Saturday, January 28, 2006

136: *நட்சத்திரம்* - தமிழா? ஆரியமா?

இந்தக் கேள்வி என் முன் அடிக்கடி வைக்கப்படுகிறது. தமிழார்வம் கொண்டவர்கள் எல்லாருக்கும் வடமொழி பிடிக்காது; பிடிக்கக்கூடாது என்ற ஒரு எண்ணம் தமிழக மக்களிடம் இருக்கிறது. அது ஓரளவுக்கு உண்மையும் கூட. தனித்தமிழ் இயக்கத்தின் பின், வடமொழியின் மேல் ஒரு இனம் தெரியாத வெறுப்பு தமிழர்களிடம் இருப்பதாய் தோன்றுகிறது. வடமொழியை வெறுக்காத தமிழார்வலர்களும் வடமொழியைக் கற்கவோ அதில் சொல்லப்பட்டிருப்பதை மொழிபெயர்ப்பின் மூலம் படிக்கவோ அவ்வளவாய் விருப்பம் இல்லாதவர்களாகத் தான் இருக்கிறார்கள். அதனால் இந்தக் கேள்வியை என்னிடம் கேட்பவர்கள் ஒரு அர்த்தத்துடன் தான் கேட்கிறார்கள்.

இந்தக் கேள்விக்குப் பதில் கூறும் போது என் பின்புலத்தைக் கூறுவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. தமிழ்மணத்திலும் சில நண்பர்கள் இந்தக் கேள்வியை நேரடியாகவும் மறைமுகமாகவும் கேட்டிருக்கிறார்கள். அதனால் என் பதிலை இங்கும் பதிவாய் இடுகிறேன்.

மதுரைவாழ் மக்களில் மூன்றில் ஒரு பங்கினர் சௌராஷ்ட்ரர் என்று தம்மைக் கூறிக்கொள்ளும் தமிழல்லாத ஒரு மொழியைத் தாய்மொழியாய்க் கொண்டுள்ள ஒரு குழுவினர். இவர்கள் தமிழ்நாடு முழுவதிலும் இருந்தாலும், மதுரையில் தான் பெரும்பான்மையினராய் வசிக்கின்றனர். வீட்டில் சௌராஷ்ட்ரத்தில் பேசினாலும், வெளியே தமிழில் பேசி நிறைய பேர் மிக்கத் தமிழார்வத்துடன் நிறையத் தமிழ் தொண்டு ஆற்றிக்கொண்டிருக்கின்றனர். இவர்களுக்குத் தமிழ் இரண்டாம் தாய்மொழி. தமிழனாய்ப் பிறந்து தமிழனாய் வாழும் ஒரு தமிழனுக்கு இணையான தமிழ்ப்பற்று இந்த மக்களிடம் காணலாம்.

நான் பிறந்தது ஒரு சௌராஷ்ட்ர குடும்பத்தில் தான். வீட்டில் இப்போதும் சௌராஷ்ட்ரத்தில் தான் பேசிக்கொண்டிருக்கிறேன். தமிழில் உள்ள ஆர்வம் போல் சௌராஷ்ட்ரர்களுக்கு ஆன்மிகத்தில் பெரும் ஆர்வம். நான் பள்ளியில் படிக்கும் போதும் கல்லூரியில் படிக்கும் போதும் என் நண்பர்களுடன் பொழுது போகவில்லையென்றால் மீனாட்சி அம்மன் கோவிலுக்குத் தான் போவோம். வாரத்தில் குறைந்தது மூன்று முறையாவது சென்று விடுவோம். அந்த ஆன்மிக ஈடுபாடும் தமிழார்வமும் தான் சிறுவயதில் இருந்தே தமிழ் இலக்கியங்களைப் படிப்பதில் என் கவனத்தைச் செலுத்தியது. நான் நான்கு வயதாக இருக்கும் போதே கந்தர் சஷ்டி கவசத்தை மனப்பாடமாகச் சொல்வேன் என்று என் பெற்றோர்களும் மற்றவர்களும் சொல்லியிருக்கிறார்கள். உறவினர்கள் என்னைப் பார்க்கும் போதெல்லாம் கந்தர் சஷ்டி கவசத்தைச் சொல்லச் சொல்லிக் கேட்டது எனக்கும் சற்று நினைவிருக்கிறது. அப்படி தமிழில் ஏற்பட்ட ஈடுபாடு எனக்குத் தமிழ் சொல்லித்தந்த ஆசிரியர்களாலும் வளர்ந்தது.

ஏழாம் வகுப்பில் எனக்குத் தமிழ் சொல்லித்தந்தவர் சுரேந்திரன் ஐயா அவர்கள். தமிழை எவ்வளவு அழகாகச் சொல்லிக்கொடுக்க முடியும் என்பதை அவரைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். அவர் ஒரு சௌராஷ்ட்ரர். நிறைய பட்டிமன்றங்களில் கலந்து கொண்டு 'பட்டிமன்றத் தென்றல்' என்றப் பட்டம் பெற்றவர்.

பின்னர் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை எனக்குத் தமிழாசிரியராய் வந்தவர் சக்திவேல் ஐயா. தமிழர். தமிழின் அழகை, தமிழின் இனிமையை சுரேந்திரன் ஐயா சொல்லிக் கொடுத்தார் என்றால், தமிழின் நுண்மையை தமிழின் பழமையை மற்றவர் தமிழில் செய்யும் தவறுகளை மிக நன்றாய்ச் சொல்லித்தந்தவர் சக்திவேல் ஐயா. இவர்கள் இருவருமே என் மேல் தனிப்பாசம் கொண்டு என் சந்தேகங்களுக்கு எல்லாம் மிகத் தெளிவாய் விளக்கம் கூறி என் தமிழறிவை நன்கு வளர்த்தார்கள்.

ஆன்மிகத்தில் எனக்கு இருந்த ஈடுபாடு சமஸ்கிருதத்தில் உள்ள புத்தகங்களைப் படிப்பதில் எனக்கு ஆர்வத்தை ஊட்டியது. சிறிது சிறிதாக சமஸ்கிருதத்தின் அழகையும் அனுபவிக்க ஆரம்பித்தேன். தமிழை முறையாகப் பள்ளியில் கற்றது போல் வடமொழியைக் கற்கவில்லை. தமிழிலோ ஆங்கிலத்திலோ மொழிபெயர்ப்புடன் கூடிய வடமொழி புத்தகங்களையே படித்தேன். அப்படிப் படித்ததில் வடமொழியில் சிறிது புலமை ஏற்பட்டது. வடமொழி ஆர்வம் சில புதிய நண்பர்களைக் கொண்டுவந்து சேர்த்தது. இப்படி நம் நாட்டின் செம்மொழி இரண்டின் மேலும் எனக்கு ஆர்வம் ஏற்பட்டது.

இந்தப் பின்புலத்தின் என்னிடம் கேட்கப்படும் 'உனக்கு தமிழ் அதிகமாய்ப் பிடிக்குமா? சமஸ்கிருதம் பிடிக்குமா?' என்ற கேள்விக்கு நான் கூறும் பதில், 'எனக்கு இரண்டு மொழிகளும் இரண்டு கண்களைப் போன்றவை. கண்களில் எதை அதிகமாய்ப் பிடிக்கும் என்று சொல்வது. இரண்டும் பிடிக்கும்' என்பதே.

சில நண்பர்களால் இந்தப் பதிலை ஏற்றுக்கொள்ள முடிகிறது. சில நண்பர்களால் இதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதையும் பார்த்திருக்கிறேன். வடமொழியே மூத்த மொழி; முதன்மையான மொழி; உயர்ந்த மொழி என்ற எண்ணம் கொண்ட நண்பர்களுக்கு தமிழை வடமொழிக்கு இணையாக நான் கூறுவது பிடிப்பதில்லை. தமிழில் ஈடுபாடு கொண்டு வடமொழியை வெறுக்கக் கற்றுக்கொண்ட நண்பர்களுக்கு வடமொழியை தமிழுக்கு இணையாக நான் சொல்வது பிடிப்பதில்லை. ஆனால் அதற்கு நான் என்ன செய்வது? எனக்கு இரண்டும் பிடித்திருக்கிறது. மதுரையில் பிறந்தததால் தமிழார்வம் வந்தது. சௌராஷ்ட்ரனாய்ப் பிறந்ததால் வடமொழியின் மேல் வெறுப்பு வரவில்லை. ஆன்மிகம் வடமொழியையும் கற்றுக்கொள்ள வைத்தது.

தமிழை விரும்பி வடமொழியை வெறுக்கும் ஒரு நண்பர், என்னிடம் ஒரு முறை இந்தக் கேள்வியைக் கேட்டுவிட்டு நான் சொன்ன 'இரண்டும் இரு கண்கள்' என்ற பதிலுக்குப் பின், 'சரி. அதில் வலக்கண் எது? இடக்கண் எது?' என்று கேட்டார். நான் அந்தக் கேள்வியில் உள்ள விவகாரத்தை அறியாமல் 'தமிழ் வலக்கண். ஆரியம் இடக்கண்' என்றேன். 'அப்படியென்றால் நீ வடமொழியை விட தமிழைத் தான் அதிகம் நேசிக்கிறாய்' என்று சொல்லிவிட்டார். நான் வாயடைத்து நின்றேன்.

34 comments:

Amar said...

குமரன் அவர்களே,

எந்த மொழியும் இனிது தான்.
அதை முழுதாக படித்து அதில் எழுதபட்ட காவியங்களை படித்தால்.

எப்போது எனது மொழி, எனது மதம் உனது மொழியை/மதத்தை விட நல்லது/மேலானது என்று ஒரு சமுதாயமே கூட்டாக பிரகடனம் செய்கிறதோ அப்பொதே அதற்க்கு கேடு காலம் அரம்பித்துவிட்டது.

மேலும் ஆரிய theoryகளை பற்றி சில அறிவியல் பூர்வமான கேள்விகள் - எனது பதிவில்.

கொழுவி said...

நட்சத்திரம் பற்றி இராம.கி.அவர்கள், தான் நட்சத்திரமாயிருந்தபோது நாட்காட்டு என்று ஒரு பதிவு போட்ட ஞாபகம். அங்கு நிறைய விவரங்கள் கிடைக்கலாம்.

சிவா said...

எங்கப்பா அந்த தார் டின்ன..இங்கே ஏதோ வடமொழின்னு சத்தம் கேட்குது :-)).

நம்ம ஆளுங்க தமிழ் பற்று தான் ஊர் அறிந்த விசயம் ஆயிற்றே. எனக்கும் வடமொழி எதுவும் தெரியாது குமரன் :-)). கற்றுக்கொள்ள வாய்ப்பு ஏதும் கிடைக்க வில்லை

மணியன் said...

குமரன் அவர்களே, நல்ல கேள்வி கேட்டீர்கள். இந்திய துணைக் கண்டத்தின் இருசெம்மொழிகளில் சிவாஜி/எம்ஜியார், கமல்/ரஜினி சண்டை போல ஏதாவது ஒன்றையே ஆதரிக்க வேண்டுமென்று ஒரு எழுதப் படாத கட்டாயம் நிகழ்கிறது.

மற்ற நாட்டு மொழிகளில் எல்லாம் தேர்ச்சிபெறும், அவர்களின் இலக்கியத்தை இன்புறும் நாம் நமது தொன்மையான வடமொழிமேல் வெறுப்பு கொள்வதும், அருமையான இலக்கியச் சுவையை இழப்பதும் எவ்வளவு அறிவீனம்?

பார்ப்பனர்கள் வடமொழி பேசுகிறார்கள் என்பதால் அம்மொழியையே வெறுப்பது,முள்படர்ந்த தோலிற்காக பலாச்சுளைகளை தவிர்ப்பது போன்றது.
பிடிக்காத வேதங்களை விட்டுவிடலாம்; மந்திரங்களை விட்டுவிடலாம், ஆனால் காளிதாசனின் காவியங்களை ரசிக்க வேண்டாமா ? சாணக்கியரின் அர்த்தசாஸ்திரத்தை அர்த்தமாக்கிக் கொள்ள வேண்டாமா?

தனித்தமிழ் இயக்கத்திற்கும் வடமொழி பயில்வதற்கும் கூட தொடர்பு இல்லை. இன்றையதினம் ஆங்கில கலப்பினை தவிர்க்க ஆங்கிலமே வேண்டாமென்கிறோமா ?தனித் தமிழ் பற்றிருந்தால் வடமொழிக்கலப்பினை இந்நாளில் ஆங்கிலக் கலப்பினை தவிர்ப்பது போல் தவிர்த்து விடலாம்.

Anonymous said...

http://www.sabha.info/research/aif.html

Aryan Invasion Fantasy

Origin of Master Aryan Race Theory
(Scanned pages from Hindu Manners, Customs and Ceremonies by Abbe J.A. Dubois.

Manuscript first completed in 1806, English translation first published in 1816.)

Dubois: We must undermine Hindu civilization
Dubois says brahmins originated in Caucasus!
Dubois introduces philology and says brahmins are descendents of Japheth!
Dubois says Hinduism is just allegories
Max Muller's prefatory note to Dubois' book

கயல்விழி said...

மொழிப்பற்றாளர்களுடன் மிகவும் கஸ்டப்பட்டுள்ளீர்கள் போல் உள்ளது. இந்தியாவில் சமஸ்கிருதம் போன்று இலங்கையில் சிங்களம்.. பாடசாலைகளில் சிங்கள மொழியை கற்க மறுத்தவர்கள் பலர் கூறிய அனுபவங்களை கேள்விப்பட்டிருக்கிறேன். சமஸ்கிரிதத்தில் புலமை உள்ளவர் என்பதால் கேட்கிறேன். தமிழில் பல சமஸ்கிரிதச் சொற்களை நாங்கள் பயன்படுத்துகிறோமே.. உதாரணமாய் அதிஸ்டம்.. கஸ்டம் போன்றவைபோல் சமஸ்கிரிதத்தில் தமிழ்ச்சொற்கள் மருவி கலந்து இருக்கிறதா..??

ஜோ/Joe said...

குமரன்,
சவுராஸ்டிர மொழி எந்த மாநிலத்தை சேர்ந்தது?

தாணு said...

குமரன் ரெண்டு நாளா கம்ப்யூட்டர் ரிப்பேராகிப் போனதால் பதிவுகள் வாசிக்க லேட்டாகிவிட்டது.
தமிழர் என்று மார்தட்டிக் கொள்பவர்களே அநேக நேரம் ஆங்கிலத்தில்தான் உரையாடுகிறார்கள். எனக்கும் தமிழ்மீது ஆழ்ந்த பிடிப்பு உண்டுதான். ஆனாலும் என் நண்பன் தொலைபேசியை எடுத்ததும் `வணக்கம்’ என்று சொல்லும்போது கூட ஹலோ என்ற ஆங்கில பதம் வந்து விழுந்துவிடும். அதனால் தமிழைப் புறக்கணிப்பதாக ஆகுமா? தமிழ் ஆர்வம்கூட வெறியாக மாறும்போது ஏற்றுக் கொள்ளப் படாததுதான்.

குமரன் (Kumaran) said...

சமுத்ரா அவர்களே. மொழிகளைப் பற்றிய உங்கள் கருத்துக்களை ஒத்துக்கொள்கிறேன். இந்தப் பதிவில் மொழிகளைப் பற்றி மட்டுமே பேசுகிறேன். அதனால் விவாதத்தை அதனை ஒட்டியே வைத்துக் கொள்வோம். ஆரிய திராவிட இனங்களைப் பற்றிய விவாதங்களை இன்னொரு நாள் பார்ப்போம். நீங்கள் மொழியைப் பற்றியும் இந்தப் பின்னூட்டத்தில் இட்டிருப்பதால் இந்தப் பின்னூட்டத்தை அனுமதிக்க வேண்டியதாயிற்று.

குமரன் (Kumaran) said...

கொழுவி அண்ணா. நான் வலைப்பதிக்கத் தொடங்குவதற்கு முன் இராம.கி. அவர்கள் தமிழ்மண விண்மீனாய் இருந்திருக்கிறார். அண்மையில் தான் அவர் வலைப்பூவை அறிந்தேன். அடுத்த வாரம் முதல் அவருடைய எல்லாப் பதிவுகளையும் படிக்கவேண்டும் என்று எண்ணியிருக்கிறேன். வழக்கொழிந்த பழந்தமிழ் சொற்களையும் புதுப் புதுத் தமிழ்க் கலைச் சொற்களையும் அங்கு கற்கலாம் என்று தோன்றுகிறது.

வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி.

குமரன் (Kumaran) said...

சிவா. வடமொழியை எதிர்த்து தார் டின் போராட்டம் நடந்ததாத் தெரியலையே. அது இந்தியை எதிர்த்து அல்லவா நடந்தது. வடமொழியாகிய சமஸ்கிருத எதிர்ப்பு எல்லாம் இன்னும் இலக்கிய வட்டங்களில் தான் இருக்கிறது. இன்னும் அரசியல் ஆகவில்லை. அதனால் அவர்களுக்கு ஆதாயம் கிடைக்காது என்பதால் அரசியல் ஆவதற்கும் வாய்ப்பில்லை.

நம்ம ஆளுங்க தமிழ்பற்று நன்றாக இருக்கட்டும் சிவா. அது மிக முக்கியமான உணர்வு. தாய்ப்பாசம் போன்றது அது. ஆனால் என் அம்மாவை நான் விரும்பவேண்டும் என்றால் அடுத்தவன் அம்மாவை வெறுக்கவேண்டும் என்று அர்த்தம் அன்று.

பதிவில் சொன்ன மாதிரி என் தாய் மொழி சௌராஷ்ட்ரம். தமிழும் வடமொழியும் வளர்த்த தாய் மொழிகள். பெற்றவள் மேலும் பாசம் உண்டு. வளர்த்தத் தாயார்கள் மேலும் பாசம் உண்டு. அதனைத் தான் சொல்ல முயன்றேன்.

குமரன் (Kumaran) said...

மணியன் சார். ரொம்பச் சரியாச் சொன்னீங்க. :-) தமிழா ஆரியமா என்ற கேள்வி எம்ஜியாரா சிவாஜியா, ரஜினியா கமலா சண்டைகள் போல் தான் இருக்கிறது. உங்கள் கருத்துக்கள் எல்லாம் என் கருத்துக்களுடன் ஒத்துப் போகின்றன. தெளிவாக எடுத்து வைத்தமைக்கு மிக்க நன்றி.

குமரன் (Kumaran) said...

அனானிமஸ் நண்பரே. மேலே சமுத்ரா அவர்களுக்குச் சொன்னதே உங்களுக்கும். நான் இனத்தைப் பற்றிய விவாதத்தை இங்கு தொடங்க விரும்பவில்லை. இங்கு மொழிகளைப் பற்றியே பேசுகிறோம்.

மட்டுறுத்தல் போட்டதால் இதனை வேறு விளக்க வேண்டியிருக்கிறது - ஏன் உங்கள் பின்னூட்டத்தை அனுமதித்தேன் என்று. சமுத்ரா இட்டப் பின்னூட்டத்தை அனுமதித்ததால் உங்கள் பின்னூட்டத்தையும் அனுமதித்தேன்.

நண்பர்களே. இந்தப் பதிவில் இனிமேல் ஆரிய திராவிட இனத்தைப் பற்றிய விவாதங்களைப் பின்னூட்டமாய் இடவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

குமரன் (Kumaran) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கயல்விழி. மொழிப்பற்றாளர்களிடம் கஷ்டமெல்லாம் படவில்லை கயல்விழி. என் அதிர்ஷ்டம் தமிழ் மேல் மட்டும் பற்று கொண்ட நண்பர்களும் கிடைக்கிறார்கள். வடமொழி மேல் மட்டும் பற்று கொண்ட நண்பர்களும் கிடைக்கிறார்கள். அதனால் இந்தக் கேள்வி அடிக்கடி கேட்கப் படுகிறது. அதனையே இங்கே சொன்னேன்.

தமிழில் வடமொழிச் சொற்கள் இருப்பது மட்டுமன்று. வடமொழியிலும் தமிழ்ச்சொற்கள் நிறைய உண்டு. அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இரண்டு மொழிகள் ஒன்றுகொன்று நெருங்கிப் பழகும் போது அந்த மாதிரி கொடுக்கல் வாங்கல் நிறைய நடப்பது இயற்கை. ஞானவெட்டியான் ஐயா, இராம.கி. ஐயா, இராகவன் இவர்களைக் கேட்டால் நிறைய எடுத்துக் காட்டுவார்கள்.

ஒரே ஒரு எடுத்துக்காட்டு மட்டும் தருகிறேன். தமிழ் என்பது வடமொழியில் தமிளம், த்ரமிளம், த்ரவிடம் என்று திரிந்து கடைசியில் த்ராவிடம் என்று மாறிவிட்டதாக மொழியறிஞர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். இதனையே திருப்பிப் போட்டு த்ராவிடம் என்ற வடமொழிச் சொல்லின் திரிதலே தமிழ் என்பதே என்று கூட சில அறிஞர்கள் சொல்வதைப் படித்திருக்கிறேன். வடமொழிப் பற்றாளர்களுக்கு திராவிடம் ---> தமிழ் சரி போன்று தோன்றும். தமிழ்ப் பற்றாளர்களுக்கு தமிழ் --> திராவிடம் சரி போன்று தோன்றும். இதுவும் ஒரு முடிவில்லாத விவாதம். இவர்கள் சொல்வதை அவர்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. அவர்கள் சொல்வதை இவர்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. :-)

குமரன் (Kumaran) said...

ஜோ, சௌராஷ்ட்ரம் என்பது தற்போதைய குஜராத்தின் ஒரு பகுதி. ஆனால் தற்போது சௌராஷ்ட்ரம் பேசுபவர்கள் குஜராத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. எல்லோரும் தமிழ்நாட்டிலும் ஆந்திராவிலும் கர்நாடகத்திலும் தான் இருக்கிறார்கள். சௌராஷ்ட்ரத்தைப் பற்றியும் சௌராஷ்ட்ரர்களைப் பற்றியும் எழுதவேண்டும் என்று அப்டிபோடு அக்காவும் நண்பர் முத்துக் குமரனும் சொல்லியிருக்கிறார்கள். அதனால் அந்த விஷயத்தை எதிர்காலத்தில் எழுதுவேன். தற்போதைக்கு இந்தச் சுட்டிகளைப் பாருங்கள். http://www.palkar.org/
http://www.sourashtra.com/

குமரன் (Kumaran) said...

உங்கள் கருத்துடன் ஒத்துப் போகிறேன் தாணு அக்கா. மெதுவாக மற்றப் பதிவுகளையும் படித்து உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள். செந்தமிழும் நாப்பழக்கம் என்று நீங்கள் தானே சொன்னீர்கள். ஹலோ என்று வந்து விழுவதும் பழக்கத் தோஷம் தான் :-)

சில நேரங்களில் எழும் போதும் உட்காரும் போதும் நான் கண்ணன் நாமங்களைச் சொல்வேன். அதனைக் கேட்டு யாராவது 'ஆஹா. என்ன பக்தி' என்றால் நான் சிரித்துக் கொண்டே சொல்வது 'பக்தியெல்லாம் இல்லை. எல்லாம் பழக்கத் தோஷம்'. :-)

Anonymous said...

மன்னித்துக் கொள்ளுங்கள் குமரன். உங்கள் பதிவைத் திசை திருப்ப அந்த உரல்களைத் தரவில்லை. ஆரிய திராவிட இனவாதத்தை எப்படி வெள்ளைக்காரன் கொண்டுவந்தான் என்பதற்கு அந்தப்புத்தகமே சாட்சி. இந்துமதமே வெளிநாட்டிலிருந்து வந்தது, அவன் கும்பிடுற சாமியெல்லாம் வெளிநாட்டிலிருந்து வந்தது என்று தமிழனைக் குழப்பினால் வெளிநாட்டு இறக்குமதியான தங்கள் மதத்தைப் பரப்ப சௌகரியமா இருக்கும் என்ற ஒரே நோக்கத்தில் தோற்றுவிக்கப் பட்டதுதான் இந்த ஆரியதிராவிட இனவாதம். அதிலிருந்து கிளம்பியதுதான் அத்தனை துவேஷங்களும்.

ஆரியன் / திராவிடன்
வடநாட்டான்/தமிழன்
வடமொழி/தமிழ்
பிராமணன்/நான்பிராமணன்
இப்படி ஒரு பைனரிகாம்ப்ளெக்ஸை ரொம்பத் திறமையா வேரூன்றச் செய்திருக்கிறார்கள். இந்த அடிப்படையைப் புரிந்து கொள்ளாமல் நீங்க வடமொழி வெறுப்பைப் புரிந்து கொள்ள முடியாது. அப்பொ ஆரியன் என்று இனமில்லையா? பாசமாம் பற்றறுத்து பாரிக்கும் ஆரியனைத்தான் கேட்க வேண்டும். திராவிடன் என்று? ராகுல்திராவிடரைத்தான் கேட்க வேண்டும். :-)

முத்துகுமரன் said...

குமரன் நல்ல பதிவு.

தமிழ் மொழியை ஆதரிப்பது என்பது எந்த மொழியையும் எதிர்ப்பதென்று ஆகாது. சமஸ்கிருதம் தொன்மையான மொழி என்பதில் எந்த வித மாற்றுக் கருத்தும் இல்லை. சமஸ்கிருதம்தான் உயர்ந்தது என்று தூக்கிப் பிடிக்கும் போது இல்லை என் தமிழ்மொழி இருக்கிறது என்று சொல்கிறோம். எந்த மொழியானாலும் அதற்கு சிறப்பியல்புகள் இருக்கும். ஆழ்ந்த இலக்கியங்கள் இருக்கும். அவைகளை யாரும் மறுக்கப்போவதில்லை. அந்த இலக்கியங்கள் சொல்லும் செய்திகளும் கவனத்தில் கொள்ளபட வேண்டியது தவிர்க்க முடியாதது.

அப்புறம் மொழியின் பெயரால், மந்திரங்களின் பெயரால் மக்களை பிளவுபடுத்தி, அடிமைப்படுத்தும் போது அதற்குண்டான எதிர்வினைகள் வலிமையாக இருந்திருப்பது எந்த தவறும் இல்லை. இனிமையான இலக்கியங்களுக்காக நஞ்சையும் சேர்த்து ஏற்க வேண்டும் என்று நினைத்தால் அது எந்த வகையிலும் நேர்மையானதாக இருக்காது.

கைப்புள்ள said...

//தமிழ்பற்று நன்றாக இருக்கட்டும் சிவா. அது மிக முக்கியமான உணர்வு. தாய்ப்பாசம் போன்றது அது. ஆனால் என் அம்மாவை நான் விரும்பவேண்டும் என்றால் அடுத்தவன் அம்மாவை வெறுக்கவேண்டும் என்று அர்த்தம் அன்று. //

நன்றாகச் சொன்னீர்கள் குமரன். பிற மொழிகளைக் கற்றுக் கொள்வது நாம் அறியாத இன்னும் பல விஷயங்களை அறிந்து கொள்வதற்கான ஒரு கருவி என்று கொண்டாலே போதும்.

குமரன் (Kumaran) said...

மிக்க நன்றி கைப்புள்ள. பல மொழிகளைக் கற்றுக் கொள்வதால் இன்னும் பல விஷயங்களை கற்றுக் கொள்ளலாம் என்பதில் சந்தேகமே இல்லை.

குமரன் (Kumaran) said...

அனானிமஸ் & முத்துக்குமரன். நீங்கள் தொடரலாம். என் கருத்துக்களைப் பின்னர் சொல்கிறேன். இந்த வாரம் முடியட்டும்.

G.Ragavan said...

குமரன், பிறப்பால் மட்டுமே ஒருவர் தமிழராக முடியாது. நம்மிடையில் தமிலர்களும் தமிளர்கலும் பலருண்டு. என்னுடைய குடும்பத்திலும் தமிளர்கள் உண்டு.

தமிழ் உணர்வோடு கலந்தது. கலப்பது. ஆகையால் நீங்கள் தமிழர் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

எனக்கும் தமிழ்ப்பற்று உண்டு.

வடமொழி......அதன் மீது எனக்கு எந்தத் தனிப்பட்ட வெறுப்பும் இல்லை. வடமொழி கற்பதற்கு வாய்ப்பும் தேவையும் இருக்கவில்லை. அதனால் கற்கவில்லை. அவ்வளவே. எனக்கும் காளிதாசனின் குமாரசம்பவம் (மறுபடியும் முருகனான்னு நீங்க நெனைக்கிறது புரியுது) படிக்கனுமுன்னு ரொம்ப நாளா ஆசை. வடமொழி தெரியாதே...அதுனால பேசாம உக்காந்திருக்கேன். உங்களுக்குத்தான் வடமொழிப் பழக்கம் உண்டே. குமாரசம்பவம் பத்திச் சொல்றது.

நச்சு இலக்கியக்கங்கள் எந்த மொழியிலும் உண்டு. அதற்காக ஒரு மொழியை விலக்கத் தேவையில்லை. வேண்டியதை மட்டும் எடுத்துக் கொள்ளும் பக்குவமும் நமக்கு வரவேண்டும். வடமொழியில் நல்ல இலக்கியங்களும் உண்டு என்பதும் உண்மையே.

அதே நேரத்தில் தமிழகத்தில் வடமொழிக்கு இருக்கும் எதிர்ப்பிற்கு வேறொரு காரணமும் உண்டு. கண்ணாடி போல இருக்க வேண்டிய அயல்மொழி கண்ணைப் போல இருப்பதுதான். திருக்கோயில்களில் அதற்கு இருக்கும் இடம்தான். தமிழ் இருக்க வேண்டிய இடத்தில் அது இருப்பதால்....அதன் மீது லேசான எதிரெண்ணம் வருவது உண்மைதான். கிருத்துவர்கள் கூட தமிழில் தொழுகை நடத்துகின்றார்கள். நமக்குத்தான் ஒரு குறிப்பிட்ட மொழியில் தொழுகை நடத்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லையே. பிறகும் என்ன தயக்கமோ! என்னைப் பொருத்த வரையில் தமிழா ஆரியமா என்றால்....இதுதான் தோன்றுகிறது.

ஞானவெட்டியான் said...

அன்பு குமரன்,
வடமொழி, தமிழ் ஆகியவைகளை வைத்து நடத்தும் போராட்டங்களாலும், விவாதங்களாலும் எனக்குக் கால விரயம் ஆகின்றது.

ஆகவே, நான் இந்த இடுகைக்குப் பின்னூட்டு தர இயலவில்லை.

தருமி said...

"மதுரையில் பிறந்தததால் தமிழார்வம் வந்தது."//
- கொஞ்சம் குற்ற மனப்பான்மை வருகிறதே, குமரன்.

மதுமிதா said...

அப்ப நடனகோபால் சுவாமிகள் பாடல் வந்ததும் நான் ரசித்ததும் யூகித்ததும் சரிதானே
தொடர்ந்து எழுதுங்க
எனக்கு அந்தப் பாடல் விளக்கத்துடன் கூடிய புத்தகம் தேவை குமரன்

குமரன் (Kumaran) said...

பாடல் புத்தகம் இருக்கிறது அக்கா. ஆனால் விளக்கங்கள் இருக்கான்னு தெரியலை. என்னோட 'மதுரையின் ஜோதி' வலைப்பூவைப் பாருங்க. முடிஞ்ச வரைக்கும் நாயகி சுவாமிகளின் பாடல்களுக்கு விளக்கம் சொல்லிக்கிட்டு இருக்கேன்.

வெளிகண்ட நாதர் said...

வடக்கு வாழ்கிறது, தெற்கு தெய்கிறதுன்லாம் நம்ம தினா, மூனா, கானா அரசியல்வாதிங்க போடற் சத்தம் தான், நான் கூட தெலுங்கு தான், ஆனா உளமாற தமிழ் ஆர்வத்தில சின்ன புள்ளயிலருந்தே ஒரு ஈடுபாடு குமரன், மொழி என்பது கருத்து பரிமாறல் கொள்ள, பேசவதற்கு உண்டான மார்க்கமே தவிர, சர்ச்சைக்குறிய விஷயமில்லையே!

குமரன் (Kumaran) said...

சரியா சொன்னீங்க வெளிகண்ட நாதர். மொழி என்பது சர்ச்சைக்குரிய விஷயமில்லை. ஆனால் அது பற்றி எனக்கு வந்த கேள்விகளைப் பார்த்து தான் இங்கு இந்தப் பதிவை இட்டேன்.

Anonymous said...

இந்த தலைப்புல எழுதுரதுக்கு ரொம்ப தான் தில்லு தலை. இவ்ளோ நாள் பாக்கலையே இதை.

பம்பு

Anonymous said...

சமஸ்கிருதமாவது வெங்காயமாவது!

இன்று பள்ளிகளில் கற்பிக்கப்படும் ஹிந்தி மெதுவாக சமஸ்கிருதமாகி வருகிறது.
இந்தியாவின் ஆட்சிமொழியாக ஹிந்தியைக் காட்டி சமஸ்கிருதத்தை நுழைக்கிறார்கள்.

"உனக்கு சமஸ்கிருதம் பெரிதென்றால் எனக்கு தமிழ்தான் பெரிது".

இந்தியாவின் ஆட்சி மொழியாக தமிழை ஆக்குங்கள்.
அனைவரும் சமஸ்கிருதம் கற்றுக்கொள்ளலாம்.ஜெர்மனி.பிரெஞ்சு,சைனீஸ் அனைத்தும் கற்கலாம்.

நீ உனது மொழியை கட்டாயமாக்க நினைப்பதினால் உன் மொழி மீதும் உன் மீதும் வெறுப்பு வரக் காரணம்.

உனது கருத்துகளை,சடங்குகளை,மொழியை மற்றவர்கள்மேல் திணிப்பதோடல்லாமல்
மற்றவர்களை இழிவாக நினைப்பதும்,பேசுவதும் கூட உன்னை வெறுக்கத் தூண்டுகிறது.

("நீ" என்பது இங்கு பிராமணர்களைக் குறிக்கும்")

வெற்றி said...

குமரன்,
படித்தேன்.

வஜ்ரா said...

குமரன்,

தமிழும் சமஸ்கிருதத்திற்கும் உள்ள இலக்கண அடிப்படையில் உள்ள ஒற்றுமை, அக்ஷர மாலா (சமஸ்கிருதத்திலும்) அதே போல் தழிழ் எழுத்துக்கள் வரிசை இருப்பது பற்றியும் நல்ல தமிழ் தெரிந்த நீங்கள் எழுதுனீர்கள் என்றால் சிறப்பாக இருக்கும் என்று எனக்குப் படுகின்றது.

இன்றய தேதியில் பல தமிழ் பல்கலைக்கழகங்களில் "கழகக் கண்மணிகள்" தான் தமிழாராய்ச்சி என்ற பெயரில் எதையோ உளரிக்கொட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பது என் கருத்து.

இராம்/Raam said...

குமரன்,
தமிழ் பற்றி அருமையான கருத்தை பதித்திருக்கிர்கள்.எனக்கும் பல சவுராஷ்டரா நண்பர்கள் உண்டு.அம்முறையிலேயே நான் உங்களை ததா என அழைத்தேன்.மற்றொரு விசயம் உங்களின் சில கருத்துக்களில் எனக்கு உடன்பாடு இல்லை.சில தினங்களில் அதையை பதிவாக இடுகிறேன்.

நன்றி,

குமரன் (Kumaran) said...

இப்போது புரிந்தது ராம் நீங்கள் ஏன் என்னை ததா என்று அழைத்தீர்கள் என்று.

எப்போது உங்கள் விரிவான பதிவை எழுதப் போகிறீர்கள்? எழுதியதும் சொல்லுங்கள்.