Friday, January 27, 2006

134: *நட்சத்திரம்* - தமிழ் இறைவனுக்கும் முன்னால்...

'ஏன்டா. சீக்கிரம் வெளிய வா. பெருமாள் ஏளறார்'.

'ஏளரார்ன்னா என்னடா?'

'அதுவா. பெருமாள் வீதி உலா வர்றதைத் தான் அப்படிச் சொல்வோம்'

'அப்படியா. நாங்க எல்லாம் சாமி வருதுன்னு சொல்லுவோம்'.

'சரி. சரி. வெளிய வா. நாம் பெருமாளைச் சேவிக்கலாம்'

'சேவிக்கலாமா? அப்படின்னா?'

'தப்பாச் சொல்லிட்டேன். பெருமாளைக் கும்புடலாம் வாடா'

'சரி. என்னடா இது. இவ்வளவு பெரிய கூட்டம் சாமி முன்னாடி போகுது'

'அதுவா. அது பிரபந்த கோஷ்டிடா. சரி. சரி. பெருமாளை நல்லா சேவிச்சுக்கோ...இல்லை...இல்லை...கும்புட்டுக்கோ'.

'சாமிக்கு நல்லா அலங்காரம் பண்ணியிருக்காங்கடா. பாத்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு. ஏன்டா சாமி இவ்வளவு வேகமா போகுது?'

'அதுவா பிரபந்த கோஷ்டி வேகமா போகுதுல்ல அதான்'

'ஏன்டா. முன்னாடி ஒரு கூட்டம் போச்சு. பின்னாடியும் ஒரு கூட்டம் போகுது. முன்னாடி போன கூட்டமாவது என்னமோ தமிழ்ல பாடிகிட்டுப் போனாங்க. பின்னாடி போறவங்க என்னமோ கத்திக்கிட்டுப் போறாங்களே. யாருடா இவங்க?'

'முன்னாடி போறவங்க பிரபந்த கோஷ்டிடா. ஆழ்வார்கள் பாடின நாலாயிர திவ்யப் பிரபந்தங்களைப் சேவிச்சுக்கிட்டுப் (பாடிக்கிட்டுப்) போறாங்க. பின்னாடி போறவங்க வேத பாராயண கோஷ்டி. வேதங்களை ஓதிக்கிட்டுப் போறாங்க'.

'வேதங்களை ஓதுறாங்களா. அது வடமொழியில இருக்கிறதால எனக்குப் புரியலைன்னு நெனைக்கிறேன். அதான் கத்துற மாதிரி தோணிச்சு. ஆமா. முன்னாடி போறவங்க பிரபந்தம்ன்னு என்னமோ சொன்னியே. அவங்க தமிழ்ல பாடுற மாதிரில்ல இருந்துச்சு?'

'அது தமிழ் தான்டா. ஆழ்வார்கள் பாடுன தமிழ் பாட்டுகளை எல்லாம் நாலாயிர திவ்யப் பிரபந்தம்ன்னு சொல்லுவாங்க'.
'அப்டியா. ஹேய். இவங்களும் ஏன்டா சாமி பின்னாடி ஓடுறாங்க?'

'பெருமாள் பிரபந்த கோஷ்டி பின்னாடி ஓடுறார். வேத பாராயண கோஷ்டி பெருமாள் பின்னாடி ஓடுறாங்க'.

'ஏன் எல்லாரும் ஒருத்தர் பின்னாடி ஒருத்தர் ஓடுறாங்க? வேடிக்கையா இருக்கே?'

'அதுவா. எங்க தாத்தாகிட்ட இதைப் பத்திக் கேட்டேன். அவரோட ஆசாரியர் சொன்னதை அவர் எனக்குச் சொன்னார்.

வடமொழி வேதங்கள் தன்னோட சொந்த முயற்சியால பெருமாளைத் தெரிஞ்சுக்க முயற்சி செஞ்ச மகரிஷிகளால் பாடப்பட்டது. அதனால பெருமாளோட முழுப் பெருமையும் பாட முடியாம வேதங்கள் பின்வாங்கிடுச்சாம். ஆழ்வார்கள் பெருமாளாலேயே மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர்கள். அதனால பெருமாளை உள்ளது உள்ளபடி உணர்ந்து பாடல்கள் பாடியிருக்காங்க. அவங்களோட இனிமையான தமிழ்ப் பாடல்களை கேக்கிறதுக்குத் தான் பெருமாள் பிரபந்தம் பாடுறவங்களைத் தொரத்திக்கிட்டுப் போறார். அவரை இன்னும் முழுசாத் தெருஞ்சுக்காத வேதங்களை ஓதுறவங்க அவரைத் தொரத்திக்கிட்டுப் போறாங்க'.

'நல்லா இருக்கே இந்த விளக்கம். எப்படியோ தமிழுக்கு முதலிடம் கெடைச்சா சரிதான்'.

'எங்க வீட்டுல எப்பவுமே தமிழுக்குத் தான்டா முதலிடம். ஏன் அப்படிச் சொல்ற'.

'அத விடு. ஆமா. இந்த போர்டுல உங்க தாத்தா பேருக்கு முன்னாடி என்னமோ உ.வே.ன்னு போட்டிருக்கே? அப்டின்னா என்னடா? திரு.ன்னு போட்டுப் பாத்துருக்கேன். ஆனா இது புதுசா இருக்கே'.

'அதுவா. அது உபய வேதாந்தி அப்படிங்கறதோட சுருக்கம்'.

'அப்டின்னா என்னடா?'

'எங்க ஆளுங்க சமஸ்கிருதத்துல இருக்கிற வேதங்களோட ஆழ்வார்கள் பாடுன திவ்யப் பிரபந்தங்களையும் தமிழ் வேதங்கள்ன்னு சொல்லுவாங்க. உபய வேதாந்தின்னா ரெண்டு வேதங்கள் உடையவர்ன்னு அர்த்தம். வடமொழி வேதங்களை விட தமிழ் வேதங்களுக்கு மதிப்பு கூட. ஆழ்வார் அருளிச்செயல்ன்னு எங்க தாத்தா எப்பவுமே ஆழ்வார் பாட்டுகள் பாடிக்கிட்டே இருப்பார்'

'ஆமான்டா. நானும் கேட்டுக்கேன். அப்ப எல்லாம் ஏதோ பழைய பாட்டாப் பாடுறார்ன்னு நெனைச்சுக்குவேன்.'

'சரி வா. பெருமாள் அடுத்தத் தெருவுக்குப் போயிட்டார். நாம உள்ள போகலாம். படிக்கிறதுக்கு நிறைய இருக்கு'.

114 comments:

Unknown said...

இந்த வாரம் டாப் 2 பதிவுகள் உங்களுடையதாக வாசகர் பரிந்துரையில் இருக்கிறது.பார்த்தீர்களா?

குமரன் (Kumaran) said...

பார்த்தேன் செல்வன். உங்கள் பதிவுகள் ஆறும் டாப் 25ல் இருக்கிறதே. வாழ்த்துக்கள்.

Anonymous said...

Hi
How come saivaite priests in Tamilnadu do not celebrate the nayanmars and their works? What is the history behind this? Just curious!
Enjoyed reading your post.
Sam
I am not Dharumi.

குமரன் (Kumaran) said...

சாம். உங்களுக்குக் கிடைத்திருக்கும் தகவல் சரியன்று. சைவத் திருக்கோயில்களிலும் தமிழுக்குத் தான் முதலிடம். நீங்கள் எத்தனைச் சிவன் கோவிலுக்குச் சென்றிருக்கிறீர்கள்? அப்படிச் சென்றிருந்தால் இறைவனை வணங்கிவிட்டு வலம் வரும் போது அங்கு வரிசையாக சில சிலைகள் இருக்குமே பார்த்திருக்கிறீர்களா? நீங்கள் அவற்றை எண்ணிப் பார்த்தால் அவை 63 இருக்கும்; அவை 63 நாயன்மார்களின் திருவுருவங்கள். தினமும் அவர்களுக்கு வழிபாடும் பண்டிகை நாட்களிலும் அந்தந்த நாயன்மார்களின் திருநக்ஷத்திர நாட்களிலும் (பிறந்த நாட்களிலும்) சிறப்பு வழிபாடுகளும் நடைபெறும்.

அதே மாதிரி நீங்கள் கொஞ்சம் கவனமாகப் பார்த்தீர்களானால்/ கேட்டீர்களானால் எங்கும் திருமுறைப் பாடல்கள் ஒரு ஓதுவாரால் பாடப்பட்டுக் கேட்டுக்கொண்டிருக்கும். அதனால் நீங்கள் நினைப்பது தவறு.
ஒவ்வொரு நாயன்மார்களின் தமிழைக் கேட்கவே எண்ணிறந்த திருவிளையாடல்களைச் சிவபெருமான் செய்தார் என்பது எல்லோருக்கும் தெரிந்தது. பித்தா என்று தமிழால் திட்டினாலும் பொறுப்பவன் அவன்.

தென்னாடுடைய சிவனே போற்றி என்று தமிழுக்கும் சிவனுக்கும் உள்ள உறவு எல்லோரும் அறியும் வண்ணம் இருப்பதால், அதனை என் பதிவில் கூறவில்லை. வைணவத்திலும் தமிழுக்கு முதல் மரியாதை என்பது பலருக்குத் தெரியாமல் இருப்பதாலும் வைணவ ஆசாரியரான பகவத் இராமானுஜர் ஏற்படுத்திய இந்த வழக்கத்திற்கு வைணவர்கள் சொல்லும் விளக்கம் மிக அழகாகவும் அருமையாகவும் இருப்பதால் தான் இந்தப் பதிவில் அதனைச் சொன்னேன்.

இன்னொரு விஷயத்தையும் குறிப்பிட விரும்பினேன். சமய சார்பற்ற இலக்கியங்களே தமிழை வளர்ப்பதாக சில தமிழறிஞர்கள் எண்ணுகின்றனர். சமய சார்பான தமிழைப் பேசும் என்னைப் போன்றவர்களுக்கு முதலில் கிடைக்கும் முத்திரை ஆன்மிக ஆர்வலர் என்பது தான்; தமிழார்வலர் என்று யாராவது கூறுகிறார்களா என்றால் இல்லை; ஏனெனில் என்னைப் போன்றவர்களின் நோக்கம் ஆன்மிகம் வளர்ப்பது; சமயம் வளர்ப்பது; தமிழை வளர்ப்பது இல்லை என்ற எண்ணம் என்று எண்ணுகிறேன். நான் நினைப்பது தவறாக இருக்கலாம். அப்படி நான் நினைப்பது தவறென்று யாராவது கூறுனால் மிக்க மகிழ்வேன்.

இந்தப் பதிவை படித்து ரசித்ததற்கும் பின்னூட்டம் இட்டதற்கும் மிக்க நன்றி. நீங்கள் தருமி ஐயா இல்லை என்று தெளிவுறுத்தியதற்கும் நன்றி.

G.Ragavan said...

உண்மையான சைவ சித்தாந்தத்தில் தமிழுக்குதாம் முதலிடம். நடுயிடம். கடைசியிடம் எல்லாம். சைவத்திலும் தமிழ் அமுதுகள் எக்கச்சக்கம். வைணவத்தை விட எண்ணிக்கையிலும் நிறையவும் கூட.

தமிழில் முதன்முதலில் எழுந்த சமய நூலே சைவ நூல்தான். நக்கீரர் பெருமான் அருளிய திருமுருகாற்றுப்படையைத்தான் சொல்கிறேன். தீந்தமிழ் நூல் அது. நக்கீரர் கள்ளர் (தேவர்) குலத்தைச் சேர்ந்தவர். கொஞ்சம் ஆத்திரக்காரரும் கூட. குகையில் அடைபட்டுக் காப்பாற்றப்பட வேண்டிய சூழலில் இறைவனை எப்படிக் கூப்பிடுகிறறர் தெரியுமா? "அப்பனே முருகா...வந்து காப்பாற்றி நல்ல பெயர் வாங்கிக் கொள். இல்லையென்றால் எனக்கு ஒன்றுமில்லை. உன்னை நம்பிய ஒருவன் மோசம் போனான் என்று உனக்குதான் கெட்ட பெயர். ஆகையால் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்." பாருங்கள் கடவுளுக்கே வாய்ப்பளித்த தமிழ்ப்பெருந்தகை அவர். துவக்கமே இப்படி.

ஐம்பெருங்காப்பியங்களில் சிலப்பதிகாரம் தவிர்த்த மற்ற நான்கு காப்பியங்களுமே தமிழகத்தை மையமாக இல்லாமல் ஆனால் சமய நூல்களாக எழுந்தன. அப்படியே மறைந்தன. சிலப்பதிகாரம் சமயச்சார்பற்ற நூல் என்று சொல்ல முடியாது. எடுத்த எடுப்பிலேயே மாப்பிள்ளை ஊர்வலம் போகின்ற கோவலனைப் பார்த்து...ஆகா இவனைப் பார்த்தான் முருகன் போல இருக்கிறானடி...என்று பெண்கள் பேசினார்களாம். சரவணப் பொய்கை, கவுந்தியடிகள், ஆய்ச்சியர் குரவை, கொற்றவை பாடல்கள், குன்றக்குரவை, என்று ஒரு கதம்பமாகச் செல்லும்.

இது குறித்து இன்னும் நிறையச் சொல்லலாம். ஆனாலும் இன்னும் திருக்கோயில்களில் தமிழ் செல்ல வேண்டிய இடங்களும் உண்டு.

dondu(#11168674346665545885) said...

தமிழ்க்கடவுளாம் முருகன் பெயர் தாங்கியிருக்கும் குமரன் அவர்களே, அக்கடவுளின் மாமனைப் பற்றிய உங்கள் இப்பதிவு நன்றாக உள்ளது.

தமிழை வளர்த்ததில் சைவமும் வைணவமும் போட்டி போட்டன என்று சொன்னால் மிகையாகாது.

என்னுடைய இப்பின்னூட்டமும் இதற்காக நான் வைத்துள்ள என் தனிப்பதிவிலும் பின்னூட்டமாக இடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html#comments

அன்புடன்,
டோண்டு ராகவன்



வாழ்த்துக்கள்.

ENNAR said...

நன்று

குமரன் (Kumaran) said...

இராகவன், ஒரு சின்ன வாய்ப்பு கிடைத்துவிடக் கூடாதே. சந்துல சிந்து பாடிடுவீங்களே. முருகன் புகழைப் பேசுவதைத் தான் சொல்கிறேன். :-)

//உண்மையான சைவ சித்தாந்தத்தில் தமிழுக்குதாம் முதலிடம். நடுயிடம். கடைசியிடம் எல்லாம்.//

அப்படியா? அப்ப பொய்யான சைவ சித்தாந்தம்ன்னு ஒன்னு இருக்கா? அதில் தமிழுக்கு இடமில்லையா? :-)

//சைவத்திலும் தமிழ் அமுதுகள் எக்கச்சக்கம். வைணவத்தை விட எண்ணிக்கையிலும் நிறையவும் கூட.
//

முதல் வார்த்தை சரி. சைவத்திலும் தமிழ் அமுதுகள் எக்கச்சக்கம் என்று சொல்லுங்கள். உண்மை என்று ஒத்துக் கொள்கிறேன். ஆனால் என்னவோ வைணவத்தைக் கரைத்துக் குடித்துவிட்டது போல 'வைணவத்தை விட எண்ணிக்கையிலும் நிறையவும் கூட' என்று எல்லாம் தெரிந்த தமிழ்மணப் பெரியவர் மாதிரி பேசுகிறீர்கள்?

மேலே சொன்ன மாதிரி நான் இந்தப் பதிவை இட்டதற்கு ஒரு காரணம் இந்த மாதிரி அரைகுறையாய் இருக்கும் ஒரு அறியாமையான எண்ணத்தை வெளிக் கொண்டு வரத்தான். உங்களுக்கு இந்தப் பதிவில் சொல்லப்பட்ட விஷயம் இந்தப் பதிவைப் படிப்பதற்கு முன்பே தெரியும் என்று எனக்கும் தெரியும். ஆனால் மேலே 'வைணவத்தை விட' என்று சொல்லியிருப்பது என் சந்தேகத்தை உறுதி செய்கிறது. சைவத்திற்கு இருக்கும் தமிழ்த் தொடர்பை தமிழுலகம் நன்கு அறியும். ஆனால் வைணவத்தில் இருக்கும் தமிழை அவ்வளவாக அறியாது. இதனைப் பற்றி இன்னும் நிறைய பேச வேண்டும் போலிருக்கிறது.

இதற்கு இன்னொரு காரணம் மேலே சொன்னபடி 'தென்னாடுடைய சிவன்' என்று சொல்வதும் 'முருகனை மட்டும் தமிழ்க்கடவுள்' என்று சொல்வதும் என்று நினைக்கிறேன். பழந்தமிழ் மரபில் மாயோனும் ஐந்து நிலக் கடவுளர்களில் ஒருவன் தானே? அப்படி என்றால் அவனையும் தமிழ்க் கடவுள் என்று கூறுவதில் என்ன தயக்கம்? சிவனும் முருகனும் எப்படித் தமிழ்க் கடவுளர்களோ அதே மாதிரி மாயவனும் கொற்றவையும் தமிழ்க் கடவுளர்களே!!!

குமரன் (Kumaran) said...

//தமிழில் முதன்முதலில் எழுந்த சமய நூலே சைவ நூல்தான்.// எப்படி இப்படி அடித்துச் சொல்கிறீர்கள். திருமுருகாற்றுப் படை நூல் தான் முதல் சமய நூலா தமிழில்? அப்படி என்றால் அதற்கு முன் தமிழர்களிடம் சமய உணர்வே இல்லாமல் இருந்ததா? சமய உணர்வு இருந்திருந்தால் அதற்கேற்ப நூற்களும் வந்திருக்குமே? ஏன் இப்படி ஒரு தலைப் பட்சமாக அறுதியிட்டுக் கூறுகிறீர்கள். திருமுருகாற்றுப் படையின் பெருமையைக் கூறுங்கள். அதன் முகமாக மற்ற நூல்களை மறைமுகமாக இழித்துக் கூற வேண்டியதில்லை.

//நக்கீரர் கள்ளர் (தேவர்) குலத்தைச் சேர்ந்தவர்.// இதனை இங்கு சொல்லவேண்டிய அவசியம்?

//ஆனாலும் இன்னும் திருக்கோயில்களில் தமிழ் செல்ல வேண்டிய இடங்களும் உண்டு.
// ஒத்துக்கொள்கிறேன். ஆனால் அப்படித் தமிழ் செல்ல வேண்டிய இடங்கள் ஆலயங்களில் இருப்பதால், ஆலயங்களில் தமிழுக்கே இடமில்லை என்று கூக்குரலிடுபவர்களுக்கு நாம் சொல்லவேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது.

குமரன் (Kumaran) said...

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தமிழ்மணப் பெரியவர் டோண்டு சார்!

குமரன் (Kumaran) said...

நன்றி என்னார் ஐயா.

கொழுவி said...

என்பதிவுக்கு வந்து பின்னூட்டமிட்டவர்களை உங்கள் பதிவுக்கும் வந்து பின்னூட்டமிடும்படி வெருட்டியிருந்தேனே,
வந்தார்களா?
பின்னூட்டம் தந்தார்களா?

குமரன் (Kumaran) said...

டோண்டு சாரைத் தவிர வேறு யாரும் வரவில்லை கொழுவி. உங்களையே இன்னும் காணோமே என்று வந்து கேட்கலாம் என்றிருந்தேன். மற்றவர்களையும் கொஞ்சம் சொல்லி அனுப்புங்கள். மிக்க நன்றி. :-)

Anonymous said...

Hi
I have been living in a major metropolitan area in USA for the past seventeen years. I see inclusion of tamil in vishnu worship. It is a good feeling to hear the Kannada priest who can speak only broken tamil recite 'Pallandu Pallandu'. I do not see the inclusion of tamil in siva worship even though you point out that south belongs to Siva.

I went to Thirukoshtiyur when I was ten years old. That was my first visit to a Vishnu temple. Two things impressed me. One of them is the FORMAL emphasis given to Tamil in worship. It seems that wherever they went, vaishnavaites have carried their tradition with them. I do not see that among saivaites in this country, and do not ever remember a PRIEST in India reciting Thevaram or Thiruvasagam in front of Siva. May be I have poor memory.

I do remember the stories of nayanmars including Nandanar. What struck me was it took Siva to directly interfere in human affairs whereas Ramanujam has done a great job in bringing social equality among men

Didn't mean to stir up things.
Thanks
Sam

dondu(#11168674346665545885) said...

"வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தமிழ்மணப் பெரியவர் டோண்டு சார்!"

இது கொஞ்சம் ஓவர் சார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

முகமூடி said...

// இனிமையான தமிழ்ப் பாடல்களை கேக்கிறதுக்குத் தான் பெருமாள் பிரபந்தம் பாடுறவங்களைத் தொரத்திக்கிட்டுப் போறார் //

தமிழகம் தவிர்த்த மற்ற மாநிலங்களில் பெருமாள் யாரை துரத்துகிறார்?

டிஸ்கி: பாருங்க, ஸ்மைலி இல்லை. ஆக இது கிண்டல் இல்லை.

ilavanji said...

வந்துட்டேன்! நல்ல கருத்துக்கள் சிலவற்றை அறிந்துகொண்டேன்!

நன்றி!!!

rv said...

// இனிமையான தமிழ்ப் பாடல்களை கேக்கிறதுக்குத் தான் பெருமாள் பிரபந்தம் பாடுறவங்களைத் தொரத்திக்கிட்டுப் போறார் //

நல்ல கருத்து குமரன்.


நம்ம இராகவன் ஏதோ ஆர்வத்துல சொல்லிட்டாரு. அதுக்கு போய் இவ்வளவு உணர்ச்சிவசப்படறீங்களே.. :(

குமரன் (Kumaran) said...

சாம், நீங்கள் அமெரிக்காவில் பார்த்ததை வைத்து மட்டும் இந்த முடிவுக்கு வரவில்லை என்று எண்ணுகிறேன்.

நீங்கள் சொன்ன கன்னட அர்ச்சகர் பல்லாண்டு பாடுவது பெரிய விஷயம் இல்லை என்று எண்ணுகிறேன். இராமாநுஜர் காலத்தில் அரசாண்ட சோழ மன்னனின் கொடுங்கோன்மையை தவிர்க்க இராமாநுஜர் சிறிது காலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள மேல்கோட்டையில் சிறிது காலம் தங்கியிருந்தார். அப்போது அவருடன் சென்ற தமிழ் வைணவர்களும் அவர் திரும்பி வந்த பின்னும் அங்கேயே தங்கிவிட்டனர். அங்கிருக்கும் போது மன்னன் முதல் பலரும் வைணவர்களாய் மாறி பிரபந்தம் பாடக் கற்றுக் கொண்டனர். அந்த வைணவர்கள் இப்போது வெளி நாடு வந்தாலும் அந்தப் பாசுரங்களைப் பாடுகிறார்கள்.

இங்கு எங்கள் ஊரில் இருப்பவர் திருப்பதியைச் சேர்ந்தவர். அவர் பேசும் தமிழும் நீங்கள் சொல்வது போல் தான். ஆனாலும் அவரும் எல்லா ஆழ்வார்களின் பாசுரங்களும் அழகாகப் பாடுவார்.

நீங்கள் சொல்லும் சிவ ஆலயங்களில் இருக்கும் அர்ச்சகர்கள் தமிழ்நாட்டுக் காரர்களாய் இருப்பின் நிச்சயம் தேவார திருவாசகங்கள் தெரிந்தவராய் இருப்பார்கள். அவர்கள் வேறு மாநிலத்தவராய் இருப்பின் வாய்ப்புகள் மிகக் குறைவு. வரலாற்று ரீதியாக இதற்கும் விளக்கம் தரலாம்.

குமரன் (Kumaran) said...

//இது கொஞ்சம் ஓவர் சார்.//

டோண்டு சார். இது ஏன் சார் ஓவர்ன்னு சொல்றீங்க? நீங்க தான தமிழ்மணத்தில் நிரந்தர நட்சத்திரம்? அது மட்டும் இல்லாம பல துறைகளிலும் பெரும் அனுபவம் பெற்ற வயதில் மூத்தவர். அதனால் தான் தமிழ்மணப் பெரியவர் என்று சொன்னேன். சந்தோசமா இந்தப் பட்டத்தை ஏத்துக்கோங்க சார். :-)

சரி. சரி. எல்லாம் வயித்தெரிச்சல்ன்னு ஒத்துக்கறேன். இந்த வார நட்சத்திரம் நான்னு சொன்னாங்க. ஆனா அப்படியா இருக்கு? எங்கப் பார்த்தாலும் டோண்டு, போலி டோண்டு உங்க பேருதான் எல்லாப் பதிவுலயும். ஹும் அதுக்கு நீங்க என்ன தான் பண்ணுவீங்க. என்ன மாதிரி எல்லாரும் உங்க மேல வயித்தெரிச்சல் பட்டா அதுக்கு நீங்களா பொறுப்பு? நிச்சயமா போலி டோண்டு தான்கறதை நான் ஒத்துக்கறேன். :-)

குமரன் (Kumaran) said...

தங்கள் அருமையான கேள்விக்கு மிக்க நன்றி முகமூடி. அந்தந்த மாநிலத்தில் போய் தான் கேட்கவேண்டும். தமிழ்நாட்டில் தமிழைத் துரத்தும் பெருமாள் மற்ற மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகளைத் துரத்துவாராய் இருக்கும். வெளிநாடுகளில் அந்தந்த நாடுகளின் மொழிகளைத் துரத்துவாராய் இருக்கும். இல்லையா? ஆனால் எனக்குத் தெரிந்து தமிழ்நாட்டில் தமிழைத் தான் துரத்துகிறார் பெருமாள்.

குமரன் (Kumaran) said...

வந்ததுக்கும் நல்ல கருத்துகளை தெரிந்து கொண்டதற்கும் மிக்க நன்றி இளவஞ்சி.

குமரன் (Kumaran) said...

இராம்ஸ், இராகவன் மேல எந்த கோபமும் இல்லை. ஆனால் அவர் என் கருத்துகளைச் சொல்ல ஒரு வாய்ப்பு கொடுத்துட்டார். அதை விட மனசு வரலை. அதனால அப்படி எழுதினேன். :-) நீங்க ரொம்ப வருத்தப் படாதீங்க. இராகவனும் ரொம்ப வருத்தமாட்டார்.

Unknown said...

//ஆனால் எனக்குத் தெரிந்து தமிழ்நாட்டில் தமிழைத் தான் துரத்துகிறார் பெருமாள்//

அதனாலதான சந்தேகம் கேட்குறோம்?.,

//மற்ற மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகளைத் துரத்துவாராய் இருக்கும்//

அப்படித்தான் இருக்கும் இதுலயெல்லாம் எங்களுக்குச் ச்ந்தேகமே வராது.

டிக்கி :-)) :-)) :-)) :-)) ஒண்ணுக்கு நாலு சிரிப்பி போட்டுருக்கேன்.

G.Ragavan said...

// இராகவனும் ரொம்ப வருத்தமாட்டார். //

அப்பக் கொஞ்சமா வருத்தப் படுவேன்னு சொல்றீங்களா குமரன்? ஹா ஹா ஹா. உங்கள் கேள்விகளைக் கேட்டு என்னோட வாயைக் கிண்டுறீங்க. நீங்க எதிர்பார்க்கிறதைச் சொல்லீர்ரேன். சரிதானே.

// இராகவன், ஒரு சின்ன வாய்ப்பு கிடைத்துவிடக் கூடாதே. சந்துல சிந்து பாடிடுவீங்களே. முருகன் புகழைப் பேசுவதைத் தான் சொல்கிறேன். :-) //

அது என் கடமையல்லவா. ஆடும்பரி வேல் அணி சேவல் எனப் பாடும் பணியும் பணியாய் அளித்தான்.

////உண்மையான சைவ சித்தாந்தத்தில் தமிழுக்குதாம் முதலிடம். நடுயிடம். கடைசியிடம் எல்லாம்.//
அப்படியா? அப்ப பொய்யான சைவ சித்தாந்தம்ன்னு ஒன்னு இருக்கா? அதில் தமிழுக்கு இடமில்லையா? :-) //

இல்லை என்றுதான் தோன்றுகிறது. சைவசித்தாந்தக் கருத்துகள் தமிழ்நாட்டிலேயே தோன்றிச் சிறப்புற்றது என்பதில் யாருக்கும் ஐயமில்லை. ஆனால் இன்றைக்குத் திருக்கோயில்களில் தமிழா முதலிடம் வகிக்கிறது? முருகக் கடவுளுக்குச் செய்யும் வழிபாடுகளில் கூட வடமொழிதானே முன்னிற்க்கிறது. அதையும் மறுக்க முடியாதே. இங்கு தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும் என்றல்லவா எழுதி வைத்திருக்கிறார்கள். மாறாக இங்கு வடமொழியிலும் அர்ச்சனை செய்யப்படும் என்றல்லவா எழுதப்பட்டிருக்க வேண்டும். திருக்கோயில் குடமுழுக்குகள் தமிழிலா நடக்கின்றன? தமிழில் நடத்த முடியாதா? நடத்தக்கூடாதா? இன்னும் நிறைய சொல்லலாம் குமரன்.

////சைவத்திலும் தமிழ் அமுதுகள் எக்கச்சக்கம். வைணவத்தை விட எண்ணிக்கையிலும் நிறையவும் கூட.
//
முதல் வார்த்தை சரி. சைவத்திலும் தமிழ் அமுதுகள் எக்கச்சக்கம் என்று சொல்லுங்கள். உண்மை என்று ஒத்துக் கொள்கிறேன். ஆனால் என்னவோ வைணவத்தைக் கரைத்துக் குடித்துவிட்டது போல 'வைணவத்தை விட எண்ணிக்கையிலும் நிறையவும் கூட' என்று எல்லாம் தெரிந்த தமிழ்மணப் பெரியவர் மாதிரி பேசுகிறீர்கள்? //

உண்மைதான் என்னுடைய வார்த்தையில் சற்று அகம்பாவம் தொனித்திருக்கிறது. இங்கு இண்டெர்நெட் கனெக்ஷன் சரியாக இல்ல்லாததால் அவசர அவசரமாக எழுதியதில் அந்தத் தவறு நேர்ந்திருக்கலாம். வைணவத்தில் என்னறிவு மிகக்குறைவே. திருப்பாவையைத் தாண்டி எங்கும் போனதில்லை என்பதே உண்மை.

// சொன்ன மாதிரி நான் இந்தப் பதிவை இட்டதற்கு ஒரு காரணம் இந்த மாதிரி அரைகுறையாய் இருக்கும் ஒரு அறியாமையான எண்ணத்தை வெளிக் கொண்டு வரத்தான். உங்களுக்கு இந்தப் பதிவில் சொல்லப்பட்ட விஷயம் இந்தப் பதிவைப் படிப்பதற்கு முன்பே தெரியும் என்று எனக்கும் தெரியும். ஆனால் மேலே 'வைணவத்தை விட' என்று சொல்லியிருப்பது என் சந்தேகத்தை உறுதி செய்கிறது. சைவத்திற்கு இருக்கும் தமிழ்த் தொடர்பை தமிழுலகம் நன்கு அறியும். ஆனால் வைணவத்தில் இருக்கும் தமிழை அவ்வளவாக அறியாது. இதனைப் பற்றி இன்னும் நிறைய பேச வேண்டும் போலிருக்கிறது. //

பேசுங்கள். கேட்கிறோம்.

// இதற்கு இன்னொரு காரணம் மேலே சொன்னபடி 'தென்னாடுடைய சிவன்' என்று சொல்வதும் 'முருகனை மட்டும் தமிழ்க்கடவுள்' என்று சொல்வதும் என்று நினைக்கிறேன். பழந்தமிழ் மரபில் மாயோனும் ஐந்து நிலக் கடவுளர்களில் ஒருவன் தானே? அப்படி என்றால் அவனையும் தமிழ்க் கடவுள் என்று கூறுவதில் என்ன தயக்கம்? சிவனும் முருகனும் எப்படித் தமிழ்க் கடவுளர்களோ அதே மாதிரி மாயவனும் கொற்றவையும் தமிழ்க் கடவுளர்களே!!! //

குமரன், நீங்கள் இங்குதான் சறுக்குகின்றீர்கள் என்று தோன்றுகிறது. மருதத் தலைவன் மாயனும் இன்றைய மாலும் ஒருவரா என்ற ஆய்வும் ஏற்கப்பட வேண்டியதே. அந்த மாயந்தான் இந்த மாயனா என்று என்னால் உறுதியிட்டுக் கூற முடியாது.

விஷ்ணுவைத் தமிழ்க்கடவுள் என்று சொல்வதில் தமிழறிஞர்களுக்கு எவ்வளவு ஏற்பு என்றுதான் இப்பொழுது கேட்க வேண்டும்.

ramachandranusha(உஷா) said...

ÌÁÃý, ¾Á¢ú¿¡ðÊø ÁðÎÁøÄ, ¯Ä¸õ ÓØÅÐõ «ÅÃÅ÷ ¸¼×û «ÅÃÅ÷ ¦Á¡Æ¢ §Àº¢, «ÅÃÅ÷ ¸¡ŠðäÁ¢ø¾¡ý ¸¡ðº¢ÂÇ¢ôÀ¡÷.

குமரன் (Kumaran) said...

முகமூடி & அப்டிபோடு அக்கா, டிஸ்கிங்கறீங்க, டிக்கிங்கறீங்க. யாருங்க அவரு? எனக்குத் தெரியலையே?

குமரன் (Kumaran) said...

நான் எதிர்பார்த்ததைச் சொல்லிட்டீங்க இராகவன். விண்மீன் வாரம் முடிஞ்ச பிறகு நம்ம விவாதத்தைத் தொடரலாம். :-)

மாயனும் விஷ்ணுவும் என்ற தலைப்பிலும் நிறைய விவாதம் நடக்க வேண்டும் இராகவன். பல நூறு வருடம் நடந்த கலாச்சார கொடுக்கல் வாங்கலில் அவர்கள் இருவரும் (அவர்கள் தனித்தனியானவர்களாக இருக்கும் பட்சத்தில்) பிரித்தறிய முடியாதபடி ஒன்றாகிவிட்டார்கள்.

கந்தனும் ஸ்கந்தனும் ஒன்றாகிவிட்ட போதும் முருகன் தமிழ்கடவுளாய் இருக்கலாம்; ஆனால் விட்டுணு தமிழ்கடவுள் இல்லையா?

குமரன் (Kumaran) said...

உஷா. வெட்டி ஒட்டுவதில் ஏதோ தகராறு. நீங்கள் இட்டப் பின்னூட்டத்தைப் படிக்க முடியவில்லை. கொஞ்சம் பாருங்கள்.

ramachandranusha(உஷா) said...

இதோ இன்னொரு முறை, முகமூடி மற்றும் அப்படிப்போடு கண்ணுக்கு மட்டும் தெரிந்தால் போதும் :-)

//குமரன், தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் அவரவர் கடவுள் அவரவர் மொழி பேசி, அவரவர் காஸ்ட்யூமில்தான் காட்சியளிப்பார்//

குமரன் (Kumaran) said...

உண்மைதான் உஷா. இறைவன் தான் எல்லாவகையிலும் நமக்கு மிகவும் நெருங்கியவன் அப்படிங்கறதால நம்ம மொழிதான் இறைவன் பேசுவான்; நம் உடைகளைத் தான் இறைவன் அணிவான். இன்னொன்னும் சேர்த்துக்கலாம். ஆணாய் இருந்தால் இறைவன் ஆணாய்த் தெரிவான். பெண்ணென்றால் பெண்ணாவான்.

Machi said...

வாசிங்டன் பெரு நகரில் உள்ள வட அமெரிக்க முருகன் ஆலயத்திற்க்கு வந்தீர்கள் என்றால் தேவார பாடல்களை கேட்கலாம் நீங்களும் இறைவன் முன் பாடலாம்.
பெருமாலுக்கு அர்ச்சனை / அபிசேகம் செய்யும் போது வடமொழியுடன் தீடீரென்று நடுவில் பல்லாண்டு பல்லாண்டு, ஓங்கி உலகளந்த என்று தமிழ் பாசுரங்களை கேட்கும் போது உள்ளம் அடையும் ஆனந்தமே தனி... அதனுடன் ஏன் தமிழக கோயில்களில் தமிழ் அர்ச்சனை இல்லை என்ற கேள்வியும் வருவது தவிர்க்க முடியாதது.

தமிழக கோயில்களில் தமிழுக்கு முதலிடம் வேண்டும் என்பதில் வைணவ ஆன்றோர்களை விட சைவ ஆன்றோர்கள் அதிகம் போராடுவதாக எனக்கு தெரிகிறது. உ.ம். கரூரில் கோயில் குடமுழுக்கை வட மொழியில்லாமல் தமிழ் மொழியில் செய்யவேண்டும் என்ற போராட்டம்.. கடும் போராட்டத்திற்கு பின் அதில் வெற்றி கண்டார்கள் என்பது மகிழ்வான செய்தி.

Unknown said...

நன்றி உஷா., இதெல்லாம் எங்களுக்குத் தெரியாமையா இருக்கு? :-)).,

குமரனும், இரகவனும் சைவமா?., வைணவமான்னு வந்துட்டாங்க.. குமரன்., 63 நாயன்மார்கள் பாடிய பாடல்கள்., அதிலும் மூவேந்தர்கள் அனைவரும் சைவத்தையே போற்றினர்., வைணவத்தை மறுதளிக்கவில்லை. சிவாலயங்கள் எழுப்புவதையே தன் ஆட்சியின் நோக்கமாகக் கொண்டு செயல் பட்ட சோழ மன்னர்களை வரலாறு காட்டுகிறது. பன்னிரண்டு ஆழ்வார்களில், மார்கழிப் புண்ணியத்தால் அதிகம் தெரிவது ஆண்டாள் மட்டுமே., மற்றும் பூதம், பேய்ன்னு அவங்க பெயர்கள் இருப்பதுகூட யாரும் அண்டாம இருக்கிரதுக்கு காரணமா இருக்கலாம் (:-))ச்சும்மா!). ஆனால் அப்பர் பாடிய தேவாரம் இன்றும் இலங்கை போன்ற உண்மையான தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் கோவில்களில் இசைக்கப்படுகிறது. நம்மூர் கோவில்களிலும் அவ்வப்போது இசைக்கப்படுகிறது ஒத்துக்கொள்கிறேன். (நாயன்மார் வரலாறு படிக்கும்போது எனக்கென்னவோ மனதில் நிற்பது கண்ணப்பன் வரலாறுதான்., உயிரைக் கொடுத்த மெய்பொருள் நாயனாரை விட (எல்லாம் கதைதானே?) மாயன்... எப்படி மாயவன் ஆனான்?. இதெல்லாம் விட தமிழர்களுக்கென அவரவர் தெய்வங்கள்., (அவர்களை சிறு தெய்வங்களாக்கி விட்டனர்!!!). அவர்களுக்கான பாடல்கள் இருக்கின்றன விருமாண்டி, பேச்சிக்கு உள்ள பாடல் விருமாண்டி பட (படத்தில் உள்ளதா?) ஒலிநாடாவில் உள்ளதே அதைப்போல. ஒவ்வொரு சிறு தெய்வத்திற்கும் ஒரு பாடல் அல்லது சில வரிகளாவது உண்டு நமது நாட்டுப்புற பாடல்களை அமர்ந்து கேட்டால் தெரியும்.

தமிழனுடைய கடவுள்களுக்கு கோவில்கள் இல்லை., மர நிழலும், எல்லைக் கரையும்தான். அமர்ந்து பாட, அங்கேயே உண்டு, உறங்க மண்டபங்கள் இல்லை. (சத்திரம், சாவடின்னு தனியா இருந்துது அதுவும் நடந்து களைத்தவன் ஓய்வெடுக்கத்தான்). தன்னுடைய உழைப்பில் விளைந்தவற்றை தன் முப்பாட்டனுக்கு காட்டுவதற்காய் சுமந்து சென்று (அரிசி, கோழி, ஆடு)., தான் விரும்பியவற்றையும் தன் முன்னோர் வழிபட்ட முறை மாறாமலும் பொங்கள் வைத்து படையல் இடுவதுதான் தமிழன் வழிபாடு. கோவில் எப்படி வந்துச்சு., அங்கு மண்டபம் எப்படி வந்துச்சு?., கும்பிட வர்றவன்., அவன் கொண்டு வந்து அமைதியா கொண்டாடிட்டுப் போவது மறைக்கப்பட்டு., 'அர்ச்சனை சீட்டு' எப்படி வந்தது?. இந்த ஆராய்ச்சியெல்லாம்... இந்தா நம்ம இராகவன் சொல்றாருல்ல...

//ஆனால் இன்றைக்குத் திருக்கோயில்களில் தமிழா முதலிடம் வகிக்கிறது? முருகக் கடவுளுக்குச் செய்யும் வழிபாடுகளில் கூட வடமொழிதானே முன்னிற்க்கிறது. அதையும் மறுக்க முடியாதே. இங்கு தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும் என்றல்லவா எழுதி வைத்திருக்கிறார்கள். மாறாக இங்கு வடமொழியிலும் அர்ச்சனை செய்யப்படும் என்றல்லவா எழுதப்பட்டிருக்க வேண்டும். திருக்கோயில் குடமுழுக்குகள் தமிழிலா நடக்கின்றன? தமிழில் நடத்த முடியாதா? நடத்தக்கூடாதா? இன்னும் நிறைய சொல்லலாம் குமரன்.//

இதோடு சேர்ந்து ஆராய்ச்சி பண்ண வேண்டிய விதயங்களப்பு.

Unknown said...

பேச்சி புலங்கிய இடந்தில் மீனாட்சி., திருமால் அங்கு மட்டும் கள்(ளர்)ழகர் ஆன மர்மம். மதுரையில் மட்டும்தான் இப்படி :-)))) அப்புறம் இயற்கைக்குப் பயந்ததால் நம்மாளுக பாம்பை வழிபட்டார்கள்., அதை பரமன் கழுத்தில் சுற்றி விட்டாச்சு. கையில் பார்த்தால் பம்பை, உடுக்கை என நமக்குப் பழக்கமான கருவிகள்., அடையாளம் போய் எங்கு பரமன்... பாமரன் ஆகிவிடுவானோ என்ற பயத்தில் மூணாவதா அவருக்கு ஒரு கண். அவருக்கு ரெண்டு புள்ள., அதுல ஒண்ணு நல்லாத் தமிழ் பேசுற., ஆழகு தமிழ் புள்ள. எழுதிக்கிட்டே போகலாம்..... ஆனா ஒரு பயனும் இருக்காது.

Unknown said...

அட 'பொங்கல்'., டிஸ்கி, டிக்கி விளக்கம். டிஸ்கி-டிஸ்கிளைமர்., டிக்கி - எல்லாத்துக்கும் பின்னால பின்குறிப்பு வர்றதுனால.

//கந்தனும் ஸ்கந்தனும் ஒன்றாகிவிட்ட போதும் //
இதெப்போ நடந்துச்சு?

ramachandranusha(உஷா) said...

அப்படிப்போடு, சின்ன வயசில இப்படி எடக்கு மடக்கா கேள்வி கேட்டு உருப்படவே மாட்டே என்ற ஆசிர்வாதம் பெற்றவள் நான். இயற்கையின் அற்புகங்களோ அல்லது வாழ்க்கையில் நடக்கும் சில விஷயங்களை கண்கூடாய் பார்க்கும்பொழுது அந்த ஆதியும் அந்தமும் இல்லாத ஒன்று உண்டா என்ற சம்சயம் லேசாய் தோன்றும். ஆனால் ஆள் ஆளுக்கு ஆன்மீகம் என்ற பெயரில் கடவுளுக்கு விதவிதமாய் பெயர்கள், கடவுளின் மொழி என்றெல்லாம் சொல்வதைப் பார்த்தால் ஒன்றும் சொல்லாமல் எஸ்கேப்தான். என் அப்பா, ராஜாஜி சொன்னதாய் சொன்னது, "மனுஷன் ஒவ்வொருவரையும் கண்காணிக்க ஒரு போலீஸ் போட முடியாது. ஆனால் கடவுள் என்று ஒன்று உண்டு என்று ஒன்றைக்காட்டினால் கொஞ்சமாவது பயப்படுவான் இல்லையா? அப்படிதான் கடவுள் என்ற கான்செப்ட் தோன்றியது" என்றாராம்.

புத்தபகவான் மாதிரி இதைப்பற்றி பேசுவதையே விட்டு விட்டேன். குமரன் கோச்சிக்கப் போகிறார். உங்க எடத்துல நீங்க ஆரம்பிங்க, ஜோதில ஐக்கியம் ஆகிறேன். ஆங், கேட்க மறந்துட்டனே, வீட்டுல எப்படி :-)

ramachandranusha(உஷா) said...

குமரன், போன என்னுடைய பின்னுட்டம் உங்களுக்கு தர்ம சங்கடத்தை தந்தால் அதைப் போட வேண்டாம்.

rv said...

டாபிக் ரொம்ப மாறிப்போனா மாதிரி இருக்கு!


திருப் பேர்புகல் என்கின்றாய்!
அருகர்புத்த ராதி என்பேன் அயன் என்பேன் நாரா
யணன் என்பேன் அரன் என்பேன் ஆதிசிவனென்பேன்..
பரமம் என்பேன் பிரமம் என்பேன் பரப்பிரமம் என்பேன்...
சுத்தசிவம் என்பன்இவை சித்துவிளை யாட்டே!

இதுக்கு விளக்கம் கேக்க மாட்டீங்களே, குமரன்? :)))

----
நீங்கள் கேட்ட மாதிரி நம்ம பதிவிலும் விளக்கம் போட்டாச்சு!

Unknown said...

//சின்ன வயசில இப்படி எடக்கு மடக்கா கேள்வி கேட்டு உருப்படவே மாட்டே என்ற ஆசிர்வாதம் பெற்றவள் நான்//.

அச்சச்சோ!!

// உங்க எடத்துல நீங்க ஆரம்பிங்க, ஜோதில ஐக்கியம் ஆகிறேன்//
உட்காரட்டுங்க நம்மாளு., அப்புறம் பாருங்க நம்ம ஆரம்பத்த!. (வெளம்பரம்., உதார் எப்படி வேணும்னாலும் பச்சப் பிள்ளைக... நினைச்சுக்கட்டும்...!!!).

//வீட்டுல எப்படி //

அதையேன் கேக்கிறிங்க?., நான் கேக்குற நியாயமான கேள்விகளினால்., இப்போ கொஞ்சம் பக்தி குறைச்சிருக்கு.

//என்னுடைய பின்னுட்டம் உங்களுக்கு தர்ம சங்கடத்தை தந்தால்//
உஷா., தர்ம சங்கடம் வர்ற மாதிரி ஒண்ணுமில்லையே நீங்க எழுதினதில்.

G.Ragavan said...

// நான் எதிர்பார்த்ததைச் சொல்லிட்டீங்க இராகவன். விண்மீன் வாரம் முடிஞ்ச பிறகு நம்ம விவாதத்தைத் தொடரலாம். :-) //

அட இது இன்னும் முடியலையா! சரி. எனக்குத் தெரிஞ்சதும் கொஞ்சம். தெரிஞ்சதைச் சொல்றேன்.

// மாயனும் விஷ்ணுவும் என்ற தலைப்பிலும் நிறைய விவாதம் நடக்க வேண்டும் இராகவன். பல நூறு வருடம் நடந்த கலாச்சார கொடுக்கல் வாங்கலில் அவர்கள் இருவரும் (அவர்கள் தனித்தனியானவர்களாக இருக்கும் பட்சத்தில்) பிரித்தறிய முடியாதபடி ஒன்றாகிவிட்டார்கள். //

கலாச்சாரக் கொடுக்கல் வாங்கல் எல்லா ஊர்களிலும் மதங்களிலும் இருக்கிறது. குத்து விளக்கெற்றியே பழக்கப்பட்ட தமிழ்ப் பெண்கள் கிருத்துவர்களாக மாறிய பிறகு சிலுவைக்குறி போட்ட குத்துவிளக்குகள் ஏற்றுவதில்லையா...அதுவும் கொடுக்கல் வாங்கலே. இஸ்லாமியக் கோட்பாடுகளோடு கொஞ்சம் மாறியவை என்று சொல்லப்பட்டாலும் தர்காக்களும் கொடுங்கல் வாங்கல் கோட்பாடே. அதில் தவறில்லை. வேதம் தமிழ் செய்தது எல்லாம் உண்மைதான். அதே போல் விவிலியமும் தமிழ் செய்திருக்கிறார்களே. திருக்குரான் கூடத் தமிழில் கிடைக்கிறதே. இவையெல்லாம் கால ஓட்டங்களில் கிடைப்பவை. அதனால் ஏசுபிரானைத் தமிழ்க்கடவுள் என்று கூற முடியுமா என்று தெரியவில்லை.

// கந்தனும் ஸ்கந்தனும் ஒன்றாகிவிட்ட போதும் முருகன் தமிழ்கடவுளாய் இருக்கலாம்; ஆனால் விட்டுணு தமிழ்கடவுள் இல்லையா? //

கந்தனும் ஸ்கந்தனும் ஒன்றானதும் உண்மைதான். இரண்டும் கலந்ததும் உண்மைதான். ஆனாலும் பாருங்கள்....இத்தனை கலப்புக்குப் பிறகும் அனாதிநாதன் அந்தப் பழைய பெயர் முருகன் என்றே சொல்லப் படுகிறான். விரிசடையனுக்கும் கொற்றவைக்கும் கூட அந்த நிலை இல்லையே. இத்தனைக்கும் செறிவூட்டலுக்கு முன்னமே கொற்றவை மகன் முருகன் என்ற கொண்டாடலும் உண்டு. நெருப்போடு கலந்ததெல்லாம் நெருப்பு என்பது போல தன்னோடு கலந்ததெல்லாம் தானே என்று சொல்லி முருகன் முருகனாகவே இருப்பதால்தான் அவனுக்குத் தமிழ்க் கடவுள் என்ற அடைமொழி.

நான் சைவமா வைணவமா என்று வாதாடவில்லை. என்னைக் கேட்டால் எல்லாம் ஒன்றுதான். நேற்றுக்காலையில் கூட அடையாற்றில் உள்ள அனந்த்த பத்மநாபசுவாமி கோயிலுக்குச் சென்று வணங்கி வந்தேன்.

நான் பேசுவது தமிழ்க்கடவுள் என்ற அடைமொழியையும் இன்றைக்குத் திருக்கோயில்களில் தமிழ் எங்கிருக்கிறது என்பது பற்றியும் தான்.

G.Ragavan said...

இதில் இன்னொரு விஷயம் கவனித்தீர்களா...இராகவன் சைவத்தின் பக்கமாம். குமரன் வைணவத்தின் பக்கமாம். :-)

G.Ragavan said...

இன்னொரு விஷயம் சொல்ல மறந்துட்டேனே.

அதெப்படி திருமுருகாற்றுப்படைதான் தமிழில் வந்த முதல் சமய நூலுன்னு கேட்டீங்களே. அதுக்கு நிறைய ஆதாரங்கள் காட்ட முடியும்.

இப்பொழுது இருக்கின்ற தமிழ் இலக்கிய நூல்களில் திருமுருகாற்றுப்படையே வயதில் மூத்த சமய நூல் என்று தமிழ் ஆராய்ச்சியாளர்கள் ஒத்துக் கொள்கிறார்கள்.

ஒரு எடுத்துக்காட்டு, ஸ்ரீசந்திரனார் என்ற தமிழ்ப் பேராசியர் சங்க நூல்களுக்கு உரையெழுதியுள்ளார். அதில் திருமுருகாற்றுப்படையைக் குறித்து நான் சொல்லிய வண்ணமே கூறியுள்ளார். அதற்கு முன்புள்ள சமயம் சார்ந்த தனிப்பாடல்கள் கிடைத்திருந்தாலும் முதன் முதலாக சமய நூலாக எழுந்தது திருமுருகாற்றுப்படையே என்பதில் தமிழறிஞர்களிடையில் எந்த ஐயப்பாடும் இருப்பதாகத் தெரியவில்லை.

மேலும் ஸ்ரீசந்திரனார் சைவராகவோ முருகனடியவராகவோ இல்லை. இவர் சமண சமயத்தைச் சார்ந்தவர். ஆகையால்தான் அவருடைய பெயரைச் சொன்னேன். தமிழ்த்தாத்தாவையே மீனாட்சி சுந்தரம்பிள்ளையையோ சொல்வதைக் காட்டிலும் இது உங்களுக்கு சரியான விளக்கத்தைக் கொடுக்கும் என்பதற்காகவே சொன்னேன்.

குமரன் (Kumaran) said...

//குமரன், நீங்கள் இங்குதான் சறுக்குகின்றீர்கள் என்று தோன்றுகிறது//

இங்கும் நான் சறுக்கவில்லை என்று தான் நினைக்கிறேன் இராகவன். நாரணனைப் பாடும் பாடல்கள் சங்க கால இலக்கியங்களில் இருப்பதை ஆராய்ந்து உரைந்த நூட்களை நான் படித்திருக்கிறேன். இப்போது அவை என்னிடம் இல்லாததால் இணையத்தில் தேடிப் பார்க்கிறேன். அப்படிக் கிடைத்தால் தனிமடல் அனுப்புகிறேன்.

சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்வதால் ஒரு விஷயம் மக்கள் மனதில் ஆழப் பதிந்து விடுகிறது. அப்படி தான் முருகனை மட்டுமே தமிழ்க்கடவுள் என்று சொல்லுவதும் என்று எண்ணுகிறேன். தொடக்கத்தில் முருகன் இறையனாருக்கு அடுத்து தமிழ்ச்சங்கத் தலைவனாய் இருந்து தமிழை வளர்த்தான் என்ற செய்தியை அடிப்படையாகக் கொண்டு முருகனைத் தமிழ்க்கடவுள் என்று சொல்லப் புகுந்தார்கள். அது பின்னர் முருகன் மட்டுமே பழந்தமிழர் வழிபட்டக் கடவுள் என்ற தொனியில் தமிழ்க்கடவுள் முருகன் என்று சொல்லவாரம்பித்துவிட்டார்கள்.

குமரன் (Kumaran) said...

விஷ்ணுவைத் தமிழ்கடவுள் என்று தமிழறிஞர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று தான் எண்ணுகிறேன். ஆனால் அவர்கள் முன் நான் வைக்கும் கேள்வி அப்படி என்றால் எப்படி சங்க காலத்திற்கு முன்னேயே பாகவதத்தில் சொல்லப்பட்ட கண்ணனின் திருவிளையாடல்களும், இராமனைப் பற்றிய செய்திகளும் இலக்கியத்தில் வந்தன? பலராமன் வழிபாடு இன்றைக்கு ஒரிஸா மாநிலத்தைத் தவிர்த்து மற்ற இடங்களில் அழிந்து பட்டுப் போயிற்று. ஆனால் சிலப்பதிகாரமும் மற்றத் தமிழ் இலக்கியங்களும் பலராமன் வழிபாடு பற்றி சொல்கின்றனவே? முருகனைத் தமிழ்க்கடவுள் என்று நிறுவ எடுத்துக் கொள்ளும் சான்றுகளும் இந்த இலக்கியங்களில் இருந்து தானே வருகின்றன. அப்படியிருக்கும் போது மாலவனை மட்டும் தமிழ்க்கடவுள் என்று ஏற்றுக் கொள்ள என்ன தயக்கம்? பரிபாடல் பாடவில்லையா மாயவனைப் பற்றி? பாடல் வரிகள் இங்கு என்னிடம் இல்லாததால் கொடுக்க இயலவில்லை.

குமரன் (Kumaran) said...

//தமிழக கோயில்களில் தமிழுக்கு முதலிடம் வேண்டும் என்பதில் வைணவ ஆன்றோர்களை விட சைவ ஆன்றோர்கள் அதிகம் போராடுவதாக எனக்கு தெரிகிறது.//

இந்தப் போராட்டங்கள் நிச்சயம் வெற்றி பெறும் என்று எண்ணுகிறேன். ஏனெனில் உரிமையைக் கேட்டு எழும் போராட்டங்கள் எல்லாமே தருமத்தின் பக்கம். எந்தப் பக்கம் தருமம் இருக்கிறதோ அந்தப் பக்கம் இறைவன் இருக்கிறான்; எந்தப் பக்கம் இறைவன் இருக்கிறானோ அந்தப் பக்கம் வெற்றி இருக்கிறது.

குமரன் (Kumaran) said...

அப்டிப் போடு அக்கா. நீங்கள் சொன்னதை எல்லாம் ஏற்றுக் கொள்கிறேன். நீங்களே இவற்றைப் பற்றி எல்லாம் உங்கள் பதிவில் எழுதினால் என்ன?

மூவேந்தர்கள் அனைவரும் சைவத்தையே போற்றினர் என்பது தவறான செய்தி அக்கா. மூவேந்தர்கள் சைவத்தையும் வைணவத்தையும் மாறி மாறிப் போற்றியுள்ளனர். சிலர் சமணர்களாகவும் (சமணர் என்றால் ஜைனர் மட்டும் அன்று என்பார் இராம.கி.) இருந்திருக்கிறார்கள்.

சோழர்கள் பெரும்பாலும் சைவர்களாகவும் பாண்டியர்களும் சேரர்களும் பெரும்பாலும் வைணவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். பாண்டியர் தலைநகராகிய மதுரையம்பதியை ஆள்வது மீனாட்சியும் சொக்கனும் என்பதால் அவர்களும் சைவர்களாகவே இருந்தார்கள் என்ற எண்ணம் இருக்கிறது. அது அவ்வளவு சரியில்லை என்பது கல்வெட்டிலும் இலக்கியங்களிலும் வரும் செய்தி. பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான குலசேகரர் சேர அரசன் என்பது தெரியும் என்று எண்ணுகிறேன்.

மேலே சொன்ன மாதிரி சிறு தெய்வங்களைப் பற்றி நீங்கள் எழுதுங்கள் அக்கா. விருமாண்டி, பேச்சியம்மன் கதை விருமாண்டிப் பட ஒலித்தட்டில் கேட்டிருக்கிறேன். விகடனில் குலதெய்வங்களைப் பற்றி வந்தத் தொடரை விரும்பிப் படித்தேன். அதிலும் விருமாண்டி, பேச்சியம்மன் கதைகள் வந்தன. சிறு வயதில் அம்மாவுடன் அடிக்கடி வைகைக் கரையில் இருக்கும் பேச்சியம்மன் கோயிலுக்குச் சென்றது நினைவிற்கு வந்தது. இப்போதும் மதுரைக்குப் போகும் போது (ஒவ்வொரு முறையும் இல்லாவிட்டாலும்) பேச்சியம்மன் படித்துறைக்குப் போய் பேச்சியம்மனை வணங்கி வருவேன்.

பேச்சியம்மன் சரஸ்வதியின் அம்சம், விருமாண்டி பிரம்மாவின் அம்சம் என்று ஒரு நம்பிக்கை இருப்பதாகவும் படித்திருக்கிறேன்.

//பேச்சி புலங்கிய இடந்தில் மீனாட்சி., திருமால் அங்கு மட்டும் கள்(ளர்)ழகர் ஆன மர்மம். மதுரையில் மட்டும்தான் இப்படி :-)))) அப்புறம் இயற்கைக்குப் பயந்ததால் நம்மாளுக பாம்பை வழிபட்டார்கள்., அதை பரமன் கழுத்தில் சுற்றி விட்டாச்சு. கையில் பார்த்தால் பம்பை, உடுக்கை என நமக்குப் பழக்கமான கருவிகள்., அடையாளம் போய் எங்கு பரமன்... பாமரன் ஆகிவிடுவானோ என்ற பயத்தில் மூணாவதா அவருக்கு ஒரு கண். அவருக்கு ரெண்டு புள்ள., அதுல ஒண்ணு நல்லாத் தமிழ் பேசுற., ஆழகு தமிழ் புள்ள. எழுதிக்கிட்டே போகலாம்..... ஆனா ஒரு பயனும் இருக்காது.//

எழுதுங்க அக்கா. ஏன் பயனில்லை என்று நினைக்கிறீர்கள். மாற்றம் வேண்டும் என்றால் முதல் தேவை அறிவு, விழிப்புணர்ச்சி. அதற்கு உங்களுக்குத் தெரிந்தவற்றை எழுதவும் பேசவும் வேண்டும். தேவையில்லாத விஷயங்களில் உங்கள் நேரத்தையும் எனர்ஜியையும் செலவு செய்வதற்கு நீங்கள் இதனைப் பற்றி எழுதலாம். படிப்பதற்கு முதல் ஆள் நான் இருக்கிறேன்.

குமரன் (Kumaran) said...

டிஸ்கி, டிக்கி விளக்கத்திற்கு நன்றி அக்கா.

கந்தனும் ஸ்கந்தனும் ஒன்றானது திருமால் கள்ளழகர் ஆனபோது. :-)

குமரன் (Kumaran) said...

உஷா. நீங்கள் அப்டிபோடு அக்காவிடம் பேசிக் கொண்டிருப்பதால் நான் ஒன்னும் சொல்லவில்லை. நீங்கள் நிறையச் சொல்லுங்கள். நான் கோபித்துக் கொள்ள மாட்டேன். நீங்கள் சொன்னதில் எதுவுமே எனக்குத் தர்மசங்கடம் ஏற்படுத்துபவையாக இல்லை. அதனால் அந்தப் பின்னூட்டத்தைப் போட்டுவிட்டேன்.

குமரன் (Kumaran) said...

இராமநாதன், நீங்கள் கொடுத்திருக்கும் பாடலின் பொருள் எனக்குப் புரிகிறது. ஆனாலும் விளக்கம் சொன்னால் மிக்க மகிழ்வேன். அதிகம் செய்யுட்களை மட்டும் இட்டுக் கொண்டிருந்தால் படிப்பவர்கள் பயந்து போய்விடுவார்கள். விளக்கமும் இருந்தால் அவர்களில் ஒன்றிரண்டு பேராவது வந்துப் படிப்பார்கள்; தமிழின் இன்சுவையைச் சுவைப்பார்கள் என்பதே என் எண்ணம்.

குமரன் (Kumaran) said...

//வேதம் தமிழ் செய்தது எல்லாம் உண்மைதான். அதே போல் விவிலியமும் தமிழ் செய்திருக்கிறார்களே. திருக்குரான் கூடத் தமிழில் கிடைக்கிறதே. இவையெல்லாம் கால ஓட்டங்களில் கிடைப்பவை. அதனால் ஏசுபிரானைத் தமிழ்க்கடவுள் என்று கூற முடியுமா என்று தெரியவில்லை.
//

இராகவன், வேதம் தமிழ் செய்யப்பட்ட ஒன்றை வைத்து நீங்கள் உங்கள் வாதத்தை வைத்திருக்கிறீர்கள். மேலே சில தமிழ் இலக்கியங்களைப் பற்றி கொடுத்திருக்கிறேன். அந்த இலக்கியங்களில் எல்லாம் ஏசுபிரானைப் பற்றிப் பேசவில்லை. ஆனால் மாலவனை, கண்ணனை, இராமனை, விட்டுணுவை, பலராமனைப் பேசுகின்றன. அதன் அடிப்படையிலேயே தான் நான் இந்தக் கேள்வியை வைத்தேன். இவை எல்லாம் நீங்கள் சொல்லும் கால ஓட்டத்தில் வந்தவை அல்ல. முருகன் மட்டுமே தமிழ்க்கடவுள் என்று நிறுவ எடுத்துக் கொள்ளும் சான்றுகள் உள்ள அதே தமிழ் இலக்கியங்களில் உள்ள சான்றுகளே. அதனால் நிச்சயம் மாலவனும் தமிழ்கடவுளே என்று சொல்லலாம். ஏசுநாதரைச் சொல்ல முடியாவிட்டாலும்.

குமரன் (Kumaran) said...

இராகவன், விநாயகன் என்றாலும் தனக்கு மேல் நாயகன் இல்லாதவன் என்று தான் பொருள். ஆதி மூலமே என்று யானை அழைத்த போது வந்தவன் மாலவன் தானே தவிர மற்றவர் இல்லை. அது போலத் தான் அனாதிநாதனும். அது கௌமாரம் தரும் விளக்கம். அது முருகன் மட்டுமே தமிழ்க் கடவுள் என்று நிறுவ எப்படிச் சான்றாக முடியும்?

விரிசடையன் பரமேஸ்வரன் ஆனான். கொற்றவை ஆதிபராசக்தி ஆனாள். நீங்கள் சொல்லும் வாதத்தை அங்கேயும் சொல்லலாமே.

எல்லாவற்றையும் விட நீங்கள் எடுத்துக் கொள்ளும் சொல் - அனாதிநாதன் என்பதே தனித் தமிழ்ச் சொல் அன்றே? நாத: என்பதன் தமிழ் வடிவம் நாதன். ஆதி என்றால் தொடக்கம். அ என்று முன்னால் போட்டு அதனை எதிர்ப்பதமாக்குவது வடமொழி இலக்கணம். தமிழ் இலக்கணம் அன்று. அதனால் அனாதிநாதன் என்பது முருகன் மட்டுமே தமிழ்க் கடவுள் என்பதையோ நெருப்போடு கலந்ததெல்லாம் நெருப்பாய் மாறினாலும் நெருப்பு நெருப்பாகவே நிற்கின்றது என்பதும் ஒட்டவில்லை.

குமரன் (Kumaran) said...

//நான் சைவமா வைணவமா என்று வாதாடவில்லை. என்னைக் கேட்டால் எல்லாம் ஒன்றுதான். நேற்றுக்காலையில் கூட அடையாற்றில் உள்ள அனந்த்த பத்மநாபசுவாமி கோயிலுக்குச் சென்று வணங்கி வந்தேன்.

நான் பேசுவது தமிழ்க்கடவுள் என்ற அடைமொழியையும் இன்றைக்குத் திருக்கோயில்களில் தமிழ் எங்கிருக்கிறது என்பது பற்றியும் தான்.
//

நானும் அப்படியே இராகவன். மேலே சாம் கேட்டக் கேள்விக்கு நான் தந்த பதிலில் எங்காவது சைவத்தைத் தாழ்த்திப் பேசியிருக்கிறேனா சொல்லுங்கள்.

அதே மாதிரி முருகன் தமிழ்க் கடவுள் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் முருகன் மட்டுமே தமிழ்க்கடவுள் என்று சொல்வதை ஒத்துக் கொள்ளவில்லை. திருக்கோவில்களில் தமிழ் எங்கிருக்கிறது என்பதில் நமக்கு அபிப்ராய பேதம் இல்லை என்று தான் எண்ணுகிறேன்.

குமரன் (Kumaran) said...

//இராகவன் சைவத்தின் பக்கமாம். குமரன் வைணவத்தின் பக்கமாம்//

இது காலத்தின் கோலம் இராகவன். நீங்கள் வேண்டுமானால் சைவத்தின் பக்கம் மட்டும் இருக்கலாம். ஆனால் நான் வைணவத்தின் பக்கம் மட்டும் இல்லை. வைணவத்தை உயர்த்த சைவத்தையோ வேறு சமயங்களையோ தாழ்த்திப் பேச முயல மாட்டேன்.

குமரன் (Kumaran) said...

//முன்புள்ள சமயம் சார்ந்த தனிப்பாடல்கள் கிடைத்திருந்தாலும்//

இராகவன், எத்தனையோ இலக்கியங்கள் அழிந்துப் பட்டுப் போகின்றன. அவை இன்று கிடைக்கவில்லை என்பதாலோ ஆராய்ச்சியாளர்களுக்குச் சிக்கவில்லையென்பதாலோ அவை இருந்ததே இல்லை என்று சொல்ல முடியுமா? ஏதோ தனிப்பாடல்களாவது இருந்தது என்று ஒத்துக் கொள்கிறீர்களே. அது சரி. திருமுருகாற்றுப் படை முதல் சமய நூல் என்று இந்த ஆராய்ச்சியாளர் தமக்குக் கிடைத்த நூலை வைத்துச் சொல்வதால் மட்டுமே முருகன் மட்டுமே தமிழ்க் கடவுள் என்று நிறுவிவிட முடியுமா? அப்படி என்றால் அந்த தமிழ்ப் பாடல்களிலும் மேலே நான் சொன்ன இலக்கியங்களிலும் வரும் கண்ணனைப் பற்றிய செய்திகளை எங்கே சேர்ப்பது?

நீங்கள் சந்திரனாரைக் காட்டினாலும் சரி, தமிழ்த் தாத்தாவைக் காட்டினாலும் சரி, மீனாட்சிச் சுந்தரம் பிள்ளையைக் காட்டினாலும் சரி. இந்த வாதம் எடுபடவில்லையே.

G.Ragavan said...

குமரன், முதலில் ஒன்றைத் தெளிவாகச் சொல்லி விடுகிறேன். சொல்லி விட்டதாகத்தான் நினைத்தேன். ஆனால் உங்கள் பின்னூட்டங்களைப் படிக்கையில் சரியாகச் சொல்லவில்லையோ என்றும் தோன்றுகிறது.

நான் வைணவத்திற்கோ வேறு எந்த மதத்திற்கோ எதிரி அல்ல. நான் முன்பே சொன்னது போல சைவ சூப்பும் எனக்குப் பிடிக்கும். அசைவ சூப்பும் எனக்குப் பிடிக்கும். எல்லாம் ஒன்றுதான். ஆகையால் வைணவத்தை நான் தாழ்த்திப் பேசுவதாக நீங்கள் கொஞ்சமும் எண்ணக்கூடாது.

மேலும் இன்றைய திருக்கோயில்களில் தமிழின் இடம் எங்கிருக்கிறது என்பதில் இருவருமே ஒத்துப் போகிறோம்.

நான் சொல்ல வருவதெல்லாம் தமிழ்க்கடவுள் என்ற அடைமொழி பற்றி மட்டுந்தான்.

சரி. விஷயம் பற்றிய பின்னூட்டத்தைப் பிறகு இடுகிறேன்.

G.Ragavan said...

// இராகவன், எத்தனையோ இலக்கியங்கள் அழிந்துப் பட்டுப் போகின்றன. அவை இன்று கிடைக்கவில்லை என்பதாலோ ஆராய்ச்சியாளர்களுக்குச் சிக்கவில்லையென்பதாலோ அவை இருந்ததே இல்லை என்று சொல்ல முடியுமா? ஏதோ தனிப்பாடல்களாவது இருந்தது என்று ஒத்துக் கொள்கிறீர்களே. அது சரி. திருமுருகாற்றுப் படை முதல் சமய நூல் என்று இந்த ஆராய்ச்சியாளர் தமக்குக் கிடைத்த நூலை வைத்துச் சொல்வதால் மட்டுமே முருகன் மட்டுமே தமிழ்க் கடவுள் என்று நிறுவிவிட முடியுமா? அப்படி என்றால் அந்த தமிழ்ப் பாடல்களிலும் மேலே நான் சொன்ன இலக்கியங்களிலும் வரும் கண்ணனைப் பற்றிய செய்திகளை எங்கே சேர்ப்பது? //

குமரன், பரிபாடல் காலத்திற்கு முன்னாலேயே சமணக் கருத்துகளும் பவுத்தக் கருத்துகளும் கூட தமிழ் இலக்கியங்களில் இருந்தன. மூன்று சமணக் காப்பியம். ஒரு பவுத்தக் காப்பியன். ஒன்றுதான் தமிழ்க்காப்பியம். அதுதான் நிலைத்தது. அப்படி இருப்பதால் புத்தரைத் தமிழ்க் கடவுள் என்றும் அருகரைச் செந்தமிழ்த் தெய்வம் என்றும் சொல்ல முடியுமா?

மற்ற கடவுள்கள் விஷயத்தில் தமிழை முழுவதுமாக அகற்றி விட்டும் அந்தக் கடவுள்களைப் பற்றிச் சொல்லலாம். ஆனால் முருகன் விஷயத்தில் அப்படியில்லை. அரும் பெரும் மரபின் பெரும் பெயர் முருக என்கிறார் நக்கீரர். முருகனோடு தொடர்புடைய அனைத்தும் தமிழோடும் தமிழ் மக்கள் வாழுமிடத்தோடும் தமிழ்ப் பண்பாட்டோடும் தொடர்புடையது.

திருமாலை நானும் வழிபட்டாலும் மாயனை மன்னு வடமதுரை மைந்தன் தானே. திருமாலைக் கடவுள் என்று ஏற்றுக் கொள்வதிலும் வணங்குவதிலும் எனக்கு எந்த மறுப்பும் கிடையாது. ஆனால் தமிழ்க் கடவுள் என்ற அடைமொழி..ம்ம்ம்ம்...என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆகையால்தான் அதைத் தமிழறிஞர்கள் தீர்மானிக்கட்டும் என்று விட்டு விட்டேன்.

// நீங்கள் சந்திரனாரைக் காட்டினாலும் சரி, தமிழ்த் தாத்தாவைக் காட்டினாலும் சரி, மீனாட்சிச் சுந்தரம் பிள்ளையைக் காட்டினாலும் சரி. இந்த வாதம் எடுபடவில்லையே.//

நீங்கள் நிச்சயமாகப் படிக்க வேண்டியது கி.வா.ஜவின் வழிகாட்டி என்ற புத்தகம். அல்லயன்ஸ் நிறுவனத்தார் வெளியிடுகிறார்கள். அடுத்த முறை போகும் பொழுது வாங்க வேண்டும்.

G.Ragavan said...

// தொடக்கத்தில் முருகன் இறையனாருக்கு அடுத்து தமிழ்ச்சங்கத் தலைவனாய் இருந்து தமிழை வளர்த்தான் என்ற செய்தியை அடிப்படையாகக் கொண்டு முருகனைத் தமிழ்க்கடவுள் என்று சொல்லப் புகுந்தார்கள். அது பின்னர் முருகன் மட்டுமே பழந்தமிழர் வழிபட்டக் கடவுள் என்ற தொனியில் தமிழ்க்கடவுள் முருகன் என்று சொல்லவாரம்பித்துவிட்டார்கள். //

இந்தச் செய்திக்கு ஆதாரமே கிடையாது. ஏற்றுக் கொள்ள முடியாத செய்தி. பழந்தமிழர் வழிபாட்டுக் கடவுள் முருகன் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

முருகன் மட்டுமல்ல. வள்ளியும் கூட பழந்தமிழ்க் கடவுள்தான். முதலில் இருவரும் வெவ்வேறு கடவுளாக இருந்து பிறகு கலப்பால் கணவனும் மனைவியுமார்கள் என்று கூட படித்திருக்கிறேன். எந்தப் புத்தகம் என்று மறந்து போய் விட்டது.

G.Ragavan said...

// மூவேந்தர்கள் அனைவரும் சைவத்தையே போற்றினர் என்பது தவறான செய்தி அக்கா. மூவேந்தர்கள் சைவத்தையும் வைணவத்தையும் மாறி மாறிப் போற்றியுள்ளனர். சிலர் சமணர்களாகவும் (சமணர் என்றால் ஜைனர் மட்டும் அன்று என்பார் இராம.கி.) இருந்திருக்கிறார்கள். //

மாறி மாறிப் போற்றியுள்ளார்கள் என்றும் சொல்ல முடியாது குமரன். பெரும்பாலான சமயங்களில் சைவத்தைப் போற்றியிருக்கிறார்கள். நடுநடுவில் வைணவமும், சிற்சில சமயங்களில் சமணமும் இருந்திருக்கின்றன.

// சோழர்கள் பெரும்பாலும் சைவர்களாகவும் பாண்டியர்களும் சேரர்களும் பெரும்பாலும் வைணவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். பாண்டியர் தலைநகராகிய மதுரையம்பதியை ஆள்வது மீனாட்சியும் சொக்கனும் என்பதால் அவர்களும் சைவர்களாகவே இருந்தார்கள் என்ற எண்ணம் இருக்கிறது. அது அவ்வளவு சரியில்லை என்பது கல்வெட்டிலும் இலக்கியங்களிலும் வரும் செய்தி. பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான குலசேகரர் சேர அரசன் என்பது தெரியும் என்று எண்ணுகிறேன். //

உங்கள் கருத்து நிச்சியம் விவாதத்திற்குரியது. இதற்கு நான் பதில் சொல்ல முடியாது. தமிழறிஞர்களும் ஆராய்ச்சியாளர்களும்தான் பதில் சொல்ல முடியும்.

பாண்டியர்களுக்கும் சேரர்களுக்கும் கொஞ்சம் சகிப்புத்தன்மை இருந்தது என்பதே உண்மை. ஆகையால் மாற்று சமயத்தவரை மறுக்காமல் இருந்திருக்கிறார்கள்.

குலசேகரனுடைய மகன் தீவிர சைவன். அப்பன் போன வழி போகவில்லை தெரியுமா? குலசேகர ஆழ்வாரின் தந்தையும் சைவரே. அவரைத் தவிர யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை.

இப்பொழுது திருவனந்தபுரம் என்று சொல்கின்ற ஊருக்குப் பழைய பெயர் சேடகமாடகம். சேரன் போருக்குப் போகையில் சிவன் கோயில் மாலை வருகிறது. வணங்கி வாங்கி தலையில் சூடிக் கொள்கிறான். சேடகமாடகத்திலிருந்தும் மாலை வருகிறது.

அது அவனுக்குப் புற சமயத்து மாலை. ஆகையால் மரியாதை குடுக்க விரும்பவில்லை. அதே நேரத்தில் அது அன்பின் பொருட்டு வந்தது. அதை அவமதிக்கவும் விரும்பவில்லை. இப்பொழுது என்ன செய்வது? மாலையை வாங்கி ஒற்றைத் தோளில் போட்டுக் கொண்டானாம். கொஞ்சம் அறியாமை என்றாலும் சகிப்புத்தன்மையும் இருந்திருக்கிறது. இதுதான் உண்மையான நிலை.

குமரன் (Kumaran) said...

//குமரன், பரிபாடல் காலத்திற்கு முன்னாலேயே சமணக் கருத்துகளும் பவுத்தக் கருத்துகளும் கூட தமிழ் இலக்கியங்களில் இருந்தன. மூன்று சமணக் காப்பியம். ஒரு பவுத்தக் காப்பியன். ஒன்றுதான் தமிழ்க்காப்பியம். அதுதான் நிலைத்தது. அப்படி இருப்பதால் புத்தரைத் தமிழ்க் கடவுள் என்றும் அருகரைச் செந்தமிழ்த் தெய்வம் என்றும் சொல்ல முடியுமா?
//

இராகவன். உங்கள் சௌகரியத்திற்காக பரிபாடலை ஐம்பெருங்காப்பியங்களுக்குப் பின்னாலே தள்ளிவிட்டீர்கள் பார்த்தீர்களா? நான் படித்தவரை பரிபாடல் சங்ககால இலக்கியம். ஐம்பெரும் காப்பியங்கள் சங்க காலத்திற்குப் பிந்தியவை. நீங்கள் உங்கள் வசதிக்காக பரிபாடலின் காலத்துக்கு முன்னாலேயெ சமணக் கருத்துகளூம் பௌத்தக் கருத்துகளும் தமிழ் இலக்கியங்களில் இருந்தன என்று சொன்னால் உண்மையாகிவிடுமா? உங்கள் இஷ்டப்படி தமிழ் இலக்கியங்களின் காலத்தை மாற்றுவது தவறப்பா.

//அப்படி இருப்பதால் புத்தரைத் தமிழ்க் கடவுள் என்றும் அருகரைச் செந்தமிழ்த் தெய்வம் என்றும் சொல்ல முடியுமா?
//

காலத்தை முன் பின்னாக நீங்கள் எடுத்துக் கொண்டதால் இந்த வாதம் அடிபட்டுப் போகிறது.

//மற்ற கடவுள்கள் விஷயத்தில் தமிழை முழுவதுமாக அகற்றி விட்டும் அந்தக் கடவுள்களைப் பற்றிச் சொல்லலாம். ஆனால் முருகன் விஷயத்தில் அப்படியில்லை. அரும் பெரும் மரபின் பெரும் பெயர் முருக என்கிறார் நக்கீரர். முருகனோடு தொடர்புடைய அனைத்தும் தமிழோடும் தமிழ் மக்கள் வாழுமிடத்தோடும் தமிழ்ப் பண்பாட்டோடும் தொடர்புடையது.
//

இது உங்கள் கருத்து. கொஞ்சம் முயன்றால் என்னாலும் மாயவனின் தமிழ்ப் பண்பாட்டுத் தொடர்பைத் தெளிவாகச் சான்றுகளுடன் கூற முடியும்.

//திருமாலை நானும் வழிபட்டாலும் மாயனை மன்னு வடமதுரை மைந்தன் தானே. //

மன்னு வடமதுரை மைந்தன் என்பதால் மாயனுக்குத் தமிழ்கடவுள் என்ற அடைமொழியைத் தர தயங்கும் உங்கள் மனம் 'கயிலை மலையானை'யும் 'காங்கேயனை'யும் (கங்கை மைந்தனையும்) கங்கைக் கரையில் இருக்கும் சரவணப் பொய்கையில் உதித்தவனையும் தமிழ்க்கடவுளாக ஏற்றுக் கொள்கிறதே. அவர்கள் தமிழ்க் கடவுளராக இருக்க இயலும் என்றால் வடமதுரை மைந்தனும் தமிழ்க் கடவுளாக இருக்க என்ன தடை? ஒரே தமிழ்க் கடவுளான முருகன் பிறப்பதற்கு தமிழ்நாட்டில் இடமே இல்லாமல் போய்விட்டதா? மாலவன் மாயன் வடமதுரையில் பிறந்ததைப் போல் என் குலதெய்வம் குமரனும் கங்கைக் கரையில் போய் பிறக்கிறானே? கண்ணனை வடக்கே அனுப்பியதைப் போல் காங்கேயனையும் அனுப்பிவிடலாமே? என்ன தடை? இவன் தமிழ்க் கடவுள் இல்லையென்றால் இதே வாதத்தின் படி அவனும் தமிழ்க்கடவுள் இல்லையே? :-)

கி.வா.ஜவின் வழிகாட்டி புத்தகத்தை நீங்கள் வாங்கும் போது எனக்கும் ஒன்று வாங்கி எனக்கு அனுப்பிவைக்கிறீர்களா?

குமரன் (Kumaran) said...

//பழந்தமிழர் வழிபாட்டுக் கடவுள் முருகன் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.//

பழந்தமிழர் வழிபட்டக் கடவுள் முருகன் என்பதில் எனக்கும் எள்ளளவும் சந்தேகமில்லை. நான் சொன்னதை நீங்கள் சரியாகப் படிக்கவில்லை என்று எண்ணுகிறேன். பழந்தமிழர் வழிபட்டக் கடவுள் முருகன் மட்டுமே, மாயவன் இல்லை என்று சொல்லும் வாதத்தைத் தான் மறுத்தேன்; மறுக்கிறேன்.

திருவனந்த புரத்தைப் பற்றியும் சேரன் சிவன் கோயில் மாலையை எப்படி ஏற்றுக்கொண்டான் என்பதைப் பற்றியும் சொன்னதற்கு நன்றி.

குமரன் (Kumaran) said...

சரி இராகவன். எங்கள் குலதெய்வம் முருகனுடன் என் இஷ்ட தெய்வம் மாலவனும் தமிழ்க்கடவுள் என்று நிறுவ என்னால் இயன்ற அளவு வாதங்களை எடுத்து வைத்தேன். ஆனால் நீங்கள் ஏற்கனவே முடிவு செய்து பேசுகிறீர்கள் என்பதால் எளிதாகத் தகர்க்க முடிகின்ற வாதங்களை வைக்கிறீர்கள்; நான் வைக்கும் வாதங்களுக்குத் தகுந்த மறுமொழி கூறாமல் தமிழறிஞர்களும் ஆராய்ச்சியாளர்களும் சொல்லட்டும் என்று அதனையே திரும்பத் திரும்பச் சொல்கிறீர்கள். என்னாலும் எல்லாச் சான்றுகளையும் இப்போது எடுத்து வைக்க இயலவில்லை. அதனால் இது திராவிட ஆரிய விவாதம் போல் போய்க் கொண்டிருக்கிறது. இத்துடன் இதனை நிறுத்திவிடலாம் என்று எண்ணுகிறேன்.

நீங்கள் உங்கள் மனம் ஒப்பிய படி கந்தனை மட்டுமே தமிழ்க்கடவுள் என்று சொல்லுங்கள். நான் எனக்குத் தோன்றிய படி கந்தனும் கண்ணனும் இருவருமே பழந்தமிழர் வழிபட்ட தமிழ்க்கடவுளர்கள் என்ரு சொல்லுகிறேன். Let us agree to disagree and come back to this whenever it is more appropriate.

ramachandranusha(உஷா) said...

குமரன், ராகவன், சில கேள்விகள்- விளையாட்டுக்கு இல்லை என்பதை நினைவுருத்திக் கொண்டு மேற்கொண்டு படிக்கவும்.
குமரன், «¾¡ÅÐ முருகனின் அம்மை பார்வதியும், அய்யன் பரமசிவனும் எந்த நாட்டினர்? அவர்கள் வட நாட்டினர் என்றால் குழந்தையில் குமரன் முதலில் பேசியது எந்த மொழியில்? பிறகு தமிழகம் வந்து குமரன் தமிழ் கற்றானா?

G.Ragavan said...

குமரன், தமிழறிஞர்கள் விடை சொல்ல வேண்டிய விஷயத்தில் என்னுடைய விடையை எதிர் பார்த்தால் எப்படி? அந்த அளவிற்கு எனக்குத் தெரிந்திருந்தால் நான் சொல்லியிருக்க மாட்டேனா. என்னுடைய அறிவுக்கு உட்பட்டுத்தானே நானும் சொல்ல முடியும். ஆகையால்தான் பந்தை அறிஞர்களின் பக்கத்திற்குத் தள்ளி விட்டேன். சரி. விடுங்கள்.

ரோஜாவை எந்தப் பெயர் சொல்லி அழைத்தாலும் மணக்கும். அதுதான் உண்மை. அது உங்களுக்கும் தெரியும். எனக்கும் தெரியும். ஆகையால் அத்தோடு நிறுத்திக் கொள்வோம். நீங்கள் கேட்டதால் எனக்குத் தெரிந்தவைகளைச் சொன்னேன். கற்றது கைமண்ணளவுதானே.

G.Ragavan said...

// முருகனின் அம்மை பார்வதியும், அய்யன் பரமசிவனும் எந்த நாட்டினர்? அவர்கள் வட நாட்டினர் என்றால் குழந்தையில் குமரன் முதலில் பேசியது எந்த மொழியில்? பிறகு தமிழகம் வந்து குமரன் தமிழ் கற்றானா? //

உஷா, உங்கள் கேள்வி இன்றைய இந்துமதத்தில் இருந்து வந்திருக்கிறது. ஆனால் முருகனின் உதயம் பல காலகட்டங்களில் பலவிதமாக வந்துள்ளது. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொன்றாக சேர்ந்து கொண்டே வந்துள்ளன. கச்சியப்பரின் கந்தபுராணத்திற்கும் நக்கீரரின் திருமுருகாற்றுப் படைக்கும் இடையே நிறைய வேறுபாடுகள்.

கச்சியப்பரின் கந்தபுராணம் ஒரு மிகச்சிறந்த காப்பியம் என்பதில் ஐயமில்லை. ஆனால் அதில் திருமுருகாற்றுப்படைக்குப் பிறகு உண்டான பிற்சேர்க்கைகளும் உண்டு.

சிலப்பதிகாரத்தில் கூட முருகனும் வள்ளியும் கணவன் மனைவியினர். தெய்வானை பற்றிச் செய்தியே இல்லை. பிள்ளையாரைப் பற்றியும் தான். ஆனால் மலைமகள் மகன் என்றெல்லாம் கொண்டாடுதல் உண்டு. அவளுக்குக் கொற்றவை என்றுதான் பெயர். இன்னும் நிறையச் சொல்லலாம்.

மாறுதல்கள் நிறைய ஏற்பட்டிருக்கின்றன. ஆதியில் முருகனும் வள்ளியுமே தனித்தனி என்றும் தமிழ்க் குழுக்கள் சில போராடி இணைந்த பொழுது முருகனும் வள்ளியும் இணைந்தனர் என்றும் எங்கோ படித்திருக்கிறேன்.

இதுதான் உங்கள் கேள்விக்கு எனது விடை. குமரனுடயை விடைக்காக நானும் ஆவலோடு காத்திருக்கிறேன்.

குமரன் (Kumaran) said...

//குமரன், «¾¡ÅÐ முருகனின் அம்மை பார்வதியும், அய்யன் பரமசிவனும் எந்த நாட்டினர்? அவர்கள் வட நாட்டினர் என்றால் குழந்தையில் குமரன் முதலில் பேசியது எந்த மொழியில்? பிறகு தமிழகம் வந்து குமரன் தமிழ் கற்றானா?
//

உஷா. இது நிச்சயம் ஆராயப் பட வேண்டிய கேள்வி. வடக்கிருத்தல் என்று உணவில்லாமல் நோன்பிருந்து வடக்கு நோக்கி அமர்ந்து உயிரை விடுதல் என்று ஒரு வழக்கமும் சங்க காலத்தில் இருந்திருக்கிறது. அதனால் பழந்தமிழ் மக்களிடம் ஏதோ ஒரு காரணத்தால் வடக்கு ஒரு உயர்ந்த இடத்தைப் பெற்று இருந்திருக்கிறது. அதனால் தான் தென்னாடுடைய சிவனுக்கு வெள்ளிமலையான கயிலை இருப்பிடமாகவும் கொற்றவையாம் பார்வதிக்கு இமயமலை பிறப்பிடமாகவும் வைத்திருந்திருக்கின்றனர்.

இறையனாரும் முருகப் பெருமானும் தமிழ்ச் சங்கங்களில் தலைவர்களாக அமர்ந்து தமிழை வளர்த்தனர் என்றும் இலக்கிய மரபு இருக்கிறது. அது உண்மையா பொய்யா என்று தெரியாது. ஆனால் அப்படி ஒரு மரபு இருக்கிறது.

உங்கள் கேள்விக்கு பலவிதங்களில் பதில் தரலாம். நான் ஒரு விதமாகக் கொடுத்திருக்கிறேன். இராகவன் ஒரு விதமாகக் கொடுத்திருக்கிறார். என்னார் ஐயா இந்தக் கேள்வியைப் பார்த்தால் இன்னொரு விதமாகப் பதில் சொல்லுவார். மற்றவர்களும் அப்படியே. ஆனால் எதுவுமே உங்களுக்கு ஏற்புடையதாக இல்லாமல் போகலாம்.

உங்கள் கேள்விக்கு நேரடியான பதிலாக இல்லாமல் ஆனால் ஏற்ற பதிலாக இராமநாதனின் அண்மைப் பதிவில் நான் போட்ட பின்னூட்டத்தைக் குறிப்பிடலாம் என்று எண்ணுகிறேன்.

http://podhuppaattu.blogspot.com/2006/01/6.html

நாமக்கல் சிபி said...

பிரபந்தப் பாடல்கள் என்றால்
"திருவேங்கடச் சுனையில் மீனாய்ப் பிறக்கும் விதியுடையேன் ஆவேனே."

"பச்சைமா மலை போல் மேனி பவளவாய்க் கமலச்செங்கண்.."

போன்ற பாடல்கள் வருமே, அவையா குமரன்?

வாசிக்கும்போது உள்ளத்தில் மகிழ்ச்சி எல்லையின்றி கரை புரண்டோடுமே..!

நல்ல விளக்கம் குமரன் ஐயா..

Anonymous said...

இறைவன் எங்கோ தனியொரு இடத்தில் அமர்ந்து கொண்டு நீதி வழங்கக் காத்திருக்கிறான் என்ற ஆப்ரஹாமிய இப்ரஹீமியத் தாக்கத்தால் பிறழ்ந்த சிந்தனைப் போக்கைத்தான் இங்கே பலர் எழுதியுள்ள பின்னூட்டங்களிலிருந்து அறிய முடிந்தது. உங்களைச் சொல்லித் தப்பில்லை. இது பழமையான விவாதம்தான். இந்து சமயத்தில் இறைவனும் இதர எல்லா தேவதைகளும் 'உள்ளே' இருப்பவைதாம். இதில் பழசென்ன புதுசென்ன? கந்தசஷ்டிகவசத்தில் 'குண்டலியாம் சிவகுகன் தினம் வருக' என்றால் என்ன பொருளென்று இராகவன் யோசித்ததுண்டா? இந்தச் சுட்டியையும் தட்டித் தவறாமல் படியுங்கள்.
http://www.swami-krishnananda.org/brdup/brhad_III-09.html

- தமிழ்விரகன்

குமரன் (Kumaran) said...

அமாம் சிபி நீங்கள் சொன்ன பாடல்கள் இருக்கும் திரட்டு தான் நாலாயிர திவ்ய பிரபந்தம் - ஆழ்வார்களின் பாடல்கள் / பாசுரங்கள் இருக்கும் திரட்டு.

குமரன் (Kumaran) said...

தமிழ் விரகன், நீங்கள் நானும் இராகவனும் இங்கு செய்துள்ள விவாதத்தைப் பார்த்துவிட்டு இந்த முடிவிற்கு வந்திருந்தீர்களானால், எங்களது மற்றப் பதிவுகளையும் படித்துப் பாருங்கள். இந்து மதத்தில் சொல்லப்பட்ட இறைவனும் தேவர்களும் தேவதைகளும் 'உள்ளே' எல்லா உயிர்கள் எல்லாப் பொருட்கள் இவை 'உள்ளே' இருப்பவை என்பதில் எங்கள் இருவருக்குமே எந்த சந்தேகமும் இல்லை என்பதைப் புரிந்து கொள்வீர்கள். நாங்கள் இங்கு விவாதித்ததே வரலாற்று முறைப்படி முருகனும் மாதவனும் என்பதைப் பற்றித் தான்.

நீங்கள் கேட்டுள்ள கந்தர் சஷ்டி கவசத்தில் வரும் 'குண்டலியாம் சிவ குகன் தினம் வருக' என்பதற்கு பொருள் என்ன என்று எனக்கு ஒரு புரிதல் உண்டு. எனக்குத் தெரிந்த வரை இராகவனுக்கும் ஒரு புரிதல் உண்டு. உங்கள் புரிதல் என்ன என்று சொன்னால் அதற்கும் இங்கு பின்னூட்டங்களில் உள்ள விவாதத்திற்கும் உள்ள தொடர்பு புரியும். சொல்கிறீர்களா?

நீங்கள் கொடுத்த சுட்டியையும் பார்க்கிறேன்.

Anonymous said...

குமரன்,

('குண்டலியாம் சிவ குகன் தினம் வருக' என்பதற்கு பொருள் என்ன என்று எனக்கு ஒரு புரிதல் உண்டு. எனக்குத் தெரிந்த வரை இராகவனுக்கும் ஒரு புரிதல் உண்டு. உங்கள் புரிதல் என்ன)

http://www.celextel.org/stotrasother/skandasashtikavacham.html

http://www.kaumaram.com/text_new/ksk_em.html

http://www.kaumaram.com/articles/aarumuham.html

திருமுருகாற்றுப்படையில் வரும் 'நால்வே றியற்கைப் பதினொரு மூவரொடு ஒன்பதிற் றிரட்டி உயர்நிலை பெறீஇயர்' என்பதன் விளக்கம் இதற்கு முன்னர் தந்த இந்தச் சுட்டியில்.

http://www.swami-krishnananda.org/brdup/brhad_III-09.html

- தமிழ்விரகன்

G.Ragavan said...

// இந்து சமயத்தில் இறைவனும் இதர எல்லா தேவதைகளும் 'உள்ளே' இருப்பவைதாம். இதில் பழசென்ன புதுசென்ன? கந்தசஷ்டிகவசத்தில் 'குண்டலியாம் சிவகுகன் தினம் வருக' என்றால் என்ன பொருளென்று இராகவன் யோசித்ததுண்டா? இந்தச் சுட்டியையும் தட்டித் தவறாமல் படியுங்கள்.
http://www.swami-krishnananda.org/brdup/brhad_III-09.html

- தமிழ்விரகன்//

தமிழ்விரகன், எம் கோ எங்கோ இருக்கிறான் என்றோ நாம் நினைப்போம்? எங்கும் உள்ளான் எனத் தெளிவோம்.

உள்ளும் நின்று புறமும் நிலைத்தானை நானும் விரும்புவேன்.

காலால் எழுப்பும் வித்தையைப் பற்றிக் கேள்வி கொண்டேனேயன்றி கொள்ளக் கொண்டேனில்லை. அதற்கு இறைவன் இன்னும் அருளிக் கொண்டானில்லை.

இதுதான் எனது நிலை. என்னைக் குமரனும் குமரனை நானும் அறிவோம். அது ஒவ்வொருவரின் எழுத்தையும் வாசித்துப் புரிந்தது. நீங்களும் குமரன் சொன்னது போல எங்கள் பதிவுகளை ஒருமுறை படியுங்கள்.

அதே போல உங்கள் கருத்துகளையும் நாங்கள் அறிய வலைப்பூவில் இடுங்கள்.

நன்றி.

குமரன் (Kumaran) said...

தமிழ் விரகன், சுட்டிகளுக்கு மிக்க நன்றி. சஷ்டி கவசத்திற்கு தமிழில் பொருள் எழுத வேண்டும் என்று எண்ணியிருந்தேன். இந்த சுட்டியில் உள்ளது அப்படிச் செய்யும் போது நல்ல உதவியாய் இருக்கும் என்று எண்ணுகிறேன். மிக்க நன்றி.

குமரன் (Kumaran) said...

//காலால் எழுப்பும் வித்தையைப் பற்றிக் கேள்வி கொண்டேனேயன்றி கொள்ளக் கொண்டேனில்லை. அதற்கு இறைவன் இன்னும் அருளிக் கொண்டானில்லை.
//
இராகவன், எனக்கு இது புரியுதுங்கோ...ஆனா எல்லாருக்கும் புரியுமான்னு தெரியலங்கோ...அதனால முடிஞ்சா கொஞ்சம் விளக்குங்கோ.

ramachandranusha(உஷா) said...

குமரன், இரண்டு நாட்களுக்கு முன்பு இங்கு ஒரு பின்னுட்டம் இட்டிருந்தேன். ஆனால் அது வெளியாகவில்லை. எதையும் தவறாக எழுதவில்லை என்றாலும், உங்கள் இடம் அதை வெளியிடுவதோ அல்லது அழித்துவிடுவதற்கோ உங்களுக்கு முழு உரிமையும் உண்டு. முன்பே ஒரு முறை சொல்லியதைப் போல தர்ம சங்கடமாய் இருந்தால் வெளியிட வேண்டாம் என்று
குறிப்பிட மறந்துவிட்டேன். மன்னிக்க, உங்களுக்கு கிடைத்ததா என்பதற்காக இந்த மடல்.

Anonymous said...

>காலால் எழுப்பும் வித்தையைப் பற்றிக் கேள்வி கொண்டேனேயன்றி கொள்ளக் கொண்டேனில்லை. அதற்கு இறைவன் இன்னும் அருளிக் கொண்டானில்லை<

அதற்கு சிலகாலம் 'சும்மா' இருக்க வேண்டும் இராகவன்.

செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்
சும்மாயிரு சொல்லற என்றலுமே
அம்மா பொருளொன்றும் அறிந்திலனே.

>அதே போல உங்கள் கருத்துகளையும் நாங்கள் அறிய வலைப்பூவில் இடுங்கள்.<

மன்னிக்கவும். தனிமை வேண்டி வலையில் எழுதுவதையே நிறுத்தி விட்டேன். இப்பதிவு கண்ணில் பட முக்கியமாய்ச் சொல்ல வேண்டியதைச் சொன்னேன். தங்கள் பொறுமைக்கு நன்றி.

-தமிழ்விரகன்

குமரன் (Kumaran) said...

உஷா. இரண்டு நாட்களுக்கு முன்பு நீங்கள் இட்டப் பின்னூட்டத்தை நான் அழிக்கவில்லை. ப்ளாக்கர் முழுங்கிவிட்டது. எனக்கு மின்னஞ்சலில் உங்கள் பின்னூட்டம் வந்தது. ஆனால் அதனை வெளியிட ப்ளாக்கர் மறுத்துவிட்டது. அதனால் அதனை வெட்டி ஒட்டி என் பதிலுடன் நானே பின்னூட்டமாய் இட்டேன். அது வலைப்பக்கத்தில் அப்போது தெரிந்தது. இப்போது காணவில்லை. மின்னஞ்சலை டெலிட் செய்துவிட்டேன். ரெகவர் பண்ண முடியுமா என்று பார்க்கிறேன். முடிந்தால் அதனை வெட்டி ஒட்டி இன்னொரு பின்னூட்டம் இடுகிறேன்.

இது வரை நீங்கள் இட்ட பின்னூட்டங்களில் எதுவுமே எனக்குச் சங்கடமாக இருந்ததில்லை. அப்படியே இருந்தாலும் அதனை வெளியிடுவதில் எனக்குத் தயக்கம் இருக்காது. அதனால் நீங்கள் அதனைப் பற்றிக் கவலையே பட வேண்டாம். அதனை குறிப்பிடவும் வேண்டாம்.

குமரன் (Kumaran) said...

நீங்கள் சொன்னதெல்லாம் மிக்க உதவியாய் இருந்தது தமிழ்விரகன். மிக்க நன்றி.

குமரன் (Kumaran) said...

உஷா 2/3/2006 அன்று இட்ட பின்னூட்டம்....ப்ளாக்கர் பிரச்சனையால் அன்று வெளியிட முடியவில்லை.

-----

ராகவா, கந்தபுராணம் எந்த நூற்றாண்டில் இயற்றபப்ட்டது என்று சொல்ல முடியுமா? ராமாயணத்தின் தாக்கம் தமிழகத்தில்
அதிகரித்தப்பொழுது தமிழ்கடவுளாம் முருகனை முன்ணிருத்த ராமாயணத்தை இன்சிபிரேஷனாய் வைத்தே கந்த புராணம் உருவாக்கப்பட்டது என்று நானும் படித்திருக்கிறேன்.
குமரன், சிவனும் முருகனும் தமிழ் வளர்த்தார்கள் என்பது மரபு அல்ல, அது ஐதீகம். ஐதீகம் என்பதற்குப் பொருள் அப்படி சொல்லப்படுகிறது என்று நினைக்கிறேன். மரபு என்றால் காலக்காலமாய் தொடர்வது, ஆக இன்றைய தமிழர்கள் வாயில் சிக்குண்டு சீரழியும் டமிலை காப்பற்ற ஏன் அவர்கள் இருவரும் வரவில்லை? இதெல்லாம் புலவர்களின் கற்பனையில்
உதித்தவை. எப்படி தேவ பாஷை என்று சமஸ்கிருதத்தை சொல்கிறார்களோ,( என்னமோ, ஆகாயத்தில் தேவர்களுக்கும், கடவுள்களுக்கும் கம்யூனிகேஷன் சமஸ்கிருதத்தில்தான் என்று நேரில் பார்த்ததுப் போல சொல்லப்படுவது) அப்படித்தான் இதுவும்.

மற்றப்படி, இதை தொடர்வது எனக்கு சம்மதமே ;-)))))

நாமக்கல் சிபி said...

குமரன் ஐயா,

மதுரைக்கு அருகில் இருக்கும் கள்ளழகர் பற்றி ஏதேனும் புலவர்கள்/ஆழ்வார்கள் பாடியுள்ளனரா?

அப்படி ஏதேனும் இருப்பின் நீங்கள் அவற்றையும் எழுதலாமே? (விளக்கத்துடன்)

குமரன் (Kumaran) said...

சிபி. நான் சின்னப் பையன் தான் என்று தான் இதுவரை நினைத்துக் கொண்டிருக்கிறேன். அதனால் ஒவ்வொரு முறை நீங்கள் ஐயா என்னும் போது எங்கோ இடிக்கிறது. :-) வெறும் குமரன் என்று அழைத்தால் போதுமே.

ஆழ்வார்கள் கள்ளழகரைப் பாடாமல் இருப்பாரா? நிச்சயம் பாடியிருக்கிறார்கள். விஷ்ணு சித்தன், கோதைத் தமிழ் - இந்த வலைப்பூக்களைப் பாருங்கள். விஷ்ணு சித்தராகிய பெரியாழ்வார் பாடிய பாசுரங்களுக்கு இன்னும் பொருள் சொல்லத் தொடங்கவில்லை. ஆனால் அவரது வரலாறு சொல்லியிருக்கிறேன். கோதை தமிழில் கோதையாகிய ஆண்டாள் பாடிய பல நாச்சியார் திருமொழிப் பாசுரங்களுக்குப் பொருள் சொல்லியிருக்கிறேன். ஆண்டாள் கள்ளழகர் மேல் பாடிய பாசுரங்களுக்குப் பொருள் சீக்கிரம் இந்த வலைப்பூவில் வரும்.

நாமக்கல் சிபி said...

//வெறும் குமரன் என்று அழைத்தால் போதுமே. //

சரி வெறும் குமரன் அவர்களே!அப்படியே முயற்சி செய்கிறேன்.

//ஆண்டாள் கள்ளழகர் மேல் பாடிய பாசுரங்களுக்குப் பொருள் சீக்கிரம் இந்த வலைப்பூவில் வரும். //

எனது வேண்டுகோளுக்கு செவி சாய்த்த தங்களுக்கு கோடி புண்ணியம்.

இறைவனைப் பற்றிய பாடல்களைப் படிப்பதே புண்ணியம். பிறரும் படிக்கும் வண்ணம் விளக்கத்தோடு கூறுவது தங்கள் பேறு.

குமரன் (Kumaran) said...

//இறைவனைப் பற்றிய பாடல்களைப் படிப்பதே புண்ணியம். பிறரும் படிக்கும் வண்ணம் விளக்கத்தோடு கூறுவது தங்கள் பேறு.
//

உண்மைதான் சிபி. வழி மொழிகிறேன்.

இராகவன் அடிக்கடி சொல்வது போல்

யாமோதிய கல்வியும் எம் அறிவும் தாமே பெற வேலவர் தந்ததனால்...

G.Ragavan said...

// ராகவா, கந்தபுராணம் எந்த நூற்றாண்டில் இயற்றபப்ட்டது என்று சொல்ல முடியுமா? ராமாயணத்தின் தாக்கம் தமிழகத்தில்
அதிகரித்தப்பொழுது தமிழ்கடவுளாம் முருகனை முன்ணிருத்த ராமாயணத்தை இன்சிபிரேஷனாய் வைத்தே கந்த புராணம் உருவாக்கப்பட்டது என்று நானும் படித்திருக்கிறேன்.//

உஷா, கந்தபுராணம் நிச்சயமாக பத்தாம் நூற்றாண்டிற்குப் பிறகு எழுதப்பட்டது என்பதில் ஐயமில்லை. கம்பராமாயணத்துக்குப் பிறகுதான் எழுதப்பட்டிருக்கிறது.

ஆனால் இராமாயணத்தை இன்சிபிரேஷனாக வைத்து எழுந்தது என்ற வாதம் மிகக் கொடுமையானது. திருமுருகாற்றுப்படையிலேயே முருகனைப் பற்றி நக்கீரர் எல்லாம் சொல்லி விட்டார். ஆனால் காப்பிய வடிவில் இல்லை. காப்பிய வடிவில் வந்தது கச்சியப்பரின் வழியாகத்தான். மத்தபடி அதிலுள்ள சரக்குகளை பல பழைய பாடல்களில் பார்க்கலாம். நல்லவேளை இந்தப் பேச்சை கி.வா.ஜ கேட்கவில்லை. திருமுருகாற்றுப்படையை வைத்து வழிகாட்டி என்று ஒரு பெரிய புத்தகமே போட்டிருக்கிறார்.

// குமரன், சிவனும் முருகனும் தமிழ் வளர்த்தார்கள் என்பது மரபு அல்ல, அது ஐதீகம். ஐதீகம் என்பதற்குப் பொருள் அப்படி சொல்லப்படுகிறது என்று நினைக்கிறேன். மரபு என்றால் காலக்காலமாய் தொடர்வது, ஆக இன்றைய தமிழர்கள் வாயில் சிக்குண்டு சீரழியும் டமிலை காப்பற்ற ஏன் அவர்கள் இருவரும் வரவில்லை? இதெல்லாம் புலவர்களின் கற்பனையில் உதித்தவை. //

என்ன உஷா இப்படிச் சொல்லி விட்டீர்கள். குமரன் தமிழைக் காப்பாற்றிக் கொண்டிருப்பது வலைப்பூக்களிலேயே தெரிகிறதே. இது ஒரு குமரன். தெரியாத குமரர்கள் எத்தனை பேரோ. அதில் இறைவனுக்குப் பங்கு இல்லையா என்ன? அவன் கந்தனோ கண்ணனோ...யாராய் இருந்தால் என்ன....

உஷா....கொச்சை என்பது இன்று மட்டுமல்ல அன்றும் இருந்ததுதான். ஆனால் திருந்த வேண்டும் என்பதில் ஐயமில்லை. அன்றைக்கும் இது உண்டு. ஆனால் என்ன...முழுக்க முழுக்கத் தமிழில் இருக்கும். அதையும் இளங்கோ மிகச் சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார். சிலப்பதிகாரத்தில் ஒவ்வொரு கூட்டத்தாரின் பேச்சும் அந்தந்த வட்டார வழக்கில் இருக்கும்.

கோதையின் திருப்பாவையிலும் அழகுமிகும் இப்படிப் பட்ட சொற்களையும் காணலாம். தமிழ் வாழும். நிச்சயம் வாழும். பாருங்கள்....வலைப்பூவில் எத்தனை பேர் எழுதுகிறார்கள்....தமிழைத் தவிர...வேறு எந்த இந்திய மொழியில் இத்தனை பேர் வலைப்பூ எழுதி தொகுக்கப்படுகிறது என்று எனக்குத் தெரியவில்லை!

// எப்படி தேவ பாஷை என்று சமஸ்கிருதத்தை சொல்கிறார்களோ,( என்னமோ, ஆகாயத்தில் தேவர்களுக்கும், கடவுள்களுக்கும் கம்யூனிகேஷன் சமஸ்கிருதத்தில்தான் என்று நேரில் பார்த்ததுப் போல சொல்லப்படுவது) அப்படித்தான் இதுவும்.//

இருக்கலாம். ஒரு நிகழ்வு தொடர்வு ஆகும் பொழுது பின்னால் மரபு ஆகிறது. மரபு பழையதாகப் பழையதாக ஐதீகமாகிறது. சில சமயங்களில் ஐதீகங்கள் தானகவே எழுவதும் உண்டு. எது எப்படியோ தமிழ் பிழைத்தால் சரி. சரிதானே?

Anonymous said...

நீங்கள் சிவன் கோவில்களிலும் தமிழுக்குத் தான் முதலிடம் என்று சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் சைவர்களின் 'கோவிலான' சிதம்பரத்தில் அந்த நிலை இல்லையே?

சிதம்பரம் கோவிலிலும் இந்த மாதிரி நிலை வருமா? அது எந்தக் காலம்?

VSK said...

9th C. AD
Author Work
kambar irAmayaNam

14th C. AD
Author Work
kAchchiyappa civAchchAriyAr kandha purANam


இக்குறிப்பின்படி கந்த புராணம் 14-ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது என இருக்கிறது.
இராமாயணம் 9-ஆம் நூற்றாண்டு.

சரியான நேரத்தில் வந்த மீள்பதிவு!

Anonymous said...

அன்பு குமரா!
சம்பவத்துக்கு நீங்கள் கொடுத்த உரைச் சித்திரவடிவம் ;மிக அழகு! அருமையான விளக்கம்; திவ்வியப் பிரபந்தம் அழகுதமிழின் இன்னோர் வடிவம். இதுவும் இறைவனைப் பாடும் பாடலே!. எங்கள் ஈழத்தில் பெருமாள் கோவில்கள் குறைவு! எனினும் இன்றுவரை எந்தப் பாகுபாடும் கிடையாது. ஏன் தெரியாது என்று கூட சொல்லலாம். வல்லிபுர ஆழ்வார் கோவில்-வல்லிபுரம்- பருத்தித்துறை; வரதராஜப் பெருமாள்-பொன்னாலை- யாழ்ப்பாணம்; பெருமாள் கோவில்- யாழ்ப்பாணம் நகர்- யாழ்ப்பாணம்;இவை பிரபலமான பெருமாள் கோவில்கள்; எனக்குத் தெரிந்தவை,;வேறு நகரங்களில் இருப்பது பற்றித் தெரியவில்லை.
பின்னூட்டங்கள் சுவையான தகவல்களைத் தந்தன!
யோகன் பாரிஸ்

குமரன் (Kumaran) said...

கிஷோர். மிக நல்ல கேள்வியைக் கேட்டிருக்கிறீர்கள். வரலாற்றுரீதியாகவும் தற்போதும் தில்லைப் பெருங்கோயிலில் தமிழுக்கு முதலிடம் இல்லை என்பதாகத் தான் இருக்கிறது. சைவர்களின் முதன்மைக் கோயிலான தில்லைத் திருச்சிற்றம்பலத்திலேயே இந்த நிலைமை என்றால் மற்ற கோயில்களில் என்ன நிலைமையோ என்று தான் கேட்கத் தோன்றுகிறது. அன்று ஒரு அறையில் பூட்டிவைக்கப்பட்டிருந்த தேவாரத் திருமுறைகளை பேரரசன் இராஜராஜ சோழன் தன் அறிவுத் திறமையால் தில்லை மூவாயிரவரின் எதிர்ப்பை வென்று வெளிக் கொணர்ந்தான் என்று கேட்டிருக்கிறோம். இன்று இப்படி நடக்கிறது. தேவாரத் திருவாசகங்கள் பாடத் தில்லையம்பதியிலேயே தடை இருக்கிறது என்று நம்ப முடியவில்லை. சிலர் கோவிலில் அவற்றைப் பாடத் தடையில்லை. கருவறையைப் போன்றத் திருச்சிற்றம்பலத்தில் பாடத் தான் தடை; அது நியதிக்குப் புறம்பு என்கிறார்கள். அதுவும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. திருமுறைகளைப் பாடத் தொடங்கும் முன்பும் பாடி முடித்தப் பின்னும் 'திருச்சிற்றம்பலம்' என்று சொல்லுவார்கள் அடியார்கள். அப்படிப்பட்டச் சிற்றம்பலத்தில் திருமுறைகளைப் பாட தடையா? அது நியதியா? அப்படி ஒரு நியதி இருந்தால் அது கட்டாயம் சட்டபூர்வமாக மாற்றப் படவேண்டும். எல்லோரும் அரசை அதற்காக வலியுறுத்த வேண்டும்.

//சிதம்பரம் கோவிலிலும் இந்த மாதிரி நிலை வருமா? அது எந்தக் காலம்?
//

இதுவே என் கேள்விகளும்.

குமரன் (Kumaran) said...

எஸ்.கே. நீங்கள் கொடுத்தக் காலக் குறிப்பு இந்தப்பதிவில் இருக்கும் பின்னூட்டங்களுக்காக என்று எண்ணுகிறேன். பின்னூட்டங்களில் என்ன பேசினோம் என்பது மறந்துவிட்டது. இன்னொரு முறை பின்னூட்டங்களைப் படித்துப் பார்த்தால் புரியும்.

காலக் குறிப்புகளைக் கொடுத்ததற்கு நன்றி.

குமரன் (Kumaran) said...

யோகன் ஐயா. நீங்கள் சொல்வது சரியே. வைணவத்தில் தமிழ் வடமொழிக்கும் மேலாகத் தான் போற்றப்படுகிறது. வெறும் வாய்ச்சொற்களில் மட்டும் இல்லாமல் செயலிலும் அவ்வாறே. வேதங்களில் புரியாத தத்துவங்களும் பிரபந்தங்களைப் படிப்பதால் தெளிய முடியும் என்பதையே வைணவ ஆசாரியரின் ஒருவரான வேதாந்த தேசிகர் திருவாய்மொழி போன்ற பிரபந்தங்களைப் படித்துத் 'தெளியாத மறைநிலங்கள் தெளிகின்றோமே' என்று கூறுவார்.

எல்லோரும் தமிழும் சைவமும் இணைபிரியாதவை என்று சொல்லிச் சொல்லியே வைணவத்திற்கும் தமிழுக்கும் இருக்கும் நெருங்கிய உறவை மறந்துவிட்டோம். ஆனால் சைவத்திருக்கோவில்களில் தான் தமிழுக்கு அவமானம் நேர்கிறது. எல்லாச் சைவக்கோவில்களிலும் என்று பொதுவாகச் சொல்லவில்லை. ஆனால் 'கோவில்' என்று சைவர்களால் முதன்மைப்படுத்தப் படும் கோவிலான திருச்சிற்றம்பலத்திலேயே இது நடப்பது மிகப்பெரிய வெட்கக்கேடு.

குமரன் (Kumaran) said...

எஸ்.கே. மீண்டும் பின்னூட்டங்களை எல்லாம் படித்துப் பார்த்தேன். நீங்கள் எந்தப் பின்னூட்டத்திற்காக காலக் குறிப்புகளைக் கொடுத்திருக்கிறீர்கள் என்று அறிந்தேன். நன்றி.

நாமக்கல் சிபி said...

இந்த பிரச்சனையெல்லாம் ஒரு வருஷத்துக்கு முன்னாடியே நடந்துடுச்சா :-)

இப்ப புரியுது நீங்க ஏன் ஜி.ராக்கிட்ட விவாதம் பண்ண வேண்டாம்னு சொல்றீங்கனு ;)

Anonymous said...

எனக்கும் படிக்க வாய்பளித்தமைக்கு நன்றி....

குமரன் (Kumaran) said...

ஆமாம் பாலாஜி. இந்த விவாதமெல்லாம் முன்னாலேயே நடந்துருச்சு. இன்னும் முடியலை. :-)

இராகவனோட விவாதம் பண்ணலாம். தவறில்லை. ஆனால் அந்த விவாதம் முடிவிற்கு வராது. ஏனென்றால் அவரின் நிறைய கருத்துகள் மாற்ற இயலாதவை.

குமரன் (Kumaran) said...

பதிவைப் படித்துப் படித்ததைச் சொன்னதற்கும் நன்றி திரு.மௌலி.

கிருஷ்ண மூர்த்தி S said...

இந்தப் பதிவும் பின்னூட்டங்களும் ஏற்கெனெவே படித்தது தான், இருப்பினும் நினைவு படுத்திச் சொன்னதற்கு நன்றி, திரு.குமரன்!

பதிவின் உள்ளடக்கத்திற்கும், பின்னூட்டங்களுக்கும் சம்பந்தமே இல்லாமல் போய்க் கொண்டிருந்ததை அப்போதே கவனித்ததால், விவாதத்தில் இன்னுமொரு எண்ணிக்கை என்ற அளவிலேயே கருத்துச் சொல்ல வேண்டாமே என்று இருந்து விட்டேன்.

உண்மையில், பக்தி இலக்கியம் வைணவம் தமிழுக்குக் கொடுத்திருக்கும் பெரும் கொடை என்பதும், மற்றவை வைணவத்தைப் பின்பற்ற முனைந்தன என்பது தான் வரலாறு. பின்பற்ற முனைந்த அளவுக்குப் புரிந்துகொள்ள இயலாத நிலையில், அவை குறுகிப்போய் நின்றதும், அப்படி முனைந்த முயற்சிகளில் காண முடியும்.

குமரன் (Kumaran) said...

உண்மை தான் ஐயா. நன்றிகள்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

வணக்கம் நட்சத்திரப் பதிவர் குமரன் அவர்களே! நல்லா இருக்கீயளா? அடியேன் இப்போ தான் பதிவுலகத்தில் சேர்ந்துள்ளேன்! புதிய பதிவர்!

"கூடல்"-ன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்! :) நானும் இங்கு கலந்து கொள்ளலாமா?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

வணக்கம் ராகவன் அவர்களே! நல்லா இருக்கீயளா? அடியேன் இப்போ தான் பதிவுலகத்தில் சேர்ந்துள்ளேன்! புதிய பதிவர்! எனக்கு உங்க மகரந்தச் சுவை-ன்னா அவ்வளவு சுவை! இனியது கேட்க மாட்டேனா என்று ஏங்கிய காலங்களும் உண்டு! :)

உங்களுடன் கொஞ்சம் கலந்து கொள்ள வேணுமே, இந்தக் கலந்துரையாடல் - கலந் துறை ஆடலில்! கலந்து கொள்ளலாம் அல்லவா?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//சிலப்பதிகாரம் சமயச்சார்பற்ற நூல் என்று சொல்ல முடியாது. எடுத்த எடுப்பிலேயே மாப்பிள்ளை ஊர்வலம் போகின்ற கோவலனைப் பார்த்து...ஆகா இவனைப் பார்த்தான் முருகன் போல இருக்கிறானடி...என்று பெண்கள் பேசினார்களாம்.//

அருமை! முருகனை மாப்பிள்ளையா நினைச்சிப் பார்க்கத் தான் எம்புட்டு இனிப்பா இருக்கு! அந்த ஸ்டைலும், சிரிப்பும், பழகும் கனிவும், மனத்தால் அன்பும்! என் முருகன் முருகன் தான்!

ஆனா இன்னொன்னும் கவனிச்சீங்களா ராகவன்?

கோவலனை முருகன் போல் இருக்கிறான்-ன்னு பொண்ணுங்க சொல்லுறத்துக்கு முன்னாடியே..."எடுத்த எடுப்பிலேயே"...

கண்ணகியைத் "திருமகள் போல் இருக்கிறாள்"-ன்னு பசங்க சொல்றாங்களாம்! இளங்கோவடிகள் சொல்றாரு! அதையும் சொல்லுங்க! :))

போதில் ஆர் திருவினாள் புகழுடை வடிவென்றும்
காதலாள் பெயர் மன்னும் கண்ணகி என்பாள் மன்னோ!

கண்டுஏத்தும் செவ்வேள்என்று இசைபோக்கிக் காதலால்
கொண்டுஏத்தும் கிழமையான் கோவலன் என்பான் மன்னோ!!

என்ன, சரி தானே ராகவா? :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

100!

குமரனுக்கு அரோகரா!
ராகவனுக்கு ? :))))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ராகவா, சிலப்பதிகாரம் இன்னொன்றும் காட்டுகிறது!

மாதவி நாட்டியத்தைத் துவங்கு முன், அனைத்து நடனங்களுக்கும் (பதினோரு ஆடல்) முதல் நடனமாக = மாயோன் பாணி என்று ஆடினாளாம்! திருமாலைப் பணிந்து நடனம் துவங்குகிறாள், தமிழ் மரபுப் படி!

மல்லல் மூதூர் மகிழ்விழாக் காண்போன்
மாயோன் பாணியும் வருணப் பூதர் நால்வகைப் பாணியும் நலம்பெறு கொள்கை
வான்ஊர் மதியமும் பாடிப் பின்னர்ச்
சீர்இயல் பொலிய நீர்அல நீங்க

உரை: பதினோராடற்கும் முகநிலையாகிய தேவபாணியாவது "காத்தற் கடவுளாகிய மாயோன் பாணி" யென்ப.

இது போல, சிலம்பில் கொட்டிக் கிடக்கிறது!
ஆனால் நாம் தான், நமக்கு எது தோதாக அமைகிறதோ, அதை மட்டும் எடுத்துக் கொள்கிறோம், முழுக் காப்பியத்தையும் சுவைக்காமல்! ஆனையை ஆறு விழியற்றோர் அளந்த கதையாக!

சேரன் செங்குட்டுவன், திருமால் கோயில் மாலையை, ஒரு தோளில் மட்டும் போட்டு அலட்சியப்படுத்தினான்; ஆனால் ஈசன் மாலையைப் பயபக்தியுடன் தலைமேல் சூடிக் கொண்டான் என்று எத்தனை முறை "திரித்துத் திரித்து" எழுதப்பட்டுள்ளது? அதையே திரும்பத் திரும்பப் பல இடங்களில், பின்னூட்டங்களில் சொல்லப்பட்டது?

தமிழ்க் கடவுள் முருகன் என்று பல முறை பரக்க பரக்கச் சொல்லப்பட்டது போல், இதுவும் சொன்னால் இதுவும் நின்று விடும் என்ற நினைப்பில் அல்லவா இந்தச் செய்கை?

இதுவா "இலக்கிய நேர்மை"?
அப்பாவிப் பொதுமக்கள் யாரும் போய், சிலம்பின் பாடலைப் பார்க்க மாட்டார்கள் என்ற தைரியம் தானே இதெல்லாம்??


ஆடகமாடத்து அறிதுயில் அமர்ந்தோன்
சேடம் கோண்டு, சிலர் நின்று ஏத்த,
தெண்- நீர் கரந்த செஞ் சடைக் கடவுள்
வண்ணச் சேவடி மணி முடி வைத்தலின்,
ஆங்கு- அது வாங்கி, அணி மணிப் புயத்துத்
தாங்கினன் ஆகி, தகைமையின் செல்வுழி...

ஈசன் மாலையை ஏற்கனவே மணிமுடியில் சூடிக் கொண்டதால், அங்கு இடமில்லை ஆதலால், இப்போது தரப்படும் இந்த மாலையைத் தோள்களில் "தாங்கிக் கொண்டான்" என்றல்லவா வருகிறது! மாலையைத் திமிராகச் "சூடிக்" கொள்ளவில்லை! இறைவன் மாலை ஆதலாலே, "தாங்கிக்" கொண்டான் என்றல்லவா வருகிறது? "ஒரு தோளில் மட்டும் வாங்கினான்" என்ற பேச்சுக்கு ஏது ஆதாரம்?

இன்னொரு ஈசன் மாலையைத் தோளில் சூடிக் கொண்டதாகவும் வருகிறதே! அதைப் படிக்கவில்லையா? இல்லை "மனம் போல் படிப்பா"?

நிலவுக் கதிர் முடித்த நீள் இருஞ் சென்னி,
உலகு பொதி உருவத்து, உயர்ந்தோன் சேவடி
மறம் சேர் வஞ்சி மாலையொடு புனைந்து!

வஞ்சி மாலையைச் சூடும் பழக்கம் கொண்ட சேரன், இதையும் வஞ்சி மாலையோடு புனைந்து கொண்டான் என்றல்லவா சிலம்பு காட்டுகிறது!

குமரன் சொன்னது நூற்றுக்கு நூறு சரி!
//சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்வதால் ஒரு விஷயம் மக்கள் மனதில் ஆழப் பதிந்து விடுகிறது. அப்படி தான் முருகனை மட்டுமே தமிழ்க்கடவுள் என்று சொல்லுவதும் என்று எண்ணுகிறேன்//

ஆனால் முருக"னும்" தமிழ்க் கடவுள் என்று சொன்னது உண்மை! அதனால் அது நிற்கும்!
ஆனால் மாலையை "ஒற்றைத் தோளில் வாங்கினான்" என்று எத்தனை முறை சொன்னாலும் அது கறை! தமிழ் வெள்ளம் பொங்கும் போது, அடித்துக் கொண்டு ஓடி விடும்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குமரன், நீங்கள் இங்குதான் சறுக்குகின்றீர்கள் என்று தோன்றுகிறது. மருதத் தலைவன் மாயனும் இன்றைய மாலும் ஒருவரா என்ற ஆய்வும் ஏற்கப்பட வேண்டியதே//

சறுக்குவது யார்?
மருதத் தலைவன் = மாயன் என்று சொல்கிறீர்களே!
முல்லை நில மாயோன் என்று கூடவா அறிந்திலீர்?

//அந்த மாயந்தான் இந்த மாயனா என்று என்னால் உறுதியிட்டுக் கூற முடியாது//

அந்தச் சேயோன் தான் இந்த முருகன் என்பதற்கு மட்டும் என்ன ஆதாரம்?

அந்த மாயோன் தான் இந்த மாலா? மாயோன் = மால் என்பதை எத்தனை எத்தனை சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன!

மாயோன் மேய ஓண நன்னாள் = மதுரைக் காஞ்சி = மாயோனுக்குரிய திருவோணம் என்பது என்னவாம்?

ஞாலம் மூன்று அடித் தாய முதல்வன் மாயோன் = கலித்தொகை காட்டுவது என்னவாம்?

//விஷ்ணுவைத் தமிழ்க்கடவுள் என்று சொல்வதில் தமிழறிஞர்களுக்கு எவ்வளவு ஏற்பு என்றுதான் இப்பொழுது கேட்க வேண்டும்//

விஷ்ணு = தமிழ்க் கடவுளா? எவன் சொன்னது?
சுப்ரமணியன், ஸ்கந்தன் = தமிழ்க் கடவுளா? சொல்லுங்க பார்ப்போம்!

"முருகன்" தமிழ்க் கடவுள் என்று சொல்லுங்கள்!
"திருமால்" தமிழ்க் கடவுள் என்று சொல்லுங்கள்!

ஒன்றுக்கு மட்டும் "விஷ்ணு" என்று சொல்லி, இன்னொன்றுக்கு "ஸ்கந்தனை" மறைத்துப் பேசும் மோடி மஸ்தான் ஜிகினா வேலை இங்கு செல்லாது! செல்லாது!

//தமிழறிஞர்களுக்கு எவ்வளவு ஏற்பு//

தொல்காப்பியர் உங்களைப் பொறுத்த வரை தமிழ் அறிஞர் தானே?
இல்லை, அவர் முருகாற்றுப்படை போல் ஒரு நூல் எழுதவில்லை! அதனால் தொல்காப்பியர் தமிழறிஞர் அல்ல என்று சொல்லப் போகிறீர்களா?

இன்றைக்கு கிடைக்கும் தமிழ் நூல்களிலேயே மிகப் பழமையான நூல் தொல்காப்பியம்! அதில்...

மாயோன் மேய காடு உறை உலகமும்
சேயோன் மேய மை வரை உலகமும்

என்று மாயோனைச் சொல்லி விட்டு, அப்புறம் தான் சேயோனைச் சொல்கிறார்! "சிறப்புடை பொருளை முற்படக் கிளத்தல்" என்று சிறப்பான பொருளை முதலிற் சொல்லுதலும் இலக்கிய/இலக்கணம் அல்லவா?

அதே தொல்காப்பியர் இன்னொரு முறை...
"மாயோன் மேய மன் பெருஞ் சிறப்பின்
தாவா விழுப் புகழ்" என்கிறாரே!
"அரும் பெறல் மரபின் பெரும் பெயர் முருக" என்று நக்கீரர் சொல்வது போலவே இல்லை? :))

நக்கீரராவது முருக பக்தர்! ஏதோ உணர்ச்சி வசப்பட்டுச் சொல்லி இருக்கலாம்!
தொல்காப்பியர் எந்த பக்தரும் அல்லவே! தமிழ் இலக்கணத் தந்தை அல்லவா அவர்?

இப்போது சொல்லுங்கள்...
திருமால் "தமிழறிஞர்களுக்கு எவ்வளவு ஏற்பு" என்பதை எவ்வளவு நாள் உடான்ஸ் உட்டுக் கொண்டு இருக்கப் போகிறீர்கள்? தொல்காப்பியர் தமிழ் அறிஞர் தானே?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//வேதம் தமிழ் செய்தது எல்லாம் உண்மைதான்.//

வேதம் தமிழ் செய்தது தென்பாண்டி நாட்டு வேளாளன் = மாறன் என்னும் நம்மாழ்வார்!
அவர் மூல வேதத்தைப் பார்த்துப் பார்த்து மொழிபெயர்ப்பு செய்யவில்லை! வேதங்கள் ஒரு சாராருக்கு மட்டுமே என்று இருந்ததால், அது எல்லாரையும் சென்று அடைய வேண்டுமே என்ற நோக்கத்தில், வேதம் தமிழ் செய்தார்! அதுக்கு முன்னாடி அப்படி யாரும் செய்யலீங்க!

மாறன் திருவாய்மொழியைப் படிச்சிப் பார்த்து, அது தமிழ் வேதம்-ன்னு சொன்னதே சிறந்த சிவபக்தரான இடைக்காட்டுச் சித்தர்! அன்றிலிருந்து தான் அது தமிழ்வேதம் என்று அடைமொழி வழங்கலாயிற்று!

திருவாய்மொழியின் காலம் கிபி 5-6 நூற்றாண்டு! So, வேதம் தமிழ் செஞ்சதுக்காக எல்லாம், திருமால் தமிழ்க் கடவுள்-ன்னு யாரும் சொல்லலை!

அதுக்கும் முன்னாடியே, கி.பி-யிலேயே, பண்டைத் தமிழ்ச் சமூகம், தன் அன்றாட வாழ்வியலில் போற்றிய இறையியல் = மாயோன்-திருமால் என்பதால் தான் தமிழ்க் கடவுள்!


//அதே போல் விவிலியமும் தமிழ் செய்திருக்கிறார்களே. திருக்குரான் கூடத் தமிழில் கிடைக்கிறதே அதனால் ஏசுபிரானைத் தமிழ்க்கடவுள் என்று கூற முடியுமா?//

மேலே விளக்கியாச்சு! இனி மேலாச்சும் இது போல மொக்கை வாதங்களை ரொம்ப இட்லிசட்னியா (இன்டலிசென்ட்டா) வைப்பீர்களா என்ன? :)))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

தமிழ்க் கடவுள் என்றால் = சங்க காலத் தமிழ்க் குடிகள் வணங்கிய கடவுள்! பண்டைத் தமிழ்ச் சமூகம் இறையியலில் எப்படிப் போற்றியது என்ற தமிழ்த் தொன்மம் தான் தமிழ்க் கடவுள்!

Going back to the earliest available history of tamizh civilization, what is that civilization's iRai? = That is the basis of tamizh kadavuL!

அப்படிப் பார்த்தால்
* முதலில் இருக்கும் தொல்காப்பியம் முதற்கொண்டு,
* பதிற்றுப்பத்து/நற்றிணை முதலான எட்டுத் தொகை நூல்களும்
* பின்னர் வந்த திருமுருகாற்றுப்படை முதலான பத்துப் பாட்டு நூல்களும் (பதினெண் மேல் கணக்கு)
* பின்னர் வந்த பதினெண் கீழ்க் கணக்கு நூல்களும்
* பின்னர் வந்த சிலப்பதிகாரம் முதலான காப்பியங்களும்
என்று...அத்தனை பண்டைய இலக்கியங்களிலும் திருமாலும் மாயோனும் பேசப்படுகின்றார்கள்!

வெறும் பேச மட்டுமா படுகின்றான்? இல்லை மக்களின் அன்றாட வாழ்வியலில் இறைவனாக இடம் பெறுகின்றான்!
* குரவைக் கூத்து போன்ற ஆட்டம் பாட்டங்களிலும்
* காதலன் தன் காதலை மெய்ப்பிக்க, திருமால் மேல் சத்தியம்(சூள்) செய்வதும் - கலித் தொகை: 108
* வீரத்தில் மன்னர்கள் திருமாலைப் போல் என்றும், போர் மறவர்கள் திருமாலைப் போல் கறுத்து, வெற்றியுடன் விளங்குகிறார்கள் என்றும்...

இப்படிக் காதல், வீரம், கலை, அகம்/புறம் என்று நீக்கமற நிறைந்து இருப்பதால் தான் = தமிழ்க் கடவுள்!!!


ஏன் மாயோன்/சேயோன் தமிழ்க் கடவுள் என்று சொல்லுபவர்கள், வேந்தன்/வருணன் என்ற மற்ற இருவரைத் தமிழ்க் கடவுள் என்று சொல்லவில்லை?
= ஏனென்றால் அவர்கள் மக்கள் வாழ்வியலில் கலக்கவில்லை! வெறும் நில அடையாளங்களாக மட்டும் நின்று விட்டனர்! இது போல் காதல், வீரம், கலை என்று ஒன்றிலும் அவர்கள் இல்லை! வேங்கடம், அரங்கம், செந்தூர், ஏரகம் என்று தலங்களைக் காட்டும் சங்க நூல்கள், வேந்தன்/வருணனுக்கு அப்படி ஒன்றுமே இல்லை! வெறும் நில அடையாளங்களாக மட்டும் நின்று விட்டனர்!!

இப்போது தெரிகிறது அல்லவா = மாயோனும் சேயோனும் தமிழ்த் தொன்மம், தமிழ்க் கடவுள் என்று....!!

"தமிழறிஞர்கள்" தீர்மானிக்கட்டுமாம்! அடிங்க! தமிழ் இலக்கியங்கள் தீர்மானித்து விட்டன! தமிழறிஞர்கள் தீர்மானித்து விட்டனர்! தொல்காப்பியர் தீர்மானித்து விட்டார்!

சமயச் சட்டை போட்டுக் கொண்டு, அதற்கு மேல் ஒப்புக்குத் தமிழ்ப் போர்வை போர்த்தி இருக்கும் "தமிழ்வறிஞர்கள்" தான் இன்னும் தீர்மானிக்கவில்லை போலும்!

* மாயோனும் சேயோனும் தமிழ்க் கடவுளே!
* திருமாலும் முருகனும் தமிழ்க் கடவுளே!
* இது தாய்த் தமிழ் மேல் ஆணை! சங்கத் தமிழ் மேல் ஆணை!!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

பண்டைத் தமிழ்த் தொன்மத்துக்கு இறை என்பதால் திருமாலும் முருகனும் "தமிழ்க் கடவுளே" தவிர....

இயேசுநாதர்-இறைவன்(பிதாசுதன்), அல்லாவும், எம் ஈசனாகிய தென்னாடுடைய சிவனும், அன்னையும், அருகரும், பெளத்தரும் என்று இன்று தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்ட அனைவரும் "தமிழர் கடவுளே"!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இன்னொரு சேதி:

தமிழ்க் கடவுள் = முருகன் என்ற "அடைமொழிக்கு" ஆதாரம், எந்த இலக்கியத்தைத் தேடினாலும் கிடைக்காது! ஏபி நாகராஜன் சினிமா வசனங்களில் வேண்டுமானால் கிடைக்கலாம்! :) அல்லது இப்படிப் பல முறை சொல்லிச் சொல்லி ஏற்றி விட்டவர்களிடம் கேட்டு "அறிந்து" கொள்ளலாம்!! :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//நெருப்போடு கலந்ததெல்லாம் நெருப்பு என்பது போல தன்னோடு கலந்ததெல்லாம் தானே என்று//

இந்த எகனை மொகனை எகத்தாளத்துக்கு எல்லாம் ஒரு கொறைச்சலும் இல்ல ராகவா! :)

நெருப்போடு கலந்தது எல்லாம் நெருப்பாகாது! சாம்பலாத் தான் ஆகும், சிலரது வாதங்களைப் போல! :)))

நெருப்போடு கலந்த நீர் நெருப்பாகுமா?
நெருப்பும் அணைஞ்சி, அதுவும் நீராகவே (நீராவி) ஆகும்! :)

= நீர் இன்றி அமையாது உலகு!!

//முருகன் முருகனாகவே இருப்பதால்தான் அவனுக்குத் தமிழ்க் கடவுள் என்ற அடைமொழி//

முருகன் முருகனாகவே இல்ல!
* தொல்காப்பியர் காலத்தில் = சேயோன்
* அப்பறமா = முருகன்
* இப்போ அறுபடை வீட்டிலும் = "சுப்ரமணிய சுவாமி" :))

அன்னியில் இருந்து இன்னிக்கி வரைக்கும் ஒரே பேரோடு இருந்தால் மட்டுமே தமிழ்க் கடவுள்-ன்னா...
அப்போ தமிழ் = தமிழ்க் கடவுள்!

காலம், பெயர்களையும் மாற்றிக் கொண்டே தான் வந்துள்ளது! மாற்றம் என்பதோர் மானிடத் தத்துவம்!

அப்படிப் பார்த்தா சேயோன் தான் முருகனா? அந்த மாயோனும் திருமாலும் ஒன்னா? அந்தச் சேயோனும் இந்த முருகனும் ஒன்னா?-ன்னு எல்லாம் நிரூபிக்க வேண்டி இருக்கும்! தரவுகளோடு நிரூபிக்க முடியும்!

ஆனா, அந்தச் சேயோனும் இந்த முருகனும் ஒன்னா?-ன்னு, முதலில், நீங்க தான் நிரூபிக்கத் தொடங்கணும்! என்ன தொடங்கறீங்களா? :)))

குமரன் (Kumaran) said...

நாலரை வருஷமா இதையே பேசிக்கிட்ட்ட்ட்டேஏஏஏ இருக்கோமே! ஏன் இரவி?

முழுமையா இங்கே இருக்கட்டும் வாதங்கள்ன்னு நினைச்சு எழுதுறீங்கன்னா சரி. இருந்துட்டு போகட்டும்.

இன்னொரு இடத்துல தரவுகளை எல்லாம் தொகுத்து வைக்கிறீங்களா. வைங்க. நல்லது.

ஆனா அவரவர் கருத்து அவரவர்களுக்கு. காலத்தால் தானாக மாறினால் பரவாயில்லை. பேசி மாற்ற முடியாது. நான் இந்த இடுகையின் பின்னூட்டத்தில் சொன்னவற்றில் பெரும்பான்மையை மாற்றிக் கொள்ளவில்லை; என்னைப் பேசி மாற்ற முடியாது என்றும் தோன்றுகிறது. அப்படித் தான் மற்றவர்களுக்கும். :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அதெப்படி திருமுருகாற்றுப்படைதான் தமிழில் வந்த முதல் சமய நூலுன்னு கேட்டீங்களே. அதுக்கு நிறைய ஆதாரங்கள் காட்ட முடியும்.
ஒரு எடுத்துக்காட்டு, ஸ்ரீசந்திரனார் என்ற தமிழ்ப் பேராசியர் சங்க நூல்களுக்கு உரையெழுதியுள்ளார்//

ஸ்ரீயாவது, இந்திரன்-சந்திரனாவது? :)))

திருமுருகாற்றுப்படை என்னும் நூலே ஒன்பதாம் நூற்றாண்டு! நக்கீரர் = ஒன்பதாம் நூற்றாண்டு! இதான் சங்க காலமா? :))
http://en.wikipedia.org/wiki/Nakkeerar

பன்னிரு சைவத் திருமுறைகளுள், திருமுருகாற்றுப்படை 11ஆம் திருமுறையில் இருக்கு! சங்க கால நூல் எப்படிய்யா பின்னாளைய திருமுறையில் இருக்கும்? :))

போதாக் குறைக்கு, அதே திருமுறையில், அதே நக்கீரர் எழுதிய இன்னும் சில நூல்களை வச்சிருக்காங்க சைவ ஆன்றோர்கள்!
1. கோபப் பிரசாதம்,
2. திருமுருகாற்றுப்படை
3. கண்ணப்ப நாயனார் வரலாறு,
4. கயிலை பாதி காளத்தி பாதி

கோபப் பிரசாதம், கயிலை பாதி, காளத்தி பாதி எல்லாம் சங்க காலமா? :))

ஆனா, நான் சொல்லுறேன், நக்கீரர் சங்க காலம் தான், திருமுருகாற்றுப்படை மட்டும் சங்க காலம் தான்-ன்னு! எப்படி? இங்கே போய், திருமுருகாற்றுப்படை-ன்னு தேடவும்! வெவரம் புரியும்! :)

தமிழ் இலக்கியம் பயிலும் போது, சமய விருப்பு வெறுப்புகளைக் கடந்து, உள்ளது உள்ளவாறு, தக்க தரவுகளோடு நோக்க வேண்டும்!

அந்த "இலக்கிய நேர்மை" அனைவருக்கும் வந்தால் தமிழ் தழைக்கும்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//தொடக்கத்தில் முருகன் இறையனாருக்கு அடுத்து தமிழ்ச்சங்கத் தலைவனாய் இருந்து தமிழை வளர்த்தான் என்ற செய்தியை//

துவரைக் கோமான் தமிழ்ச் சங்கத்துக்கு வந்து வீற்றிருந்த பான்மையை நச்சினார்க்கினியர் சொல்கிறாரே! வாசித்தீர்களா?

//முருகன் மட்டுமல்ல. வள்ளியும் கூட பழந்தமிழ்க் கடவுள்தான். முதலில் இருவரும் வெவ்வேறு கடவுளாக இருந்து பிறகு கலப்பால் கணவனும் மனைவியுமார்கள் என்று கூட படித்திருக்கிறேன்//

அடிங்கொய்யால!
முருகனும் வள்ளியும் வேற வேறவா இருந்து, நாகரீகக் கலப்பால் ஒன்னா ஆனங்களா? பிச்சிருவேன் பிச்சி! உளறுவதற்கு ஒரு அளவே இல்லையா?

எப்படித் திருமகள் நீங்காத் திருமால் - அகலகில்லேன் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா-வோ...அதே போல் வள்ளி-முருகன் அகலகில்லேன்! அகலகில்லேன்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//மற்ற கடவுள்கள் விஷயத்தில் தமிழை முழுவதுமாக அகற்றி விட்டும் அந்தக் கடவுள்களைப் பற்றிச் சொல்லலாம். ஆனால் முருகன் விஷயத்தில் அப்படியில்லை//

வட இந்தியாவிலும், கோல்கத்தாவிலும் "தமிழை முழுவதுமாக அகற்றி" முருகனைப் பற்றிச் சொல்றாங்களே? எப்பிடி? :))

"தமிழ்"-ன்னு ஒரு சொல் கூட வராம, "முருகன்/Murga/Morga" என்றெல்லாம் அங்கிட்டு சொல்றாங்களே! புத்தகமும் போடறாங்களே! இணையத்தில் கூட இருக்கே - அமர் சித்ர கதா உட்பட - அது எப்படி? டுபுக்கடிக்கறத்துக்கு ஒரு அளவே இல்லீயா? :)))

//அரும் பெரும் மரபின் பெரும் பெயர் முருக என்கிறார் நக்கீரர்//

மாயோன் மேய மன் பெருஞ் சிறப்பின்
தாவா விழுப் புகழ்
என்கிறாரே தொல்காப்பியர்!

நக்கீரராச்சும் முருக பக்தர்! இப்படிச் சொல்லீட்டாரு!
தொல்காப்பியர் ஒரு பக்தரும் இல்லையே! ஆனா இப்படிச் சொல்றாரே? ஏமி ராகவா? அர்த்தம்வாயிந்தா? செப்பு ராகவா செப்பு! :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இராகவன். உங்கள் சௌகரியத்திற்காக பரிபாடலை ஐம்பெருங்காப்பியங்களுக்குப் பின்னாலே தள்ளிவிட்டீர்கள் பார்த்தீர்களா?//

ஹிஹி! அதான் "எலக்கியச் சான்றாண்மை" :)

ஒத்த பதிற்றுப்பத்து, ஓங்கு பரிபாடல் என்று
இத்திறத்த எட்டுத் தொகை!

எட்டுத் தொகை நூல்கள்,
அப்பறம் தான் திருமுருகாற்றுப்படை முதலான பத்துப்பாட்டு!
அப்பறம் கீழ்க் கணக்கு, அப்பாலிக்கா சிலம்பு/மணிமேகலை!

எட்டுத் தொகையில், பழந்தமிழர் இறைத் தொன்மத்தில் அருக தேவர்/பெளத்த தேவர் இல்லை!

அதுனால பரிபாடலை மட்டும் சீவக சிந்தாமணிக்குப் பின்னாடி தள்ளிட்டாங்க போல! "தள்ளறது" எல்லாம் இவாளுக்கு ரொம்ப பிடிக்குமே! :)))

அட, கபிலர், பரணர் போன்ற நற்றமிழ் அறிஞர்களைக் கூட,
கபில தேவ நாயனார், பரண தேவ நாயனார்-ன்னு மாத்தி பன்னிரு திருமுறைகளில் கொண்டாந்து வைக்கலியா என்ன? :)))

"ஒத்தைத் தோள்-ல அலட்சியமாத் திருமால் மாலை போட்டுக் கொண்டான் செங்குட்டுவன்"! - இப்படியாக இந்தத் "தள்ளறது" பேஷா நடக்கின்றது! :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குமரன் (Kumaran) said...
நாலரை வருஷமா இதையே பேசிக்கிட்ட்ட்ட்டேஏஏஏ இருக்கோமே! ஏன் இரவி?//

:)
நாப்பது வருசமா தமிழ்க்கடவுள் முருகவேள்-ன்னு சொல்லி அது மட்டு"மே"-ன்னு நைசா நின்னுடலையா? அது போலத் தான் குமரன்! நமக்கு இன்னும் 36 வருசம் பாக்கி இருக்கு! :))))

//முழுமையா இங்கே இருக்கட்டும் வாதங்கள்ன்னு நினைச்சு எழுதுறீங்கன்னா சரி//

அதற்காக மட்டுமே!


வரும் தலைமுறை விருப்பு வெறுப்பின்றி, தமிழைத் தமிழாய்ப் பார்க்க, இது ஓரளவேனும் உதவி செய்யும்! கூகுளார் துணை இருக்கக் கடவது! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

LAST BUT NOT THE LEAST

G.Ragavan said...
//நான் பேசுவது தமிழ்க்கடவுள் என்ற அடைமொழியையும்
இன்றைக்குத் திருக்கோயில்களில் தமிழ் எங்கிருக்கிறது என்பது பற்றியும் தான்//

* இன்றைக்குத் திருக்கோயில் கருவறையில் தமிழ் இல்லை! = தில்லை முதலான, வடபழனி ஈறான பல தலங்களில்! ஓதுவார் ஒரு ஓரமாக ஓதி விட்டு ஓடுவார், அதுவும் அரசாணையால்!

* இன்றைக்குத் திருக்கோயில் கருவறையில் தமிழ் உண்டு! = அரங்கம், வேங்கடம், பெங்களூர் முதலான பல தலங்களில்! கருவறையில் அர்ச்சகரே ஓதுவார்! அரசாணைகள் ஏதும் இல்லாமல்!

காட்டு:
* நாரணா நீ-ராட வாராய் (திருமஞ்சன காலங்களில்),
* பல்லாண்டு பல்லாண்டு (பூசை வேளையில்),
* அடியார்கள் வாழ, அரங்க நகர்வாழ, சடகோபன் தன் தமிழ் நூல் வாழ (ஆசி கூறும் போது, சாற்று மறையின் போது)

**********************************

//நான் பேசுவது தமிழ்க்கடவுள் என்ற அடைமொழியையும்//

அதற்குத் தான் என்றுமுளச் சுட்டியாக (நிரந்தரச் சுட்டியாக), இதோ...
சங்க இலக்கியத் தமிழ்க் கடவுள்!

முத்தாய்ப்பாக...
தமிழ்க் கடவுள் என்றால் = சங்க காலத் தமிழ்க் குடிகள் வணங்கிய கடவுள்!

பண்டைத் தமிழ்ச் சமூகம் இறையியலில் எப்படிப் போற்றியது என்ற தமிழ்த் தொன்மம் தான் தமிழ்க் கடவுள்!


அதற்கான ஒவ்வொரு தமிழ்த் தொன்மமும் இங்கே தொகுத்து வைக்கப்படும் - இந்த இணையக் கல்வெட்டில்!

திருப்புகழ் விருப்பமொடு செப்பு என எனக்கு அருள்கை மறவேனே!
யாம் ஓதிய பதிவும், எம் எழுத்தும் தாமே பெற வேலவர் தந்ததினால்!

கதியாய் (என்)விதியாய், வருவாய் குகனே!

முருகாஆஆஆ!