Wednesday, July 10, 2013

வீட்டுச் சிறையில் ஆய்க்குலச் சிறுமியர்

'நல்ல கதையாகச் சொன்னீர்கள் அப்பா. கோபியர்களை நினைத்தால் அவர்கள் மேல் பொறாமையும் நட்பும் பெருமையும் பரிதாபமும் என்று பல உணர்ச்சிகள் ஒரே நேரத்தில் வருகின்றன'

'கோதை. உனக்கு அவர்கள் மேல் நட்பும் பரிதாபமும் ஏன் வருகின்றன என்று எனக்குப் புரிகிறது. உன்னைப் போன்றே அவர்களும் கண்ணனால் அவன் மேல் வைத்தக் காதலால் படாத பாடு பட்டார்கள் அல்லவா?

இப்போது நீ சூடிக் கொடுக்கும் மலர்மாலைகளை மாயவன் விரும்பி அணிகின்றான். உன் ஆசைப்படி உன்னையும் அவன் ஏற்றுக் கொள்வான் என்று இப்போது எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது அம்மா. அந்த நல்ல காலத்தை விரைவாக வரச்செய்ய கோபியர்கள் செய்ததையே நீயும் செய்யலாம் அம்மா'

'அப்படியா சொல்கிறீர்கள் அப்பா?! அவனை அடைய என் காலடி மண்ணை அவன் தலைமேல் அணியக் கொடுக்க வேண்டும் என்றாலும் நான் கொடுப்பேன்'

'அப்படி சொல்லவில்லை அம்மா. கோபியர் செய்தது இன்னொன்று இருக்கிறது. அதனைச் செய்ததால் அவர்கள் அவனுடன் இணைந்தார்கள். அதனைச் செய்தால் நீயும் அவனை அடையலாம்'

'அப்பா. இவ்வளவு நாள் அதனைப் பற்றி சொல்லவே இல்லையே அப்பா. விரைவில் சொல்லுங்கள் அப்பா. அவர்கள் என்ன செய்தார்களோ அது எவ்வளவு கடினமாக இருந்தாலும் நானும் செய்கிறேன். செய்து பலனைப் பெறுகிறேன்.'

'அம்மா. உன்னைப் போல் தான் அவர்களும் கண்ணனையே பலனாக விரும்பி ஒரு நோன்பு நோற்றார்கள். அதே நோன்பை நீயும் நோற்கலாம். கண்ணன் அருளால் அந்த நோன்பை நோற்கும் மார்கழி புண்ய காலமும் நெருங்கி வருகிறது'.

***

'கோகுலத்தில் எந்த வேலையும் இப்போதெல்லாம் நடப்பதில்லை. இந்தக் கண்ணனின் குழலோசையைக் கேட்டால் போதும். வீட்டு வேலைகள் எல்லாவற்றையும் அப்படி அப்படியே விட்டுவிட்டு இந்த இளஞ்சிறுமியர் அவன் குழலொலியைக் கேட்க ஓடி விடுகின்றனர். சிறுவனான கண்ணன் சிறுமியரை இப்படி கவர்கிறான் என்றால் அவன் தாயைப் போலும் தமக்கையைப் போலும் வயதுடைய பெண்டிர்களும் அப்படித் தான். அவனைத் தம்பி தம்பி என்று கொஞ்சுவது என்ன? தன் மகன் என்றே எண்ணி மகிழ்வது என்ன? இப்படி ஆய்ப்பாடிப் பெண்கள் எல்லோரும் கண்ணனின் மேல் ஆசையும் பாசமும் வைத்து எந்த வேலையும் செய்யாமல் இருந்தால் வீட்டு வேலைகளை எல்லாம் யார் செய்வது?'

'நாட்டாமை. நீங்க சொல்றது சரிதான். இப்படித் தான் என் பொண்டாட்டியும் பிள்ளைங்களும் எப்பப் பாத்தாலும் கண்ணன் கண்ணன்னு அவன் பெயரையே சொல்லிக் கொண்டு எந்த வீட்டு வேலையும் செய்வதில்லை.'

'என் பொண்டாட்டியாவது நான் சொல்றதைக் கேட்டுக்கிட்டு எப்பவாவது தான் கண்ணனைப் பார்க்கப் போகிறாள். ஆனால் என் பத்து வயது மகளைத் தான் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவள் வயதுத் தோழியர்களுடன் கண்ணனைக் காணவும் அவனுடன் விளையாடவும் ஓடிவிடுகிறாள். அவளை அடக்கினால் போதும்; மற்ற பெண்களும் அடங்கிவிடுவார்கள்'.

'என்ன சொல்கிறீர்கள் நீங்கள்? எதற்காக யாரையாவது அடக்க வேண்டும்? ஏற்கனவே நம் பெண்டிரை நாம் அடக்கி வைத்திருப்பது போதாதா? அழகுக் கண்ணனின் கீதத்தை அவர்கள் கேட்பதையுமா தடுக்க வேண்டும்?'

'நாட்டாமை ஐயா. இந்த குமுதன் சொல்வதைக் கேட்காதீர்கள். கொஞ்சம் படித்துவிட்டாலே இப்படித் தான். பெண்களை அடக்கக் கூடாது; சுதந்திரம் தரவேண்டும் என்று பேசத் தொடங்கிவிடுவார்கள். நாம் நம் முறைப்படி என்ன செய்ய வேண்டுமோ அதனைச் செய்ய வேண்டியது தான்'

'சரி. எல்லாரும் சொல்றதுனால இப்படி செஞ்சா என்னன்னு ஒரு யோசனை தோணுது. பேசாம நம் வீட்டுப் பெண்களில் பதினாறு வயதிற்கு குறைவானவர்கள் தங்கள் வீட்டுப் பெரியவர்களுடன் தான் அதுவும் ஆண் துணையுடன் தான் வெளியே வரவேண்டும். தனியாகவோ தன் வயதொத்தவர்களுடனோ வெளியே வரக்கூடாது என்று ஊர்க்கட்டுப்பாடு போட்டுவிட்டால் என்ன?'

'சரியாச் சொன்னீங்க நாட்டாமை ஐயா. அப்படியே செஞ்சுடலாம்'.

'சரி. எல்லாரும் என்ன சொல்றீங்க. எல்லாருக்கும் சம்மதமா?'

'எனக்குச் சம்மதம் இல்லை. ஆனா நான் சொல்றதை யாரு இங்க கேக்கப் போறீங்க? நடத்துறதை நடத்துங்க'.

'சரி. குமுதனைத் தவிர வேறு யாராவது மறுப்பு தெரிவிக்கிறீங்களா?'

'இல்லை. இல்லை'

'நல்லது. நம் ஆயர்குலத்துக்கு அதிபதியான நந்தகோபரிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு இப்படி ஒரு கட்டுப்பாட்டைப் போட்டுவிடலாம். நீங்கள் அனைவரும் இந்தக் கட்டுப்பாட்டின் படி நடந்து கொள்ள வேண்டும்'.

'நடந்து கொள்கிறோம். நடந்து கொள்கிறோம்'.

***
2007ல் எழுதியதன் மறுபதிவு...

3 comments:

குமரன் (Kumaran) said...

Comments from original post:

4 comments:

வடுவூர் குமார் said...
பக்தி வந்துவிட்டால் 16 என்ன? 56 என்ன?
கண்ணன் குழலோசையில் அவ்வளவும் அடங்கிவிடும்.
March 25, 2007 8:10 PM
குமரன் (Kumaran) said...
உண்மை குமார். பதினாறோ ஐம்பத்தி ஆறோ காற்றினிலே வரும் கீதம் எல்லோரையும் மயக்குகிறதே. புருஷோத்தமன் கண்ணனின் முன்னால் அவனையே சார்ந்திருக்கும் நாமெல்லாருமே காலமெல்லாம் அவன் காதலை எண்ணி உருகிக் கொண்டிருக்கலாம்.
March 25, 2007 8:18 PM
மதுரையம்பதி said...
எங்கெல்லாம் சென்றுவருகிறீர்களய்யா.....அருமை, அருமை...
March 27, 2007 4:12 AM
குமரன் (Kumaran) said...
தங்களின் பாராட்டிற்கு நன்றி மௌலி ஐயா. :-)
March 28, 2007 5:15 PM

கோவி.கண்ணன் said...

//ஆய்க்குலச் சிறுமியர்//

:))

ஆயர்குலமா ? ஆய்க்குலமா ?

ஆய்க்குலம் சரியான சொல் என்றாலும் .........இடக்கரடக்கல் போன்று உள்ளது

குமரன் (Kumaran) said...

சொல்லின் பொருள் காலத்திற்கு காலம் சற்று மாறத் தான் செய்கிறது. இதே தலைப்பில் 2007ல் எழுதியபோது அந்தப் பொருள் தொனிக்கவில்லை. இப்போது தொனிக்கிறது. :)