Thursday, December 27, 2012

வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று!




புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமைப் பாடிப் போய்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம் புக்கார்!
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று!
புள்ளும் சிலம்பின காண்! போதரிக் கண்ணினாய்!
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ?! பாவாய் நீ நன்னாளால்!
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்!


கொக்கு வடிவில் வந்த அரக்கனின் வாயைப் பிளந்தவனை, பொல்லாத அரக்கனான கம்சனை கறிவேப்பிலையைக் கிள்ளுவது போல் கிள்ளிக் களைந்தவனை, அவனது புகழை எல்லாம் பாடிக் கொண்டு எல்லா பெண்பிள்ளைகளும் பாவை நோன்பு நோற்கும் களத்தில் நுழைந்துவிட்டார்கள்!

வானத்தில் விடிவெள்ளி எழுந்துவிட்டது! வியாழ கிரகம் மறைந்துவிட்டது! பறவைகளும் பேசத் தொடங்கிவிட்டன!

பூவில் அலையும் வண்டினைப் போன்ற அழகான கண்கள் உடையவளே! உடலும் மனமும் நினைவுகளும் குளிர்ந்து போகும் படி நன்கு குடைந்து நீராடாமல் இன்னும் படுத்துக் கொண்டிருக்கிறாயே?! மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் அல்லவா இன்று? தனியாகச் சென்று இறைவனை வணங்கலாம் என்ற கள்ள எண்ணத்தைத் தவிர்த்து விட்டு இறையடியார்கள் எல்லோருடனும் கலந்து இறைவனை வணங்கலாம் வா!

No comments: