Tuesday, December 25, 2012

புற்று அரவு அல்குல் புனமயிலே!




கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து
செற்றார் திறல் அழியச் சென்று செருச் செய்யும்
குற்றம் ஒன்று இல்லாத கோவலர் தம் பொற்கொடியே!
புற்று அரவு அல்குல் புனமயிலே! போதராய்!
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்து நின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர் பாட
சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்!

கன்றுடன் கூடிய பசுக்கூட்டங்கள் பல வளர்த்து, எதிரிகளின் பெருமை அழியும்படி சென்று போர் செய்யும், குற்றம் ஒன்றும் இல்லாத கோபாலர்களின் பொற்கொடி போன்றவளே! புற்றில் வாழும் பாம்பின் படமெடுத்த தலையைப் போன்று தோன்றும் அழகிய இடையின் கீழ்ப்பகுதியை உடையவளே! பூந்தோட்டத்தில் வசிக்கும் மயிலைப் போன்றவளே1 எழுந்து வருவாய்!

அக்கம் பக்கம் சுற்றிலும் வாழும் தோழியர்கள் எல்லாரும் வந்து உன் வீட்டு முற்றத்தில் புகுந்து நின்று மேக நிறம் கொண்டவனின் திருப்பெயர்களைப் பாடிக் கேட்டும், கொஞ்சமும் அசையாமலும் ஒரு சொல்லும் சொல்லாமலும் செல்வப் பெண்ணே நீ உறங்குகின்றாயே?! இதற்கு என்ன பொருளோ

2 comments:

இராஜராஜேஸ்வரி said...

பூந்தோட்டத்தில் வசிக்கும் மயிலைப் போன்றவளே !

அழகான பதிவுக்குப் பாராட்டுக்கள்..

குமரன் (Kumaran) said...

நன்றி இராஜராஜேஸ்வரி.