Friday, February 02, 2024

பயன் அல்ல செய்து பயனில்லை நெஞ்சே! பாகம் 1


விஜயன் (பாடிக் கொண்டே வருகிறார்): பயன் அல்ல செய்து பயனில்லை நெஞ்சே!
குமரன்: விஜயா! இது என்ன பாட்டு?
வி: குமரா! நம்மாழ்வார் பாசுரம் இது. நம் அழகர் கோவிலைப் பற்றி பாடிய பாசுரம்.
கு: சரி தான். பயன் இல்லாதது என்று எதைச் சொல்கிறார்?
வி: நீயே சொல்லேன். பயன் உள்ளவை எவை; இல்லாதவை எவை என்று!
கு: ம்ம்ம். அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு வித புருஷார்த்தங்களை அடைவதற்கு வேண்டியவை செய்வது பயன் உள்ளவை. சரி தானா?
வி: அறம், பொருள், இன்பம் இம்மூன்றுமே இகத்தைச் சார்ந்தது. அவை எப்போது பயன் உள்ளவை ஆகும்?
கு: வீடு என்னும் பயனை நோக்கியதாக அவை இருக்கும் போது.
வி: வீடு என்றால் என்ன?
கு: பிறப்பு இறப்பு என்னும் சுழலில் இருந்து விடுபடுவது வீடு.
வி: சரி தான். வீடு என்ற பயனை நோக்கியதாக மற்ற மூன்றும் அமையுமா?
கு: அமையும் என்றே எம்பெருமானார் இராமானுசர் சொல்கிறார். கண்ணனுக்கே ஆமது காமம், அறம், பொருள் என்கிறார்.
கண்ணன் மேல் காமம், காதல் அமைதல் வீடு பெற வழி.
கண்ணனுக்கு உகந்ததாக செய்யப்படுவதே அறம்; அதுவே வீடு பெற வழி.
கண்ணனுக்கு உகந்தவற்றை செய்ய ஈட்டப்படுவது பொருள் என்னும் செல்வம்; அதுவே வீடு பெற வழி.
வி: சரி தான். அந்த வீடு என்பதை யார் தருவார்?
(தொடரும்)

No comments: