Sunday, March 28, 2010

நிற்பதுவே! நடப்பதுவே! பறப்பதுவே! - 2

காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ? அங்குக் குணங்களும் பொய்களோ?
சோலையிலே மரங்களெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால்
சோலை பொய்யாமோ? இதைச் சொல்லொடு சேர்ப்பாரோ?

ஒரு நாளிலேயே காலை, பகல், மாலை, இரவு, 24 மணி நேரம், அதைவிட சிறிய நேர பாகுபாடுகள், நாள் என்பதைவிடப் பெரிய நேர பாகுபாடுகள் - வாரம், மாதம், வருடம், நூற்றாண்டு என்று காலத்தைப் பற்றி நாம் எல்லோரும் ஒரே நினைவு கொண்டுள்ளோம். அதனால் தான் உலக நிகழ்ச்சிகள் தடை இல்லாமலும் குழப்பம் இல்லாமலும் நடந்து கொண்டிருக்கின்றன. மேலும் காலம் இறைவனின் உருவம் என்றொரு கொள்கையும் உண்டு.
இப்படி பல வகையாக பிரிக்கப்பட்ட கால அளவுகளில் நாம் எத்தனையோ காட்சிகளைக் காண்கிறோம். அவை எத்தனைக் காலம் ஆனாலும் நம் நினைவில் நிற்கிறது. அப்படி நிற்கும் காலத்தைப் பற்றிய நினைவும் அதில் தோன்றும் காட்சிகளைப் பற்றிய நினைவுகளும் பொய்யா? என்கிறார். நல்லது, தீயது, சாந்தம், வேகம், அறியாமை என்று நாம் காணும் பல விதமான குணங்களும் பொய்களோ? என்கிறார்.

விதை உண்மை. அப்படியென்றால் அதிலிருந்து தோன்றும், சோலையில் உள்ள மரங்கள் எல்லாம் கூட உண்மையாகத்தானே இருக்க வேண்டும். இறைவன் உண்மை. அந்த இறைவனிடமிருந்து தோன்றிய, தோன்றும், தோன்றப்போகும் உலகும் அதில் வாழும் உயிர்களும் எப்படி பொய்யாக முடியும். உண்மையாம் இறைவனிடமிருந்து தோன்றுவதால் அவைகளும் உண்மையாகத் தானே இருக்கவேண்டும். அவை பொய் என்றால் அதனை ஒரு பேச்சாக மதிக்க முடியுமா? என்கிறார்.

காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ?
வீண்படு பொய்யிலே நித்தம் விதி தொடர்ந்திடுமோ?
காண்பதுவே உறுதிகண்டோம் காண்பதல்லால் உறுதியில்லை
காண்பது சக்தியாம்; இந்தக் காட்சி நித்தியமாம்.


இந்த உலகில் எதுவுமே நிலையில்லை; எல்லாம் ஒரு நாள் அல்லது ஒரு நாள் மறைந்து போகும் என்றால், அது சரி, இந்த உலகில் எதுவுமே புதிதாய் தோன்றுவதில்லை; அதனால் மறைந்து போகும் அவையெல்லாம் மீண்டும் தோன்றுமன்றோ? அதனால், நிலையில்லை என்பதால் அவற்றை பொய் எனலாகுமோ? அப்படி அது பொய் என்றால், நல்வினை தீவினை என்று நாம் செய்யும் செயலுக்கேற்ப வந்துறும் விதி எப்படி தொடர்ந்து வருகிறது. கண நேரத்தில் தோன்றி மறைபவை இக்காட்சிகள் என்றால், நாம் செய்யும் செயல்களும் கண நேரத்தில் தோன்றி மறையும் பொய்களாய்த் தானே இருக்க வேண்டும். அப்படிப் பட்ட பொய்களின் பலனை நாம் எப்படி செய்த வினைகளுக்கு ஏற்ப அனுபவிக்கிறோம்? அவ்விதம் விதி தொடர்ந்து வந்து ஊட்டுவதால், தோன்றி மறையும் இவை யாவும் நிலையில்லாதவை மட்டுமே; பொய்களல்ல, என்கிறார்.

நாம் காண்பதெல்லாம் உறுதியானவை; பொய்களில்லை. ஏனெனில் அவை யாவும் சக்தியின் உருவங்களாம். அதனால் இந்த காட்சிகளெல்லாம் அந்த ஆதி சக்தியைப் போலவே நித்தியமானவை என்று கூறி தன் கருத்தை வலியுறுத்துகிறார்.

4 comments:

குமரன் (Kumaran) said...

'பாட்டுக்கொரு புலவன் பாரதி' பதிவில் நவம்பர் 4, 2005 அன்று நான் இட்ட இந்த இடுகையை இப்பதிவிற்கு மாற்றி இடுகிறேன். அப்போது இந்த இடுகைக்கு வந்த பின்னூட்டங்கள்:

9 comments:

சிவா said...
குமரன்,
நல்ல பாட்டு. "பாரதி" திரைப்படம் பார்த்திருக்கிறீர்களா?. அதில் "நிற்ப்பதுவே, நடப்பதுவே" என்று ஒரு பாடலில் இந்த வரிகள் எல்லாம் வரும். மிகவும் அருமையான பாடல். முடிந்தால் கேட்டு பாருங்கள்.

November 04, 2005 6:01 AM
--

Natarajan said...
What is true in this world? All delusion right? You think that what you have today is yours. But what stand with you. Do the work and remain attached? touch your conscience answer, are you being able to do that?

All animals....more than doing service to the poor, animalistic needs comes and rules. Shamefully we say we are trying only to know that we will fail. Worse is that a few have become like a stone, not to mind at all. I need to eat well, fill my tummy, watch some exciting news, possibly in the night either find some carnal pleasure if have a chance, else help ourselves. What sort of life is this?

For instance you have become today so attached to writing, may not be the same tomorrow. I was mad on a girl need to be so ever. What they tell as untrue, is all that is changing. The nature is not the same. The animals in the name of human does not react the same way. If something that is not changing i,e God is called true and all other changing things are calls untrue, what is wrong in that.

They are talking about a stage of glory. Out of all emotions. His songs are mere examples of joy he has got out of the senses. He has written this based on them. Make no mistake, anything that is not in the same form compared to the unchangeable, ever loving God, then it deserves to be called untrue.

Our dead body cannot be kept at home for ever. Once dead it stinks and the same people who clutches to it lovingly will feel it stinks and would throw it away. Now and then God comes up with such things to so us the real world.

But nay, alas we are blind to the senses, we totally forget the real life. All of us run shamelessly to leave a mark behind. I want to amass this, I want to have this and so.

Only Mom is quoted to God, because even if the son is criminal only a mom will love him. That is a divine relationship. All other things are mere fake. A dream which we all clutch too. Come out of the dream.

Un to Him alone let us all place our heart.

Anbudan,
Nata
---

குமரன் (Kumaran) said...

November 04, 2005 8:48 AM
Natarajan said...
Do the work and remain attached?

should be "Do the work and remain un attached?

Anbudan,
Nata
--

November 04, 2005 8:54 AM
குமரன் (Kumaran) said...
சிவா, 'பாரதி' திரைப்படத்தில் வரும் அதே பாட்டு தான் இது. இருமுறை அந்தத் திரைப்படம் பார்த்து, பல முறை இந்த பாடலை இசைஞானியின் இசையில் கேட்டு அனுபவித்திருக்கிறேன்.

எப்போது இந்தப் பாட்டை உங்கள் 'கீதம் சங்கீதம்' வலைப்பதிவில் இடப்போகிறீர்கள்?

November 04, 2005 2:50 PM
--

சிவா said...
குமரன், உங்கள் விருப்பமாக இந்த வாரம் பாடலை போட்டு விடுகிறேன். பாரதி பிண்ணனி இசையை நான் முன்னமே போட்டிருக்கிறேன். கேட்டுருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

November 04, 2005 2:59 PM
--

Anonymous said...
வணக்கம் குமரன்,
சத்தியம் என்பது எப்போதுமே மாறாதது.
அசத்தியம் என்பது எப்போதுமே இல்லாதது.
ஆனால் நாம் காண்பவையோ இன்று இருக்கிறது
நாளை இல்லாமல் போகிறது.
ஆதலால் அவை சத்தியமுமல்ல அசத்தியமுமல்ல்
அவற்றை மித்யை என்று சொல்லவதாக புத்தகத்தில்
படித்திருக்கிறேன். மாயை, மித்யை, சத்தியம்.

March 11, 2007 11:18 AM
--

குமரன் (Kumaran) said...
ஐயா. நீங்கள் சொல்வது என் கருத்துடன் ஒத்துப் போகிறது. சத்தியம், அசத்தியம் பின்னர் மித்யை என்பதைச் சொல்லியிருக்கிறீர்கள். மித்யை என்றால் நிலையில்லாதது என்ற பொருளா, பொய் என்ற பொருளா என்று சரியாக நினைவில்லை.

March 11, 2007 9:16 PM
--

சதங்கா (Sathanga) said...
குமரன்,

அற்புதமான பாடலுக்கு மிக அற்புதமாக விளக்கம் கூறியிருக்கிறீர்கள்.

எனது பதிவில், விளக்கத்தையும் போடலாமா என்று கூட நினைத்தேன். நல்ல வேளை பிழைத்தேன்.

உங்கள் பதிவையும், அதன் பின்னூட்டங்களையும், எனது பதிவின் பிம்பங்களாய்க் காண்கிறேன். உலகத்தில் ஒருத்தரைப் போல ஏழு பேர் இருப்பார்கள் என்று சொல்லுவார்களே. சிந்தனைக்கும் அப்படி ஏதாவது கணக்கு இருக்கோ ?

July 18, 2007 12:46 PM
--

குமரன் (Kumaran) said...
ஏறக்குறைய இரண்டு வருடங்களுக்கு முன்னர் எழுதியவை இவை சதங்கா. உங்கள் விளக்கங்களையும் எழுதுங்கள். சிந்தனைகள் எவ்வளவு தான் ஒரே மாதிரி இருப்பது போல் தோன்றினாலும் அவற்றுள் சிறிய வேறுபாடுகள் இருக்கலாம். அதனால் தயங்காமல் உங்கள் இடுகைகளிலும் உங்கள் விளக்கங்களை எழுதுங்கள்.

July 18, 2007 2:19 PM

Balamurugan said...

//நிலையில்லாதவை மட்டுமே; பொய்களல்ல//

மிகவும் எளிமையான, அருமையான விளக்கம். 'பாரதி' உச்சரிக்கும் பொழுதே சிலிர்க்கிறது. இன்னும் எத்தனை நூற்றாண்டுகளானாலும் தமிழ் இருக்கும் வரை இந்த முண்டாசு கவிஞனின் கவிதை மறையாது.

குமரன் (Kumaran) said...

நன்றி பாலமுருகன்.