesday, August 27, 2008

நிற்க அதற்குத் தக!

அதிகாலை நேரம். திருவள்ளுவர் தன் குடிலில் அமர்ந்திருக்கிறார். புதிதாய் ஒரு மாணவன் நேற்று தான் சேர்ந்தான்.

புதிய மாணவன்: ஐயனே. நான் என்ன செய்ய வேண்டும்?

திருவள்ளுவர்: கற்க

மாணவன் (மனதில்): 'கற்க' என்று ஒற்றைச் சொல்லில் சொல்லிவிட்டாரே. நம்மையும் அதற்காகத்தான் நம் பெற்றோர் அனுப்பியுள்ளனர். ஆனால் ஏன் கற்கவேண்டும் என்று நம் பெற்றோர் சொல்லவில்லை. ஆசானைக் கேட்போம்.

மாணவன்: ஐயா. ஏன் கற்கவேண்டும்?

திருவள்ளுவர்: கசடற

மாணவன் (மனதில்): இதற்கும் ஒரு சொல்லில் பதில். ஆனால் தெளிவான பதில். நம் புத்தி, மனம், சொல், மெய் இவற்றில் உள்ள கசடுகள், குற்றங்கள், அழுக்குகள் நீங்க கற்கவேண்டும் என்று சொல்லிவிட்டார். சரி. அடுத்து ஒரு கேள்வி வருகிறதே.

மாணவன்: ஐயனே, நம் கசடு அற கற்கவேண்டும் என்று அருளினீர். எப்படி கற்கவேண்டும்?

திருவள்ளுவர்: கசடற

மாணவன் (மனதில்): இதற்கும் கசடற என்கிறாரே. நம் குற்றங்கள் நீங்க, படிப்பதைக் குற்றமின்றி படிக்கவேண்டும் என்கிறார் போலும். மிக்க சரி. படிப்பதை தவறான பொருள் கொண்டு எத்தனைப் பேர் படிப்பதாய் கேட்டுள்ளோம். அதைத்தான் ஐயன் குறிப்பிட்டு, குற்றமின்றி கற்க என்கிறார்.

மாணவன்: ஐயா, எதைக் கற்கவேண்டும்.

திருவள்ளுவர்: கற்பவை கற்க

மாணவன் (மனதில்) : கற்பவை கற்க. மூத்தோர் எதனைக் கற்கிறார்களோ அதனைக் கற்க. மூத்தோர் கற்பவை கற்க. மூத்தோர் எதனை கற்கவேண்டும் என்று சொல்கிறார்களோ அதனைக் கற்க. களவும் கற்று மற என்பார்கள். ஆனால் அது 'கற்பவை'யில் அடங்காது. எனவே மூத்தோர் வழி நடந்து அதனையும் அது போன்றவற்றையும் கற்க கூடாது.

மாணவன்: ஐயனே. கற்பவைகளைக் குற்றமின்றி நம் குறைகள் நீங்கக் கற்கவேண்டும் என்று அருளினீர். அப்படி கற்றவுடன் நம் குறைகள் எல்லாம் நீங்கிவிடுமா? இல்லை வேறு எதுவும் செய்ய வேண்டுமா?

திருவள்ளுவர்: கற்றபின் நிற்க அதற்குத் தக.

-------------------------------------------------------------

என் மனதில்: இந்த கடைசியில் சொன்னது தான் நமக்குப் பிரச்சனையே. எத்தனையோ படிக்கிறோம். படிப்பது எளிதாய் இருக்கிறது. அதனை மற்றவர்க்கும் சொல்கிறோம். சொல்லுதல் யார்க்கும் எளிய; அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்ன்னு சொன்னபடி 'நிற்க அதற்குத் தக' தான் நமக்கு கொஞ்சம் ஆட்டம் காண்கிறது. என் செய்ய?

9 comments:

Kavinaya said...

உங்கள் மனதில் மட்டுமில்ல; என் மனதிலும், இன்னும் நிறைய் பேர் மனதிலும் இதேதான் குமரா :( என்ன செய்ய? நல்லா எழுதியிருக்கீங்க (இத வேற தனியா சொல்லணுமா? :)

குமரன் (Kumaran) said...

இந்த இடுகை ஒரு மீள்பதிவு. 06 டிசம்பர் 2005 அன்று கூடலில் இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

19 comments:

Anonymous said...
Kadaisiya sonneengale, mikka sari - evvalavo kathukkalam, ana athu padi nadanthukanume.

Thanks Kumaran,
Kumaresh

December 06, 2005 9:28 AM
--

Anonymous said...
pathivu nanraaka irukkiRathu.

kural koorum kathaikal inge kaanalaam:

http://www.nilacharal.com/stage/kathai/index.html

December 06, 2005 9:43 AM
--

சிங். செயகுமார். said...
குறளும் பொருளும் நல்லா இருக்கு குமரன்!

December 06, 2005 4:49 PM
--

குமரன் (Kumaran) said...
கருத்துக்கு நன்றி குமரேஷ். கற்றபடி நிற்றல் மிகக்கடினமாக இருக்கிறது.

December 06, 2005 8:17 PM
--

குமரன் (Kumaran) said...
நிலாச்சாரல் சுட்டிக்கு மிக்க நன்றி அனானிமஸ். அடுத்த முறை பெயரையும் சொல்லுங்கள்.

December 06, 2005 8:18 PM
--

குமரன் (Kumaran) said...
உங்களுக்கு பிடித்ததா இளங்கவி சிங்.செயகுமார் (சிங்காரகுமரன்). மிக்க மகிழ்ச்சி.

நான் சிறுவயதில் இளங்கவி குமரன் என்று போட்டுக்கொண்டு கவிதைகள் எழுதுவேன். இப்போது 33 வயது ஆகிவிட்டது. அதனால் மதுமிதா அக்கா உங்களுக்கு அந்தப் பட்டத்தை கொடுத்தபோது பேசாமல் இருந்துவிட்டேன். இந்தவயதில் இளங்கவின்னு சொன்னா அடிக்கவருவாங்க. இல்லையா இளங்கவி சிங்காரகுமரன்?

December 06, 2005 8:22 PM
--

G.Ragavan said...
குமரன் இதை நேற்றே படித்தேன். பின்னூட்டம் இடுவதற்கு நேரமாகி விட்டது.

// கற்பவை கற்க. மூத்தோர் எதனைக் கற்கிறார்களோ அதனைக் கற்க. மூத்தோர் கற்பவை கற்க. மூத்தோர் எதனை கற்கவேண்டும் என்று சொல்கிறார்களோ அதனைக் கற்க. களவும் கற்று மற என்பார்கள். ஆனால் அது 'கற்பவை'யில் அடங்காது. எனவே மூத்தோர் வழி நடந்து அதனையும் அது போன்றவற்றையும் கற்க கூடாது. //

மூத்தோர் கற்றவைகளை மட்டும் கற்றால் போதுமா? அப்படி நினைத்து மட்டுமே வள்ளுவர் சொல்லியிருப்பார் என்று நினைக்கின்றீர்களா? மூத்தோர் கற்றதும் கற்று வாழ்விற்குத் தேவையானதனைத்தும் கற்க வேண்டும் என்ற பொருளில் சொல்லியிருப்பார் என்றே நான் நினைக்கிறேன்.

மற்றபடி அருமையான விளக்கம். புதியமுறை. சிறப்பாக இருக்கிறது.

December 07, 2005 2:12 AM
--

குமரன் (Kumaran) said...
வாழ்விற்கு தேவையானதனைத்தும் கற்பவை என்பதில் அடங்கும் இராகவன். ஆனால் தீய பழக்கங்கள் வாழ்க்கைக்குத் தேவையானது போல் தோன்றினாலும் அவை கற்பவையில் அடங்காது என்பதைத் தான் ஒரு உதாரணத்துடன் விளக்கினேன்.

இந்த புதிய முறை விளக்கம் பள்ளியில் படிக்கும் போது எனக்கும் என் தமிழாசியருக்கும் நடந்த உரையாடல். அவர் மரபுன் வழி கசடற என்பதற்கு குற்றமில்லாமல் படிக்கவேண்டும் என்று பொருள் கூறினார். நான் உடனே 'ஐயா. என்ன செய்யவேண்டும் என்பதற்கு வள்ளுவர் "கற்க" என்று சொல்லிவிட்டார். அதற்கடுத்த கேள்வி 'ஏன் செய்யவேண்டும்' என்பதாய்த் தான் இருக்குமே ஒழிய 'எப்படி செய்யவேண்டும்' என்று இருக்காது. அதனால், கசடற என்பதன் பொருள் நம் குற்றம் நீங்க என்பதாய்த் தான் இருக்கவேண்டும்' என்றேன். தமிழாசிரியர் அந்த விளக்கம் கேட்டு மிக்க மகிழ்ந்தார். இது நடந்தது நான் ஏழாம் வகுப்பில் படிக்கும்போது. 7ம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை எனக்கு வந்த இரண்டு தமிழாசிரியர்கள் தமிழார்வத்தை நன்கு ஊட்டி வளர்த்தனர். அவர்களுக்குத் தான் இந்த வலைப்பதிவுகளை எல்லாம் சமர்ப்பிக்கவேண்டும். :-)

December 07, 2005 5:58 AM
--

சிவா said...
குமரன்! இப்போ என்ன திருக்குரளா?. நல்ல நடையில் பொருள் சொல்லிருக்கீங்க. புடிச்சிருக்கு. (தினமும் ஒரு நடையில் போட்டு தாக்கறீங்களே. என்ன விஷேசம்). மற்ற திருக்குறளும் போடுங்க. (தனியா திருக்குரள் ப்ளாக் தொடங்கிரலாமே!)

December 07, 2005 6:10 AM
--

குமரன் (Kumaran) said...
சிவா, நடையும் பொருளும் உங்களுக்குப் பிடித்ததில் மகிழ்ச்சி.

நீங்க இரண்டு ப்ளாக் வச்சுக்கிட்டே ரொம்ப கஷ்டப்படுறீங்க. எனக்கோ 12 ப்ளாக் இருக்கு. இதுல இன்னொரு ப்ளாக் தொடங்குறதா? அப்புறம் வீட்டை விட்டு விரட்டிடுவாங்க.:-)

December 07, 2005 12:25 PM
--

பல்லவி said...
இருந்தாலும் ரொம்ப திறமைசாலி தான் 12
ப்ளாக் ஒரே சமயத்தில் நடத்துவதற்கு.அருமையான் பதிப்பு!

December 08, 2005 9:47 PM
--

குமரன் (Kumaran) said...
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி பல்லவி.

December 09, 2005 6:08 AM
--

Anonymous said...
Good Explanation

May 28, 2006 7:35 AM
--

மலைநாடான் said...
குமரன்!

நல்ல பணி. நல்ல பாணி. இதே முறையில் இலங்கை வானொலியில் சிறுவர் நிகழ்ச்சி நடாத்திய வானொலிமாமா நா.மகேசன் ஈழத்து உரைநடையில் எழுதுவார். அதன் பின்னர் உங்களிடம் அதுபோன்ற ஒரு பாணியைப் பார்த்திருக்கின்றேன். தொடருங்கள்

May 28, 2006 9:47 AM
--

johan-paris said...
குமரா!
விளக்கக் கதை பிரமாதம்; திருவள்ளுவரை மொத்தக் "குத்தகைக்கு" எடுத்தவர் குடும்பம் கூட ;"அதற்குத் தக" நிற்பதாகத் தெரியவில்லை.
"வாய்மை" அதிகாரம்; படிக்கத் தவறிவிட்டார்களோ! அல்லது ஊருக்குபதேசமோ!
யோகன் - பாரிஸ்

May 28, 2006 9:53 AM
--

Sivabalan said...
குமரன்

மிக அழகாக சொன்னீர்கள்.

மிக்க நன்றி

May 28, 2006 10:04 AM
--

குமரன் (Kumaran) said...
நன்றி அனானிமஸ் நண்பரே.

May 29, 2006 7:35 AM
--

குமரன் (Kumaran) said...
பாராட்டுகளுக்கு நன்றி மலைநாடான். வானொலிமாமா நா.மகேசன் அவர்களின் நிகழ்ச்சிகளைக் கேட்டதில்லை. எழுத்துகளைப் படித்ததும் இல்லை. ஏதேனும் சுட்டி கிடைக்குமா?

இந்தப் பாணியில் இந்தக் குறட்பாவை மட்டுமே எழுதியிருக்கிறேன். ஒரு பரிசோதனை முயற்சியே அது. அந்தப் பாணி பலருக்கும் பிடித்திருந்தால் மற்ற குறட்பாக்களையும் இப்படி எழுத முயலலாம்.

May 29, 2006 7:37 AM
--

குமரன் (Kumaran) said...
பாராட்டிற்கு நன்றி யோகன் ஐயா.

May 31, 2006 9:37 PM

குமரன் (Kumaran) said...

இன்னும் நான் இடுகையைப் போட்டு முடிக்கலை. அதுக்குள்ள பின்னூட்டமா? கலக்குறீங்க கவிநயா அக்கா. :-)

நன்றிகள்.

கோவி.கண்ணன் said...

பள்ளியில் படிக்கும் காலத்தில்,

கற்க கசடற கற்றவை கற்றபின்
விற்க எடைக்கு தக !

என்ற மாற்றிச் சொல்வார்கள் !

:)

குமரன் (Kumaran) said...

கோவி.கண்ணன்,

நாங்கள் சொல்வது

கற்க கசடற கற்பவை கற்றபின்
விற்க பாதி விலைக்கே.

:-)

Geetha Sambasivam said...

//சொல்லுதல் யார்க்கும் எளிய; அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்ன்னு சொன்னபடி 'நிற்க அதற்குத் தக' தான் நமக்கு கொஞ்சம் ஆட்டம் காண்கிறது. என் செய்ய? //

சுடுகின்றது உண்மை, நீங்க கோவிக்குச் சொல்லி இருப்பதும் சரிதான், :(((((((

சிவமுருகன் said...

அண்ணா,

நல்லா இருக்கு!

கற்க கசடற கல்கி குமுதம்
கற்ற பின் விற்க எடைக்கு எடைக்கே!

என்பது தான் இன்றைய நிலை (யாருப்பா அது குமுதமா, குமுதம் பக்தியான்னு கேக்குறது?) :-)

குமரன் (Kumaran) said...

ஆமாம் சிவமுருகன். நானும் அந்த குறட்பாவை கேட்டிருக்கிறேன். :-)

குமரன் (Kumaran) said...

கீதாம்மா. உண்மை பல நேரம் கசக்கத் தான் செய்யும் போல.