Saturday, December 29, 2012

எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?!



எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?!
சில்லென்று அழையேன்மின்! நங்கைமீர் போதர்கின்றேன்!
வல்லை உன் கட்டுரைகள்! பண்டே உன் வாயறிதும்!
வல்லீர்கள் நீங்களே! நானே தான் ஆயிடுக!
ஒல்லை நீ போதாய்! உனக்கென்ன வேறுடையை?!
எல்லாரும் போந்தாரா? போந்தார்! போந்து எண்ணிக் கொள்!
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்!

அடியே! இளமையான கிளி போன்றவளே! இன்னுமா தூங்குகிறாய்?

கத்தாதீர்கள் பெண்களே! இதோ வருகின்றேன்!

உன் பேச்சு மட்டும் பலமாக இருக்கிறது. உன் வாயைப் பற்றி முன்பே அறிவோம்!

நீங்கள் தான் வாயாடிகள்! என்னையா வாயாடி என்கிறீர்கள்?! சொல்லிவிட்டு போங்கள்!

சீக்கிரம் நீ வருவாய்! உனக்கு வேறு என்ன வேலை இருக்கிறது?!

எல்லாரும் வந்தார்களா?

வந்துவிட்டார்கள்! நீயே வந்து எண்ணிப் பார்த்துக் கொள்!

வலிமையுடைய குவலயாபீடம் என்னும் யானையைக் கொன்றவனை, பகைவர்களின் பகையை அழிக்க வல்லவனை, மாயனைப் பாடுவோம்!

No comments: