Thursday, December 25, 2008

அனுமன் புகழ் பாடும் மந்திகள்!

கோகுலத்தின் நடுவில் நிமிர்ந்து நிற்கும் குன்றம் இது. மலர்கள் பூத்துக் குலுங்கவும் கனிகள் கனிந்து விளங்கவும் மிகச் செழிப்புடன் மரம் செடி கொடிகள் விளங்கும் குன்றம் இது. இனிய நீர்ச்சுனைகளும் இன்னிசை ஓடைகளும் நிறைந்த குன்றம் இது. யாராலும் ஏற முடியாத படி செங்குத்தாக இல்லாமல் ஆடு மாடுகளும் மற்ற விலங்குகளும் மனிதர்களும் எளிதாக ஏறிச் சென்று இயற்கை வளங்களை அனுபவிக்கும் படியாக அமைந்த குன்றம் இது. இறைவனே இக்குன்றின் வடிவில் நின்று இக்குன்றத்திற்கு ஆய்ப்பாடியினர் படைத்த படையல்களை எல்லாம் ஏற்றுக் கொண்டான் என்றால் இதன் பெருமையைச் சொல்லி முடியுமா?

இப்படிப்பட்ட இக்கோவர்த்தன குன்றத்தின் மீது மரங்களின் காய்களையும் கனிகளையும் உண்டு வாழும் மந்திகளும் (பெண்குரங்குகள்) கடுவன்களும் (ஆண்குரங்குகள்) நிறைய உண்டு. மற்ற இடங்களில் வாழும் குரங்குகள் ஐந்தறிவினவாக இருக்க இந்த கோவர்த்தன குன்றத்தில் வாழும் குரங்குகளுக்கு மட்டும் ஆறாவது அறிவும் இருக்கின்றது போலும். அதனால் தானே இந்த மந்திகள் தங்கள் குட்டன்களைத் (குழந்தைகளை) தூங்க வைக்கும் போது தங்கள் முன்னோனாகிய அனுமனின் வீர தீர கதைகளைச் சொல்லித் தூங்க வைக்கின்றன. இப்படி கதை சொல்லிக் குழந்தைகளைத் தூங்க வைப்பதை இவை எங்கே கற்றன? ஆதி சேஷன் தன் ஆயிரம் தலைகளால் இவ்வுலகைத் தாங்குவதைப் போல் தன் விரல்களால் இக்குன்றம் ஏந்திக் குளிர்மழையிலிருந்து ஆய்ப்பாடி ஆயர்களையும் அவர் தம் செல்வங்களையும் காத்தானே கோகுலன். அவர்கள் இம்மழையின் கீழ் பல நாட்கள் தங்கியிருந்த போது அவர்களிடம் இருந்து அனுமன் கதைகளையும் அவற்றைச் சொல்லி தம் குழந்தைகளை உறங்க வைக்கும் முறையையும் இந்த மந்திகள் கற்றுக் கொண்டன போலும்.


படங்கள் பலவுமுடைப் பாம்பரையன் படர்பூமியைத் தாங்கிக் கிடப்பவன் போல்
தடங்கை விரல் ஐந்தும் மலர வைத்துத் தாமோதரன் தாங்கு தடவரைதான்
அடங்கச் சென்று இலங்கையை ஈடழித்த அனுமன் புகழ் பாடித் தம் குட்டன்களை
குடங்கைக் கொண்டு மந்திகள் கண் வளர்த்தும் கோவர்த்தனமென்னும் கொற்றக் குடையே

கருடனைப் புள்ளரையன் என்றாள் கோதை நாச்சியார். அவர் தம் திருத்தகப்பனார் பெரியாழ்வார் ஆதிசேஷனைப் பாம்பரையன் என்கிறார்.

பாம்புகளின் அரசனான ஆதிசேஷன் விரிந்த படங்கள் பலவும் உடையவன். அவன் பூமியைத் தாங்கிக் கிடக்கின்றான். அது போல் நீண்ட அழகிய கைகளின் விரல்கள் ஐந்தும் மலர விரித்து தாமோதரன் தாங்கும் கொற்றக் குடை எது தெரியுமா? இலங்கைக்குச் சென்று அதன் பெருமையை முழுக்க அழித்த அனுமனின் புகழினைப் பாடி தங்கள் குழந்தைகளை தங்களின் கைகளில் ஏந்தி பெண் குரங்குகள் தூங்க வைக்கும் கோவர்த்தனம் என்னும் குன்றமே.

மந்திகள் மட்டுமின்றி மாநிலத்தில் உதித்தவர் எல்லோரும் அனுமன் புகழ் பாடி அவன் தன் பெருமைகளை நம் குழந்தைகளுக்கு அனுமனின் திருவவதார நாளான இந்த இனிய நன்னாளில் சொல்லுவோம்.


அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான்

ஐம்பூதங்களில் ஒன்றான காற்று பெற்ற திருமகனானவன் அஞ்சிலே ஒன்றான நீர் நிறைந்த கடலை அஞ்சிலே ஒன்றான ஆகாயமே வழியாகக் கொண்டு தாவிச் சென்றான். சிறந்தவர்களான இராமனுக்காக அவ்வாறு தாவிச் சென்று அஞ்சிலே ஒன்றான நிலமகள் பெற்ற பெண்ணான சீதையைக் கண்டு அயலாரின் ஊரில் அஞ்சிலே ஒன்றான தீயை வைத்தான். அவன் நமக்கு வேண்டியதை எல்லாம் அளித்து நம்மைக் காப்பான்.

18 comments:

Raghav said...

இன்று அனுமத் ஜெயந்தியா குமரன்.. (நாளைக்குன்னு நினைச்சேன்) உங்க பதிவு பாத்து தான் தெரிஞ்சுகிட்டேன்.

வாயு புத்ரன், அஞ்சனை மைந்தன் ஆஞ்சனேயன் அடி பணிகிறேன்.

Raghav said...

மாருதி காயத்ரி:
ஓம் தத்புருஷாய வித்மஹே வாயுபுத்ராய தீமஹீ
தந்நோ மாருதி:ப்ரசோதயாத்

விளக்கம் நீங்க தான் குமரன் சொல்லணும்.

குமரன் (Kumaran) said...

சனிக்கிழமை தான் ஹனுமத் ஜயந்தி இராகவ். வீட்டுல பேச்சோட பேச்சா 'சனிக்கிழமை ஹனுமத் ஜயந்தி'ன்னு சொன்னாங்க. நான் ஏதோ நினைவுல இந்தியாவுல சனிக்கிழமை வந்திருச்சுன்னு இடுகையைப் போட்டுட்டேன். உங்க பின்னூட்டம் பாத்த பிறகு தான் என்னோட தப்பு தெரியுது. :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான்!
சனிக்கிழமை தானே! அதுக்குள்ளாற பந்தலில் இருந்து கூடலுக்குத் தாவினையோ-ன்னு நினைச்சிட்டேன்! :)
அதனால் என்ன! இப்போ கூடலில் இருந்து பந்தலுக்குத் தாவு! :))

Happy Birthday sweet boy! chollin chelvaa! :)

குமரன் (Kumaran) said...

ஹனுமத் காயத்ரியைத் தந்ததற்கு நன்றி இராகவ். விளக்கம் தேவையில்லை. எளிமையாகத் தான் இருக்கிறது.

Kavinaya said...

ஸ்ரீராமஜெயம். அனுமன் ஜெயந்திக்கு நல்ல பதிவு. அழகான பாடல். புது வார்த்தைகளும் கத்துக்கிட்டேன் :) நன்றி குமரா.

Geetha Sambasivam said...

படம் கூகிளார் தயவா?? இல்லை நீங்க எடுத்ததா?? அருமையா இருக்கே? நல்லதொரு பதிவு வழக்கம்போலவே பல நல்ல தகவல்களுடன்.
முன்கூட்டிய புத்தாண்டு வாழ்த்துகள், உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும்.

குமரன் (Kumaran) said...

படங்கள் கூகிளார் தயவு தான் கீதாம்மா. நன்றி.

வாழ்த்துகளுக்கும் நன்றி. உங்களுக்கும் உங்கள் இல்லத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

குமரன், அருமையான எழுத்தால் அனுமனை நினைவில் இருத்திவிட்டீர்கள்.

நீங்கள் எல்லோரும் சொல்லும் விளக்கங்களே மனதுக்கு இதமாக இருக்கிறது.
அனுமன் தாள் சரணம். அவன் தொழும் ஸ்ரீஇராமன் தாள் சரணம்ம்..
உங்களூக்கும் மனைவிக்கும்,குழந்தைகளுக்கும், மேம்மேலும் வாழ்வு சிறக்க வாழ்த்துகள்.

மெளலி (மதுரையம்பதி) said...

இன்று தான் வரமுடிந்தது....அழகிய இடுகை. நன்றி.

கொப்புடையம்மன் கோவிலில் ஆஞ்சினேயர் புதிதாக பிரதிஷ்ட்டை ஆகியிருக்கிறது. அங்கு நேற்று வழிபட்டேன்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

சினம் அடங்க "மாருதியால்" சுடுவித் தானைத்
தில்லை நகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்
இனிது அமர்ந்த அம்மானை இராமன் தன்னை
ஏத்துவார் இணையடியே ஏத்தினேனே!

*********************

தில்லை நகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்
திறல் விளங்கு "மாருதியோடு" அமர்ந்தான் தன்னை
....
கொல்லியலும் படைத்தானைக் கொற்ற ஒள்வாள்
கோழியர் கோன் குடைக் குலசேகரன் சொற் செய்த
....

என்று குலசேகாராழ்வார் பெருமாள் திருமொழியிலும் அனுமன் பேசப்படுகிறான்!

Sethu Subramanian said...

>>.... But Krishna assured them that no harm would befall them. He lifted Mount Govardhan with his little finger and sheltered men and beasts from the rain. This gave him the epithet Govardhandhari. After this, Indra accepted the supremacy of Krishna. (Shakti M Gupta. 1991. Festivals, Fairs and Fasts of India. Pages 145-146.)<<
According to a legend, before Krishna was born, Indra, the god of Rain, was the chief deity of Vraj. Then Krishna instigated the people to stop worshipping Indra. Indra wanted to show his power over Krishna and brought about a cloud-burst which flooded the countryside for many days. People were afraid that the downpor was a result of their neglect of Indra. But Krishna assured them that no harm would befall them. He lifted Mount Govardhan with his little finger and sheltered men and beasts from the rain. This gave him the epithet Govardhandhari. After this, Indra accepted the supremacy of Krishna. (Shakti M Gupta. 1991. Festivals, Fairs and Fasts of India. Pages 145-146.)
See
http://www.salagram.net/parishad77-g.htm
for a picture of Krishna holding the giri by his left pinky ( iDadu kai suNDu viral)

I wonder why PeriyAzhwar thought Krishna needed his whole left palm (aindu viral) to hold the govardhana giri. The pictures shown in this blogpost--where are they from?

குமரன் (Kumaran) said...

உங்களின் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி வல்லியம்மா.

குமரன் (Kumaran) said...

நன்றி மௌலி. கொப்புடையம்மன் கோவில் எங்கே இருக்கிறது? மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்றீர்களா?

குமரன் (Kumaran) said...

நாலாயிரத்தில் அனுமனைப் பற்றி இருக்கும் பாசுரங்களை இடவேண்டும் என்று எண்ணி 'அனுமன்' என்ற சொல்லை நாலாயிரத்தில் தேடினேன். அப்போது ஒரே ஒரு இடத்தில் தான் அந்தப் பெயர் இருக்கிறது என்பதைக் கண்டு மிக்க வியப்பாக இருந்தது. அந்த பாசுரத்தை மட்டும் இந்த இடுகையில் இட்டேன். அந்த வியப்போடு தான் உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பினேன் இரவி. 'மாருதி' என்ற சொல்லைத் தேடி இவ்விரு பாசுரங்களையும் எடுத்துத் தந்ததற்கு நன்றி. இன்னும் வேறு எந்தப் பெயர்களால் சிறிய திருவடி நாலாயிரத்தில் குறிக்கப்படுகிறார் என்று பார்க்கவேண்டும்.

மெளலி (மதுரையம்பதி) said...

//நன்றி மௌலி. கொப்புடையம்மன் கோவில் எங்கே இருக்கிறது? மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்றீர்களா?//

மேலிருக்கும் கேள்வியை இப்போதுதான் பார்த்தேன் குமரன்.

கொப்புடையம்மன் இருப்பது - காரைக்குடி.

மீனாட்சி கோவில் ஞாயிறுன்று காலை திருவனந்தலுக்குச் சென்றேன்.

குமரன் (Kumaran) said...

நீங்கள் சொல்வதைப் போல் தன் சுண்டுவிரலால் கோவர்த்தனகிரியைத் தாங்கினான் கண்ணன் என்ற செய்தியையும் படித்திருக்கிறேன் சேதுராமன் ஐயா. நாலாயிரத்தில் இந்தக் 'குன்றம் ஏந்திக் குளிர்மழைக் காத்தலை'ப் பற்றி சொல்லும் இடங்களில் முழுக்கையா ஒற்றைவிரலா என்பதைப் பற்றி ஏதேனும் சொல்லியிருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

இந்த இடுகையில் இடுவதற்காகப் படங்களைத் தேடிய போது பெரியாழ்வார் ஐந்து விரல்கள் என்று தெளிவாகச் சொல்லியிருப்பதால் அப்படி இருக்கும் படங்களை மட்டுமே தேடி இட்டேன்; ஒற்றை விரலால் தாங்கும் படங்களை இடாமல் தவிர்த்தேன். நீங்கள் அந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறீர்கள். :-)

முதல் படத்தைப் பார்த்தால் வடக்கத்திய கலை நுணுக்கம் தெரிகின்றது. ஆனால் எந்த ஊர் என்று தெரியவில்லை. இரண்டாவது படத்தில் இருக்கும் சிற்பம் மாமல்லபுரத்தில் இருக்கிறது. அண்மையில் சென்னைக்குச் சென்ற போது கண்டேன்.

இவ்விரு படங்களும் கூகிளார் தந்தவை.

குமரன் (Kumaran) said...

காரைக்குடி கொப்புடையம்மன் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் - இரண்டு கோவில்களைப் பற்றியும் எழுதுங்கள் மௌலி.