Thursday, February 07, 2008

உடுக்கை இழந்தவன் கை - 3 (பாரி வள்ளலின் கதை)



முன்கதை சுருக்கம்: வழியில் ஒரு பாணரையும் விறலியையும் கபிலர் சந்திக்கிறார். கடையேழு வள்ளல்களைப் பற்றி அவர்களுக்குச் சொன்ன பின்னர் விறலி தன் மனத்தில் வெகு நாட்களாக இருக்கும் ஆசையைப் பற்றி கூறுகிறாள். தொடர்ச்சி இங்கே.

***

"பொன்னணி பெற வழியிருக்கிறதா?"

"உண்டு அம்மையே. நம் பாரி வேள் இருக்க பயமேன்?"

"ஐயா. தங்களைப் போன்ற புலவர் பெருமக்களும் இசை வல்லுனர்களான பாணர்களும் விறலியர்களும் சென்று கேட்டால் நம் மன்னர் பரிசில் தர வாய்ப்புண்டு. நானோ இரண்டு வகைகளிலும் இல்லை. ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை என்பது போல் எங்கள் வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது"

"தயக்கமே வேண்டாம் அம்மையே. யாராக இருந்தாலும் எத்தன்மையராக இருந்தாலும் இரவலராகச் சென்றால் பாரி கட்டாயம் பரிசில் வழங்குவான்"

"எந்த வித திறமையும் இன்றி மன்னர் முன்பு சென்று இரக்க தயக்கமாகத் தான் இருக்கிறது ஐயா"

"தயக்கமே வேண்டாம். பாரியின் தன்மையை ஒரு உவமையின் மூலம் சொல்கிறேன். கேளுங்கள். பெண்மக்களும் ஆண்மக்களும் என நாம் அணியும் பூக்களில் நல்லவை தீயவை என்று சில பிரிவுகள் செய்து வைத்திருக்கிறோம் அல்லவா?"

"ஆம் ஐயா. மணம் வீசும் மலர்கள் நல்லவை என்றும் மணமில்லாமல் ஆனால் கண்ணைக் கவரும் வண்ணங்கள் உடைய மலர்கள் அல்லவை என்றும் பிரித்து வைத்திருக்கிறோம்"

"இவற்றில் எருக்கம் பூ எந்த வகையைச் சார்ந்தது?"

"அது நல்லதும் இல்லை தீயதும் இல்லை ஐயா"

"சரியாகச் சொன்னீர்கள் அம்மா. நல்லதும் தீயதும் என்று மக்கள் அணியும் பூக்களைச் சொல்கிறோம். ஆனால் எருக்கம் பூவினை மக்கள் அணிவதில்லை. அது நல்லதும் இல்லை; தீயதும் இல்லை. ஆனால் அந்தப் பூவைக் கடவுளுக்குச் சூட்டினால் கடவுள் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று சொல்கிறதா?"



"இல்லை ஐயா. எருக்கம் பூவினை விரும்பி ஏற்கும் கடவுளும் உண்டு"

"அது போலத் தான் தாயே. அறிவே இல்லாதவராயினும் வறுமை கொண்டவர் வேண்டிச் சென்றால் பாரியின் கைவண்மை அவரையும் ஏற்றுக் கொண்டு அவர்கள் விரும்பியதைக் கொடுக்கும்

நல்லவும் தீயவும் அல்ல குவியிணர்ப்
புல்லிலை எருக்கம் ஆயினும் உடையவை
கடவுள் பேணேம் என்னா ஆங்கு
மடவர் மெல்லியர் செல்லினும்
கடவன் பாரி கைவண்மையே
"

பாடலைக் கேட்டவுடன் பாணரின் மனம் மிக மகிழ்ந்தது. பாடலை உடனே மனத்தில் நிறுத்தி அதன் சுவையைப் பருகத் தொடங்கியது.

'ஆகா. என்ன அழகான பாடல் இது. புலவர் என்றால் இவரல்லவோ புலவர். ஒரு அழகான உவமையைக் கூறினாரே. எருக்கம் பூவை இகழ்வார் நடுவே எருக்கம் பூவினையும் ஏற்றுக் கொள்ளும் கணங்களின் தலைவனான கடவுளைப் பாரிக்கு உவமையாகச் சொன்னாரே. பெண்ணிடம் சொன்னதால் அவளுக்கு எளிதில் புரியும் ஒரு உவமையும் சொன்னாரோ? குவிந்த இணர் - குவிந்த மொட்டு, புல்லிலை - பச்சை இலை என்று எருக்கத்திற்கும் அழகு கூட்டிச் சொன்னாரே. எதுகைச் சுவையும் மோனைச் சுவையும் கூடிய இந்தப் பாடலை எளிதாக மனத்தில் நிறுத்தலாமே'

நாகையாரின் மனமோ இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை.

"ஐயா. நீங்கள் சொன்னது நன்கு புரிகிறது. எளியவளான நான் சென்று கேட்டாலும் நம் மன்னர் வேண்டியதைத் தருவார் என்று சொல்கிறீர்கள். ஆனால் ஏற்றுக் கொள்ளத் தான் இன்னும் என் மனம் மறுக்கிறது. எந்தவித சிறப்பும் இல்லாத நான் எந்த முகத்தோடு பாரிவேளிடம் சென்று பொன்னிழை இரப்பேன்?"

புன்னகை செய்தார் கபிலர். அவளது தயக்கம் நன்கு புரிந்தது. எந்தவித கையுறையும் இல்லாமல் அரசனைக் கண்டு எப்படி இரப்பது என்று தயங்குகிறாள். சிறிது நேரம் சிந்தித்ததில் ஒரு எண்ணம் தோன்றியது கபிலருக்கு.

"அம்மையே. எனக்கு ஒரு வழி தோன்றுகிறது. கையுறை இல்லாமல் எப்படி அரசன் முன் நின்று வேண்டுவது என்று நீ தயங்குகிறாய். ஒரு நல்ல பாடலுடன் சென்று அதனைப் பண்ணிசைத்துப் பாடினால் அவன் மனம் மகிழ்வானே. நான் ஒரு பாடலை இயற்றித் தருகிறேன். அதனைப் பாடிப் பரிசில் பெறுங்கள்"

அவர் சொல்வதும் சரி தான் என்று தோன்றியது விறலிக்கு. ஆனாலும் எப்படி வாய் திறந்து எனக்கு இந்தப் பரிசில் தான் வேண்டும் என்று கேட்பது. அரசன் கொடுப்பதை மனம் மகிழ்ந்து வாங்கிக் கொண்டு வர வேண்டுமே. குறிப்பாக இது தான் வேண்டும் என்று எப்படி கேட்பது?

தன் எண்ணத்தைக் கபிலரிடம் சொன்னாள்.

"அதற்கும் வழியிருக்கிறது அம்மையே. குறிப்பாக பொன்னிழை தான் வேண்டும் என்பதைப் பாடலிலேயே குறிப்பாக வைத்துவிடுகிறேன். இதோ பாடல்.

சேயிழை பெறுகுவை வாணுதல் விறலி
தடவுவாய்க் கலித்த மாயிதழ்க் குவளை
வண்டுபடு புதுமலர்த் தண் சிதர் கலாவப்
பெய்யினும் பெய்யாதாயினும் அருவி
கொள் உழு வியன்புலத்து உழைகாலாக
மால்புடை நெடுவரைக் கோடு தோறு இழிதரும்
நீரினும் இனிய சாயல்
பாரி வேள் பாற் பாடினை செலினே
"

பாடலைக் கேட்டவுடன் பாணர் இசையமைக்கத் தொடங்கிவிட்டார். பொன்னிழை வேண்டும் என்ற குறிப்பு பாடலின் முதல் வரியிலேயே இருப்பதைக் கண்டு மனம் மகிழ்ந்தாள் நாகை. இது வரை இருந்த தயக்கமெல்லாம் நீங்கிவிட்டது. பொன்னிழை கிடைப்பது உறுதி என்றும் தெரிந்தது.

"ஐயா. தங்களின் அறிவுரைப்படியே இந்தப் பாடலுக்கு இசை அமைத்துப் பாரிவேளிடம் பாடிப் பரிசில் பெறுகிறோம். எங்களுக்காக இந்தப் பாடலைப் பாடி அருளிய தங்களுக்கு நாங்கள் என்ன கைமாறு செய்யப் போகிறோம்?"

"அம்மையே. தாங்கள் அன்போடு அளித்த தேனும் தினைமாவும் தித்திப்பாய் இன்னும் என் நாவிலும் நெஞ்சிலும் நிற்கிறதே. அந்த அன்பும் ஆதரவும் போதாதா?"

மேலும் சிறிது நேரம் இருவருடனும் பேசிவிட்டு தன் வழியே தொடர்ந்து சென்றார் கபிலர்.

***

"அன்பரே. நேற்றிலிருந்து இந்தப் பாடலைப் பாடிப் பயின்று வருகிறோம். இரவு முழுவதும் இதே சிந்தனை. இந்தப் பாடலே மனத்தில் ஓடிக் கொண்டிருந்தது. இப்போது காலை உணவு ஏற்கும் நேரமும் வந்துவிட்டது. ஆனால் இன்னும் என் மனத்தில் பாடலின் சொற்கள் முழுவதுமாக நிற்கவில்லை. ஏன் இப்படி?"

"நாகை. உன் மனத்தில் பாடலின் வரிகள் நிற்காததற்குக் காரணம் ஒன்று தோன்றுகிறது எனக்கு. பாடலின் பொருள் உனக்கு முழுதும் புரிந்துவிட்டதா?"

"இல்லை அன்பரே. முதலும் கடைசியுமாக சில வரிகள் புரிகின்றன. மற்ற வரிகளுக்கு முழுப் பொருளும் புரியவில்லை."

"நல்லது. பாடலின் பொருளைச் சொல்கிறேன். கேள். பொருள் புரிந்து பாடினால் பாடலின் வரிகள் மனத்தில் எளிதாக நிற்கும்.

தட உவாய் என்றால் மிகப்பெரிய குளம். அந்தக் குளத்தில் கரிய நிற இதழ்களைக் கொண்ட குவளைப்பூக்கள் நிறைந்து இருக்கின்றனவாம். அவற்றைத் தான் தட உவாய்க் கலித்த மா இதழ்க் குவளை என்கிறார். மாயோன் என்று கரிய நிறம் கொண்டவனையும் மாயோள் என்று கரிய நிறம் கொண்டவளையும் சொல்லுவோமே. இங்கே கரிய இதழை மாயிதழ் என்று சொல்கிறார் புலவர். "


"மாயிதழ் என்பது கரிய இதழா. இப்போது புரிகிறது. குவளைப்பூவிற்கு சிறு இதழ் தானே இருக்கும் இங்கே பெரிய இதழ் என்று பாடியிருக்கிறாரே என்ற குழப்பம் இருந்தது"

"ஆமாம். முதல் பார்வையில் அப்படித் தான் தோன்றுகிறது. ஆனால் இங்கே குவளையைக் கூறியதால் சீறிதழ் என்று சொல்லாமல் மாயிதழ் என்று சொன்னது அளவைச் சொல்லவில்லை நிறத்தைச் சொன்னது என்று புரிகிறது.

அந்தக் குவளைப் பூக்களில் வண்டுகள் மொய்க்கின்றன. அப்படி வண்டுகள் மொய்க்கும் போது அந்த மலரில் இருக்கும் மகரந்தத்துகள்கள் மேலெழும்பி பறக்கின்றன. அந்த நேரத்தில் மழை பெய்தால் அந்த மழைத்துளிகளில் அந்த மகரந்தத் தூள்கள் கலந்து வண்டுகளின் மீதும் குளத்தின் மீதும் சுற்றிலும் படரும். சில காலங்களில் அப்படி மழை பெய்வதில்லை. இந்தக் கருத்துகளைத் தான் அடுத்த சில வரிகளில் சொல்கிறார். குவளை வண்டு படு புதுமலர்த் தண் சிதர் கலாவ பெய்யினும் பெய்யாதாயினும் என்று. "

"ஆமாம். மழை பெய்யும் போது மழைத்துளி மலர்களின் மேல் வண்ணம் மாறி அமர்ந்திருப்பதை நானும் கண்டிருக்கிறேன். எத்தனை நுட்பமான பார்வை. இயற்கையுடன் இணைந்திருந்து வாழ்ந்திருந்தால் தான் இப்படி எல்லாம் பாட முடியும்"


"உண்மை தான் விறலி. அப்படி மாரி பொய்த்தாலும் கொள் விதைக்கப் பட்டிருக்கும் மலை நிலத்தின் பக்கத்தில் ஓடும் வாய்க்காலாக பறம்பு மலையின் சிகரங்கள் தோறும் அருவிகள் சிறிதேனும் பெய்து கொண்டிருக்கும். மாரி பொய்த்தாலும் அருவி பொய்க்காது என்று சொல்வதற்காக கொள் உழு வியன் புலத்து உழை காலாக மால்பு உடை நெடுவரைக் கோடு தோறும் இழி தரும் அருவி என்று சொல்கிறார்"

"மழையையும் அருவியையும் இங்கே சொல்ல வேண்டிய அவசியம் என்ன?"

"அதனைத் தான் அடுத்த வரிகளில் சொல்கிறார். மழை தான் எல்லா வளங்களும் தரும் பெரும் வள்ளல் என்பது எல்லோரும் ஒத்துக் கொள்வதாயிற்றே. நீரின்றி அமையாது உலகு என்றும் பெரியோர் சொல்வார்களே. அப்படிப்பட்ட மழையும் பொய்ப்பதுண்டு. ஆனால் பறம்பு மலையில் இருக்கும் அருவிகள் பொய்ப்பதில்லை. ஒடுங்கி வாய்க்காலாக மாறினாலும் ஓடிக் கொண்டிருக்கும் தன்மை உடையவை. அவை போன்ற குணம் கொண்டவன் பாரி என்கிறார் அடுத்த வரியில். அருவி நீரினும் இனிய சாயல் பாரி வேள் என்று சொல்லி உன் மனக்குறையைத் தீர்க்கிறார். நீ அவனிடம் பாடிச் சென்றால் சேயிழை பெறுகுவை என்று முதல் வரியோடு கூட்டிக் கொள்ள வேண்டும்."

"ஆகா. அருமை அருமை. என் ஐயத்தைத் தீர்க்கும் பாடலாக இந்தப் பாடலை வடித்துவிட்டு அதில் அழகாக நான் விரும்புவதையும் குறிப்பாகச் சொன்னாரே. அருமை. அதோடு மட்டுமின்றி பாடினை செலினே சேயிழை பெறுகுவை என்று இந்தப் பாடலின் கடைசி வரியை முதல் வரியோடு இணைத்துப் பொருள் கொள்ளும் படியாக சங்கிலி போல் அமைத்து நான் விரும்புவது தங்கச் சங்கிலி என்பதை கூறும் இன்னொரு குறிப்பாக அமைத்திருக்கிறாரே. இப்போதே பொன்னிழை பெற்றது போல் உணர்கிறேன். மகிழ்ச்சி. மகிழ்ச்சி"

***
பாடற்குறிப்புகள்:

இந்த இடுகையில் இருக்கும் இரண்டு பாடல்களும் கபிலர் பாரிவேளைப் பாடியவை. இரண்டிற்கும் திணை பாடாண்திணை (தலைவனைப் பாராட்டிப் புகழ்ந்து பாடுவது); முதல் பாடலின் துறை இயன்மொழி (உள்ளதை உள்ளபடி பாடியது); இரண்டாவது பாடலின் துறை விறலியாற்றுப்படை (விறலியிடம் ஒரு வள்ளலின் இருப்பிடத்திற்கு வழி சொல்வது). முதல் பாடல் புறநானூறு 106ஆம் பாடல். இரண்டாவது பாடல் புறநானூறு 105ம் பாடல்.

32 comments:

Geetha Sambasivam said...

அசத்தறீங்க, வேறே ஒண்ணும் சொல்லத் தெரியலை!

குமரன் (Kumaran) said...

:-)

நன்றி கீதாம்மா.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

விளக்கங்கள் அருமை குமரன்!
இயன் மொழியு சரி, விறலி ஆற்றுப்படையும் சரி, தங்கச் சங்கிலி போல் கோர்த்து கோர்த்து விளக்கி உள்ளீர்கள்! :-)
அருஞ்சொற்பொருள் தரலாமே?

//எருக்கம் பூவினையும் ஏற்றுக் கொள்ளும் கணங்களின் தலைவனான கடவுளைப் பாரிக்கு உவமையாகச் சொன்னாரே//

அந்தக் கடவுள் பேர் என்ன குமரன்?
அந்தக் கடவுள் கபிலர் காலத்தில், தமிழ்நாட்டில் வழக்கத்தில் இருந்தார் போல இருக்கே? :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Labels: இலக்கியத்தில் இறை//

வாழ்த்துக்கள் ஜிரா! :-)

குமரன் (Kumaran) said...

நன்றி இரவிசங்கர். விளக்கமே போதுமானதாக இருக்கிறது என்று எண்ணியதால் அருஞ்சொற்பொருள் தரவில்லை. யாருக்காவது பாடலின் எந்த சொல்லாவது புரியவில்லை என்று சொன்னால் அவற்றிற்கு மட்டும் பொருள் சொல்லலாம்.

எருக்கம் பூ சூடியவரைப் பற்றி தனி இடுகையில் பேசலாம் என்று நினைக்கிறேன் இரவிசங்கர். அவர் கபிலர் காலத்திலேயே இருந்தவர் போல் தான் தோன்றுகிறது. எருக்கம் மலர் சூடும் கடவுளர்கள் வேறு யாராவது இருக்கிறார்களா என்று தெரியவில்லை.

இலவசக்கொத்தனார் said...

குமரன், அவசர அவசரமா அலுவலகத்தில் படிக்கும் பதிவு இல்லை என்பது மட்டும் புரிஞ்சுக்கிட்டேன். மீண்டும் வருகிறேன். :)

குமரன் (Kumaran) said...

//குமரன், அவசர அவசரமா அலுவலகத்தில் படிக்கும் பதிவு இல்லை என்பது மட்டும் புரிஞ்சுக்கிட்டேன். மீண்டும் வருகிறேன். :)
//

உங்கள் மூவரின் (கொத்ஸ், இராம்ஸ், பெனாத்தல்ஸ்) பதிவுகளைப் படிக்கும் போது நான் உணர்வது போலா கொத்ஸ்? :-)

துளசி கோபால் said...

எப்படிங்க.....இப்படியெல்லாம்!!!!

சரியாத் தமிழ் படிக்காமப் போயிட்டோமேன்னு மனசு நினைக்குது.


எருக்கம்பூ சாமி நம்ம ஆளு இல்லையா?

அதுவும் 'மா' தானே?

G.Ragavan said...

ரொம்ப அழகாச் சொல்லீருக்கீங்க. ரசித்துப் படித்தேன்.

// எருக்கம் பூவினையும் ஏற்றுக் கொள்ளும் கணங்களின் தலைவனான கடவுளைப் பாரிக்கு உவமையாகச் சொன்னாரே. //

ஒவ்வொரு சமயம் சொல்றவங்களப் பொருத்து சொல்ல வந்தது என்னன்னு வெவ்வேறு விதமா நெனச்சுப் பாத்துப் பொருள் கொள்றதும் உண்டு. :) நீங்க சொல்ல வர்ரதும் புரிஞ்சது.

எருக்கு சிவனார்க்கும் ஆகுமென்றும் படித்ததுண்டு. வக்ரதுண்டுக்குமட்டுமன்று. பாலைப்பூ கொற்றவைக்கும் ஆக வேண்டுமே. செய்யுளில் கணமும் இல்லை தலைமையும் இல்லை. ஆனாலும் நீங்க அந்த நம்பிக்கைல அப்படிப் பொருள் கொண்டிருக்கீங்க. அது ஒங்க விருப்பம்.

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//எருக்கம் பூவினையும் ஏற்றுக் கொள்ளும் கணங்களின் தலைவனான கடவுளைப் பாரிக்கு உவமையாகச் சொன்னாரே//

அந்தக் கடவுள் பேர் என்ன குமரன்?
அந்தக் கடவுள் கபிலர் காலத்தில், தமிழ்நாட்டில் வழக்கத்தில் இருந்தார் போல இருக்கே? :-) //

ஆகா நீங்க இருக்கீங்களா?? உங்க புன்னகையே நீங்க நெனைக்கிறதச் சொல்லுதே. நீங்க சொன்னா மறுபேச்சே கெடையாதுங்களே. ஆமாம். ஆமாம். நீங்க சொல்றதுதான் சரி. :)

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//Labels: இலக்கியத்தில் இறை//

வாழ்த்துக்கள் ஜிரா! :-) //

என்ன நெனச்சு வாழ்த்துனீங்களோ.. :) வாழ்த்துக்கு நன்றி. பெரியவங்க வாழ்த்து..பெருமாள் வாழ்த்து :)

குமரன் (Kumaran) said...

இப்பத் தான் படமெல்லாம் சேத்திருக்கேன். பாக்காதவங்க இன்னொரு தடவை பாத்திருங்க. :-)

குமரன் (Kumaran) said...

நானும் படிக்கிறப்ப தமிழ் சரியா படிக்காம தான் போனேன் துளசியக்கா. இப்ப ஆர்வம் இருக்கிறப்ப தமிழ் இணையம் நல்லா உதவுது. தமிழ் இணையப் பல்கலைகழக நூலகத்துல உரையோட புறநானூறும் மற்ற சங்க இலக்கியங்களும் இருக்கு. அங்கே படிச்சு தான் இங்கே எழுதியிருக்கேன். அங்கே படிக்கிறதுக்கு முன்னாடி இந்தப் பாட்டெல்லாம் குடுத்துப் பொருள் சொல்லச் சொல்லியிருந்தா பே பேன்னு முழிச்சிருப்பேன். :-)

ஆமா. இந்தக் காலத்துல எருக்கம்பூ சாமி நம்ம ஆளு தான். அவரும்/அதுவும் 'மா' தான் - நிறத்துலயும் அளவிலயும். :-)

நெஞ்சில் குடிகொண்ட நீல மேனியும்ன்னு ஒளவையார் கூட பாடியிருக்காங்களே. அந்த ஒளவையார் அதியமான் கால ஒளவையாரா பிற்கால ஒளவையாரான்னு தான் தெரியாது. அதியமான் கால ஒளவையாரா இருந்தா அந்தக் காலத்துலேயே (சங்ககாலத்துலயே) நம்ம ஆளு வழிபடப்பட்டிருக்காருன்னு ஆகும்.

குமரன் (Kumaran) said...

உங்க பழைய இடுகையை எல்லாம் படிச்ச பயன் தான் இது இராகவன். :-) அந்த அளவிற்கு எழுத முடியாட்டியும் ஏதோ எழுதியிருக்கேன்னு நினைக்கிறேன். அதான் நீங்க விரும்பி ருசித்துப் படிக்கிற மாதிரி அமைஞ்சிருக்கு. நன்றிகள்.

நான் இந்த இடுகையை எழுதுறப்ப வக்ரதுண்டரைத் தான் கணங்களின் தலைவன்னு சொன்னேன். ஆனா நீங்க சிவனாருக்கும் எருக்கு ஆகுமென்று சொன்ன பின்னர் இணையத்தில் தேடினேன். நம்ம ஓசைமுனி இப்படி சொல்றாரு 'பந்தித்து எருக்கம் தோட்டினை இந்துச் சடைக் கண் சூட்டும் உமைபங்கில் தகப்பன் தாள் தொழு குருநாதா'. அதனால இந்தக் கதையில சொல்லப்படற கணங்களின் தலைவன் சிவனாகவும் இருக்கலாம். :-)

எருக்கம் பூ பாலையில் விளைவதால் கொற்றவைக்கும் ஆகவேண்டும் என்று சொல்கிறீர்கள். இலக்கியத்திலோ நடைமுறையிலோ கொற்றவைக்கு எருக்கம் பூ சூடுவதைக்கேள்விப் பட்டதுண்டா? இருந்தால் சொல்லுங்கள்.

இலக்கியத்தில் இறைன்னு நீங்க தொடங்குனதை அப்படியே தொங்கவிட்டுட்டு காதல் குளிரும் அம்புலிமாமா கதையும் சொல்லப் போயிட்டீங்க இல்லை? அதான் அதை ஹைலைட் பண்ணி உங்களுக்கு வாழ்த்து சொல்லி நினைவு படுத்துறார் இரவிசங்கர். :-)

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

குமரா!
கம்பராமாயணத்தில் ஒரு பாடல்.
'' வெள்ளெருக்கம் சடைமுடியான் வெற்பெடுத்த திருமேனி
மேலும் கீழும் எள்ளிருக்கும் இடமின்றி
உயிரிருக்கும் இடம் நாடிக்
கள்ளிருக்கும் மலர்க் கூந்தல் சானகியைக் கரந்த காதல்
உள்ளிருக்குதென உடல் புகுந்து தடவியதே!! ஒருவன் வாளி!''
இந்த வெள்ளெருக்கம் சடை முடியான்
சிவன், இது சிவனுக்கும் பிரியமான பூ.
ஈழத்தில் திருக்கேதீஸ்வரத்தைச் சுற்றி
அடர்ந்து வளர்ந்திருக்கிறது.

படம் போட்டதற்கு ஒரு சிறப்பு நன்றி!!

நான் சென்ற போது, வீடியோவில் படமாக்கினேன். படமாக இல்லை.
தொடர் சுவையாக செல்கிறது.
கிடைக்கும் பாடல்களைச் சேர்க்கத் தவற வேண்டாம்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஆகா நீங்க இருக்கீங்களா?? உங்க புன்னகையே நீங்க நெனைக்கிறதச் சொல்லுதே.//

ஹிஹி...ஜிரா...என்ன இது விளையாட்டு?
புரமெரி பெருமான் புன்னகைக்குப் பொருள் காணும் ஜிரா, என் புன்னகைக்கும் பொருள் சொல்லப் போந்தாரோ? போந்து "எண்ணிக்" கொள்! :-)

முத்தமிழ் வித்தகர் குமரன், சொற்றமிழ் வித்தகர் ஜிரா, இவர்களிடம் தமிழறியாச் சிறுவன் ஐயம் கேட்டுத் தெளியத் தான் கேள்வியாகக் கேட்டேன் ஐயா! :-)

//என்ன நெனச்சு வாழ்த்துனீங்களோ.. :) வாழ்த்துக்கு நன்றி. பெரியவங்க வாழ்த்து..பெருமாள் வாழ்த்து :)//

இலக்கியத்தில் இறை - தொடரை நீங்கள் தொடர வேணும்; அதுக்குக் குமரன் தான் அருள் புரியணும் என்று நினைத்தேன்! ஆனா இந்தக் "குமரன்" அருள் புரிஞ்சிட்டாரா? அதுக்குத் தான் வாழ்த்தி மகிழ்ந்தேன்! :-)
அடியேன் இனியது கேட்கின் கேட்க வேண்டும்! அதுக்கு என்ன செய்யப் போறீங்க?

குமரன்
எருக்க மலர் ஈசனார்க்கு மிகவும் உகந்தது! யோகன் அண்ணா குறிப்பிட்ட கம்பரின் பாடல் "வெள்ளெருக்கம் சடைமுடியான் வெற்பெடுத்த திருமேனி" பாடலே சான்று!

வெண்ணிலாமிகு விரிசடை அரவொடு
"வெள்ளெருக்கு" அலர் மத்தம்
பண்ணில் ஆவிய பாடலோடு ஆடலர்
பயில்வுறு கீழ்வேளூர்ப் பெருமான் என்று ஞானசம்பந்தரும் சிவபிரானுக்கு வெள்ளெருக்கினைக் காட்டுகிறார்.

மண்ணில் மக்கள் ஒதுக்கும் அத்தனையும் ஈசன் ஏற்பது இயல்பு! அப்படியே வெள்ளெருக்கும்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

குமரன்...முடிபாக நான் எதுவும் சொல்லவில்லை!
ஆனால் நீங்கள் குறிப்பிட்ட கணங்களின் தலைவர், சங்கப் பாடல்களிலும் வருகிறார்!

குறுந்தொகைக்கு இறைவணக்கம் பாடிய பெருந்தேவனார் பாடல் இது!
ஓதவினை அகலும்; ஓங்கு புகழ் பெருகும்
காதற் பொருள் அனைத்தும் கைகூடும் - சீதப்
பனிக்கோட்டு மால்வரை மேல் பாரதப்போர் தீட்டும்
தனிக் கோட்டு வாரணத்தின் தாள்!

கபிலர் பாடிய பாடல் - இரட்டை மணி மாலை (பிற்காலக் கபிலராக இருக்கலாம்)
திருவாக்கும் செய்கருமமும் கைகூட்டும் செஞ்சொல்
பொருவாக்கும் பீடும் பெருக்கும் உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனைமுகத் தானைக்
காதலால் கூப்புவர் தம்கை

அகவல் பாடிய ஒளவையார், பிற்காலத்தவர். சுந்தரமூர்த்தி சுவாமிகள்-சேரமான் பெருமாள் நாயனார் காலத்தவர்!

இவற்றை எல்லாம் இன்னொரு நாள் பார்ப்போம்! இப்போது பாரிக்கு வருவோம்! எங்க விறலிக்கு பொன்னணி எப்போ கிடைக்கும்? :-)

குமரன் (Kumaran) said...

கம்பராமாயணச் செய்யுளை நினைவூட்டியதற்கு நன்றி யோகன் ஐயா. ஆமாம் வெள்ளெருக்கம் சடைமுடியான் பனிமலைக்குரியவன் தான் - அந்த வெற்பைத் தானே இராவணன் தூக்கினான். திருமேனி என்று இராவணனின் உடம்பை தெய்வீக உடம்பாகச் சொல்கிறாரே கம்பர் - 'ஒருவன்' வாளி துளைத்தவுடன் அரக்கனின் மேனியும் திருமேனி ஆயிற்று போலும்.

கிடைக்கும் பாடல்களை எல்லாம் கட்டாயம் சேர்க்கிறேன். புறநானூற்றிலிருந்து 20 பாடல்கள் கிடைத்தன. அவற்றை வைத்து இந்தக் கதையை எழுதுகிறேன். அகநானூறிலும் பாரியைப் பற்றிய செய்திகள் இருப்பதை அறிகிறேன். அங்கும் பாடல்களைத் தேடி எடுக்க வேண்டும். வவ்வாலும் நீங்கள் கேட்டுக் கொண்டதற்காக பாரி வள்ளலின் கதையை எழுதியிருக்கிறார். பார்த்தீர்களா தெரியவில்லை. நான் பார்த்தேன்; இனிமேல் தான் படிக்க வேண்டும். மேலோட்டமாகப் பார்த்ததில் பல கேள்விகள் தோன்றின.

குமரன் (Kumaran) said...

இரவிசங்கர். புரமெரிக்கும் பெருமானின் புன்னகை புரங்களை எரித்தது. உங்கள் புன்னகை என்னிடம் இருக்கும் முப்புரங்களை எரித்தால் நலம். :-) இராகவன் இரண்டையும் பாங்காக உணர்ந்து சொல்வார்.

என்னை நாடகம் போடுபவன் என்று சொல்வதற்காக வஞ்சப்புகழ்ச்சியாக முத்தமிழ் வித்தகர் என்று சொன்னீர்களோ?!

இராகவனும், யோகன் ஐயாவும், நீங்களும் எடுத்துக்காட்டும் செய்திகளை/செய்யுள்களைப் பார்த்தால் வில்வத்தை விட சிவபெருமானுக்கு உகந்தது வெள்ளெருக்கு தான் போல் தோன்றுகிறதே. :-)

கடவுள் வணக்கம் பாடியவர்கள் பிற்காலத்தில் பாடிச் சேர்த்தார்கள் என்று சொன்னாலும் அது கட்டாயம் பல்லவனுக்கு முன்னர் பல்லாண்டு முந்தைய காலமே. அந்த வகையில் பெருந்தேவனாரின் பாடல் சொல்லும் தனிக்கோட்டு வாரணம் வாதாபியிலிருந்து கணபதி வருவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் இருந்திருக்கிறார் என்று காட்டுகிறது.

எனக்குத் தோன்றுவது என்ன தெரியுமா? அந்தக் காலத்தில் படையெடுத்து வென்ற பிறகு எதிரி நாட்டில் இருக்கும் கலைச்செல்வங்களை எல்லாம் கொண்டு வருவது வழக்கம். அதே போல் வாதாபியிலிருந்து கணபதி சிலையைப் பரஞ்சோதியார் கொண்டு வந்திருக்கிறார். இந்த ஒரு செய்தியை வைத்துக் கொண்டு அது தான் முதன்முதலில் கணபதி தமிழகத்திற்கு வந்தது என்ற கதையாடலை உருவாக்கிவிட்டார்கள் என்று நினைக்கிறேன். அதனைத் தொடங்கியவர்களுக்கு சமய அரசியல் இருந்தது - வழி மொழிந்தவர்களுக்கு மொழி அரசியல் - இன்றும் சொல்லிக் கொண்டிருப்பவர்களுக்கு வேறு வகையான அரசியல். அரசியலில் அகப்பட்டுவிட்டால் எந்த கருத்தாக்கமும் புதிய செய்திகளையோ மாற்றுச் செய்திகளையோ ஏற்றுக் கொள்ளாது. பரஞ்சோதியார் காலத்திற்கு முன்பே பல இலக்கியங்களில் வாரண முகத்தானைப் பற்றிய செய்தி இருக்கிறது என்று காட்டினாலும் அவர்கள் அரசியலுக்கு அது ஏற்புடைத்தில்லாதால ஏற்க மாட்டார்கள்.

உங்க விறலிக்குப் பொண்ணனி கிடைத்து விட்டதே! அவர் 'மகிழ்ச்சி மகிழ்ச்சி' என்று கூவியது கேட்கவில்லையா? அடுத்து கபிலர் சென்ற வழியைத் தொடர்ந்து செல்ல வேண்டியது தான்.

அரை பிளேடு said...

பாடல் விளக்கங்கள் நன்று.

வாதாபி இருந்து வந்தவனா என்பதே வாதத்திற்கு உரியதுதான்.

அப்படியானால் முருகனுக்கு வள்ளியைத் திருமணம் செய்வித்த ஆனைமுகன் ஆரோ. :)

தி. ரா. ச.(T.R.C.) said...

உள்ளேன் ஐயா

குமரன் (Kumaran) said...

நன்றி அரைபிளேடு. வள்ளியை முருகனுக்கு மணம் புரிவிக்க வந்த ஆனைமுகனைப் பற்றி கந்த புராணம் தான் சொல்கிறது; அது காலத்தால் பிந்தையது; அதற்கு முன்னர் அந்தக் கதை இல்லை என்று சாதிப்பார்கள். அவ்வளவு தானே? :-)

குமரன் (Kumaran) said...

நன்றி தி.ரா.ச.

பாச மலர் / Paasa Malar said...

//எத்தனை நுட்பமான பார்வை. இயற்கையுடன் இணைந்திருந்து வாழ்ந்திருந்தால் தான் இப்படி எல்லாம் பாட முடியும்//

இது போன்ற உங்கள் நுட்பமான பார்வையில் படும் பல சங்கதிகளின் பதிவுகள் எங்கள் தேடல்களுக்குத் தீனி போடுகின்றன..பாடல்களின் விளக்கம்..அருமை.

G.Ragavan said...

// குமரன் (Kumaran) said...
நன்றி அரைபிளேடு. வள்ளியை முருகனுக்கு மணம் புரிவிக்க வந்த ஆனைமுகனைப் பற்றி கந்த புராணம் தான் சொல்கிறது; அது காலத்தால் பிந்தையது; அதற்கு முன்னர் அந்தக் கதை இல்லை என்று சாதிப்பார்கள். அவ்வளவு தானே? :-) //

:) அப்படிச் சாதிப்பதற்கு நீங்கள் என்ன சொல்கின்றீர்கள் குமரன்?

குமரன் (Kumaran) said...

பாராட்டிற்கு நன்றி பாசமலர்.

குமரன் (Kumaran) said...

நான் சொல்ல என்ன இருக்கிறது இராகவன். கந்த புராணத்திற்கு வெகு காலத்திற்கு முன்னரே அந்தக் கதை இருக்கிறது என்பது தற்போதைக்கு என் 'நம்பிக்கை'. தகுந்த தரவுகள் கிடைக்கும் போது அவற்றை இலக்கியத்தில் இறை தொடரில் வைக்கிறேன். கிடைக்கும் தரவுகளின் படி என் நம்பிக்கை உறுதிபடுத்தப்படலாம் அல்லது மாறலாம். எதுவானாலும் எனக்கு ஏற்புடைத்தே.

Geetha Sambasivam said...

//அந்தக் கடவுள் பேர் என்ன குமரன்?
அந்தக் கடவுள் கபிலர் காலத்தில், தமிழ்நாட்டில் வழக்கத்தில் இருந்தார் போல இருக்கே? :-) //


எப்படி இருந்தால் என்ன? இப்போ இவர் தான் அருமைத் தோழர், எல்லாப் பிரச்னைகளையும் இவரிடம் சகஜமாய்ச் சொல்லிச் சண்டை போட்டாலும் நட்போடு தான் இருக்கிறார். :))))))))

வாதாபிக்கு முன்னாலேயே வந்தவர்னு தான் நானும் கேள்விப் பட்டேன், :)))))))

தி. ரா. ச.(T.R.C.) said...

ஆனை முகனுக்கும் அவன் பிறந்த நாள் அன்று எருக்கமாலை அணிவிப்பது வழக்கம்

குமரன் (Kumaran) said...

ஆமாம் கீதாம்மா. குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை எல்லோருக்கும் முதலில் பிடிக்கும் நண்பர் இந்தப் பிள்ளை தான்.

குமரன் (Kumaran) said...

ஆமாம் தி.ரா.ச. எங்கள் வீட்டிலும் அப்படி தான். வேற பூமாலை போடறோமோ இல்லையோ எருக்கு மாலை கட்டாயம் உண்டு பிள்ளையார் சதுர்த்தி அன்று.

மெளலி (மதுரையம்பதி) said...

பதிவையும் படிச்சேன், பின்னூட்டங்களையும் படிச்சேன்.

அரளியும் பாலை சார்ந்த பூ தானே?. கொற்றவைக்கு அரளி சிறப்பாச்சே?.

குமரன் (Kumaran) said...

அரளி பாலை சார்ந்த பூவான்னு தெரியாது மௌலி. ஆனா அது கொற்றவைக்கு உகந்ததுன்னு தெரியும்.

குமரன் (Kumaran) said...

வரலாறு.காம் வலைப்பக்கத்தில் திரு.இரா.கலைக்கோவன் அவர்கள் எழுதிய ஒரு கட்டுரையை இன்று படித்தேன். அதில் இந்த இடுகையில் இருக்கும் பாடலைப் பற்றி பேசியிருக்கிறார்.

----

'நல்லவுந் தீயவும் அல்ல குவியிணர்ப் புல்லிலை எருக்கமாயினும் உடையவை கடவுள் பேணேம் என்னா' என்னும் புறநானூற்றுப் பாடலடி (106) கொண்டு, அதன் பொருளை உணர்ந்தும் உணரார் போல சிலர் சங்க காலத்தில் பிள்ளையார் வழிபாடு இருந்ததாகக் கூறுவது பிழையாகும்(6). 'நல்லதென்றும், தீயதென்றும் வகைப்படுத்த இயலாத எருக்கம்பூ தரினும் தெய்வங்கள் அவற்றை மறுப்பதில்லை' எனும் பொருளமைந்த இப்பாடல், தெய்வங்களின் சார்பற்ற தன்மையைச் சுட்டுகிறதே தவிர, பிள்ளையார் வழிபாட்டை அல்ல. எருக்கம்பூ, சிவபெருமானால் விரும்பிச் சூடிக்கொள்ளப்பட்ட பூவாக அப்பர் பெருமானால் சுட்டப்படுவது நோக்க(7), பின்னாளிலேயே இது பிள்ளையாருக்கு உகந்த பூவாக மாற்றப்பட்டமை தெளிவாகும். எவ்வித அடிப்படைச் சுட்டலும் இல்லாத இப்பாடலடி கொண்டு, பிள்ளையார் வழிபாடு சங்க காலந்தொட்டே இருந்தது எனக்கூறுவார் கூற்று எவ்விதத்தானும் உண்மையாகாமை கண்கூடு.

---

மேலும் படிக்க இந்தப் பக்கத்தைப் பாருங்கள்.

http://www.varalaaru.com/Default.asp?articleid=575