Thursday, December 14, 2023

கீதையும் அருச்சுனனும்

 'சுவாமி. அடியேன். தேவரீரிடம் ஒரு விண்ணப்பம்!'

'சொல்லும் பிள்ளாய்!'
'கீதையை எம்பெருமானிடம் நேரே கேட்ட அருச்சுனன் எம்பெருமானைப் பெற்றானா இல்லையா?'
'அருச்சுனன் பெருமாள் திருவடியை அடைந்தானா இல்லையா என்பதால் உமக்கு என்ன வந்தது?
கீதையைச் சொன்னவன் எல்லாருக்கும் பொதுவானவன். கீதையும் பகவானின் திருவாக்கு. இது இரண்டும் நிச்சயம்.
அவரவர் தமதமது அறிவு அறி வகை, அவரவர் செய்த புண்ணிய பாவங்களுக்கு ஏற்ப, அவரவர்களுக்கு இருக்கும் ருசிக்கு ஏற்ப, கீதையிலிருந்து வெவ்வேறு பயன்களைப் பெறுகிறார்கள்.
கீதையிலிருந்து நன்மை பெற்றவர்களைப் பார்த்து நாமும் அதன் படி கீதையிலிருந்து நன்மை அடைய பார்ப்பதன்றோ நமக்கு ஏற்றது?
குளிர்ந்த தண்ணீர் எங்காவது இருந்தால், அதோ அந்த குளத்துக்கு உரியவன் அதில் நீர் குடித்தானா என்று கேட்காமல், நீர் குடித்துத் தாகம் தீர்ந்தவர்களைப் பார்த்து, அது போலே நாமும் தாகம் தீர்ப்பதன்றோ நல்லது?'
- ஸ்ரீவைஷ்ணவ ஆசார்யர்களான நம்பிள்ளைக்கும் நஞ்சீயருக்கும் நடந்த உரையாடல் என்று திருவாய்மொழி விளக்கவுரையில் வரும் ஒரு நிகழ்ச்சி இது. இதனை தற்கால மொழி நடையில் அடியேன் குமரன் மல்லி எழுதினேன்

No comments: