Thursday, August 21, 2008

*நட்சத்திரம்* - எங்கள் அபிராமி தரிசனம் காண வாரீரே! (அபிராமி அந்தாதி நிறைவு)

அபிராமி அந்தாதிப் பொருளுரை நிறைவாகும் இந்த நல்வேளை! இதுவும் ஒரு வகையில் அப்த பூர்த்தி தான்! Oct 2005-இல் துவங்கிய தேர், பதிவு வீதிகளில் ஆடி ஆடி, இதோ நிலைக்கு வருகிறது! நிறைவுக்கு வருகிறது!
சஷ்டி+அப்த+பூர்த்தி = அறுபது+ஆண்டு+நிறைவு!
அந்தாதிப் பொருளுரையோ, த்ரியப்த பூர்த்தி=மூன்றாண்டு நிறைவு!

இது அப்த பூர்த்தி மட்டுமில்லை! ஆப்த பூர்த்தியும் கூட! விரும்பிய எல்லாம் நிறைவேற்றித் தரும் தமிழ்ப் பனுவல்! நெருப்பின் நடுவே பாடிய நூறு பாடல்கள்! ஆபத்து காலத்தில் OMG என்றோ, Gotcha-ன்னோ அடியேன் வாய்க்கு வருகிறதா? இத்தனைக்கும் பீட்டர் விட்டே பழகிய வாய்! :) அடக் கடவுளே-ன்னோ, அம்மா-ன்னோ தானே வருகிறது!
அதே போல் அபிராமி பட்டருக்கு, நெருப்பின் நடுவிலே, தாய் மொழியில், தெய்வத் தமிழ் மொழியில், துதியும் பனுவலும் இயல்பாகவே வந்து விட்டது!
இத்தனைக்கும் அவர் வடமொழி வித்தகர்! சகல சாஸ்திர பண்டிதர்! இருப்பினும் அம்மா என்று அழைக்கும் போது, அம்மா மொழியில் தானே அழைக்க முடியும்!

விழிக்கே அருள் உண்டு அபிராமவல்லிக்கு வேதம் சொன்ன வழிக்கே வழிபட நெஞ்சு உண்டு என்று பாடி விட்டார் பட்டர்! தோன்றி விட்டாள் அன்னை!
விழிக்கே அருள் உண்டு என்ற....
பாட்டை எடுத்த போது தான், அன்னைத் தோட்டை எடுத்தாள்!
வீசினாள், முக வானிலே சந்திரனைப் பூசினாள்!

ஒரே நேரத்தில், தை அமாவாசையில், பூமிக்கு இரண்டு சந்திரன்கள்!
பட்டருக்கோ அக நிலவிலே அவள் முக நிலவு! மற்றவர்க்கோ வானிலே புற நிலவு!
சாட்சி கேட்கும் புற நிலவு தேய்ந்து விடும்!
ஆனால் நம் அக நிலவும் முக நிலவு மட்டும் தேயவே தேயாது!

வாருங்கள் அபிராமி அந்தாதி பொருளுரையின் இந்த அப்த பூர்த்திக்கு, திருக்கடையூர் சென்று அம்மாவைச் சேவிப்போம்! தார் அமர் கொன்றையும் சண்பக மாலையும் சார்த்தி அழகு பார்ப்போம்!


மயிலாடுதுறை-நாகப்பட்டினம் சாலையில் உள்ள தலம் திருக்கடவூர்! திருக்கடையூர் என்றும் சொல்லலாம்! கடம்=பானை, கலம்! கடை=கடைதல்! எனவே ரெண்டுமே சரி தான்!
கடலைக் கடைந்த போது, அமுதம் கிடைத்த பாத்திரத்துக்குப் பேரு தான், அமிர்த கடம்!
நம் போன்ற உயிர்களுக்கு வேண்டிய அமுதம்/இன்பம் எல்லாம் இருக்கும் கடம் எதுங்க?

இறைவன்! இறைவன் தான் கொள்கலம்! அதில் தான் அமுதம்/இன்பம் கொள்ளும்!
நமக்கு வேண்டும் போது மட்டும், அதில் இருந்து இன்பங்களை எடுத்துக் கொள்கிறோம்! பின்னர் கலத்தை மறந்து விடுகிறோம்! மீண்டும் அடுத்த முறை ஏதாவது நிறைக்க வேண்டி இருக்கும் போது தான, நமக்குக் கலம் தேவைப்படுகிறது!:)

அவரவர் பாப புண்ணியங்களுக்கு ஏற்றவாறு, அமுதம் வழங்கும் அதிகாரி சிவபெருமான்! அதான், ஈசனே கொள்கலமாய், அமிர்தம் கொண்டுள்ள கடமாய் வந்தான்! தன்வந்திரிப் பெருமாள் கைகளிலும், மோகினியின் கைகளிலும் தவழ்ந்தான்!
அந்த அமிர்த கடமே பின்னர் லிங்கமாய் மாறி விட்டது! அதனால் தான் அமிர்த கட ஈஸ்வரர்! அவர் தர்ம பத்தினி அபிராமி அன்னை!

பார்த்தீர்களா? பாற்கடல் கடைந்த போது தான் எத்தனை எத்தனை தத்துவங்கள்! எத்தனை எத்தனை தெய்வ வடிவங்கள்!
கூர்மாவதாரம், நீலகண்டன், அலைமாகள் ஸ்ரீ மகாலக்ஷ்மி, மோகினித் திருக்கோலம், தன்வந்திரிப் பெருமாள், அமிர்த கடம், அமிர்த கட ஈஸ்வரர், அருள்வாமி அபிராமி! - இப்படி தெய்வத் திருவுலா!


சரி, ஏன் அறுபதாம் கல்யாணம், மணி விழா, சஷ்டி அப்த பூர்த்தியைத் திருக்கடையூரில் செய்து கொள்ள நினைக்கிறார்கள்?
இது மார்க்கண்டேயனுக்காக, யமனை வென்ற தலம்! சிரஞ்சீவித் தலம்!
அதான், என்றும் சீரஞ்சீவி-சுமங்கலியாக வாழ்ந்து, இல்லறம் நடாத்த, இங்கு செய்து கொள்கிறார்கள்!
கணவரின்,
59 முடிந்து 60 துவக்கம் = அர்த்த ரத சாந்தி
60 முடிந்து 61 துவக்கம் = சஷ்டி அப்த பூர்த்தி
69 முடிந்து 70 துவக்கம் = பீம ரத சாந்தி
79 முடிந்து 80 துவக்கம் = சதாபிஷேகம்!

யமனை வென்ற ஈஸ்வரன் மிருத்யுஞ் ஜெய ஈஸ்வரன்! பாலாம்பிகை!
அட, அம்பிகை இங்கே எதற்கு வந்தாள்? யமனை வெல்லும் போது கூட அருகில் துணைவி வேண்டும்! துணையை எதிலுமே ஒதுக்குவதில்லை! அழித்தலிலும் இருப்பாள்! ஆக்கத்திலும் இருப்பாள்!!
இப்படி, இந்தத் தலத்தில் இப்படி இரண்டு ஈஸ்வரர்கள்! இரண்டு அம்பிகைகள்!
மிருத்யுஞ்ஜயேஸ்வரர்-பாலாம்பிகை! அமிர்தகடேஸ்வரர்-அபிராமி!!

அறுபதாம் கல்யாணம் செய்து கொள்ள திருக்கடையூர் தான் போக வேணுமா?
அவசியம் இல்லை! அவரவர் நிலைமையைப் பொறுத்தது தான்!
நித்ய கல்யாணமாய் இருக்கும் பல ஆலயங்களிலும் செய்து கொள்ளலாம்!
தினமும் கல்யாணம் நடந்து கொண்டே இருக்கும் தலங்கள் பல! நித்ய சுமங்கலித் தலங்கள் அவை!
சென்னைக்கு அருகே திருவிடந்தை, திருப்பதி திருமலை இங்கெல்லாம் நித்யமும் கல்யாணம் தான்! ஸ்ரீசைலம் மல்லிகார்ஜூன ஈஸ்வரனுக்கும் நித்ய கல்யாணம்!
அவரவர் இல்லத்திலும் செய்து கொள்வார்கள்! எங்கு செய்து கொண்டாலும், அது பெருமாள் கோயிலோ, சிவன் கோயிலோ, வீட்டிலோ,
அங்கு மிருத்யுஞ்ஜயேஸ்வரர்-பாலாம்பிகை ஆகிய இருவரையும், மந்திரப் பூர்வமாகக் கும்பத்தில் ஆவாஹனம் செய்து வைப்பார்கள்!
எப்பவுமே, சங்கரன்-சங்கரிகள் ஆசியோடு தான் இந்த விழா!


வாருங்கள்...
அதோ கோயில் யானை மாலையுடன் வரவேற்கிறது! கஜ பூஜை முடித்து, பின்னர் கோ பூஜையில் அன்னை மகாலஷ்மியை வளமுடன் வேண்டிக் கொள்வோம்! ஆலயத்துக்குள் நுழைந்து விட்டோம்!

கள்ள வாரணப் பிள்ளையாரைத் தரிசித்து, பின்னர் மிருத்யுஞ்ஜயேஸ்வரர்-பாலாம்பிகையைச் சேவிப்போம்! நீண்ட ஆயுளுடன், நிறைந்த ஆயுளையும் அருள வணங்கி மகிழ்வோம்!

இதோ அப்பனின் சன்னிதி!
அமிர்த கடேஸ்வரன் குடம் போலவே தெரிகிறான்!
வழியில் இது என்ன இம்புட்டு மல்லிக் கொடிகள்? ஜாதி மல்லி தான் தல விருட்சம்!
மோகினித் திருக்கோலத்துக்கு உகந்த மலர் ஜாதி மல்லி அல்லவா? மலர்கள் சுவாமிக்கு மட்டுமே சார்த்தப்படுகின்றன!
தேவார மூவரும் அப்பனைப் பாடி உள்ளார்கள்! திருநீற்றுப் பிரசாதம் தரித்துக் கொண்டு, அம்மாவைப் பார்க்கச் செல்லலாமா?


இதோ வந்து விட்டோம்!
அழகிய கண்ணாடி வேலைப்பாடுகள் கொண்ட அபிராம சுந்தரி சன்னிதி!
சாயரட்சை என்னும் மாலை நேரப் பூசை!
சன்னிதி எங்கும் மின்னி மினுக்கும் தீபங்கள்! சாம்பிராணி அகிற் புகை!
செண்டை, கொம்பு, கோல், சங்கு, நாதசுர மங்கல வாத்தியங்கள் முழங்குகின்றன!
மேடையில் அம்பாளுக்குச் செய்ய இருக்கும் சோடஷ உபசாரம்! பதினாறு வகையான உபசரிப்புகள்! தீபகலசம் முதலான பூசைப் பொருட்கள்!

இதோ திரை விலகுகிறது!
ஜகத்ஜோதி, ஜோதி ஸ்வரூபிணியாய், மதிவதன பிம்பமாய் அம்பாள் ஜொலிக்கின்றாளே!
ஆத்தாளை! எங்கள் அபிராம வல்லியை! அண்டம் எல்லாம்
பூத்தாளை! மாதுளம் பூ நிறத்தாளை! புவி அடங்கக்
காத்தாளை! ஐங்கணைப் பாசாங்குசமும் கரும்புவில்லும், அங்கை
சேர்த்தாளை! முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே!

ஐந்தடக்கு தீபத் தட்டு அன்னையின் திருமேனிப் பிரதிட்சணமாய்ச் சுழல்கிறது! எல்லாரும் கூடி இருந்து, குளிர்ந்தேலோ-ன்னு சேவித்துக் கொள்ளுங்கள்!

பாதபத்ம பீடம்! தாமரைத் திருவடிகள்!
வெள்ளி மெட்டி பிஞ்சு விரல்களில் கொஞ்சுகிறது! காற்சிலம்பு மின்னுகிறது!
அம்மாவின் பாதங்களிலே, சேலையின் விசிறி மடிப்பு அருவியாய் வந்து விழுகிறது!
அண்ணனைப் போலவே பச்சைத் திருமேனி! அந்தப் பச்சை மேனியிலே, அரக்குச் சிவப்பிலே, பட்டுச் சீலையிலே பார்வதி ஜொலிக்கின்றாள்!
(பாதாரவிந்த தீப சேவை)

அண்ணன் அபிராமன்! தங்கை அபிராமி!
அவர்களின் தரிசனமே அபி என்னும் இன்பம் கொடுத்து, ரமிக்க வைக்கிறதே!
அபிராம இங்கு வருக! மைந்த வருக! மகனே இனி வருக! என்கண் வருக! எனது ஆருயிர் வருக! வருகவே!

அபய ஹஸ்தம் = அஞ்சேல் எனுமொரு கரம்!
வரத ஹஸ்தம் = வா, தந்தேன் எனுமொரு கரம்!
கரங்களிலே கலகலவென வளை குலுங்க,
புறங்களிலே ஜிலுஜிலுவென பூமாலை தொங்க,

மார்பணியும், கழுத்தணியும், அத்தாணிப் பூணும், அட்டிகையும் தவழ்ந்திலங்க,
பின்னிரு கைகளிலே சக்கரமும், சங்கும் ஏந்திச் சேவை சாதிக்கின்றாள்!
நமஸ்தேஷூ மகாமாயே, ஸ்ரீபீடே, சுர பூஜிதே!
சங்கு சக்ர கதா ஹஸ்தே, மகாலக்ஷ்மீ, நமோஸ்துதே!

(கரதல கமல தீப சேவை)

அம்மாவின் சக்கரத் தோளிலே பச்சைக்கிளி!
சங்குத் தோளிலே செங்கரும்பு!
நித்ய சுமங்கலியின் பச்சைக் கழுத்திலே திவ்யத் திருமாங்கல்யம்!
தம்பதிகளும், காதலரும், இன்னும் எல்லாரும் கண்ணாரச் சேவித்துக் கொள்ளுங்கள்!
சுவாசினிப் ப்ரியே மாதே, செளமாங்கல்ய விவர்தினீ!
மாங்கல்யம் தேஹீ மே நித்யம்! ஸ்ரீ அபிராமீ நமோஸ்துதே!!

(மாங்கல்ய பலப் ப்ரத தீப சேவை)
சர்வ மங்கள மாங்கல்யே! சிவே! சர்வார்த்த சாதிகே!
சரண்யே! த்ரயம்பகே! கெளரீ! நாராயணி நமோஸ்துதே!!


அன்னையின் திருமுக தரிசனம்! கோடி சந்திரக் குளிர் பிரகாசம்!
இவள் தாடங்கம் வீசித் தானா நிலவு உதிக்க வேண்டும்?
உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம், நெற்றியிலே விபூதிச் சுட்டி!
கருவிழிக் கண்கள் கடாட்சித்து நிற்க,
மீன-அக்ஷி, காம-அக்ஷி, விசால-அக்ஷி என்று அனைத்து அன்னையரின் கடைக்கண் பார்வையும், எங்கள் அபிராமியின் கருவிழியிலே!
(நேத்ரானந்த தீப சேவை)

காதிலே தாடங்கம் மின்ன, ஒய்யாரக் கொண்டையிலே ஆண்டாள் கொண்டை அலங்கரிக்க, திருவாசி மாலைகள் பின்னே திகழ,
அபிராம வல்லியின், அருள் கோலம் காணீர்! அருள் கோலம் காணீர்!
சந்திர மண்டல மத்யஸ்தே, மஹா திரிபுர சுந்தரீ!
ஸ்ரீ சக்ர ராஜ நிலையே! ஸ்ரீ அபிராமீ நமோஸ்துதே!!

(பாதாதி கேச பரிமள நீராஞ்சன கர்ப்பூர தீப சேவை)

01. கலையாத கல்வியும்
02. குறையாத வயதும்
03. ஓர் கபடு வாராத நட்பும்
04. கன்றாத வளமையும்
05. குன்றாத இளமையும்
06. கழுபிணியிலாத உடலும்
07. சலியாத மனமும்
08. அன்பகலாத மனைவியும்
09. தவறாத சந்தானமும்
10. தாழாத கீர்த்தியும்
11. மாறாத வார்த்தையும்
12. தடைகள் வாராத கொடையும்
13. தொலையாத நிதியமும்
14. கோணாத கோலும்
15. ஒரு துன்பமில்லாத வாழ்வும்
16. துய்யநின் பாதத்தில் அன்பும்
உதவிப் பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய்!!!!!
அலையாழி அறிதுயில் மாயனது தங்கையே
ஆதிகடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி! அபிராமியே!!


அபிராமியம்பிகா திவ்ய சரணார விந்தயோஹோ,
தீப மங்கள கர்ப்பூர நீராஞ்சனம் தரிசயாமி!


அருள்வாமி அபிராமி திருவடிச் சரணங்களிலே,
திவ்ய மங்கள கர்ப்பூரத் தீப தரிசனம் காண்மின்களே!

இதோ, கர்ப்பூர ஆரத்தியை ஒற்றிக் கொள்ளுங்கள்! அபிராமி அம்மன் திருவடிகளே சரணம் சரணம்!!


நண்பர் குமரன் பணிவோடு சமர்ப்பித்த அபிராமி அந்தாதிப் பொருளுரை சம்பூர்ணம்!

(வரும் புரட்டாசி மாதத்தில், நியூயார்க்கில் இருந்து, திருக்கடவூர் அபிராமவல்லியைத் தரிசிக்க இந்தியப் பயணத் திட்டம்!
அம்மா-அப்பாவின் அப்த பூர்த்தி! ஆசி கூறுவீர்! சுபம்)


**************************************************

அடியேனின் வேண்டுகோளுக்கு இணங்க அபிராமி அந்தாதி பொருளுரையின் நிறைவாக அன்னையின் தெய்வீகத் திருவுருவ தரிசனத்தை நாமெல்லாம் பெறும்படி செய்த நண்பர் இரவிசங்கர் கண்ணபிரானுக்கு அடியேனின் பல நூறு வணக்கங்கள். அன்னையின் ஆரத்தி பாடலை தந்துதவிய கவிநயா அக்காவிற்கு அடியேனின் பணிவான வணக்கங்கள். வாழ்க வளமுடன்!

24 comments:

Kavinaya said...

ஆஹா. நிறைவுப் பதிவு மனசுக்கு மிகவும் நிறைவாக இருந்தது :) மிக்க மகிழ்ச்சி. அமிர்த கடகம் குறித்து அழகான விளக்கம். கோவிலுக்குள் அழைத்துச் சென்று ஒவ்வொரு சேவையாகத் தரிசிக்க வைத்ததும் அருமை. அன்னையின் எழிலைக் காண கண்கோடி இருந்தாலும் போதாவே! அபிராமி அம்மன் திருவடிகள் சரணம் சரணம்!!

அப்பா அம்மாவின் அப்த பூர்த்திக்கு வாழ்த்து சொல்ல வயதில்லை (அட நெசமாத்தான் :) வணங்கிக் கொள்கிறேன்.

உங்கள் இருவருக்கும் மனப்பூர்வமான வாழ்த்துகள். அன்னையின் அருள் அனைவருக்கும் நிறையட்டும்!

மெளலி (மதுரையம்பதி) said...

மிக அருமையான பதிவு...:)

Geetha Sambasivam said...

//நெருப்பின் நடுவே பாடிய நூறு பாடல்கள்! ஆபத்து காலத்தில் OMG என்றோ, Gotcha-ன்னோ அடியேன் வாய்க்கு வருகிறதா? இத்தனைக்கும் பீட்டர் விட்டே பழகிய வாய்! :) அடக் கடவுளே-ன்னோ, அம்மா-ன்னோ தானே //

ரொம்ப நல்லா இருக்கு, அபிராமி தரிசனமும், கஷ்டம் வந்தால் கூடத் தாய்மொழிதான் வரும்கிற உண்மையும் நல்ல பதிவுகளை நட்சத்திரவாரத்தில் தேர்ந்தெடுத்துத் தரீங்க. எல்லாமும் படிச்சேன், பின்னூட்டம் இதுக்கு மட்டுமே! :))))))

மெளலி (மதுரையம்பதி) said...

//அம்மா-அப்பாவின் அப்த பூர்த்தி! ஆசி கூறுவீர்!//

இப்பதிவின் மூலமே அவர்களிடம் ஆசி கோருகிறேன்! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//எல்லாமும் படிச்சேன், பின்னூட்டம் இதுக்கு மட்டுமே! :))))))
//

ஹா ஹா ஹா
கீதாம்மா KRSக்கு மட்டுமே பின்-ஊட்டுவாங்க! :))))

Geetha Sambasivam said...

//நல்ல பதிவுகளை நட்சத்திரவாரத்தில் தேர்ந்தெடுத்துத் தரீங்க. எல்லாமும் படிச்சேன், பின்னூட்டம் இதுக்கு மட்டுமே! :))))))//

ithai padikkalai KRS??? அதுக்குள்ளே குதிச்சா எப்படி???? தேர்ந்தெடுத்த குமரனுக்கே பாராட்டைத் தெரிவிச்சுக்கறேன்! :P :P :P :P :P

Geetha Sambasivam said...

//(வரும் புரட்டாசி மாதத்தில், நியூயார்க்கில் இருந்து, திருக்கடவூர் அபிராமவல்லியைத் தரிசிக்க இந்தியப் பயணத் திட்டம்!
அம்மா-அப்பாவின் அப்த பூர்த்தி! ஆசி கூறுவீர்! சுபம்)//

இதையும், அப்புறம்

//அடியேனின் வேண்டுகோளுக்கு இணங்க அபிராமி அந்தாதி பொருளுரையின் நிறைவாக அன்னையின் தெய்வீகத் திருவுருவ தரிசனத்தை நாமெல்லாம் பெறும்படி செய்த நண்பர் இரவிசங்கர் கண்ணபிரானுக்கு அடியேனின் பல நூறு வணக்கங்கள்//

இதையும் படிச்சுட்டே பின்னூட்டினேன். சஷ்டி அப்த பூர்த்தி யாருக்குனு புரிஞ்சுட்டே, அதனாலேயும் எழுத்து நடையிலே இருந்தும் எழுதினது யாருனு தெரிஞ்சேதான் பின்னூட்டம் கொடுத்தேன். இப்போ ஓகே????????? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

தி. ரா. ச.(T.R.C.) said...

கோவிலுக்குள் அழைத்துச் சென்று ஒவ்வொரு சேவையாகத் தரிசிக்க வைத்ததும் அருமை

அருமை.உலா வரும் ஒளிக்க்கதிர் மாதிரியே இருந்தது.

ஷஷ்டி அப்த பூர்த்திக்கு நான் உண்டா?

தி. ரா. ச.(T.R.C.) said...

@கவி நயா வாழ்த்து சொல்ல வயதில்லை (அட நெசமாத்தான் :) வணங்கிக் கொள்கிறேன்
இது நல்ல இல்லை இதையேத்தான் ஒரு 10 வயது குழந்தை பிறந்தநாள் போதும் சொல்லிறீங்க....

Raghav said...

அன்னையின் பாதங்களை பணிய இன்னுமொரு வாய்ப்பு. நன்றி குமரன், நன்றி ரவி அண்ணா. "பூங்குழலாள் அபிராமி கடைக்கண்கள்" சேவித்து பாதம் பணிகின்றேன்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கீதா சாம்பசிவம் said...
ithai padikkalai KRS??? அதுக்குள்ளே குதிச்சா எப்படி???? தேர்ந்தெடுத்த குமரனுக்கே பாராட்டைத் தெரிவிச்சுக்கறேன்! :P :P :P :P :P//

அப்ப கூட பாருங்க!
பாராட்டு மட்டும் தான் குமரனுக்காம்!
பின்னூட்டம் எனக்குத் தானாம்! :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கீதா சாம்பசிவம் said...
எழுத்து நடையிலே இருந்தும் எழுதினது யாருனு தெரிஞ்சேதான் பின்னூட்டம் கொடுத்தேன். இப்போ ஓகே????????? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்//

அப்பாடா!
நன்றி தலைவியே!
ஒரு ஸ்டார் வீக்குல கர்ர்ர்ர்ர் வாங்க எம்புட்டு பாடுபட வேண்டி இருக்கு? :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//தி. ரா. ச.(T.R.C.) said...
கோவிலுக்குள் அழைத்துச் சென்று ஒவ்வொரு சேவையாகத் தரிசிக்க வைத்ததும் அருமை அருமை.//

நன்றி திராச!

//உலா வரும் ஒளிக்க்கதிர் மாதிரியே இருந்தது//

இப்பல்லாம் DD-ல உலா வரும் ஒளிக்கதிர் வருதா?

//ஷஷ்டி அப்த பூர்த்திக்கு நான் உண்டா?//

ஆகா! என்ன இப்பிடிக் கேட்டுட்டீங்க?
இன்னும் முழுசாத் திட்டமிடலை! ஆல் திட்டம்ஸ் தங்கச்சி டூயிங்! உங்களுக்குப் பயணத் திட்டம் முன்னாடியே சொல்லுறேன்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Raghav said...
அன்னையின் பாதங்களை பணிய இன்னுமொரு வாய்ப்பு. நன்றி குமரன், நன்றி ரவி அண்ணா. "பூங்குழலாள் அபிராமி கடைக்கண்கள்" சேவித்து பாதம் பணிகின்றேன்//

சுபஸ்ய சீக்கிரம்! சுபமஸ்து! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கவிநயா said...
ஆஹா. நிறைவுப் பதிவு மனசுக்கு மிகவும் நிறைவாக இருந்தது :)//

அம்மா-ன்னா ஒங்களுக்கு தானா மனசு நெறைஞ்சிடுமே!
இதுல பாதாதி கேச, மாங்கல்ய தரிசன மகா ஆரத்தி-ன்னா சொல்லவும் வேணுமோ? :)

//அப்பா அம்மாவின் அப்த பூர்த்திக்கு வாழ்த்து சொல்ல வயதில்லை (அட நெசமாத்தான் :) வணங்கிக் கொள்கிறேன்.//

வணக்கம் இப்போதிக்கி கூரியர்-ல அனுப்பி வைக்கிறேன்! credit card number please...:)

//உங்கள் இருவருக்கும் மனப்பூர்வமான வாழ்த்துகள். அன்னையின் அருள் அனைவருக்கும் நிறையட்டும்!//

நன்றிக்கா! நன்றி!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//மதுரையம்பதி said...
மிக அருமையான பதிவு...:)//

சக்தி உபாசகரே
அருமையான பதிவு-ன்னு சொல்லிட்டு எதுக்குச் சிரிச்சீங்க?

Raghav said...

நேற்று தான் திருக்கடையூரில் அமைந்திருக்கும் ஸ்ரீ அமிர்தவல்லி தாயார் சமேத ஸ்ரீ அமிர்த நாராயணப் பெருமாள் திருக்கோயில் பற்றி படித்தேன். இன்று அன்னையும் அமிர்தகடேஷ்வரரும், அன்னை அபிராமியும் காட்சி தந்து அருளியுள்ளனர். திருக்கடையூர் என்றாலே அமுதம் தான் போலும். "என் அமுதினைக் கண்ட கண்கள் வேறொன்றினைக் காணாவே" என்பது போல் எங்கினும் அமுதன் உறை திருக்கடையூர் சென்று நான் சேவிக்க அபிராமி கடைக்கண் காட்டருள வேண்டுகிறேன்.

Kavinaya said...

////@கவி நயா வாழ்த்து சொல்ல வயதில்லை (அட நெசமாத்தான் :) வணங்கிக் கொள்கிறேன்//
//இது நல்ல இல்லை இதையேத்தான் ஒரு 10 வயது குழந்தை பிறந்தநாள் போதும் சொல்லிறீங்க....////

அச்சச்சோ. என்ன திராச ஐயா... இப்படிச் சொல்லீட்டிங்களே என்னை? வேற யார் சொன்னதையோ நான்னு நினைச்சுக்கிடீங்க போல... எப்போதுமே, நான் சொல்வதெல்லாம் உண்மை; உண்மையைத் தவிர வேறில்லை! :)

S.Muruganandam said...

சகல செல்வங்களும் தரும் இமயகிரிராஜ தனயையின் அருட் பாடல்களை அருமையான விளக்கங்களுடன் பதிவிட்ட குமரன்

பாலாம்பிகை உடனுறை அமிர்த ம்ருத்யுஞ்சயர், அபிராமி உடனுறை அமிர்த கடேஸ்வரர் தரிசன்ம் செய்து வைத்த KRS ,

அமபிகைக்கு அற்புத நீராஞ்சனம் பாடிய கவிநயா

வாழ்க பல்லாண்டு. தங்கள் அனைவரின் தொண்டு தொடர அவள் அருள் புரிய பிரார்த்திக்கின்றேன்.

குமரன் (Kumaran) said...

வாழ்த்துகளுக்கு நன்றி கவிநயா அக்கா.

குமரன் (Kumaran) said...

கீதாம்மா.

எல்லா விண்மீன் வார இடுகைகளையும் படித்ததற்கு நன்றிகள். நண்பர் இரவிசங்கர் எழுதிய இந்த இடுகைக்கு மட்டுமாவது பெரிய மனது வைத்து பின்னூட்டம் இட்டீர்களே. நன்றி. :-)

குமரன் (Kumaran) said...

பாராட்டுகளுக்கு நன்றி கீதாம்மா. :-)

குமரன் (Kumaran) said...

நன்றி இராகவ்.

குமரன் (Kumaran) said...

மிக்க நன்றி கைலாஷி ஐயா.