Monday, December 01, 2008

தயங்கித் தயங்கிக் கேட்டதால் தயங்கித் தயங்கிப் பதில் சொல்கிறேன்!

முன்பு 'கேள்விகள் வரவேற்கப்படுகின்றன' என்று ஒரு இடுகை இட்டு நண்பர்கள் கேள்விகள் கேட்க பதில்கள் சொல்லியிருந்தேன். அப்போதெல்லாம் கேட்காமல் மிக மிகத் தயங்கிப் பின்னர் கடைசியில் சில கேள்விகளைக் கேட்டார் இராகவ். 'சரி. குமரன் பதில் சொல்லப் போவதில்லை. மறந்துவிட்டார்' என்றே அவர் எண்ணியிருப்பார். அவ்வளவு நாட்கள் ஆகிவிட்டன. மறக்கவில்லை. ஆனால் அவர் தயங்கித் தயங்கிக் கேட்டதைப் போல் நானும் பதில் சொல்லத் தயங்கிக் கொண்டிருந்தேன்.

தயக்கம் மட்டுமின்றி இன்னொரு வேலையும் இருந்தது. மே மாதத்திலிருந்து படிக்கவென்று சேர்த்து வைத்திருந்த நண்பர்களின் இடுகைகள் குவிந்திருந்தன. அவற்றை ஒவ்வொன்றாகப் படித்து இப்போது தான் அக்டோபருக்கு வந்திருக்கிறேன். விரைவில் எல்லாவற்றையும் படித்து முடித்துவிடுவேன் என்று நம்புகிறேன். :-)

இதோ தயங்கித் தயங்கி இராகவன் கேட்ட கேள்விகள்!

குமரன், இதோ என்னுடைய கேள்விகள்.. முன்னரே கேட்க வேண்டும் என்று நினைத்திருந்தேன், ஆனாலும் தயக்கம் இருந்ததால் கேக்கவில்லை. கேள்விகளில் வார்த்தைகள் தவறாக இருப்பின் சரி செய்து விடையளிக்கவும்.

1. அன்னை பார்வதி, திருமாலின் தங்கை என்பது எந்த வகையில். எனக்கு தெரிந்து எந்த வைஷ்ணவரும் இதை ஒத்துக் கொண்டதாக தெரியவில்லை. நாராயணண், நான்முகனை படைத்தான், நான்முகன் சங்கரனை படைத்தான் என்ற பாசுர அளவில் மட்டும் எனக்கு தெரியும்.

2. பிராம்மணன் என்பவர் யார்? சற்று விரிவாக விளக்க வேண்டுகிறேன்.

3. என் தாய்மொழி தமிழாக இருந்தும், 23 வயது வரை பள்ளியில், நண்பர்கள் அனைவருடனும் செளராஷ்ட்ர மொழி பேசியே வளர்ந்ததால் தமிழ் சில நேரங்களில் தடுமாறும். நீங்க இப்புடி தமிழ்ல கலக்குறீங்களே எப்புடி (கொஞ்சம் காமெடியா சொல்லலாமே)

4. பலவிதமான பேச்சுத்தமிழ் புழக்கத்தில் உள்ளது போலவே, செளராஷ்ட்ரமும் உள்ளதே ஏன்?? உதாரணத்திற்கு எமனேஸ்வரம் செளராஷ்ட்ர பேச்சை மதுரை மக்கள் கேலி செய்வர். செந்தமிழ் என்பது போல் செம்மையான செளராஷ்ட்ரா மொழி உள்ளதா ?


ஒவ்வொன்றாகப் பதில் சொல்கிறேன். முடிந்த வரை சிரிச்சுவையுடன். நீங்களும் சிரிச்சு வையுங்கள். :-)

1. தமிழக வைணவர் எவரும் பார்வதியின் அண்ணன் திருமால் என்று ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை இராகவ். இரவிசங்கரிடம் கேட்டால் அப்படி ஏற்றுக் கொண்டதற்குத் தரவுகள் தரலாம். ஆனால் தமிழக சைவ, சாக்த சமயங்களில் எல்லாம் அந்தக் கருத்து வலுவாக இருக்கிறது. இந்தக் கருத்து சமய ஒற்றுமைக்காக ஆதிசங்கரரிடமிருந்து தொடங்கியிருக்கலாம். ஸ்மார்த்தத்தின் வழியே தமிழகத்திலும் அந்தக் கருத்து வலுப்பெற்று சைவ சாக்த சமயங்களில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கலாம். ஆனால் இவையெல்லாம் வெறும் ஊகங்களே.

ஆழ்வார்கள் யாரும் பார்வதிக்கும் திருமாலுக்கும் உள்ள உடன்பிறந்தோர் உறவைப் பற்றி பேசவில்லை. ஆனால் பெருமாளின் உடலில் 'பிரம்மன், சிவன், திருமகள்' மூவருக்கும் இடமுண்டு என்று பாடியிருக்கிறார்கள். அப்போது பெருமாளின் வலப்புறமே சிவனுக்குரியது என்று பாடியிருக்கிறார்கள். அது சங்கரநாராயண உருவத்தில் சிவன் வலப்புறத்திலும் திருமால் இடப்புறத்திலும் இருப்பதை ஒத்திருப்பதைப் பார்க்கலாம். சங்கரநாராயண உருவத்தை அருத்தநாரீசுவர உருவத்திற்கு ஒப்பிட்டால் அதே இடப்பக்கத்தில் அம்மை இருப்பதைக் காணலாம். அதனால் நாயன்மாரில் ஒருவர் சொன்ன 'அரியலால் தேவியில்லை ஐயன் ஐயனாருக்கே' என்ற கருத்து வலுப்படுவதைக் காணலாம்.

இந்தக் கேள்விக்கு இன்னும் விரிவாக விடை தரலாம். அதனை நம் நண்பர் இரவிசங்கர் செய்தால் இன்னும் விரிவாகவும் சுவையாகவும் இருக்கும். நேரமும் தேவையும் அமைந்தால் அவர் எழுதலாம்.

2. இதற்கு நான் பதில் சொல்வதற்கு முன்னர் பாரதியார் உபநிடதங்களின் கருத்தினை தொகுத்துத் தந்திருப்பதைத் தருகிறேன்.

'பிரம்ம, ஷத்திரிய, வைசிய, சூத்திரர் என்று நான்கு வர்ணங்கள் உண்டு. அவற்றிலே, பிராமணன் பிரதானமானவன் என்று வேத சாஸ்திரத்தைத் தழுவி ஸ்மிருதிகளாலும் சொல்லப்படுகிறது. அதில் பிராமணன் யாரென்று பரிசோதிக்கத் தக்கதாகும்... பிராமணன் வெள்ளை நிறமுடையவன்; ஷத்திரியன் செந்நிறமுடையவன்; வைசியன் மஞ்சள் நிறமுடையவன்; சூத்திரன் கருமை நிறமுடையவன் என்பதாக ஓர் நியமத்தையும் காணவில்லை. இன்னும் உடல் பார்ப்பானாயின், தகப்பன் முதலியவர்களை இறந்தபின் கொளுத்தும் மகன் முதலியவர்களுக்குப் பிரம்மஹத்தி தோஷம் உண்டாகும். ஆதலால் (அவனுடைய) தேஹம் பிராமணனாக மாட்டாது. ஆயின் பிறப்புப் பற்றிப் பிராமணன் என்று கொள்வோமென்றால் அதுவுமன்று. ஏனெனில் பல ரிஷிகள் ஜந்துகளுக்குப் பிறந்திருக்கிறார்கள். ஆயின் அறிவினால் பிராமணன் என்று கொள்வோமென்றால் அதுவுமன்று.

அப்படியானால் யார்தான் பிராமணன்? எவனொருவன் இரண்டற்றதும், பிறவி, குணம், தொழில் என்பவை இல்லாததும், உள்ளும் புறமும் ஆகாசம் போலக் கலந்திருப்பதும் அளவிடக் கூடாததும், அனுபவத்தால் உணரத்தக்கதுமாகிய இறுதிப் பொருளை நேருக்கு நேராகத் தெரிந்து காமம், குரோதம் முதலிய குற்றங்களல்லாதவனாய், பாபம், மாற்சரியம், விருப்பம், ஆசை, மோகம் முதலியவை நீங்கியவனாய், ஆடம்பரம், அகங்காரம் முதலியவை பொருந்தாத நெஞ்சமுடையவனாய் இருக்கின்றானோ இங்ஙனம் கூறப்பட்ட இலக்கணமுடையவனே பிராமணனென்பது சுருதி ஸ்மிருதி புராண இதிகாசம் என்பவற்றின் அபிப்ராயமாகும்.'

இதன் படி பார்த்தால் பிராமணன் என்று நாம் தற்போது அறிந்தவர்களில் யாருமே இல்லை. நம்மிடமிருந்து மறைந்து வாழ்கிறார்களோ என்னவோ? :-)

3. எழுதுறது வேற; பேசுறது வேற இராகவ். என்னுடன் தொலைபேசிய பதிவுலக நண்பர்களிடம் கேட்டுப் பாருங்கள். நானும் எப்படி தயங்கித் தயங்கி பேசுகிறேன் என்று. :-)

ஆமா. நீங்க 23 வயது வரை பள்ளியிலேயே படித்துக் கொண்டிருந்தீர்களா? சொல்லவே இல்லை? ஒவ்வொரு வகுப்பிலும் எத்தனை வருடம் படித்தீர்கள்? :-)

என்னுடைய தமிழார்வத்திற்கு எனக்கு அமைந்த தமிழாசிரியர்கள் தான் காரணம் இராகவ். நானும் பள்ளி இறுதி வகுப்பு வரை பள்ளியில் நண்பர்களுடன் சௌராஷ்ட்ரம் பேசியே தான் வளர்ந்தேன். ஏதாவது ஒரு குறை இருந்தால் இன்னொன்றில் அதனை இட்டு நிரப்புவார்கள் என்று கேள்விபட்டிருப்பீர்களே. எனக்கு விளையாட்டுகளில் பள்ளிக் காலத்தில் ஈடுபாடு வரவில்லை. அதனால் சமயம், மொழி என்று ஈடுபாடு சென்றது. அதில் நான் தனித்தன்மை உடையவனாகக் 'காட்டி'க் கொள்ள முடிந்ததால் அதில் ஆர்வம் இன்னும் கூடியது. ஆசிரியர்களும் நன்றாகத் தூண்டிவிட்டார்கள். :-)

இப்போது கூட நீங்கள் யாரும் படிக்கவில்லை என்றால் நான் எழுத மாட்டேன். எல்லாம் வெளி வேடம் தான். பெயருக்கும் புகழுக்கும் தான் எல்லாம். :-)

4. செந்தமிழ், செங்கிருதம் போல் செந்தரப்பட்ட சௌராஷ்ட்ரம் இல்லை இராகவ். அப்படி இருக்க வேண்டும் என்ற எண்ணம் சிலருக்கு இருக்கிறது. ஆனால் 'இதெல்லாம் எதற்கு? மொழி என்பது தகவல் பரிமாற்றத்திற்கு மட்டும் தானே' என்ற எண்ணம் சௌராஷ்ட்ரர்களில் மிகப் பெரும்பான்மையினருக்கு இருக்கிறது. அதனால் யாரும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை.

வட்டார வழக்கு சௌராஷ்ட்ரத்தில் இருப்பது இயற்கை தானே. ஊர் மாற்றி ஊர் திருமணம் செய்து கொடுப்பதே இப்போது தான் கொஞ்சம் தொடங்கியிருக்கிறது. சென்ற தலைமுறை வரை அது மிக மிக அரிதாகவே நடந்தது. வெளியூரில் பெண் எடுத்தாலோ கொடுத்தாலோ கேவலமாக எண்ணப்பட்டது. அப்படி கொடுக்கல் வாங்கல் தொடர்பு கூட இல்லாத போது தனித்தனியான பேச்சு வழக்கு ஏற்படுவது இயற்கை தானே. இதனைப் பற்றி எழுதத் தொடங்கினால் நிறைய எழுத வேண்டும். இன்னொரு தருணத்தில் அதனைப் பார்க்கலாம். :-)

104 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இதோ தயங்கித் தயங்கி இராகவன் கேட்ட கேள்விகள்//

இராகவன் கேட்ட கேள்விகளா?
இராகவ் ஐயா கேட்ட கேள்விகளா?

எதுக்கு எதுக்கு தயங்கிக் கேள்வி கேக்கணும் என்பது தான் அடியேன் கேள்வி!

//தமிழக வைணவர் எவரும் பார்வதியின் அண்ணன் திருமால் என்று ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை இராகவ். இரவிசங்கரிடம் கேட்டால் அப்படி ஏற்றுக் கொண்டதற்குத் தரவுகள் தரலாம்//

முடிந்த வரை சிரிச் சுவையுடன். சிரிச்சு வைச்சேன் குமரன்! :)))

மெளலி (மதுரையம்பதி) said...

நல்ல பதில்கள் குமரன் :). சோவின் எங்கே பிராம்மணன் என்னும் புத்தகத்தை ராகவ் படிக்க வேண்டுகிறேன்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//மே மாதத்திலிருந்து படிக்கவென்று சேர்த்து வைத்திருந்த நண்பர்களின் இடுகைகள் குவிந்திருந்தன//

ஆகா!
மொதல்ல போய் பந்தல் இடுகைகளை எல்லாம் படிங்க குமரன்! :)

//இதன் படி பார்த்தால் பிராமணன் என்று நாம் தற்போது அறிந்தவர்களில் யாருமே இல்லை. நம்மிடமிருந்து மறைந்து வாழ்கிறார்களோ என்னவோ? :-)//

ஏன் இல்லை குமரன்?
தற்போது அறிந்த
காஞ்சி மாமுனிவர், வாரியார் சுவாமிகள், அன்னை தெரேசா, எம்.எஸ்.அம்மா என்றும் முகம் தெரியாத எத்தனையோ தொண்டர்களும் இருக்கிறார்களே!

ஆனால் நீங்கள் பட்டியல் இட்ட அத்தனை குணங்களும் கொண்டவர்கள் கிட்டத்தட்ட ஜீவன் முக்தர்கள் தான்! கிட்டத்தட்ட பரப்பிரம்மம் ஆனவர்கள் இல்லை அதனுள் செல்லும் நிலையில் உள்ளவர்கள்! :)

//எவனொருவன் இரண்டற்றதும், பிறவி, குணம், தொழில் என்பவை இல்லாததும், உள்ளும் புறமும் ஆகாசம் போலக் கலந்திருப்பதும் அளவிடக் கூடாததும், அனுபவத்தால் உணரத்தக்கதுமாகிய இறுதிப் பொருளை நேருக்கு நேராகத் தெரிந்து காமம், குரோதம் முதலிய குற்றங்களல்லாதவனாய், பாபம், மாற்சரியம், விருப்பம், ஆசை, மோகம் முதலியவை நீங்கியவனாய், ஆடம்பரம், அகங்காரம் முதலியவை பொருந்தாத நெஞ்சமுடையவனாய் இருக்கின்றானோ //

இதற்கான ஸ்ருதி, ஸ்மிருதி ப்ரமாண வாசகங்கள் ஏதேனும் இருக்கா குமரன்?

இவ்வளவு காம்ப்ளிக்கேட்டடா (கடினத்துவமா) இது? இவ்வளவு வரையறை இதற்கு விதிக்க வேண்டுமா என்ன?

எவ்வுயிர்க்கும் செந்தன்மை
1. பூண்டு
2. ஒழுகுபவர்கள்
என்று மிக எளிதாகச் சொல்லி விட்டாரே ஐயன்!
அந்தணர் என்போர் அறவோர்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஆமா. நீங்க 23 வயது வரை பள்ளியிலேயே படித்துக் கொண்டிருந்தீர்களா? சொல்லவே இல்லை? ஒவ்வொரு வகுப்பிலும் எத்தனை வருடம் படித்தீர்கள்? :-)//

அந்தந்த வகுப்பில் வந்து போகும் ஃபிகர்களைப் பொறுத்தது அது! :)

//அதனால் சமயம், மொழி என்று ஈடுபாடு சென்றது. அதில் நான் தனித்தன்மை உடையவனாகக் 'காட்டி'க் கொள்ள முடிந்ததால் அதில் ஆர்வம் இன்னும் கூடியது.//

ஹா ஹா ஹா!
நீங்க சமயமா/மொழியா "காட்டிக்" கொண்டதைக் "காட்டி" உங்களை யாரெல்லாம் எப்படியெல்லாம் ஓட்டினார்கள் குமரன்? பெண்களை மட்டும் சொல்லுங்க போதும்! :)

//ஆசிரியர்களும் நன்றாகத் தூண்டிவிட்டார்கள். :-)//

அதாச்சும் அப்பவே பின்னூட்டம் போட்டார்கள்!

//இப்போது கூட நீங்கள் யாரும் படிக்கவில்லை என்றால் நான் எழுத மாட்டேன்//

ராகவ், கேட்டுக்கோப்பா!
ஆசிரியர்களைப் போலவே நீயும் நல்லாத் தூண்டி விடணும்! :)

Unknown said...

நீங்களும் இராகவ்வும் கேட்டு பதில் சொல்லிக்கறதை ஓரமா நின்னு கேட்டு விட்டேன்:)

//தமிழக வைணவர் எவரும் பார்வதியின் அண்ணன் திருமால் என்று ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை இராகவ். // 'வைணவக் காக்கை' கதை தெரியும் அல்லவா? :-)

மீனாட்சி, "நாராயணஸ்யானுஜாம்"! ஆனால், பார்வதியை ஜேஷ்டைன்னும் (மூத்தவள், "சேச்சி"யோட ஆதி, "அக்கா" - ஜெமோ வேற எழுதியிருக்காரு) படிச்சிருக்கேன். மதுரைக்காரர் நீங்கள், மீனாட்சி திருக்கல்யாணத்துக்கு அழகரில்லாமலா?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//மொழி என்பது தகவல் பரிமாற்றத்திற்கு மட்டும் தானே' என்ற எண்ணம் சௌராஷ்ட்ரர்களில் மிகப் பெரும்பான்மையினருக்கு இருக்கிறது//

இது சரியா தவறா குமரன்?

அப்பாடா சொல்-ஒரு-சொல்லுக்கு அடி போட்டாச்சி! நாராயண, நாராயண! :)

Unknown said...

//ஏனெனில் பல ரிஷிகள் ஜந்துகளுக்குப் பிறந்திருக்கிறார்கள்.// அறிவின் பரிணாம வளர்ச்சியாகவே இதைப் பார்க்கிறேன். எனக்கு புராணக் கதைகளில் அவற்றின் உருவகத் தன்மை தான் முன்னிலைப் படுத்தப் படுகிறதுன்னு தோணும்.

//ஆயின் அறிவினால் பிராமணன் என்று கொள்வோமென்றால் அதுவுமன்று.//

"அதனிலை ஒளியுறும் அறிவாம், அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார்" Final word for me:-))))

சிவமுருகன் said...

////மொழி என்பது தகவல் பரிமாற்றத்திற்கு மட்டும் தானே' என்ற எண்ணம் சௌராஷ்ட்ரர்களில் மிகப் பெரும்பான்மையினருக்கு இருக்கிறது//

இது சரியா தவறா குமரன்? //

இதபத்தி அண்ணன் சொல்ல மாட்டார்!

//நாராயண, நாராயண! :)//

வழிமொழிகிறேன்! :-)

Unknown said...

//எவ்வுயிர்க்கும் செந்தன்மை
1. பூண்டு
2. ஒழுகுபவர்கள்//
பூண்டு வெங்காயம் இல்லாத ஒழுக்க வாழ்க்கை தான் யோகமுறை வாழ்க்கை ன்னு சொல்றாங்களாமே அய்யா!
:-)

Geetha Sambasivam said...

//ஆமா. நீங்க 23 வயது வரை பள்ளியிலேயே படித்துக் கொண்டிருந்தீர்களா? சொல்லவே இல்லை? ஒவ்வொரு வகுப்பிலும் எத்தனை வருடம் படித்தீர்கள்? :-)
//

ஹிஹிஹி, அஸ்திவாரம் பலமாப் போட்டிருக்கார், இது புரியலை உங்களுக்கு! :P:P:P

ramachandranusha(உஷா) said...

ராகவ்! தயக்கமே இல்லாமல் சில பதில்கள்

1-நாங்கள் வழி வழியாய் வந்த வைண்ஷவர்கள்.வீபூதி கூட வீட்டில் அனுமதிக்க மாட்டோம் :-) ஆனால் கெளரி பூஜை உண்டு. கெளரி, விஷ்ணுவின் சிஸ்டர், ஆனால் சிவனின் மனைவி. ஆனால் இன்றைய தலைமுறையில் சைவ, வைஷ்ணவ
பிரிவுகள் எல்லாம், மிக சில தீவிர நம்பிக்கையாளர்களை தவிர மற்றவர்களால் பேதம் பார்க்க படுவதில்லை. பூஜை அறை/
அலமாரியை நோட்டம் விடும் பழக்கம் உண்டு. பல சைவ வீடுகளில் திருப்பதி வெங்கடேசன் இருப்பார். வைஷ்ணவர்களும் திருவண்ணாமலை போவது, நவக்கிரக யாத்திரை, காசி யாத்திரை எல்லாம் இன்று சாதாரணமாகிவிட்டது. பெரும்பான்மை வீட்டு வாசலில் கண் திருஷ்டி விநாயகர் இருப்பார். பூஜை அறையில் குபேர பூஜை என்று ஒரு சதுர கோலத்தில், எழுத்து கோலத்தில்
போடப்பட்டு, அதில் காசு வைத்திருப்பார்கள்.இந்து மதத்தில் பல உட்பிரிவு சம்பிராயதங்கள் வழக்கொழிந்து விட்டன.

2- கே. ஆர் எஸ் அண்ணாச்சி போடுகிற லிஸ்ட் அற்புதம். ஆனால் வாழும் உதாரணமாய் அப்துல் கலாமை விட்டு விட்டாரே?

3- குமரனுக்கு பர்சனல்

4- அதையும் குமரன் அழகாய் விளக்கிவிட்டார்.

Unknown said...

//கெளரி, விஷ்ணுவின் சிஸ்டர், ஆனால் சிவனின் மனைவி. // விஷ்ணுவின் பிள்ளை பிரம்மா, பிரம்மாவின் பிள்ளை சிவன்ன்னும் மற்ற "வைண் ஷவர்"களில் குளித்திருக்கிறேன்.

//கண் திருஷ்டி விநாயகர்// விஷ்வக்சேனரின் இரட்டைச் சகோதரராக்கும்.

:o>

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...
'வைணவக் காக்கை' கதை தெரியும் அல்லவா? :-)//

தெரியாதே கெபி-யக்கா! சொல்லுங்களேன் :)

//தமிழக வைணவர் எவரும் பார்வதியின் அண்ணன் திருமால் என்று ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை இராகவ்//

தவறு குமரன்!
ஆழ்வார் பாசுரத்தில், "பார்வதியின் அண்ணன் திருமால்" என்று சொல்லி இருந்தால் மட்டுமே, தமிழ் வைணவம் ஏற்றுக் கொண்டதாகச் சொல்வீர்களா என்ன? பாசுர வரிகள் தேடிப் பிடிச்சித் தரட்டுமா? :))

ஆசாரியர்கள் சொல்வதும் தமிழ் வைணவம் தான்!
திருவரங்கத்து நம்பெருமாள், கண்ணனூர் மாரிக்கும், ஆனைக்கா அகிலாண்டேஸ்வரிக்கும் இன்றும் பிறந்த வீட்டுச் சீர் அனுப்பும் விழா உள்ளது!

எல்லாவற்றுக்கும் மேலாக, நம்பெருமாள் ஆண்டுக்கொரு முறை, அகிலாண்டேஸ்வரி சன்னிதிக்குள் சென்று வரும் வழக்கத்தை முறைப்படுத்தி நடத்தி வைத்ததே இராமானுசர் தான்!

ஆனால் நம்பெருமாளே உள்ளே சென்ற பின்னாலும் கூட,
அவரைத் தூக்கி வந்த சில ஸ்ரீவைஷ்ணவர்கள், உள்ளே செல்லாமல், எப்போ வருவாரோ-ன்னு வெளியிலேயே பழியாய்க் காத்துக் கிடப்பார்கள் :)
மறந்தும் புறம் தொழா கெத்து காட்டுவார்கள்! :))

சிவமுருகன் said...

அலோ கெக்...!

//மதுரைக்காரர் நீங்கள், மீனாட்சி திருக்கல்யாணத்துக்கு அழகரில்லாமலா?//

அழகரில்லாமல் தானே கல்யாணம் நடக்குது. கடைசி நம்ம பவளகணிவாயர் தான் தாரை வார்த்துரார்.

குமரன் (Kumaran) said...

இராகவனுக்கு நீங்கள் இராகவ்னு பேர் வச்சீங்க. அவரும் பணிவா மாத்திகிட்டார். ஆனாலும் அவர் பேரு இராகவன் தானே. அதான் ஒரு தடவை இராகவ்ன்னு சொல்லிட்டேன்; இன்னொரு தடவை சொல்றப்ப அவர் பேரான இராகவன்னு தானா வந்திருச்சு. மாத்தலை. :-)

இரவிசங்கரிடம் கேட்டால் தரவுகள் தருவார்ன்னு சொன்னா அதுக்கு சிரிச்சு வச்சுட்டு அப்புறம் என்ன 'பாசுர வரிகள் தரவா குமரன்?'ன்னு சலம்பல். தாங்க. அதுக்குத் தானே காத்திருக்கிறோம். :-)

குமரன் (Kumaran) said...

மௌலி. நீங்க சொல்ற பொத்தகம் நானும் படிச்சிருக்கிறேன். இப்ப மதுரையில வீட்டு நூலகத்துல இருக்குது. நல்ல நாவல் அது. ஆனால் குறைகளும் இருக்கின்றன. அதனால் நான் அந்த பொத்தகத்தை யாருக்கும் பரிந்துரைப்பதில்லை. :-)

நல்ல பதில்கள்ன்னு சொன்னதுக்கு நன்றி. :-)

குமரன் (Kumaran) said...

பந்தல் இடுகைகள் எல்லாவற்றையும் படித்துவிட்டேன் என்று தான் நினைக்கிறேன் இரவி. ஏதேனும் படிக்காமல் விட்டிருக்கிறேனா?

நல்ல பட்டியல் தான் தந்திருக்கிறீர்கள்.

// கிட்டத்தட்ட பரப்பிரம்மம் ஆனவர்கள் இல்லை அதனுள் செல்லும் நிலையில் உள்ளவர்கள்!//

நமக்குத் தெரிந்தவர் ஒருவர் இருக்காரே. நானே விட்டாலும் நீங்கள் விடலாமா அவரை? :-)

//இதற்கான ஸ்ருதி, ஸ்மிருதி ப்ரமாண வாசகங்கள் ஏதேனும் இருக்கா குமரன்?//

பிரமாணம் என்று வந்தால் ஸ்மிருதியை முதலில் பார்க்கிறார்கள் வைதிகர்கள்; அப்புறம் ஸ்ருதியைப் பார்க்கிறார்கள். ஸ்மிருதியான சாஸ்திரங்கள் சொன்னவற்றிற்கும் ஸ்ருதியான வேத உபநிடதங்கள் சொன்னவற்றிற்கும் வேறுபாடு இருந்தால் ஸ்ருதி சொல்வதே வெல்லும். இல்லையா?

இங்கே உபநிடதம் சொன்னதை எடுத்துச் சொல்வதாகத் தான் பாரதியார் சொல்கிறார். அதனால் ஸ்மிருதி என்ன சொல்கிறது என்று பார்க்கத் தேவையில்லை. அது மட்டும் இன்றி ஸ்மிருதி கால தேச வர்த்தமானங்களுக்கு ஏற்ப மாறும் தன்மை உடையது தானே.

இந்த 'பிராமணன் யார்?' என்று கேள்வி பதில் உரையாடல் வைக்கும் உபநிடதத்தைப் படித்திருக்கிறேன். ஆனால் அந்த உபநிடதம் என்று சட்டென்று நினைவிற்கு வரவில்லை. தேடிப் பார்த்துத் தருகிறேன்.

ஐயன் சொன்னதும் உபநிடதம் சொன்னதும் ஒன்று தானே இரவி? இரண்டுமே சாதியைக் குறிக்கவில்லை.

குமரன் (Kumaran) said...

இரவிசங்கர்.

தேடிப் பார்த்ததில் இந்தப் பகுதியைப் பேசும் உபநிடதம் 'வஜ்ரசுசி உபநிடதம்' என்று தெரிகிறது. கூகிளார் ஆங்கில மொழிபெயர்ப்புகளைத் தருகிறார்; மூலத்தைத் தரவில்லை. மேலும் தேடிப் பார்க்கிறேன். மூலமும் கிடைத்தால் சொல்கிறேன்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...
பூண்டு வெங்காயம் இல்லாத ஒழுக்க வாழ்க்கை//

யக்கா...நல்ல வேளை! வள்ளுவர் புலால் மறுத்தல் தான் சொல்லி இருக்காரு, பூண்டு மறுத்தல் சொல்லலை-ன்னு சொல்லாமப் போனீங்களே! :))

@உஷாக்கா
//பல சைவ வீடுகளில் திருப்பதி வெங்கடேசன் இருப்பார்//

ஹிஹி! திருப்பதி முருகனாச்சே! இருக்கத் தான் இருப்பார்! ரொம்ப போங்குக்கா உங்களுக்கு! எங்க வீடு பழுத்த சைவ வீடாக்கும்! சொந்தம் கொண்டாடுவோம்!தெரிஞ்சுக்கோங்க :)

//2- கே. ஆர் எஸ் அண்ணாச்சி போடுகிற லிஸ்ட் அற்புதம். ஆனால் வாழும் உதாரணமாய் அப்துல் கலாமை விட்டு விட்டாரே?//

ஹைய்யோ! நான் எழுதும் போது அவர் பேரையும் சேர்த்தே எழுதினேன்! நீங்களும் சொல்றீங்க!

வாழ்கிறார் என்பதால் தான் அவரைத் தவிர்த்து விட்டேன்-க்கா!

மேலும் குமரன் லிஸ்ட்டு போட்ட "விருப்பம், ஆசை, மோகம் முதலியவை நீங்கியவனாய்" என்றெல்லாம் பார்த்தால் சரியா வராது! அதான் சிம்பிளா "அறவோர்", "எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகுவோர்"-ன்னு மட்டும் நிப்பாட்டிக்கிட்டேன்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஐயன் சொன்னதும் உபநிடதம் சொன்னதும் ஒன்று தானே இரவி? இரண்டுமே சாதியைக் குறிக்கவில்லை//

சாதியைக் குறிக்காத வரையில் சரி தான் குமரன்!

ஆனால் ஐயன் வள்ளுவன், எல்லாருக்கும் ஏற்புடையதாக எளிமையாகச் சொல்லி விட்டார்!
***அறத்தின் பாற்பட்டவர்கள் அந்தணர்கள்!***
அவ்வளவு தான்!

அதுக்காக புலனடக்கம், விருப்பம் வெல்லுதல் எல்லாம் ஐயன் சொல்லவில்லை! அறத்தைப் பிடித்துக் கொண்டால் மட்டுமே போதுமானது என்பது தான் ஐயன் கருத்து!

பிறவி, குணம், தொழில் என்பவை இல்லாததும்,
பாபம், மாற்சரியம், விருப்பம், ஆசை, மோகம் முதலியவை நீங்கியவனாய் என்று ரொம்ப Hypothetical-ஆக ஐயன் சொல்லவில்லை!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

// கிட்டத்தட்ட பரப்பிரம்மம் ஆனவர்கள் இல்லை அதனுள் செல்லும் நிலையில் உள்ளவர்கள்!//

//நமக்குத் தெரிந்தவர் ஒருவர் இருக்காரே. நானே விட்டாலும் நீங்கள் விடலாமா அவரை? :-)//

ஐயோ சாமீ!
எனக்கு பரப்பிரம்மம்-ன்னாலே ரொம்ப பயம்ங்க!
அதுவும் அவரு அப்பப்போ பர பிரம்மம் ஆவாரு! அப்பப்போ பிற பிரம்மும் ஆவாரு!
அவர் உங்களுக்குத் தான் சரியான ஆளு! ஜோ, மீ தி எஸ்கேப்! :)

Unknown said...

கே ஆரெஸ்,

Hypothetisis="a tentative assumption made in order to draw out and test its logical or empirical consequences"

Hypotheticalனு எதைச் சொல்றீங்கன்னு பிரியல. அறம் அனுமானம் இல்லையா? பொதுவான அறம்னு பார்த்தா, புலால் உண்ணும் நல்லவர்களை என்ன சொல்லறது, சமண/ வள்ளுவக் கூற்று படி அறம் இல்லையே!

//பாபம், மாற்சரியம், விருப்பம், ஆசை, மோகம்//னு பாரதி குறிப்பிடுவது, "காம, க்ரோத, லோப, மோஹ, மத, மாற்சர்யம்" என்கிற ஆறு குணங்களும் அற்றவன். அசடு. (ஆறு மனமே ஆறு!). Hypothesis நல்லது தான். அது தான் சரின்னும் சொல்லலை.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

@கெபி அக்கா
மொதல்ல ஒன்றைத் தெளிவுபடுத்திடறேன்!
இங்கே வள்ளுவத்தையும், மற்ற தத்துவங்களையும் சாதக/பாதக ஒப்பீடு செய்யவில்லை!

இப்போ நான் சொன்ன விசயத்துக்கு வருவோம்!

புலால் உண்ணும் அறவோர்கள் இருக்காங்க தான்!
அவர்களை அறவோர் இல்லை-ன்னு வள்ளுவர் ஒதுக்கி வைக்கலையே!
புலால் மறுத்தல் தான் சிறந்த அறம். மற்றது எல்லாம் மறம்-ன்னு வள்ளுவம் சொல்லவில்லையே!

புலால் மறுத்தல் துறவறவியலில் தான் வருகிறது! அருள் உடைமை பாற்பட்டது! அறன் உடைமை-ன்னு அதைச் சொல்லலையே!

அறன் உடைமை/அறன் வலியுறுத்தல் என்பது பாயிரத்தில் தனியாத் தான் வருது! அறன் வேறு, அருள் வேறாகத் தான் காட்டுகிறார் வள்ளுவர்!

Hypotheticalன்னு சொல்ல வந்தது என்னான்னா, பல பரிமாணங்களை உள்ளடக்கியது என்ற பொருளில் தான்! நீங்களும் ஆங்கிலப் பொருளில் அதே தான் காட்டியிருக்கீங்க!

பிராம்மணன் என்பதற்குப் பல பரிமாணங்களை ஸ்ருதி வாக்கியங்கள் காட்டுகின்றன! (குமரன் சொன்னது போல பலப்பல குண விசேடங்கள்)

ஆனால் அந்தணர் என்பதற்குப் பல பரிமாணங்களை வள்ளுவம் காட்டவில்லை! - இது தான் நான் சொல்ல வந்தது!

குமரன் சொன்ன லிஸ்ட்டைப் பாருங்க!
//காம, க்ரோத, லோப, மோஹ, மத, மாற்சர்யம்//
இவை இல்லாமல் இருப்பது தான் அறம்! இது வரை சரி தான்!

ஆனால் கூடவே,
//பிறவி, குணம், தொழில் என்பவை இல்லாததும்// என்று வேறு வருகிறது!
குணம் இல்லாம எப்படி?
பிறவி இல்லாம எப்படி?
தொழில் இல்லாம எப்படி?

பிரம்மத்துக்கு இது பொருந்தும்! ஆனால் பிராம்மணன் (அந்தணர்) என்பதற்கு எப்படி? அதான் Hypotheticalன்னு சொன்னேன்!

Hypothesis நல்லது தான்!
We have Null Hypothesis and Alternate Hypothesis in Statiscal Inference too!
அதை மறுக்கவில்லை!

வள்ளுவம் அறம் என்ற ஒரே பரிமாணத்தைத் தொட்டுச் செல்வதால் சிம்பிள் என்று சொன்னேன்!
ஸ்ருதி வாக்கியங்கள் பல பரிமாணங்களைத் தொட்டுச் செல்வதால் காம்ப்ளெக்ஸ் (ஹைப்போதெட்டிக்கல்) என்று சொன்னேன்! அம்புட்டு தான்! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

குமரன்
அன்னை உமையவள் மாலனுக்குத் தங்கையாய், அவனுடன் செல்லமாகக் கடிந்து கொண்டு சண்டையிடும் திவ்யதேசம் ஒன்னு இருக்கு! = திருக்கள்வனூர்.

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் சன்னிதிக்குள்ளேயே அமைந்த இந்த திவ்யதேசம் 108இல் ஒன்று!

தங்கை உமையவளும், மனைவி இலக்குமியும் பேசுவதை ஒளிந்து கேட்ட அண்ணலைத் தலையில் குட்டி, "கள்வா" என்று அழைத்தாள் தங்கை! அதனால் திருக் கள்வனூர்! திவ்ய தேச வைபவமும் இப்படியே தான் பேசுகிறது!

திருமங்கையாழ்வாரும் இப்படி இந்தக் கள்வனூரைப் பாடியுள்ளார்!
ஆழ்வார்கள் பலரும் அன்னை உமையவளை வர்ணித்து உள்ளனர்! திருமங்கை காட்டும் வர்ணனை இதோ!

என்னாலே கேட்டீரே ஏழைகாள்? என் உரைக்கேன்?
மன்னும் மலை அரயன் பொற்பாவை - வாணிலா
மின்னும் மணிமுறுவல் செவ்வாய் "உமை"யென்னும்,
அன்ன நடைய அணங்கு டங்கிடைசேர்...
என்று பெரிய திருமடலில் பார்வதி வர்ணனை ஓடும்!

ஆண்டாளின் திருப்பாவை நோன்பே, பெண்கள் எடுக்கும் "காத்யாயினி" விரதம் தானே? "அம்பா" ஆடல், அம்பாவை ஆடல் தானே?
ருக்மினி கண்ணனை மணக்கும் முன்னர் கெளரியை வணங்கியது போல் தானே, ஆண்டாளும் நோன்பு எடுக்கிறாள்!

இப்படி
* ஆழ்வார்கள் பார்வதியைப் பாட்டாகப் பாட,
* ஆச்சாரியர்கள் வழக்கத்தில் பண்ணி வைக்க,
* இன்னும் ஒரு படி மேலே போய், இராமானுசர் நம்பெருமாளைத் திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி சன்னிதியில் எழுந்தருளப் பண்ணி வைக்க.....

தமிழகத்து வைணவர் அன்னை பார்வதியை ஏற்றுக் கொண்டும் போற்றிக் கொண்டும் தான் இருக்காங்க!

இந்தக் காலத்தில் சிலர் அடித்து விளையாடும் சைவ-வைணவப் பின்னூட்ட ஜல்லிகளைப் போல்,
அப்போதும் ஜல்லி அடித்து அடித்து, உமையன்னையை தமிழக வைணவர்கள் ஏற்றுக் கொண்டாரில்லை என்ற ஒரு மாயத் தோற்றத்தை வேண்டுமானால் சிலர் உருவாக்கி இருக்கலாம்!

ஆனால் மேலே காட்டியபடி, தமிழகத்து வைணவர்கள், அன்னை பார்வதியை ஏற்றுக் கொண்டும் போற்றிக் கொண்டும் தான் இருக்காங்க என்பது பாடல் வழக்கிலும், நடைமுறை வழக்கிலுமே தெரிகிறது!

இதற்கு மேல் தரவுகள் அடியேனிடம் இல்லை குமரன்!

"அண்ணன்-தங்கை" என்ற உறவுமுறை பற்றிய exact பாடல் வரிகள் தான் வேண்டுமென்றால், பிரபந்தத்தில் கிடைப்பது கடினம்!

ஆனால் இதே "அண்ணன்-தங்கை" என்ற உறவுமுறை பற்றிய exact பாடல் வரிகள், வேறு பண்டை இலக்கியங்களிலோ, வடமொழி இலக்கியங்களிலோ கூட கிடைக்குமா-ன்னு தெரியலையே!

கண்ணனுடன் சேர்ந்தே பிறந்தவள், கண்ணன் கோகுலம் சென்று விட, அவள் இங்கு வந்து விட...
கம்சனிடம் இருந்து விடுபட்டு வானில் பறந்தாள் அன்னை!
இது ஒன்று மட்டும் தானா அண்ணன்-தங்கை என்று அழைக்கப்படுபவதற்குக் காரணம்?

அப்படி என்றால் கிருஷ்ணாவதாரத்துக்கு முன்னால் அண்ணன்-தங்கை உறவுமுறை பேசப்பட வில்லையா?

அறிந்த அன்பர்கள், அறியத் தாருங்களேன்!

Raghav said...

சிறியேனின் கேள்விகளுக்கு பதில் அளித்தமைக்கு நன்றி குமரன்.

சென்னைக்கு ஒரு விடயமாக சென்றிருந்ததால் பார்க்க முடியவில்லை.. அதுதான் இரண்டு நாள் தாமதம்.

Raghav said...

//ஆனால் தமிழக சைவ, சாக்த சமயங்களில் எல்லாம் அந்தக் கருத்து வலுவாக இருக்கிறது. இந்தக் கருத்து சமய ஒற்றுமைக்காக ஆதிசங்கரரிடமிருந்து தொடங்கியிருக்கலாம் //

குமரன் எனக்கு வந்த சந்தேகத்திற்கு காரணம்.. பெரும்பாலான (வயதான) வைணவர்களின் செயல் என்று சொல்லலாம்.. இன்றைய காலத்தில் அவ்வாறு இல்லை தான்..

எனக்கு தெரிந்த ஒரு வீர(?) வைணவர் சங்கரநாரயணர் பற்றி சைவர்கள் மட்டுமே குறிப்ப்புடுகிறார்கள், வைணவர்கள் இந்த ஆடித்தபசு பற்றியோ, சங்கரநாராயண உருவம் பற்றியோ கண்டு கொள்வதில்லை என்றார்.

Raghav said...

//இதன் படி பார்த்தால் பிராமணன் என்று நாம் தற்போது அறிந்தவர்களில் யாருமே இல்லை. நம்மிடமிருந்து மறைந்து வாழ்கிறார்களோ என்னவோ? :-) //

பிரம்மத்தை அறிந்தவன் பிராமணன் என்று சொல்லி கேள்விப்பட்டுள்ளேன்.. அதனால் அப்படி பிரம்மத்தை அறிந்த பிராமணன் தனது வழித்தோன்றல்களுக்கும் அதனை கற்றுத் தந்து பிரம்மத்தை அறியச் செய்வதால் அவர் வழித்தோன்றல்களும் பிராமணரே என்று எடுத்துக் கொள்ளப்பட்டு (Taken for granted) இருக்குமோ?

Raghav said...

//பதிவுலக நண்பர்களிடம் கேட்டுப் பாருங்கள். நானும் எப்படி தயங்கித் தயங்கி பேசுகிறேன் என்று. :-)//

எப்பவும் தயங்கி தயங்கி தான் பேசுவீங்களா குமரன்.. :)

//ஆமா. நீங்க 23 வயது வரை பள்ளியிலேயே படித்துக் கொண்டிருந்தீர்களா? சொல்லவே இல்லை? ஒவ்வொரு வகுப்பிலும் எத்தனை வருடம் படித்தீர்கள்? :-)
//

கிட்டத்தட்ட அப்படித்தான்.. நான் பட்டப் படிப்பு மேற்கொண்டது ஒரு இஸ்லாமியக் கல்லூரியில்.. பள்ளியை விடவும் கடுமையான விதிமுறைகள்.. அதனால் 23 வயது வரை பள்ளிக் கல்வி என்றும் சொல்லலாம். :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

வாய்யா ராகவ்! பதிவுக் கதாநாயகன்-ன்னா லேட்டா வரலாம் தப்பில்லை!

//எப்பவும் தயங்கி தயங்கி தான் பேசுவீங்களா குமரன்.. :)//

யாரைப் பார்த்து என்ன கேள்வி கேட்டீரு? அவர் ஏதோ தன்னடக்கத்துல அப்படிச் சொல்லியிருக்காரு! ஆனா மடை திறந்தா வெள்ளம் பாயும்! :)

//எனக்கு தெரிந்த ஒரு வீர(?) வைணவர் சங்கரநாரயணர் பற்றி சைவர்கள் மட்டுமே குறிப்ப்புடுகிறார்கள்//

இதை நான் கன்னா பின்னான்னு வழி மொழியறேன்!
ஆடித்தபசு, சங்கரநாராயணர்-ன்னு பதிவு போட்டதும் ஒரு சைவர் தான்! ஹா ஹா ஹா :))
http://madhavipanthal.blogspot.com/2008/08/sankaran-kovil-gomathi-amman-adi.html

//சங்கரநாராயண உருவம் பற்றியோ கண்டு கொள்வதில்லை என்றார்//

இது தான் வைணவர்கள் செய்யும் தவறு! மறந்தும் புறம் தொழாமல் இருக்கணும்னா இருந்துக்கட்டும்! அதற்காக ஆழ்வார்களை முழுதுமாய்ப் படிக்காது, இவர்களாகவே முடிவு கட்டிக் கொள்வது தான் தவறு!
சங்கர நாராயண உருவத்தை ஆழ்வார்கள் பாடிப் பரவியுள்ளனர் என்பதை இது போன்றவர்கள் உணர்ந்து பார்க்க வேணும்!

பிறைதங்கு சடையானை வலத்தே வைத்துப்
பிரமனைத்தன் னுந்தியிலே தோற்று வித்து,
கறைதங்கு வேல்தடங்கண் திருவை மார்பில்
கலந்தவந்தா ளணைகிற்பீர், கழுநீர் கூடி
...
...
சீராம விண்ணகரே சேர்மி னீரே.

குமரன் (Kumaran) said...

பின்னூட்டங்களில் நிறைய தகவல்கள் சொன்ன அனைவருக்கும் நன்றி. இவ்வளவு பின்னூட்டங்கள் வந்த பிறகு மீண்டும் ஒரு முறை இடுகையைப் படித்துப் பார்த்தேன். தயங்கித் தயங்கித் தான் எழுதியிருக்கிறேன் போலும். நான்கு கேள்விகளில் ஒரு கேள்விக்கும் முழுமையான பதிலைத் தரவில்லை. எல்லாம் எதையோ சொல்லத் தொடங்கி சொன்ன வரை போதும் என்று பாதியிலேயே நிறுத்தியிருக்கிறேன். அதனால் சொல்லியதை விட சொல்லாமல் விட்டது தான் அதிகமாகிவிட்டது போலும். Reading between the lines செய்வதற்கும் நிறைய வாய்ப்புகள் அமைந்துவிட்டன. :-)

'தமிழக வைணவர் எவரும் பார்வதியின் அண்ணன் திருமால் என்று ஏற்றுக் கொள்ளவில்லை' என்று எழுதியிருக்கிறேன். அது தவறு. தமிழக வைணவத்தின் அடிப்படையாக அமைந்த எந்த நூலிலும் - ஆழ்வார்களின் அருளிச்செயல்கள் ஆகட்டும்; ஆசாரியர்களின் அருள்மொழிகள் ஆகட்டும் - எங்கும் இந்தக் கூற்று இருப்பதாகத் தெரியவில்லை - ஒரே ஒரு இடத்தைத் தவிர்த்து - அங்கும் நேரடியாக இல்லை. அடிப்படை நூற்களில் இந்தக் கருத்து இல்லை என்று சொல்லும் வைணவ ஆசாரியர்களின் கருத்துகளையும் அண்மையில் படித்திருக்கிறேன். அதைச் சொல்ல வந்துவிட்டு மொத்தமாக தமிழக வைணவர் யாரும் ஏற்றுக் கொள்வதில்லை என்று சொல்லிவிட்டேன் - அது தவறு தான். திருமாலின் தங்கை பார்வதி என்ற கருத்து இந்து மதத்தின் எல்லா சமயப் பிரிவினருக்கும் - தமிழக வைணவப் பிரிவினருக்கும் - நடைமுறையில் ஏற்புடைய கருத்து தான் என்பதற்குப் பல எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன.

அதே நேரத்தில் தமிழக சைவ, சாக்த சமயங்களில் நடைமுறையில் மட்டுமின்றி நூற்களிலும் இந்தக் கருத்து வலுவாக இருக்கிறது என்பது எனது அவதானம் - பல தரவுகள் தரலாம். இடுகையில் ஒரே ஒரு தரவு மட்டும் தந்துவிட்டு ஏரணத்தின் படி பேசப் போய்விட்டேன். அப்புறம் திடீரென்று இத்துடன் போதும் என்று நினைத்துக் கொண்டு இரவிசங்கர் சொல்லட்டும் என்று விட்டிருக்கிறேன். :-) அதுவும் ஒரு வகையில் நல்லதாகத் தான் போய்விட்டது. முழுவதும் எழுதியிருந்தால் 'நல்ல பதில்கள்' என்று மட்டும் சொல்லிவிட்டுப் போகும் வாய்ப்பு தான் கிட்டியிருக்கும். தங்கள் கருத்துகளைத் தங்கள் கைப்பட எழுதும் வாய்ப்பு இல்லாமல் போயிருக்கும். சரி தானே? :-)

மீசையில் மண் ஒட்டவில்லை என்பதையும் சொல்லிக் கொள்கிறேன். :-)

குமரன் (Kumaran) said...

//நீங்க சமயமா/மொழியா "காட்டிக்" கொண்டதைக் "காட்டி" உங்களை யாரெல்லாம் எப்படியெல்லாம் ஓட்டினார்கள் குமரன்? பெண்களை மட்டும் சொல்லுங்க போதும்! :)
//

இரவி, நான் படித்தது ஆண்கள் மேல்நிலைப்பள்ளி. அதனால் உங்கள் கேள்விக்குப் பதில் சொல்ல இயலாது. கல்லூரிக்குச் சென்ற பின்னர் தான் பெண்களுடன் சேர்ந்து படித்தேன் (தெளிவுக்காக - ஐந்தாம் வகுப்பு வரை நர்ஸரிப் பள்ளியில் பெண்களுடன் படித்தேன்). அங்கே நடந்த கதைகளை எல்லாம் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். நீங்களும் படித்திருக்கிறீர்கள். அதனால் நோ மோர் ரிபிடேஷன். :-)

குமரன் (Kumaran) said...

நீங்கள் சொன்னதெல்லாம் சரி தான் கெபி அக்கா. நாராயணஸ்யானுஜாம் என்று அம்மையைச் சொல்லும் பனுவல் உண்டு. ஆனால் அது தமிழ் வைணவர்களின் ஆதார நூல் கிடையாது. அம்மையை மூவருக்கும் முதல்வி என்று சொல்வார்கள் சாக்தர்கள். அந்த வகையில் அவளை ஜேஷ்டை என்று சொல்லியிருக்கலாம். அபிராமி பட்டரும் 'கறைகண்டனுக்கு மூத்தவளே' என்று சொல்லிவிட்டு 'என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே' என்று தான் சொல்லியிருக்கிறார்.

மீனாட்சித் திருக்கல்யாணத்திற்கு பவளக்கனிவாய்ப் பெருமாள் வந்து தான் தாரை வார்த்துக் கொடுக்கிறார். ஆனால் அவர் சைவ/கௌமாரத் திருக்கோவிலான திருப்பரங்குன்றத்தில் இருக்கும் ஒரு பரிவாரக் கடவுள். (வைணவத் திருக்கோவில்களில் இருக்கும் பெருமாள் இப்படி வந்திருக்க மாட்டார் என்று சொல்லவில்லை. அதற்குத் தான் இரவிசங்கர் நிறைய எடுத்துக்காட்டுகள் தந்திருக்கிறாரே).

குமரன் (Kumaran) said...

மொழி என்பது தகவற் பரிமாற்றத்திற்கு மட்டும் தான் என்ற கருத்து மிகவும் மேம்போக்கான கருத்து. மொழியுடன் இணைந்த பண்பாடு, மரபு போன்றவற்றை மொழியை இழந்தால் இழந்துவிடுவோம் என்பதை எண்ணிப் பார்க்காதவர்களும் வரலாறு அறியாதவர்களும் பேசுவது. ஆனால் சௌராஷ்ட்ரத்தின் போகூழ் பெரும்பான்மையான சௌராஷ்ட்ரர்கள் இப்படித் தான் நினைக்கிறார்கள்; அல்லது அவர்களுக்கு மொழியைப் பற்றி நினைப்பதற்குக் கூட நேரமில்லை.

இப்போதும் எனக்கு சௌராஷ்ட்ரத்தில் எழுதத் தெரியாது. எழுத்துகள் இருந்தாலும் எழுதக் கற்றுக் கொள்ளவில்லை. ஏனெனில் முறைப்படி பள்ளிக்காலத்தில் கற்றுக் கொடுக்கும் வகை இல்லை. 1962ல் இருந்து தமிழக அரசிடம் மனு மேல் மனு கொடுத்துப் பார்க்கிறார்கள். ஒவ்வொரு முறை மத்திய மொழி சிறுபான்மை த் துறை அதிகாரிகள் தமிழகத்திற்கு வரும் போதெல்லாம் அவர்களிடமும் மனு கொடுத்துப் பார்க்கிறார்கள். பள்ளிகளில் சௌராஷ்ட்ர குழந்தைகளுக்குச் சௌராஷ்ட்ரம் சொல்லிக் கொடுக்க வகை செய்யப்படவில்லை. ஒவ்வொரு முறையும் தமிழக அரசு ஒவ்வொரு காரணம் சொல்கிறது. சௌராஷ்ட்ரர்களும் தங்கள் உரிமைக்காகத் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஒரு சின்ன குழுவினர் மட்டும். பெரும்பான்மையான மற்றவர்கள் மேலே சொன்ன வகையில் அடங்கிவிடுவதால் தமிழக அரசியலாளர்களுக்கும் வாக்குப்பெட்டி நினைவில்லாமல் போய்விடுகிறது. பழனித் தொகுதி எம்.பி. (முன்னாள்?) திரு. கார்வண்ணன் மட்டும் முன் நின்று பல உதவிகள் செய்வதாக அறிகிறேன்.

குமரன் (Kumaran) said...

இரவி. சொல் ஒரு சொல் தான் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறதே. அண்மையில் கூட ஒரு இடுகை அந்த வகையில் இட்டேன். ;-)

குமரன் (Kumaran) said...

உண்மை கெபி அக்கா. பல கதைகளும் உருவகக் கதைகள் தான். புராணம்/தொன்மம் என்று சென்றுவிட்டாலே எத்தனை சதவிகிதம் உண்மை எத்தனை சதவிகிதம் உருவகம் என்பது தெரியாமல் போய்விடும். தொன்மப்படுத்தப்படும் எல்லோருடைய கதையும் இப்படித் தான். இது இங்கு மட்டும் இல்லை; உலகம் முழுவதும் நடைபெறுவது தான்.

பாரதியின் வரிகள் எனக்கும் மிகப் பிடிக்கும். 'அறிவொன்றே தெய்வம்'ன்னு ரொம்ப அழகா சொல்வார்.

குமரன் (Kumaran) said...

வாங்க சிவமுருகன். ரொம்ப நாளா காணலை. என் மேல் சினம் கொண்டீர்களோ என்று நினைத்தேன்.

மொழியைப் பற்றி நான் ஏன் பேசமாட்டேன் என்று நினைக்கிறீர்கள்? கட்டாயம் பேசுவேன். :-)

குமரன் (Kumaran) said...

ஆமாம் கீதாம்மா. அடிப்படை வலுவாக இருந்தால் தானே கட்டடம் வலுவாக அமையும்?! இல்லாட்டி வைகைப்புயல் மாதிரி இல்ல ஆயிடுவாரு?! நீங்க சொன்ன பிறகு தெளிவா புரிஞ்சிருச்சு. :-)

குமரன் (Kumaran) said...

வாங்க உஷா. இந்த முறை தலைப்பு உங்களை இழுத்துக் கொண்டு வந்ததா? வேறு ஏதேனும் காரணத்தால் எட்டிப் பார்த்தீர்களா? :-)

1. நல்ல தகவல்கள் சொல்லியிருக்கிறீர்கள். உண்மை தான். குடும்பத்தில் வழி வழியாக வந்த சில கட்டுபாடுகள் தளர்ந்து தான் வருகின்றன. தேவையில்லாத கட்டுபாடுகள் என்று நினைக்கப்பட்டால் அவை தளர்ந்து தானே ஆக வேண்டும். :-)

2. பட்டியலில் இன்னொருவரைச் சேர்த்ததற்கு நன்றி.

3. அப்படியா?

4. நன்றி. :-)

குமரன் (Kumaran) said...

ஆமாம் கெபி அக்கா. நீங்க சொல்ற ஷவரைப் பத்தி இராகவ்வும் சொல்லியிருக்காரே. திருமழிசையாழ்வாரின் பாசுரம் அது. 'நான்முகனை நாராயணன் படைத்தான்; நான்முகன் தான்முகமாய் சங்கரனைத் தான் படைத்தான்' என்று சொல்வது அவரது முதல் பாசுரம்.

நீங்க வைணவக் காக்கையைப் பற்றி சொல்லவே மாட்டேன் என்கிறீர்களே?!

குமரன் (Kumaran) said...

விஷ்வக்சேனரின் படைத் தளபதிகளில் ஒருவர் விக்னேசர். அவருக்கும் யானை முகம்; ஆனால் இரண்டு தந்தங்கள் உண்டு. இவர் தான் வைணவக் கோவில்களில் இருக்கிறார். ஆனால் அது புரியாமல் பலர் பிள்ளையாருக்கு நாமத்தைப் போட்டுவிட்டார்கள் என்று சொல்வார்கள்.

ஏகதந்தாய வித்மஹே
வக்ரதுண்டாயா தீமஹி
தந்நோ தந்தி ப்ரசோதயாத்

- இது விநாயகருக்கு.

யக்ஞோத்பவாய வித்மஹே
த்விதந்தாய தீமஹி
தந்நோ விக்ன ப்ரசோதயாத்

- இது விக்னேசருக்கு.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஒரே ஒரு இடத்தைத் தவிர்த்து - அங்கும் நேரடியாக இல்லை//

அந்த ஒரே ஒரு இடம் எது குமரன்?

//அடிப்படை நூற்களில் இந்தக் கருத்து இல்லை என்று சொல்லும் வைணவ ஆசாரியர்களின் கருத்துகளையும் அண்மையில் படித்திருக்கிறேன்//

அடிப்படை சைவ நூற்களில் இந்தக் கருத்து இருக்கா? ஆதி சங்கரருக்கு முன் உள்ள சைவ நூல்கள்?

தமிழ் வைணவத்தில் இல்லை என்று பேச்சு வந்ததால், இதையும் கேட்கிறேன். தமிழ்ச் சைவத்தில் (சைவ சித்தாந்தத்தில்) இக்கருத்து உள்ளதா? திருமந்திரம் பேசுகிறதா? தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்!

//அதைச் சொல்ல வந்துவிட்டு மொத்தமாக தமிழக வைணவர் யாரும் ஏற்றுக் கொள்வதில்லை என்று சொல்லிவிட்டேன் - அது தவறு தான்//

முடிந்தால் பதிவிலும் திருத்தி விடுங்கள் குமரன்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//மொழி என்பது தகவற் பரிமாற்றத்திற்கு மட்டும் தான் என்ற கருத்து மிகவும் மேம்போக்கான கருத்து. மொழியுடன் இணைந்த பண்பாடு, மரபு போன்றவற்றை மொழியை இழந்தால் இழந்துவிடுவோம் என்பதை எண்ணிப் பார்க்காதவர்களும் வரலாறு அறியாதவர்களும் பேசுவது//

மிக மிகச் சரியான கருத்து! உண்மையானதும் கூட! விளக்கத்துக்கு நன்றி குமரன்!

மொழி என்பது தகவற் பரிமாற்றத்திற்கு மட்டும் தான் என்று சொல்வது...
வீடு என்பது தங்குவதற்கு மட்டும் தான் என்று சொல்வதைப் போல...
அம்புட்டு மடத்தனம்! :)


எங்கள் வாழ்வும், எங்கள் வளமும்
மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

விநாயகப் பெருமான், விஷ்வக்சேனர், விக்னேசர் பற்றிய அரிய தகவல்களை எல்லாம் தந்தமைக்கு நன்றி குமரன்!
அடியேன் அறியாத பல புதிய தகவல்கள்!

குமரன் (Kumaran) said...

//திருவரங்கத்து நம்பெருமாள், கண்ணனூர் மாரிக்கும், ஆனைக்கா அகிலாண்டேஸ்வரிக்கும் இன்றும் பிறந்த வீட்டுச் சீர் அனுப்பும் விழா உள்ளது!

எல்லாவற்றுக்கும் மேலாக, நம்பெருமாள் ஆண்டுக்கொரு முறை, அகிலாண்டேஸ்வரி சன்னிதிக்குள் சென்று வரும் வழக்கத்தை முறைப்படுத்தி நடத்தி வைத்ததே இராமானுசர் தான்!

ஆனால் நம்பெருமாளே உள்ளே சென்ற பின்னாலும் கூட,
அவரைத் தூக்கி வந்த சில ஸ்ரீவைஷ்ணவர்கள், உள்ளே செல்லாமல், எப்போ வருவாரோ-ன்னு வெளியிலேயே பழியாய்க் காத்துக் கிடப்பார்கள் :)
மறந்தும் புறம் தொழா கெத்து காட்டுவார்கள்! :))
//

இரவி, சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்குத் திருவரங்கத்தில் இருந்து சீர் போகும் என்று தெரியும். திருவானைக்காவிற்கும் சீர் போவதும் திருவரங்கனும் திருவானைக்காவிற்குப் போய் தங்கையைப் பார்ப்பதும் தெரியாது. கொஞ்சம் விலாவாரியா இந்த நிகழ்ச்சியைப் பத்தி ஒரு இடுகை போடுங்களேன்.

குமரன் (Kumaran) said...

ஆமாம் இரவி. அந்தணர் என்பதற்கு வள்ளுவப் பெருந்தகை சொன்ன விளக்கம் மிக எளிமையாகப் புரிந்து கொள்ளும் வகையில் தான் இருக்கிறது. ஆனால் செயல்படுத்துவது என்று வரும் போது அது உபநிடதம் சொல்லுவதைச் செயல்படுத்துவது போலவே கடினம் ஆனது தான். அதுக்குத் தான் ஐயனும் 'சொல்லுதல் யார்க்கும் எளிய'ன்னு சொல்லிட்டுப் போயிட்டாரு போல. :-)

அப்புறம் இந்தப் பட்டியல் எல்லாம் போட்டது நான் இல்லை. மேலே 'குமரன் போட்ட லிஸ்ட்டு'ன்னு சொல்லியிருக்கீங்க. இந்தப் பட்டியல் உபநிடதம் போட்டது; அதை எடுத்துப் போட்டது பாரதியார். அப்புறம் தான் அதை நான் எடுத்துப் போட்டிருக்கேன். :-)

குமரன் (Kumaran) said...

திருக்கள்வனூர் பற்றி இன்னும் விளக்கமாக எழுத வேண்டும் நீங்கள் இரவிசங்கர். காஞ்சிபுரத்திற்குப் போயிருக்கிறேன். பெருமாளையும் சேவிச்சிருப்பேன்னு நினைக்கேன். ஆனா திவ்யதேசம்ன்னு தெரிஞ்சிருக்காது. திருமங்கையாழ்வார் திருக்கள்வனூரைப் பற்றி பாடும் போது உமை திருமாலின் தங்கை என்று பாடியிருக்கிறாரா?

பார்வதி, சிவன் இவர்களைப் பாசுரங்களில் பல இடங்களில் காணலாம் இரவி. முழுக்க முழுக்க இவர்களைப் பற்றி பாடவே இல்லை வைணவர்கள் என்று சொல்லவில்லை. அண்ணன் தங்கை உறவு முறைப் பற்றியும் சிவனாருக்கு பெருமாள் தேவி என்பதைப் பற்றியும் இருக்கும் கருத்துகளை வைணவ ஆசாரியர்கள் இன்றைக்கும் மறுக்கிறார்கள் என்று தான் சொன்னேன். ஆனால் நடைமுறையில் தலத்து வழக்கங்களுக்காக சீர் அனுப்புவது எல்லாம் நடக்கின்றன போலும்.

தமிழகத்து வைணவர் அன்னை பார்வதியை ஏற்றுக் கொண்டும் போற்றிக் கொண்டும் இருக்கிறார்கள் - இதில் மறுப்பே இல்லை. வைணவர் அன்னை பார்வதியைப் பற்றி எழுதவே இல்லை; போற்றவே இல்லை என்ற மாயத் தோற்றம் கூட இல்லை. இனிமேல் சில மேதாவிகள் மேலோட்டமாக நுனிப்புல்லை மேய்ந்துவிட்டு அப்படி சொல்வதற்கு வாய்ப்பு உண்டு - அவர்களுக்காக நீங்கள் இவ்வளவு விளக்கங்களும் எழுதியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

நான் பண்டைய இலக்கியங்கள் என்று கூட சொல்லவில்லை. தமிழக வைணவர்கள் ஆதார நூல்களாகக் கொள்பவைகளில் இருக்கிறதா என்பது தான் கேள்வி. உபய வேதாந்திகளான இவர்கள் வடமொழி வேதங்களையும் வேதாந்தங்களையும் பிரமாணமாக ஏற்பவர்கள் தானே. அவற்றில் இதைப் பற்றி சொல்லியிருந்தால் ஏற்றுக் கொண்டிருப்பார்கள். சாத்வீக புராணங்கள் என்று வகைப்படுத்தி இவர்கள் பிரமாணமாகக் கருதும் புராணங்களில் இருந்தாலும் ஏற்றுக் கொண்டிருப்பார்கள். அப்படி இருப்பதாகத் தெரியவில்லை. பாகவத புராணத்தில் 'காத்யாயணி விரதம்' சொல்லப்பட்டிருக்கிறது - மறுப்பில்லை. விஷ்ணு மாயை நந்தகுமாரியாகப் பிறந்ததும் சொல்லப்பட்டிருக்கிறது. இவ்விரண்டையும் தமிழக வைணவர்கள் மறுப்பதில்லை. ஆனால் விஷ்ணு மாயை தான் உமையன்னை; துர்கை என்ற கருத்தை இவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. அதனால் இந்த அண்ணன் தங்கை உறவுமுறையை மட்டுமே 'ஆதாரபூர்வமாக' ஏற்றுக் கொள்வதில் இவர்களுக்குத் தயக்கம் இருக்கிறது; நடைமுறையில் உமையம்மையைப் போற்றுவதிலும் அண்ணன் தங்கை உறவு கொண்டாடுவதிலும் சமரசம் பேணுகிறார்கள். இந்த வேறுபாடு இருப்பதால் தான் இராகவ் இந்தக் கேள்வியே கேட்டிருக்கிறார் என்று நினைக்கிறேன்.

வேத வேதாந்தங்களைத் தவிர்த்து ஸ்மார்த்த/அத்வைத சார்பான & சைவ/சாக்த சார்பான வடமொழிப் பனுவல்களிலும் தமிழ்ப்பனுவல்களிலும் இந்த அண்ணன் தங்கை முறை பேசப்பட்டிருக்கிறது. பானைச் சோற்றுப் பதமாக சில எடுத்துக்காட்டுகள் ஏற்கனவே தந்திருக்கிறேன்.

மஹிஷாசுரமர்த்தினி விருத்தத்திலும் 'நந்தநுதே' போன்ற சொற்களில் இந்த அண்ணன் தங்கை முறை பல இடங்களில் பேசப்பட்டிருக்கிறது.

குமரன் (Kumaran) said...

சங்கரநாராயண உருவத்தைப் பற்றி ஆழ்வார் பாசுரங்கள் உண்டு இராகவ். நான் வார்த்தைகளில் சொன்னதை இரவிசங்கர் பாசுரத்தில் காட்டிவிட்டார். முதலாழ்வார்கள் பாசுரங்களிலும் இரண்டுருவும் சேர்ந்திருக்கும் பெற்றியைப் பற்றி பலவாறாகப் பாடியிருப்பார்கள். பாசுரங்களை நீங்கள் தேடிப் பார்ப்பீர்கள் என்று நினைப்பதால் எடுத்துக்காட்டுகள் தரவில்லை.

மறந்தும் புறம் தொழா கற்பு நெறி தவறு என்று எனக்குத் தோன்றுவதில்லை. அதனால் சச்சரவு வராத வரை சரி தான். இன்றைக்கும் வலைப்பதிவர்களிடையேயும் மறந்தும் புறம் தொழாதவர்கள் உண்டு. ஆனால் அவர்கள் வைணவர்கள் இல்லை. :-)

Raghav said...

மிகவும் நன்றி குமரன்.. நிறைய விளக்கங்கள் நீங்களும், ரவி அண்ணாவும் தந்துள்ளீர்கள். அடியேனின் அனந்த கோடி நமஸ்காரம்.

Raghav said...

//மதுரைக்காரர் நீங்கள், மீனாட்சி திருக்கல்யாணத்துக்கு அழகரில்லாமலா? //

கெ.பி அக்கா, அப்படி ஒரு நிகழ்ச்சியை திருமலை நாயக்கர் தான் உண்டாக்கினார் என்று சொல்லி கேள்விப்பட்டுள்ளேன். அழகர் மகாத்மியத்தில், மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக சுந்தரராஜனாக குதிரை தம்பிரான் மீது அருள் பாலிக்கிறார், பின்பு மண்டூக மகரிஷியின் சாபம் தீர்த்து அவர் வேண்டுகோளின்படி தசாவதார காட்சி தருவதாக படித்துள்ளேன்..

மீனாட்சி அம்மை திருமணத்தை சித்திரை மாதத்தில் அழகர் திருவிழாவோடு இணாஇக்கப்பட்டது என்று கூறுவர்.. குமரன் சரிதானே?

Raghav said...

//ramachandranusha(உஷா) said...
ராகவ்! தயக்கமே இல்லாமல் சில பதில்கள்

1-நாங்கள் வழி வழியாய் வந்த வைண்ஷவர்கள்.வீபூதி கூட வீட்டில் அனுமதிக்க மாட்டோம் :-) //

எங்க அப்பா வழியில உங்க மாதிரி தான்.. எங்க பாட்டி மட்டும் ஆஞ்சனேய உபாசகர், அவருடைய குருவின் ஆக்ஞையின் பேரில் விபூதி உபயோகப்படுத்துவார். இன்றும் பாட்டி தந்த விபூதியை வீட்டில் வைத்துள்ளோம்..

Raghav said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ஆனால் ஐயன் வள்ளுவன், எல்லாருக்கும் ஏற்புடையதாக எளிமையாகச் சொல்லி விட்டார்!
***அறத்தின் பாற்பட்டவர்கள் அந்தணர்கள்!***
அவ்வளவு தான்!
//

ரவி அண்ணா, வள்ளுவமும் வைணவமும்னு ஒரு கட்டுரையை ஒருத்தர் தேடிக்கிட்டு இருக்கார்.. விரைவில் உங்களுடன் விவாதிக்க வருவார்னு மட்டும் சொல்லிக்கிறேன் :)

Raghav said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
குமரன்
அன்னை உமையவள் மாலனுக்குத் தங்கையாய், அவனுடன் செல்லமாகக் கடிந்து கொண்டு சண்டையிடும் திவ்யதேசம் ஒன்னு இருக்கு! = திருக்கள்வனூர்.

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் சன்னிதிக்குள்ளேயே அமைந்த இந்த திவ்யதேசம் 108இல் ஒன்று! //

நானும் இன்று தான் கேள்விப்படுகிறேன்.. காமாட்சி அன்னையை மட்டும் தரிசித்து விட்டு ஓடி வந்து விட்டதால் கள்வனை தரிசிக்க முடியவில்லை.. கள்வனாச்சே எங்காவது தூண் பக்கமா மறைஞ்சிருப்பாரோ ???

Raghav said...

//குமரன் (Kumaran) said...
ஆமாம் கீதாம்மா. அடிப்படை வலுவாக இருந்தால் தானே கட்டடம் வலுவாக அமையும்?! இல்லாட்டி வைகைப்புயல் மாதிரி இல்ல ஆயிடுவாரு?! நீங்க சொன்ன பிறகு தெளிவா புரிஞ்சிருச்சு. :- //

யூ மீன் “பில்டிங் ஸ்ட்ராங், ஆனா பேஸ்மெண்ட் வீக்” :)

Raghav said...

//தமிழகத்து வைணவர் அன்னை பார்வதியை ஏற்றுக் கொண்டும் போற்றிக் கொண்டும் இருக்கிறார்கள் - இதில் மறுப்பே இல்லை.

...அதனால் இந்த அண்ணன் தங்கை உறவுமுறையை மட்டுமே 'ஆதாரபூர்வமாக' ஏற்றுக் கொள்வதில் இவர்களுக்குத் தயக்கம் இருக்கிறது; நடைமுறையில் உமையம்மையைப் போற்றுவதிலும் அண்ணன் தங்கை உறவு கொண்டாடுவதிலும் சமரசம் பேணுகிறார்கள். இந்த வேறுபாடு இருப்பதால் தான் இராகவ் இந்தக் கேள்வியே கேட்டிருக்கிறார் என்று நினைக்கிறேன்.//

அதே தான் குமரன்.. என்னுடைய கேள்வியும் அதுதான்.. எனக்கு தெரிந்த பாசுரமெல்லாம், நீங்களும் ரவி அண்ணாவும் அவ்வப்போது சொல்வதிலிருந்து தான்.. நடைமுறையில் நான் பார்த்ததை வைத்து கேட்டேன். சிறு வயதில் எங்க ஊர் வரதராஜரை பரமக்குடி சுந்தரராஜரின் தம்பி என்று நினைத்துக் கொள்வோம் :)..

Raghav said...

//இப்போதும் எனக்கு சௌராஷ்ட்ரத்தில் எழுதத் தெரியாது. எழுத்துகள் இருந்தாலும் எழுதக் கற்றுக் கொள்ளவில்லை. //

அனேக செளராஷ்ட்ர மக்களின் நிலையும் அதுவே என்று நினைக்கிறேன்.. திண்டுக்கல்லில் இருக்கும் செளராஷ்ட்ரர்கள் மூலம் செளராஷ்ட்ர மொழியில் மாத இதழ் தற்போது வருகிறது.. வருங்காலத்தில் பிரபலமாகலாம்..

செளராஷ்ட்ரம் தெரிந்ததால் எனக்கு ஒரு நன்மை உண்டானது.. Intel ல் நான் நேர்முகத் தேர்வுக்கு சென்றபோது, அமெரிக்க மேலாளரிடம் பேசும்போது, “எனக்கு செளராஷ்ட்ரம் என்ற மொழி தெரியும், அதற்கு எழுத்துக்களே இல்லை” என்றேன்.. அவருக்கு வியப்பு தாங்கவில்லை.. அந்த காரணத்திற்காகவே எனக்கு வேலை கொடுத்து விட்டார். :)

ramachandranusha(உஷா) said...

இனிமேல் சில மேதாவிகள் மேலோட்டமாக நுனிப்புல்லை மேய்ந்துவிட்டு அப்படி சொல்வதற்கு வாய்ப்பு உண்டு - அவர்களுக்காக நீங்கள் இவ்வளவு விளக்கங்களும் எழுதியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். //
இதை நான் கடுமையாய் ஆட்சேபிக்கிறேன் :-)

குமரன்! இன்னும் சில சுவாரசியமான விஷயங்கள். வைஷ்ணவர்கள் என்றாலும், அம்மை வார்த்தால் மூன்றாவது தண்ணி தலைக்கு ஊற்றிவிட்டு முதலில் போவது "ஆத்தா" வை சேவிக்கத்தான். இப்பொழுது எல்லாம் அம்மை நோய்க்கே பெரிய
முக்கியத்துவம் தருவதில்லை. முன்பெல்லாம் இப்படி செய்வார்கள்.

அடுத்த சுவாரசியம். என் தாயின் பிறந்த வீட்டு குடும்பத்தின் குல தெய்வம் நரசிம்மர். அதனால் பெருமாள் கோவிலுக்கு போக மாட்டார்கள். அதாவது அவர்களாக
:-) திருப்பதிக்கு போய் பெருமாளை தரிசிக்க, யாராவது கிளம்பினால் அவர்களுடன் செல்வார்கள்.பயண செலவு எல்லாம் அழைத்துப் போவார்களே அவர்களுடையது. இதெல்லாம் கேட்ட செய்திகள்தான். எல்லாமே வழக்கொழிந்து போய்விட்டன. இது திருப்பதி பெருமாளுக்கு மட்டுமா அல்லது நரசிம்மர் அல்லாத மற்ற பெருமாள்களுக்கும் சேர்த்தியா என்று தெரியவில்லை.

குமரன் (Kumaran) said...

//பிரம்மத்தை அறிந்தவன் பிராமணன் என்று சொல்லி கேள்விப்பட்டுள்ளேன்.. அதனால் அப்படி பிரம்மத்தை அறிந்த பிராமணன் தனது வழித்தோன்றல்களுக்கும் அதனை கற்றுத் தந்து பிரம்மத்தை அறியச் செய்வதால் அவர் வழித்தோன்றல்களும் பிராமணரே என்று எடுத்துக் கொள்ளப்பட்டு (Taken for granted) இருக்குமோ?//

இதைப் பற்றி பேசத் தொடங்கினால் நிறைய பேசலாம் இராகவ். ஆனால் அப்படி பேசுவதற்கு வலைப்பதிவு சூழல் ஒத்துவராது. எதையுமே தவறாகவே புரிந்து கொள்வேன் என்று முன்முடிவுடன் சுற்றும் பருந்துகள் உண்டு இங்கே. அதனால் சுருக்கமாக.

பிரம்மத்தை அறிந்தவன் பிராம்மணன் என்ற சொல்லப்படவில்லை. பிரம்மத்தை அறிந்தவன் பிரம்மமாகவே ஆகிறான் - ப்ரஹ்மவித் ப்ரஹ்மைவ பவதி - என்று சொல்லப்பட்டிருக்கிறது.

குமரன் (Kumaran) said...

//எப்பவும் தயங்கி தயங்கி தான் பேசுவீங்களா குமரன்.. :)
//

நீங்க ஒரு முறை தொலைபேசினீங்களே இராகவ். அப்ப எப்படி பேசினேன்? :-)

குமரன் (Kumaran) said...

//அந்த ஒரே ஒரு இடம் எது குமரன்?//

இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாமெல்லாம்
வந்திருந்து என்னை மகட்பேசி மந்திரித்து
மந்திரக்கோடி உடுத்தி மணமாலை
'அந்தரி' சூட்டக் கனா கண்டேன் தோழீ நான்.

இங்கே அந்தரியைச் சொன்னது அவள் கோளரி மாதவனின் தங்கை என்பதாலும் நாத்தனார் தான் மணப்பெண்ணுக்கு மந்திரக் கோடி உடுத்தி மணமாலை சூட்டி அழைத்து வருவாள் என்பதாலும் என்று உரையில் படித்ததாக நினைவு. பிரதிவாதி பயங்கரம் அண்ணாவின் உரையைப் புரட்டிக் கொண்டிருக்கிறேன். என்ன சொல்லியிருக்கிறார் என்று சொல்கிறேன்.

குமரன் (Kumaran) said...

//அடிப்படை சைவ நூற்களில் இந்தக் கருத்து இருக்கா? ஆதி சங்கரருக்கு முன் உள்ள சைவ நூல்கள்?

தமிழ் வைணவத்தில் இல்லை என்று பேச்சு வந்ததால், இதையும் கேட்கிறேன். தமிழ்ச் சைவத்தில் (சைவ சித்தாந்தத்தில்) இக்கருத்து உள்ளதா? திருமந்திரம் பேசுகிறதா? தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்!//

1. ஆதிசங்கரருக்கும் சைவத்திற்கும் என்ன தொடர்பு? அவர் தான் ஷண்மத ஸ்தாபகராயிற்றே! சைவம், வைணவம், கௌமாரம், சௌரம், காணபத்யம், சாக்தம் எல்லாமும் ஆதிசங்கரருக்கு ஒன்று போல் தான். அதனால் சைவத்தில் மட்டுமே ஆதிசங்கரரையும் அத்வைதத்தையும் குறுக்குவதை எல்லோரும் விட வேண்டும். ஆன்மிகவாதிகள் என்று சொல்லிக் கொள்பவர்களே இதே தவறைச் செய்தால் குழப்பவாதிகளான அரைகுறை அறிஞர்களும் அதே தவற்றைத் தானே செய்வார்கள். பின்னர் அவர்களை நொந்து கொள்வதில் என்ன பயன்?

2. ஆதி சங்கரரின் நூற்கள் அத்வைதிகளுக்கு ஆதார நூற்கள் என்பதால் அவர் சொன்னதை அவர்கள் ஏற்றுக் கொள்வதில் குறை ஒன்றும் இல்லை. ஆதி சங்கரருக்கு முந்தைய நூற்கள் என்றால் வேத வேதாந்தங்களைத் தான் சொல்ல முடியும். அங்கே இந்த உறவு முறையைப் பற்றி படித்ததாக நினைவில்லை. இருக்கலாம். நான் படித்ததில்லை. கற்றது கைம்மண் அளவே.

3. தமிழ்ச் சைவம் என்ற சைவ சிந்தாந்ததிற்கு திருமந்திரம் மட்டும் தான் ஆதார நூலா? தேவார திருவாசகங்களும் ஆதார நூற்கள் தானே. அவற்றில் இந்த உறவு முறை பற்றி இருக்கின்றது என்றே நினைக்கிறேன். எனக்கு திருமந்திரத்திலும் தேவார திருவாசகங்களிலும் பயிற்சி மிக மிகக் குறைவு. அதனால் அறுதியிட்டு ஒன்றையும் கூற இயலவில்லை.

4. சாக்தத்திற்கு ஒரு நல்ல நூல் அபிராமி அந்தாதி. அதில் இந்தக் கருத்து இருக்கின்றது என்பதை ஏற்கனவே காட்டியிருக்கிறேன். பாருங்கள்.

குமரன் (Kumaran) said...

இரவி (& இராகவ்),

அந்தரிக்கு 'துர்க்கை என்கிற நாத்தனார்' என்று தான் பிரதிவாதி பயங்கரம் அண்ணாங்கராசாரியார் பொருள் சொல்கிறார். மேலும் அவர் சொல்வது - கோதையின் வார்த்தையாக 'மணமகளுக்கு நாத்தனாரைக் கொண்டு புடவை உடுத்துகிற க்ரமத்தாலே எனக்கு நாத்தனாரான துர்க்கையைக் கொண்டு புடவை உடுத்தி நன்மாலைகளையும் சூட்டி...'. மேலும் அவர் சொல்வது - அந்தரி = துர்க்கைக்குப் பெயர். இவள் கண்ணபிரானுக்கு உடன்பிறந்தாள் ஆதலால் ஆண்டாளுக்கு நாத்தனார் ஆனாள். அந்தரத்திலே (ஆகாயத்திலே) அந்தர்த்தானமாய்ப் போனமையால் அவளுக்கு அந்தரி என்று பேராயிற்றென்க.

குமரன் (Kumaran) said...

//மீனாட்சி அம்மை திருமணத்தை சித்திரை மாதத்தில் அழகர் திருவிழாவோடு இணாஇக்கப்பட்டது என்று கூறுவர்.. குமரன் சரிதானே?//

ஆமாம் இராகவ். சரி தான். நிறைய முறை இதனைப் பற்றி விரிவாகச் சொல்லியிருக்கிறேன். எந்தப் பதிவில் என்று நினைவில்லை.

குமரன் (Kumaran) said...

//இனிமேல் சில மேதாவிகள் மேலோட்டமாக நுனிப்புல்லை மேய்ந்துவிட்டு அப்படி சொல்வதற்கு வாய்ப்பு உண்டு - அவர்களுக்காக நீங்கள் இவ்வளவு விளக்கங்களும் எழுதியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். //
இதை நான் கடுமையாய் ஆட்சேபிக்கிறேன் :-)//

அடடா. உங்களை சொல்லவில்லை உஷா. நீங்கள் 'நுனிப்புல்' என்று பதிவிற்கு மட்டும் தான் பெயர் வைத்திருக்கிறீர்கள்; ஆனால் மேலோட்டமாக பேசுபவர் இல்லை. :-)

//என் தாயின் பிறந்த வீட்டு குடும்பத்தின் குல தெய்வம் நரசிம்மர். அதனால் பெருமாள் கோவிலுக்கு போக மாட்டார்கள்.//

:-)

அரங்கனைப் பாடும் வாயால் குரங்கனைப் பாடமாட்டேன் என்றும் அப்பனை பாடும் வாயால் சுப்பனைப் பாடமாட்டேன் என்றும் சொன்னவர்கள் வழி வந்தவர்கள் போல. :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//திருவரங்கனும் திருவானைக்காவிற்குப் போய் தங்கையைப் பார்ப்பதும் தெரியாது. கொஞ்சம் விலாவாரியா இந்த நிகழ்ச்சியைப் பத்தி ஒரு இடுகை போடுங்களேன்//

//திருக்கள்வனூர் பற்றி இன்னும் விளக்கமாக எழுத வேண்டும் நீங்கள்//

உம்...அப்புறம்?
இப்படி பனம்பழம் எடுத்து எடுத்து என் குருவி தலையில் வைக்கறதுல உங்களுக்கு அப்படி என்ன தான் ஒரு சந்தோசமோ தெரியலைப்பா சாமீ! :)

குமரன் (Kumaran) said...

நீங்க குருவியும் இல்லை; இதெல்லாம் பனம்பழங்களும் இல்லைன்னு ஊருக்கே தெரியும் சாமி. :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//மறந்தும் புறம் தொழா கற்பு நெறி தவறு என்று எனக்குத் தோன்றுவதில்லை.//

தவறே இல்லை!
மறந்தும் புறம் தொழாதவர்களா நீங்க?

சூப்பரு! அப்படியே இருந்துக்கோங்க!
கற்புள்ள பெண்டிர்க்கெல்லாம்
கணவனே தெய்வம் என்பார்-ன்னு தமிழ்க் கவிஞர் வேற பாடியிருக்கார்!

இறைவனைக் கணவனாக எண்ணும் நீங்கள்! அந்தக் கற்பைப் பாராட்டுகிறோம்! வணங்குகிறோம்!

ஆனால் அத்தோட நிறுத்திக்கணும்!
* எல்லாருக்கும் என் கணவன் தான் கணவன்! :)
* முத்தமிழும் என் கணவனுக்கு மட்டுமே சொந்தம்! :))
* எதுக்கு என் கணவனைப் பத்தி ரொம்ப எழுத மாட்டேங்குற? :))
* எதுக்கு அவள் கணவன் ஆபிஸ்-ல அதிக போனஸ் கொடுக்கறாங்க-ன்னு எழுதற? என் கணவன் ஆபீஸ்ல தான் கம்மி போனஸ்-ன்னு தெரியுதுல்ல? அதுனால அவ கணவன் ஆபீஸ் பத்தி மூச்சு கூட விடாதே! :))

= இதெல்லாம் டூ மச்-ன்னு அவங்கவிங்களுக்கே தெரியும்! அவங்கவிங்களுக்கே சிரிப்பு தான் வரும்! :)
ஆனாலும் இந்தக் கும்மி நடந்துக்கிட்டு தான் இருக்கும்! :))

//இன்றைக்கும் வலைப் பதிவர்களிடையேயும் மறந்தும் புறம் தொழாதவர்கள் உண்டு. ஆனால் அவர்கள் வைணவர்கள் இல்லை. :-)//

குமரன் இப்பல்லாம் ரொம்பவே உ.கு வைக்கறாரே! நோ நோ!
மொதல்ல உங்களை என் குருநாதர் கிட்டக்க கூட்டிட்டு போகணும்! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

@ராகவ், உஷாக்கா
//-நாங்கள் வழி வழியாய் வந்த வைண்ஷவர்கள்.வீபூதி கூட வீட்டில் அனுமதிக்க மாட்டோம் :-)//

பெருமாளே நெத்தியில விபூதி பூசிக்கறாரு ஒரு திவ்யதேசத்தில்! பட்டை விபூதி! அவரு கூடவே எல்லா வைணவர்களும், பட்டாச்சாரியார்களும் பூசிக்கறாங்க!
இதுக்கு என்னாக்கா சொல்றீங்க? :))

குமரன், இப்போ வந்து இதை இடுகையாப் போடுங்கன்னு மெரட்டுவாரு! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அமெரிக்க மேலாளரிடம் பேசும்போது, “எனக்கு செளராஷ்ட்ரம் என்ற மொழி தெரியும், அதற்கு எழுத்துக்களே இல்லை” என்றேன்.. அவருக்கு வியப்பு தாங்கவில்லை.. அந்த காரணத்திற்காகவே எனக்கு வேலை கொடுத்து விட்டார். :)//

கீ போர்டே இல்லாம கோட் பண்ண வல்ல மாமேதை-ன்னு நெனச்சிருப்பாரோ? :)
குமரன் உங்க வெற்றியின் ரகசியமும் இப்படித் தானா? :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//மந்திரக்கோடி உடுத்தி மணமாலை
'அந்தரி' சூட்டக் கனா கண்டேன் தோழீ நான்//

நன்றாகச் சொன்னீர்கள் குமரன்!

நாத்தனாரைப் பற்றி மனைவியே சொல்லிட்டாப் பின்னாடி, இன்னும் என்னப்பா வெட்டிப் பேச்சு? :)

இனி யாராச்சும் தமிழ் வைணவம் அம்பாளை, பெருமாளின் தங்கையா ஒத்துக்கலை-ன்னு சொல்லிப் பாருங்க! பின்னிப் பெடல் எடுத்துடறேன்! :)

- கேஆரெஸ்

குமரன் (Kumaran) said...

அதனால மயங்கி அவர் வேலை குடுத்திருக்க மாட்டார் இராகவ்/இரவி. இது வெறும் காக்கை உக்கார பனம்பழம் விழுந்த கதையா இருக்கலாம். :-)

இரவி, என் மேலாளர்களுக்கு நான் சௌராஷ்ட்ர மொழி பேசுபவன் என்பதெல்லாம் வேலை கிடைத்த பின்னர் தான் தெரியும். இப்ப இருக்குற மேலாளர்களுக்கு எல்லா இந்திய மொழிகளும் வியப்பு தரும் மொழிகள் தான். வேணும்னா 2000 வருடப் பழமையான மொழிகள் எனக்குத் தெரியும்ன்னு சொல்லி இன்னும் வியப்பைக் கூட்டலாம். அம்புட்டு தான். :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//மந்திரக்கோடி உடுத்தி மணமாலை
'அந்தரி' சூட்டக் கனா கண்டேன் தோழீ நான்//

ஏதோ ஒரு பாட்டுல மட்டும் ஆண்டாள் indirect-aa சொல்லிட்டாப் போதுமா? நாங்க எம்புட்டு பாட்டுல சொல்லி இருக்கோம்?

அப்ப கூட தங்கச்சி-ன்னு வெளிப்படையா சொல்ல வாய் வரலை பாத்தீங்களா? indirect-aa தானே சொல்லிக்கிடுறாங்க இந்த தமிழ்-வைணவப் பயலுக?

இதுக்கு இந்தக் குமரனும் இந்தக் கேஆரெஸ் பய புள்ளையும் சப்போர்ட்டு வேற பண்ணுறாங்க! செல்லாது, செல்லாது! :)

குருநாதர் ஆணைப்படி,
- சைவக் "கேஆரெஸ்" :))))

குமரன் (Kumaran) said...

//பின்னிப் பெடல் எடுத்துடறேன்//

இது 'பின்னிப் படல் எடுக்குறதாம்'. பாத்து. இப்படி தப்பு தப்பா பேசினா இந்த வார நட்சத்திரம் பழமை பேசி உங்களைப் பின்னிப் படல் எடுக்கப் போறார். :-)

குமரன் (Kumaran) said...

உங்க குருநாதர் யாரு இரவி? நோகாம எலும்பை உருவுறதைப் பத்தி சொல்லிக் குடுப்பவரா? :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//சைவத்தில் மட்டுமே ஆதி சங்கரரையும் அத்வைதத்தையும் குறுக்குவதை எல்லோரும் விட வேண்டும்//

சைவத்தில் மட்டுமே சங்கரரைக் குறுக்கவில்லையே!
அடியேனும் சங்கரன் தானே! :)
ஷண்மதச் செம்மல்-ன்னு வேற திராச ஐயா சொல்றாரு! :)

Jokes Apart,
சங்கரரைச் "சைவர்" என்று இங்கு அடியேன் சொல்லவே இல்லையே குமரன்!
நான் கேட்டது
//அடிப்படை சைவ நூற்களில் இந்தக் கருத்து இருக்கா? ஆதி சங்கரருக்கு முன் உள்ள சைவ நூல்கள்?//

அதாச்சும் சங்கர பகவத்பாதரின் ஷண்மத ஒருங்கிணைப்புக்கு முன்பே எழுந்த சைவ சமய நூல்களில் இருக்கான்னு தான் கேட்டேன்!

சமய ஒற்றுமைக்காக ஆதி சங்கரரிடமிருந்து தொடங்கியிருக்கலாம் என்று நீங்களே பதிவில் சொல்லிட்டீங்க!

அவருக்கு முன்னரே எழுந்த வேத/வேதாங்க/சிவ ஸ்துதிகளில், சிவ சஹஸ்ரநாமத்தில், லலிதா சஹஸ்ரநாமத்தில் இருக்கா என்று அன்பர்கள் முடிந்தால் அறியத் தாருங்களேன்!

தமிழ் வைணவத்தில் இல்லை என்று பேச்சு வந்ததால் தான், தமிழ்ச் சைவத்தில் (சைவ சித்தாந்தத்தில்) இருக்கா என்று அடியேன் கேட்டேன்!

இது வெறும் சங்கர பகவத்பாதரின் ஒற்றுமை முயற்சி மட்டுமே என்று யாரும் முடிவு கட்டி விடக் கூடாது என்பதால் தான் இக்கேள்விகள்!

//தமிழ்ச் சைவம் என்ற சைவ சிந்தாந்ததிற்கு திருமந்திரம் மட்டும் தான் ஆதார நூலா? தேவார திருவாசகங்களும் ஆதார நூற்கள் தானே//

திருமந்திரம் ஆதி நூல்!
அதுவே தேவாரத்தில் பத்தாம் திருமுறையாகத் தான் வைக்கப்பட்டிருக்கு! அதான் திருமந்திரத்தைக் குறிப்பிட்டுக் கேட்டேன்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குமரன் (Kumaran) said...
உங்க குருநாதர் யாரு இரவி? நோகாம எலும்பை உருவுறதைப் பத்தி சொல்லிக் குடுப்பவரா? :-)//

குமரன்
நான் ஒரு நல்ல சைவனாத் தான் இருந்தேன்!
என்னைய சைவத்தில் இருந்து மாற்றியவர் ஒரு சைவச் செம்மல்! இப்போ அவர் தான் என் குருநாதர்!

என் சைவ விரதம் முறித்து, பாரீஸ் என்னும் பாடல் பெற்ற தலத்தில், "சிக்கன்" தீட்சை கொடுத்தவரே அந்தக் குருநாதர் தான்! :)

யான் உனைத் தொடர்ந்து, "சிக்கனை"ப் பிடித்தேன்!
எங்கு எழுந்து அருளுவது இனியே! :))

சிவமுருகன் said...

//வாங்க சிவமுருகன். ரொம்ப நாளா காணலை.//

என்ன பண்றது வேலை தேடுதலில் தீவரமாய் இருக்கேன்!

//என் மேல் சினம் கொண்டீர்களோ என்று நினைத்தேன்.//

ஆமாம். சரியாக சொன்னீர்கள் (இப்போதெல்லாம் நான் நிறையவே பொய் சொல்கிறேன்)

//மொழியைப் பற்றி நான் ஏன் பேசமாட்டேன் என்று நினைக்கிறீர்கள்? கட்டாயம் பேசுவேன். :-)//

மாட்டீங்க! சார் மாட்டீங்க!
மாட்டுவீங்க உங்களுக்கு ஒரு சின்ன பயம்! அதான் :) அப்படி சொன்னேன்.

(சும்மாவா ஆதாரம் காட்டுங்கன்னு கேட்ப்போம்(பேன்)-ல்ல.)
:-).

சிவமுருகன் said...

ஐயா சாமி ராகவ்!

//அமெரிக்க மேலாளரிடம் பேசும்போது, “எனக்கு செளராஷ்ட்ரம் என்ற மொழி தெரியும், அதற்கு எழுத்துக்களே இல்லை” என்றேன்.. //


கொஞ்சம் திருத்துக்கொள்ளுங்கள்!

நம்ம மொழிக்கு தனி-வழி எழுத்துக்கள் உண்டு (இதை இராமராய் - எழுத்துருன்னு - scrpit சொல்லுவாங்க) மேலும் பலர் தெலுங்கு மற்றும் நாகரி எழுத்துருக்களில் புழங்குகின்றனர்.

சிவமுருகன் said...

அலோ கேஆரெஸ்!

//யான் உனைத் தொடர்ந்து, "சிக்கனை"ப் பிடித்தேன்!
எங்கு எழுந்து அருளுவது இனியே! :))//

நல்லா தானய்யா,
போய்கிட்டு இரு(க்கு)ந்துச்சு என்ன ரூட்டு மாறிகிட்டுவர்ரீங்க? :-)

சிவமுருகன் said...

//எழுத்துகள் இருந்தாலும் எழுதக் கற்றுக் கொள்ளவில்லை. ஏனெனில் முறைப்படி பள்ளிக்காலத்தில் கற்றுக் கொடுக்கும் வகை இல்லை. //

இதையே சொல்லி வருவதை விட நாமாகவே எழுத, படிக்க கற்றுக்கொள்ளலாம் என்று நினைத்து 98-99 களில் புத்தகம் பெற்று(கவனிக்க வாங்கவில்லை) கற்றுக்கொண்டேன்.

"கற்ற கல்வி வீணாவதில்லை" என்ற சொல் பொய்க்கவில்லை!

கடந்த 2000-ஆம் ஆண்டிலிருந்து வெளிவந்த பல திருமணபத்திரிக்கைகள் சௌராஷ்ட்ரத்தில் டைஸெட் செய்ய அடியேனை அழைத்தனர்! செய்து கொடுத்தேன் இலவசமாய்!

ஒருரிரு முறை பாஷாபிமானி பத்திரிக்கையையும் தட்டவும், மேலும் பெரும் பாக்கியமாக சௌராஷ்டிரத்தில் திருக்குறளூம் தட்டி தர முடிந்தது.

//போகூழ்//
புதசெவி

குமரன் (Kumaran) said...

//மாட்டீங்க! சார் மாட்டீங்க!
மாட்டுவீங்க உங்களுக்கு ஒரு சின்ன பயம்! அதான் :) அப்படி சொன்னேன்.

(சும்மாவா ஆதாரம் காட்டுங்கன்னு கேட்ப்போம்(பேன்)-ல்ல.)
:-).//

புரியலை சிவமுருகன்.

***

ஆமாம். சௌராஷ்ட்ரத்திற்கு எழுத்துக்கள் உண்டு தான். திண்டுக்கல்லில் இருந்து சௌராஷ்ட்ர மொழிப் பத்திரிக்கை வருவதைப் பற்றி இராகவ்வும் சொல்லியிருக்காரே. வேலையில் சேரும் போது அது தெரியாது போல அவருக்கு. :-)

***

போகூழ்ன்னா துரதிர்ஷ்டம்.

குமரன் (Kumaran) said...

நீங்கள் வேலை தேடும் விவரமே எனக்குத் தெரியாது சிவமுருகன். விரைவில் உங்களுக்கு சிறந்த வேலை ஒன்று கிடைக்க வேண்டுகிறேன்.

Raghav said...

//அந்தரிக்கு 'துர்க்கை என்கிற நாத்தனார்' என்று தான் பிரதிவாதி பயங்கரம் அண்ணாங்கராசாரியார் பொருள் சொல்கிறார். மேலும் அவர் சொல்வது - கோதையின் வார்த்தையாக 'மணமகளுக்கு நாத்தனாரைக் கொண்டு புடவை உடுத்துகிற க்ரமத்தாலே எனக்கு நாத்தனாரான துர்க்கையைக் கொண்டு புடவை உடுத்தி நன்மாலைகளையும் சூட்டி...'. மேலும் அவர் சொல்வது - அந்தரி = துர்க்கைக்குப் பெயர். இவள் கண்ணபிரானுக்கு உடன்பிறந்தாள் ஆதலால் ஆண்டாளுக்கு நாத்தனார் ஆனாள். அந்தரத்திலே (ஆகாயத்திலே) அந்தர்த்தானமாய்ப் போனமையால் அவளுக்கு அந்தரி என்று பேராயிற்றென்க.//

குமரன், ஒரு சின்ன குழப்பம் இங்கே.. ”நாராயணன் நான்முகனை படைத்தான்.. நான்முகனும் தன்முகமாய் சங்கரனைத் தான் படைத்தான்” என்று நம்மாழ்வார் பாடியுள்ளார்.. அப்படிப் பார்த்தால்.. சங்கரன் நாராயணனுக்கு பேரன் முறை என்று சொல்லலாமா?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Raghav said...
குமரன், ஒரு சின்ன குழப்பம் இங்கே.. ”நாராயணன் நான்முகனை படைத்தான்.. நான்முகனும் தன்முகமாய் சங்கரனைத் தான் படைத்தான்” என்று நம்மாழ்வார் பாடியுள்ளார்.. அப்படிப் பார்த்தால்.. சங்கரன் நாராயணனுக்கு பேரன் முறை என்று சொல்லலாமா?//

அவர் பேரன்! இவள் தங்கை! எப்படி??
எலே ராகவ்,
இதானய்யா நீரு கேக்க வந்தீரு? :))

இப்படியெல்லாம் கண்டபடி கேள்வி கேக்குறதே வழமையாப் போயிரிச்சி! எல்லாம் சகவாசம் தான்! மொதல்ல பந்தலை விட்டு வெளியே வந்தாத் தான் நீரு சரிப்படுவீரு! :)

குமரன் (Kumaran) said...

சொல்லலாம் இராகவ். இந்த மாதிரி குழப்பங்கள் ஏற்படும் போதும், ஒரே புராண நிகழ்ச்சிகள் சிறிதளவு வேறுபாடுகளுடன் சொல்லப்படும் போதும் ஆசாரியர்கள் சொல்லும் சமாதானம் - அவை வெவ்வேறு கல்பங்களில் நடைபெற்ற நிகழ்வுகள் என்பது தான். ஒவ்வொரு கல்பத்திலும் சுழற்சியாக அதே நிகழ்வுகள் (அல்லது அதே போன்ற நிகழ்வுகள்) நடைபெறும் என்பது இந்து மதத்தில் ஒரு நம்பிக்கை.

குமரன் (Kumaran) said...

இராகவ்.

முடிந்தால் இந்த இடுகையையும் படித்துப் பாருங்கள்.

http://koodal1.blogspot.com/2005/10/blog-post_10.html

Kannabiran, Ravi Shankar (KRS) said...

@குமரன், இராகவ்
//நாராயணன் நான்முகனை படைத்தான்.. நான்முகனும் தன்முகமாய் சங்கரனைத் தான் படைத்தான்//

இதில் சங்கடமே தேவையில்லையே!
"படைத்தான்" என்பதற்கு நீங்க எதுக்கு அப்பா-மகன் உறவு கற்பிக்கணும்? அங்கே தான் உறவுக் குழப்பம் வருகிறது!

இறைவனின் திருச்செயல்களை உலகத்தின் கண் கொண்டு மட்டுமே பார்த்தா இப்படித் தான்! :)
ஏதோ அவதாரம்-ன்னா அப்போ பாக்கலாம்! மனித உருவத்தில் இருக்கான்! இங்கு அப்படி இல்லையே!

எல்லாரையும் இறைவனின் ஆணைப்படி பிரம்மன் "படைக்கிறான்" என்று வைத்துக் கொள்வோம்! அப்போ எல்லாரும் பிரம்மனின் குழந்தைகளா?

அப்படின்னா எல்லாருமே சகோதர சகோதரிகள் தான்! அப்பா, அம்மா உட்பட! :))
All Indians are my brothers n sisters கணக்கு தான்! ராகவ் உங்களுக்குத் திருமணம் ஆயிருச்சுல்ல? இல்லீன்னா சீக்கிரம் சீக்கிரம்:))

படைத்தல் வேறு! பெறுதல் வேறு!
இறைவன் நம்மைப் படைக்கிறான்!
அம்மா அப்பா நம்மைப் பெறுகிறார்கள்! - ஓக்கேவா? :)

குமரன் (Kumaran) said...

//"படைத்தான்" என்பதற்கு நீங்க எதுக்கு அப்பா-மகன் உறவு கற்பிக்கணும்? அங்கே தான் உறவுக் குழப்பம் வருகிறது! //

இது சரி தான். இப்படி நேரடியா 'படைத்தான்'ன்னா 'பெற்றான்'ன்னு பொருள் கொள்ள முடியாது தான். இப்படி லிட்டரலா பொருள் கொண்டு சில அறிவாளிகள் காலம் காலமாகப் பே(ஏ)சிக் கொண்டிருப்பதைப் பார்க்கும் போதெல்லாம் நான் நினைப்பது தான். அந்த வகையில் நீங்கள் சொல்லும் சமாதானம் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கிறது இரவி.

வைணவ இலக்கியங்களில் சான்றாக பாசுரங்களையும் பாசுர விளக்கங்களையும் கொள்வார்கள் அல்லவா? பாசுரத்தில் 'படைத்தான்' என்று இருப்பதற்கு 'படைத்தான்' என்றே பொருள் கொள்ளுங்கள்; 'பெற்றான்' என்ற பொருள் கொள்ளாதீர்கள் என்ற சமாதானம் சரியே. ஆனால் உரைகளில் ஆசாரியர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்றும் பார்க்கவேண்டியிருக்கிறது. உரைகளில் நாராயணன் மகன் நான்முகன்; நான்முகன் மகன் சங்கரன் என்று தான் இருக்கிறது - என்று நினைவு. சரி பார்க்கவேண்டும். அப்படி இருப்பதால் தான் இராகவுக்கும் இந்த ஐயம்.

சங்கடம் ஏதும் இல்லை; ஐயம் மட்டும் தான். :-)

'நாராயணன் நான்முகனைப் படைத்தான்' - இந்தப் பகுதிக்கு எந்த எதிர்ப்பும் இல்லை என்றே நினைக்கிறேன். இந்திய சமயங்கள் எல்லாவற்றிலும் (பௌத்தம், சமணம் உட்பட) இந்தப் பகுதி ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. அதனால் இந்தப் பகுதியில் படைத்தான் என்பதற்கு பெற்றான் என்ற பொருள் தான் கொள்ள வேண்டியிருக்கிறது.

'நான்முகனும் தான்முகமாய் சங்கரனைத் தான் படைத்தான்' - இந்தப் பகுதி தமிழக வைணவத்தில் மட்டுமே - அதுவும் பெரிதும் பேசப்படாத கருத்தாக - இருக்கிறது. அதனால் நாராயணன் மகன் நான்முகன் என்பதில் ஏற்படாத சங்கடம் நான்முகனின் மகன் சங்கரன் என்பதில் ஏற்பட்டுவிடுகிறது. அதே நேரத்தில் சங்கரியோ நாராயணியாகவும் இருக்கிறாள். அதனால் மேலும் குழப்பம். 'படைத்தான்' என்றால் 'பெற்றான்' என்று பொருள் கொள்ளக் கூடாது என்ற சமாதானம் சொல்ல வேண்டியிருக்கிறது. :-)

அப்படியே ஜகன்மாதா என்று பார்வதியையும் லட்சுமியையும் கூறும் போது நான்முகனை 'பிதாமஹர் - தாத்தா' என்று அழைக்கிறார்களே அதுவும் ஏன் என்று விளக்குங்கள். இதுவும் எனக்கு இருக்கும் குழப்பமே. :-)

Raghav said...

//
எல்லாரையும் இறைவனின் ஆணைப்படி பிரம்மன் "படைக்கிறான்" என்று வைத்துக் கொள்வோம்! அப்போ எல்லாரும் பிரம்மனின் குழந்தைகளா?
//

இந்த குழப்பம் நேராமல் இருக்கத் தானே பிரம்மன் படைத்த சப்தரிஷிகள் மூலமாக ஒவ்வொரு கோத்ரப்படி ஒவ்வொரு குடும்பமும் பிரிகின்றது.. ஒரே கோத்ரத்தில் பிறந்தால் தானே சிக்கல்.

Raghav said...

//
சங்கடம் ஏதும் இல்லை; ஐயம் மட்டும் தான். :-)
//

ஆமாம் குமரன்.

துளசி கோபால் said...

என்ன குமரன் 89 ம் படிக்க இப்போ நேரம் இல்லை. அப்புறம் நிதானமாப் படிக்கிறேன் ப்ளீஸ்.

பார்வதி, பெருமாளுக்குத் தங்கை முறை எப்படியா?

ராக்கி சிஸ்டர் ன்னு சொன்னால் ஆச்சு.


அறவோராக இருப்பவரே அந்தணர். இது பிறப்பால் இல்லைப்பா. வள்ளுவரே சொல்லிட்டார். நோ அப்பீல்.

Raghav said...

//துளசி கோபால் said...
பார்வதி, பெருமாளுக்குத் தங்கை முறை எப்படியா?

ராக்கி சிஸ்டர் ன்னு சொன்னால் ஆச்சு.
//

ஆஹா.. ஐயம் தெளிந்தது டீச்சர்.. இவ்வளவு எளிமையான பதிலா :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ராக்கி சிஸ்டர் ன்னு சொன்னால் ஆச்சு.
//
ஆஹா.. ஐயம் தெளிந்தது டீச்சர்.. இவ்வளவு எளிமையான பதிலா :)//

அதான் எங்க டீச்சரின் பெருமை! துளசி மகாத்மியம்! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//'பெற்றான்' என்ற பொருள் கொள்ளாதீர்கள் என்ற சமாதானம் சரியே. ஆனால் உரைகளில் ஆசாரியர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்றும் பார்க்கவேண்டியிருக்கிறது//

சரி, பார்த்து விட்டுச் சொல்லுங்கள்! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//உரைகளில் நாராயணன் மகன் நான்முகன்; நான்முகன் மகன் சங்கரன் என்று தான் இருக்கிறது - என்று நினைவு. சரி பார்க்கவேண்டும்//

மகன் மேல் ரொம்ப பாசம் இல்லீன்னாலும், பெருமாளுக்குப் பேரன் மேல பாசம் இருப்பது இதனால் தானோ? :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//'நான்முகனும் தான்முகமாய் சங்கரனைத் தான் படைத்தான்' - இந்தப் பகுதி தமிழக வைணவத்தில் மட்டுமே - அதுவும் பெரிதும் பேசப்படாத கருத்தாக - இருக்கிறது//

தவறு! தவறு!

தமிழக வைணவம் மட்டுமா?
கெளடியா வைணவமும் இப்படித் தான் சொல்லுது! இஸ்கான்-ல என்ன சொல்றாங்க?

பத்ம புராணம், விஷ்ணு புராணம் இரண்டையும் எதுக்கும் இன்னொருகா வாசிச்சிருங்க! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அப்படியே ஜகன்மாதா என்று பார்வதியையும் லட்சுமியையும் கூறும் போது//

இல்லீயே!
(பொருள்-ன்னு பாக்கும் போது)
ஜகன்மாதா-ன்னா லட்சுமி மட்டும் தான்! ஸ்வாமி-ன்னா அது ஸ்கந்தன் மட்டும் தான்! - அப்படின்னு மெளலி அண்ணா சொன்னாரே! அமரகோசம் என்ற நூலில் இருந்து! ஹா ஹா ஹா!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//நான்முகனை 'பிதாமஹர் - தாத்தா' என்று அழைக்கிறார்களே அதுவும் ஏன் என்று விளக்குங்கள். இதுவும் எனக்கு இருக்கும் குழப்பமே. :-)//

விளக்கமா?
பதிவுலகில் விளக்கம்-ன்னா அது ஒன்னு குமரன் கிட்ட கேக்கணும்! இல்லை ராகவ்(அன்) கிட்ட கேக்கணும்!

ஏன் பிரம்மன், பிதா மஹர்=தாத்தா என்பதற்கு ராகவ் தன்னையும் அறியாமல் விளக்கம் கொடுத்திருக்காரே! பாக்கலையா? :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இன்னும் மூனு பின்னூட்டம் பாக்கி இருக்கா? இந்த நேரம் பாத்து கொத்ஸ் எங்கே போய் தொலைஞ்சாரோ தெரியலையே! :)

Unknown said...

தயங்கித் தயங்கி.....

Unknown said...

.....100!!!!

குமரன் (Kumaran) said...

இராகவ்.

இருடிகளின் (ரிஷிகளின்) வழியில் வரும் கோத்திரம் எல்லோருக்கும் இல்லை. சிலர் பொதுவாக சிவ கோத்திரம் விஷ்ணு கோத்திரம் என்று சொல்லிவிடுவார்கள். நான் மார்கண்டேய கோத்திரம் இன்னொருவர் ஆத்ரேய கோத்ரம் மற்றொருவர் ஜாபாலி கோத்திரம் என்பது போன்ற இருடிகளின் பெயர்களில் அமைந்த கோத்திரங்கள் எல்லோருக்கும் இல்லை.

குமரன் (Kumaran) said...

தமிழ்ச்சங்கம் தீர்த்து வைக்க முடியாத ஐயத்தை தனியொருவராக வந்துத் தீர்த்துவைத்த துளசியக்கா ரொம்ப நன்றி. :-)

குமரன் (Kumaran) said...

கௌடிய வைணவம், விஷ்ணு புராணம், பத்ம புராணம் இவற்றை எல்லாம் என்னைப் பார்க்கச் சொல்லிவிட்டு லிங்க புராணமும் பிரம்மாவின் மகன் சிவன் என்று கூறுகின்றது என்று எனக்குத் தனி மடலில் தரவினை அனுப்பியதற்கு நன்றி இரவிசங்கர்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

'நாராயணன் நான்முகனைப் படைத்தான்'
'நான்முகனும் தான்முகமாய் சங்கரனைத் தான் படைத்தான்'
- என்று திருமழிசை ஆழ்வார் ஒருக்காலும் பொய்யாகப் பாடமாட்டார்! (இத்தனைக்கும் அவர் அனைத்து சமயங்களிலும் இருந்து, இறுதியாக ஆழ்வார் ஆனவர்)

வைணவம் மட்டுமல்லாது, சைவமே சிவபெருமானை, பிரம்மாவின் திருமகனாராய்க் காட்டும்! அதற்கான லிங்க புராணக் குறிப்பு இதோ!

Brahma and Vishnu

"But why did Vishnu address Brahma as his son?" asked the sages. "Please explain that."

Lomaharshana told them the following story from the kalpa known as padma kalpa.

At the time of the destruction that came at the end of the earlier kalpa, there was water everywhere in the universe and Vishnu slept on this water. Vishnu felt slightly bored. So he made a gigantic lotus sprout out of his navel and started to play with it. The stalk of the lotus was made of diamonds and it shone with radiance like the sun.

While Vishnu was thus playing with the lotus , Brahma appeared.

"Who are you?" asked Brahma. "What are you doing here?"

"I am Vishnu," replied Vishnu. "I am the lord of everything. But who are you and where have you come from?"

"I am Brahma," responded Brahma. "I am the lord of everything in the universe. Every object that will be created in the universe is already present in embryonic form, inside my body. If you don’t believe me, why don’t you enter my stomach and see for yourself?"

Vishnu entered Brahma’s body through the mouth. He marvelled to discover the fourteen regions (lokas) of the universe and the beings who would populate them all, inside Brahma’s stomach. Vishnu wandered around for a thousand years, but could find no end to the vast expanse of Brahma’s stomach. Finally, he emerged through the mouth and told Brahma, "I am completely bowled over by what I have seen. But I can also show you wonders. There are many worlds inside my body as well. Enter for yourself and see."

Brahma agreed to this and entered Vishnu’s body through the mouth. Inside Vishnu’ stomach, he saw many worlds. He wandered around for a thousand years, but could not find the extremities of the stomach. Meanwhile, Vishnu had closed all the points of exit and Brahma could find no way of coming out. He eventualy came out through the lotus that sprouted out of Vishnu’s navel and seated himself on the lotus. Since padma means lotus and yoni means place of birth, Brahma thenceforth came to be known as Padmayoni. And since Brahma emerged out of Vishnu’s body, he came to be regarded as Visnu’s son.

While Brahma was thus seated on the lotus, Shiva arrived. Such was the speed of Shiva’s arrival that tidal waves were created in the water. The lotus started to tremble and Brahma was showered with drops of water.

"Stop shaking the lotus so," said Brahma. "You are scaring me."

"Who speaks from my navel?’ asked Vishnu. "And why do you sound so angry?"

"I am Brahma," replied Brahma. "I have every right to be angry. Don’t you remember? You had entered my body and had marveled at the worlds I had shown you there. You had then asked me to enter your body. But once I had done that, you had closed all the points of entry so that I had not been able to get out. I had to emerge through the lotus and now now seated on it. Apart from your earlier transgression, you have now started to shake the lotus. Why should I not be angry?"

"Please pardon me," replied Vishnu. "I had no desire to offend you by closing all the points of exit. I merely wished to play with you for a while. Please forgive me. And as a token of your friendship, please grant me the boon that you will henceforth be known as my son. But as for the lotus, I have no part in shaking it. Can’t you see that Shiva is approaching? These tidal waves must have been caused by his arrival. Let us pray to him and pacify him."

"Who is Shiva?" asked Brahma. "I am Brahma the lord of everything. I refuse to pray to any upstart who approaches."

Vishnu quietened Brahma down and persuaded him that the two of them ought to pray to Shiva. Shiva was pleased at these prayers and offered grant Brahma and Vishnu boons. Vishnu wished the boon that he might always be devoted to Shiva. Brahma desired the boon that Shiva might be born as his son.

Subsequently, when Brahma began his task of creation, he was not happy with the beings he initially created. From this sorrow were born the eleven rudras, manifestations of Shiva. They cried as soon as they were born. Since the word ruda means to cry, they acquired the name of rudras. It was thus that Shiva was born as Brahma’s son.

(This seemingly contradicts the earlier account of the Linga Purana that Shiva had created the eleven rudras himself. The story of the rudras being born from Brahma’s sorrow is given in many Puranas in much greater detail. The Vishnu Purana and the Padma Purana are examples.)

The Linga Purana next describes the rituals that have to be followed in worshipping Shiva’s linga.