Thursday, December 21, 2023

பகல் பத்து உற்சவத்துல என்ன செய்வாங்க?

 'குமரா, பகல் பத்து இராப்பத்துன்னு 20 நாள், வைகுண்ட ஏகாதசி ஒரு நாள், மொத்தம் 21 நாள் திருவிழா சரியா?' 


'மாதவா. ஒரு சிறு திருத்தம் மட்டும் சொல்றேன். பகல்பத்து நீ சொன்னது போல வைகுண்ட ஏகாதசிக்கு முன்னால் வரும் பத்து நாட்கள். இராப்பத்து பத்து இரவும் வைகுண்ட ஏகாதசி அன்னைக்கி தொடங்கிறும்'


'ஓ அப்படியா. அப்படின்னா 21 நாள் கணக்கு எப்படி?'


'இராப்பத்து பத்து நாளும் முடிஞ்ச பிறகு 21ம் நாள் பகல் முழுக்க இயற்பா, சாற்றுமுறைன்னு கடைசி நாள் திருவிழா நடக்கும்'


'ஓகே சரி தான். ஏன் இவ்வளவு விரிவா 21 நாள் உற்சவம் நடத்துறாங்க?'


'வேதத்துக்கு சமமான நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரங்களையும் கேட்டு ரசிக்கணும்னு பெருமாளுக்கு ஆசை. அதனால இந்த 21 நாள் திருவிழா. திருவத்யயன உற்சவம்ன்னு சொல்லுவாங்க. அத்யயனம்னா என்னன்னு தெரியும்ல?'


'வேதம் படிக்கிறது தானே?'


'ஆமா. அதை வேத அத்யயனம்ன்னு சொல்லுவாங்க. வேதத்துக்கு சமமான ஆழ்வார் பாசுரங்களையும் திராவிட வேதம்னு சொல்லுவாங்க. இந்த திராவிட வேதத்தை உட்கார்ந்து ஆனந்தமா ரசிக்கணும்னு விதி'


'ஆமாம்பா. நானும் பாத்துருக்கிறேன். வேதம் சொல்றப்ப நின்னுக்கிட்டு சொல்றவங்க, பாசுரம் சொல்றப்ப உக்காந்துருவாங்க'


'ஆமா. பெருமாளும் உக்காந்து தான் பாசுரம் எல்லாம் கேப்பாரு. ஏன்னா பாசுரங்களோட இனிமை அப்படி'


'ஆமாம் குமரா. இனிமையான தமிழ் தான் பாசுரங்கள் எல்லாம். 


சரி. 21 நாள்ல நாலாயிரம் பாசுரங்கள் பாடுவாங்கன்னு சொன்னியே. அதைப் பத்தி சொல்லு'


'சொல்றேன். பகல்பத்து ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய ஒரு நாளைக்கு 200 பாசுரம்ங்கற கணக்குல முதல் இரண்டாயிரம் பாசுரங்களைப் பாடுவாங்க. 


பெரியாழ்வார் பாடுன திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி

கோதை நாச்சியார் பாடுன திருப்பாவை, நாச்சியார் திருமொழி 

குலசேகர ஆழ்வார் பாடுன பெருமாள் திருமொழி 

திருமழிசை ஆழ்வார் பாடுன திருச்சந்த விருத்தம் 

தொண்டரடிப்பொடி ஆழ்வார் பாடுன திருப்பள்ளியெழுச்சி, திருமாலை 

திருப்பாணாழ்வார் பாடுன அமலனாதிபிரான் 

மதுரகவி ஆழ்வார் பாடுன கண்ணிநுண்சிறுத்தாம்பு 

திருமங்கையாழ்வார் பாடுன பெரிய திருமொழி, திருகுறுந்தாண்டகம் திருநெடுந்தாண்டகம் 


இந்த எல்லா பிரபந்த பாசுரங்களையும் பாடுவாங்க. இதெல்லாம் சேர்த்து முதல் ஆயிரம், இரண்டாம் ஆயிரம்ன்னு சொல்லுவாங்க.'


'திருப்பல்லாண்டு, திருப்பாவை கேட்டிருக்கேன் குமரா. இவ்வளவு பாசுரங்களைப் பத்தி இன்னைக்கு தான் கேள்விப்படறேன்'


'ஒன்னு கவனிச்சியா? நிறைய பிரபந்தங்களுக்கு திருமொழின்னு பேரு இருக்கு. அதனால இந்த பகல் பத்து உற்சவத்துக்கு திருமொழித் திருநாள்ன்னும் ஒரு பேரு இருக்கு'


'பொருத்தமான பேரு தான். அப்படின்னா இராப்பத்து உற்சவத்துக்கும் இன்னொரு பேரு இருக்கணுமே'


'இருக்கே!'


(தொடரும்)

No comments: