Sunday, December 30, 2012

மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்!



நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய
கோயில் காப்பானே! கொடி தோன்றும் தோரண
வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள் திறவாய்!
ஆயர் சிறுமியர் எமக்கு அறை பறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்!
தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான்!
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே அம்மா நீ
நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்!

எங்கள் குலத்திற்குத் தலைவனான நந்தகோபனுடைய அரண்மனையைக் காப்பவனே! அவனது கொடியும் தோரணங்களும் தோன்றும் வாயிலைக் காப்பவனே! மாணிக்கக் கதவைத் தாள் திறப்பாய்!

ஆயர் சிறுமியர்களாகிய எங்களுக்கு வேண்டியதெல்லாம் தருவதாக மாயன் பச்சை மணி போல் நிறம் கொண்டவன் நேற்றே வாக்குறுதி தந்திருக்கிறான்! அதனால் அவனைத் துயில் எழுப்பிப் பாட தூயவர்களாக வந்திருக்கிறோம்! அம்மம்மா! பேசிப் பேசி நேரத்தைக் கடத்தாமல் நீர் அன்பின் வெளிப்பாடான நிலைக்கதவைத் திறப்பாய்!

6 comments:

இராஜராஜேஸ்வரி said...

சிறப்பான பாவைப்பாசுரப்பாடல் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..!

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!

குமரன் (Kumaran) said...

நன்றி இராஜராஜேஸ்வரி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

வவ்வால் said...

குமரன்,

வணக்கம்,நலமா?

ரொம்ப நாளா காணோமேன்னு பார்த்தால்,மார்கழி கச்சேரிய கமுக்கமா ஆரம்பிச்சு இருக்கீங்களே,கச்சேரி களைக்கட்டட்டும்!

மகிழ்வான ஆங்கிலப்புத்தாண்டு ,பொங்கல் வாழ்த்துக்கள்!

S.Muruganandam said...

இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் குமரன்.

குமரன் (Kumaran) said...

வணக்கம் வவ்வால்.

நான் நலம். நீங்கள் நலமா?

இந்த வருடம் (2012) வேலை அதிகமாக இருந்ததால் எழுத இயலவில்லை. வருட இறுதியில் பத்து நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு வீட்டில் உட்கார்ந்து கொண்டிருக்கிறேன். அதனால் கொஞ்சம் எழுத முடிந்திருக்கிறது. :) 2013ல் தொடர்ந்து எழுத இயல வேண்டும்.

உங்களுக்கும் இனிய புத்தாண்டு பொங்கல் நல்வாழ்த்துகள்.

குமரன் (Kumaran) said...

நன்றி கைலாஷி ஐயா. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.