Thursday, December 14, 2023

கீதையும் திருவாய்மொழியும்

 'ஸ்வாமி. அடியேன். ஒரு விண்ணப்பம்!'

'சொல்லவேண்டும்!'
'கீதையை அறிந்த ஒருவருக்கும் திருவாய்மொழி அறிந்த ஒருவருக்கும் என்ன வேறுபாடு?'
'இதனை அடியேன் சொல்லவும் வேண்டுமோ?
கீதையை அறிந்த ஒருவர் ஒரு அறிஞர் கூட்டத்தில் வந்து கீதையில் இருந்து ஒரு வார்த்தை சொன்னால், அவருக்கு என்ன பரிசாகக் கொடுக்கிறார்கள் என்று பார்த்துள்ளீரா?'
'உண்டு ஸ்வாமி. ஓர் உழக்கு அரிசி சன்மானமாகக் கொடுப்பார்கள்'
'அவர்கள் நிரந்தரமாக இருக்க ஓர் இடம் தருவார்களா?'
'இல்லை ஸ்வாமி'
'திருவாய்மொழி கற்றவர் அதில் ஒரு பாசுரம் விண்ணப்பம் செய்தால், ஸர்வேச்வரனுக்கு உகந்தவர் ஆன தேவர் முனிவர் எல்லாரும் புறப்பட்டு வந்து, தங்கள் தங்கள் இருப்பிடங்களை ஒழித்துக் கொடுத்து அவரை ஆதரித்து நிற்பார்கள்'
'எங்கு அதனைக் காணலாம் ஸ்வாமி'
'சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின என்று தொடங்கும் திருவாய்மொழி பாசுரங்களைப் பார்த்தாலே தெரியுமே!'
'அடியேன் தாசன்'
- திருவாய்மொழியின் விளக்கவுரையான ஈடு வியாக்யானத்தில் சொல்லப்பட்ட, 'நம்பி திருவழுதி நாடு தாசர்' என்ற ஆசார்யாருக்கும் ஒரு அன்பருக்கும் நடந்த உரையாடல் இது. இதனை தற்கால மொழி நடையில் அடியேன் குமரன் மல்லி எழுதினேன்.

No comments: