Sunday, March 14, 2010

இன்பத்துப் பால்: புணர்ச்சி மகிழ்தல் - 1

கண்டு கேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் பெண்ணில் இருக்கு - இந்தப் பெண்ணில் இருக்கு. இந்தத் திரைப்படப் பாடல் வரியை பலரும் கேட்டிருப்போம். இது ஐயன் வள்ளுவன் சொன்னதை அப்படியே சொன்னது.

கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உள


கண்ணால் கண்டும் காதால் கேட்டும் நாவால் உண்டும் மூக்கால் மோந்தும் உடலால் தீண்டியும் அனுபவிக்கப்படும் எல்லா இன்பங்களும் இந்த ஒளி பொருந்திய வளையல்களை அணிந்த பெண்ணிடம் மட்டுமே உண்டு.

ஐம்புலன்களால் ஒரே நேரத்தில் அனுபவிக்கப்படும் இன்பம் என்று வேறொன்றும் இல்லை. இசைத்துப் பாடப்படும் பாடல் போன்று சில ஒன்றிரண்டு புலன்களுக்கு ஒரே நேரத்தில் இன்பமூட்டுபவையாக இருக்கின்றன. ஆனால் எல்லாப் புலன்களுக்கும் ஒரே நேரத்தில் இன்பம் ஊட்டும் திறம் இந்தப் பெண்ணில் மட்டுமே உள்ளது என்பதைத் தான் ஒண்டொடி கண்ணே என்று ஏகாரத்தால் சொன்னான் காதலன்.

கண்டு - கண்ணால் கண்டு

கேட்டு - காதால் கேட்டு

உண்டு - நாவால் உண்டு

உயிர்த்து - மூக்கால் நுகர்ந்து

உற்று - உடலால் தீண்டி

அறியும் ஐம்புலனும் - அனுபவிக்கும் ஐம்புல இன்பங்களும்

ஒண்டொடி - ஒண் + தொடி - ஒளி பொருந்திய வளையல்; இங்கே அந்த வளையலை அணிந்தப் பெண்ணைச் சுட்டியது

ஒண்டொடி கண்ணே உள - பெண்ணிடம் மட்டுமே இருக்கின்றன.

***

பிணிக்கு மருந்து பிற மன் அணியிழை
தன் நோய்க்குத் தானே மருந்து

உலகத்தில் எல்லா வித பிணிகளுக்கும் அந்த பிணிகளை ஏற்படுத்தியவை எதுவோ அதற்கு எதிர்மாறான குணங்கள் கொண்டவையே மருந்தாக அமையும். அழகிய அணிகலன்களை அணிந்த இந்தப் பெண்ணோ அவளால் உண்டான நோய்க்கு அவளே மருந்தாகிறாள். இது பெருவியப்பு அன்றோ?

பிணிக்கு மருந்து பிற மன் - பிணிகளுக்கு மருந்து அந்தப் பிணிகளை ஏற்படுத்தியவைகளை விட மாறான மற்றவை

அணியிழை தன் நோய்க்குத் தானே மருந்து - அணிகலன்களை அணிந்த இந்தப் பெண்ணோ அவள் ஏற்படுத்திய காதல் நோய்க்கு அவளே மருந்தாகிறாள்.

***

தாம் வீழ்வார் மென்றோள் துயிலின் இனிது கொல்
தாமரைக் கண்ணான் உலகு.

தாம் விரும்பும் பெண்ணின் மெல்லிய தோளில் சாய்ந்து துயில்வதிலும் இன்பம் பயப்பதோ தாமரைக்கண்ணான் ஆகிய இறைவனின் உலகம்? இல்லவே இல்லை.

தாமரைக்கண்ணான் என்றது திருமாலை.

மென் தோள் துயில்தல் அதனை அடுத்த இன்பம் புணர்தலைக் குறித்து நின்றது.

தாம் வீழ்வார் மென்றோள் - தாம் விரும்பும் பெண்ணின் மெல்லிய தோளில்

துயிலின் - துயிலுவதை விட

இனிது கொல் - இனிமை பயப்பதோ? (இல்லை)

தாமரைக் கண்ணான் உலகு - தாமரைக்கண்ணனின் உலகம்.

***

நீங்கின் தெறூஉம் குறுகும் கால் தண்ணென்னும்
தீ யாண்டுப் பெற்றாள் இவள்

இவளைப் கூடும் முன்னரும் கூடிய பின்னரும் காதல் நோயால் சுடுகின்றாள்; இவளை நெருங்கும் போதும் கூடும் போதும் குளிர்ச்சியாக இருக்கிறாள். இப்படிப்பட்டப் புதுமையானத் தீ இந்த உலகில் இல்லை; எந்த உலகிலிருந்து இவள் பெற்றாள்?

நீங்கின் தெறூஉம் - விலகினால் சுடும்

குறுகும் கால் தண்ணென்னும் - நெருங்கும் போது தண்ணென்று குளிரும்

தீ யாண்டுப் பெற்றாள் இவள் - இப்படிப்பட்டத் தீயை எங்கே பெற்றாள் இவள்?

***

வேட்ட பொழுதின் அவையவை போலுமே
தோட்டார் கதுப்பினாள் தோள்


விரும்பிய பொருள்களெல்லாம் விரும்பிய போதெல்லாம் வந்து இன்பம் தந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது பூவினைச் சூடிய தோளில் தாழ்ந்த கூந்தலையுடைய இவளின் தோள்.

தோள் தாழ் கதுப்பினாள் - தோளில் தாழும் கூந்தல் உடையவள் என்று ஒரு அறிஞர் உரை செய்கிறார். கலவியின் போது தோளில் தாழ்ந்ததாம் கூந்தல்.

தோடு தார் கதுப்பினாள் - தொடுத்த மலர் மாலை அணிந்த கூந்தல் உடையவள் என்று இன்னொரு அறிஞர் உரை செய்கிறார்.

தோள் தரும் இன்பம் என்றது அதற்கு பின்னர் வரும் இன்பத்தைப் பற்றி.

வேட்ட பொழுதின் - விரும்பிய உடனே அப்போதே

அவையவை போலுமே - விருப்பப்பட்ட பொருள்களால் ஏற்படும் இன்பத்தைப் போன்றதே

தோட்டார் கதுப்பினாள் தோள் - தோளில் சாயும், மலர்மாலை சூடிய, கூந்தலையுடையவளின் தோள்.

16 comments:

குமரன் (Kumaran) said...

17 comments:

குமரன் (Kumaran) said...
ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்டது இந்தப் பதிவில் மீண்டும் எழுத. நீண்ட இடைவெளிக்கு மன்னிக்கவும்.

July 21, 2007 10:59 PM
--

Anonymous said...
Very good

July 23, 2007 2:33 PM
--

குமரன் (Kumaran) said...
நன்றி நண்பரே. நீங்களாவது திருக்குறள் இடுகையைப் படித்துப் பின்னூட்டம் இட்டீர்களே. மிக்க நன்றி. :-)

July 23, 2007 5:15 PM
--

சிவபாலன் said...
Nice Post!

Thanks for Sharing!

July 23, 2007 5:34 PM
--

G.Ragavan said...
அருமையான குறள்கள். புணர்ச்சி மகிழ்தல் என்பதைக் காதலன் வழியிலிருந்து சொல்லியிருக்கிறார். குறிப்பாக நோய்க்கு நோயே மருந்து என்பது அழகிய கவிதை.

July 23, 2007 5:34 PM
--

குமரன் (Kumaran) said...
நன்றி சிவபாலன்.

July 24, 2007 6:26 AM
--

குமரன் (Kumaran) said...

குமரன் (Kumaran) said...
ஆமாம் இராகவன். காதலன் வழியில் பல நல்ல கருத்துகளைச் சொல்லியிருக்கிறார் இந்தக் குறள்களில்.

நோய்க்கு நோய் மருந்தா? எங்கே சொல்லியிருக்கார் அப்படி? ஓ. அவள் தரும் நோய்க்கு அவளே மருந்துன்னு சொன்னதைச் சொல்றீங்களா? :-) நீங்க அந்தப் பெண்ணையே நோய் ஆக்கிட்டீங்களே? :-)

ஒவ்வொரு குறளும் அருமையான கவிதை இராகவன் இந்த இடுகையில். அந்தக் கவிதைகளை நன்கு இரசித்து எழுதினேன் இந்த இடுகையை.

July 27, 2007 4:17 PM
--

வவ்வால் said...
குமரன் ,

நல்ல முயற்சி, இன்பத்து பால் குறள்களை பள்ளிப்பாடத்தில் வைப்பதில்லை, எனவே பாடப்பகுதி வாயிலாக குறள் படித்தோர் யாருக்கும் அது தெரியாமலே , குறள் என்றால் அகர முதல என்ற அளவிலேயே ஆரம்பித்து அங்கேயே முடிந்து விடும்.

விரும்பி திருக்குறள் படிப்போர் வெகு சொற்பமே! நான் பள்ளிப்பருவத்திலேயே காமத்துப்பால் குறள் எல்லாம் ஏன் சார் சிலபஸ்ல வைக்கலைனு கேட்டு உன் வயசுக்கு அதுலாம் வேறக்கேட்குதா என ஆசிரியரிடம் திட்டு வாங்கினேன்! :-))

July 27, 2007 5:11 PM
--

கால்கரி சிவா said...
குமரன், படிக்காத திருக்குறள் களை படிக்கத்தந்தமைக்கு நன்றி.

திருவள்ளுவர் ஒரு ஆணாதிக்கவாதியாக இருக்குமோ என நினைக்கத் தோன்றுகின்றது.

பெண்ணை ஒரு சக மனுசியாக நினைக்காமல் ஒரு போக பொருளாக நினைத்துவிட்டாரா?

August 01, 2007 4:36 PM
--

குமரன் (Kumaran) said...
சிவா அண்ணா. நல்லா சொன்னீங்க போங்க. இந்தக் கால எண்ணச் சூழலை அந்தக் காலக் கவிதைக்குப் பொருத்திப் பார்க்கலாமா? காதலைப் பேசும் போது போகத்தைப் பேசாமல் வேறு எதைப் பேசுவது? ஆணுக்குப் பெண் போகப்பொருள்; பெண்ணுக்கு ஆண் போகப்பொருள். அப்படி இருப்பது தானே காதலின்பத்திற்கு நல்லது. வேறு இடத்தில் பெண் எப்படி தன் தலைவனை அனுபவித்தாள் என்று சொல்கிறார். அப்போது அவர் பெண்ணியவாதி என்றோ பெண்ணாதிக்கவாதி என்றோ சொல்வீர்களா? :-)

பெண்ணை போகப்பொருளாக மட்டும் நினைத்து அவளுடைய உணர்வுகளைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் இருப்பவரே சகமனுசியாக மதிக்காத ஆணாதிக்கவாதியாக முடியும். அப்படிப்பட்டவரால் பெண்ணின் மெல்லிய உணர்வுகளான காதல் உணர்வுகளை அழகியக் கவிதைகளாக வடிக்க இயலாது. வள்ளுவர் அதையும் செய்வதால் உங்கள் குற்றச்சாட்டு மேலோட்டமாகப் படித்ததால் வந்த எண்ணமே.

August 01, 2007 4:51 PM
--

வெற்றி said...
குமரன்,
நல்ல விளக்கம். வள்ளுவர் எல்லாம் அனுபவித்த ஒரு கில்லாடியாத்தான் இருந்திருப்பார் என நினைக்கிறேன்.:-)

August 01, 2007 11:15 PM
--

கால்கரி சிவா said...
குமரன், நான் அறியாமையில் தான் சொல்லிவிட்டேன்.

தங்கள் விளக்கம் மிக நன்று.

பெண்ணின் பார்வையில் போகத்தை எப்படி திருவள்ளுவர் விளக்குகிறார் என்பதையும் சொன்னால் நன்றாய் இருக்கும்.

அந்த அத்தியாயத்திலிருந்து ஒரு குறள் இந்த அத்தியாயத்திலிருந்து ஒரு குறள் என சொன்னால் ஒரு பாலன்ஸ் கிடைக்கும் என நினைக்கிறேன். என்னை மாதிரி அவசரக்குடுக்கைகளுக்கும் சற்று நிம்மதி கிடைக்கும்.

August 02, 2007 11:47 AM
--

குமரன் (Kumaran) said...
சிவா அண்ணா. ஒவ்வொரு அதிகாரமாக எழுதிக் கொண்டு வருகிறேன். பெண்ணின் பார்வையில் வரும் இன்பத்துப்பால் குறள்கள் வரும் போது சொல்கிறேன். நீங்களும் தொடர்ந்து பார்த்து வாருங்கள்.

August 02, 2007 4:20 PM
--

குமரன் (Kumaran) said...
நீங்க சொல்றது சரிதான் வவ்வால். திருக்குறள் என்றாலே மனப்பாடப் பகுதியில் வந்தவற்றைப் பொருள் புரியாமல் மனப்பாடம் மட்டுமெ செய்துவிட்டு வந்துவிட்டோம். இன்பத்துப்பாலை பள்ளியில் படிக்க முடியாததால் தான் அங்கிருந்து தொடங்கலாம் என்று தொடங்கினேன். :-) இப்போது தான் இந்தக் குறட்பாக்களை நெருங்கிப் பொருளுடன் படித்து அறிய முயல்கிறேன். நன்றாகச் செல்கிறது.

August 02, 2007 4:22 PM
--

குமரன் (Kumaran) said...
வெற்றி. வள்ளுவர் ஒருவரா பலரா என்ற கேள்வியும் இருக்கிறது. அந்த விவாதத்திற்குள் செல்லாமல், வள்ளுவர் ஒருவரே என்று எண்ணிக் கொண்டோமானால் ஆமாம் அவர் படுகில்லாடியாகத் தான் தெரிகிறார். அறம், பொருள், இன்பம் மூன்றிலுமே உலகம் மெச்சத்தக்கக் கருத்துகளைக் கொண்டிருப்பது எளிதில்லை.

August 02, 2007 4:24 PM
--

தஞ்சாவூரான் said...
வித்தியாசமான முயற்சி! வாழ்த்துக்கள்!

August 02, 2007 8:12 PM
--

குமரன் (Kumaran) said...
நன்றி தஞ்சாவூரரே.

August 02, 2007 8:32 PM

sury siva said...

//பற்றிற்றெல்லாம் பற்றி அவனையும் பற்றுகை பக்தி; விடுவதெல்லாம் விட்டுத் தன்னையும் விடுகை ப்ரபத்தி' - வார்த்தாமாலை//
இன்பத்துப்பாலில் இருந்து பிச்சு பிச்சு உதறி இருக்கிறீர்கள். ஒரு பக்கம் நன்றாக இருக்கிறது.
இருப்பினும்,
இது பக்தியா அல்லது ப்ரபத்தி யா ?

ஒன்னும் புரியல்லையே ?

சுப்பு

குமரன் (Kumaran) said...

நல்ல கேள்வி ஐயா. வரவேண்டிய ஐயம் தான். :-)

கண்ணனுக்கே ஆமது காமம்! அதனால் இது பிரபத்தி தான் என்று தான் சொல்லணுமோ? :-)

sury siva said...

// கண்ணனுக்கே ஆமது காமம்! அதனால் இது பிரபத்தி தான் என்று தான் சொல்லணுமோ? :-)//


என்ன இது ! இன்னும் குழப்பம் ஆகிவிட்டதே !

அந்தக் கண்ணபிரான் தான் வந்து தீர்ப்பு சொல்லணும்.

நம்ம கண்ணபிரான் ஸார் ஆவது வந்து சொல்றாரா பாப்போம்.

சுப்பு ரத்தினம்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//sury said...
அந்தக் கண்ணபிரான் தான் வந்து தீர்ப்பு சொல்லணும்.
நம்ம கண்ணபிரான் ஸார் ஆவது வந்து சொல்றாரா பாப்போம்//

முருகா!
என்ன சூரி சார், என்னைய போய் அடைமொழி எல்லாம் குடுத்து கூப்பிட்டுக்கிட்டு? :)

கண்ணனுக்"கே" உரியது காமம்!
ஆம்! கண்ணனுக்"கே" ஆமது காமம்!

இது பக்தியா? ப்ரபத்தியா?
இல்லை, ஞானமா? கர்மமா?

காமத்திலும் காமம் பற்றிய ஒரு விதமான "ஞானம்" இருக்கே! :)
காமத்தில் சில கர்மங்கள்/செயல்கள் இருக்கே! செயல் இல்லாது காமம் இல்லையே! :)

காமம் என்றால் என்ன? :)
Lust?
Pleasure Seeking?
Love?
Appeasement?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

"காமம்" = உடல் சுகம் தானா?
உள்ளச் சுகம் இல்லையா?

சிவ+காமி என்கிறார்களே! அப்போ காமம்-ன்னா என்ன?

இன்னிக்கி "காமம்"-ன்னா ஒரு குறிப்பிட்ட பொருள் சமூகத்தில் இருக்கு! காமக் கதைகள்-ன்னு சொன்னா ஒரு கிளுகிளுப்பு! :)

ஆனால் இன்னிக்கு மட்டும் அல்லாமல், எல்லாக் காலத்திலும் "காமம்" என்பதன் பொருள் என்ன?

"காமம்" = விழைவு, ஆசை!
ஆராத விழைவு! ஆராத ஆசை!

* காதலில் = உள்ளச் சுகம் உண்டு!
* காமத்தில் = உள்ளச் சுகம் + உடல் சுகம் + ஆன்ம சுகம் அனைத்துமே உண்டு! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

மலரினும் "மெல்லிது" காமம் - சிலர் அதன்
செவ்வி தலைப் படுவார்
என்கிறார் ஐயன்!

அறம்->பொருள்->காமம்->வீடு
* அறத்தால் பொருள் ஈட்டல்,
* பொருள் நிலையில் காமம் கொள்ளல்,
* காமத்தால் வீடு பேறு,
என்று காட்டுகிறாரோ? :)

காமத்தால் எல்லாம் மோட்சம் பெற முடியுமா என்ன? :))
காமமே சிறந்த புருஷார்த்தம் என்று ஆழ்வார்கள், ஆசாரியர்கள், இராமானுசர் முதற்கொண்டு சொல்லி இருக்காங்க போல இருக்கே! :))

சேமநல்வீடும் பொருளும் தருமமும் சீரிய நற்
காமமும் என்று இவை நான்கென்பர்! நான்கினும், கண்ணனுக்கே
ஆமது காமம்! அறம் பொருள் வீடிதற்கு! என்றுரைத்தான்
வாமனன் சீலன் இராமானுசன் இந்த மண்மிசையே!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

காமம் பத்தி பப்ளிக்காப் பேசறது கொஞ்சம் கத்தி முனையில் நடப்பது தான்! இருந்தாலும் பேசுகிறேன்! முருகா! :)

ஒரு நல்ல காமம் எப்படி இருக்கும்?

* காமத்தில் கவனச் சிதைவு என்பதே கிடையாது! முழு ஈடுபாடு! :)(தியானம், தவம் கற்றுக் கொள்ளாமலேயே இப்படி இருக்க முடிவது எப்படி? ஹா ஹா ஹா)
* விழைவு இருந்து கொண்டே இருக்கும்!
* எந்நிலையிலும் அந்த ஊற்று மாறாது!

* காதலில் = உள்ளச் சுகம்
* காமத்தில் = உள்ளச் சுகம் + உடல் சுகம் => அதனால் ஆன்ம சுகம்!

ஒரு நல்ல காமம்...
* அதையே மீண்டும் நாடும்!
* நாடி என்றும் லயிக்கும்!
* விட்டுவிட்டு ஓடாது! ஆராது விழையும்! விழைந்து கொண்டே இருக்கும்!

ஒரு நல்ல காமம் தன்னை முன்னிறுத்திக் கொள்ளாது! வாங்கலை விட கொடுக்கலே நிறைய இருக்கும்!
உலக படோபட வேடங்கள் எதுவும் இன்றித், தான் தானாக, தன்னை இழக்கும்!

இது தான் காமம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

காமம் = உள்ளச் சுகம் + உடல் சுகம் => அதனால் ஆன்ம சுகம்!

ஆன்மா தன்னை அறிந்தால் மட்டும் போதாது! (ஆத்ம சாஷாத்காரம்)
அவனிடம் ஆட்படவும் வேண்டும் அல்லவா? (பரமாத்ம சாஷாத்காரம்)

* உலக படோபட வேடங்கள் எதுவும் இன்றித், தான் தானாக இருக்கும் போது, தன்னை அறிகிறது!
* இழக்கும் போது, ஆட்படவும் செய்கிறது! - என்னை "இழந்த" நலம் சொல்லாய் முருகா, சுர பூபதியே!

இப்போ, காமத்தைப் புரிந்து கொண்ட பின், கேள்விக்கு வருவோம்!
காமம் = பக்தியா? சரணாகதியா (ப்ரபத்தியா)?

* பற்றிற்று எல்லாம் பற்றி, அவனை"யும்" பற்றுதல் = பக்தி
* விடுவன எல்லாம் விட்டு, "தன்னையும் விடுதல்" = ப்ரபத்தி!

இப்போ சொல்லுங்க பார்ப்போம்....
காமம் = பக்தியா? ப்ரபத்தியா?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அன்றாட உலக வாழ்வில், காமம் சிறிது நேரமே நிலைத்து, மீண்டும் உலக வேடங்களுக்கு ஆட்பட்டு விடுகிறோம்!
பணம், புகழ், மரியாதை, வசதியான வாழ்வு, சமூக கவுரவம் - என்ற "மற்ற ஆசைகள்" முந்தி விடுகின்றன!

அதனால் தான் தோழி கோதை...
"மற்றை நம் காமங்கள்" மாற்றேலோ ரெம்பாவாய் என்றாள்!

மற்றை நம் காமங்கள் மாற்றேலோ!
கண்ணனின் காமங்கள் ஏற்றேலோ!

நல்ல காமம் ஆராதி விழையும்! தன்னை இழக்கும்!
என் பால் நோக்காயே ஆகிலும், நின் பற்று அல்லால் பற்றில்லேன்!
உன் அந்தமில் சீர்க்கு அல்லால், வேறெங்கும் அகம் குழைய மாட்டேனே!

அதனால் தான் காமம் = ப்ரபத்தியே!
விடுவன எல்லாம் விட்டு, தன்னையும் விடுதல்...
என்னை இழந்த நலம், சொல்லாய் என் முருகா!

* தன்னால் தேட முடியும் என்ற ஞான யோகம் இல்லை! - அவ"னே" என்கிற ஞானம் மட்டுமே!
* தன்னால் செய்ய முடியும் என்ற கர்ம யோகம் இல்லை! - "அவன் செய்கைக்கு நிற்றல்" என்ற கர்மம் மட்டுமே!
* பற்றிற்று எல்லாம் பற்றி அவனையும் பற்றும் பக்தி இல்லை!
* விடுவன எல்லாம் விட்டு, தன்னையும் அவனுக்"கே" விடுதல் என்ற ப்ரபத்தி மட்டுமே!

அனன்ய சரணஹ!
த்வாம் சரணம்!
சரணம் அஹம் ப்ரபத்யே!

சர்வ தர்மான் பரித்யஜ்ய
த்வாம் ஏகம் சரணம்...
சரணம் சரணம் சண்முகா சரணம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இன்னொன்றும் தெளிவுபடுத்தி விடுகிறேன்...

கண்ணனுக்கே உரியது காமம்-ன்னா, உலகில் எல்லாரும் கண்ணனைக் கல்யாணம் கட்டிக்கிட்டு, அவனோடு குடும்பம் நடத்தி குழந்தை பெற்றுக் கொள்வது-ன்னு மட்டும் பொருள் எடுத்துக்க கூடாது! :)

பெண்களே அப்படிப் பொருள் எடுத்துக்க முடியாது!
அப்பறம் ஆண்கள் எப்படி எடுத்துக்க முடியும்?-ன்னு எல்லாம் கேள்வி வந்துரும்! :)

ஆனா அப்படிப் பொருள் எடுத்துக்கறவங்க, மனதில் திடம் இருந்தா, எடுத்துக்கலாம்! :)))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

கண்ணனுக்கே உரியது காமம்-ன்னா...
* நம் மனம் கண்ணனுக்கே உரியது!
* அந்த மனத்தில் தோன்றும் எண்ணங்களில் எப்பமே கண்ணனுக்கே முதன்மை..

* அன்றாட செயலிலும் வாழ்விலும், கண்ணனுக்கே முதல்...
* குடும்பம் நடத்தி வந்தாலும், தாய் தந்தையரை மதித்தாலும், மனைவியைக் கொஞ்சினாலும், குழந்தையோடு செல்லம் ஆடினாலும்...

* யாரோடும், எப்போதும், எல்லா இடத்தும்...
* நல்லது செய்யும் போதும், சபலத்தால் தவறு செய்யும் போது கூட...

* மனத்தின் ஓரத்தில் கண்ணன் இருந்து கொண்டே இருப்பது = "காமம்"!

* எது செய்தாலும், இது அவனுக்குப் பிடிக்குமா என்று நினைத்துப் பார்த்துக் கொள்வது = "காமம்"!
* அவன் உள்ள உகப்புக்கு நாம எப்பமே இருக்கணும் என்று மனதார நினைப்பது = "காமம்"!
--------------------------

கடையில் ஏதாச்சும் ஒரு நல்ல பொருள் பார்த்தா, என் தோழன் நினைவு வரும்! எப்பயோ கேட்டிருப்பான்! அட, அவன் அப்ப ஆசையா கேட்டான்-ல?-ன்னு வாங்கி வைப்பேன்! :)
அதே போல், நம் அன்றாட செயல்களில் கூட, இதனால் கண்ணன் மனசு உவக்குமா? வாடுமா?...உவக்குமா? வாடுமா??-ன்னு பார்த்துப் பார்த்து நடந்து கொள்வது!

விடுவன எல்லாம் விட்டு,தன்னையும் அவனுக்"கே" விடுதல் = ப்ரபத்தி!

என் பால் நோக்காயே ஆகிலும், நின் பற்று அல்லால் பற்றில்லேன்!
கண்ணனுக்கே உரியது காமம்!
கண்ணனுக்கே உரியது காமம்!
மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்!

மலரினும் மெல்லிது காமம் - சிலர் அதன்
செவ்வி தலைப் படுவார்!

sury siva said...

கண்ணபிரான் ஸார்! வயதில் மே பி நான் பெரியவனாக இருந்தாலும் அறிவில் நீங்களே மூத்தவர்கள்.
என்ன வ்யாக்யானம் ! அத்ருஸ்யத்தையும் த்ருஸ்யமாகத் தரும் தங்கள் சாதுர்யம் வியக்கும்படியாக உள்ளது.

அடியேன் தன்யனானேன்.

சுப்பு ரத்தினம்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

// sury said...
கண்ணபிரான் ஸார்! வயதில் மே பி நான் பெரியவனாக இருந்தாலும் அறிவில் நீங்களே மூத்தவர்கள். என்ன வ்யாக்யானம் ! அத்ருஸ்யத்தையும் த்ருஸ்யமாகத் தரும் தங்கள் சாதுர்யம் வியக்கும்படியாக உள்ளது//

அச்சிச்சோ! என்ன இது? நோ "சார்" காலிங்ஸ்! கேஆரெஸ்-ன்னே கூப்டுருங்க சூரி சார்! ரொம்ப ஈசி! :)

குமரன் (Kumaran) said...

நன்றி இரவிசங்கர். இதற்கு மேல் ஏதுவும் செய்யவோ சொல்லவோ ஆற்றகின்றிலேன்!