Thursday, July 12, 2007

எத்திசையும் புகழ் மணக்க இருந்த பெரும் தமிழணங்கே!


சிந்தாநதி அவர்கள் மனோன்மணீயம் காவியத்தில் திரு.சுந்தரம் பிள்ளை அவர்கள் தமிழ்த்தெய்வ வணக்கம் என்ற தலைப்பில் எழுதியிருக்கும் பகுதியைத் தன் பதிவில் இட்டிருந்தார். அந்தப் பகுதியிருலிருந்து எப்படி தமிழ்த்தாய் வாழ்த்து எடுக்கப்பட்டது என்ற வரலாற்றையும் கொடுத்திருந்தார். அந்தப் பகுதிக்குப் பொருள் உரைத்தால் நலமாக இருக்கும் என்று தோன்றியதால் இந்த சிறு முயற்சி.

நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக்கு எழில் ஒழுகும்
சீராரும் வதனமெனத் திகழ் பரத கண்டம் இதில்
தக்க சிறு பிறைநுதலும் தரித்த நறும் திலகமுமே
தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்
அத்திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ் மணக்க இருந்த பெரும் தமிழணங்கே

நீர் ஆர்ப்பரிக்கும் கடலினை ஆடையாக உடுத்தியிருக்கும் நிலமடந்தைக்கு அழகு கொஞ்சும் பெருமைகள் எல்லால் ஆர்ப்பரிக்கும் வதனம் (முகம்) எனத் திகழ்கிறது பரத கண்டமாகிய இந்தியா. இதில் தக்காணம் (தென்னிந்தியா) அந்த முகத்தில் இருக்கும் அதன் அழகுற்கு ஏற்ற பிறை போல் வளைந்த நெற்றி. திராவிட நல் திருநாடு அந்த நெற்றியில் தரித்திருக்கும் நறுமணம் கமழும் பொட்டு (திலகம்). அந்த கஸ்தூரித் திலக வாசனை போல் அனைத்து உலகத்தாரும் இன்பம் அடைய எல்லாத் திசையும் புகழ் மணக்க என்றும் இருந்த, இருக்கும், இருக்கப் போகும் தமிழ்ப்பெண்ணே.

இந்தப் பகுதியில் உவமையணி நன்கு அமைந்திருக்கிறது.

உலகம் - கடலாடை சூட்டியிருக்கும் நிலமடந்தை
பரத கண்டம் - அந்த நிலமடந்தையின் வதனம்
தக்காணம் - அந்த வதனத்தில் இருக்கும் நெற்றி
திராவிட நாடு - அந்த நெற்றியில் சூட்டிய திலகம்
தமிழ் - அந்தத் திலகத்தின் நறுமணம்.

பல்லுயிரும் பலவுலகும் படைத்து அளித்துத் துடைக்கினும் ஓர்
எல்லையறு பரம்பொருள் முன் இருந்த படி இருப்பது போல்
கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும்
உன் உதரத்து உதித்து எழுந்தே ஒன்று பல ஆயிடுனும்
ஆரியம் போல் உலகவழக்கு அழிந்தொழிந்து சிதையா உன்
சீர் இளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே

பற்பல உயிர்களையும் பற்பல உலகங்களையும் தன்னுள் இருந்து படைத்தும் காத்தும் அழித்தும் எல்லாம் செய்தும் எல்லையில்லா இறைவன் எப்போதும் போல் குறைவின்றி இருப்பது போல் நீ இருக்கிறாய். எப்படி? கன்னடம், இன்பம் கொடுக்கும் தெலுங்கு, அழகு மிகும் மலையாளம், துளு என்று நான்கு மொழிகள் உன் வயிற்றில் இருந்து உதித்து எழுந்து ஒரு மொழி பல மொழி ஆகிவிட்டாலும் வடமொழியாம் ஆரியம் போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து சியாமல் நிற்கும் உன் சிறந்த இளமைத் திறம் தான் என்னே? அதனை வியந்து வியந்து என்ன செய்வது என்பதையே மறந்து வாழ்த்திக்கொண்டே இருக்கிறோம்

இங்கும் உவமை அணி நன்கு அமைகிறது. எல்லா உயிர்களையும் உலகங்களையும் தன்னுள் இருந்து படைத்தும் இறை எப்போதும் இருப்பதே போல் இருக்கின்றது - அது போல் பல மொழிகளைத் தன்னுள் இருந்து படைத்தும் தமிழ் எப்போதும் இருப்பதே போல் இருக்கின்றது. மற்ற மொழிகளைப் போல் அழிந்தொழியவில்லை.

கடல்குடித்த குடமுனி உன் கரை காணக் குருநாடில்
தொடுகடலை உனக்கு உவமை சொல்லுவதும் புகழாமே

கடலினைக் குடித்த குடமுனியாம் அகத்தியர் உன்னைப் படித்து உன் கரையைக் காண குருவினை நாடி உனக்கு வானத்தைத் தொடும் கடலை உவமையாகச் சொல்லுவது உனக்குப் புகழாகுமா? உன் புகழ் பெரும்புகழ். உப்புக்கடலைக் குடிக்கலாம்; ஆனால் தமிழ்க்கடலைக் குடிக்க முடியாது. அது வான் வரை உள்ளது என்கிறார்.

ஒரு பிழைக்கா அரனார் முன் உரை இழந்து விழிப்பாரேல்
அரியது உனது இலக்கணம் என்று அறைவதும் அற்புதமாமே.

ஒரு சிறு பொருட்பிழைக்காக முன்பொரு நாள் சிவபெருமான் என்ன சொல்வது என்று தெரியாமல் நெற்றிக்கண்ணை விழிப்பார் என்றால் இறையான சிவனுக்கே அறிய அரியது உனது இலக்கணம் என்று சொல்லுவதும் அற்புதமா?

விழிப்பார் என்று உலக வழக்கில் இருக்கும் ஒரு சொல்லை சிலேடையாக இங்கே சொல்லியிருக்கிறார்; நெற்றிக்கண்ணை விழித்ததைக் குறிப்பால் உணர்த்தி.

சதுமறை ஆரியம் வரும் முன் சகம் முழுதும் நினதாயின்
முதுமொழி நீ அநாதி என மொழிகுவதும் வியப்பாமே

என்றுமுள்ளன வேதங்கள் என்று சொல்கிறார்கள். அந்த நான்கு மறைகளை உடைய ஆரியம் தோன்றும் முன் உலகம் முழுதிலும் நீ இருந்தாய் என்றால் உன்னை முதுமொழி என்றும் அநாதி என்றும் சொல்லுவதும் வியப்போ?

வேகவதிக்கு எதிர் ஏற விட்டது ஒரு சிற்றேடு
காலநதி நினைக் கரவா காரணத்தின் அறிகுறியே

வேகவதியாம் வைகையில் வேற்று மொழியில் எழுதிய நூல்களையும் தமிழ்ப்பா எழுதிய ஒரு சிற்றேட்டையும் விட்ட போது நதியின் வேகத்திற்கு எதிராக கரை ஏறியது என்றால் அது காலம் எனும் நதி உன்னை மறைக்காமல் (காலவெள்ளத்தில் அழிக்காமல்) விட்ட காரணத்தின் ஒரு அறிகுறியே.

கடையூழி வரும் தனிமை கழிக்கவன்றோ அம்பலத்துள்
உடையார் உன் வாசகத்தில் ஒரு பிரதி கருதினதே

உலகங்கள் எல்லாம் அழிந்து யாருமே இல்லாத போது இறைவன் மட்டுமே தனிமையாக இருப்பான். அந்தத் தனிமையின் துணையாக இருக்க வேண்டியே திருச்சிற்றம்பலம் உடையாரான சிவபெருமான் உன் வாசகமாம் திருவாசகத்தில் ஒரு பிரதி எடுத்து வைத்துக் கொண்டார்.

தக்க வழி விரிந்து இலகும் சங்கத்தார் சிறுபலகை
மிக்க நலம் சிறந்த உன்றன் மெய்ச்சரித வியஞ்சனமே

தக்க நூற்களுக்கு மட்டும் வழி தந்து விரிந்தும் சுருங்கியும் இருக்கும் மதுரைத் தமிழ்ச்சங்கப் பலகை மிகுந்த பெருமை கொண்ட உன் உண்மை வரலாற்றிற்கு ஒரு அடையாளம்.

வியஞ்சனம் - குறிப்பால் உணர்த்தி நிற்கும் அடையாளம்

வடமொழி தென்மொழி எனவே வந்த இரு விழி அவற்றுள்
கொடுவழக்குத் தொடர்பவரே கிழக்கு மேற்கு உணராரே.

கலைமகளுக்கு வடமொழியான ஆரியமும் தென்மொழியான தமிழும் இரு விழிகள். அவற்றிற்கு இடையே கொடிய வழக்கு (சண்டை சச்சரவு) தொடர்பவர்கள் கிழக்கு மேற்கு அறியாதவர்கள் - உலகம் அறியாதவர்கள்.

வீறுடைய கலைமகட்கு விழி இரண்டு மொழியானால்
கூறு வடமொழி வலமாகக் கொள்வார் குணதிசை அறியார்

பெருமை கொண்ட கலைமகளுக்கு விழிகள் இரண்டு மொழிகளும் என்றால் அவற்றில் வடமொழியை அவளின் வலக்கண்ணாகக் கூறுபவர்கள் குணதிசையாம் கிழக்கு எந்த திசை என்று அறியாதவர்கள்.

கலைமகள் தன் பூர்வதிசை காணும் கால் அவள் விழியுள்
வலதுவிழி தென்மொழியாம் மதியாரோ மதியுடையார்

கலைமகள் கிழக்கு நோக்கி நின்றால் அவள் விழிகளுள் வலதுவிழியாக வருவது தென்மொழியாம் தமிழ் தான் என்று அறிவுடையவர் அறியாரோ?

பத்துபாட்டு ஆதி மனம் பற்றினார் பற்றுவரோ
எத்துணையும் பொருட்கிசையும் இலக்கணம் இல் கற்பனையே

பத்துபாட்டு முதலிய நூற்களில் மனம் பற்றியவர்கள் எந்த வகையிலும் பொருள் இல்லாத இலக்கணம் இல்லாத கற்பனைகளைக் கூறும் நூற்களில் மனம் வைப்பார்களோ?

வள்ளுவர் செய் திருக்குறளை மறுவற நன்கு உணர்ந்தவர்கள்
உள்ளுவரோ மநுவாதி ஒருகுலத்துக்கு ஒரு நீதி.

திருவள்ளுவர் செய்த திருக்குறளை குற்றம் இல்லாமல் நன்கு படித்து உணர்ந்து கொண்டவர்கள் மநு முதலிய ஒரு குலத்திற்கு ஒரு நீதி சொல்லும் நூற்களை மனத்தில் கொள்ளுவார்களோ?

மனம் கரைத்து மலம் கெடுக்கும் வாசகத்தில் மாண்டோர்கள்
கனஞ்சடையென்று உருவேற்றிக் கண் மூடிக் கதறுவரோ

மனத்தைக் கரைத்து நம் குற்றங்களை எல்லாம் நீக்கும் திருவாசகத்தில் ஆழ்ந்தவர்கள் கனபாடம் என்று சொல்லி வேதங்களையும் மந்திரங்களையும் உருவேற்றி கண் மூடிக் கதறுவார்களா?

24 comments:

சிவபாலன் said...

குமரன்,

பதிவுக்கு மிக்க நன்றி!

Bee'morgan said...

நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.

Bee'morgan said...

நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.

Anonymous said...

நல்ல விளக்கம். நன்றி

குமரன் (Kumaran) said...

நன்றி சிவபாலன், bee'morgan, சிந்தாநதி.

குமரன் (Kumaran) said...

சிந்தாநதி, நீங்கள் கொடுத்திருந்த முழுப்பாடலும் அதிலிருந்து எப்படி தமிழ்த்தாய் வாழ்த்து எடுக்கப்பட்டது என்ற வரலாறும் தான் இந்த இடுகைக்குத் தூண்டுதல். நீங்கள் சொன்ன வரலாற்றை ஏற்கனவே ஏதோ ஒரு நூலில் படித்திருக்கிறேன்.

வெற்றி said...

குமரன்,
நல்ல விளக்கம். நன்றி.

/*
சதுமறை ஆரியம் வரும் முன் சகம் முழுதும் நினதாயின்
முதுமொழி நீ அநாதி என மொழிகுவதும் வியப்பாமே

...
வள்ளுவர் செய் திருக்குறளை மறுவற நன்கு உணர்ந்தவர்கள்
உள்ளுவரோ மநுவாதி ஒருகுலத்துக்கு ஒரு நீதி. */

இந்த வரிகளைப் படிக்கும் போது மிகவும் பெருமையாக இருக்கிறது.

குமரன் (Kumaran) said...

ஆமாம் வெற்றி. பெருமிதப்படும்படியான வரிகளே அவை. எனக்குப் பிடித்த வரிகள் அரன் விழித்ததைப் பற்றி எழுதியிருக்கிறாரே அதுவும் அம்பலம் உடையார் வாசகத்தின் பிரதி கருதினாரே அதுவும். :-) ஒவ்வொரு சொல்லிலும் எத்தனை எத்தனை பொருள். அப்பப்பா.

G.Ragavan said...

மனோண்மணீயம் சுந்தரம்பிள்ளையின் தமிழாற்றலை நாம் போற்றாமல் இருக்க முடியாது. இந்த நூலின் ஒரு பகுதியை என்னுடைய தமிழாசிரியர் ஒருவர் பாடம் நடத்தினார். மயங்கிக் கிறங்கி ரசித்தேன்.

குமரன் (Kumaran) said...

நீங்கள் சொல்வது எந்தப் பகுதி என்று எனக்கும் நினைவிருக்கிறது இராகவன். எங்கள் தமிழாசிரியரும் அருமையானவர். அப்படிப்பட்ட தமிழாசிரியர்கள் அமைந்ததால் தான் நமக்குத் தமிழில் மேல் ஆர்வம் ஏற்பட்டதோ என்று தோன்றுகிறது. 7ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை கற்றுத்தந்த திரு.சுரேந்திரன் ஐயாவுக்கும் 10, 11, 12ம் வகுப்புகளில் கற்றுத் தந்த திரு. சக்திவேல் ஐயாவிற்கும் ஆயிரம் கோடி வணக்கங்கள்.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கலைமகள் கிழக்கு நோக்கி நின்றால் அவள் விழிகளுள் வலதுவிழியாக வருவது தென்மொழியாம் தமிழ்//

வலப்பக்க விழியாய்த் தமிழை ஏத்துகிறாரே கவிஞர்!

வலப்பக்க விழிக்கு என்ன பெருமை குமரன்? வலக் கண் துடிக்கிறது என்பார்களே...அதுவா?

//7ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை கற்றுத்தந்த திரு.சுரேந்திரன் ஐயாவுக்கும் 10, 11, 12ம் வகுப்புகளில் கற்றுத் தந்த திரு. சக்திவேல் ஐயாவிற்கும் ஆயிரம் கோடி வணக்கங்கள்.//

இப்படி ஒரே ஆசிரியர், அதுவும் நல் ஆசிரியர் தொடர்ந்து எல்லா வகுப்பிலும் அமைவது நற்பேறு!
நானும் என்னைத் "தடுத்தாட் கொண்ட" கவிஞர் மதி சீனிவாசன் ஐயாவை உங்களுடன் சேர்ந்து வணங்கி மகிழ்கிறேன்!

குமரன் (Kumaran) said...

இடப்பக்கத்தை விட வலப்பக்கத்திற்குப் பல விதங்களில் ஏற்றம் சொல்வது தான் மரபாயிற்றே. அந்த மரபுப்படி சொல்கிறார் கவிஞர்.

ஆமாம் இரவிசங்கர். அந்த நற்பேறு தான் நம்மை வாழவைக்கிறது.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
பாச மலர் / Paasa Malar said...

பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றி குமரன்..

குமரன் (Kumaran) said...

சுட்டி கொடுத்தவுடன் வந்து படித்ததற்கு நன்றிகள் பாசமலர்.

அருள் said...

நல்ல பதிவு...
தமிழன்னையின் பெருமையை எத்தனை முறை படித்தாலும் திகட்டாது......விளக்கத்திற்க்கு நன்றி........

குமரன் (Kumaran) said...

படித்துப் பின்னூட்டம் இட்டதற்கு நன்றி அருள்.

cheena (சீனா) said...

வலைச்சரம் மூலம் வந்தேன். படித்தேன் - ரசித்தேன் - விளக்க வுரை அருமை. அழகு தமிழ் கொஞ்சி விளையாடுகிறது. கற்பித்த ஆசிரியர்களை நினைவு கூறுவது நல்ல பண்பு. நல் வாழ்த்துகள். குமரன்.

Anonymous said...

//ஒரு பிழைக்கா அரனார் முன் உரை இழந்து விழிப்பாரேல்
அரியது உனது இலக்கணம் என்று அறைவதும் அற்புதமாமே.//

நக்கீரரின் கதையை ஞாபகப்படுத்தும் இவ்வரிகள் தமிழின் பெருமையை உரைக்கும் விதம் வியப்பளிக்கிறது.

பதிவின் முகப்பிலிருக்கும் தமிழன்னையின் சிற்பம் எங்கிருக்கிறது?

அதன் உருவ விளக்கத்தையும் கூற முடியுமா?

குமரன் (Kumaran) said...

தங்கள் பாராட்டுகளுக்கு நன்றி சீனா ஐயா. ஏதோ என்னால் ஆன சிறு வேலை இது.

குமரன் (Kumaran) said...

வாங்க நவன். ஆமாம். விழிப்பார் என்று இரு பொருளில் (சிலேடையில்) சொல்லியிருப்பதும் சுவை.

நீங்கள் வந்தது பலராமகிருஷ்ணர்களே வந்தது போல் இருக்கிறது. :-)

அந்தத் தமிழன்னையின் சிலை மதுரையில் இருக்கிறது. எம்.ஜி.ஆரால் திறந்து வைக்கப்பட்டது என்று நினைவு.

ஐம்பெருங்காப்பியங்கள் அன்னைக்கு அணிகலன்கள் என்றொரு பழைய திரைப்படப் பாடல் சொல்லும். அது தவிர வேறு எந்த உருவ விளக்கமும் எனக்குத் தெரியவில்லை.

Anonymous said...

//நீங்கள் வந்தது பலராமகிருஷ்ணர்களே வந்தது போல் இருக்கிறது. :-)//

அப்படியா? நான் ஒரு கிருஷ்ண பைத்தியம். profile படமும் அடிக்கடி மாற்றுவதுண்டு :)

தமிழன்னையைக் கடவுளாகப் பாவித்து வழிபட்டவர்கள் யாரும் சரித்திரத்திலும் இருந்திருக்கலாம் அல்லவா? (கண்ணகி போல்)அதனால் உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்ற ஊகத்தில் கேட்டேன்.அவ்வளவுதான்..

குமரன் (Kumaran) said...

//தமிழன்னையைக் கடவுளாகப் பாவித்து வழிபட்டவர்கள் யாரும் சரித்திரத்திலும் இருந்திருக்கலாம் அல்லவா?//

எனக்குத் தெரிந்து அப்படி தமிழன்னையைக் கடவுளாக வழிபட்டவர்கள் யாரும் இருந்ததாகத் தெரியவில்லை நவன்.