Wednesday, December 26, 2012

நற்செல்வன் தங்காய்!




கனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலை வழியே நின்று பால் சோர
நனைத்து இல்லம் சேறு ஆக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழ நின் வாசல் கடை பற்றி
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்!
இனித் தான் எழுந்திராய்! ஈதென்ன பேருறக்கம்?!
அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்!

கன்றுடன் கூடிய இளைய எருமை கனைத்து, தன் கன்றை நினைத்துக் கொண்டு அதற்குப் பசிக்குமே என்று இரங்கி அந்த நினைவினாலேயே பால் மடியிலிருந்து தானே விழ, அந்தப் பாலால் நனைந்தௌ வீடெல்லாம் சேறு ஆகும். அந்த வீட்டை உடைய நற்செல்வனின் தங்கையே!

தலையின் மேல் பனி விழ உன் வாசல் கதவைப் பற்றிக் கொண்டு, தென்னிலங்கைக்கு அரசனான இராவணனைச் சினம் கொண்டு தோற்கடித்த, நம் மனத்துக்கு இனியவனான இராமனை நாங்கள் பாடிக் கொண்டிருக்கிறோம். அதனைக் கேட்டும் நீ வாயைத் திறக்கவில்லை!

இனி மேலாவாது எழுந்திருப்பாய்! இது என்ன இவ்வளவு நீண்ட தூக்கம்?! எல்லா வீட்டுக்காரர்களும் உறக்கம் விட்டு எழுந்துவிட்டார்கள்!

2 comments:

இராஜராஜேஸ்வரி said...

"நற்செல்வன் தங்காய்!"

அழகான திருப்பாவைப் பகிர்வுகள்..

பாராட்டுக்கள்.

குமரன் (Kumaran) said...

நன்றி இராஜராஜேஸ்வரி.