Friday, July 20, 2007

கடம்பம் 5 : பதிற்றுப்பத்தில் கடம்பம்

சங்க கால இலக்கியங்கள் அகத்துறை இலக்கியங்கள் அல்லது புறத்துறை இலக்கியங்களாக இருக்கின்றன. காதல், அன்பு போன்ற உள்ள உணர்வுகளைப் பேசும் பகுதிகளை அகத்துறை என்றும் வீரம், கொடை போன்ற வெளியே தெரியும் குணங்களைப் பேசும் பகுதிகளை புறத்துறை என்றும் வகுத்திருக்கிறார்கள். சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய நூற்களுள் சிலவற்றைத் தொகுத்து எட்டுத்தொகை என்ற நூற்றொகுதியை அமைத்திருக்கிறார்கள் அந்தக் காலத்தில். அந்த எட்டுத்தொகை நூற்களுள் பதிற்றுப் பத்தும், புறநானூறும் புறத்துறையைப் பற்றிய பாடல்கள் கொண்டவை. பதிற்றுப் பத்து சேர மன்னர்களைப் புகழ்ந்து பாடிய பாடல்களின் தொகுப்பு. இது பத்து பத்து அகவற்பாக்களால் ஆன பத்து பகுதிகளைக் கொண்ட நூல் - அதனால் பத்து பத்து என்று பொருள் படும் பதிற்றுப்பத்து என்ற பெயர். நூலை தொகுத்தது யார்; தொகுப்பித்தது யார் என்ற விவரங்கள் கிடைக்கவில்லை.

சங்க காலப் பாடல்களையும் சங்கம் மருவிய காலப் பாடல்களையும் உரையின் துணையின்றிப் புரிந்து கொள்வது கடினம். புரிந்து கொள்ள முயன்றேன். தவறான பொருள் சொல்லும் வாய்ப்பு நிறைய இருப்பதால் பாடல்களின் பொருளைச் சொல்லாமல் 'கடம்பு' தோன்றும் பாடல்களை அப்படியே இங்கே தருகிறேன். நம் நல்வினைப்பயனால் உரை கிட்டி நாம் இந்தப் பாடல்களின் பொருளினைப் புரிந்து கொள்ள வழி ஏற்படட்டும்.

இரண்டாம் பத்து:

பாடியவர்: குமட்டூர்க் கண்ணனார்
பாடப்பட்டவர்: இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்

வரை மருள் புணர் வான் பிசிர் உடைய
வளி பாய்ந்து அட்ட துளங்கு இருங் கமஞ் சூல்
நளி இரும் பரப்பின் மாக் கடல் முன்னி
அணங்குடை அவுணர் ஏமம் புணர்க்கும்
சூருடை முழுமுதல் தடிந்த பேர் இசை
கடுஞ் சின விறல் வேள் களிறு ஊர்ந்தாங்கு
செவ்வாய் எஃகம் விலங்குநர் அறுப்ப
அருநிறம் திறந்த புண் உமிழ் குருதியின்
மணி நிற இருங்கழி நீர் நிறம் பெயர்ந்து
மனாலக் கலவை போல அரண் கொன்று
முரண் மிகு சிறப்பின் உயர்ந்த ஊக்கலை
பலர் மொசிந்து ஓம்பிய திரள் பூங்கடம்பின்
கடியுடை முழுமுதல் துமிய ஏஎய்
வென்று எறி முழங்கு பணை செய்த வெல் போர்
நார் அரி நறவின் ஆர மார்பின்
போர் அடு தானைச் சேரலாத!
மார்பு மலி பைந்தார் ஓடையொடு விளங்கும்
வலன் உயர் மருப்பின் பழி தீர் யானைப்
பொலன் அணி எருத்தமேல் கொண்டு பொலிந்த நின்
பலர் புகழ் செல்வம் இனிது கண்டிகுமே
கவிர் ததை சிலம்பில் துஞ்சும் கவரி
பரந்து இலங்கு அருவியொடு நரந்தம் கனவும்
ஆரியர் துவன்றிய பேர் இசை இமயம்
தென் அம் குமரியொடு ஆயிடை
மன் மீக்கூறுநர் மறம் தபக் கடந்தே

வயவர் வீழ வாள் அரில் மயக்கி
இடம் கவர் கடும்பின் அரசு தலை பனிப்ப
கடம்பு முதல் தடிந்த கடுஞ்சின வேந்தே
தார் அணி எருத்தின் வாரல் வள் உகிர்
அரிமான் வழங்கும் சாரல் பிற மான்
தோடு கொள் இனை நிரை நெஞ்சு அதிர்ந்தாங்கு
முரசு முழங்கு நெடு நகர் அரசு துயிலீயாது
மாதிரம் பனிக்கும் மறம் வீங்கு பல் புகழ்
கேட்டற்கு இனிது நின் செல்வம் கேட்டொறும்
காண்டல் விருப்பொடு கமழும் குளவி
வாடாப் பைம் மயிர் இளைய ஆடு நடை
அண்ணல் மழ களிறு அரி ஞிமிறு ஒப்பும்
கன்று புணர் பிடிய குன்று பல நீந்தி
வந்து அவண் இறுத்த இரும் பேர் ஒக்கல்
தொல் பசி உழந்த பழங்கண் வீழ
எஃகு போழ்ந்து அறுத்த வால் நிணக் கொழுங் குறை
மை ஊன் பெய்த வெண்னெல் வெண்சோறு
நமை அமை கள்ளின் தேறலொடு மாந்தி
நீர்ப் படு பருந்தின் இருஞ் சிறகு அன்ன
நிலம் தின் சிதாஅர் களைந்த பின்றை
நூலாக் கலிங்கம் வால் அரைக் கொளீஇ
வணர் இருங் கதுப்பின் வாங்கு அமை மென் தோள்
வசை இல் மகளிர் வயங்கு இழை அணிய
அமர்பு மெய் ஆர்த்த சுற்றமொடு
நுகர்தற்கு இனிது, நின் பெருங் கலி மகிழ்வே!

புரைவது நினைப்பின் புரைவதோ இன்றே
பெரிய தப்புநர் ஆயினும் பகைவர்
பணிந்து திறை பகரக் கொள்ளுநை ஆதலின்
துளங்கு பிசிர் உடைய மாக் கடல் நீக்கி
கடம்பு அறுத்து இயற்றிய வலம்படு வியன் பணை
ஆடுநர் பெயர்ந்து வந்து அரும் பலி தூஉய்
கடிப்புக் கண் உறூஉம் தொடித் தோள் இயவர்
அரணம் காணாது மாதிரம் துழைஇய
நனந் தலைப் பைஞ்ஞிலம் வருக இந்நிழல் என
ஞாயிறு புகன்ற தீது தீர் சிறப்பின்
அமிழ்து திகழ் கருவிய கண மழை தலைஇ
கடுங் கால் கொட்கும் நன்பெரும் பரப்பின்
விசும்பு தோய் வெண்குடை நுவலும்
பசும் பூண் மார்ப பாடினி வேந்தே!

நும் கோ யார் என வினவின் எம் கோ
இரு முந்நீர்த் துருத்தியுள்
முரணியோர்த் தலைச் சென்று
கடம்பு முதல் தடிந்த கடுஞ்சின முன்பின்
நெடுஞ்சேரலாதன் வாழ்க அவன் கண்ணி
வாய்ப்பு அறியலனே வெயில் துகள் அனைத்தும்
மாற்றோர் தேஎத்து மாறிய வினையே
கண்ணின் உவந்து நெஞ்சு அவிழ்பு அறியா
நண்ணார் தேஎத்தும் பொய்ப்பு அறியலனே
கனவினும் ஒன்னார் தேய ஓங்கி நடந்து
படியோர்த் தேய்த்து வடி மணி இரட்டும்
கடாஅ யானைக் கண நிரை அலற
வியல் இரும் பரப்பின் மா நிலம் கடந்து
புலவர் ஏத்த ஓங்கு புகழ் நிறீஇ
விரிஉளை மாவும் களிறும் தேரும்
வயிரியர் கண்ணுளர்க்கு ஓம்பாது வீசி
கடி மிளை குண்டு கிடங்கின்
நெடு மதில் நிலை ஞாயில்
அம்புடை ஆர் எயில் உள் அழித்து உண்ட
அடாஅ அடு புகை அட்டு மலர் மார்பன்
எமர்க்கும் பிறர்க்கும் யாவர் ஆயினும்
பரிசில் மாக்கள் வல்லார் ஆயினும்
கொடைக்கடன் அமர்ந்த கோடா நெஞ்சினன்
மன் உயிர் அழிய யாண்டு பல மாறி
தண் இயல் எழிலி தலையாது ஆயினும்
வயிறு பசி கூர ஈயலன்
வயிறு மாசு இலீயர் அவன் ஈன்ற தாயே!

5 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

உள்ளேன்னய்யா....

குமரன் (Kumaran) said...

மௌலி ஐயா. தமிழ் இணையப் பல்கலை கழகத்தின் மூலம் உரையும் கிடைத்திருக்கிறது. விரைவில் உரையுடன் இந்த இடுகையை இடுகிறேன்.

மெளலி (மதுரையம்பதி) said...

கற்பூர புத்திய்யா உங்களுக்கு....ஹிஹிஹி

வெற்றி said...

குமரன்,
சங்ககாலப் பாடலுக்கு மிக்க நன்றி.
விளக்கத்தையும் அடுத்த பதிவில் படித்துத் தெரிந்து கொண்டேன்.

குமரன் (Kumaran) said...

இந்த இடுகையில் இருக்கும் மற்ற பாடல்களுக்கும் விரைவில் விளக்கம் எழுதுகிறேன் வெற்றி. வேலை அதிகம் இருப்பதால் இடுகைகள் இடுவதிலும் பின்னூட்டம் இடுவதிலும் தாமதம் ஏற்படுகிறது.