Wednesday, August 06, 2008

திண்டுக்கல் சர்தார், துரை தியாகராஜ் இருவருக்கும் வணக்கம் (கேள்வி பதில் 5)

சர்தார்,

உங்கள் கேள்விகளைப் படித்த போது கரகாட்டக்காரன் கவுண்டமணி செந்தில் நகைச்சுவைக் காட்சி தான் நினைவிற்கு வந்தது. 'எங்கிட்ட ஏன்டா கேட்ட?'ன்னு கவுண்டமணி செந்திலை திருப்பித் திருப்பிக் கேட்டு அடிப்பாரே அது. :-)

நீங்க கேட்டதெல்லாம் கேள்விகள் இல்லை. உங்கள் நம்பிக்கைகள். ஒவ்வொன்னா எடுத்துக்கிட்டு பதில் சொல்லலாம் தான். ஆனால் அதனால் எதுவும் பயனிருக்கப் போவதில்லை. எடுத்துக்காட்டிற்கு தசரதன் செய்தது அசுவமேத யாகம் இல்லை புத்திரகாமேஷ்டி யாகம் என்று சொன்னால் நீங்கள் கேட்கப் போவதில்லை. அது அசுவமேத யாகம் தான் என்று யாராவது எழுதியதை எடுத்துக்காட்டுவீர்கள்; இல்லையேல் புத்திரகாமேஷ்டியையும் கொச்சைப்படுத்த முடிந்தால் அதனையும் கொச்சைப்படுத்திக் காட்டுவீர்கள். அந்த நிலையில் பேசுவதில் பயனில்லை. சரி தானே? :-) அதனால் நீங்கள் பட்டியல் இட்ட அத்தனைக்கும் பதில் இவ்வளவு தான் என்று இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். தவறாக நினைக்காதீர்கள். நன்றிகள். :-)

***

முதல் வருகைக்கு நன்றிகள் துரை தியாகராஜ். வரும் போதே 'நண்பா' என்று விளித்துக் கொண்டு வந்ததற்கும் நன்றிகள் நண்பரே. இதோ உங்கள் கேள்விகளும் அதற்குரிய பதில்களும்.

1. உங்கள் மனதில் எப்போதும் ஓடிக் கொண்டே இருக்கும் விசயம் என்ன?

இது மாறிக் கொண்டே இருக்கும் இல்லையா? இது தான் எப்போதும் ஓடும் விதயம் என்று சொல்ல முடியாதே. இப்போது, இங்கே பதில் எழுதும் போது, ஓடிக் கொண்டிருப்பவை இரு விதயங்கள். ஒன்று அலுவலக வேலையைப் பற்றிய சிந்தனை. இரண்டாவது அடுத்து என்ன பதிவு எழுதலாம் என்ற சிந்தனை.

இதைத் தான் எதிர்பார்த்து இந்தக் கேள்வியைக் கேட்டீர்களா?

2. ஒரு பெண்ணைப் பார்த்தவுடன் 16..18..20..24..28..35..45..50..போதும் என்ன தோன்றும் (வயது) ?

பார்ப்பவனின் பார்வையைப் பொறுத்தது தானே இது. வயது என்பதை விட அந்தப் பெண்ணின் தோற்றமே மனத்தில் சலனத்தை ஏற்படுத்துகின்றது எனக்கு. பார்ப்பதற்கு அழகாக, கலையாக, இருக்கும் பெண்கள் எந்த வயதாக இருந்தாலும் இரண்டாவது முறை பார்க்க வைக்கிறார்கள். இதில் ஒவ்வொரு வயதாக, நீங்கள் பட்டியல் இட்டிருப்பதைப் போல் எடுத்துக் கொண்டு சொல்வதில் எதுவும் வேறுபாடு இருக்காது என்று நினைக்கிறேன்.

பெண்ணைப் பற்றி மட்டுமே நீங்கள் கேட்டிருந்தாலும் அழகான தோற்றம் கொண்ட ஆண்களைப் பார்க்கும் போதும் இது தான் எனக்கு ஏற்படுகிறது. அதனால் ஆணோ பெண்ணோ முதலில் அவர்களின் தோற்றம் தான் கவர்கிறது. பின்னரே தோற்றத்தைத் தாண்டிச் செல்ல முடிகிறது. இது அனைவருக்கும் பொதுவான ஒன்று என்று நினைக்கிறேன். ஆனால் அனைவரும் உணர்ந்த ஒன்றாக இருக்காது என்றும் நினைக்கிறேன் - ஆண்களுக்குப் பெண்கள் தங்களைக் கவர்வது அவர்களது தோற்றத்தால் என்பது தெளிவாகத் தெரிந்திருக்கும்; ஆனால் மற்ற ஆண்களும் தங்களை அவர்களது தோற்றத்தால் தான் கவர்கிறார்கள் என்பதை உணர்ந்திருக்க மாட்டார்கள்; அப்படியே உணர்ந்திருந்தாலும் வெளியே சொல்ல மாட்டார்கள். சரியா? :-)

3. நீங்கள் உங்கள் பெற்றோரை விட மிக எளிதாக பொருளாதார வசதி பெற்றதற்கு ஏதேனும் ஆசிர்வாதம் உள்ளதா?

இல்லை. காலத்தின் சுழற்சியில் மேலே செல்லும் பக்கத்தில் நான் இருக்கிறேன். மேலும் கீழும் சென்று வரும் காலமென்னும் அலையில் இப்போது நான் இருப்பது மேலெழும்பும் அலையில். அவ்வளவு தான். இந்தச் சுழற்சி இயற்கையானது. அதில் தனிப்பட்ட ஆசி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

இதே கேள்வியை 'உங்களின் நண்பர்கள், உறவினர்கள் என்று வயதிலும், படிப்பிலும், திறமையிலும், வாய்ப்புகளிலும் ஒத்தவர்களை விட நீங்கள் மிக எளிதாக பொருளாதார வசதி பெற்றதற்கு ஏதேனும் ஆசிர்வாதம் இருக்கிறதா' என்று கேட்டிருந்தீர்கள் என்றால் என் பதில் 'ஆமாம்' என்று இருந்திருக்கும். :-)

4. முதலிரவில் நீங்கள் என்ன எண்ண ஓட்டத்தில் இருந்தீர்கள்...?

மறந்து போச்சே. ஏறக்குறைய பத்து வருடங்கள் ஆகிவிட்டன. முதலிரவிற்குப் பின்னர் எத்தனையோ இரவுகள் வந்து சென்று விட்டன. அதனால் எண்ண ஓட்டங்கள் எப்படி இருந்தன என்பதில் ஒரு குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. ஏறக்குறைய என்ன உணர்வுகள் இருந்தன என்று கேட்டால் 'இம்ப்ரஸ் செய்ய வேண்டும்', 'அனுபவிக்க வேண்டும்', 'அவளது உணர்வுகளையும் உணர்ந்து செயல்படவேண்டும்', 'புதுமையாக இருக்கப் போகிறது' போன்ற கலவையான பல உணர்வுகள்/எண்ணங்கள்.

5. உங்கள் உறவினர் மத்தியில் உங்களைப்பற்றி என்ன அபிப்பிராயம் வைத்துள்ளார்கள்?

நல்லவன், அறிவாளி, அதிர்ஷ்டக்காரன், உறவினர்களையும் நண்பர்களையும் பொருட்படுத்தாதவன், அன்புள்ளவன், மரியாதையானவன், பக்திமான், சுயநலவாதி, மற்றவர்களுக்கு உதவுபவன், எடுத்துக்காட்டாக இருப்பவன் (நல்லா படிடா, அப்பத் தான் குமரனை மாதிரி அமெரிக்கா போயி நல்லா சம்பாதிக்கலாம்), .... இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஒவ்வொருவர் பார்வையும் ஒவ்வொரு மாதிரி. :-)

சீக்கிரம் சொல்லுங்கன்னு கேட்டிருந்தீங்க. ஆனால் நான் என்னோட வழக்கமான வழக்கத்தின் படி ரொம்ப நாள் கழித்துப் பதில் சொல்லியிருக்கிறேன். மன்னிச்சுக்கோங்க. :-)

13 comments:

கோவி.கண்ணன் said...

கேள்விகள் மிக பர்சனலாக இருந்தாலும் வெட்கப்படாமல் பொதுவில் பதில் சொல்லி இருக்கீறீர்கள்.

பாராட்டுக்கள் !

மெளலி (மதுரையம்பதி) said...

ஆஹா!...இன்னும் பதில்கள் போஸ்ட் போடறீங்களா?...அப்போ என்னோட கேள்விக்கும் பதில் உண்டுன்னு சொல்லுங்க :-)

உங்க பர்சனல் கேள்விகளையும் சரியாக எதிர் கொண்டது மிகச் சிறப்பு.

குமரன் (Kumaran) said...

பாராட்டுகளுக்கு நன்றி கோவி.கண்ணன்.

இதில் வெட்கப்படுவதற்கு எதுவும் இல்லை என்று நினைக்கிறேன். முடிந்தவரை எல்லை மீறாமல் எழுதியிருப்பதாக எண்ணுகிறேன்.

Kavinaya said...

குமரா. நீங்க க்ரேட்தான்! :) வாழ்க வாழ்க!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

கோவி அண்ணாவுக்கு டிஸ்கி:
மேலே போட்ட சிரிப்பான் வெட்கப்பட்டுப் பேச முடியாமல் போட்டது அல்ல! :)

குமரன் (Kumaran) said...

கட்டாயம் நீங்கள் கேட்ட கேள்விக்கும் பதில் சொல்கிறேன் மௌலி. வழக்கம் போல் கொஞ்சம் தாமதம் ஆகிறது. அவ்வளவு தான். :-)

குமரன் (Kumaran) said...

நன்றி கவிநயா அக்கா.

குமரன் (Kumaran) said...

இந்த இடுகைக்குப் புன்சிரிப்பு/பெருஞ்சிரிப்பு மட்டும் தானா இரவிசங்கர்? சரி தான். :-)

இலவசக்கொத்தனார் said...

அழகா பதில் சொல்லி இருக்கீங்க குமரன். கொஞ்சம் உடனுக்குடன் சொல்ல ஆரம்பியுங்க.

இலவசக்கொத்தனார் said...

சர்தார் கேட்ட கேள்விகள் எங்கே? ஒரு சுட்டி குடுத்து இருக்கலாமே...

குமரன் (Kumaran) said...

வாங்க கொத்ஸ். உங்களுக்குப் பிடிக்கிற மாதிரி இடுகை எழுதி ரொம்ப நாளாச்சுன்னு நினைக்கிறேன். சரியா?

நான் உடனுக்குடனே பதில் சொல்லணும்ன்னா நீங்க உடனுக்குடனே இடுகைகளைப் படிச்சிரணும். சரியா? நீங்க இதுக்கு ஒத்துக்கிட்டீங்கன்னா நானும் ஒத்துக்கிறேன். :-)

இனிமே கூடல்ல ஒரு ஏழெட்டு இடுகை வரிசையா வரும். நீங்க ஒழுங்கு மரியாதையா வந்து படிச்சுப் பின்னூட்டம் (ங்கள்) போடுங்க. சரியா?

சர்தார் கேட்ட கேள்விகளுக்குச் சுட்டி தர்ற மாதிரி எண்ணம் இல்லை. அந்தப் பின்னூட்டத்தையும் அழிச்சிட்டேன். மன்னிச்சுக்கோங்க.

சிவபார்கவி said...

வணக்கம் நண்பா,
எனது கேள்விகளுக்கு மிகவும் சிறப்பான பதில்களை அளித்துள்ளீர்கள் மிக்க நன்றி, தங்களைப் போலவே மிக லேட்டாக பதில்களைப் படிக்க முடிந்தது.. மன்னிக்கவும்.

அன்புடன்

குமரன் (Kumaran) said...

கால தாமதம் ஆனாலும் பதில்களைப் படித்துவிட்டீர்கள் என்பதில் எனக்கு மகிழ்ச்சி துரை.