Friday, December 28, 2012

நங்காய்! எழுந்திராய்! நாணாதாய்! நாவுடையாய்!




உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்!
செங்கல் பொடிக் கூறை வெண் பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போகின்றார்!
எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும்
நங்காய்! எழுந்திராய்! நாணாதாய்! நாவுடையாய்!
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக்கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்!

உங்கள் வீட்டுப் புழக்கடையின் இருக்கும் தோட்டத்துக் கிணற்றில் செங்கழுநீர்ப்பூ மலர்ந்து ஆம்பல் பூ கூம்பிவிட்டதைப் பார். அதிகாலை நேரத்தில் நடக்கும் நிகழ்வல்லவா இது?!

செங்கல் பொடியைப் போன்ற நிறத்தை உடைய ஆடையை அணிந்த, வெண்ணிறம் மாறாத பல்லை உடைய தவத்தில் சிறந்தவர், தங்கள் இறைப்பணி செய்யும் திருக்கோவில்களில் இறைப்பணி செய்வதற்காகச் செல்கின்றார்கள்!

எங்களுக்கு முன்னால் எழுந்து எங்களை எழுப்புவேன் என்று வாயாடியாகப் பேசிய பெண்ணே! உனக்கு வெட்கமே இல்லை! வாய் மட்டுமே இருக்கிறது! எழுந்திருப்பாய்!

சங்கும் சக்கரமும் ஏந்திய நீண்ட கைகளை உடைய தாமரைக் கண்ணனைப் பாடுவோம்!

2 comments:

பால கணேஷ் said...

படிக்குந்தொறும் எழும் வியப்பையும் பிரமிப்பையும் இன்னும் அடக்க முடியவில்லை. ஆண்டாளின் கவித்திறன் வியந்து போற்றுதற்கு உரியது. நீங்கள் வைத்திருக்கும் படமும் அழகுக்கு அழகு சேர்க்கிறது. அருமை.

குமரன் (Kumaran) said...

உண்மை பால கணேஷ் ஐயா. எனக்கும் எத்தனை முறை திருப்பாவை, நாச்சியார் திருமொழி முதலிய பாசுரங்களைப் படித்தாலும் அலுப்பதில்லை. ஒவ்வொரு முறையும் புதிய சுவை.