Monday, April 05, 2010

வசன கவிதை - காற்று - 1

பாரதியார் வசன கவிதை என்ற தலைப்பில் சில கவிதைகள் எழுதியுள்ளார். அவை இக்காலப் புதுக்கவிதைகளுக்கு முன்னோடி என்று சொல்லலாம். வடமொழி வேதங்களில் சாமவேதம் மட்டுமே பாடல்களாய் இசையுடன் கூடி இசைப்பதாய் இருக்கிறது. மற்ற மூன்று வேதங்களும் உரைநடையில் தான் இருக்கின்றன. இருக்கு வேதத்தில் உள்ள மாதிரி வசனங்களால் இறைசக்தியை வழிபடும் முறையில் இந்த வசனகவிதைகளும் இருக்கின்றன.

இந்த வசனகவிதைகளை ஒரே பதிவில் இட முடியாது - அவை சற்றே பெரியவை. அதனால் பகுதிகளாக இடலாம் என்று இருக்கிறேன். பெரும்பாலும் விளக்கம் தேவையிருக்காது. எங்கு விளக்கம் தேவையாய் இருக்கலாம் என்று தோன்றுகிறதோ அங்கு விளக்கம் சொல்கிறேன். உங்களுக்கும் ஏதாவது விளக்கம் தோன்றினாலோ அல்லது ஏதாவது கேள்விகள் இருந்தாலோ அதனைப் பின்னூட்டத்தில் இடுங்கள்.

இன்று 'காற்று' என்ற தலைப்பில் உள்ள வசன கவிதையின் முதல் பகுதியைப் பார்க்கலாம்.

************************************

ஒரு வீட்டு மேடையிலே ஒரு பந்தல். ஓலைப் பந்தல். தென்னோலை.

குறுக்கும் நெடுக்குமாக ஏழெட்டு மூங்கிற் கழிகளைச் சாதாரணக் கயிற்றால் கட்டி மேலே தென்னங்கிடுகுகளை விரித்திருக்கிறது.

ஒரு மூங்கிற் கழியிலே, கொஞ்சம் மிச்சக் கயிறு தொங்குகிறது. ஒரு சாண் கயிறு. இந்தக் கயிறு, ஒரு நாள் சுகமாக ஊசலாடிக் கொண்டிருந்தது. பார்த்தால் துளிகூடக் கவலை இருப்பதாகத் தெரியவில்லை. சில சமயங்களில் அசையாமல் 'உம்'மென்றிருக்கும். கூப்பிட்டாற் கூட ஏனென்று கேட்காது.

இன்று அப்படியில்லை. 'குஷால்' வழியிலிருந்தது.

எனக்கும் இந்தக் கயிற்றுக்கும் ஸ்நேஹம். நாங்கள் அடிக்கடி வார்த்தை சொல்லிக்கொள்வதுண்டு.

"கயிற்றினிடத்தில் பேசினால் அது மறுமொழி சொல்லுமா?"

பேசிப்பார், மறுமொழி கிடைக்கிறதா இல்லையா என்பதை.

ஆனால் அது சந்தோஷமாக இருக்கும் சமயம் பார்த்து வார்த்தை சொல்லவேண்டும். இல்லாவிட்டால், முகத்தைத் தூக்கிக்கொண்டு சும்மா இருந்துவிடும், பெண்களைப்போல.

எது எப்படியிருந்தாலும், இந்த வீட்டுக் கயிறு பேசும். அதில் சந்தேகமேயில்லை. ஒரு கயிறா சொன்னேன். இரண்டு கயிறு உண்டு. ஒன்று ஒரு சாண்; மற்றொன்று முக்கால் சாண்.

ஒன்று ஆண்; மற்றொன்று பெண்; கணவனும் மனைவியும். அவையிரண்டும் ஒன்றையொன்று காமப்பார்வைகள் பார்த்துக் கொண்டும், புன்சிரிப்புச் சிரித்துக்கொண்டும், வேடிக்கைப் பேச்சுப் பேசிக்கொண்டும் ரசப்போக்கிலேயிருந்தன.

அத்தருணத்திலே நான் போய்ச் சேர்ந்தேன். ஆண் கயிற்றுக்குக் 'கந்தன்' என்று பெயர். பெண் கயிற்றுக்குப் பெயர் 'வள்ளியம்மை'.

(மனிதர்களைப் போலவே துண்டுக் கயிறுகளுக்கும் பெயர் வைக்கலாம்).

கந்தன் வள்ளியம்மைமீது கையைப்போட வருகிறது. வள்ளியம்மை சிறிது பின் வாங்குகிறது. அந்த சந்தர்ப்பத்திலே நான் போய்ச் சேர்ந்தேன்.

"என்ன, கந்தா, சௌக்கியம்தானா? ஒரு வேளை, நான் சந்தர்ப்பம் தவறி வந்துவிட்டேனோ, என்னவோ! போய், மற்றொரு முறை வரலாமா?" என்று கேட்டேன்.

அதற்குக் கந்தன் :- "அட போடா வைதிக மனுஷன்! உன் முன்னே கூட லஜ்ஜையா? என்னடி வள்ளி, நமது சல்லாபத்தை ஐயர் பார்த்ததிலே உனக்குக் கோபமா?" என்றது.

"சரி, சரி, என்னிடத்தில் ஒன்றும் கேட்க வேண்டாம்" என்றது வள்ளியம்மை.

அதற்குக் கந்தன், கடகடவென்று சிரித்துக் கைதட்டிக் குதித்து, நான் பக்கத்திலிருக்கும்போதே வள்ளியம்மையைக் கட்டிக்கொண்டது.

வள்ளியம்மை கீச்சுக் கீச்சென்று கத்தலாயிற்று. ஆனால் மனதுக்குள்ளே வள்ளியம்மைக்கு சந்தோஷம். நாம் சுகப்படுவதைப் பிறர் பார்ப்பதிலே நமக்குச் சந்தோஷந்தானே?

இந்த வேடிக்கை பார்ப்பதிலே எனக்கும் மிகவும் திருப்தி தான். உள்ளத்தைச் சொல்லி விடுவதிலே என்ன குற்றம்? இளமையின் சல்லாபம் கண்ணுக்குப் பெரியதோர் இன்பமன்றோ?

வள்ளியம்மை அதிகக் கூச்சலிடவே, கந்தன் அதை விட்டுவிட்டது.

சில க்ஷணங்களுக்குப் பின் மறுபடி போய்த் தழுவிக்கொண்டது.

மறுபடியும் கூச்சல், மறுபடியும் விடுதல்; மறுபடியும் தழுவல். மறுபடியும் கூச்சல். இப்படியாக நடந்து கொண்டே வந்தது. "என்ன, கந்தா, வந்தவனிடத்தில் ஒரு வார்த்தைகூடச் சொல்லமாட்டேனென்கிறாய்? வேறொரு சமயம் வருகிறேன். போகட்டுமா?" என்றேன்.

"அட போடா! வைதிகம்! வேடிக்கைதானே பார்த்துக் கொண்டிருந்தாய். இன்னும் சிறிது நேரம் நின்று கொண்டிரு. இவளிடம் சில விவகாரங்கள் தீர்க்க வேண்டியிருக்கிறது. தீர்ந்தவுடன் நீயும் நானும் சில விஷயங்கள் பேசலாம் என்றிருக்கிறேன். போய் விடாதே, இரு" என்றது.

நின்று மேன்மேலும் பார்த்துக் கொண்டிருந்தேன்.

சிறிது நேரம் கழிந்தவுடன், பெண்ணும் இன்ப மயக்கத்திலே நான் நிற்பதை மறந்து நாணத்தை விட்டு விட்டது.

உடனே பாட்டு. நேர்த்தியான துக்கடாக்கள். ஒரு வரிக்கு ஒரு வர்ணமெட்டு.

இரண்டே 'சங்கதி'. பின்பு மற்றொரு பாட்டு. கந்தன் பாடி முடித்தவுடன், வள்ளி. இது முடித்தவுடன், அது மாற்றி மாற்றிப் பாடி - கோலாஹலம்.

சற்றுநேரம் ஒன்றையொன்று தொடாமல் விலகி நின்று பாடிக்கொண்டேயிருக்கும். அப்போது வள்ளியம்மை தானாகவே போய்க் கந்தனைத் தீண்டும்.

அது தழுவிக்கொள்ள வரும். இது ஓடும். கோலாஹலம்! இங்ஙனம் நெடும்பொழுது சென்றபின் வள்ளியம்மைக்குக் களியேறி விட்டது.

நான் பக்கத்து வீட்டிலே தாகத்துக்கு ஜலம் குடித்து விட்டு வரப் போனேன்.

நான் போவதை அவ்விரண்டு கயிறுகளும் கவனிக்கவில்லை.

நான் திரும்பிவந்து பார்க்கும்போது வள்ளியம்மை தூங்கிக் கொண்டிருந்தது. கந்தன் என் வரவை எதிர்நோக்கியிருந்தது.

என்னைக் கண்டவுடன், "எங்கடா போயிருந்தாய் வைதிகம்! சொல்லிக் கொள்ளாமல் போய்விட்டாயே" என்றது.

"அம்மா நல்ல நித்திரை போலிருக்கிறதே?" என்று கேட்டேன்.

ஆஹா! அந்த க்ஷணத்திலே கயிற்றிலிருந்து வெடித்து வெளிப்பட்டு என் முன்னே நின்ற தேவனுடைய மகிமையை என்னென்று சொல்வேன்!

காற்றுத்தேவன் தோன்றினான். அவனுடல் விம்மி விசாலமாக இருக்குமென்று நினைத்திருந்தேன். வைர ஊசி போல் ஒளி வடிவமாக இருந்தது. 'நமஸ்தே வாயோ, த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி'. காற்று, போற்றி, நீயே கண்கண்ட பிரமம்.

அவன் தோன்றிய பொழுதிலே வானமுழுதும் ப்ராண சக்தி நிரம்பிக் கனல் வீசிக் கொண்டிருந்தது.

ஆயிர முறை அஞ்சலி செய்து வணங்கினேன்.

காற்றுத் தேவன் சொல்வதாயினன் :- " மகனே, ஏதடா கேட்டாய்? அந்தச் சிறிய கயிறு உறங்குகிறதா என்று கேட்கிறாயா? இல்லை. அது செத்துப் போய் விட்டது. நான் ப்ராண சக்தி.

என்னுடனே உறவுகொண்ட உடல் இயங்கும். என்னுறவில்லாதது சவம். நான் ப்ராணன். என்னாலேதான் அச்சிறு கயிறு உயிர்த்திருந்தது; சுகம் பெற்றது. சிறிது களைப்பெய்தியவுடனே அதனை உறங்க - இறக்க - விட்டு விட்டேன். துயிலும் சாவுதான், சாவும் துயிலே. யான் விளங்குமிடத்தே அவ்விரண்டும் இல்லை. மாலையில் வந்து ஊதுவேன். அது மறுபடி பிழைத்துவிடும்.

நான் விழிக்கச் செய்கிறேன். அசையச் செய்கிறேன். நான் சக்தி குமாரன். என்னை வணங்கி வாழ்க, என்றான்.

"நமஸ்தே வாயோ த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி. த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்ம வதிஷ்யாமி".

4 comments:

குமரன் (Kumaran) said...

நவம்பர் 23, 2005 அன்று 'பாட்டுக்கொரு புலவன் பாரதி' பதிவில் இடப்பட்ட இந்த இடுகைக்கு வந்த பின்னூட்டங்கள்:

5 comments:

பானுவாசன் said...
பாரதியாரின் வசன கவிதைப்பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன். நன்றி குமரன்.

இப்போதுதான் 50 ஆனது போல் இருந்தது. அதற்குள் 60 ஆ? :-)

November 23, 2005 7:48 AM
--

மதுமிதா said...
தம்பீ குமரா

எனக்கு பிடித்த பாரதியின்
எனக்கு பிடித்த காற்று போட்டதுக்கு நன்றி.

இன்னும் காற்றைப்பற்றி நிறைய இருக்குதேப்பா.

காற்றுவெளி பதிவிற்கு காரணமே பாரதிதான்

November 23, 2005 8:24 AM
--

வெளிகண்ட நாதர் said...
//துயிலும் சாவுதான், சாவும் துயிலே. யான் விளங்குமிடத்தே அவ்விரண்டும் இல்லை.//

நிதர்சன உண்மை! பாரதியால் மட்டுமே இவ்வளவு அழகாக வசனக்கவிதையிலே சொல்லமுடியும்!

November 23, 2005 10:45 AM
--

குமரன் (Kumaran) said...
நீங்கள் கேள்விப்படாததை இங்கு கொடுக்க முடிந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி பானுவாசன். :-)

November 23, 2005 1:42 PM
--

குமரன் (Kumaran) said...
//இன்னும் காற்றைப்பற்றி நிறைய இருக்குதேப்பா.
//ஒவ்வொன்னா வரும் மதுமிதா அக்கா.

'காற்றுவெளியிடைக் கண்ணம்மா' நீங்க தானா? :-)

November 23, 2005 1:43 PM

மங்குனி அமைச்சர் said...

////என்னுடனே உறவுகொண்ட உடல் இயங்கும். என்னுறவில்லாதது சவம். நான் ப்ராணன். என்னாலேதான் அச்சிறு கயிறு உயிர்த்திருந்தது;/////

இதில் உள்ள உட்கருத்து அருமை சார்

குமரன் (Kumaran) said...

நேரடியாகத் தானே இருக்கு. உட்கருத்து என்ன இருக்குன்னு தெரியலையே?!

Tamil said...

மேலும் இதுபோன்ற கவிதைகளை வரிகளை படிக்க 👇

Kaatru kavithai in tamil