Saturday, December 20, 2008

மன்னு வடமதுரை மைந்தன்

தொல்காப்பியம் முதற்கொண்டு பழந்தமிழ் நூற்கள் பலவற்றிலும் கண்ணனும் தமிழ்க்கடவுளே என்று காட்டும் தரவுகள் ஏராளமாகக் கொட்டிக் கிடக்கின்றன. திருமுருகன் மட்டுமே தமிழ்க்கடவுள் என்று இப்போது பெரும்பான்மையோரின் மனத்தில் ஒரு கருத்தாக்கம் உருவாக்கப்பட்டிருக்கிறது; அப்படி நிலைநாட்ட எந்த விதமான தரவுகள் பழந்தமிழ் இலக்கியங்களிலிருந்து எடுத்து வைக்கப்பட்டனவோ அதே அளவிற்கு அதே தரத்தில் அதே போன்ற தரவுகள் கண்ணனும் தமிழ்க்கடவுளே என்று காட்டுவதற்கு பழந்தமிழ் இலக்கியங்களில் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றை எல்லாம் பார்ப்பது இந்தக் கட்டுரையின் நோக்கம் இல்லை. அந்தத் தரவுகளை ஒவ்வொன்றாக எழுதிக் கொண்டு வருகிறேன்; இனிமேலும் எழுதுவேன். இன்றைக்கு 'மாயனை மன்னு வடமதுரை மைந்தனை' என்ற திருப்பாவை வரிகளில் சொல்லப்படும் மதுரை வடக்கே யமுனைக்கரையில் இருக்கும் மதுராவா தெற்கே வைகைக்கரையில் இருக்கும் மதுரையா என்று மட்டும் ஆராய்வோம்.

ஆன்மிகத்தையும் பக்தி இலக்கியங்களையும் முடிந்த வரையில் எளிமைப்படுத்தி அதில் ஆர்வம் இல்லாதவர்களுக்கும் ஆர்வம் ஏற்படுத்தும் வகையில் எழுதி வரும் நல்நண்பர் இரவிசங்கர் இந்த வரியில் சொல்லப்படும் வடமதுரை மைந்தன் தமிழக மதுரைக்கு வடக்கே இருக்கும் திருமாலிருஞ்சோலை வாழ் அழகனே என்று சொல்கிறார். ஆண்டாள் தென் தமிழகத்தில் இருக்கும் வில்லிபுத்தூரில் இருந்து பார்க்கும் போது தமிழக மதுரை அவளுக்கு வடக்கே அமைகிறது; அதனால் அந்த மதுரையைத் தான் அவள் வடமதுரை என்றாள் என்கிறார். அதற்கு வடபழனி, தென்பழனி போன்ற எடுத்துக்காட்டுகளையும் காட்டுகிறார். ஏரணத்திற்குப் பொருந்துவதைப் போல் தோன்றினாலும் எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அதன் மெய்ப்பொருள் காண்பதே சிறப்பு என்பதால் இன்னும் கொஞ்சம் ஆராயலாம் என்று தோன்றியது.

வில்லிபுத்தூருக்கு வடக்கே தான் தமிழக மதுரை இருக்கிறது. அங்கு கூடல் அழகர் திருக்கோவில் இருக்கிறது. அதனால் வடமதுரை என்று திருப்பாவையில் குறிக்கப்பட்டது தமிழக மதுரை தான் என்றால் வடமதுரை மைந்தன் (வடமதுரைத் தலைவன்) என்பவன் கூடல் அழகராகவே எடுத்துக் கொள்ளலாம். மதுரைக்கு வடக்கே இருக்கும் திருமாலிருஞ்சோலை அழகனாம் கள்ளழகரைத் தான் அந்தத் தொடர் குறிக்கிறது என்று சொல்ல வேண்டியதில்லை. அப்படி குறிப்பாக கள்ளழகரைத் தான் சொன்னாள் கோதை என்பதற்கு ஏதேனும் குறிப்பு இருப்பதாகத் தெரியவில்லை.

வடமதுரை என்பது தமிழக மதுரை தானா என்ற கேள்விக்குப் பதிலாக நாச்சியார் திருமொழியில் இருந்து சில வரிகளை எடுத்துத் தந்திருக்கிறார். அவற்றையும் ஆராய்வோம்.

பாண்டி வடத்து என்னை உய்த்திடுமின்
யமுனைக்கரைக்கு என்னை உய்த்திடுமின்
சோலைமலைப்பெருமாள் துவராபதி எம்பெருமான்...

1. பாண்டி வடத்து என்னை உய்த்திடுமின்; யமுனைக்கரைக்கு என்னை உய்த்திடுமின்

இந்த வரிகள் வருவது 'மற்றிருந்தீர்' என்று தொடங்கும் நாச்சியார் திருமொழியின் 12ம் திருமொழி. இந்தத் திருமொழியில் எல்லா பாசுரங்களிலும் 'என்னைக் கொண்டு சேர்த்துவிடுங்கள்' என்று சொல்லும் விதமாக 'உய்த்திடுமின்' என்று மீண்டும் மீண்டும் சொல்கிறார் நாச்சியார்.

மதுரைப் புறத்தென்னை உய்த்திடுமின், ஆய்ப்பாடிக்கே என்னை உய்த்திடுமின், நந்தகோபன் கடைத்தலைக்கே நள்ளிருட்கண் என்னை உய்த்திடுமின், யமுனைக்கரைக்கு என்னை உய்த்திடுமின், காளியன் உச்சியில் நட்டம் பாய்ந்து போர்க்களமாக நிருத்தம் செய்த பொய்கைக்கரைக்கு என்னை உய்த்திடுமின், பத்தவிலோசனத்து என்னை உய்த்திடுமின், பாண்டிவடத்தென்னை உய்த்திடுமின், கோவர்த்தனத்து என்னை உய்த்திடுமின், துவராபதிக்கென்னை உய்த்திடுமின் என்றெல்லாம் சொல்கிறாள். இவற்றில் 'பாண்டி வடத்து என்னை உய்த்திடுமின்' என்பதை 'பாண்டிய நாட்டில் வடபகுதியில் இருக்கும் மதுரை நகருக்கு என்னை கொண்டு சேருங்கள்' என்று பொருள் கொள்கிறார் இரவிசங்கர். பொருத்தமான பொருள் தானா? மற்ற இடங்களில் எல்லாமே கண்ணனின் பிறப்பும் வாழ்வும் நடந்ததென சொல்லப்பட்ட இடங்களை நாச்சியார் பாடும் போது இங்கே திடீரென்று பாண்டிய நாட்டைச் சொல்வாரா? பொருந்துகிறதா?

இதற்கு முந்தைய வரியையும் சேர்த்துப் பார்த்தால் பொருள் இன்னும் தெளிவாகப் புரியும். 'பிலம்பன் தன்னை பண் அழியப் பலதேவன் வென்ற பாண்டி வடத்து என்னை உய்த்திடுமின்'. பாருங்கள் திருமாலிருஞ்சோலையில் பலதேவனின் கோவில் இருந்ததாக பரிபாடல் சொல்கிறது; இங்கும் நாச்சியார் பலதேவனைச் சொல்லியிருக்கிறார்; அதனால் இது பாண்டிய நாட்டின் வடப்புறத்தில் இருக்கும் திருமாலிருஞ்சோலையைத் தான் குறிக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறதே - என்றெல்லாம் சொல்லத் தோன்றுகிறதா? அவக்கரம் வேண்டாம்; இன்னும் பொருளை ஆய்வோம். பிலம்பன் தன்னை பண் அழிய பலதேவன் வென்ற பாண்டி வடத்து என்கிறாளே நாச்சியார். பிலம்பன் என்றால் யார்? எது? பண் அழிய பலதேவன் வென்றது யாரை? எதை? அது பாண்டிய நாட்டில் நடந்ததா? ஒன்றும் புரியவில்லையே. பாகவத புராணத்தைப் பார்த்தால் புரியும்.

ப்ரலம்பன் என்ற அசுரனை பலராமன் பாண்டிரமென்னும் ஆலமரத்தின் அருகில் வென்று கொன்றதாக பாகவத புராணம் சொல்கிறது. அந்த ஆலமரம் தமிழகத்தில் இல்லை; வடக்கே யமுனைக்கரையில் தான் இருக்கிறது. ஆலமரத்திற்கு வடவிருட்சம் என்ற பெயரும் உண்டு. ஆலிலைத் துயில்பவன் என்பதைத் தானே வடபத்ரசாயி என்று சொல்கிறோம்; வில்லிபுத்தூரில் இருக்கும் வடபெருங்கோவிலுடையான் திருக்கோவில் திருமாலின் திருப்பெயர் அது தானே. (நல்ல வேளை. அந்த வடபெருங்கோவிலும் ஆண்டாளின் வீட்டிற்கு வடக்கே இருந்ததால் தான் அந்தப் பெயர் என்று சொல்லாமல் விட்டோம்). வடக்கே யமுனைக்கரையில் இருக்கும் பாண்டிரம் என்னும் ஆலமரத்தின் அருகே என்னைக் கொண்டு விடுங்கள் என்பதைத் தான் ஆண்டாள் இங்கே 'பாண்டிவடத்து என்னை உய்த்திடுமின்' என்கிறாள். அதில் ஐயமே இல்லை.

2. சோலைமலைப்பெருமான் துவராபதி எம்பெருமான்:

இந்த இடத்தில் சோலைமலைப்பெருமான் தான் துவராபதி எம்பெருமான் என்று சொல்வது எந்த வகையில் 'வடமதுரை மைந்தன்' என்று குறித்தது தமிழக மதுரையைக் குறிக்கும் என்று புரியவில்லை. சோலைமலையிலும் மற்ற திருமால் கோவில்களிலும் இருப்பவன் துவராபதி இறைவன் தான்; ஆலின் இலைப் பெருமான் தான். அதில் எள்ளளவும் ஐயமில்லை. ஆனால் அந்தத் தரவு வடமதுரை மைந்தன் என்று குறித்தது கூடல் அழகரையோ மதுரைக்கு வடக்கே இருக்கும் சோலைமலை அழகரையோ தான் என்று காட்டுவதாகத் தெரியவில்லை. வேங்கடவன் விண்ணோர் தலைவன் என்றெல்லாம் பட்டியல் இட்டுவருவதைப் போல் சோலைமலைப் பெருமான், துவராபதி எம்பெருமான், ஆலின் இலைப்பெருமான் என்று அவன் பெயர்களையும் புகழ்களையும் பட்டியல் இடுகிறாள் கோதை. அது போன்ற பட்டியலை நாலாயிரத்தில் நிறைய பார்க்கலாம். அதனால் வடமதுரை என்றது தென்னக மதுரையைத் தான் என்றோ யமுனைத்துறைவன் என்றது வைகைக்கரையைத் தான் என்றோ காட்டுவதாக இந்தத் தரவின் மூலம் அறிய முடியவில்லை.

ஆய்ப்பாடியை வில்லிபுத்தூருக்கு மாற்றி தன்னையும் தன் தோழியர்களையும் ஆய்ப்பெண்களாக மாற்றி வடபெரும்கோவிலுடையானின் (வடபத்ரசாயியின்) திருக்கோவிலை நந்தகோபன் திருமாளிகையாக மாற்றி ஆண்டாள் திருப்பாவை பாடினாள் என்று சொன்னால் அதற்கு திருப்பாவையும் பெரியவர்கள் பலர் செய்த உரைகளும் துணையாக நிற்கின்றன. ஆனால் ஆய்ப்பாடியை மதுரைக்கும் யமுனையை வைகைக்கும் ஆண்டாள் மாற்றுகிறாள் என்பதற்கு வலுவான தரவு இருப்பதாகத் தோன்றவில்லை.

***

இன்னும் ஆழமாகச் சென்று ஆராய நாலாயிரத்தில் இருந்து இன்னும் சில தரவுகளைப் பார்க்கலாம்.

3. வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன்:

நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் வரும் ஒரு பாசுரம் இது,

இதுவோ பொருத்தம் மின்னாழிப்படையாய்
ஏறும் இருஞ்சிறைப்புள்
அதுவே கொடியாய் உயர்த்தானே
என்றென்று ஏங்கி அழுதக்கால்
எதுவே ஆகக் கருதும் கொல்
இம்மாஞாலம் பொறை தீர்ப்பான்
மதுவார் சோலை உத்தர
மதுரைப் பிறந்த மாயனே


ஆண்டாள் சொன்னதையே தான் இவரும் சொல்கிறார். மதுவார் சோலை உத்தர மதுரைப் பிறந்த மாயனே. தேன் சிந்தும் சோலைகள் நிறைந்த வடமதுரையில் பிறந்த மாயனே. 'ஆகா! சோலை என்று எவ்வளவு அழகாகச் சொல்லிவிட்டார்?! இவரும் தென் தமிழகத்தைச் சேர்ந்தவர் தான். தாமிரபரணிக் கரையில் இருக்கும் திருக்குருகூராம் ஆழ்வார் திருநகரியில் பிறந்து வாழ்ந்தவர் தான். இவருக்கும் தமிழக மதுரை வடக்கில் இருப்பது தான். அதனால் தான் உத்தர மதுரை என்றார். அது மட்டும் இல்லாமல் கோதை 'மாயனை' என்று தொடங்கியது போல் இவரும் 'மாயனே' என்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக திருமாலிருஞ்சோலை தான் உத்தர மதுரை என்பதைக் காட்ட மதுவார் சோலை என்றும் சொல்லியிருக்கிறார். இவ்வளவு தெளிவாக ஆழ்வாரின் திருவுள்ளம் தெரியும் போது நேர்மையாக அதனை ஏற்றுக் கொள்ள வேண்டியது தானே. நேர்மையை உள்ளத்தே கொள்வோம்' என்று சொல்லத் தோன்றுகிறதல்லவா. ஐயோ பாவம். 'பிறந்த' என்ற சொல்லை இட்டுக் கெடுத்தாரே. திருமாலிருஞ்சோலையில் மாயன் பிறந்ததாக எந்த புராணமும் சொல்லவில்லையே. தமிழக மதுரையில் பிறந்ததாகவும் சொல்லவில்லையே. அப்படியென்றால் ஆழ்வார் திருவுள்ளம் உண்மையில் வடக்கே யமுனைக்கரையில் இருக்கும் மதுரையில் பிறந்தவன் தான் மாயன் என்பதைச் சொல்வதாகத் தானே தெரிகிறது. அந்த உத்தர மதுரையைத் தானே மதுவார் சோலை உடைய மதுரை என்கிறார். இந்தப் பாசுரமும் 'வடமதுரை மைந்தன்' என்றால் 'உத்தர மதுரையில் பிறந்தவன்' என்ற பொருளைத் தான் சொல்கிறது.

4. திருமங்கை மன்னன்:

திருமங்கையாழ்வாரின் பாசுரங்களில் சில இடங்களில் மதுரை என்று வருகிறது. அவற்றைப் பார்ப்போம்.

சீராரும் மாலிருஞ்சோலை திருமோகூர்
பாரோர் புகழும் வதரி வடமதுரை...

பெருமாள் திருக்கோவில்கள் இருக்கும் திருத்தலங்களைப் பட்டியல் இடும் போது திருமாலிருஞ்சோலை, திருமோகூர் என்று மதுரைக்குப் பக்கத்தில் இருக்கும் இரு தலங்களைச் சொல்லிவிட்டு உடனே பத்ரிகாச்ரமம் என்ற வதரியையும் வடமதுரையையும் கூறுகிறார். திருமங்கையாழ்வார் சோழநாட்டவர். அதனால் அவருக்கு தென்னக மதுரை தென்மதுரையாகத் தான் இருந்திருக்க வேண்டும்; அது மட்டும் இல்லாமல் மதுரையின் வடக்கே இருக்கும் திருமாலிருஞ்சோலையைத் தனியாகச் சொல்லிவிட்டார். அதனால் வடமதுரை என்று சொன்னது உண்மையிலேயே வடநாட்டில் இருக்கும் மதுரையைத் தான் என்று கொள்வதில் தடையில்லை.

மன்னு மதுரை வசுதேவர் வாழ்முதலை
நன்னறையூர் நின்ற நம்பியை வம்பவிழ்தார்
கன்னவிலும் தோளான் கலியன் ஒலி வல்லார்
பொன்னுலகில் வானவர்க்குப் புத்தேளிர் ஆகுவரே.

மன்னு வடமதுரை என்று நாச்சியார் சொன்னதைப் போல் இவர் மன்னு மதுரை என்கிறார். வட என்று சொல்லவில்லை; அதனால் தமிழக மதுரையைத் தான் சொன்னார் என்று கொள்வதில் தட்டில்லை. ஆனால் மன்னு மதுரை என்பது வசுதேவருக்கு அடைமொழியாக வந்ததால் இங்கே சொல்லப்படும் மதுரை வடநாட்டு மதுரை என்பது தெரிகிறது. தமிழக மதுரையில் வசுதேவர் வாழவில்லை; அவருக்குக் கோவிலும் இல்லை.

வில்லார் விழவில் வடமதுரை
விரும்பி விரும்பா மல்லடர்த்து
கல்லார் திரள் தோள் கஞ்சனைக்
காய்ந்தான் பாய்ந்தான் காளியன் மேல்
சொல்லார் சுருதி முறையோதிச்
சோமுச் செய்யும் தொழிலினோர்
நல்லார் மறையோர் பலர் வாழும்
நறையூர் நின்ற நம்பியே

இங்கும் வடமதுரை என்றது வடநாட்டு மதுரையைத் தான் என்பது வில் விழாவையும், மல்லரைக் கொன்றதையும், கம்சனைக் காய்ந்ததையும், காளியன் மேல் பாய்ந்ததையும் சொன்னதால் தெளிவு.

***

5. விப்ரநாராயணர்:

தொண்டரடிப்பொடி ஆழ்வார் மதுரையைப் பற்றி ஓரிடத்தில் குறித்துள்ளார்.

வளவெழும் தவள மாட
மதுரை மாநகரம் தன்னுள்
கவள மால் யானை கொன்ற
கண்ணனை அரங்கமாலை...

அடடா. மதுரை மாநகரம் என்று சொல்லியிருக்கிறாரே. அது நம் தமிழக மதுரையாய் இருக்கலாமே. தவள மாடங்கள் நிறைந்த மதுரை என்று இம்மாநகரை இன்னும் பல இலக்கியங்கள் புகழ்கின்றதே - என்றால், 'மாநகரம் தன்னுள் கவள மால் யானை கொன்ற' என்று சொன்னதால் இங்கும் சொல்லப்பட்டது வடநாட்டு மதுரையைத் தான் என்பது தெளிவு.

***

6. வேண்டிய வேதங்கள் ஓதி விரைந்து கிழியறுத்தான்:

சரி. மற்றவர் சொன்னதைப் பார்த்தோம். ஆண்டாளின் திருத்தந்தை சொன்னவற்றைப் பார்க்கலாமா?

'திருமதுரையுள் சிலை குனித்து' என்று திருப்பல்லாண்டில் பாடுகிறார் விட்டுசித்தர். வில்லை முறித்து என்று சொன்னதால் இங்கு சொல்லப்படும் திருமதுரை வடநாட்டு மதுரை தான் என்பது தெளிவு.

வானில் அரசு வைகுந்தக் குட்டன்
வாசுதேவன் மதுரைமன்னன் நந்த
கோன் இளவரசு கோவலர் குட்டன்
கோவிந்தன்....

இங்கே மதுரை மன்னன் என்றதால் எந்த மதுரையைச் சொன்னார் என்று தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் வாசுதேவன் (வசுதேவன் மகன்) என்றதாலும் நந்தகோன் இளவரசு என்றதாலும் கோவலர் குட்டன் என்றதாலும் இங்கே மன்னனாய் சொன்னது வடமதுரைக்கு மன்னன் என்று தான் என்பது தெளிவு.

இங்கே பெரியாழ்வார் 'மதுரை மன்னன்' என்றது போல் அவர்தம் திருமகளாரும் 'மதுரையார் மன்னன்' என்றும் 'வடமதுரையார் மன்னன்' என்றும் பாடுகிறாள். அங்கும் இதே பொருள் தான் என்பதில் ஐயமில்லை.

'என் மகளை எங்கும் காணேன் மல்லரை அட்டவன் பின் போய் மதுரைப் புறம் புக்காள் கொலோ' என்று இன்னொரு இடத்தில் பாடுகிறார் பெரியாழ்வார். கோதை 'உய்த்திடுமின்' என்று பாடிய பிறகு பாடியது போலும் இந்தப் பாசுரம். அதனால் தான் 'மல்லரை அட்டவன் பின் போய்' மதுரைப் புறம் புக்காள் கொலோ என்று கேட்கிறார். இங்கும் மல்லரை அட்ட நிகழ்ச்சி நடந்த வடநாட்டு மதுரை தான் சொல்லப்பட்டது என்பது தெளிவு.

இன்னொரு இடத்தில் பெருமாள் திருத்தலங்களைப் பட்டியல் இடுகிறார் பெரியாழ்வார். 'வடதிசை மதுரை, சாளக்கிராமம், வைகுந்தம், துவரை, அயோத்தி, இடமுடை வதரி, இட வகையுடைய எம் புருடோத்தமன் இருக்கை' என்கிறார். இங்கு பெரும்பாலும் வடநாட்டில் இருக்கும் தலங்களைக் குறித்ததால் இந்தப் பட்டியலில் வரும் 'வடதிசை மதுரை' தென்னக மதுரை இல்லை வடநாட்டு மதுரையே என்பது தெளிவு.

***

இப்படி நாலாயிரத்தில் 'மதுரை' என்ற சொல் வரும் இடங்களை எல்லாம் பார்க்கும் போது அங்கெல்லாம் குறிக்கப்பட்டது வடநாட்டு மதுரையே என்பது தெளிவாகத் தெரிவதால் ஆண்டாளும் 'வடமதுரை மைந்தனை' என்ற போது வடநாட்டு மதுரையைத் தான் குறித்தாள் என்பது தெளிவு. வில்லிபுத்தூருக்கு வடக்கே இருக்கும் தென்னக மதுரையை வடமதுரை என்றாள் என்பது சுவையாக இருக்கிறது; ஆனால் வலிந்து கொண்ட பொருளாகத் தான் தோன்றுகிறது.

கண்ணனும் தமிழ்க்கடவுள் என்று காட்ட போதிய அளவிற்குத் தரவுகள் இருக்கின்றன. இந்த 'வலிந்து கொள்ளப்பட்ட தரவுகள்' தேவையில்லை. எப்படி திருமுருகன் வடக்கே பிறந்து வடக்கே வாழ்ந்தாலும் தமிழ்க்கடவுளாக இருக்கிறானே எப்படி சிவபெருமான் வடகயிலையில் வாழ்ந்தாலும் தமிழ்க்கடவுளாக இருக்கிறானோ அதே போல் கண்ணனும் வடமதுரையில் பிறந்து வடமதுரையார் மன்னனாக இருந்தாலும் தமிழ்க்கடவுளாக இருக்கிறான். அதுவும் மிகத் தெளிவு.

38 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

:)
இருங்க பையத் துயின்று வாரேன்! :)
மணி இப்போ பின்னிரவு ரெண்டு!
Community Center வேலை எல்லாம் முடிச்சிட்டு, இப்போ தான் வந்து, திருவெம்பாவை பதிவு எழுதி அனுப்பிச்சிட்டு, இங்கிட்டு வாரேன்! :)

Raghav said...

குமரன், அருமையா சொல்லிருக்கீங்க. ரவி அண்ணா சொன்னப்பவே, இதென்ன புது விளக்கம்னு தோணிச்சு. :)

ம்.. ஒரு நல்ல கலந்துரையாடலை எதிர்பார்க்கிறேன்.

enRenRum-anbudan.BALA said...

நீர் ஜுனியர் இல்லய்யா, நான் தான் உங்களுக்கு ஜுனியர் :) என்ன மாதிரி விளக்கம், பிரபந்தத்திலிருந்து அருமையாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாசுரங்களுடன் !!!

ஆண்டாளின் 'மன்னு வட மதுரை' குறித்தோ, கலியரின் "வதரி வடமதுரை" பற்றியோ இனிமேல் எனக்கு சந்தேகம் என்பதே வராமல் செய்து விட்ட அன்பான குமரனுக்கு பாராட்டுகக்களும், நன்றியும்....

Kannabiran, Ravi Shankar (KRS) said...

சிற்றஞ் சிறுகாலே எழுந்தாச்சி! Good Morning! :)

இந்தப் பதிவை இடும் முன், அடிப்படையில் நீங்கள் இரண்டு தவறான தகவல்களைக் கொண்டீர்கள்!

1. நான் தமிழ்க் கடவுள் என்பதற்கான தரவாக, வட(தென்) மதுரையை வைத்தேன் என்று நீங்களாகக் கற்பனை செய்து கொண்டது!

2. வைகை=யமுனை என்று நான் சொல்லாததைச் சொன்னதாகச் சொல்லி உள்ளீர்கள்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

1. வண்ண மாடங்கள் சூழ் திருக்கோட்டியூர்-கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்-எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிட-ன்னு பெரியாழ்வார் பாசுரம்!

அதுல கண்ணன் பிறந்தது திருக்கோட்டியூர்! அங்கே பிறந்த நாள் கொண்டாட்டங்கள்-ன்னு காட்டுறாரே! வேற எந்த ஆழ்வாரும் அப்படிக் காட்டினா மாதிரி தெரியலையே!

நாலாயிரத்தில் மத்த ஆழ்வார்கள் காட்டலை என்பதற்காக, பெரியாழ்வார் "வலிந்து வந்து" திருக்கோட்டியூரில் கண்ணன் பிறந்தான்-ன்னு பாடுறாரு! அப்படியெல்லாம் "வலியத்" தேவையில்லை-ன்னு சொல்ல முடியுமா உம்மால்? :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

2. //சோலைமலைப் பெருமான் = துவராபதி எம்பெருமான்//

மதுரை மைந்தன் தானே துவராபதிக்குச் சென்றான்! துவரையில் தானே திருமணங்கள் பலவும், பேரரசு ஆளலும் நடக்குது? அந்த மதுரா-துவரா மைந்தனைத் தான் கள்ளழகரின் மேல் ஆண்டாள் ஏற்றுகிறாள்!

இங்கே வட மதுரா-வை முகமாக வைத்துப் பல ஆழ்வார்கள் பாடியுள்ளார்கள்! வட-மதுராவில் நடந்த கண்ணன் வரலாற்று நிகழ்வுகளை ஆங்காங்கும் குறிக்கிறார்கள்! நான் அதை அறியாதவனும் இல்லை! மறுக்கவும் இல்லை!

ஆனால் கண்ணனைத் தன்னருகேயே வைத்துக் கொள்ளும் பேரன்பை இரு ஆழ்வார்களும் தத்தம் அழகான "கற்பனைகளில்" காட்டுகிறார்கள்! அதை மட்டுமே எடுத்துக் காட்ட வந்தேன்!

* ஒருவருக்கு கண்ணன் கோட்டியூரில் பிறக்கிறான்
* ஒருத்திக்கு மதுரைக் கள்ளழகன் கண்ணனாகத் தெரிகிறான்!

கூடவே கோபியர், பந்தல், ஆய்ப்பாடி என்று அத்தனையும் தென்மதுரை ஊரான வில்லி நோக்கி வருகிறது!
வட-மதுரா மைந்தன், தென் மதுரை மைந்தனாகக் காதலிக்கு "மட்டும்" "தெரிகிறான்"!

ஊருக்கெல்லாம், மற்ற ஆழ்வாருக்கு எல்லாம் கண்ணன் வட-மதுரா மைந்தன்! ஆனால் இவருக்கும், இவளுக்கும் வட(தென்) மதுரை மைந்தன்!

As simple as that! :)))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//தென்னக மதுரையை வடமதுரை என்றாள் என்பது சுவையாக இருக்கிறது//

நன்றி!

//ஆனால் வலிந்து கொண்ட பொருளாகத் தான் தோன்றுகிறது//

வலிந்து கொள்ள அவசியம் இல்லை! பிறகு வருகிறேன்!

//கண்ணனும் தமிழ்க்கடவுள் என்று காட்ட போதிய அளவிற்குத் தரவுகள் இருக்கின்றன. இந்த 'வலிந்து கொள்ளப்பட்ட தரவுகள்' தேவையில்லை//

இங்கே தான் தவறான புரிதல்!

மாயனை=
கண்ணன் தமிழ்க்கடவுள் என்பதற்கான தரவுகளை,கருப்பொருள்/உரிப்பொருள், தொல்காப்பியர், சிலம்பு, மணிமேகலை, இன்ன பிற சங்க இலக்கியங்கள், மறைமலை அடிகள் என்று அந்தப் பதிவின் முதற் பகுதியிலேயே காட்டியாகி விட்டது!

பதிவின் பிற்பகுதியில் வந்தது தான்...
வட மதுரை மைந்தன் =
அங்கே பாருங்க?
தென் மதுரைக்கு வந்துவிட்டான்! அதனால் அவன் தமிழ்க் கடவுள்-ன்னு எங்கே சொல்லி இருக்கேன் காட்டுங்க?

* வடமதுரை மைந்தனைச் சொன்னது தமிழ்க் கடவுள் என்பதற்கான தரவுக்காக அல்ல!
* வடமதுரை மைந்தனைச் சொன்னது கோதையின் ஊர் பக்திக்கே!


எப்பொருள் யார் யார் வாய் கேட்கினும், சரி தான்!
ஆனா அதுக்கு முன்னாடி எப்பொருள் பதிவில் எப்படி இருக்கு-ன்னும் பாக்கணும் இல்லையா? இன்னொரு-கா பதிவைப் பாத்துட்டு வாங்க குமரன்! :)

குமரன் (Kumaran) said...

வாங்க இரவி. இரவு இரண்டு மணி வரைக்கும் சமுதாய மையத்தில் அப்படி என்ன வேலை? பனிப்பொழிவினால் ஏதேனும் வேலையா? சமுதாய மையத்திலிருந்து வந்த பின்னர் இடுகை இட்டு முடிக்க இரண்டு மணி ஆனதா? அடுத்த இடுகையை இடவில்லையே? என்னவாயிற்றோ என்று எண்ணிக் கொண்டிருந்தேன். நல்லவேளை பனியில் எங்கும் மாட்டிக் கொள்ளவில்லையே. மகிழ்ச்சி.

குமரன் (Kumaran) said...

இராகவ்,

இரவி சொன்ன விளக்கமும் சுவையான விளக்கம் தான். ஆனால் இது வரை யாரும் சொல்லாத விளக்கம். புதிதாக ஒன்றும் சொல்லக்கூடாது என்றில்லை. கோதையின் கதையை எழுதும் போது நானும் புதிதாக 'ரங்கன்' என்றொரு வேலைக்காரனை பெரியாழ்வார் வீட்டில் கற்பித்தவன் தான். முன்னோர் சொன்னதற்கும் மூல நூலுக்கும் முரண்படாமல் எத்தனை விளக்கமும் சொல்லலாம். 'வடமதுரை மைந்தன்' என்றது 'கள்ளழகரை' என்று சொன்னால் அது புதிய விளக்கமே. திருவயோத்தியை தில்லை சித்திரகூடத்திலும் திருவாய்ப்பாடியை வில்லிபுத்தூரிலும் (இரவியும் எடுத்துச் சொன்னபடி) திருவாய்ப்பாடியை திருக்கோட்டியூரிலும் கண்டு பாசுரங்கள் பாடியிருக்கிறார்கள். அதனால் இந்தப் புதிய விளக்கம் முன்னோர் சொன்னதற்கு முரண்பாடானது இல்லை. மூல நூலுக்கு முரண் உண்டா? அதையும் உண்டு என்று சொல்ல இயலாது. ஆனால் இந்த கருத்தைச் சொல்வதற்கு வேறு தரவுகளைத் தந்தார் இரவி. அவை முரண்பாடானவை. அதனால் அந்தத் தரவுகளை ஆய்ந்தேன்; மேலும் தரவுகளைப் பார்த்தேன். அம்புட்டு தான். :-)

நண்பர்களுக்கு இடையே கலந்துரையாடல் தான் நடக்கும் என்பது உறுதி. வாதம் செய்தாலும் அது கலந்துரையாடலாகத் தான் இருக்கும். :-)

நண்பர்களான வித்யாரண்ய தீர்த்தருக்கும் அக்ஷோப்ய தீர்த்தருக்கும் இடையில் நடந்த வாதவிவாதங்களுக்கு இன்னொரு நண்பரான சுவாமி ஆரண தேசிகன் நடுநிலை வகித்துத் தீர்ப்பு சொன்னார். அதை நினைவில் வைத்துக் கொண்டு இருவருக்கும் நண்பர்களாக இருப்பவர்கள் தீர்ப்பு சொல்ல வேண்டும். இது ஒரு ஒப்புமைக்காகவே. அடியேன் எந்த வகையிலும் வித்யாரண்யரோ அக்ஷோப்யரோ இல்லை; அவர்களின் பாததூளி. அவ்வளவே.

குமரன் (Kumaran) said...

வாங்க சீனியர். நீங்க கலியன் வெறியர் இல்லையா? மறந்து போனேன். :-) அதனால் தான் வடமதுரை என்று கலிகன்றியும் சொல்லியிருப்பது உடனே நினைவிற்கு வந்திருக்கும். :-)

பாராட்டுக்கு நன்றி சீனியர். தமிழையும் பணிவையும் அவன் திருவடிகளில் அன்பையும் அருளி இணையத்திலேயே அருளிச்செயல்கள் அவற்றின் உரைகள் என்று எல்லாவற்றையும் கைக்கெட்டும் தூரத்தில் வைத்த அவன் அருளாலே அவன் தாள் வணங்கினேன். அடியேன் சிறிய ஞானத்தன்.

குமரன் (Kumaran) said...

ரெண்டு மணிக்குத் தூங்கி அஞ்சு மணிக்கு எந்திரிச்சாச்சா? இதென்ன கோழித்தூக்கம் இரவி? இன்னும் நல்லா தூங்குங்க. ஒருத்தருக்கு குறைந்தது ஆறு மணி நேரமாவது தூக்கம் தேவை.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இப்போ மேட்டருக்கு வருவோம்!

//நாலாயிரத்தில் 'மதுரை' என்ற சொல் வரும் இடங்களை எல்லாம் பார்க்கும் போது அங்கெல்லாம் குறிக்கப்பட்டது வடநாட்டு மதுரையே என்பது தெளிவாகத் தெரிவதால்//

1. நாலாயிரம் என்பது பின்னாளில் தொகுக்கப்பட்டது! மற்ற ஆழ்வார் பாசுரங்களில் எல்லாம் வடநாட்டு மதுரையைக் குறித்தால், ஆண்டாளும் அவர்களோடு "ஒத்து" வடநாட்டு மதுரையையே குறிக்கிறாள் என்று எப்படி நீங்கள் "உறுதியாகச்" சொல்வீர்கள்?

2. கூடல் அழகரை ஆண்டாள் விரிவாகப் பாடவில்லை! ஒரே ஒரு பாடல் குறிப்பா அது? மாலிருஞ் சோலை மணாளர் கள்ளழகனைப் பலவாறு கொண்டாடுகிறாள்! எனவே உங்களின் இந்த வாதத்தைத் தள்ளுகிறேன்!

3. வைகை தான் யமுனை ஆகியது-ன்னு நான் எங்குமே சொல்லலையே! அப்புறம் எப்படி "அபாண்டமா" சொல்றீங்க? "அந்தப்" பதிவர் கூட ரொம்ப பேசினீங்களோ? தள்ளுகிறேன்! :))

4. நீங்கள் மதுரையைத் தற்கால மதுரை நகரமாகப் பாக்குறீங்க! நான் கோதையின் காலத்தில் இருந்த மதுரை ஏரியாவாகப் பாக்குறேன்! வில்லிபுத்தூரும் மதுரை என்னும் மாவட்டத்தில் அவள் காலத்தில் சேர்த்தியே!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

5. நான் சொன்னது வெரி வெரி சிம்பிள்:

கோதை தன் கவிதைக் "கற்பனையில்",
தன் ஊரான வில்லிபுத்தூருக்கே (மதுரை நிலத்துக்கே) யமுனையைக் கொண்டு வந்தாள்! மாதவிப் பந்தலைக் கொண்டு வந்தாள்! ஆயர்ப்பாடியைக் கொண்டு வந்தாள்! கோபிகைகளைக் கொண்டு வந்தாள்! கண்ணனைக் கொண்டு வந்தாள்!
- இது வரை சரியா?

தான் கற்பனையில் அங்கே போகாது, அவற்றை கற்பனையில் இங்கே வரவழைத்தாள்! இது அவள் மதுரைப் (மாவட்டம்) பக்தி தானே?
- இது வரை சரியா?

இப்போ கள்ளழகருக்கு வருவோம்! அவளுக்குக் கண்ணனை இங்கேயே வைத்துக் கொள்ள ஆசை! நிலையான இடம் வேணும்! எது?

வில்லிபுத்தூர் வடபெருங்கோயிலான் பெருமாள் தான் என்றாலும், அவள் காதலனான கண்ணன் கிடையாதே! அப்படி நினைத்திருந்தால் கல்யாணத்துக்கு அரங்கத்துக்கே போயிருக்க வேணாமே? அதான் அவள் மாப்பிள்ளை அவள் ஊரிலேயே இருக்கானே?
- இது வரை சரியா?

மணமாகும் முன் எப்படி ஒரு காதலனைத் தன் வீட்டுக்குப் பக்கத்தில் குடி இருத்துவாள்?
ஆக அவளுக்கு கண்ணனின் கெட்டப்பில் ஒரு பெருமாள் வேணும்! அவனும் மதுரை ஏரியாவிலேயே இருக்கணும்! யார் அது? = சோலை மலைக் கள்ளழகன் தான்!

நான் கோதையின் கற்பனையில், அவள் மனம் விட்டுப் பேசும் தோழனாய் மட்டுமே, ஒன்றிப் பேசினேன்!

நீங்கள் தேவை இல்லாமல், ஏதோ தமிழ்க் கடவுளுக்குத் தரவு காட்டுறேனோ-ன்னு தப்பாக நினைத்துக் கொண்டு அடுக்கி விட்டீர்கள்!

ஆனாலும் அதனால் பொழிந்த பாசுர மழையில் அடியேனுக்கு மகிழ்ச்சி தான்! :)

ஷைலஜா said...

குமரன் மிக அருமையான கருத்துக்கள்.
மதுரா எனவும் சிந்திக்கவைக்கிறது இப்போது.
மதுரை என வரவும் தான் வேறமாதிரி யோசிக்கவேண்டிவந்தது
இருங்க நானும் இனொருதடவை ஆழ்ந்து படிச்சி என்கருத்துகளை பதிக்கிறேன்

Kannabiran, Ravi Shankar (KRS) said...

பிகு:
குமரன் ஏதோ என் தமிழ்க் கடவுள் தரவுகளை எல்லாம் மறுத்து விட்டார் என்று சில ஏகபோக தமிழ்க் கடவுள் உரிமையாளர்கள் அல்ப சந்தோஷ பட்டுக்க வேணாம்!

தொல்காப்பியர் முதலான என்னுடைய அசைக்க முடியாத தரவுகள் எதையும் அவர் மறுக்கைல்லை. வேறு யாரும் இன்னும் மறுக்கவில்லை!

நான் "வட(தென்)மதுரையில் கண்ணன்" என்று சொன்னது தமிழ்க் கடவுளுக்கான தரவு இல்லை என்பதை இங்கே தெளிவு படுத்தி விட்டேன்!

ஆனால் ஏகபோக உரிமையாளர்கள், இதையே திரும்பத் திரும்பப் பொய்யாக நையாண்டி பேசினால், அவர்கள் மேல் என் பாய்ச்சல் வேறு மாதிரி இருக்கும் என்பதையும் இங்கு தாழ்மையுடன் சொல்லிக் கொள்கிறேன்!

உயிரோடை said...

அருமையான ஆதாரங்கள். ஆனால் கேஆர்எஸ் சொன்னதும் நல்லா தான் இருந்தது.

Unknown said...

கண்ணனும் தமிழ்க்கடவுள் என்று காட்ட போதிய அளவிற்குத் தரவுகள் இருக்கின்றன//

முதலில் கண்ணன் என்ற பெயரே வடமொழியிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டது.

கண்ணனும் தமிழ்க்கடவுளே என்று காட்டுவதற்கு பழந்தமிழ் இலக்கியங்களில் கொட்டிக் கிடக்கின்றன//

நான் ஏற்கனவே எழுதியதைப் போல, கி.மு.500க்கு முன் தமிழர்கள் வாழவில்லையா?

அவர்களுக்கென மதம், கடவுள், கடவுள் வழிபாடு இல்லையா?

தொல்காப்பிய காலத்திலிருந்தே, வடமொழி சொற்கள் தமிழில் கலந்தன.

வானத்திலிருந்து விழுந்தவனவா அவை?

இல்லை, தமிழருக்கு தாய்மொழி வடமொழியா?

Anonymous said...

வட மதுரை-மதுரா புரியே.

நாடோடி இலக்கியத்திலும் , பண்டைய செய்யுளிலும், நெல் விளைச்சலைப் பற்றிச் சொல்லும்போது
“மாடு கட்டிப் போரடித்தால் மாளாத செந்நெலென்று, ஆனை கட்டிப் போரடிக்கும் அழகான தென் மதுரை”

மதுரை நகரையே, தென் மதுரை என்று தான் குறிக்கின்றனர்.அப்படியென்றால் வடமதுரை என்பது வட நாட்டில் இருக்கும் மதுரா புரி தானே.(திண்டுக்கல் அருகே வடமதுரை என்று ஒரு கிராமம் உண்டு.ஆனால் அது பற்றிய , தனிச் சிறப்புச் செய்தி எதுவும், இலக்கிய வழியில் இருப்பதாகத் தெரியவில்லை.

அதாவது, விளைந்த கதிரில் இருந்து நெல்லை அகற்றுவதற்கு,(போரடித்தல்) மாடுகள் மூலம் காரியம் நடத்தலாம் என்றால் இயலாது. விளைச்சல் மிக அதிகம். அதனால் யானையைக் கட்டித் தான் போரடிக்க வேண்டி இருக்கிறது, என்று மதுரை நகரில் மிகுதியாக விளையும் நெல்லைப் பற்றிக் கூறும்போது, தென் மதுரை என்று குறிப்பிட்டனர்.

மதுரை நகரின் இயற் பெயர் கூடல் நகரம்.கூடல் நகரப் பெருமான் யுகம் கண்ட பெருமாள்.இராமாவதாரத்திற்கும் முந்தைய பெருமாள். இன்னும் சொல்லப் போனால் ஸ்ரீரங்கத்து ரெங்கநாதருக்கும் முந்தைய பெருமாள் என்பதாக என் நினைவு.(தவறு இருந்தால் திருத்தவும்.) ஆண்டாள் நினைத்திருந்தால், வட கூடல் மைந்தனை என்று சொல்லி இருக்கலாம்.(பாண்டிய மன்னன் சத்ய விரதனிடம் மீன் வடிவில் வந்து விளையாடியவர்- எனவே இவரது பிறப்பிடம் மதுரை என்று ஊகிக்கலாமா?

மேலும் மண்ணின் மைந்தன் என்னும் தமிழ்ச் சொல் , ஒருவரது பிறந்த ஊர், அல்லது சொந்த ஊரைக் குறிக்கும்.(Son of soil).
எனவே வட மதுரை மைந்தன் என்பது, வடமதுரையில் பிறந்த கண்ணன் அதாவது மதுரா புரியில் பிறந்த கண்ணன் என்பதாக , பொருள் கொள்ள வேண்டும்.

பெரியாழ்வார் திருக்கோட்டியூரை, கற்பனையாக எடுத்துக்கொண்டது வெளிப்படையான ஒன்று. அதனால் ஆண்டாளும் கற்பனையாக மதுரையை , கண்ணன் பிறந்த இடமாகக் கொண்டாள் என்று கூற இயலாது. ஆண்டாள் வெளிப் படையாக அப்படி ஒரு கற்பனை கொண்டாள் எனக்கூற முடியாது.பெரியாழ்வார் சொல்லும்போது கண்ணன் கேசவன் , நம்பி பிறந்தான் என்று கூறவில்லை.பிறந்தினில் என்று தானே கற்பனை கொள்கிறார்.


தவிரவும் ஆண்டாள் தமது 25வது பாசுரத்தில்
“ ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர”
என்று பாடுகிறார்.இப்படி நடந்தது எல்லாம் யமுனை நதியின் ஒரு கரையிலும் , பின் வசுதேவர்,யமுனையைத் தாண்டித் தானே கண்ணனைச் சுமந்து வருகிறார்.(இந்த இடம் யமுனைக் கரையில் உள்ள மதுராபுரியைத் தானே குறிக்கிறது?)

எனவே ஆண்டாள் குறிப்பிடும் வடமதுரை , வட நாட்டில் உள்ள மதுரா புரியே என்பது, உள்ளங்கை நெல்லிக்கனி.

குமரன் (Kumaran) said...

இரவி, உங்கள் இடுகையின் தலைப்பும் சங்கத் தமிழ் நூற்களில் இருக்கும் மாலவனைப் பற்றிய குறிப்புகளைப் பற்றி பேசிக் கொண்டே வந்து 'மன்னு வடமதுரை மைந்தனை'ப் பற்றி பேசியதும் 'தூய பெருநீர் யமுனைத்துறைவனை'ப் பற்றி பேசியதும் தமிழ்க்கடவுள் என்பதற்குத் தரவாக வடமதுரை மைந்தனை வைத்ததாகவும் வைகை = யமுனை என்ற கருத்தைச் சொன்னதாகவும் ஒரு புரிதலைத் தருகின்றன. பலமுறை படித்துப் பார்த்தேன். வந்து விழுந்த வரிகளையும் கருத்துகளையும் பார்க்கும் போது அப்படி தான் தோன்றுகின்றன. இல்லை என்று நீங்கள் மறுத்தால் தவறான புரிதலைக் கொண்டதற்கு மன்னியுங்கள்.

குமரன் (Kumaran) said...

இரவி,

நீங்கள் 'வடமதுரை = தென்மதுரை', 'யமுனை = வைகை' என்று மட்டும் சொன்னால் திருக்கோட்டியூரை பெரியாழ்வார் ஆயர்ப்பாடி ஆக்கினாற் போல என்று சுவைத்துவிட்டுச் சென்றுவிடலாம். ஆனால் 'பாண்டி வடத்தையும்' 'சோலை மலைப் பெருமான் துவராவதி எம்பெருமான்' போன்ற தரவுகளையும் எடுத்து வைத்ததும் தமிழ்க்கடவுள் என்பதற்கு இவற்றைத் தரவாக வைக்கிறீர்கள் என்ற எனது புரியலும் தான் இதனை 'வலிந்து கொள்ளப்படும் பொருள்' என்று சொல்ல வைத்தது.

'வண்ண மாடங்கள் சூழ் திருக்கோட்டியூர் கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்' என்று ஆழ்வார் சொல்லும் போது மிகத் தெளிவாக அவர் திருக்கோட்டியூரை ஆய்ப்பாடியாகப் பேசுகிறார் என்று தெரிகிறது. 'வடமதுரை மைந்தனை' என்னும் போதும் 'யமுனைத் துறைவனை' என்னும் போதும் அப்படி தென்மதுரையையும் வைகைக்கரையையும் நேரடியாக நாச்சியார் குறித்ததாகத் தெரியவில்லை. அதனால் தான் மற்ற ஆழ்வார்கள் யாரேனும் அப்படி நேரடியாகக் குறித்திருக்கிறார்களா என்று பார்க்கத் தோன்றியது. அப்படி ஒருவர் குறித்திருந்தாலும் 'அப்படிக் குறிக்கும் வழக்கம் ஆழ்வார்கள் காலத்தில் இருந்திருக்கிறது. நாச்சியாரும் அதையே சொல்லியிருக்கிறார்' என்று சொல்லலாம். அடியேன் பார்த்தவரையில் அப்படி தெரியவில்லை. அதனால் கொண்ட பொருள் சுவையாக இருக்கின்றது - கொண்ட பொருளே 'வலிந்து கொள்ளப்படுவதாகச் சொல்லத் தேவையில்லை' - ஏனெனில் புதிய புதிய விளக்கங்கள் சொல்வது தவறில்லை; முன்னோர் சொன்னதற்கும் சமய நெறிக்கும் மாறாக இல்லாத விளக்கங்கள் எப்போதும் வரலாம் - ஆனால் தமிழ்க்கடவுள் என்று காட்டுவதற்கு இந்தத் தரவுகள் தரப்பட்டால் அது 'வலிந்து கொள்ளப்படுவதாகத் தான் எடுத்துக்கொள்ள வேண்டும்'.

வைணவ சமயத்திற்குள் எப்படி வேண்டுமானாலும் பொருள் கொள்ளலாம். ஆனால் தமிழ்க்கடவுள் என்று நிறுவும் வகையில் தரவுகள் தரும் போதும் 'நேர்மையை மனத்தில் கொண்டு பாருங்கள்' என்று சவால் விடும் போதும் அது சமய எல்லைகளைத் தாண்டிப் பொது எல்லைக்குள் வந்துவிடுகிறது. அப்போதும் இதே தரவுகளைத் தந்தால் மற்ற தரவுகளைக் காட்டி இது 'வலிந்து கொள்ளப்படும் பொருள்' - சமய எல்லையைத் தாண்டி எடுத்துக் கொள்ள இயலாது என்றே சொல்லத் தோன்றுகிறது. தவறாயின் மன்னிக்கவும்.

குமரன் (Kumaran) said...

2. as simple as that என்று நீங்கள் இங்கே விளக்கியது உங்கள் இடுகையில் வெளிப்படவில்லை என்பதே அடியேன் புரிதல். மற்றபடி நீங்கள் இந்தப் புள்ளியில் சொன்ன கருத்திற்குப் பதில் சென்ற பின்னூட்டத்தில் சொன்னதே. ஆழ்வார்கள் வடமதுரையிலும் துவரைப்பதியிலும் நடந்த நிகழ்ச்சிகளை மற்ற தலங்களில் ஏற்றிக் கூறியிருக்கிறார்கள் என்பது உண்மையே. அதனால் நீங்கள் வட/தென்மதுரை என்ற விளக்கத்தைத் தருவதும் ஏற்றுக் கொள்ளக் கூடியதே.

குமரன் (Kumaran) said...

மேட்டருக்கு வந்த பின் நீங்கள் சொல்லும் ஒவ்வொரு புள்ளியாகப் பார்ப்போம்.

1. நாலாயிரம் என்பது பிற்காலத்தில் தொகுக்கப்பட்டதே. ஆனால் 'தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே' என்று முன்னோர்கள் இங்கிருக்கும் விளக்கத்தை வைத்து அங்கே புரியாததைப் புரிந்து கொண்டதைப் போல் நாச்சியார் 'இதைத் தான் சொன்னாரா' என்ற கேள்விக்கு விடை தேடும் முகமாக மற்ற் ஆழ்வார்கள் சொன்னதைக் கண்டேன். முன்னோர் வழி சென்றதே இது. அவர்கள் யாரும் திருக்கோட்டியூரை ஆய்ப்பாடி என்று பெரியாழ்வார் நேரடியாகச் சொன்னது போல் வடமதுரையைத் தென்மதுரை என்று நேரடியாகச் சொல்லவில்லை. ஆண்டாளும் சொல்லவில்லை. அதனால் 'சமய எல்லைகளுக்கு அப்பால் செல்லும் போது' வட/தென் மதுரை விளக்கம் நில்லாது என்பதில் எனக்கு உறுதி உண்டு. :-)

2. இந்தப் புள்ளியில் எந்த வாதத்தை நீங்கள் தள்ளுகிறீர்கள் என்று தெளிவாகப் புரியாததால் ஒன்றும் சொல்லவில்லை. நீங்கள் எந்த வாதத்தைத் தள்ளுகிறீர்கள் என்று தெளிவாகப் புரியும் போது பதில் சொல்கிறேன். :-)

3. //கண்ணன், கோபிகைகள், படகு, சீலை விளையாட்டு = இப்படி அத்தனையும் அவளுக்காக மதுரைக்கு்/தென் பாண்டி நாட்டுக்கு வருகிறது! யமுனையும், யமுனைத் துறையும் கூட மதுரைக்கு வருகிறது! இப்போ புரியுதுங்களா? தூய பெரு நீர் யமுனைத் துறைவன்=மதுரை மைந்தன்!
//

இடுகையில் இருக்கும் இவ்வரிகள் தான் அடியேனை அப்படி எண்ண வைத்தன. இதனைத் தவறாகப் புரிந்து கொண்டு வைகை தான் யமுனை ஆகியது என்று நீங்கள் சொல்லாததைச் சொன்னதாக அடியேன் அபாண்டமாகக் கூறியிருந்தால் மன்னிக்கவும். ஒருவேளை இவ்வரிகளில் சொல்லப்பட்ட கருத்து யமுனை என்பது மதுரையில் இருக்கும்/இருந்த இன்னொரு ஆறான கிருதமாலையைச் சொல்கிறது என்று புரிந்து கொள்ள வேண்டுமோ? :-)

நீங்கள் எந்த 'அந்த'ப் பதிவரைக் குறிக்கிறீர்கள் என்று புரியவில்லை. அதனால் வாய் வரை வந்துவிட்டதைச் சொல்லாமல் விடுக்கிறேன். :-)

நானும் பக்கத்திலேயே நிற்கிறேனே. ஏன் சும்மா தள்ளிவிட்டுக்கிட்டே இருக்கீங்க? சொல்லப்போனா நாம இருவர் தான்; அதனால இன்னொரு ஆள் வர்ற வரைக்கும் நிக்கக் கூட வேனாம். உக்காந்துக்கிட்டே இருக்கலாம். அதுக்கு நிறைய இடம் இருக்கு. :-)

4. இதை எதற்காக சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. கோதையின் காலத்தில் பாண்டிய நாட்டின் பகுதியான மல்லி நாட்டுப் பகுதியில் வில்லிபுத்தூர் வருகின்றது. அதனால் அவள் காலத்திலும் மதுரை என்பது ஒரு நகரையே குறித்திருக்கும். பாண்டிய நாடு முழுமையையோ மல்லி நாட்டுப் பகுதியையோ குறித்திருக்கிறாது. அண்மைக்காலம் வரை வில்லிபுத்தூர் மதுரை மாவட்டத்தில் தான் இருந்தது - நான் சிறுவனாக இருந்த போது. ஆனால் அப்போதும் அது மதுரை 'மாவட்டத்தில்' இருப்பது தானே ஒழிய வில்லிபுத்தூர் மதுரை என்று ஆகாது. வில்லிபுத்தூர் மதுரை மாவட்டத்தில் இருந்ததால் அவளுக்கு மதுரையின் மேல் பாசம் இருந்தது என்று சொல்ல வருகிறீர்கள் என்றால் ஏற்கவும் மறுக்கவும் என்னிடம் தரவுகளும் இல்லை; ஏரணப்படி ஏற்றுக் கொள்ளலாம். :-)

குமரன் (Kumaran) said...

//நீங்கள் தேவை இல்லாமல், ஏதோ தமிழ்க் கடவுளுக்குத் தரவு காட்டுறேனோ-ன்னு தப்பாக நினைத்துக் கொண்டு அடுக்கி விட்டீர்கள்! //

தேவையில்லாமல் நான் பேசியிருந்தால் மன்னிக்கவும். ஆனால் இவ்வளவு தூரம் நீங்கள் சொன்ன பிறகும் உங்கள் இடுகையைப் பல முறை படித்துப் பார்த்ததில் எனக்கு இந்தப் புரிதல் தான் கிடைக்கிறது. வந்து விழுந்த வரிகளும் கருத்துகளும் தமிழ்க்கடவுளுக்குத் தரவு தருவதாகத் தான் தோற்றம் அளிக்கிறது. மன்னிக்கவும்.

குமரன் (Kumaran) said...

ஷைலஜா அக்கா 'மதுரா'வை 'மதுரை' என்று குறிப்பதே தமிழ் மரபு. பல வடமொழிச் சொற்களைத் தமிழில் குறித்ததால் அதன் பொருள் மாறிவிடாது. பல வடமொழிப்பெயர்களைத் தமிழில் கொஞ்சம் மாற்றிச் சொன்னதால் அவர்கள் வேறு ஆட்கள் ஆகிவிடமாட்டார்கள் - சில எடுத்துக்காட்டுகள் சானகி, இராமன், சனகன், தயரதன், கன்னன், வீடணன்,...

பாராட்டிற்கு நன்றி. நானும் இன்னும் பல முறை படிக்கலாம் என்று நினைத்திருக்கிறேன். ஆழ்வார் பாசுரங்கள் என்றாலே ஆரா அமுதம் தானே.

குமரன் (Kumaran) said...

இரவி. உங்கள் பி.கு.இல் யாருக்கு எச்சரிக்கை கொடுக்கிறீர்கள் என்று தெரியவில்லை. ஒன்றிரண்டு முறை நீங்கள் இதனைச் சொன்னால் சரி. ஆனால் அடிக்கடி இப்படி நீங்கள் பேசுவது 'ஏதோ நிழலைப் பார்த்து கத்தி சுழற்றுவது' போல் ஒரு தோற்றம் தருகிறது. கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள். யாரேனும் இப்படி பேசினால் பின்னர் எச்சரிக்கை தரலாம். இப்போது தான் இப்படி பேசுவதையே நிறுத்திவிட்டார்கள் போல் தோன்றுகிறதே. இல்லை இன்னும் தனி மடல்களில் பேசுகிறார்கள் என்றால் இந்த மாதிரி எச்சரிக்கைகளையும் அறிவிப்புகளையும் தனி மடல்களிலேயே சொல்லுங்கள். பொதுவில் சொல்லும் போது தலையும் புரியவில்லை; வாலும் புரியவில்லை. :-)

//தொல்காப்பியர் முதலான என்னுடைய அசைக்க முடியாத தரவுகள் எதையும் அவர் மறுக்கைல்லை. வேறு யாரும் இன்னும் மறுக்கவில்லை!//

இங்கேயும் ஒரு கருத்தைத் தெளிவாக்க விரும்புகிறேன். தொல்காப்பியர் முதலான 'என்னுடைய' அசைக்க முடியாத தரவுகள்ன்னு சொல்றதை விட 'எங்கள்' என்று சொல்லியிருந்தால் மகிழ்ந்திருப்பேன். (1) அத்தரவுகளில் நம்மிருவர் இடையே நிறைய ஒப்புதல் உண்டு. (2) அத்தரவுகளில் சிலவற்றை உங்களுக்கு முன்னரே வலைப்பதிவுகளில் எழுதியவன் நான். அதனால் முழு உரிமையும் கொண்டாடாதீர்கள். நீங்கள் கொண்டாடவில்லையென்றாலும் இந்த எச்சரிக்கையிலும் வேறு சில இடங்களில் நீங்கள் பேசியதிலும் அப்படி ஒரு தொனி இருக்கிறது. தவறாகப் புரிந்து கொள்கிறேன் என்றால் மன்னிக்கவும். :-)

குமரன் (Kumaran) said...

நன்றி மின்னல். கேஆரெஸ் சொல்லும் ஒரு கருத்து நன்றாக இல்லாமல் இருக்குமா? ;-)

நன்றாக இருக்கிறது என்பதில் எனக்குத் துளி கூட ஐயம் இல்லை.

குமரன் (Kumaran) said...

pvina,

உங்கள் பெயரையும் உங்களைப் பற்றிய சிறு குறிப்பையும் தந்தால் மகிழ்வேன். வரிசையாக ஒவ்வொரு இடுகையாகப் படித்து நல்ல கேள்விகளைக் கேட்கும் உங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளும் ஆசையில் கேட்கிறேன்.

கண்ணன் என்ற பெயர் முழுக்க முழுக்கத் தமிழ்ப்பெயர் என்பதே என் புரிதல். அது வடமொழியிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டது என்றால் எந்த வடமொழிப்பெயர் அது? தமிழாக்கம் செய்யப்பட்டது என்பதற்கான தரவு எது? விளக்கினால் மகிழ்வேன்.

கி.மு. 500க்கு முன்னரும் தமிழர்கள் வாழ்ந்திருக்கலாம். கிடைத்த நூற்களை/இலக்கியங்களைக் கொண்டு அவர்களுக்கான மதம், கடவுள் போன்றவற்றைப் பற்றி சொல்ல இயலுமா? சொல்வதெல்லாம் இத்தரவுகளின் அடிப்படையில் தரவின் காலத்தைப் பற்றி தான் சொல்ல முடியும். அதற்கு முன்னர் இருந்ததைப் பற்றி இலக்கிய அடிப்படையில் சொல்ல இயலாது; கல்வெட்டு, அகழ்வாய்வு போன்றவற்றின் அடிப்படையில் தரவுகள் கிடைத்தால் பேசலாம். அவ்வாறின்றிப் பேசப்படும் எதுவும் ஊகத்தின் அடிப்படையே. ஊகம் என்பது ஊகிப்பவரின் அறிவையும் ஆராய்ச்சியையும் பொறுத்தது. அறிவில் ஆகப்பெரியவர் சொல்வதும் தவறாக இருக்கப் பெரும் வாய்ப்புகள் கொண்டது. இவற்றை நீங்கள் வேறு இடத்தில் கேட்ட போதும் சொன்னேன்.

தொல்காப்பிய காலத்திலிருந்தே வடமொழிச் சொற்கள் தமிழில் கலந்திருக்கலாம். வடசொற்கள், திசைச்சொற்கள் இவற்றிற்கான இலக்கணங்களைத் தொல்காப்பியமும் பேசுகின்றது என்றே நினைக்கிறேன் - ஆனால் உறுதியாக அறியும் வகையில் தொல்காப்பியம் இன்னும் படிக்கவில்லை.

//வானத்திலிருந்து விழுந்தவனவா அவை?

இல்லை, தமிழருக்கு தாய்மொழி வடமொழியா?//

இவற்றை நீங்கள் கேட்டதன் பொருள் எனக்கு விளங்கவில்லை. தமிழருக்குத் தாய்மொழி வடமொழி என்று எங்கும் எப்போதும் நான் சொன்னது இல்லை. வடமொழியிலிருந்து தமிழ் பிறந்ததாக யாரேனும் சொன்னால் மிக உறுதியாக மறுத்து வந்திருக்கிறேன். என்னைப் பற்றி ஏதேனும் ஒரு கருத்தை உருவாக்கிக்கொள்ளும் முன் நானூற்றுக்கும் மேலான இடுகைகளில் எழுதியிருக்கும் என் கருத்துகளைப் படித்துப் பாருங்கள். ஒரே இடுகையில் தெரிந்துவிடாது. குறைந்தது இருபது இடுகைகளாவது படித்துப் பாருங்கள். ஒரு தோற்றம் கிட்டலாம். :-)

குமரன் (Kumaran) said...

மிக அருமையாகச் சுருக்கமாக சொன்னீர்கள் பரவஸ்து.

//பெரியாழ்வார் திருக்கோட்டியூரை, கற்பனையாக எடுத்துக்கொண்டது வெளிப்படையான ஒன்று. அதனால் ஆண்டாளும் கற்பனையாக மதுரையை , கண்ணன் பிறந்த இடமாகக் கொண்டாள் என்று கூற இயலாது. ஆண்டாள் வெளிப் படையாக அப்படி ஒரு கற்பனை கொண்டாள் எனக்கூற முடியாது//

அதிலும் இவ்வரிகள் மிக அருமை. சரியாகச் சொன்னீர்கள். வடமதுரை என்றது தென்மதுரையை என்று சொல்ல பெரியாழ்வாரின் திருக்கோட்டியூர் பாசுரத்தை எடுத்துக் காட்ட முடியாது என்பதற்கு நீங்கள் சொன்ன காரணத்தையே அடியேனும் சொல்லியிருக்கிறேன். அப்படி நேரடியாகத் தெரியாததால் தான் 'தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே' என்றதற்கேற்ப வேறு பாசுரங்களில் அப்படி ஏதேனும் நேரடியாகத் தென்படுகிறதா என்று தேடினேன். கிடைக்கவில்லை.

முதல் வருகைக்கும் நீண்ட பின்னூட்டத்திற்கும் நன்றி.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஆனால் 'பாண்டி வடத்தையும்' 'சோலை மலைப் பெருமான் துவராவதி எம்பெருமான்' போன்ற தரவுகளையும் எடுத்து வைத்ததும் தமிழ்க்கடவுள் என்பதற்கு இவற்றைத் தரவாக வைக்கிறீர்கள் என்ற எனது புரியலும் தான் இதனை 'வலிந்து கொள்ளப்படும் பொருள்' என்று சொல்ல வைத்தது.
//

புரிகிறது குமரன்! பரவாயில்லை! நான் பாசுர வரிகளை அவள் கற்பனையைக் காட்டவே வைத்தேன்! தரவாக அல்ல! அதான் காதல் கற்பனையையாவது மறுக்க வேணாம் என்று நேர்மையைப் பற்றிச் சொல்லி, அவள் "மனசில்" இருந்து படிக்கணும்-ன்னும் சொல்லி இருந்தேன்! ரிபீட் "மனசில்"!

//பாண்டி "வட"த்து என்னை உய்த்திடு மின்!//

இதற்கு பாண்டிரம் என்னும் ஆலமரம் என்றே உரையாசிரியர்கள் பொருள் கொள்கிறார்கள்! அது கண்ணன் கதைப்படி சரியும் கூட! மறுக்கவில்லை! இது அடியேன் துணிபு மட்டுமே!

எப்படி பல வட/தென் திவ்யதேச பெருமான்களைத் திருமங்கை ஒரே பாசுரத்தில் கொண்டு வருகிறாரோ, அதே போல பல்வேறு இடத்து உய்த்திடுமின்களோடு, பாண்டி உய்த்திடுமின்னையும் அடியேன் "மட்டுமே" கொண்டேன்!

//அதனால் 'சமய எல்லைகளுக்கு அப்பால் செல்லும் போது' வட/தென் மதுரை விளக்கம் நில்லாது என்பதில் எனக்கு உறுதி உண்டு. :-)//

எனக்கும் அந்த உறுதி உண்டு! அதான் ஊர் எல்லையைத் தாண்டாமல் வில்லிபுத்தூரிலேயே நின்று "ஆண்டாளின் கற்பனை" என்றும் நானே சொல்லி விட்டேன்! ஆண்டாள் கற்பனையின் கற்பனை என்று சொல்லி இருக்க வேண்டுமோ? :))

//இந்தப் புள்ளியில் எந்த வாதத்தை நீங்கள் தள்ளுகிறீர்கள் என்று தெளிவாகப் புரியாததால் ஒன்றும் சொல்லவில்லை. நீங்கள் எந்த வாதத்தைத் தள்ளுகிறீர்கள் என்று தெளிவாகப் புரியும் போது பதில் சொல்கிறேன். :-)//

ஏன் கூடல் அழகரைப் பாடியதாகக் கூட கொள்ளலாமே! எதற்கு கள்ளழகர் என்று எடுத்துக்கறார் என்று கேட்டீர்கள் அல்லவா! அதற்குச் சொன்னது! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//சொல்லப்போனா நாம இருவர் தான்; அதனால இன்னொரு ஆள் வர்ற வரைக்கும் நிக்கக் கூட வேனாம். உக்காந்துக்கிட்டே இருக்கலாம். அதுக்கு நிறைய இடம் இருக்கு. :-)//

ஹா ஹா ஹா
மூனாவதவர் எப்போ வருவார்? அடியேனுக்கு நாலாதவரைப் பாக்கணுமே! நெருக்கணுமே! :))

//வில்லிபுத்தூர் மதுரை மாவட்டத்தில் இருந்ததால் அவளுக்கு மதுரையின் மேல் பாசம் இருந்தது என்று சொல்ல வருகிறீர்கள் என்றால் ஏற்கவும் மறுக்கவும் என்னிடம் தரவுகளும் இல்லை; ஏரணப்படி ஏற்றுக் கொள்ளலாம். :-)//

ஒரு சிற்றூரில் இருப்பவர் அருகில் அதே பிராந்தியத்தில் உள்ள ஒரு பேரூரையும் தம் ஊராகவே கொள்வர்கள்! அங்கிருந்து தம் ஊருக்கு வழியும் சொல்வர்கள்! அது ஒரு வகையான ஊர்ப்பாசம்!

வாழைப்பந்தல் என்றால் நான் காஞ்சிபுரத்தில் இருந்தோ, திருவண்ணாமலையில் இருந்தோ துவங்குவேன்!

ராகவ், தம் ஊரான எமனேஸ்வரத்துக்கு மதுரையும் சேர்க்கிறார்! ராம்நாட் ராகவன்-ன்னும் சொல்லிக்கறார்! :))

ஆண்டாள் காலத்தில் வில்லிபுத்தூர் ரொம்ப சின்ன ஊர்! அவளுக்கோ தான் பாண்டி நாடு! மதுரையை மனசுக்குள்ளாறச் சொல்லிக்கறா! ஏன்னா அழகர் இருக்காரே! :)

அழகர் கோயிலே மதுரை இல்லை, outside city limits என்பது தற்கால வாதமாகவும் இருக்கலாம்! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//தேவையில்லாமல் நான் பேசியிருந்தால் மன்னிக்கவும்//

இது என்ன பெரிய வார்த்தை எல்லாம்! மன்னித்"தேன்"-ன்னு சிறிய/இனிய வார்த்தையா வேணும்னா சொல்லுங்க! :)

//ஆனால் இவ்வளவு தூரம் நீங்கள் சொன்ன பிறகும் உங்கள் இடுகையைப் பல முறை படித்துப் பார்த்ததில் எனக்கு இந்தப் புரிதல் தான் கிடைக்கிறது. வந்து விழுந்த வரிகளும் கருத்துகளும் தமிழ்க்கடவுளுக்குத் தரவு தருவதாகத் தான் தோற்றம் அளிக்கிறது மன்னிக்கவும்்//

பரவாயில்லை குமரன்!
சொற்களுக்கு அதீத சக்திகள் இருப்பதில்லையே!

தன் சொற்களைத்
1. தான் அறிந்தது - ஆனால் பிறர் அறியாதது (Known to self-Not Known to others)
2. தான் அறியாதது - பிறர் அறிந்தது!
3. தான் அறிந்தது - பிறரும் அறிந்தது!
என்று வகைகள் இருக்கு அல்லவா? தானும் அறியாமல் பிறரும் அறியாமல் இருந்தால் தான் பிரச்சனையே! :)

இன்னொன்றும் சொல்லிக் கொள்கிறேன்!
ஆண்டாள் பாடல்களைத் தமிழ்க் கடவுளுக்குத் தரவாக வைக்க முடியாது!
ஏனென்றால் அது பிற்காலம்! கலந்து விட்ட காலம்! அருணகிரியின் பாடலை வைத்து சங்க காலச் சேயோனை "அறுதியாக" நிலை நாட்ட முடியுமா? அது போலத் தான்!

அப்படி யோசித்து இருந்தீர்களே ஆனால் இது தமிழ்க்கடவுளுக்கான தரவாக தெரிந்திருக்காது உங்களுக்கு!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குமரன் (Kumaran) said...
ஆனால் அடிக்கடி இப்படி நீங்கள் பேசுவது 'ஏதோ நிழலைப் பார்த்து கத்தி சுழற்றுவது' போல் ஒரு தோற்றம் தருகிறது//

ஹிஹி! அப்படி ஒரு தோற்றம் ஏற்பட்டாலும் பரவாயில்லை!
பொய்யைப் பல முறை கும்மியடித்து கும்மியடித்து நிலைநாட்ட முயலும் போது, உண்மையைப் பல முறை எடுத்தியம்புவதில் தவறே இல்லை!

//அதனால் முழு உரிமையும் கொண்டாடாதீர்கள்//

இதென்ன இந்தியத் தொலைக்காட்சிகளிலேயே முதன் முறையாக...ன்னு சொல்லுறா மாதிரியே இருக்கே! ஹா ஹா ஹா!

உரிமையெல்லாம் எனக்கு வேணாம்! நீங்களே வச்சிக்கோங்க குமரன்! தமிழ்க் கடவுள் கிட்ட ஜாலியா கதை பேசும் தோழனாக இருக்க மட்டும் கொஞ்சம் அனுமதி கொடுங்கள்! ஏனென்றால் நானும் தமிழ்க் கடவுளும் Cool Guyz! :)))

Sethu Subramanian said...

Well, Kumaran and KRS, this blog and the subsequent comments make an interesting reading. In the exchange between you two, I like the modesty (vinayam) in addressing each other. Normally in any argument it is tough to maintain a cool exterior as well as interior. But you guys demonstrated it very well. Kudos!

Now, I am a "babe in the woods" when it comes to the background details in NDP (nAlayira divya prabhandam). My interest in NDP is only very recent (in the past year or so) and hence my understanding is very limited. Besides, my knowledge of Vaisnavism is very rudimentary. But my love of Thamizh is immense and I am just tasting its richness little by little these days which makes me wander into your blogs. You guys are really enjoying it and making it enjoyable for others too,

OK, it is time to put my 2 cents here.
1. KRS has categorically said that he does not equate yamunai with vaigai or Mathura with Madurai. It is just ANDAL's imagination. It does not matter whether she exports herself to Gokulam or imports it to her backyard. Her love towards Kannan (by the way Kannan is a morph of Pubjabi Khanna which probably was a derivative of Krishna) arose because PeriyAzhwAr told her all the stories about Krishna in her childhood. That young mind absorbed all those and then built lots of dreams on those. She saw KaNNan as a human (with the divine attributes of vaTapatrasAyI, KaLLazhagar, ranganAthar, VEngaDattAn etc.,) with whom she could take liberty and by extension with the other deities. With VengaDattAn, arangan, and KaLLazhagar she not only pleads but also accuses them of indifference. She complains to the clouds (ViNNIla mElAppu for example) about the undignified behavior of the Lord. The SiRRil sidaiyEl is again another instance of imagination gone wild.

They say 'Faith can move mountains". So ANDAL did move gOkulam and Yamunai to her backyard. Fine.Accordingly Krishna has become an SOS (son of the soil). As somebody remarked "maindan" can be taken as a son either by being born or being adopted or being co-opted. ANDAL has given an honorary citizenship of the local country to Krishna. My contention is that vaDa madurai still refers to Mathura only. This does not mean I am taking a position on the debate that rages here. It is a personal contention.

I mentioned in one of my articles on Tiruppathi (using the ViNNIla mElAppu in NT) that ANDAL (coming later than KaLidAsan) takes a page out of mEgadUta in sending the clouds as a messenger to Tiruppathi. Likewise, other than what PeriyAzhwAr told her about Krishna, her understanding about AypADi has been strengthened by what she read in SilappadikAram (Aycciyar Kuravai) wherein iLango aDigaL describes Krishna's episode on the banks of vaigai. He creates a parallel AypADi on the banks of vaigai with MAdari and Iyai and the cowherdesses. He mentions nappinnai in Aycciyar Kuravai. Some think Radha has been renamed as nappinnai by iLangO but others think it is nILAdEvi he talks about. Whatever it is, the entire gOkulam was imported by iLango on the banks of vaigai. But he does not mention that vaigai is yamunai. The Aycciyars mention yamunai as tozhunai. iLangO calls mAyavan as "tochunait tuRaivan" as in "tozhunait tuRaivanODu ADiya pinnai aNiniRam pADugEm yAm". ANDAL changes it to yamunait tuRaivan because 6 centuries after iLangO, the Thamizh community adopted certain words from the north "as is" and converted only those which could not be written in Thamizh with existing alphabet.

To sum up, it is more a matter of semantics rather than established fact if we want to take vaDamadurai as tenmadurai. I don't want to call KRS as a spin doctor but he has tended to be that way in his interpretation. As for vaDavEngaDam, it is more for poetic splendor rather than directional differentiation. There was not even a tenvEngaDam to speak of.

Kumaran has to be commended for his exploration into the NDP. Both he and KRS exhibit deep knowledge in the religious classics. So instead of declaring a judgment in this debate, let us declare a truce.

குமரன் (Kumaran) said...

Dear Sri nAradA (I guess your name is Sri. Sethuraman from the comments from Ravishankar),

உங்களுடைய அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. அடியேன் சிறிய ஞானத்தன். கூகிளாண்டவரின் துணையின்றியும் தமிழ் இணையப் பல்கலைக்கழகத் துணையின்றியும் நானாகவே எதையும் எழுத வல்லேன் அல்லன். வடமதுரை மைந்தனையும் யமுனைத் துறைவனையும் நாலாயிரத்தில் தேடிப் பிடிக்கும் அளவிற்கு நாலாயிரம் தெரியாது; மதுரைத் திட்டத்தில் இருந்த நாலாயிரத்தில் தேடிக் கிடைத்தவற்றைத் தான் இங்கே தொகுத்தேன். அவ்வளவே அடியேன் செய்தது. என்னை மாதிரி சிறுவர்கள் தேடிக் கண்டுபிடித்து இப்படியெல்லாம் பிதற்றுவதற்காகத் தான் முன்னோர்கள்/முன்னோடிகள் உரைகள், மதுரைத் திட்டம் போன்றவற்றைச் செய்து வைத்தனர் போலும். :-)

அடியேனிடம் தெரியும் பணிவெல்லாம் எழுத்தில் மட்டும் தான் ஐயா. நேரில் பார்த்தால் பணிவென்பதே என்னவென்றே அறியாதவன் என்று சொல்வீர்கள். :-)

உங்கள் பின்னூட்டத்திலிருந்து நீங்கள் நாச்சியார் திருமொழியில் நன்கு பயிற்சி உடையவர் என்று தெரிகிறது. அடியேன் இப்போது தான் நாச்சியார் திருமொழியில் ஆங்காங்கே சில பாசுரங்களைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.

தாங்கள் சென்னை ஆன்லைனில் சில கட்டுரைகள் எழுதியிருப்பதாக உங்கள் பின்னூட்டங்களில் இருந்து அறிந்து கொண்டேன். அவற்றின் சுட்டிகளைத் தந்தால் படித்து மகிழ்வோம்.

நீங்கள் சொன்னது போல் இந்தக் கருத்துப் பரிமாற்றத்தில் தீர்ப்பு என்ற ஒன்று தேவையில்லை தான். அதனை மிக அழகாகச் சொன்னீர்கள். மிக்க நன்றி.

selvanambi said...

fantastic discussions.Thank u all.
We are blessed.
Adiyen

குமரன் (Kumaran) said...

நன்றி செல்வநம்பி ஐயா.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

My friend pointed me to this post, today kumaran! :)

He came rushing with a mail saying, "hey krs, kumaran has opposed you and put an opposite post. I never expected this from kumaran. did u see?" :)

aaga, naan thaan ezhutharathe illaiye...enna-nu vanthu paathaa...ithu! lovely memories :)
I told him, "pl read the comments there...not only the post...and thatz more than a year back!" :)

Also asked him, "opposed-aa?? :) appdeena count the number of opposed by ragavan"-nu chonnen! he smiled and said "podaa" and went away :)

குமரன் (Kumaran) said...

Whatever! I am glad to know that 'your' friend had some time and interest in looking into this blog after so long. :-)