Friday, January 18, 2008

புல்லாகிப் பூண்டாகி - மதுரையம்பதியின் விமர்சனம்

நான் சில வருடங்கள் முன்புவரை கிடைத்த எல்லா புத்தகங்களையும்
படித்துவந்தாலும், தற்போது ரொம்ப செலக்டிவாகவே படிக்கிறேன், அதிலும்
இணையத்தில் கேட்கவே வேண்டாம். திரட்டிகளில் எனக்கு பரிச்சயம் ரொம்பவே
கம்மி. இவ்வாறாகிய சூழலில் இணைய படிப்புகளில் மிக முக்கியமாக நான் கூகிள்
ரீடரில் வைத்திருக்கும் சிலரில் குமரனும் ஒருவர். அவரது அபிராமி அந்தாதி
பதிவுகளாகட்டும், கூடல் பதிவுகளாகட்டும், படித்த்து ஒரு பின்னூட்டம்
இடாது செல்வதில்லை. இதன் காரணமாகவே அவர் என்னையும் 'புல்லாகி-பூண்டாகி'
கதைக்கு விமர்சனம் எழுத அழைத்திருக்கிறார் என்று நினைக்கிறேன். அவர் கதை
ஆரம்பத்திலேயே அழைத்தாலும், என்னால் தொடர்ந்து படிக்க இயலாத சூழல்,
சற்றேரக் குறைய 15 நாட்கள் இணைய தொடர்பில்லாத நிலை. எல்லாம் முடிந்து
வந்து பார்த்தால் பல இணைய ஜாம்பவான்கள் தமது விமர்சனங்களை மிக தெளிவாக
தந்திருக்கிறார்கள். இவற்றையெல்லாம் மீறி நான் என்ன பெரிதாக சொல்லிவிடப்
போகிறேன் என்று தெரியவில்லை. ஆனாலும், குமரன் கேட்டுக் கொண்டபடி,
அவருக்களித்த வாக்கின்படி இதனை எழுதுகிறேன்.

மிகையான அலங்காரங்கள் இல்லாத பாத்திர அறிமுகம் முதல் பகுதியில். ஆனால்
அங்கேயே பெரியவர் கந்தனை மோகன் என்று பெயர் மாற்றம் செய்வதை கோடிட்டுக்
காட்டி அந்த குழப்பத்தை கந்தன் மனதிலும், வாசிப்பாளர் மனதிலும் விதைத்து
பின் கடைசிப் பகுதியில் அதன் காரணத்தை தெளிவாக்கியிருக்கிறார். இதனை கதை
சொல்லும் உத்தி என்றாலும், முதல் 3-4 அத்தியாங்களில் நான் குழம்பியது
என்னமோ உண்மை.
மற்றபடி குமரனின் மற்ற பதிவுகளை படிக்காத ஒருவர் இந்த கதையை மட்டும்
படித்தாலும் உணரும்படியாக முதல் அத்தியாயத்திலேயே இது ஒரு ஆன்மிக கதை
என்று கட்டியம் கூறும்படி அமைத்தது அழகே.

கோவிலைக் கண்டவுடன் உள்ளே நுழைய நினைக்கும் கந்தனது செயலை சொல்வதன்
முலமாக இரண்டாம் அத்தியாயத்திலேயே கந்தனது முந்தைய பிறவி எச்சங்களை
நமக்கு எடுத்துச் சொல்ல விழைகிறார் ஆசிரியர். ஆனாலும் நமக்கு கடைசி
அத்தியாயத்தை படித்தபின்பே அதனை உணர முடிகிறது. மூன்று மற்றும் ஐந்தாம்
அத்தியாயங்களில் கந்தன் உருவில் மனித மனத்தின் அலைபாயும் ஆசா-பாசங்களை
நன்றாக வார்த்தையாகளாக்கியுள்ளார். அதே சமயத்தில் பெரியவர் மூலமாக
தான-தரும செயல்களை ஊக்குவிக்கும் முகமாக சொல்லியிருப்பது இந்துமதக்
கோட்பாடுகளை அழகாக நடைமுறைப்படுத்த விழையும் செயல். நான்காவது அத்தியாயம்
முழுதும் கிரிவலத்திற்கு நம்மை கைப்பிடித்து அழைத்துச் செல்வதாக
இருக்கிறது. பின்னூட்டத்தில் சிலர் கூறியது போல, இதுவரை திருவண்ணாமலை
செல்லாதவர்களுக்கு நான்கு மற்றும் ஐந்தாம் அத்தியாயம் ஒரு வரப்பிரசாதம்.
திருவண்ணாமலை செல்லும் சமயத்தில் அவர்கள் இந்த பதிவுகளை துணைக்கு
வைத்துக் கொள்ளலாம். ஐந்தாவது பதிவில் ரமணர் மற்றும் சேஷாத்திரி
ஸ்வாமிகளைப் பற்றியும் சொல்லி திருவண்ணாமலை தரிசனத்தை முழுதாக்குகிறார்.

8ஆம் பதிவு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஏதோ அருகிலிருந்து
பார்த்ததைப் போல் எழுதியிருந்தார் என்றால் மிகையாகாது. கல்லில்
ஆரம்பித்துவிட்டார் என்றால் அடுத்ததாகவே வந்துவிட்டது மரம். இச்சமயத்தில்
திரு. கே.ஆர்.எஸ் அவர்களும் நானும் சாட் செய்து, அடுத்து எப்படி
தொடருவார் என்று சிறு விவாதம் செய்தோம். பழனியப்பனும், போகரும் நன்றாகவே
கடம்ப மரத்தை வாழ்த்தினர். நவ பாஷாணத்தை பற்றிக் கூறி, கூட்டப்பட்ட அந்த
பாஷாணங்களின் சிறப்பினைச் சொல்லியிருப்பது ஆசிரியரின் பழனி பற்றிய
அறிவினை மட்டும் சொல்லாது, தற்காலத்தில் ஆங்கில மருத்துவத்தில்
நாகத்திடமிருந்து விஷமெடுத்து அதனை பாம்புக் கடிக்கு மருந்தாக்குவதை
நினைவில் கொண்டுவருகிறது.

புள்ளரசன் வடிவில் அழகாக எல்லோருக்குள்ளூம் இருக்கும் இறையருளை நன்கு
சொல்லியிருக்கிறார், நரசிம்மதாசன் வடிவில் எல்லா இறையடியார்களும் என்ன
பிரார்த்தனை செய்வார்களோ அதனை முத்தாய்ப்பாக சொல்லி பக்தி எதனை
நோக்கியதாக இருக்க வேண்டும் என்று குறிப்பால் உணர்த்திவிட்டார். கிருஷ்ண
பிரேமை என்பது எந்த அளவிற்கு இருக்கக் கூடும் என்பதற்கு நரசிம்மதாச
பாத்திரம் மிக அழகான படைப்பு. இந்த கதையினை படிக்கையில் எனக்கு கோபிகைகள்
கிருஷ்ணனின் தலைவலிக்கு மருந்து தந்ததை நினைவுபடுத்தியது. பக்தி
மார்க்கத்தின்
ஒன்பது விதங்களை அழகாக எடுத்தாண்டிருக்கிறார். நாயக-நாயகி பாவம் என்பதை
மாதுர்ய பக்தி என்று சொன்னாலும், மாதுர்ய பக்தி பற்றி இன்னும் கொஞ்சம்
விவரித்து சொல்லியிருக்கலாமோ?. அதெப்படி நாயக-நாயகி பாவம் மாதுர்யமாக
தெரிகிறது என்ற விளக்கம் சிறிது அதிகமாக இருந்திருக்கலாம். கதைமூலமாக
வாசகர்களுக்கு பல ஆன்மிக செய்திகளை தந்த ஆசிரியர் இதனை விளக்குவதன்
மூலமாக வாசகர்களுக்கு ஒரு அதிகப்படியான செய்தியினை கொண்டு
சேர்த்திருக்கும் என்று தொன்றுகிறது.

ஜகன்மோகனுக்குச் சொல்வதாக அமைந்த வாசனை பற்றிய உபதேசம், என் போன்ற
வாசகர்களுக்கு சற்றே சிந்தனையைத் தூண்டி எனது செயல்களை திரும்பிப்
பார்க்க வைத்தது என்றால் மிகையாகா. ஆனாலும், பஞ்ச கோசங்களை உணர்ந்த ஒரு
ஞானிக்கு இந்த வாசனை பற்றிய விளக்கமும், ராமகிருஷ்ணர் போன்றவர்களின்
நிலையும் எப்படி புரியாது போனது என்பதை நினைத்தால் ஆச்சரியமாக
இருக்கிறது. ஆசிரியர் நரசிம்ம தாசனுக்கு வரவேண்டிய கேள்விகளை இங்கு
கொண்டுவந்துவிட்டார் என்றே எண்ணத் தோன்றுகிறது. அதாவது, முந்தைய நிலைக்
கேள்விகள், இவற்றைக் கடந்தபின்பே ஒரு ஞானி ஒருவாகிறான். இந்த கேள்விகள்
முழுதான பக்தி மார்க்கத்தவருக்குச் சரியே, ஆனால் பக்தி மார்க்கத்தை
கடந்து, ஞான மார்க்கத்தில் பஞ்ச கோசங்களை உணர்ந்து, முற்பிறப்பின் வாசனை
பற்றிய ஞானம் கைவரப் பெற்ற ஒரு ஆன்ம சாதனையாளனுக்கு இக் கேள்விகள்
தகுந்தவை அல்ல என்றே தோன்றுகிறது.

இன்டிகேட்டரும் கன்ட்ரோலரும் நன்றாக உபயோகம் ஆகியிருக்கிறது.
தெரிந்தவற்றை வைத்து தெரியாததை புரிய வைக்க முயல்வது இயல்புதான்
என்றாலும், இந்த எடுத்துக்காட்டு கொஞ்சம் வித்தியாசமாக அதே சமயம்
பாராட்டும் விதமாகவே அமைந்துள்ளது. கீதையின் நான்காவது அத்தியாயம்
நன்றாகவே எடுத்தாளப்பட்டிருக்கிறது. ஜாதகம், கைரேகை போன்ற ஆன்மிகத்தின்
அடுத்தடுத்த பக்கங்களையும் மேலோட்டமாக தொட்டுச் சென்றது போல இருப்பினும்,
கதாசிரியர் தனது நிலைப்பாட்டினை உணர்த்தியே சென்றுள்ளதாக தெரிகிறது.

எல்லாவற்றையும் சொல்லி படங்களையும், எடுத்தாண்ட பாடல்களையும் சொல்லாது
விட்டால் இந்த விமர்சனம் முழுமையாகாது. எப்படித்தான் பொறுமையாக இவ்வளவு
படங்களை தேர்ந்தெடுத்தாரோ தெரியவில்லை. அத்தனையும் தொடருக்கேற்ற அருமையான
படங்கள் மற்றும் பாடல்கள்.

எல்லாம் இருப்பினும் எனக்குள் ஒரு கேள்வி, ஆசிரியர் ஏன் கீத
கோவிந்தத்தையும், சைதன்யரையும் எடுத்துக் கொண்டார்?, ஏன் நமது புரந்தர
தாஸரையோ இல்லை ஊத்துக்காடு வெங்கட சுப்புவையோ எடுத்தாளவில்லை?. அதே போல
ரமணர் மற்றும் வள்ளலார் போன்றோரை விடுத்து ஏன் தோதபுரி?.

மதுரையம்பதி

6 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஆனாலும், பஞ்ச கோசங்களை உணர்ந்த ஒரு ஞானிக்கு இந்த வாசனை பற்றிய விளக்கமும், ராமகிருஷ்ணர் போன்றவர்களின்
நிலையும் எப்படி புரியாது போனது என்பதை நினைத்தால் ஆச்சரியமாக
இருக்கிறது//

மெளலி அண்ணா
அங்க தான் பஞ்ச்!
பஞ்ச கோசங்களை உணர்ந்த ஞானி, அதைத் தன்னளவில் உணராமல், பிறர் நிலையில் இருந்து உணர்கிறார். அதனால் தான் தடுமாற்றம் காண்கிறார்! ஞானத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள பக்தி என்னும் வைராக்கியம் தேவைப்படுது போல! :-)

அவர் சொன்னது நரசிம்மதாசனுக்கு வரவேண்டியவை அல்ல! ஜகன் மோகனுக்குத் தான்! குமரன் சரியாகத் தான் கையாண்டுள்ளார்.

தி. ரா. ச.(T.R.C.) said...

என்னை பிளாக் உலகிற்கு அறிமுகபடுத்தியவரும், அதன்பின் எழுத ஆரம்பித்தபிறகு என்னை எழுத்தை நெறிமுகப் படுத்தியவரும் என்னால் குருஸ்தானத்தில் வைக்கப்பட்டவரும் என்னால் ஷண்மதச்செலவன் பட்டம் பெற்றவரும் திரு.குமரான்தான்



இவ்வாறாகிய சூழலில் இணைய படிப்புகளில் மிக முக்கியமாக நான் கூகிள்ரீடரில் வைத்திருக்கும் சிலரில் குமரனும் ஒருவர். அவரது அபிராமி அந்தாதிபதிவுகளாகட்டும், கூடல் பதிவுகளாகட்டும், படித்து ஒரு பின்னூட்டம்இடாது செல்வதில்லை. இதன் காரணமாகவே அவர் என்னையும் 'புல்லாகி-பூண்டாகி' கதைக்கு விமர்சனம் எழுத அழைத்திருக்கிறார் என்று நினைக்கிறேன். அவர் கதைஆரம்பத்திலேயே அழைத்தாலும், என்னால் தொடர்ந்து படிக்க இயலாத சூழல்,சற்றேரக் குறைய 15 நாட்கள் இணைய தொடர்பில்லாத நிலை. எல்லாம் முடிந்துவந்து பார்த்தால் பல இணைய ஜாம்பவான்கள் தமது விமர்சனங்களை மிக தெளிவாக தந்திருக்கிறார்கள். இவற்றையெல்லாம் மீறி நான் என்ன பெரிதாக சொல்லிவிடப்போகிறேன் என்று தெரியவில்லை. ஆனாலும், குமரன் கேட்டுக் கொண்டபடி,அவருக்களித்த வாக்கின்படி இதனை எழுதுகிறேன்.(நன்றிமௌளி) இதையே என் முன்னுரையாக வைத்து இதோ என் விளக்கம்.



புல்லாய் பிறவிதர வேனுமே கண்ணா புனிதாமான பல கோடி பிறவி தந்தாலும் பிருந்தாவனமதில் புல்லாய் பிறவிதர வேனுமே என்று பாடினார் ஊத்துக்காடு வேங்கடகவி.அந்தப் புல்லையே தலைப்பின் ஒரு பகுதியாக வைத்து கதையை 14 அத்தியாயங்களாய் பிரித்து அருமையாக ஒரு ஷேத்திராடனமாக நம் அனைவரையும் கூட்டிக்கொண்டு போகும் கதையாக எழுதினார்."ஆகா. ஆகா. இன்னும் ஐநூறு பிறவிகள். ஐநூறு பிறவிகள். பின்னர் தான் கண்ணனை அடைவேன்"இப்படி ஒரு பைத்தியமா என்று எல்லோரும் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்இதைப்படித்தவுடன் புழுவாய் பிறக்கினும் புண்ணியா உன்அடி என் மனத்தே வழுவாதிருக்க வேண்டும் வரிகள் ஞாபகம் வந்தது



முதல் அத்தியாயத்தில் கந்தானாக தன்னையே பாவித்து எழுதியதாக எனக்குப்பட்டது. க்ளு இங்கேதான்" வீட்டுச் சாப்பாடு கேசவன் வீட்டில் கிடைக்கவே அடிக்கடி கேசவன் வீட்டிற்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுவிட்டான். சரியான சாப்பாட்டு ராமன்"

முதல் அத்தியாயம் தொடங்கி ஏழு அத்தியாயங்கள் வரை திருவண்ணமலை மகிமை கதையின் ஓட்டத்துடன் இணைந்து செல்கிறது. பௌர்ணமி அன்று கிரிவலம் சென்றால் என்னெவெல்லாம் பார்க்கமுடியுமோ பார்க்கவேண்டுமோ

அத்தனையும் வரிசையாக விளக்கிச் சொல்லியிருக்கிறார். ஏழு அத்தியாயங்கள் சிவனுக்காக ஒதுக்கியிருக்கிறார் திருவண்ணாமலைக்கு செல்லும் எண்ணத்தை வெளிக்கொணர்ந்த பதிவு. நானும் ரமண மகரிஷியை குறிப்பிட்டு பின்னுட்டமும் இட்டிருந்தேன் அம்போஜ சம்பவனும்ம்(பிரும்மாவும்) அன்பான மாயவனும் அடிமுடி காணா அண்ணாமலைவாசன் அருமையாண பதிவு.



அடுத்த எட்டாவது அத்தியாயம் வைகுந்தவாசனை போற்றி எழுதியது. சுகரும் வருகிறார். சுக பிரும்மம்யார் தெரியுமா? வேதவியாசரின்

மகன் பராசரர் அவரின் மகன்தான் சுகபிரும்மம். அவருக்கு பிரும்மம் என்ற பட்டம் எப்படி வந்தது? சுகரை ஜனகமகாரிஷியிடம் பாடம் படிக்க(சீதையின் தந்தை) அவரின் தந்தை அனுப்புகிறார். வரும் சுகர் அரன்மனைக்கு வெள்ளியில் இருக்கும் மல்ர்தோட்டத்தை பார்க்கிறார், பின்பு அங்கு வாயிலில்இருக்கும் யாணையைப் பார்க்கிறார்,வாயில் காப்போனிடம்

வழிகேட்கிறார், வழியில் செல்லும் பெண்களைப் பார்க்கிறார், பின்பு படியின் மீது ஏறிச் சென்று ஜனகமகா ராஜனைப் பார்க்கிறார். சுகரை சிஷ்யனாக ஏற்றுக்கொள்ளலாமா வேண்டாமா என்று அவரை சோதிக்கும் வண்ணம் கேட்கிறார். இங்கு வந்தது முதல் நீ என்ன பார்த்தீர்கள் என்று கேட்டார். சுகர் சொன்னார்.

வரும்போது மலர்கள்பிரும்மத்தைப் பார்த்தேன்,காவலன்பிரும்மத்திடம் வழி கேட்டு யாணை பிரும்மத்தின் அழகை ரசித்து, பெண்கள் பிரும்மத்தை பார்த்துகொண்டே, படிகள்பிரும்மத்தின்ன்மீது ஏறி, ஜனக பிரும்மத்தை பார்த்தேன் என்றார்.உடனே ஜனகமகா ரிஷி சொன்னார் உனக்கு பாடம் சொல்ல எனக்குத் தகுதியில்லை அசையும் பொருள் அசையாப் பொருள் ஆண், பெண், மிருகம்,செடி, மலர், எல்லாவற்றையும் அந்த பிரும்மாகவே( கடவுளாகவே) பார்க்கும் எண்ணம் உள்ள நீங்கள் சுகப்பிரும்மம் என்று அழைக்கப்படிவீர்கள் என்றார். அப்பேற்பட்ட சுகரை கதையில் கொண்டுவந்தார். பின்னர் அடுத்த அத்தியாயத்தில் மால் மருகனை
பிறகு 9 10 வதில் பழனி முருகனையும் போகரின் வைபவத்தையும்,பருந்துகளின்
தன்மையையும் தஞ்சை கோவிலையும் விளக்கினார்.

11ஆம் 12ஆம் பகுதியில் நரசிம்ஹதாசனையும் ராமகிருஷ்ணபரம்ஹம்ஸரையும் காளி கோயிலையும்
நேராகவே பார்க்கும் வண்ணம் அளித்தார் கடைசியில் ஆரம்பித்த இடத்துக்கே வந்து எல்லா முடிச்சையும் அவிழ்த்து கதையை பூர்ணம் செய்தார்
போட்ட படங்களும் அருமை. நல்ல கதையையும் கருத்தையும் அளித்த கந்தன் சாரி குமரன் நன்றி. தாமதத்திற்கு மன்னிக்கவும்.

மெளலி (மதுரையம்பதி) said...

நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும் கே.ஆர்.எஸ்.

Geetha Sambasivam said...

//அவர் சொன்னது நரசிம்மதாசனுக்கு வரவேண்டியவை அல்ல! ஜகன் மோகனுக்குத் தான்! குமரன் சரியாகத் தான் கையாண்டுள்ளார்.//

உண்மை, கண்ணபிரான், இன்னும் என்னைப் போன்றோருக்கு இந்த அறிவு கொஞ்சம் தான், அல்லது இல்லவே இல்லை என்ற நிலையே! :(

அருமையாக விமரிசனம் செய்திருக்கிறீர்கள் மெளலி.

ஜீவி said...

மதுரையம்பதி
//8ஆம் பதிவு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஏதோ அருகிலிருந்து
பார்த்ததைப் போல் எழுதியிருந்தார் என்றால் மிகையாகாது. கல்லில்
ஆரம்பித்துவிட்டார் என்றால் அடுத்ததாகவே வந்துவிட்டது மரம்.//
மதுரையம்பதி,
உங்கள் விமரிசனம் நன்றாகவே அமைந்து விட்டது. ஆழ்ந்து ரசித்து அழகாக எழுதியிருக்கிறீர்கள்.


தி.ரா.ச.வின் கருத்து.
//அந்தப் புல்லையே தலைப்பின் ஒரு பகுதியாக வைத்து கதையை 14 அத்தியாயங்களாய் பிரித்து அருமையாக ஒரு ஷேத்திராடனமாக நம் அனைவரையும் கூட்டிக்கொண்டு போகும் கதையாக எழுதினார்.//
தி.ரா.ச.,
உங்களுக்கு ஏற்பட்ட இந்த உணர்வு எனக்கும்

ஏற்பட்டது.

மெளலி (மதுரையம்பதி) said...

கீதாம்மா & ஜீவி சார்,
நான் எழுதிய முதல் விமர்சனக் கட்டுரை இது. உங்களூக்கும்,
குமரனுக்கும் நன்றி. :)