Wednesday, July 11, 2007

குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்!!!


பாரதி விமரிசனத்திற்கு அப்பாற்பட்டவன் இல்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட தமிழ் இலக்கியங்களும் வடமொழி இலக்கியங்களும் இந்தக் கால எண்ணச்சூழலுக்கு ஏற்ப விமரிசனத்திற்கு உள்ளாகும் போது சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த மகாகவியின் கவிதைகளும் கட்டுரைகளும் கருத்துகளும் விமரிசனத்திற்கு உள்ளாவதில் எந்த தவறும் இல்லை. பாரதி மேல் குறை காண்போர் அவன் பிறந்த சாதியை வைத்தோ, அவன் வாழ்க்கை முழுவதும் (அவன் கவிதைகளிலும் தெரியும்) தான் முன்பு சொன்னதையே பிற்காலத்தில் மறுக்கும் முரண்பாடுகளையோ, முன்னுக்குப் பின் முரண்பாடாகத் தெரியும் சொற்களையோ கவிதை வரிகளையோ வைத்துப் பேசலாம். அதற்கு எல்லாவித உரிமையும் உண்டு. அவன் பொதுச் சொத்து. அவன் கவிதைகளும் கட்டுரைகளும் கருத்துகளும் பொதுச் சொத்து. அவனைப் பற்றியோ அவன் கருத்துகளைப் பற்றியோ வைக்கப்படும் வாதங்களில் சரி தவறு என்பது அவரவர் கருத்து நிலைப்பாட்டைக் கொண்டதே தவிர மற்றில்லை. ஒரு நல்ல இலக்கியம் என்றால் அதற்கு பல்வகைப்பட்ட விளக்கங்கள் வரவேண்டும் என்றே சான்றோர்கள் சொல்லியிருக்கிறார்கள் - அந்த விளக்கங்களில் சில ஒன்றுக்கொன்று முரண்பட்டதாகக் கூட இருக்கலாம். அது அந்த இலக்கியத்தைப் படித்தவர்களின் புரிதல். அந்தவகையில் அது சரியே.

அண்ணன் கோவி.கண்ணன் பாரதியின் வரிகளில் இரண்டினை எடுத்துக் கொண்டு அவற்றில் முன்னுக்குப் பின் முரணான செய்தியைக் காண்கிறார். கீதையைப் போற்றும் எல்லோருக்கும் எந்த வகையான எண்ணம் இருக்கும் என்று ஒரு வரையறையைக் கூறி அதனை மெய்ப்பிப்பதாக பாரதியின் வரிகளைக் காண்கிறார். அது சரி தவறு என்ற விவாதத்திற்குள் செல்லவில்லை. அது தேவையும் இல்லை. அது அவர் கருத்து.

அந்த இடுகையில் இரு நண்பர்கள் கேட்ட கேள்விக்கு இங்கே நான் சொல்வது விடையாக அமைகிறதா என்று பார்க்கலாம்.

சிபி சொன்னது 'குலம் இருந்தால் தானே தாழ்த்தி உயர்த்திச் சொல்ல முடியும். குலமே இல்லாட்டி உயர்வு தாழ்வு எங்கிருந்து வரும்னு கேக்குறீங்க'.

சிவபாலன் கேட்டது: 'இங்கே கேள்வி என்னவென்றால் சாதி இல்லை. குலம் உண்டா ? என்பது தான். ஒவ்வொருவரும் தனது கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் கேள்விக்கு பதில் வரவில்லை என்பதே என் எண்ணம். பாரதியும் மனிதன் தான். அவர் படித்த கீதையின் தாக்கம் இருந்திருக்கலாம். இதை சரியான ஆதாரத்துடன் மறுக்கும் கருத்தை யாரேனும் சொன்னால் நன்றாக இருக்கும்.'

இந்த இருவருக்காகவும் இதில் ஆர்வமுடைய மற்றவர்களுக்காகவும் இந்த இடுகையை இடுகிறேன்.

'சாதிகள் இல்லையடி பாப்பா - குலத்

தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்'

என்றான் பாரதி. இதற்கு நான் சொல்லும் பொருள் 'சாதிகள் இல்லையடி பாப்பா. அதனால் இல்லாத சாதி/குல வேறுபாடுகளை வைத்துக் கொண்டு குலத்தாழ்ச்சியோ குல உயர்ச்சியோ சொல்வது பாவம்'. இப்படி பொருள் கொண்டால் அவன் சாதி இல்லை; ஆனால் குலம் உண்டு என்று முரண்பட்டதாகச் சொல்ல இயலாது. பலரும் படிக்கும் போது இப்படித் தான் பொருள் கொண்டார்கள் என்று நினைக்கிறேன்.

கீதையின் தாக்கத்தைப் பற்றிய என் கருத்து: திருக்குறளைப் போற்றுவோர் எல்லோரும் ஒவ்வொரு குறட்பாவினையும் ஏற்றுக் கொள்பவர் என்பது சரியான கருத்தென்றால் கீதையில் இருக்கும் ஒவ்வொரு வரியினையும் ஏற்றுக் கொள்பவராகத் தான் கீதையினைப் போற்றுபவர் இருக்க முடியும் என்ற கருத்தும் சரி. திருக்குறளைப் போற்றுபவர்களில் பலர் மனப்பாடச் செய்யுளில் வந்த குறட்பாக்களை மட்டுமே படித்தவர்கள் (என்னை உட்பட); சிலர் எல்லா குறட்பாக்களையும் படித்தவர் - ஆனால் சில குறட்பாக்களை அந்தக் கால எண்ணச் சூழலில் அது சரி இப்போதில்லை என்று அந்தக் குறட்பாவினை கண்டு கொள்ளாதவர்கள். அப்படியே தான் கீதையைப் போற்றுபவர்களும் - பலர் கீதையைப் படித்ததில்லை; சிலர் படித்து சில கருத்துகளை மறுத்தவர்கள். பாரதி இரண்டாம் வகை - அதனை அவனின் கீதையின் முன்னுரையிலும் பற்பல கவிதைகளிலும் காணலாம். காண மறுப்பது அவரவர் உரிமை.


45 comments:

சிவபாலன் said...

குமரன் சார்,

// அதனால் இல்லாத சாதி/குல வேறுபாடுகளை வைத்துக் கொண்டு குலத்தாழ்ச்சியோ குல உயர்ச்சியோ சொல்வது பாவம்' //

இது போன்றும் கருத்துக் கொள்ளலாம் எனறு நீங்கள் சொல்லியிருப்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

வேறு ஏதாவது இடத்தில் " குலம்" என்பதை மறுத்திருக்கிறாரா மகாகவி. அப்படியாகின் அந்த சுட்டி கிடைத்தால் நன்றாக இருக்கும். (தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக கேட்கிறேன்)


மற்றபடி திரு. கோவி.கண்ணனின் பதிவுக்கு இது இன்னொரு பார்வை. வரவேற்கிறேன். (ஆனால் இன்னும் எனக்கு அந்த கேள்வியின் தாக்கம் சிறிதளவும் குறையவில்லை என்பதை மறுப்பதற்கில்லை)

Anonymous said...

குலம் என்றால் குடும்பம் என்ற பொருள் உண்டு. முன்பு ஜாதி இல்லை என்று சொன்ன பாரதி அடுத்த வரியில் குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்று சொல்வதன் மூலம் என் குடும்பம் உயர்ந்த குடும்பம் உன் குடும்பம் தாழ்ந்த குடும்பம் என்று சொல்வது பாவம் என்று கூறுகிறார். குடும்பம் இல்லை என்று சொல்லவில்லை. குடும்பம் என்ற அலகு என்றும் இருக்கும் என்றிருந்தாலும், அதிலும் தாழ்வு உயர்வு சொல்லுவது பாவம் என்பதே பாரதியின் வாக்கு.

குமரன் (Kumaran) said...

சிரித்து மட்டும் சென்ற அனானிமஸ் நண்பரே. அது புன்சிரிப்பா ஏளனச்சிரிப்பா என்று சொல்லாமல் சென்றுவிட்டீர்களே?! :-)

குமரன் (Kumaran) said...

சிவபாலன் சார். சுட்டியைத் தேடுகிறேன். நீங்களே கூட கூகிளாரைக் கேட்டுப் பார்க்கலாம். இப்போது நேரம் கிடைக்கவில்லையெனில் வீட்டிற்குச் சென்ற பின் பாரதியார் கவிதை புத்தகத்தைப் பார்த்து எடுத்துகாட்டுகள் தருகிறேன்.

குமரன் (Kumaran) said...

விளக்கத்திற்கு நன்றி வெற்றி. குலம் என்பதற்கு குடும்பம் என்ற பொருளும் உண்டு என்பதை ஏற்றுக் கொள்கிறேன். அதே போல் குடும்பம் என்ற அலகு எப்போதும் இருக்கும் ஆனால் அதில் உயர்வு தாழ்வு இல்லை என்ற விளக்கத்தையும் ஏற்றுக் கொள்கிறேன்.

குமரன் (Kumaran) said...

தனிப்பட்ட முறையில் அண்ணன் கோவி.கண்ணனைப் பற்றிய தாக்குதல் கருத்து சொன்னதால் இரண்டு பின்னூட்டங்களை நிறுத்தி வைத்திருக்கிறேன். பின்னூட்டம் இட்டவர்கள் மன்னிக்கவும்.

என் முயற்சியைப் பாராட்டிய அனானிமஸ் நண்பருக்கு நன்றி. ஆனால் உங்கள் பின்னூட்டத்தில் மற்றவரைத் தேவையின்றித் தாக்கும் சொற்கள் இருப்பதால் அனுமதிக்கவில்லை.

என் நலம் விரும்பி 'நலம் விரும்பி' என்ற பெயரில் பின்னூட்டம் இட்டிருக்கும் நண்பரே. இந்த இடுகை இட்டதால் என் நேரம் வீணானதாக நான் நினைக்கவில்லை. பாரதியாரையும் கீதையையும் யாராவது பழித்தாலும் தவறில்லை. அதற்கெல்லாம் டென்சன் ஆகி கருத்துகளைச் சொல்லி அந்தக் கருத்துகளை மற்றவர் திரித்து அதனால் ஆப்பு வாங்கிய நாட்கள் சென்றுவிட்டன. உங்கள் பின்னூட்டத்திலும் ஒரு வரி தேவையின்றி வந்துவிட்டது. அதனால் அனுமதிக்கவில்லை. ஆனால் என் நலம் விரும்பி ஆலோசனை சொன்னதற்கு மிக்க நன்றி.

குமரன் (Kumaran) said...

'அந்தணனிடத்திலும், மாட்டினிடத்திலும், யானையினிடத்திலும், நாயினிடத்திலும், அதையுண்ணும் சண்டாளனிடத்திலும் அறிஞர் சமமான பார்வையுடையோர்' (5-ஆம் அத்தியாயம், 18-ஆம் சுலோகம்) என்று பகவான் சொல்லுகிறார்.

எனவே, கண்ணபிரான் மனிதருக்குள் ஜாதி வேற்றுமையும், அறிவு வேற்றுமையும் பார்க்கக் கூடாதென்பது மட்டுமேயன்றி எல்லா உயிர்களுக்குள்ளேயும் எவ்வித வேற்றுமையும் பாராதிருத்தலே ஞானிகளுக்கு லக்ஷணமென்று சொல்லுகிறார்.

எல்லாம் கடவுள் மயம் அன்றோ? எவ்வுயிரிலும் விஷ்ணுதானே நிரம்பியிருக்கிறான்? 'ஸர்வமிதம் ப்ரஹ்ம, பாம்பும் நாராயணன், நரியும் நாராயணன். பார்ப்பானும் கடவுளின் ரூபம், பறையனும் கடவுளின் ரூபம்', இப்படியிருக்க ஒரு ஜந்து மற்றொரு ஜந்துவை எக்காரணம் பற்றியும் தாழ்வாக நினைத்தல் அஞ்ஞானத்துக்கு லக்ஷணம். அவ்வித மான ஏற்றத் தாழ்வு பற்றிய நினைவுகளுடையோர் எக்காலத்தும் துக்கங்களிலிருந்து நிவர்த்தியடைய மாட்டார்.

- பாரதியாரின் பகவத் கீதை முன்னுரையிலிருந்து.

குமரன் (Kumaran) said...

ஜாதி மதங்களைப் பாரோம் - உயர்
ஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின்
வேதிய ராயினும் ஒன்றே - அன்றி
வேறு குலத்தின ராயினும் ஒன்றே (வந்தே)

- வந்தே மாதரம் என்ற பாடலிலிருந்து.

ஜாதி நூறு சொல்லுவாய் போ போ போ

- போகின்ற பாரதமும் வருகின்ற பாரதமும் என்ற பாடலிலிருந்து

ஏழை யென்றும் அடிமையென்றும்
எவனும் இல்லை ஜாதியில்,
இழிவு கொண்ட மனித ரென்பது
இந்தி யாவில் இல்லையே

- விடுதலை என்ற பாடலிலிருந்து

வெற்றி said...

குமரன்,
பதிவைப் படித்தேன்.

மேலே vetri என்ற பெயரில் பின்னூட்டமிட்டது நானில்லை என்பதை மிகவும் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அது வேறு Vetri ஆக இருக்கலாம்.
இதே குழப்பம் சில மாதங்களுக்கு முன்னர் இருந்ததை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

இது மேலுள்ள பின்னூட்டம் எனதில்லை என்பதைத் தெளிவுபடுத்தவே.

Vetri எனும் பெயரில் இன்னொரு பதிவரும் இருக்கிறார் என நினைக்கிறேன். நன்றி.

குமரன் (Kumaran) said...

சாதி இரண்டொழிய வேறில்லை யென்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மென்போம்
நீதிநெறி யினின்று பிறர்க்கு தவும்
நேர்மையர் மேலவர், கீழவர் மற்றோர்.

சாதிப் பிரிவுகள் சொல்லி - அதில்
தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார்.
நீதிப் பிரிவுகள் செய்வார் - அங்கு
நித்தமும் சண்டைகள் செய்வார்.

சாதிக் கொடுமைகள் வேண்டாம்; - அன்பு
தன்னில் செழித்திடும் வையம்;
ஆதர வுற்றிங்கு வாழ்வோம்; - தொழில்
ஆயிரம் மாண்புறச் செய்வோம்.

நிகரென்று கொட்டு முரசே! - இந்த
நீணிலம் வாழ்பவ ரெல்லாம்;
தகரென்று கொட்டு முரசே - பொய்ம்மைச்
சாதி வகுப்பினை யெல்லாம்.

குமரன் (Kumaran) said...

எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம்
எல்லாரும் இந்திய மக்கள்.

குமரன் (Kumaran) said...

அவர் வேறு வெற்றி என்பதை அறிவேன் வெற்றி.

குமரன் (Kumaran) said...

இவ்வளவு எடுத்துக்காட்டுகள் காட்டிய பின்னரும் பாரதி 'குலம்' என்ற சொல்லை 'வருணம்' என்ற பொருளில் தான் பயன்படுத்தியிருக்கிறார் என்றும் 'ஜாதி வேண்டாம்; குலம் வேண்டும் - அதாவது வருணம் வேண்டும்' என்று சொல்கிறார் என்றும் பொருள் கொள்ள விரும்புவதும் அந்தக் கேள்வியின் தாக்கத்திலேயே நிற்பதும் அவரவர் உரிமை.

G.Ragavan said...

// குமரன் (Kumaran) said...
எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம்
எல்லாரும் இந்திய மக்கள். //

இது ஒன்று போதும் என்று நினைக்கிறேன். இதுதான் என்னுடைய கருத்தும். பாரதி சொல்லிய அனைத்தும் சரியென்று சொல்ல இயலாது. ஏனென்றால் பாரதி சொன்ன அனைத்தும் தெரியாது. இந்தப் பாடலை எப்படிப் பொருள் கொள்ள வேண்டுமோ அப்படிப் பொருள் கொண்டால் சரியானது என்பதே என் கருத்து. பாரதி தெய்வமல்ல. மனிதன். கவிஞன் என்பதை மறக்கக்கூடாது.

சிவபாலன் said...

// எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம் //

இந்த வரிகள் சிந்திக்க வைக்கின்றன.

மாசிலா said...

தமிழுக்காக தன் வாழ் நாட்களை அர்ப்பணித்ததற்காகவும், தாழ்த்தப் பட்டவர்களுக்காக குரல் கொடுத்ததற்காகவும், தமிழர்களை மதித்ததற்காகவும் பார்ப்பனராக பிறந்தும் இது போன்ற பல புரட்சி காரியங்களை செய்தததற்காக தம் இனத்தினரே அவரை ஒதுக்கியும், தமிழர்களும் அவரை பற்றிய போதுமான கவனிப்பின்றி தன் கடைசி காலத்தில் வறுமை, பசி, பட்டினியால் சாதரண பூச்சி போல் இறந்துபோன மகா கவியை இன்று குறை கூற யாருக்கும் உரிமை இல்லை.

"சாதிகள் இல்லையடி பாப்பா, குலம் தாழ்த்தி உயர்த்தி சொல்லல் பாவம்" என இந்த ஐயா கூறிச்சென்ற சில வரிகள்தான் நான் சிறு பிள்ளையாக இருந்தபோது எனது உயிர் மூச்சாக இருந்து வந்தது. பலம் கொடுத்தது.

இனியாயவது அந்த ஐயாவை பற்றி குறை கூறுவதை நிறுத்திக்கொள்வோம்.

மிகுந்த மன வேதனையுடன், மாசிலா.

Sridhar V said...

குமரன் ஐயா,

இந்த சர்ச்சையை பார்த்த பொழுது எனக்கு வியப்புதான் வந்தது.

இப்படி எல்லாம் செய்யாதீர்கள். இது பாவம். இப்படி ஒரு விஷயம் இருப்பதாகவே நினைக்காதீர்கள் - என்று சொன்ன மாதிரி 'நேராகவே' அர்த்தம் எடுத்துக் கொள்ளலாம்.

என்னமோ போங்க...

Unknown said...

வெள்ளை நிறத்தொரு பூனை - எங்கள்
வீட்டில் வளருது கண்டீர்;
பிள்ளைகள் பெற்றதப் பூனை, - அவை பேருக் கொருநிற மாகும்.

சாம்பல் நிறமொரு குட்டி - கருஞ்
சாந்து நிறமொரு குட்டி,
பாம்பு நிறமொரு குட்டி - வெள்ளைப்
பாலின் நிறமொரு குட்டி.

எந்த நிறமிருந்தாலும் - அவை
யாவும் ஒரேதர மன்றோ?
இந்த நிறம்சிறி தென்றும் - இஃது
ஏற்ற மென்றும் சொல்லலாமோ?

வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் - அதில் மானுடர் வேற்றுமை யில்லை;
எண்ணங்கள் செய்கைக ளெல்லாம் - இங்கு யாவர்க்கும் ஒன்றெனல் காணீர்.

நிகரென்று கொட்டு முரசே! - இந்த நீணிலம் வாழ்பவ ரெல்லாம்;
தகரென்று கொட்டு முரசே - பொய்ம்மைச்
சாதி வகுப்பினை யெல்லாம்.

அன்பென்று கொட்டு முரசே! - அதில்
ஆக்கமுண் டாமென்று கொட்டு;
துன்பங்கள் யாவுமே போகும் - வெறுஞ் சூதுப் பிரிவுகள் போனால்.

அன்பென்று கொட்டு முரசே! - மக்கள்
அத்தனைப் பேரும் நிகராம்.
இன்பங்கள் யாவும் பெருகும் - இங்கு
யாவரும் ஒன்றென்று கொண்டால்.

உடன்பிறந் தார்களைப் போலே - இவ்
வுலகில் மனிதரெல் லாரும்;
இடம்பெரி துண்டுவை யத்தில் - இதில்
ஏதுக்குச் சண்டைகள் செய்வீர்?

மரத்தினை நட்டவன் தண்ணீர் - நன்கு வார்த்ததை ஓங்கிடச் செய்வான்;
சிரத்தை யுடையது தெய்வம், - இங்கு
சேர்த்த உணவெல்லை யில்லை.

வயிற்றுக்குச் சோறுண்டு கண்டீர்! - இங்கு வாழும் மனிதரெல் லோருக்கும்;
பயிற்றி உழுதுண்டு வாழ்வீர்! - பிறர்
பங்கைத் திருடுதல் வேண்டாம்.

உடன்பிறந் தவர்களைப் போலே - இவ்வுலகினில் மனிதரெல் லாரும்;
திடங்கொண் டவர்மெலிந் தோரை - இங்குத் தின்று பிழைத்திட லாமோ?

வலிமை யுடையது தெய்வம், - நம்மை வாழ்ந்திடச் செய்வது தெய்வம்;மெலிவுகண் டாலும் குழந்தை - தன்னை
வீழ்த்தி மிதத்திட லாமோ?

தம்பி சற்றே மெலிவானால் - அண்ணன் தானடிமை கொள்ள லாமோ? செம்புக்கும் கொம்புக்கும் அஞ்சி - மக்கள்
சிற்றடி மைப்பட லாமோ?

அன்பென்று கொட்டு முரசே! - அதில்
யார்க்கும் விடுதலை உண்டு;
பின்பு மனிதர்க ளெல்லாம் - கல்வி
பெற்றுப் பதம்பெற்று வாழ்வார்.

அறிவை வளர்த்திட வேண்டும் - மக்கள் அத்தனை பேருக்கும் ஒன்றாய்.
சிறியரை மேம்படச் செய்தால் - பின்பு
தெய்வம் எல்லோரையும் வாழ்த்தும்.

பாருக்குள்ளே சமத்தன்மை - தொடர் பற்றுஞ் சகோதரத் தன்மை
யாருக்கும் தீமைசெய் யாது - புவி
யெங்கும் விடுதலை செய்யும்.

வயிற்றுக்குச் சோறிட வேண்டும் - இங்கு வாழும் மனிதருக் கெல்லாம்;
பயிற்றிப் பலகல்வி தந்து - இந்தப்
பாரை உயர்த்திட வேண்டும்.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
குமரன் (Kumaran) said...

மாசிலா. மிகுந்த மன வேதனையுடன் எழுதியிருக்கிறீர்கள். பழுத்த மரம் கல்லடி பட்டே தீரும். கண்ணன், புத்தர், ஏசு, காந்தி, பெரியார் என்று எத்தனையோ பேர்களைப் பட்டியல் இடலாம். மன வேதனை கொள்ளாதீர்கள். ஒரு கருத்து என்றால் அதற்கு மாற்றுக்கருத்து இருந்தே தீரும்.

குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள்
மிகை நாடி மிக்க கொளல்

என்று வள்ளுவப் பெருந்தகை சொல்லியிருக்கிறார். நல்லதையும் கெட்டதையும் சீர்தூக்கிப் பார்த்து நல்லது மிகுந்திருந்தால் கொள்ளுவோம்; கெட்டது மிகுந்திருந்தால் தள்ளுவோம்.

குமரன் (Kumaran) said...

Sridhar Venkat,

நிறைய பேர் நீங்கள் சொல்வது போல் தான் பொருள் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வித்தியாசமான பொருள் அவரவர் புரிதலுக்கு ஏற்ப வருவது இயற்கை தானே. இப்படியெல்லாமுமா புரிந்து கொள்கிறார்கள் என்று வியப்பு வந்தாலும் புதிய புரிதல்கள் சிலருக்கு ஏற்படுவதும் இயற்கை.

குமரன் (Kumaran) said...

செல்வன். நான் விட்டுவிட்ட ஆனால் மிக முக்கியமான பாரதியின் பாட்டை எடுத்து இட்டதற்கு மிக்க நன்றி.

Santhosh said...

Good Ones Kumaran. Unga velakamum nalla irunthathu. The explanation given by vetri was even better :)).. sorry for english.

Geetha Sambasivam said...

ரொம்ப நன்றி அருமையான விளக்கம் கொடுத்த குமரன், வெற்றி, மாசிலா மற்றும் செல்வனுக்கு. நன்றிகள் பல.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

குமரா!
பாரதி வாழ்ந்த காலம், சூழலில் அவர் சிந்தனை, செயற்பாடு பாராட்டுக்குரியது.
விமர்சிப்பது அவர் அவர் உரிமை!
இதே வேளை பாரதியும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவரில்லை
என்பது திறந்த புத்தகம் போன்ற அவர் வாழ்வுக்குச் சிறப்பே!

குமரன் (Kumaran) said...

நன்றி சந்தோஷ்.

குமரன் (Kumaran) said...

நன்றி கீதாம்மா.

குமரன் (Kumaran) said...

உண்மை யோகன் ஐயா. தற்போதைய சூழலில் நாம் பேசுவதும் எண்ணுவதும் வேறாக இருக்கலாம். ஆனால் பாரதியின் காலத்தில் அவர் வாழ்ந்த சூழலில் அவருடைய சிந்தனைகளும் செயற்பாடுகளும் பல விதங்களில் புரட்சியின் பாற்பட்டது தான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. மிக்க நன்றி.

கோவி.கண்ணன் said...

நண்பர் குமரன்,

உங்களது எதிர்வினை பதிவுவையும், பின்னூட்டங்களையும் வாசித்தேன். பாரதி மீது தங்கள் வைத்திருக்கும் நன்மதிப்பை (அபிமானத்தை) போற்றுகிறேன்.

திருக்குறளாக இருந்தாலும் சரி, எந்த இலக்கியமாக இருந்தாலும் சரி ...வாழ்ந்த காலத்திற்கேற்ப அதில் கருத்துக்கள் இருக்கும் என்று சொன்னதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. நானும் பாரதி பார்பனீயத்திற்கு ஆதரவளித்து இருக்கிறார் என்று சொல்லவரவில்லை. ஆனால் அவரும் மற்ற இந்துமத ஆர்வலர்கள் போல 4 குலம் இருக்க வேண்டும் என விரும்பி இருக்கிறார் என்று கருதினேன். அதாவது பள்ளிகளில் விளையாட்டு நிகழ்வின் போது வசதிக்கேற்ப கங்கா, காவேரி, கிருஷ்ணா, தாமிரபரணி அணிகள் இருப்பது போல் வசதிக்காக குலங்கள் இருப்பதாக அவரும், அவரைப் போன்றே இந்து மதத்தலைவர்களும் கூட நினைத்திருப்பார்கள்.

ஆனால் குலங்களும், சாதிகளும் தொழில் அடிப்படையிலானவை என்பதைவிட பிறப்பு அடிப்படையிலேயே இருக்கிறது, குறிப்பிட்ட குலத்தில் பிறந்தவர்கள் அந்த குலம் சார்ந்த தொழிலையே படிக்க வேண்டும் என்பதை பகவத் கீதைக்கு உரை எழுதி பாராட்டு பெற்ற இராஜாஜியும் வழியுறுத்தி இருக்கிறார். தொழில் அடிப்படையில் குலம் என்பதைவிட பிறப்பு அடிப்படையிலேயே குலம் என்பது நடப்பில் உள்ளவை. இந்து மதத்தை காக்க வேண்டுமென்றால் அதில் உள்ள நான்கு பிரிவுகளையும் ஏற்கவேண்டும் என்ற தவறான புரிதல் ஒன்றை எல்லோருமே பிடித்துத் தொங்கி வருகிறார்கள், ஏனென்றால் அது பகவத் கீதையிலும் வலியுறுத்தப்பட்டு இருப்பதால். 'பகவத் கீதையை குறை சொன்னால் புனித நூல் தகுதியை அது இழந்துவிடுமோ' என்ற தேவையற்ற அச்சமும் காரணம்.

சாதி இரண்டொழிய வேறில்லை....என்று தொடங்கும் அவ்வையார் பாடலும் கூட இட்டார் பெரியார், இடாதார் இழிகுலத்தோர் என்று ஈகையை செய்யச் சொல்லி வழியுறுத்தி...இடாதார் இழிகுலத்தோர் என்று முடிகிறது. ஈகை செய்யவில்லை என்றால் உன் குலமே தூற்றப்படும் என்ற பொருளில் தான் இருக்கிறது என்று நினைக்கிறேன். ஒன்றே குலமும், ஒருவனே தேவனும் திருமூலர் கூட சுறுக்கமாக தெளிவாகவே சொல்லி இருக்கிறார்.

குலத்தில் உயர்வு தாழ்வு வேண்டாம் என்று சொன்னால் குலம் இருப்பதாகாவும், அது வேண்டும் என்று பாரதி சொல்லவில்லை என்கிறீர்கள். இங்கே பாருங்கள்

''நந்தனைப் போல் ஒரு பார்பன் இல்லை' - இதுவும் பாரதியின் வரிதான். இந்த பாடல் உங்களுக்கு தெரியவில்லை என்றால் எஸ்கே ஐயா பதிவில் இருக்கிறது பாருங்கள்.

இங்கே நந்தனரின் உயர்வைச் சொல்ல ஏன் 'பார்பன்' என்பதைப் அடைமொழியாக கொள்ளவேண்டும் ?

பாரதியைப் பொறுத்தவரை ''ப்ராமனன்", என்பவன் உயர்ந்த பண்புடையவன், பார்பான்' என்பவன் உயர்ந்தவன் என்ற பொருளில் சொல்கிறார் என்று தான் எனக்கு புரிகிறது.

பார்பனரை உயர்வாக நினைத்தாலும் அந்த காலத்தில் பார்பனர்கள் தெண்டச்சோறு உண்டார்கள் என்று மனம் வெதும்பியும், பார்பனர்களின் மனுநீதியில் பேதம் தவறானது என்றும் சாடி இருக்கிறார்.

"சூத்திரனுக்கு ஓர் நீதி, தண்டச்சோறு உண்ணும் பார்பனுக்கு ஓர் நீதி"

நீதிகள் எல்லோருக்கும் பொதுவாக இருக்கவேண்டும் என்றும் பார்பனர் உழைத்து சாப்பிடவேண்டும் என்று சாடி இருக்கிறார் என்று தான் எனக்கு புரிகிறது. மேற்கண்ட நந்தானாரைப் போன்று பார்பன் இல்லை என்றதில் பார்பன குலத்தை உயர்வாகத்தான் நினைத்திருக்கிறார் என்றும் அவர்களின் நடவடிக்கையை மட்டும் அவருக்கு பிடிக்கவில்லை என்றே புரிந்து கொள்கிறேன்.

குலமே இல்லை என்று சொல்லும் பாரதி ஏன் 'பார்பனன்' என்ற சொல்லை உயர்வுக்கு 'உவமையாக' சொல்ல வேண்டும். எனக்கு புரியவில்லை. தங்களுக்கும் மற்றவர்களுக்கும் ஏற்புடையதாக இருந்தால் மகிழ்ச்சி.

தாங்கள் பாரதியின் மேல் காட்டப்படும் ஆர்வம் பாராட்டத்தக்கதே ....மற்ற தமிழறிஞர்களை / தமிழர் நலனூக்கு பாடுப்பட்டவர்களை சிலர் வேண்டுமென்றே 'கரி' பூசும் போது அவர்களுக்கு மாற்றுக் கருத்துச் சொல்ல உங்களைப் போன்று எவராவது முன்வருவார்கள் என நம்புகிறேன்.


அன்புடன்,

கோவி.கண்ணன்

குமரன் (Kumaran) said...

கோவி.கண்ணன் தங்களுக்கு பதில் சொல்லும் விதமாக சில எண்ணங்கள் தோன்றுகின்றன. அவற்றைப் பின்னர் சொல்கிறேன். முதலில் இந்தப் பின்னூட்டத்தைப் படிப்பவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.

Anonymous said...

அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தாற்க்கு அல்லால் பிறவாழி நீத்தல் அரிது

என்று திருக்குறளில் திருவள்ளுவர் 'அந்தணர்' என்ற சொல்லை சாதியையோ குலத்தையோ குறித்து கூறவில்லை. அரிய மாந்தர் என்ற அர்த்ததில்தான் அது குறிப்பிடுகிறது. பண்டைய தமிழில் அப்படி ஒரு அர்த்தமும் கொள்ளப்பட்டது.

அதே போல்தான்

//நந்தனைப் போல் ஒரு பார்பன் இல்லை//

பார்ப்பான் என்ற வார்த்தையையும் மேற்க்குறிப்பிட்ட அர்த்ததில் எடுத்துக் கொள்ள வேண்டும். இங்கு சுட்டப்படும் விதயமே சாதிக் கொடுமையை எதிர்க்கும் விதயம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

திரிகூட ராசப்ப கவிராயர் பாடிய குற்றாலக் குறவஞ்சியில் கூட -

நீங்கக் காண்பது சேர்ந்தவர் பாவம்
நெருங்கக் காண்பது கன்னலிற்செந்நெல்
தூங்கக் காண்பது மாம்பழக் கொத்து
சுழலக் காண்பது பூந்தயிர் மத்து
வீங்கக் காண்பது மங்கையர் கொங்கை
வெடிக்கக் காண்பது கொல்லையின் முல்லை
ஏங்கக் காண்பது மங்கல பேரிகை
ஈசர் ஆரிய நாடெங்கள் நாடே
....
....
தேடக் காண்பது நல்லறம் கீர்த்தி
திருக்குற்றாலர் தென் ஆரிய நாடே

என்று சொல்லப்படுகிறது. இந்த பாடலில் கையாளப்படும் 'ஆரிய' என்ற பதம் 'சிறந்த', noble என்று சொல்லப்படும் உவம் உருபு வகையை சேர்ந்தது.

பண்டைய தமிழகத்தில் ஊர்த் / கிராமத் தலைவர் 'ஐயர்' என்று அழைக்கப்பட்டார். அப்படியென்றால் பார்பனர்கள் மற்றுமே ஊர்த் தலைவராக இருந்தனரோ... என்று அர்த்தம் கொள்ள முடியாது.

இந்த பகவத் கீதையில் குலத்தை பற்றி தூக்கி பிடிப்பதாக என்ன வருகிறது என்று சொல்ல இயலுமா?

எனக்குத் தெரிந்த வகையில் அதிலே சொல்லப்படுவது

'குணம் மற்றும் வினையின் (கர்மா) அடிப்படையில் நால் வர்ணத்தவரை நான் சிருஷ்டித்தேன்'

என்று ஒரே ஒரு இடத்தில் கிருஷ்ண பகவான் கூறுகிறார். பிறப்பின் அடிப்படையில் என்று கீதையில் எங்கும் சொல்லப்படவேயில்லை எனக்குத் தெரிந்த வகையில்.

இந்த ஒரு வரியை வைத்துக்கொண்டு பகவத் கீதை பிறப்படிப்படியாக கொண்டு வருணாசிரமத்தை போதிக்கிறது என்று சொல்ல இயலுமா என்ன?

Anonymous said...

//பார்ப்பான் என்ற வார்த்தையையும் மேற்க்குறிப்பிட்ட அர்த்ததில் எடுத்துக் கொள்ள வேண்டும். இங்கு சுட்டப்படும் விதயமே சாதிக் கொடுமையை எதிர்க்கும் விதயம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.//

இதன் பெயரே வசதிக்கேற்ப திரித்தல் என்பது. பாரதியின் காலமும் திருவள்ளுவர் காலமும் ஒன்றல்ல, பாரதியின் 'பார்பன' அர்தத்திற்கும், திருவள்ளுவரின் 'பார்பன' அர்த்ததிற்கும் ஒரே அர்த்தம் கற்பிக்க முயல்வது திரித்தலே.

//என்று சொல்லப்படுகிறது. இந்த பாடலில் கையாளப்படும் 'ஆரிய' என்ற பதம் 'சிறந்த', noble என்று சொல்லப்படும் உவம் உருபு வகையை சேர்ந்தது.//

'ஆரிய' பவன் என்பதற்கு 'பதமான சிறந்த' உணவகம் என்று பொருள் கொள்ளச் சொல்கிறார் போல் அனானி.

சிரிக்க முடியவில்லை சார். வேறு எதாவது முயற்சி செய்யுங்களேன். இந்த கொடுமைக்கும் உவம், உருபு இலக்கண மேற்கோள் வேறு.

:-)

ஜீவி said...

திரு. 'மாசிலா' அவர்களின் எழுத்தைப்படித்துக் கண்கள் கலங்கி
விட்டன.
மஹாகவியை 'ஐயா' என்று
அழைத்து,'உன் கவிதை வரிகள் தாம் என் வாழ்க்கைகு உயிர்மூச்சாக இருந்தது' என்பதனை நினைத்து,
அவன் வாழ்க்கையில் பட்டத் துன்பங்கள் போதும்; நீங்களும்
அவனை ஒன்றும் இல்லாததற்கெல்லாம் 'சிறைச்சேதம்' பண்ணாதீர்கள் என்று இறைஞ்சிக் கேட்டுள்ளார்.
'பாரதி' பற்றிய எத்தனையோ கோணல் பார்வைகளுக்குப் பின்பும்,
தொடர்ந்த திராவிட ஆட்சிகளுக்குப்
பின்பும், தீட்சண்யமிக்க உயர்ந்த இலட்சியங்களைக் கொண்ட கவிதைகளினால் தான், அவன் நம்
சிந்தனைகளில் இன்னும் வாழ்ந்துகொண்டு இருப்பதுமல்லாமல், அன்பர் 'மாசிலா' சொன்னது போல பலரை வழி நடத்திக்கொண்டும் இருக்கிறான் என்பது சத்தியம்.

Anonymous said...

//'ஆரிய' பவன் என்பதற்கு 'பதமான சிறந்த' உணவகம் என்று பொருள் கொள்ளச் சொல்கிறார் போல் அனானி.
//
கொஞ்சம் இலக்கியம் எடுத்து படித்துப் பார்க்கலாம். அல்லது விக்கிபீடியாவில் தேடிப் பார்க்கலாம்.

இது எதுவும் தேவையில்லை என்றால் நன்றாக சிரித்து மகிழலாம்.

இம்மாதிரி விவாதங்களுக்கு இதுதான் எல்லை போலும். வாழ்த்துக்கள்.

- அதே அனானி

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
சதங்கா (Sathanga) said...

//தமிழுக்காக தன் வாழ் நாட்களை அர்ப்பணித்ததற்காகவும், தாழ்த்தப் பட்டவர்களுக்காக குரல் கொடுத்ததற்காகவும், தமிழர்களை மதித்ததற்காகவும் பார்ப்பனராக பிறந்தும் இது போன்ற பல புரட்சி காரியங்களை செய்தததற்காக தம் இனத்தினரே அவரை ஒதுக்கியும், தமிழர்களும் அவரை பற்றிய போதுமான கவனிப்பின்றி தன் கடைசி காலத்தில் வறுமை, பசி, பட்டினியால் சாதரண பூச்சி போல் இறந்துபோன மகா கவியை இன்று குறை கூற யாருக்கும் உரிமை இல்லை.//

சத்தியமான உண்மை. ஒரு புரட்சிக் கவிஞரை, மாசிலா அவர்கள் சொன்னது போல, தன் வாழ்நாளை தமிழுக்குத் தந்து, ஒன்றுமில்லாமல் வெந்து போன மகாகவியைப் பற்றி வாக்குவாதம் செய்வதை விட, போற்ற மனமில்லையெனினும் தூற்றாமலிருப்பீர் மக்காள். உங்களுக்குப் பொழுது போகவேண்டுமென்றால், தற்போது நிறைய கவிஞர்கள் (self promotors) இருக்கிறார்கள், அவர்களிடம் உள்ள குற்றம்,குறை காணுங்கள்.

//பழுத்த மரம் கல்லடி பட்டே தீரும்//

குமரன், அனுபவமுள்ள அருமையான வரி.

குமரன் (Kumaran) said...

//இந்து மதத்தை காக்க வேண்டுமென்றால் அதில் உள்ள நான்கு பிரிவுகளையும் ஏற்கவேண்டும் என்ற தவறான புரிதல் ஒன்றை எல்லோருமே பிடித்துத் தொங்கி வருகிறார்கள், ஏனென்றால் அது பகவத் கீதையிலும் வலியுறுத்தப்பட்டு இருப்பதால். 'பகவத் கீதையை குறை சொன்னால் புனித நூல் தகுதியை அது இழந்துவிடுமோ' என்ற தேவையற்ற அச்சமும் காரணம்.
//

இதில் எனக்கு மாற்று கருத்து உண்டு கோவி.கண்ணன். முதலில் இந்து மதத்தைக் காக்க வேண்டுமென்றால் அதில் உள்ள நான்கு பிரிவுகளையும் ஏற்கவேண்டும் என்ற புரிதல் எல்லோருக்கும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. எனக்கு அந்த புரிதல் இல்லை என்று அடித்துச் சொல்லலாம். எனக்குத் தெரிந்து பல இந்து நண்பர்களுக்கும் அந்த எண்ணம் இருப்பதாகத் தெரியவில்லை. இரண்டாவது பகவத் கீதையில் நான்கு பிரிவுகளும் வலியுறுத்தப்பட்டது என்பது; நீங்கள் அதனை பிறப்பின் அடிப்படையில் வலியுறுத்தப்பட்டது என்று எண்ணுகிறீர்கள் என்று நினைக்கிறேன். அந்தக் காலகட்டத்திற்கு ஏற்ப அன்றிருந்த சிந்தனைக்கு ஏற்ப 'சதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகச' என்று தான் கீதையில் சொல்லியிருக்கிறான் கண்ணன். குணங்களையும் செயல்களையும் பொருத்து நான்கு பிரிவுகள் என்னால் செய்யப்பட்டன என்பது அதற்குப் பொருள். இது இட்டார் உயர்குலத்தார் இடாதார் இழிகுலத்தார் என்றதைப் போல. உடனே ஒளவை குலப்பிரிவுகளை வலியுறுத்தினாள்; அதனால் தான் நம்மிடம் (தமிழர்கள் அனைவரிடம்) குல வேறுபாடுகள் இவ்வளவு தூரம் இருக்கிறது என்று சொல்லிவிட முடியுமா? ஆனால் கீதையைப் பழிப்பவர்கள் மேலே சொன்ன வார்த்தையில் பாதியை எடுத்துக் கொண்டு கண்ணனையும் கீதையையும் பழிக்கிறார்கள் - சதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் - இதோடு நிறுத்திக் கொள்வார்கள் - பாருங்கள் கண்ணனே சொல்லியிருக்கிறான் நான்கு பிரிவுகள் நானே அமைத்தேன் என்று - வருணாப்பிரிவுகளை வலியுறுத்துகிறது கீதை என்று சொல்லி கண்ணன் சொல்லாத பிறப்படிப்படை என்பதை அங்கே உள் நுழைத்துவிடுகிறார்கள். (இந்தத் தொல்லையே வேண்டாம் என்று தான் என்னைப் போன்றவர்கள் 'குண கர்ம விபாகச' என்ற பகுதியையும் சேர்த்தே கீதையிலிருந்து மறந்துவிடுகிறோம் - பெய்யெனப் பெய்யும் மழை என்ற திருக்குறள் வரிகளை மறப்பதைப் போல. )

ஆனால் நடப்பில் தொழிலடிப்படையில் இல்லாமல் பிறப்படிப்படையிலேயே பிரிவுகள் இருக்கின்றன என்பது வெளிப்படை. அதற்கு கீதையை அடிப்படையாகக் காண்பிப்பது பிழை.

புனித விவிலியத்தைக் குறை கூறும் நூற்கள் பல வந்துவிட்டன. ஆனாலும் புனித விவிலியத்தின் புனிதத் தன்மை நம்பிக்கையாளர்கள் நடுவே குறைந்துவிடவில்லை. எந்த நூலுக்கும் விமரிசனங்கள் வரத் தான் செய்யும். அதனால் அவற்றின் புனிதத் தன்மை குறைந்துவிடாது; அதுவும் நம்பிக்கையாளர்கள் நடுவில் அது நடக்காது. இடுகையில் சொன்னது போல் காலத்துக்கு ஒவ்வாத கருத்துகள் என்று தோன்றினால் அவற்றைத் தள்ளிவிட்டுக் கொள்ள வேண்டியதை மட்டுமே கொண்டுவிடுவார்கள்.

ஈகையின் முதன்மையை (முக்கியத்துவத்தை) நற்குணங்களின் முதன்மையை வலியுறுத்த புலவர்கள் இப்படி மிகைப்படுத்திப் பாடுவது இயல்பு. ஈகைக் குணம் இல்லாவிட்டால் நீ இழி குலத்தோன் என்றது ஈகையை வலியுறுத்தவே ஒழிய குலத்தை வலியுறுத்த இல்லை. இப்படிப்பட்ட புரிதல்கள் அவரவர் மனநிலைக்கு ஏற்பவும் எதைக் காண வேண்டும் என்று விரும்புகிறோமோ அதைக் காண்பதாலும் வருபவையே. சொல்லப்பட்டவைகளை அவற்றைப் படித்துப் புரிந்து கொள்வது ஒரு வகை. ஒரு கருத்தை ஏற்கனவே ஏற்படுத்திக் கொண்டு பின்னர் அதற்கு ஆதாரம் தேடிப் புகுவது இன்னொரு வகை. இரண்டாவது வகையில் கிளம்பினால் நம் கருத்தை வலியுறுத்த ஆயிரம் எடுத்துக்காட்டுகளைக் காட்டலாம்.

பார்ப்பனன் உயர்ந்தவன் என்று சொல்லிக் கொண்டிருந்தவர்களிடம் அதனை எதிர்க்கும் போது 'அட போங்கடா. உங்களில் யாராவது நந்தனைப் போல் உண்டா? நந்தனைப் போல் ஒரு பார்ப்பான் இந்த உலகத்திலேயே இல்லை' என்றார். எடுத்துக்காட்டிற்காக ஒன்றைச் சொல்கிறேன். நீங்கள் வழிபாட்டுத் தலங்களை விட கழிவறைகள் புனிதமானவை என்று சொன்னீர்கள். அங்கே வழிபாட்டுத்தலங்களில் நடக்கும் அட்டூழியங்களைக் குறிப்பிட்டு எந்த வகையில் கழிவறை வழிபாட்டுத் தலங்களை விட புனிதமானவை என்று சொன்னீர்கள். அதே போல் பாரதியும் 'பார்ப்பனர்களே. உங்களில் எத்தனை குறைபாடுகள் இருக்கின்றன?! அவற்றைப் பார்க்கும் போது நந்தனைப் போல் ஒரு பார்ப்பானும் இல்லை' என்று சொன்னதாக ஏன் புரிந்து கொள்ளக் கூடாது? நீங்கள் எப்படி வழிபாட்டுத்தலங்களில் இருக்கும் குறைபாடுகளைக் குறிக்க 'வழிபாட்டுத்தலங்களை விட' என்றீர்களோ அதே போல் பாரதியும் பார்ப்பனர்களிடம் இருக்கும் சாதிச்செருக்கைக் குறிக்க 'நந்தனைப் போல் நீங்கள் எவருமே இல்லை' என்று சொன்னதாகப் பொருள் கொள்ளலாமே?

//பாரதியைப் பொறுத்தவரை ''ப்ராமனன்", என்பவன் உயர்ந்த பண்புடையவன், பார்பான்' என்பவன் உயர்ந்தவன் என்ற பொருளில் சொல்கிறார் என்று தான் எனக்கு புரிகிறது.
//

இது உங்கள் புரிதல் மட்டுமே. அது தவறானது என்பது என் புரிதல்.

//மற்ற தமிழறிஞர்களை / தமிழர் நலனூக்கு பாடுப்பட்டவர்களை சிலர் வேண்டுமென்றே 'கரி' பூசும் போது அவர்களுக்கு மாற்றுக் கருத்துச் சொல்ல உங்களைப் போன்று எவராவது முன்வருவார்கள் என நம்புகிறேன்.
//

கட்டாயம். பாரதியை நான் படித்து அறிந்தது போல் மற்றவர்களைப் பற்றியும் நான் படித்து அறிந்திருக்கும் போது கட்டாயம் மாற்று கருத்து சொல்ல முன் வருவேன். அது 'வேண்டுமென்றே' கரி பூசுகிறார்களோ இல்லை தவறான புரிதல்களினால் செய்கிறார்களோ அதில் குறிப்பில்லை - இரண்டில் எது நடந்தாலும் கருத்து சொல்வேன். நீங்கள் பாரதி மேல் வேண்டுமென்றே கரி பூசவில்லை என்று நம்ப விரும்புகிறேன்.

குமரன் (Kumaran) said...

அந்தணன், பார்ப்பான், ஆரியன் போன்ற சொற்களுக்கு உள்ள மாற்றுப் பொருளைச் சொன்ன அனானி நண்பரே. ஒரு சொல்லுக்குப் பல பொருள் இருக்கும் போது அவரவர் தமக்கு உகந்த பொருளைத் தான் எடுத்துக் கொள்வார்கள். பாடல்களுக்குப் பொருள் சொல்லும் போதும் வித விதமான விளக்கங்கள் வருவது அந்த வகையில் தானே. அதே போல் அந்தணன், பார்ப்பன், ஆரியன் போன்ற சொற்களுக்கு எதிர் எதிரான பொருள்கள் இருக்கும் போது எதிர் எதிரான விளக்கங்களும் வருவது இயற்கை. அதற்கு ஒன்றும் செய்ய இயலாது.

குமரன் (Kumaran) said...

//இதன் பெயரே வசதிக்கேற்ப திரித்தல் என்பது. பாரதியின் காலமும் திருவள்ளுவர் காலமும் ஒன்றல்ல, பாரதியின் 'பார்பன' அர்தத்திற்கும், திருவள்ளுவரின் 'பார்பன' அர்த்ததிற்கும் ஒரே அர்த்தம் கற்பிக்க முயல்வது திரித்தலே.
//

இதன் பெயர் திரித்தல் இல்லை அனானி ஐயா. திரிகூடராசப்பர் காலமும் திருவள்ளுவர் காலமும் கூட ஒன்றில்லை தான். சொற்களுக்கு பல வகையான பொருள்கள் இருக்கும் போது அதனை அந்தக் காலகட்டத்தில் அப்படித் தான் பயன்படுத்தினார்கள் என்று சொல்லும் விளக்கமும் வரும்; இந்தக் காலத்தில் அந்தச் சொற்களுக்கு ஏற்பட்டிருக்கும் பொருளை, பெரும்பாலானோர் பயன்படுத்தும் பொருளை அந்தச் சொற்களுக்குக் கொண்டு அவை அந்தப் பொருளினைத் தான் சொல்கிறது என்ற விளக்கமும் வரும். முதற்பொருளைச் சொல்பவர் மற்றவரைத் திரிக்கிறார்கள் என்பார்கள்; மற்றவர் முதற்பொருளைச் சொன்னவரைத் திரிக்கிறார்கள் என்பார்கள். இது இலக்கிய விளக்கங்களில் இயற்கை.

கோவி.கண்ணன் said...

திரு குமரன், என் பின்னூட்டம் குறித்து
தங்கள் மேலான விளக்கத்துக்கு நன்றி,


//பார்ப்பனன் உயர்ந்தவன் என்று சொல்லிக் கொண்டிருந்தவர்களிடம் அதனை எதிர்க்கும் போது 'அட போங்கடா. உங்களில் யாராவது நந்தனைப் போல் உண்டா? நந்தனைப் போல் ஒரு பார்ப்பான் இந்த உலகத்திலேயே இல்லை' என்றார். //


'பார்னரில் ஒருவர் கூட நந்தன் போல் இல்லை' என பொருள் கொள்ள முடியாது... எனெனில் பாரதி திருஞானசம்பந்தர் முதல் பல பக்தியில் சிறந்த பார்பனர்களை பாரதி அறிந்து வைத்திருக்கிறார்...நந்தனாரை புகழ அவர்களை இழிவுபடுத்துகிறார் அல்லது குறைத்துச் சொல்கிறார் என்று நான் நம்பவில்லை.

நந்தனைப் போல் ஒரு பார்ப்பான் -- இந்த
நாட்டினில் இல்லை; - என்றால் அவர் வாழ்ந்த காலத்தில் அதாவது 'தற்போது' இல்லை என்ற பொருளே அன்றி எப்போதுமே இருந்ததில்லை என்று அவர் சொல்லவரவில்லை என நினைக்கிறேன்.

பாரதி125பிரான்சு விழாக் குழுவினர் said...

பார்பன குலத்தில் பிறந்த ஒரே காரணத்திற்காக பாரதியை பலவகையில் நிந்த்திக்கும் இன்றைய தமிழ் உலகிற்கு தகுந்த பதில் அளிக்கவே, அவனுடைய 125 பிறந்த ஆண்டு விழாவினை கையில் எடுத்து இருக்கின்றோம்.

http://www.bharathy125france.com

புழுதியில் எரியப்பட்ட பாரதிக்காக பராசக்தி வருகிறாள் அறம் பாட! பாரீசில் பாரதிக்கு மாபெரும் விழா. ஆதரவு தாரீர் அனபர்களே

இவண்

மாககவி பாரதி 125 பிரான்சு விழாக் குழுவினர்.

குமரன் (Kumaran) said...

கோவி.கண்ணன். என் பெயருக்கு முன்னால் திரு. போட்டு உங்களையும் அப்படி போட்டு அழைக்கும்படி செய்கிறீர்கள். :-) திருவை என் பெயரின் முன்னாலிலிருந்து எடுத்துவிடுங்கள். நான் நீங்கள் விரும்பும் வரை உங்கள் பெயரின் முன்னால் இடுகிறேன்.

திரு. கோவி. கண்ணன். நீங்கள் சொன்னது போல் 'தற்காலத்தில் இல்லை' என்ற பொருள் சரி. ஆனால் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். இங்கே அவர் எடுத்துக்காட்டாகக் கூறியது தாழ்த்தப்பட்டவர் என்று குமுகாயத்தால் ஒதுக்கி வைக்கப்பட்டவரில் ஒருவரை. 'நீங்கள் உங்களைப் பெருமையாகப் பேசிக் கொள்கிறீர்கள். மற்றவரைச் சிறுமைப்படுத்துகிறீர்கள். உங்களாலும் உங்களில் அடுத்தப் படிகளில் இருப்பதாக எண்ணிக் கொள்பவராலும் சிறுமைப்படுத்தப்பட்ட நந்தனைப் போல் சிறந்தவனாக ஒரு பார்பானும் இந்த நானிலத்திலேயே இல்லை' இப்படி சொல்ல வரும் போது தாழ்த்தப்பட்ட ஒருவரை எடுத்துக் காட்டுவதே இயற்கை. நீங்கள் கழிவறையை வழிபாட்டுத் தலங்களுக்கு எடுத்துக் கொண்டதை போல.

நீங்கள் இன்னொரு வழிபாட்டுத்தலத்தை எடுத்துக் காட்டவில்லை. ஏதோ ஒரு ஐயப்பன் கோவிலைப் பற்றி வேறெங்கோ பேசியிருந்தீர்கள். அந்தக் கோவிலையும் இங்கே எடுத்துக் காட்டவில்லை. நீங்கள் எடுத்துக் கொண்டதோ மக்கள் நடுவில் புனிதம் இல்லாததாக எண்ணப்படும் கழிப்பறையை. இதன் மூலம் நீங்கள் சொல்ல வந்தது 'நீங்கள் கேவலமாக எண்ணும் கழிப்பறையும் உங்கள் புனிதக் கோவிலை விட உயர்ந்தது' - அங்கே இன்னொரு கோவிலைக் காட்டவில்லை; அதன் பொருள் நீங்கள் அந்தக் கோவிலை அறியவில்லையென்றோ மதிக்கவில்லையென்றோ பொருளில்லை அல்லவா? அது போல் பாரதி சொல்ல வந்தது 'நீங்கள் பெருமையாக உங்களைப் பற்றிப் பேசிக் கொண்டு மற்றவரைத் தாழ்த்துகிறீர்கள். நீங்கள் தாழ்த்திப் பேசும் வகுப்பில் பிறந்த நந்தனார் உங்கள் அனைவரையும் விட உயர்ந்தவர்' - அங்கே இன்னொரு பார்ப்பனரைக் காட்டத் தேவையில்லை; அவர் சம்பந்தர் போன்றவர்களை அறியவில்லை என்றோ மதிக்கவில்லை என்றோ பொருள் இல்லை.

இங்கே நந்தனாரைப் புகழ்வதை விட சாதிக்கொடுமையைச் சாடுவதே முதன்மை ஆனது. அதற்கு அவர் காலத்தில் கிடைத்தச் சொற்களைப் புழங்குகிறார். அதனை நாம் தவறாகப் புரிந்து கொள்கிறோம்.

(குறிப்பு: ஒப்புமைக்காகத் தான் திரு.கோவி.கண்ணன் எழுதிய கழிவறை/வழிபாட்டுத் தலங்களைப் பற்றி சொன்னேனே தவிர நந்தன்/பார்ப்பான் = கழிவறை/கோவில் என்று யாரும் திரித்து பொருள் கொண்டு என்னைப் பதிவுகளிலோ அனானிப் பின்னூட்டங்களிலோ ஏச வேண்டாம் என்று வேண்டிக் கொள்கிறேன்).

குமரன் (Kumaran) said...

ஜீவி ஐயா. இறைவன் அவதாரமாக வரும் போது கூட எந்தக் குறைகளும் இல்லாமல் வருவதில்லை என்பது ஆன்றோர் துணிபு. அதனால் அவனையும் விமரிச்சிக்கும் வாய்ப்புகள் கிடைக்கின்றன. அப்படி இருக்கும் போது ஒரு மகாகவியான பாரதியை விமரிச்ச வாய்ப்புகள் கிட்டாமலா போய்விடும். நம்மைப் போன்ற பலரை பாரதியின் காலத்தைக் கடந்த கருத்துகள் வழி நடத்திச் செல்கின்றன என்பது உண்மை. அதனால் அவன் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியவன் இல்லை என்பதோ அவனுடைய கருத்துகள் விமரிசனத்திற்கு அப்பாற்பட்டவை என்றோ நினைக்கவில்லை. உண்மையில் நம்மைப் போன்ற பாரதி அன்பர்கள் தான் அவன் கருத்தை முதலில் விமரிசனம் செய்ய வேண்டும்; அப்போது குறை கூறல் என்ற நோக்கில் இல்லாமல் விமரிசனம் என்பதே முதன்மையாகத் தோன்றும். அப்படி இன்றி மற்றவர் அதனைச் செய்யும் போது விமரிசனத்தை விட குறை காணலே அதிகம் இருப்பது போன்ற தோற்றம் ஏற்படுகிறது.

குமரன் (Kumaran) said...

சதங்கா. மகாகவி என்பதாலேயே அவன் விமரிசனத்திற்கு உரியவன் ஆகிறான். நாங்கள் பெருமையாக எண்ணுபவரை நீங்கள் தாக்குகிறீர்களே; நீங்கள் பெருமையாக எண்ணுபவரை நாங்கள் தாக்குவோம் என்ற நிலையை எடுப்பவர்கள் தான் நாம் எல்லோரும். இது ஒரு மனோதத்துவப் போராட்டம். இதில் எது சரி எது தவறு என்று எப்படி சொல்வது?

குமரன் (Kumaran) said...

பாரதி விழா நடப்பதைப் பற்றி அறிவித்த பாரதி125பிரான்சு விழாக் குழுவினரே. மிக்க நன்றி.